4/11/17

வி.ஏ.ஓ., தனி தேர்வு இல்லை முடிவுக்கு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் எதிர்ப்பு

காரைக்குடி: வி.ஏ.ஓ., பதவிக்கு தனித்தேர்வு இல்லை என்ற டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்புக்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அச்சங்க சங்க மாநில பொது செயலாளர் 
செல்வம் கூறியது: டி.என்.பி.எஸ்.சி., சார்பில் வி.ஏ.ஓ., பதவிக்கு தனியாக தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் வி.ஏ.ஓ., பதவியில் பராமரிக்கப்படும் கிராம கணக்குகளும் நடைமுறைகளும் என்ற தலைப்பில் 25 கேள்விகள் கேட்கப்படும். தற்போதைய அறிவிப்பில் இந்த கேள்விகள் இடம்பெறாது.
10-ம் வகுப்பையே கல்வி தகுதியாக கொண்டு இரண்டு தேர்வையும் இணைத்து நடத்துவது வி.ஏ.ஓ.,க்களை மேன்மைபடுத்துவதற்கு பதில் குறைக்கும் செயல். குரூப் 4 தேர்வுக்கு 18 வயது நிரம்பினால் போதும். ஆனால், வி.ஏ.ஓ.,வுக்கு 21 வயது நிரம்பி இருக்க வேண்டும். மண்ணையும் மனிதனையும் அடையாளம் காட்டும் அடிப்படை அலுவலராக வி.ஏ.ஓ., உள்ளார். பொதுமக்களிடம் நேரடி தொடர்புள்ள பதவிக்கு 21 வயது என்பது தான் சரியாக இருக்கும். அதை விடுத்து 18 வயது என அரசு நிர்ணயம் செய்திருப்பது, வயதுக்கு மீறிய பதவியில் அமர்த்தும் செயலாகும்.
வி.ஏ.ஓ.,வுக்கு தனி தேர்வு நடத்தினால் 12 லட்சம் பேர் விண்ணப்பிக்கின்றனர். ஒவ்வொரு நபரும் விண்ணப்ப 
கட்டணம் தனியாக செலுத்துகின்றனர். அதன் மூலமே தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால், இத்தேர்வினால் அரசுக்கு ரூ.15 கோடி செலவாகிறது என்று கூறுவது முற்றிலும் தவறானது. இந்து சமய அறநிலைய துறை செயல் அலுவலருக்கும் 10-ம் வகுப்பு தான் கல்வி தகுதி. எனவே அதையும் சேர்த்து நடத்தலாம். இப்படி அனைத்தையும் சேர்த்து தேர்வு வைத்தால் செலவு மிச்சமாகி கொண்டே போகும், தரம் தாழ்ந்து விடும்.
அரசுக்கு 15 கோடி செலவு தான் பிரச்னை என்றால், இதற்கான கல்வி தகுதியை பட்டப்படிப்பாக்கி சார்பதிவாளர் உள்ளிட்டோருக்கு நடத்தப்படும் சி.எஸ்.எஸ்.இ.,-2 தொகுதி 2-ல் நேர்முகத்தேர்வு அல்லாத தேர்வாக நடத்தலாம். வி.ஏ.ஓ.,வாக இருப்பவர்கள் 98 சதவீதம் பேர் பட்டதாரிகள் தான்.
எனவே, டி.என்.பி.எஸ்.சி., எடுத்துள்ள வி.ஏ.ஓ., மற்றும் குரூப் 4 ஆகியவற்றை இணைத்து தேர்வு நடத்தும் முறையை கைவிட வேண்டும். இல்லையேல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் மாநில அளவிலான போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக