30/11/15

உதவி பேராசிரியர் தேர்வு பட்டதாரிகள் ஓராண்டு காத்திருப்பு

அரசு இன்ஜி., கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கு எழுத்து தேர்வு அறிவித்து ஓராண்டாகியும் தேர்வு நடத்தாததால், விண்ணப்பதாரர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தமிழகத்திலுள்ள இன்ஜி., மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில், காலியாக இருந்த, 139 உதவி பேராசிரியர் பணியிடத்தை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த, ஜூலையில் அறிவிப்பு வெளியிட்டது.முதுகலை பட்டத்துடன், எம்.பில்., ஸ்லெட், நெட், முடித்தவர்கள் என, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரிகள், விண்ணப்பித்திருந்தனர்.

இதற்கான எழுத்து தேர்வு, கடந்த, 2014, அக்டோபரில் நடத்தப்படும் என அறிவித்து, அதற்கான பாடத்திட்டமும் ஆன்லைனில் வெளியிட்டிருந்தனர். ஆனால், எம்.பில்., மட்டும் முடித்தவர்கள், உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கூடாது என, ஸ்லெட், நெட் முடித்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 
அதேசமயம், 2009க்கு முன், எம்.பில்., படிப்பு முடித்தவர்களுக்கு ஸ்லெட், நெட் தேவையில்லை என, மற்றொரு வழக்கும் தொடரப்பட்டது. தற்போது, ஓராண்டுக்கு மேல் ஆகியும் எழுத்து தேர்வு பற்றி எந்த அறிவிப்பு வெளியாகவில்லை.இதுகுறித்து, விண்ணப்பதாரர்கள் கூறும்போது, 'ஸ்லெட், நெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே, உதவி பேராசிரியாக பணியாற்ற முடியும்' என, நீதிமன்றம் தீர்ப்பு அளித்துவிட்டது. ஆனாலும், இன்னும் தேர்வு குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை,'என்றனர்.இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, 'சட்டப் பிரச்னைகள் தீர்க்கப்பட்டு, அரசிடமிருந்து அனுமதி வந்தால் தேர்வு அறிவிக்கப்படும்,' என்றனர்.

கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிய உத்தரவு: அரசு கல்லூரி பேராசிரியர்கள் அதிருப்தி

போலி கல்விச் சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளனரா என்பதைக் கண்டறிவதற்காக, அரசுக் கல்லூரி பேராசிரியர்களின் அனைத்துச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிய உயர் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருப்பதோடு, இதைக் காரணம் காட்டி, தங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பணி மேம்பாட்டை கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகம் நிறுத்தி வைப்பதாகவும் பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

 ராஜஸ்தானில் போலி கல்விச்
 சான்றிதழ்கள் விநியோகம்: ராஜஸ்தான் அரசின் உயர் கல்வித் துறையிடமிருந்து அனைத்து மாநில உயர்கல்வித் துறைகளுக்கும், அனைத்துப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கும் கடிதம் ஒன்று அண்மையில் அனுப்பப்பட்டது.
 அதில், 2014 டிசம்பர் 17-ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட வழக்கு (எண்.15) 14 குறித்து ராஜஸ்தான் போலீஸார் விசாரணை நடத்தியபோது, ஜோத்பூர் தேசியப் பல்கலைக்கழகம் என்ற தனியார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் கல்வி மையத்திலிருந்து ஒரு மென்பொருளைப் பறிமுதல் செய்தனர். அதை ஆய்வு செய்தபோது, ஜோத்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் பெயரில் ஏராளமான போலியான கல்விச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
 இந்தப் போலிச் சான்றிதழ்கள் யார் யாருக்கு வழங்கப்பட்டுள்ளன என்ற பட்டியல், ராஜஸ்தான் கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 எனவே, இதன் மூலம் எவரேனும் பணியில் சேர்ந்துள்ளனரா என்பதை ஆய்வு செய்து, தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 சான்றிதழ்களை ஆய்வு செய்ய கல்லூரிகளின் முதல்வர்களுக்கு உத்தரவு: இந்தக் கடிதத்தின் நகலை கல்லூரி கல்வி இயக்குநர், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள தமிழக உயர் கல்வித் துறை துணைச் செயலர், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அண்மையில் அறிவுறுத்தியுள்ளார். இதனடிப்படையில், அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கும் கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 அதில், கல்லூரிகளில் உள்ள அமைச்சுப் பணியாளர்களின் கல்விச் சான்றிதழ்கள், உரிய முறையில் உண்மைத்தன்மை அறியப்பட்டு பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது. ஆனால், இதுநாள் வரை அரசுத் தேர்வுத் துறை, பல்கலைக்கழகங்கள் மூலம் பணியில் சேர்ந்தவர்களின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை அறியப்படாத நிலையினைத் தவிர்க்கும் பொருட்டு, இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்களின் அனைத்துக் கல்விச் சான்றிதழ்களையும் அந்தந்த அரசுத் தேர்வுத் துறை, பல்கலைக்கழகங்கள் மூலம் உண்மைத்தன்மையை அறிந்து இயக்குநர் அலுவலகத்துக்கு விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 கல்லூரிகளும் நடவடிக்கையில்
 தீவிரம்: இதனடிப்படையில், ஒவ்வொரு பேராசிரியரின் 10-ஆம் வகுப்பு சான்றிதழ் முதல், பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, எம்.ஃபில்., பிஎச்.டி. என அனைத்து கல்வித் தகுதியின் உண்மைத் தன்மையை அறியும் நடவடிக்கையை கல்லூரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. இதற்கு கல்லூரிப் பேராசிரியர்களிடையே கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. 
 அறிக்கையை அளிக்க அவகாசம்
 நீட்டிப்பு: இதுகுறித்து கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலக உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:
 ஏற்கெனவே பள்ளிகள் அளவில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்லூரிகளில் பேராசிரியர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதுநிலை பட்டப் படிப்பு, எம்.ஃபில்., பிஎச்.டி. தகுதிக்கான் சான்றிதழ்களுக்கான உண்மைத் தன்மை அறிக்கை மட்டுமே கேட்கப்பட்டிருக்கிறது. இதுதவிர்க்க முடியாதது. இந்த அறிக்கையைச் சமர்ப்பிக்க பேராசிரியர்களுக்கு இப்போது மேலும் கால அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது என்றார் அவர்.
"வற்புறுத்துவது ஏற்புடையது அல்ல'
 இதுகுறித்து தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்றப் பொதுச் செயலர் சிவராமன் கூறியதாவது:
 சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிவது, அந்தந்தத் தேர்வு வாரியத்தின் பணி. ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் தேர்வு செய்யப்படும்போதே, அனைத்துச் சான்றிதழ்களும் முழுமையாக ஆய்வு செய்யப்படுகின்றன. இந்த நிலையில், பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் பேராசிரியர்களின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என வற்புறுத்துவது ஏற்புடையது அல்ல. உண்மைத்தன்மை அறிக்கை பெற ஒவ்வொரு கல்வித் தகுதிக்கும் ரூ.600 முதல் ரூ.1000 வரை பல்கலைக்கழகத்துக்கு கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதை உயர் கல்வித் துறை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றார் அவர்

சென்னைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

சென்னைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில், 2015-16 கல்வியாண்டுக்கான பல்வேறு படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.அதன்படி, பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஒற்றைச் சாளர சேர்க்கை மையத்தை வருகிற டிசம்பர் 19-ஆம் தேதி வரை மாணவர்கள் நேரடியாகத் தொடர்புகொண்டு சேர்க்கை பெறலாம்.

இந்த மையம் சனி, ஞாயிறு உள்பட அனைத்து நாள்களும் செயல்படும். மேலும், விவரங்களுக்கு www.unom.ac.in, www.ideunom.ac.in ஆகிய இணையதளங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் என பல்கலைக்கழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி உதவித் தொகை தேர்வு(NMMS): விண்ணப்பங்களை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

தேசிய வருவாய் வழி- திறன் கல்வி உதவித் தொகை (என்.எம்.எம்.எஸ்.) தேர்வுக்கான விண்ணப்பங்களை திங்கள்கிழமை (நவ. 30) முதல் பதிவிறக்கம் செய்யலாம்.

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்காக, ஜனவரி 23-இல் இந்தத் தேர்வு நடைபெறும். விண்ணப்பங்களை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்திலிருந்து நவம்பர் 30 முதல் டிசம்பர் 11 வரை பதிவிறக்கம் செய்யலாம். கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு பொது தேர்வு செய்முறை தேர்வு உண்டு

'பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வில், அறிவியல் பாட செய்முறைத் தேர்வு, கண்டிப்பாக உண்டு' என, பள்ளிக்கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. சில ஆண்டுகளாக, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், பிளஸ் 2 மாணவர்களுக்கு நடத்தப்படுவது போல், அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு, 25 மதிப்பெண்கள் தனியாக வழங்கப்படுகின்றன. இத்தேர்வுக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியலுக்கு தலா, நான்கு செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்படும். பின், அவற்றில், தலா ஒரு பயிற்சி, செய்முறைத் தேர்வில் வினாவாக வரும்.


இதற்காக, செய்முறைத் தேர்வு பயிற்சி புத்தகம், கல்வித் துறையிலிருந்து வழங்கப்படும். இந்த ஆண்டு, பயிற்சிப் புத்தகம் வழங்கப்படாததால், செய்முறைத் தேர்வு உண்டா என, மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். இதுகுறித்து, நமது நாளிதழில், நவ., 28ல் செய்தி வெளியானது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை கண்ணப்பன் கூறியதாவது:செய்முறைத் தேர்வுக்கான பயிற்சி வினாக்கள், அறிவியல் பாடப் புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளன; இந்த ஆண்டு தனியாக புத்தகம் வழங்கப்படாது. அதிலுள்ள, 15 செய்முறைப் பயிற்சிகள் குறித்து, ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டும். பொதுத் தேர்வுக்கு கட்டாயம் செய்முறைத் தேர்வு உண்டு; எந்த மாற்றமும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

மழை விடுமுறை ,ஆசிரியர்களுக்கு கூடுதல் பணி

''மழைக்கால விடுமுறையிலிருந்த பகுதி நேர ஆசிரியர்கள், அதற்குப் பதில், மாற்று நாட்களில் பணியாற்ற வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டமான, எஸ்.எஸ்.ஏ., இயக்குனரகக் கட்டுப்பாட்டில், கணினி, ஓவியம், உடற்கல்வி உட்பட, பல பகுதி நேர பாடப் பிரிவுகளுக்கு, 16 ஆயிரம் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாரத்துக்கு மூன்று வகுப்புகள் பாடம் எடுக்க வேண்டும். ஆனால், பெரும்பாலும் பள்ளிகளில், முழு நேர ஆசிரியர்களாகவே பணியாற்றுகின்றனர்.


இவர்களுக்கு, ஒவ்வொரு மாதமும், பணிபுரியும் நாட்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்படும். மே மாத விடுமுறை காலத்தில் மாத சம்பளம் கிடையாது. தற்போது மழை காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில், 12 வேலை நாட்கள் வரை விடுமுறை விடப்பட்டது.

''இந்த நாட்களுக்கு பதில், வேறு நாளில் பணிபுரிய வேண்டும். அவ்வாறு பணிபுரியாவிட்டால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்,'' என, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.

ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை

பொதுத் தேர்வு எழுதும் மாணவர் பட்டியலில் தவறுகள் இருந்தால், ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வித்துறை எச்சரித்துள்ளது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. மாவட்டம் தோறும், தேர்வு மையங்களின் எண்ணிக்கை, மாணவர் எண்ணிக்கை விவரங்கள், பள்ளிகளிலிருந்து சேகரிக்கப்படுகின்றன. இந்தப் பட்டியலில் தவறுகள் வருவதால், தேர்வு நடத்தும் போது, பல மாணவர்களுக்கு, ஹால் டிக்கெட் இல்லை; பட்டியலில் பெயர் இல்லை என்பன போன்ற குழப்பங்கள் ஏற்படுகின்றன.


இந்த ஆண்டு இதுபோன்ற குழப்பங்களைத் தடுக்க, ஆசிரியர்களுக்கு விடப்பட்டுள்ள உத்தரவுகள்:
* தேர்வு எழுதும் மாணவர் எண்ணிக்கை சரியாக இருக்க வேண்டும்
* பட்டியலில் தவறுகள் இருக்கக்கூடாது. பெயர், விவரம், முகவரியில் பிழைகள் இல்லாமல் கணினியில் பதிவு செய்ய வேண்டும்.'பட்டியலில் தவறு இருந்தால், ஆசிரியர், ஊழியர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேர்வு மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பள்ளிகளுக்கு ரூ.125 கோடி சேதம்

தமிழகத்தில், தொடர் மழையால், பள்ளிக்கல்வித் துறைக்கு, 125 கோடி ரூபாய் சேதம் மற்றும் செலவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், 6ம் தேதி முதல், 25ம் தேதி வரை கனமழை பெய்ததால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் போன்ற மாவட்டங்களின், பள்ளி, கல்லுாரி கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


மழையால் ஏற்பட்ட சேதம் குறித்து, பள்ளிக்கல்வித் துறை செயலகத்துக்கு, அதிகாரிகள் அறிக்கை அனுப்பியுள்ளனர். மொத்தம், 125 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றில், 85 கோடிக்கு நேரடி சேதமும், 40 கோடிக்கு மறைமுக செலவும் ஏற்பட்டுஉள்ளதாக கணக்கிட்டுள்ளனர்.அதில் தெரிவித்துள்ளதாவது:

ஓட்டை, உடைசல் கட்டடங்கள், மழையில் இடிந்து விழுந்துள்ளன. பல பள்ளி கட்டடங்களின் சுவரில், விரிசல் ஏற்பட்டுள்ளதால் மூடப்பட்டுள்ளன. பாட புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகளுக்கு இரண்டாவதாக கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. பள்ளி வளாகங்களில் நீரை வெளியேற்றுதல், மின் கருவிகளை பழுது பார்த்தல், மாற்று கட்டடங்கள் ஏற்பாடு என, பலவகை யில் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்

ஐந்து நாட்கள் பணி 10 ஆயிரம் சம்பளம் பகுதி நேர ஆசிரியர் கோரிக்கை

வாரத்தில் ஐந்து முழு நாட்கள் வேலை, ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும், என பகுதி நேர ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் 2012 மார்ச்சில் 16,549 பகுதி நேர கலை, ஓவியம், உடற்பயிற்சி, தையல், இசை ஆசிரியர்கள் பணியில் சேர்க்கப்பட்டனர். வாரத்தில் மூன்று அரை நாட்கள் பணி, மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது.


கடந்த ஆண்டு நவம்பர் முதல் ரூ.2 ஆயிரம் சம்பள உயர்வு வழங்கப்பட்டது. மூன்று நாட்கள் பணி என்பதை ஐந்து நாட்கள் முழுநேர பணி, மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

பகுதிநேர ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது: வாரத்தில் 5 நாட்கள் வேலைக்கு வருகிறோம். ரூ.10 ஆயிரம் சம்பளம் தாருங்கள் என அரசிடம் கேட்டுள்ளோம். ஒரு சில வாரங்களில் இதற்கான முடிவு எட்டப்படும், என அதிகாரிகள் தரப்பில் கூறியுள்ளனர்.

சமீபத்தில் ஜாக்டோ சார்பில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது, பகுதி நேர ஆசிரியர்கள் முழு நேரம் பணியாற்றினர். அரசுக்கு ஆதரவாக, எந்த நிலையிலும் வேலை பார்க்க தயார் என அறிவித்தோம். ஆனால், அரசு எங்களுக்கு சம்பள உயர்வு அளிக்க தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது.

பகுதி நேர ஆசிரியர்களுக்குரிய சம்பளம் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என கூறப்பட்டது. பழைய முறையில், தலைமை ஆசிரியர் மூலமே வழங்கப்படுகிறது. தற்போது பணிமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்பட்டது. இதில் பெண் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கியதால், ஆண்கள் ஏற்கனவே பணியாற்றிய இடத்திலிருந்து கூடுதலாக 100 கி.மீ., அலைய வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே பொதுப்பிரிவு கவுன்சிலிங்கை மறுபடியும் வைக்க வேண்டும், என்றார்.

வேலூர் மாவட்டத்தில் - பள்ளியின் பூட்டை உடைத்து கணினி, தொலைக்காட்சி பெட்டிகள் திருட்டு

ஆம்பூர் அருகே ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் பூட்டை உடைத்து கணினி, தொலைக்காட்சிப் பெட்டிகள் திருடுபோனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அண்மையில் பெய்த பலத்த மழை காரணமாக கானாற்றில் ஏற்பட்ட வெள்ளம் ஆம்பூர் அருகே ஆலாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் தேங்கியது.
 மேலும் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிடிந்து விழுந்தது. பள்ளியின் கட்டடமும் தண்ணீர் தேங்கியதால் சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு அக்கட்டடம் பூட்டி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் பள்ளியின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது தெரியவந்தது. மேலும் உள்ளே இருந்த அலமாரி உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த மடிக்கணினி, 2 தொலைக்காட்சிப் பெட்டிகள், அச்சு இயந்திரம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. புகாரின் பேரில் ஆம்பூர் கிராமிய போலீஸார் விசாரணை நடத்தினர்.

பிளஸ் 2 இடைநிலைத் தேர்வில் ஆங்கிலம், கணிதத்தில் அதிகமானோர் தோல்வி: ஆசிரியர்களுக்கு சிறப்பு கற்பித்தல் பயிற்சி

மதுரை மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற இடைநிலைத் தேர்வுகளில் ஆங்கிலம், கணிதத்தில் அதிகமான மாணவர்கள் தோல்வியடைந்திருப்பது தெரியவந்துள்ளது.

   மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த 16 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை இடைநிலைத் தேர்வுகள் நடைபெற்றன.


  அத்தேர்வுகள் அடிப்படையில், 50 சதவிகித மாணவர்கள் ஆங்கிலம், கணிதம் மற்றும் பொருளியல், வணிகவியல், கணக்குப் பதிவியல் ஆகிய பாடங்களில் அதிகமாக தோல்விடைந்துள்ளது தெரியவந்துள்ளது.

  இடைநிலைத் தேர்வில் அதிகமானோர் தோல்வியடைந்திருப்பது பொதுத் தேர்வின் தேர்ச்சி விகிதத்தைப் பாதிக்கும் என, கல்வித் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

   எனவே, எந்தெந்தப் பாடங்களில் எந்தெந்தப் பள்ளி மாணவர்கள் தோல்வியடைந்திருக்கிறார்கள், அதற்குக் காரணம் என்ன என ஆராய்ந்துள்ளனர். அதில், வகுப்புகளுக்கு சரியாக வராதவர்களும், பாடங்கள் நடத்தப்படும்போது புரியாமல் இருந்தவர்களுமே அதிகம் தோல்வியடைந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட பாடங்களின் ஆசிரியர்களுக்கு சிறப்புக் கற்பித்தல் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.   பயிற்சியின்போது, தோல்வியடைந்த மாணவர்களை ஆசிரியர்கள் கண்காணிக்கும் முறையும் விளக்கப்பட உள்ளது.

   இது குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி கூறுகையில், கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக தேர்ச்சி விகிதம் இருக்கவேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

  அதன்படி, இடைநிலைத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்குள்ள பிரச்னைகள் ஆராயப்பட்டு, அதைத் தீர்க்கும் வகையில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என்றார்.

ஆசிரியர்கள் மறியல் போராட்டம்டிச., 1ல் மனு அளிக்க 'ஐாக்டோ' முடிவு

ஆசிரியர்களின், 15 அம்ச கோரிக்கை குறித்தும், டிச., 28ம் தேதி மறியல் போராட்டம் குறித்தும், வரும் 1ம் தேதி ஜாக்டோ நிர்வாகிகள், தலைமைச் செயலகத்தில் மனு அளிக்க உள்ளனர்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து, மத்திய அரசுக்கு இணையான இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம், ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு சட்டம், தமிழை முதல் பாடமாக்க அரசாணை உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழுவான ஜாக்டோ, கடந்த பிப்ரவரி முதல் போராட்டம் நடத்துகிறது.

அக்., 8ல் ஜாக்டோ நடத்திய, மாநில அளவிலான வேலை நிறுத்தத்தால், பள்ளிகள் செயல்படாமல் முடங்கின. ஆனாலும், அரசு அவர்களை அழைத்து பேச்சு நடத்தவில்லை.
இந்நிலையில், அடுத்த கட்டமாக டிச., 28 முதல் 30 வரை தொடர் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து, வரும் 1ம் தேதி தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வி முதன்மை செயலரை, ஜாக்டோ உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் சந்தித்து, மனு அளிக்க உள்ளனர். அதன்பின், அரசு தரப்பில் பேச்சு நடத்தினால் போராட்டத்தை வாபஸ் பெற, ஆசிரியர் குழு முடிவு செய்துள்ளது

இடைநின்ற மாணவர்களின் பட்டியல் தயாரிக்க உத்தரவு

பள்ளிகளில், 8ம் வகுப்புக்குள் படிப்பை நிறுத்திய மாணவர் பட்டியலை கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின், கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தின் படி, 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், இலவசமாக, கட்டாயம் கல்வி வழங்க வேண்டும்; இதற்கு மத்திய அரசு மூலம் நிதி உதவி அளிக்கப்படுகிறது. 


இந்த திட்டத்தின் கீழ், மாணவர், இடையில் படிப்பை விடாமல் பார்த்து கொள்ளவும், படிப்பை விடும் மாணவர்களை, தாமதமின்றி, அவர்களின் நிலையை அறிந்து, கல்வி வழங்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதன்படி, இந்த ஆண்டு இதுவரை பள்ளிகளில் சேர்ந்து, 8ம் வகுப்புக்குள், பள்ளிக்கு வராமல் இடையில் நின்ற மாணவர் பட்டியலை தயாரிக்க, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல், தங்கள் பகுதிகளில், 14 வயதுக்கு உட்பட்ட, பள்ளிக்கு படிக்கவே வராத மாணவர் பட்டியலை தயாரித்து அனுப்பும்படியும், அனைவருக்கும் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களிடம் உறுதி மொழி எழுதி வாங்கும் கல்வித்துறை

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக, மாணவர்களிடம், புதிதாக உறுதிமொழி எழுதி வாங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச் முதல் வாரத்தில் பொதுத்தேர்வு நடக்க உள்ளது. இதற்காக, மாணவர்களிடம், புதிதாக உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து வாங்கி, தேர்வுத் துறைக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதன்படி, ஒவ்வொரு மாணவரும், 'பள்ளி பாடப் புத்தகத்தின் பின்பக்க கேள்விகள் மற்றும் வினா வங்கி புத்தங்களை மட்டும் படித்தால், 'சென்டம்' மதிப்பெண் வாங்க முடியாது என, எங்களுக்கு தெரியும்' என, எழுதி கையெழுத்திட்டு தர வேண்டும். இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது:கடந்த கல்வி ஆண்டில், பிளஸ் 2 பொருளியல் மற்றும் வணிகவியல் தேர்வுகளில், புத்தகத்தில் இல்லாத கேள்விகள், வினாத்தாளில் இடம் பெற்றதாக கூறி, அதற்கு மதிப்பெண் வழங்க கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மேலும், மாணவர்கள் புத்தகத்தின் கேள்விகள் மற்றும் நுால் வழிகாட்டி புத்தகங்கள் மற்றும் வினா வங்கிகளையே, அதிகம் படிக்கின்றனர். பாடத்திட்டப்படி வழங்கப்படும் புத்தகத்தில், பல பகுதிகளை படிப்பதில்லை. எனவே, இந்த ஆண்டு வழக்கு பிரச்னைகளை தடுக்கவும், மாணவர்களை பாடப் புத்தகங்களை முழுமையாக படிக்க வைக்கவும், இந்த உறுதிமொழி எழுதி வாங்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு புது கட்டுப்பாடு

அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், தேர்வில் அதிக மதிப்பெண் பெற, மூன்று வகை சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச் முதல் வாரம் துவங்க உள்ளது. பிளஸ் 2 தேர்வில், நான்கு ஆண்டுகளாக அரசு பள்ளி மாணவர்கள், மாநில ரேங்க் பெறவில்லை; தேர்ச்சி சதவீதத்திலும், பின்தங்கினர். 


10ம் வகுப்பு தேர்வில் மட்டும், மாநில ரேங்க் பெற்று, ஆறுதல் அளித்தனர்.ஒவ்வொரு ஆண்டும், 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்தும், அரசு பள்ளிகள் தேர்ச்சியில் பின்தங்குவது, பள்ளி கல்வித் துறை அதிகாரிகளுக்கு, தலைகுனிவை ஏற்படுத்தியது. அதனால், இந்த ஆண்டு தேர்வுகளில், தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு, அரசு பள்ளிகள் தேர்ச்சியும், மதிப்பெண்ணும் பெற வேண்டும் என, அதிகாரிகளும், ஆசிரியர்களும், உறுதி எடுத்துள்ளனர்.

அதன்படி, தனியார் பள்ளிகளைப் போல், மாணவர்களின் கற்றல் திறனுக்கு ஏற்ப, அவர்களுக்கு மூன்று வகை சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் படி, அனைத்து அரசு பள்ளிகளிலும், அரையாண்டுத் தேர்வுக்கு முன், அனைத்து பாடங்களையும் முடிக்க வேண்டும் என, கண்டிப்புடன் கூறப்பட்டுள்ளது.

அரையாண்டுத் தேர்வுக்குப் பின், பிப்ரவரி வரையிலான இரண்டு மாதங்களும், சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றனர். இதில் மாணவ, மாணவியர், மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றனர்.

நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு, மாநில ரேங்க் பெறுவது குறித்தும்; சராசரி மாணவர்களுக்கு, 80 சதவீத மதிப்பெண் பெறுவது குறித்தும்; தேர்ச்சிக்கே தடுமாறும் மாணவர்களுக்கு, எந்த பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால், தேர்ச்சி அடையலாம் என்பது குறித்தும், மூன்று வகைகளில் பயிற்சி அளிக்க உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

DEC - 2015 TRAINING FOR PRIMARY AND UPPER PRIMARY TEACHERS.

IED Training : - (30.11.2015) to (4.12.2015) - 5 days IED TRAINING for primary teacher.
5 days IED training for upper primary teachers 
5 days IED training for Angan wadi

SMC Training:- 30.11.2015, 1.12.2015 - 2 days SMC RP training
9.12.2015 to 13.12.2015 - 3 days SMC TRAINING (1st Batch)

14.12.2015 to 16.12.2015 - 3 days SMC training (2nd Batch)
CRC Training:-
5.12.2015 - Primary CRC 
12.12.2015 - Upper Primary CRC
BRC Training
3 days MATHS TRAINING Upper Primary teachers
SLAS Test
17.12.2015 ,18.12.2015 - 2 days SLAS TEST
21.12.2015 ,22.12.2015 - 2 days SLAS TEST

சென்னை பல்கலை தேர்வுகள் தேதி அறிவிப்பு

சென்னை, காஞ்சி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 12 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இதனால், சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளில் அன்றைய தினம் தேர்வு நடைபெறவில்லை. 

இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மறுதேதியை சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, கடந்த 9, 13, 14, 16, 17, 18, 23, 24, 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்து ஒத்திவைக்கப்பட்டுள்ள செமஸ்டர் தேர்வுகள் முறையே அடுத்த மாதம் 4, 5, 7, 1, 2, 3, 8, 9, 10, 11, 12, 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் என சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தாண்டவன் அறிவித்துள்ளார். 

ஆன்லைனில் மார்க்!: சி.பி.எஸ்.இ., அறிமுகம்

பிரதமரின், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தில், அனைத்து துறைகளையும் கணினிமயமாக்க, நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன் படி, கல்வித் துறையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி சேவை பிரிவைத் துவக்கி, பாடம் நடத்துதல்; மாணவர்களின் கல்வித் திறனை ஆய்வு செய்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.


இதையொட்டி, பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை, அனைவரும் தெரிந்து, மதிப்பெண்ணை ஒப்பிட்டு பார்த்து, கல்வித் தரத்தை உயர்த்த, 'சரன்ஷ்' என்ற இணைய இணைப்பு துவங்கப்பட்டுள்ளது.இந்த தளத்தை, அனைத்து பள்ளிகளும் பயன்படுத்துமாறு, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டுள்ளது.

இதன் படி, கடந்த நான்கு ஆண்டுகளில், நாடு முழுவதும் உள்ள மண்டலங்களின், 10 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி வீதத்தை அறியலாம். மாணவர்கள் மற்றும் பெற்றோர், தனியாக, 'லாக் இன்' செய்து, தேர்வு மதிப்பெண்ணை பார்க்கலாம்.மேலும், பெற்றோர், ஆசிரியர் மற்றும் மாணவர்கள், தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம். இந்த கருத்துகளை பின்பற்றி, பாடங்கள் நடத்த பள்ளிகள் முன்வரலாம் என, சி.பி.எஸ்.இ., கூறியுள்ளது.

”தினமணி” நாளிதழில் ”தேவையற்ற சுமை” என்ற தலைப்பில் வெளிவந்த தலையங்கத்திற்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவரின் பதில்

23.11.2015 அன்று தினமணி நாளிதழில் மத்திய அரசு அறிவித்த ஏழாவது ஊதியக்குழு அறிக்கை தொடர்பாகவும,அரசு அலுவலர்களுக்கு ஊதியம் அறிப்பது ’’தேவையற்ற சுமை” என்ற தலைப்பில் தலையங்கம் எழுதப்பட்டது. 

அத்தலையங்கத்திற்கு பதில் :
தமிழகத்தில் தொண்ணுற்று ஐந்து ஆண்டு காலம் பாரம்பரியமிக்கதும்,தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற சங்கங்களில் முதன்மையானதாக திகழ்ந்து வருவதும்,தமிழக அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்களில் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு அலுவலர்களை உறுப்பினர்களாக கொண்டுள்ளதும்,தமிழக அரசு அலுவலர்களின் பாதுகாப்பு அரணாக திகழ்ந்து வரும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் என்ற முறையில் இந்தக் கடிதத்தினை தினமணி நாளிதழ் ஆசிரியர் அவர்களின் கனிவான பார்வைக்கு வைக்க விரும்புகின்றேன்.


23.11.2015 திங்கள் கிழமையன்று வெளிவந்த ”தினமணி” நாளிதழில் ”தேவையற்ற சுமை” என்ற தலைப்பில் வெளிவந்த தலையங்கத்திற்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் சார்பில் கண்டனம் என்று தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினாலும் நாகரீகம் கருதி எங்களது வேதனையை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம். மத்திய அரசில் பணிபுரியும் 47 லட்சம் அரசு அலுவலர்கள் 52 லட்சம் ஓய்வூதியர்கள் ஆகியோருக்கான ஏழாவது ஊதியக்குழு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இவ்வறிக்கையினால் மத்திய அரசிற்கு ரூ.1 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கை தொடர்பாக தங்களது தலையங்கம் உடியாக கருத்து தெரிவிக்க வேண்டும் என்ற அவசரத்திலும்,அரசு அலுவலர்களின் பணி பற்றி தவறாக சிந்தித்தும்,குற்றம் சாட்ட வேண்டும் என்ற உள்நோக்கத்துடனும் அரைவேக்காட்டுத்தனமாக சித்தரிக்கப்பட்ட தலையங்கமோ? என்று தான் நாங்கள் எண்ணத் தோன்றுகின்றது. தலைங்கம் பற்றி எங்கள் கருத்தினை தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறோம்.
தற்போது வெளிவந்திருக்கும் இந்த ஏழாவது ஊதிய குழு அறிக்கை 1.1.2006க்கு பின்னர் 10 ஆண்டுகளுக்கு 1.1.2016ல் வெளிவரும் அறிக்கையாகும். மேலும், மத்திய அரசில் உள்ள ராணுவத்தில் பணிபுரியும் அனைத்து நிலை ராணுவ வீரர்களுக்கும் இவ்வூதியக்குழு பொருந்தும்.
இந்த ஊதியக்குழு பரிந்துரைகளின்படி அரசு அலுவலர்களின் ஊதியம் ”எங்கோ உயரப்போகிறது” என்ற கற்பனை யாருக்கும் வேண்டாம். ஒரு சிறு கணக்கீடு மத்திய அரசில் பணிபுரியும் ஓர் அடிப்படைப்ப்ணியாளர் தற்போது பெற்று வரும் ஊதியம் ..ரூ.5200+1800=7000. இந்த 7000த்தினை 2.57ல் பெருக்கி வரும் தொகை ரூ.17,990 ஆக ரூ.18,000 இதன் மூலம் ஒரு பணியாளருக்கு ரூ.11,000 ஊதியம் கூடும் என கற்பனை செய்ய வேண்டாம். 1.1.2016ல் அவ்வலுவலர் பெற்று வரும் அகவிலைப்படி 1.1.2016ல் 125 சதவீதம் ஆகும். இந்த 125 சதவீத அகவிலைப்படியும் அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படவேண்டும் என்றும் 1.1.2016ல் அகவிலைப்படி 0 சதவீதம் மட்டும் தான் என்பதையும் அறிக்கையில் தெளிவாக அறிவிக்கப்பட்டது. அதன்படி ஓர் அடிப்படை அலுவலர் 1.1.2016ல் பெறும் ஊதியம் + அகவிலைப்படி ரூ.5200 + 1800 + = 8750 = ரூ.15750 ஆகும்.
ஆக ஏழாவது ஊதியக்குழு அறிக்கையின்படி 2.57சதவீதம்
உயர்வின் மூலம் கிடைக்கும் ஊதியம் ரூ.18,000
அகவிலைப்படி 125 சதவீதத்தினை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வரும் தொகை ரூ.15,750  = 2,250/-
ஆக 10 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அரசின் அடிப்படை பணியாளருக்கு கிடைக்கும் ஊதிய உயர்வு ரூ.2,250/- மட்டுமே என்பதை ”தினமணி” சரியாக புரிந்து கொள்ள வேண்டும். 10 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.2000/- மட்டும் ஊதிய உயர்வு பெறும் அலுவலர்களின் ஊதியம் தங்களின் பார்வையில் ”தேவையற்ற சுமையா”
மத்திய அர8சாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் சரி அவ்வரசில் பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தினை வழங்குவது ”தேவையற்ற செவினம்” என்று கருதும் தினமணிக்கு தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்கள் தெரிவித்த கருத்தையே பதிலாக முன் வைக்கின்றேன்.
”அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் ” வருவாய் செலவினம்” என்று கருதக்கூடாது. அது திட்ட ”முதலீட்டு செலவினம்” ஒரு திட்டத்தினை தீட்டும் பொழுது அத்திட்டத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு வழங்கும் ஊதியத்தினை முதலீட்டு செலவினமாக எடுத்துக் கொள்வது போல் அரசு தீட்டும் பல மக்கள் நல திட்டங்களுக்காக பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு வழங்கும் ஊதியத்தினையும் அரசின் முதலீட்டு செலவினமாகத்தான் கருத வேண்டும்” என்று அன்றைக்கு தமிழக முதலமைச்சராக இருந்த பொழுது தமிழக சட்டசபையில் தெரிவித்த கருத்து இதுவாகும். ஆக, ஓர் அரசு மக்களுக்காக செயல்படுத்தும் மக்கள் நலத்திட்டங்களை கடைக்கோடி மக்களுக்கு எடுத்து செல்லப் பணிபுயும் அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் தங்கள் பார்வை ”தேவையற்ற சுமையா?”
நாளிதழ் என்பது அனைத்து பிரச்னைகளையும் அவரவர் பார்வையில் பார்த்து, ஒவ்வொரு நிகழ்வினையும் ஆராய்ந்து, அதனை தனது பார்வையால் தீர்வு சொல்ல வேண்டிய நிலையில் இருப்பது. ஆனால், அரசு அலுவலர்களின் ஊதிய உயர்வு விஷயத்தில் எங்களது நிலையிலிருந்து இதனை ஆய்வு செய்யாமல் ஏற்கனவே ஒரு முடிவினை முடிவு செய்து கொண்டு தலையங்கம் தீட்டி இருப்பதும், மக்களுக்காக உழைத்து வரும் எங்களை ”தேவையற்ற சுமை” என்று விமர்சிப்பதும், பாரம்பரியமிக்க ”தினமணி”-யின் பார்வையில் கோளாறு ஏற்பட்டு விட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஐந்து உரிமைகளை வழங்கியுள்ளது. (1) குடியுரிமை (2) காப்புரிமை (3) வாக்குரிமை (4) பேச்சுரிமை (5) எழுத்துரிமை. ஆனால், இந்திய குடிமக்களில் ஒருவராக வாழ்ந்து இந்திய குடிமக்களுக்காக உழைத்து வரும் அரசு அலுவலர்களுக்கு ”வாக்குரிமை” தவிர வேறு எந்த உரிமையும் இல்லை ”நடத்தை விதிகள்” என்ற பெயரில் எங்களது அனைத்து உரிமைகளையும் மறைமுகமாக பறிக்கப்பட்டுது என்பதை ”தினமணிக்கு” தெரியுமா?
இந்திய நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களின் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆகியவர்கள் தங்களுக்கு தாங்களே உயர்த்திக் கொள்ளும் நிலைப்பற்றி யாரும் வாய் திறக்காமல், அரசு அலுவலர்களின் ஊதியம் உயர்த்தப்படும் போது மட்டும், விமர்சித்து கருத்துக்களை தெரிவிப்பது ஏன்? அரசிற்காகவும், மக்களுக்காகவும் உழைத்து வரும் எங்களின் ஊதியம் மட்டும் எப்படி தங்களின் பார்வையில் ” தேவையற்ற சுமையாகும்?”
இந்த இந்திய நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் மத்திய, மாநில அரசு அலுவலர் சமுதாயம் அபரிதமான உழைப்பினை அளித்துள்ளார்கள் என்பதை ”தினமணி” நன்கு உணர வேண்டும். நாட்டில் நிகழும் இயற்கை சீற்றத்தின் காரணமாக நடக்கும் பேரிடர் நிகழ்வுகளால் ஏற்படும் இடர்பாடுகளிலிருந்து மக்களை காப்பாற்றியும், மீண்டும் இயல்புநிலை திரும்புவதற்கு அடிப்படை பணிகளிலிருந்து அனைத்துப் பணிகளையும் தங்களது பசியறியாது பணிபுரியும் அலுவலர்கள்  என்பதை ”தினமணி” மறுக்க முடியுமா? இன்று உலகின் மிகப்பெரிய ராணுவங்களில் ஒன்று என்று பெருமையுடன் கருதப்படும் இந்திய ராணுவத்தின் அனைத்துப் படைகளிலும் அதன் பிற துறைகளிலும் பணிபுரிபவர்கள் அரசு அலுவலர்க்ளே. இன்றைக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள தீவிரவாதத்தை தடுத்தல், பேரிடர் மேலாண்மை என்றும், எல்லையே இந்த நாட்டினை காக்க கண் துஞ்சாது, பசியறியாது பணிபுரியும் ராணுவ வீரர்கள் தினமணி-யின் பார்வையில் ”தேவையற்ற சுமையா”
தமிழகத்தில் சுனாமி ஏற்பட்ட பொழுது தொற்று நோய் பரவும் என்ற உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தபோது சுனாமியால் ஏற்பட்ட தாக்கத்தினை சீர் செய்ததோடு மட்டுமல்லாது, அச்சுமியினால் ஏற்படும் தொற்று நோயால் ஒருவர் கூட மரிக்காமல் சீரமைத்த அற்புதத்தினை படைத்தவர்கள் எங்கள் அரசு அலுவலர்கள்.
பெரியம்மை, பிளேக், காலரா, தொழுநோய் போன்ற நோய்களை அடியோடு அகற்றி புதிய மறுமலர்ச்சியை உருவாக்கியது எங்கள் அரசு அலுவலர்கள்.
வெண்மை புரிட்சி, கல்விபுரட்சி, பசுமைபுரட்சி, தொழில் புரட்சி என்று சாசுவதமான எத்தனையோ புரட்சி வெற்றி பெற விதையாக இருப்பவர்களும் நாங்கள்.
மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களும் அறிவிக்கும் மக்கள் நலத்திட்டங்கள் வெற்றி பெற்றுள்ளது என்று உங்கள் போன்ற ஊடகங்கள் தெரிவிக்கும் போது அவ்வெற்றிக்கு பின்னர் நிற்பது யார்? அரசு அலுவலர்கள் தான்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே அரசு அலுவலர்களுக்கான அறிவிப்பு வெளியிடும் பொழுதெல்லாம் ”அரசின் அச்சாணியாக செயல்படும் அரசு அலுவலர்கள்” என்று விளித்து கூறுவார்கள். அதன்படி ஓர் அரசின் அச்சாணியாக மாண்புமிகு முதலமைச்சர் பார்வையில் திகழும் நாங்கள் ”தினமணி”-யின் பார்வைக்கு மட்டும் எப்படி ”தேவையற்ற சுமை”யானோம்.
அரசு அலுவலர்கள் அனைவரும் கையூட்டு வாங்குகிறார்கள் இல்லை என்ற தாங்களே தலையங்கத்தில் கூறிவிட்டு கையூட்டாக பெறும் தொகை என்று ஓர் தனியார் நிறுவன ஆய்வினை சுட்டிக் காட்டியுள்ளீர்கள். பத்திரிக்கை உலகிலும், ஊடகங்களிலும் தங்களைப் போன்ற பாரம்பரியமிக்க நிறுவனங்கள் செயல்படும் வேளையில், போலி பத்திரிக்கைகளும், நிலவி வரும் போது ஒட்டு மொத்தமாக அனைவரையும் குறைசொல்ல இயலாது அல்லவா? அதைப்போல யாரோ சிலர் செய்யும் தவறுக்கு ஒட்டுமொத்த அரசு அலுவலர் சமுதாயத்தினை குறை சொல்வது ”தினமணி” -க்கு அழகல்ல..
இவ்வாறு குறிப்பிட்டது ஒரு சிறு துளி தான்.. .. ..
மேலும் குறிப்பிட்டு எழுத முடியும், ஆனால், நாட்களும்,தாட்களும் பத்தாது.. .. ..
இறுதியாக,, இந்தியாவில் உள்ள பல பன்னாட்டு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் போலியான பெயரில் உலவும் வணிக நிறுவனங்கள், பல பணக்காரர்கள் வரியினை ஏய்ப்பு செய்கிறார்கள் என்று ”தினமணி” போன்ற பத்திரிக்கைகளில் செய்தி வருவதை தொடர்ந்து நாங்கள் பார்த்து வரகிறோம். ஆனால், இந்த இந்தியாவில் வருமான வரியினை ஒழுங்காக கட்டி வரும் ஒரே சமுதாயம் அரசு அலுவலர் சமுதாயம் மட்டுமே என்பதை தங்கள் பார்வைக்கு சுட்டி காட்ட கடைமைப்பட்டுள்ளோம் என்பதோடு வரி ஒழுங்காக கட்டி வரும் எங்களை பற்றியும் தினமணி எழுதுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
”தேவையற்ற சுமை” என்று எங்களை விளித்தது வேதனை தந்தாலும் இந்த விளக்கத்தினை தங்கள் பார்வைக்கு தெரிவிக்க விழைந்தமைக்கு அத் தலையங்கத்திற்கு நன்றி.
அய்யா,
நாங்கள் அரசிற்கும் மக்களுக்கும் ”தேவையற்ற சுமை” அல்ல ’சுமைதாங்கிகள்’
அன்புடன்
(இரா.சண்முகராஜன்)
மாநிலத் தலைவர்
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்

பிளஸ் 2 இடைநிலைத் தேர்வில் ஆங்கிலம், கணிதத்தில் அதிகமானோர் தோல்வி: ஆசிரியர்களுக்கு சிறப்பு கற்பித்தல் பயிற்சி

பிளஸ் 2 இடைநிலைத் தேர்வில் ஆங்கிலம், கணிதத்தில் அதிகமானோர் தோல்வி: ஆசிரியர்களுக்கு சிறப்பு கற்பித்தல் பயிற்சி
        மதுரை மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற இடைநிலைத் தேர்வுகளில் ஆங்கிலம், கணிதத்தில் அதிகமான மாணவர்கள் தோல்வியடைந்திருப்பது தெரியவந்துள்ளது.
       மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த 16 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை இடைநிலைத் தேர்வுகள் நடைபெற்றன.
  அத்தேர்வுகள் அடிப்படையில், 50 சதவிகித மாணவர்கள் ஆங்கிலம், கணிதம் மற்றும் பொருளியல், வணிகவியல், கணக்குப் பதிவியல் ஆகிய பாடங்களில் அதிகமாக தோல்விடைந்துள்ளது தெரியவந்துள்ளது.
  இடைநிலைத் தேர்வில் அதிகமானோர் தோல்வியடைந்திருப்பது பொதுத் தேர்வின் தேர்ச்சி விகிதத்தைப் பாதிக்கும் என, கல்வித் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
   எனவே, எந்தெந்தப் பாடங்களில் எந்தெந்தப் பள்ளி மாணவர்கள் தோல்வியடைந்திருக்கிறார்கள், அதற்குக் காரணம் என்ன என ஆராய்ந்துள்ளனர். அதில், வகுப்புகளுக்கு சரியாக வராதவர்களும், பாடங்கள் நடத்தப்படும்போது புரியாமல் இருந்தவர்களுமே அதிகம் தோல்வியடைந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட பாடங்களின் ஆசிரியர்களுக்கு சிறப்புக் கற்பித்தல் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.   பயிற்சியின்போது, தோல்வியடைந்த மாணவர்களை ஆசிரியர்கள் கண்காணிக்கும் முறையும் விளக்கப்பட உள்ளது.
   இது குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி கூறுகையில், கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக தேர்ச்சி விகிதம் இருக்கவேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
  அதன்படி, இடைநிலைத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்குள்ள பிரச்னைகள் ஆராயப்பட்டு, அதைத் தீர்க்கும் வகையில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என்றார்.