11/1/16

ஆசிரியர்களின் தொடர் போராட்டம் ஏன்? ஜாக்டோ சார்பில் பிப். 14-இல் கருத்தாய்வு

ஆசிரியர்களின் தொடர் போராட்டம் ஏன்? என்பதை தெளிவுபடுத்தும் வகையில் சென்னையில் பிப்ரவரி 14-இல் கருத்தாய்வு மாநாடு நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (ஜாக்டோ) ஒருங்கிணைப்பாளர் பி.கே. இளமாறன் தெரிவித்தார்.
 சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குழுவின் ஒருங்கிணைப்புக் கூட்டத்துக்குப் பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

 மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
 இதன் தொடர்ச்சியாக பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகம் முன்பு டிசம்பர் 4-இல் நடைபெறவிருந்த முற்றுகைப் போராட்டமானது வெள்ளப் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால், ஆசிரியர் போராட்டம் ஏன்? என்பதை விளக்கும் வகையில் சென்னையில் பிப்ரவரி 14-இல் கருத்தாய்வு மாநாடு நடத்தப்படும். அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து மாநாட்டுக்கு அழைப்பு விடுப்போம். தேர்தல் அறிக்கையில் கோரிக்கைகளை இடம்பெறச் செய்வோம் என்றார்.

12,000 ஆசிரியர் சான்று சரிபார்ப்பு: சேலம் சி.இ.ஓ., ஞானகவுரி தகவல்.

சேலம் மாவட்டத்தில், 12,000 ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தமிழக அரசு பள்ளி ஆசிரியர் பணியிடங்களில்,
போலிச் சான்றிதழ் கொடுத்து பலரும் சேர்ந்துள்ளதாக எழுந்த புகாரையடுத்து, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, தொடக்கப் பள்ளி, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறியதாவது

: மாவட்டத்தில் உள்ள, 21 ஒன்றியங்களில் குழுக்கள் அமைத்து, 12 ஆயிரம் ஆசிரியர்களின், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள், மூன்று நாட்கள் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது, விடுமுறை எடுத்துள்ள ஆசிரியர்கள், சான்றுகள் சமர்ப்பிக்காதவர்களிடம், அதற்குரிய காரணம் குறித்து, போலீசார் விசாரணை நடத்துகின்றனர். விசாரணை குழு குறைகள் கண்டறிந்தால், மேல் அதிகாரிக்கு பரிந்துரை செய்து, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

"என்சிசி-யில் இணைத்துக் கொள்ள 7,859 கல்வி நிறுவனங்கள் காத்திருப்பு'

தேசிய மாணவர் படையில் (என்சிசி) தங்கள் மாணவர்களை இணைத்துக் கொள்ள 7,859 கல்வி நிறுவனங்கள் காத்திருப்புப் பட்டியலில் உள்ளன.
 இதுகுறித்து என்சிசி இயக்கத்தின் தலைமை இயக்குநர் அனிருத்தா சக்ரவர்த்தி தெரிவித்ததாவது: 
என்சிசி அமைப்பை அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விரிவுபடுத்த 5 கட்டங்களாக திட்டங்கள் வகுத்திருந்தோம். 

 ஒவ்வோர் ஆண்டும் 40,000 மாணவர்களை எங்கள் அமைப்பில் இணைத்துக் கொண்டு வருகிறோம்.
 என்சிசியில் தற்போது 13 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் உள்ளனர். மேலும் கடலோர மற்றும் எல்லைப் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளின் மாணவர்களையும் இணைக்க முயற்சி எடுத்து வருகிறோம்.
 அதன்படி, 5 கட்ட மாணவர் சேர்ப்பின் முடிவில், அதாவது எதிர்வரும் 2018-ஆம் ஆண்டில், என்சிசி-யின் பலம் 15 லட்சமாக அதிகரிக்கும். அந்தந்தப் பள்ளி, கல்லூரி வளாகங்களில் என்சிசி அமைப்பை ஏற்படுத்திக் கொள்ள விருப்பம் தெரிவித்து 7,859 கல்வி நிறுவனங்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளன. என்சிசியில் 28 சதவீதமாக உள்ள மாணவிகளின் எண்ணிக்கையை 33 சதவீதமாக அதிகரிக்கவும் திட்டம் உள்ளது.
 குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள என்சிசி முகாமில் பங்கேற்க நாடு முழுவதும் 2,069 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதை குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி கடந்த 6-ஆம் தேதி தொடங்கிவைத்தார்.
 நற்பண்புகள், ஒழுக்கம், தலைமைப் பண்பு, தோழமைப் பண்பு, மதச்சார்பற்ற தன்மை, மனப்பான்மை, தன்னலம் இல்லா சேவைகள், சாகச உணர்வு ஆகியவற்றை மாணவர்களிடையே வளர்க்க வேண்டும் என்பதே என்சிசியின் நோக்கமாகும் என்றார் அனிருத்தா சக்ரவர்த்தி.

சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு சென்னையில் தொடங்கியது. இந்த பயிற்சி வருகிற 13ம் தேதி வரை நடக்கிறது தமிழக தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டப்பேரவை தேர்தலை நடத்துவதற்காக தமிழகத்தில் பல்வேறு அளவில் உள்ள 15 அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சி டிசம்பர் 8ம் தேதி முதல் டிசம்பர் 14ம் ேததி வரை நடந்தது. இந்த பயிற்சி முடித்த மாநில அளவிலான பயிற்றுனர்கள், மாவட்ட அளவில் உள்ள பயிற்றுனர்களுக்கு கடந்த 21, 22ம் தேதிகளில் பயிற்சி அளித்தனர். அடுத்தக் கட்டமாக 16 கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு சென்னை, மதுரை, சேலம், திருச்சியில் மாவட்ட அளவிலான பயிற்றுநர்களுக்கு கடந்த 28ம் தேதி முதல் ஜனவரி 8ம் தேதி வரை பயிற்சி அளித்தனர். 

இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் சென்னையில் உள்ள அண்ணா மேலாண்மை நிறுவனத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நேற்று நடந்தது. இதில் மாநில அளவிலான பயிற்றுனர்கள், மாவட்ட அளவிலான பயிற்றுநர்கள், சட்டப்பேரவை அளவிலான பயிற்றுநர்கள் கலந்து கொண்டு தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தனர். முதல் கட்ட பயிற்சியில் 94 அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி வருகிற 13ம் தேதி வரை நடைபெறுகிறது. 2வது கட்டமாக வருகிற 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதில், 49 தேர்தல் அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

1,330 அடி நீள திருக்குறள் பதாகை வெளியீடு திருவள்ளுவர் தினத்தையொட்டி, 1,330 அடி நீளம் கொண்ட திருக்குறள் பதாகை வெளியிடப்பட்டது.

சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலை முன் இதற்கான நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

திருவள்ளூர் தமிழ் ஆன்றோர் அவையும், தமிழர் பண்பாட்டு நடுவமும் இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு, ராஜ்குமார் பழனிச்சாமி தலைமை வகித்தார்.
4 அடி அகலமும், இரண்டரை அடி நீளமும் கொண்ட பெரிய புத்தகப் பதிப்பை தமிழர் ஆன்றோர் பேரவையைச் சேர்ந்த வெற்றியரசன் பாலாஜி பெற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, கடற்கரைச் சாலையில் 1,330 அடி நீளம் கொண்ட பதாகை வெளியிடப்பட்டது. 

அதில், திருவள்ளுவர் பற்றிய குறிப்புகள், 1,330 திருக்குறள்கள், அதற்கான புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. 1 கி.மீ. தூரத்துக்கு இடம் பெற்றிருந்த பதாகையை பலரும் ஆர்வமுடம் பார்வையிட்டனர்.
இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் மொழி கூறியதாவது:
உலகின் மிகச் சிறந்த மெய்யியல், நீதி சமூகவியல், அரசியல், இல்லறம், வாழ்வியல் நூலான திருக்குறளை சர்வதேச அளவில் அனைவரும் படித்துப் பயனடைய வேண்டும். குறளின் நெறிப்படி அரசுகளும் பின்பற்றி நல்லதோர் உலகத்தை படைக்க உறுதி ஏற்க வேண்டும். திருக்குறளால் தமிழர்கள் பெருமைப்படுவதோடு நில்லாமல், தங்களது சந்ததியினருக்கும் போதிக்க முன்வர வேண்டும். திருக்குறளை தேசிய நூலக அறிவிக்க வேண்டும், அனைத்து பள்ளிகளிலும் பயிற்றுவிக்க வேண்டும், திருவள்ளுவருக்கு தமிழில் அஞ்சல் நாணயம் வெளியிட வேண்டும்.
மக்களவை வளாகத்தில் அவரது உருவச் சிலை அமைக்க வேண்டும். தமிழை நாட்டின் ஆட்சிமொழியாக்க வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி 1,330 அடி பதாகையை வெளியிட்டுள்ளோம்.
கடந்த ஆண்டு 400 அடி நீளமுள்ள திருக்குறளை வெளியிட்டோம் என்றார்.
கின்னஸில் இடம் பெற...!
கின்னஸில் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக 1,330 அடி நீளமுள்ள திருக்குறள் பதாகை வெளியிடப்பட்டது. மேலும் 4 அடி நீளத்திலும், இரண்டரை அடி அகலத்திலும் 142 பக்கம் கொண்ட பெரிய புத்தகப் பதிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் பதாகையும், அதில் இடம் பெற்றுள்ள குறளுக்கான புகைப்படமும் தேர்வு செய்து தயாரிப்பதற்கு 42 நாள்கள் பிடித்துள்ளது. இதை மாநில அளவில் ஒவ்வொரு அரசு பள்ளியிலும் காட்சிக்கு வைக்கப்பட்டு மாணவ, மாணவிகளிடம் குறள் ஆர்வத்தை ஏற்படுத்தவுள்ளதாகவும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்

தமிழகம் முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் இன்று தொடக்கம்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. தமிழகத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் அரையாண்டுத் தேர்வுகள் நடக்கும். ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதி அரையாண்டுத் தேர்வுகள் தொடங்க இருந்தது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரியில் டிசம்பர் மாதம் 1ம் தேதி கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பள்ளி, வணிக வளாகம், தொழிற்சாலைகள்,
குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் லட்சக் கணக்கானோர் வீடுகளை இழந்து வீதிக்கு  வந்தனர்.

இந்த பெரும் சேதத்தில் வீட்டு உபயோகப் பொருட்கள் உள்பட பாடப்புத்தகங்களும் சேதமானது. பாதிக்கப்பட்டவர்கள் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டதால் தொடர்ந்து ஒரு மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, டிசம்பர் மாதம் நடக்க இருந்த அரையாண்டுத் தேர்வுகள் ஜனவரி மாதம் நடக்கும் என்று அரசு அறிவித்தது. இதன்படி பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வுகள் இன்று தொடங்கி 27ம் தேதி வரை நடக்கிறது. கீழ் வகுப்புகளுக்கான தேர்வுகளும் இத்துடன் நடத்தப்பட உள்ளது