1/12/15

7-வது ஊதியக் குழுவில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து விரைவில் நடைமுறைப்படுத்திட வேண்டும்: வாசன் வலியுறுத்தல்

தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘’ஏழாவது ஊதியக்குழு 2014 பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது. அக்குழு தனது அறிக்கையை 19.11.2015 அன்று
மத்திய நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது. அதன்படி மத்திய அரசில் பணிபுரியும் பணியாளர்கள், முப்படை வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் என மொத்தம் சுமார் ஒரு கோடி பேர் பயன்பெறுவார்கள். இதனால் குறைந்த பட்சம் 15 சதவீதத்திலிருந்து அதிகபட்சம் 23.55 சதவீதம் வரை ஊதியம் உயரலாம் என்று ஊதியக்குழு அறிவித்துள்ளது.

 கடந்த ஊதிய குழுவின் பரிந்துரைகளின் அளவை விட 7வது ஊதியக்குழு பரிந்துரையின் அளவு குறைவாக உள்ளது. 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையால் நிதிச்சுமையின் பங்கு 0.56 சதவீதம் மட்டுமே. ஆகவே அரசுப் பொருளாதாரத்தை இவ்வுயர்வு பாதிக்காது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

15-வது தொழிலாளர் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி, குறைந்த பட்ச ஊதியம் மாதம் ரூ.26,000 இருக்க வேண்டும். ஆனால் அது ரூ. 18,000 என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கீழ்மட்ட ஊழியர்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள். இது உயர்த்தப்பட வேண்டும்.


அடிப்படைச் சம்பளம் உயர்வு என்ற காரணம் காட்டி, வாடகைப் படி குறைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மேலும் பண்டிகைக் காலங்களில் வழங்கப்படும் வட்டியில்லா கடன் நிறுத்தப்பட உள்ளது. எனவே அவர்களின் நியாயமான கோரிக்கைகளைக் கவனத்தில் கொண்டு, அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும். மத்திய அரசு, 7-வது ஊதியக் குழுவில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து விரைவில் நடைமுறைப்படுத்திட வேண்டும்’’என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக