18/8/17

பத்து ஆண்டுகளுக்கு வரிவிலக்கு !!

வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஹிமாலயன் பகுதிகளில் உள்ள நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வரிவிலக்கு 2027ஆம் ஆண்டு வரை தொடரும்’ என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று முன்தினம் (15.08.2017) பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு பேசும்போது, “ஜூலை மாதம் 1ஆம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) அமல்படுத்தப்பட்டது. 
வடகிழக்கு மாநிலங்கள், ஹிமாலயன் பகுதிகள், ஜம்மு காஷ்மீர், இமாசலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய பகுதிகளில் உள்ள நிறுவனங்களுக்கு பத்து ஆண்டுகள் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி-யில் இதற்கு வரிவிலக்கு சட்டம் இல்லை. ஆனால், இதன் ஒரு பிரிவு திரும்பச் செலுத்தும் முறைக்கு அனுமதி அளிக்கிறது. இதன்மூலம் இந்தப் பகுதிகளில் உள்ள 4,284 நிறுவனங்கள் பயன்பெறும். இதற்கு மத்திய அரசு நிதியில் இருந்து ரூ.27,413 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.

மத்திய அரசு 2027ஆம் ஆண்டு வரை இப்பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு வரிவிலக்கு அளித்துள்ள நிலையில் மத்திய பாஜக அரசின் தீவிர ஆதரவாளரும், பதஞ்சலி நிறுவனத்தின் தலைவருமான யோக குரு பாபா ராம்தேவ் ஜம்மு மற்றும் காஷ்மீரில் தனது சில்லறை வர்த்தகத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக