26/8/16

ஆசிரியர்களுக்கான அடிப்படை திறன் மேம்பாட்டுப் பயிற்சி: 29இல் தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்ட தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி நாகர்கோவிலில் திங்கள்கிழமை (ஆக. 29) தொடங்கி 4 நாள்கள் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான கணித உபகரணப் பெட்டியைப் பயன்படுத்தி அடிப்படைத் திறன்களை மேம்படுத்துதல் பயிற்சி, வட்டார வளமைய அளவில் நடைபெறவுள்ளது.


இம்மாதம் 29, 30 ஆகிய நாள்களில், 31, செப். 1 ஆகிய நாள்களில் என, 2 கட்டங்களாக 1,055 ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெறவுள்ளது.

இதற்கான மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி நாகர்கோவிலில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலக பயிற்சிக் கூடத்தில் நடைபெற்றது.

அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் பயிற்சியைத் தொடக்கிவைத்தார். அப்போது அவர், தொடக்கப் பள்ளியில் கணிதத் திறனில் மிகவும் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு கணித உபகரணப் பெட்டியைப் பயன்படுத்தி சிறப்பு கவனம் செலுத்த ஆசிரியர்களைக் கேட்டுக்கொண்டார். இதில், ஆசிரியர் பயிற்றுநர், ஆசிரியர்கள் என 30 பேர் கலந்துகொண்டனர்.

கருத்தாளர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள் அஜிதகலா, மெர்சிஜெபா ஏஞ்சல், ஸ்ரீவித்யா, ஜாஸ்மின் ஷீபா ஆகியோர் பயிற்சியளித்தனர். ஏற்பாடுகளை மாவட்ட உதவித் திட்ட அலுவலர் வில்வம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தயாளன் ஆகியோர் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக