6/1/17

10 ரூபாய் நாணயம் செல்லுமா.. செல்லாதா? ரிசர்வ் வங்கி விளக்கம்
Published: January 4 2017, 7:56 [IST]
By: Shankar
மும்பை: 10 ரூபாய் போலி நாணயங்கள் புழக்கத்தில் வந்துவிட்டதால், அவற்றைச் செல்லாது என அறிவிக்கப் போவதாக எழுந்துள்ள வதந்திகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
அதில் 10 ரூபாய் நாணயங்களை ஒழிக்கும் திட்டம் எதுவுமில்லை என்றும், தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களைப் பயன்படுத்தலாம் என்றும் கூறியுள்ளது.

மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி ரூ.500, ரூ.1,000 செல்லாது என்று அறிவித்தது. இதை தொடர்ந்து புதிதாக ரூ.2 ஆயிரம் நோட்டு புழக்கத்தில் விடப்பட்டது. இதனால் சில்லரை பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து 10 ரூபாய் நாணயங்களை அதிக அளவு புழக்கத்தில் விட்டுள்ளனர்.
10 ரூபாய் நாணயங்களில் தயாரிப்பு ஆண்டுகளாக 2010, 2015 ஆண்டுகள் அச்சிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னையில் பணத்தட்டுப்பாடு காரணமாக இந்த 2 விதமான 10 ரூபாய் நாணயங்களும் புழக்கத்திற்கு வந்தன. ரிசர்வ் வங்கியே மூட்டை மூட்டையாக இந்த நாணயங்களை மக்களுக்கு வழங்கியது.
இதில் 2010-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயம் போலியானது என்ற தகவல் பரவ ஆரம்பித்தது. இதனால் பஸ்கள், டீக்கடைகள், வர்த்தக நிறுவனங்களில் இந்த நாணயங்களை பொதுமக்களிடம் இருந்து வாங்க மறுத்து வருகின்றனர். இதனால் பொது மக்கள் மேலும் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
வதந்தி
இதற்கிடையில் மத்திய அரசு 10 ரூபாய் நாணயத்தையும் விரைவில் செல்லாது என்று அறிவிக்க உள்ளது என்ற வதந்தி பரப்பப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் அதிக குழப்பத்திற்கு ஆளானார்கள்.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் வெளியிட்டுள்ள விளக்கத்தில், "10 ரூபாய் போலி நாணயம் புழக்கத்தில் இருப்பதாக எங்களுக்கும் புகார் வந்தது. அதுகுறித்து விசாரணை நடத்தினோம். ஆனால் அதில் உண்மை இல்லை. ரிசர்வ் வங்கி சார்பில் 2010-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் 2011-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. தொடர்ந்து 2015-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயத்தில் ரூபாய் சின்னமும் சேர்த்து வித்தியாசமான முறையில் தயாரிக்கப்பட்டது.
இந்த இரண்டு வகை நாணயங்களும் செல்லுபடியாகும். புரளியை நம்ப வேண்டாம். போலி நாணயத்துடன் ஒருவர் வங்கி கிளையை அணுகினால் அதனை வங்கி அதிகாரிகள் பறிமுதல் செய்ய வேண்டும். அதற்கு ஒரு சான்றிதழ் வழங்கிவிட்டு, போலி நாணயத்தை ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும். பின்னர் இதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்தப்படும். மேற்கொண்டு தகவல் தேவைப்படுபவர்கள் ரிசர்வ் வங்கியின் www.rbi.org.in என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்து கொள்ளலாம்," என்று தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக