25/9/17

தொடக்க கல்விக்கு ஆசிரியர் பயிற்சி விவகாரம் : வரும் 30-ம் தேதியுடன் முடியும் காலக்கெடுவை நீடிக்க கோரிக்கை

ஆசிரியர் பயிற்சிக்கான காலக்கெடுவை மேலும் நீடிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது. அனைவருக்கும் கட்டாயக் கல்வி சட்டம் 2009-ன் படி மத்திய அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 
தனியார் பள்ளிகள் தகுதி இல்லாத ஆசிரியர்களை பணியில் நியமித்திருப்பதை மத்திய அரசு வரன்முறைபடுத்த முடிவு செய்துள்ளது.  தொடக்க கல்விக்கான 2 ஆண்டு ஆசிரியர் பட்டயப் படிப்பை முடிக்காதவர்கள் பணி செய்து கொண்டே, தேசிய திறந்த நிலை பள்ளியில் சேர்ந்து உரிய தகுதியை அடைய வேண்டும் என மத்திய அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதற்கு செப்டம்பர் 30 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் துறையின் இந்த நடவடிக்கையை தனியார் பள்ளி நிர்வாகிகள் வரவேற்றுள்ளனர்.அதே நேரத்தில் ஆசிரியர் பயிற்சிக்கான காலக்கெடு வரும் 30-ம் தேதி என்பதை மேலும் நீடிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் 20,000 தனியார் தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.

இதில் ஆசிரியர் பயிற்சி முடிக்காத 2 லட்சம் பேர் ஆசிரியர்களாக பணிபுரிவது தெரிய வந்துள்ளது. இவர்கள் அடுத்த 2 ஆண்டுகளில் ஆசிரியர் பயிற்சிக்கான பட்டயப்படிப்பை முடிக்காவிட்டால், தங்களது பணியை அவர்கள் தொடர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் இதுவரையில் 15 ஆயிரம் பேர் பதிவு செய்து இருக்கிறார்கள். விண்ணப்பிக்க வருகிற 30-ந்தேதி கடைசி நாளாகும். அக்டோபர் 3-ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்கும். இதற்கு முதல் வருடத்திற்கு ரூ.4,500-ம், 2-வது வருடத்திற்கு ரூ.6,000 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தகுதியான ஆசிரியர்கள் மூலம் தான் கல்வி கற்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் நாடு முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது

உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி: அக். 5-ம் தேதி வரை படைப்புகளை அனுப்பலாம்

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம் சார்பாக உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. 
இதில் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம்.ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரைபடிக்கும் மாணவர்கள் ‘அண்ட வெளியில் அந்நிய உலகத்தைத் தேடி’ எனும் தலைப்பிலும், 9, 10-ம் வகுப்பு மாணவர்கள் ‘பூமியில் வாழும் சூழலற்றுப் போனால்... அடுத்து என்ன?’ எனும் தலைப்பிலும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் ‘இன்னொரு கிரகத்துக்கு இன்பச் சுற்றுலா போவோமா?’ எனும் தலைப்பிலும் கட்டுரை எழுத வேண்டும்.கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில், மாணவர்களின் சுய கையெழுத்தில் எழுதியிருப்பது அவசியம்.

இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதனை அப்படியே சமர்ப்பித்தால் அவை நிராகரிக்கப்படும்.இரண்டாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல், ‘ஏ4’ தாளில் கட்டுரை இருப்பது அவசியம். ஒவ்வொறு தாளிலும் ஒரு பக்கம் மட்டுமே எழுதப்பட்டிருக்க வேண்டும். கட்டுரைகள் அக்டோபர் 5-ம் தேதிக்குள், ‘The Administrative officer, IPRC/ISRO, Mahendragiri P.O, Tirunelveli - 627 133'என்ற முகவரி யில் சமர்பிக்கப்பட வேண்டும்.தமிழ், ஆங்கில கட்டுரைகளில் தனித்தனியாக முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 04637-281210 / 283510, 9442140183, 9486692236 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது

மனிதநேயம் அகாடமியில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி

மனிதநேய அறக்கட்டளை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:சமுதாயம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் படிக்க மனிதநேய அறக்கட்டளை மூலம் ஐஏஎஸ் அகாடமி தொடங்கப்பட்டு, 
ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற தேர்வுகளுக்கு இலவச பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்1, 2 போன்ற தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை 2955-க்கும் மேற்பட்டோர் பல உயர் பதவிகளுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசு பணியாளர்தேர்வாணையம் நடத்தும் அனைத்து தேர்வுகளுக்கும் பயிற்சி பெற விரும்புவோருக்கு இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதில் கலந்துகொள்ள விரும்புவோர், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் சிஐடி நகர், முதல் பிரதான சாலையில் உள்ள மனிதநேய அறக்கட்டளை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் நேரில் பதிவு செய்ய வேண்டும். பிற மாவட்ட மாணவர்கள் www.saidais.com என்ற இணையதளத்திலும் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

EMIS' இணையதளம் முடங்கியது பள்ளிக்கல்வி துறை பரிதவிப்பு

மாணவர்களின் விபரங்களை, மின்னணு முறையில் சேகரிக்கும், 'எமிஸ்' இணையதளம், ஒரு வாரமாக முடங்கி உள்ளது.தமிழக பள்ளி மாணவர்களின் விபரங்களை, மின்னணு முறைக்கு மாற்ற, 'எமிஸ்' எனப்படும், கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு திட்டம்அறிவிக்கப்பட்டது.


புதிய முகவரி

சென்னை, அண்ணா பல்கலை தொழில்நுட்ப உதவியுடன், பள்ளிக்கல்வித் துறையே, 'எமிஸ்' இணையதளத்தை பராமரித்தது. தற்போது, அந்த பொறுப்பு, தனியார் நிறுவனத்திற்கு தரப்பட்டுள்ளது.இதையடுத்து, புதிய இணையதள முகவரி தரப்பட்டு, அனைத்து பள்ளிகளும், இந்த இணையதளத்தை பயன்படுத்தலாம் என, கல்வித் துறை அறிவித்தது.
ஆனால், புதிய இணைய தளத்தில், தொடர்ந்து தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுகிறது. இரு நாட்களாக, இணையதளம் மொத்தமாக முடங்கி உள்ளது.
இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:'எமிஸ்' திட்டத்தில், மாணவர் பெயர், ரத்தப் பிரிவு, பெற்றோர் விபரம், மொபைல் போன் எண், ஆதார் எண், வங்கி கணக்கு எண், குடும்ப உறுப்பினர் விபரம் என, பல தகவல்களை சேகரிக்க வேண்டும். ஏற்கனவே, ௨௦௧௧ - ௨௦௧௬ வரை, இந்த தகவல்களை இணையதளத்தில் இணைத்துள்ளோம்.


அழுத்தம்

தற்போது, மீண்டும், புதிய இணையதளத்தில் புதிதாக இணைக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. ஆனால், புதிய இணையதளம் மொத்தமாக முடங்கி உள்ளது.
அதிகாரிகளோ, கால அவகாசம் கொடுத்து,தகவல்களை பதிவேற்றம் செய்ய, அழுத்தம் தருகின்றனர். ஆனால், இணைய தள தொழில்நுட்பக் கோளாறு, இன்னும் சரி செய்யப்படவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

DIGITAL SR : பதிவுகள் விடுபட்டுள்ளதால் ஆசிரியர் பணிப்பதிவேடுகளை கணினிமயமாக்குவதில் சிக்கல்.

ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் பல்வேறு பதிவுகள் விடுபட்டுள்ளதால் அவைகளை கணினிமயமாக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.
இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களது பணிப்பதிவேடு உள்பட அனைத்து பதிவேடுகளும் உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பரில் ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகளை கணினியில் பதிவேற்றம் செய்து, டிஜிட்டல் முறையில் பராமரிப்பதற்கான பணி தொடங்கப்பட்டது. அதற்கு முன்னதாக ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் எவ்வித விடுதலும் இல்லாமல் பதிவுகள் சரி செய்யப்பட வேண்டும்என, தொடக்கக்கல்வி இயக்குநரகம் சார்பில் உத்தரவிடப்பட்டது.இதையடுத்து ஆசிரியர்களிடம் பதிவேடு வழங்கப்பட்டு விடுதல்களை சரி செய்யும் முகாம் மாவட்டந்தோறும் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு பதிவுகள் விடுபட்டதால்ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பதிவுகள் இல்லாத காலக்கட்டத்தில் பணியாற்றிய அதிகாரிகள்தான், பதிவுகளை சரி செய்து தர வேண்டுமென உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் தெரிவித்தனர்.


இதனால் மேலும் சிக்கல் ஏற்பட்டது. தற்போது வரை பதிவுகள் சரி செய்யும் பணியே முடிவடையவில்லை. இதனால் கருவூலம் மூலம் கணினிமயமாக்குவதில் மேலும் தாமதம் ஏற்படும் நிலை நிலவுகிறது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் கூறுகையில், ‘‘பணிப்பதிவேடு என்பது ஊதியம், பணி மாறுதல், பதவி உயர்வு, கல்வித்தகுதி, வாரிசுதாரர் நியமனம் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் இருக்கும் மிக முக்கிய ஆவணமாகும். அதில் பதிவுகள் விடுபட்டதற்கு அதிகாரிகள்தான் பொறுப்பு.

6 மாதத்திற்கு ஒரு முறை ஆசிரியர்கள் பணிப்பதிவேட்டை முறையாக பெற்று நகல் எடுக்கலாம் என்ற விதி உள்ளது. எனினும் பல்வேறு அலுவலகங்களில் இது கடைபிடிக்கப்படுவதில்லை. அவ்வாறு செய்திருந்தால் விடுதல்கள் அப்போதே சரி செய்யப்பட்டிருக்கும். எனவே, விடுபட்ட பதிவுகள் அனைத்தையும் அதிகாரிகள் உடனடியாக சரி செய்ய வேண்டும். கணினிமயமாக்கலை மேலும் தாமதப்படுத்தாமல் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

NIOS EXAM : அரசு பள்ளி ஆசிரியர்கள் +2 மதிப்பெண் ஆய்வு செய்ய உத்தரவு

இடைநிலை ஆசிரியர்களின், பிளஸ் ௨ மதிப்பெண் சான்றிதழ் சரிபார்ப்பால், ஆசிரியர்கள் பலர் கலக்கமடைந்து உள்ளனர். மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தனியார் பள்ளிகளில், பல ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், தகுதித் தேர்வு தேவைஎன, வலியுறுத்தப்பட்டது. 
அதனால், தகுதித் தேர்வு முடிக்காத, லட்சக்கணக்கான ஆசிரியர்களை, பணியிலிருந்து வெளியேற்ற வேண்டிய நிலை, தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு ஏற்பட்டது.இந்த பிரச்னையை தீர்க்க, ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, சலுகை வழங்கப்பட்டு உள்ளது.
அதன்படி, மத்திய அரசின், என்.ஐ.ஓ.எஸ்., எனப்படும், தேசிய திறந்த நிலைப் பள்ளியில், 'டிப்ளமா' ஆசிரியர் கல்வியியல் படிப்பில், ௨௦௧௯க்குள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு முன்னரே பணியில் சேர்ந்த, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

அதே நேரம், அரசு பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர்களாக உள்ளவர்கள், பிளஸ் ௨வில், ௧,௨௦௦ மதிப்பெண்ணில், குறைந்தபட்சம், ௫௦ சதவீதமான, ௬௦௦ மதிப்பெண்ணாவது பெற்றுள்ளனரா என, ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆய்வின் முடிவில், ௫௦ சதவீத மதிப்பெண் பெறாத ஆசிரியர்களை மட்டும், தேசிய திறந்தநிலைப் பள்ளியில், 'டிப்ளமா' கல்வியியல் படிப்பில் சேர்க்க, கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.

இந்த நடவடிக்கையால், சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட, ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர். மேலும், ௫௦ சதவீத மதிப்பெண் கூட பெறாமல், குறுக்கு வழியில் யாரும் ஆசிரியர் படிப்பு முடித்தனரா என்றும், கல்வித் துறையில் விசாரணை துவங்கி உள்ளது. அதனால், 'பிளஸ் ௨ சான்றிதழ் சரிபார்ப்பு கூடாது' என, தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் போர்க்கொடி துாக்கி உள்ளனர்.

அரசு துறை தேர்வுகளுக்கு அக்., 31 வரை அவகாசம்:

புதிதாக மாற்றப்பட்ட பாடத்திட்டத்தில், டிசம்பரில் நடத்தப்பட உள்ள, அரசு துறைத்தேர்வுகளுக்கு, 'ஆன் - லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம்.தமிழகத்தில், அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் என, பல லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.
இவர்கள், சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகளுக்கு, இரண்டு, அரசு துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.
ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும், இத்துறை தேர்வுகளுக்கான பாடத்திட்ட முறை மாற்றப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில், டிச., 23 - 31 வரை, அரசு துறைத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
இதற்கு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு, நேற்று துவங்கி உள்ளது. தேர்வெழுத விரும்பும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், டி.என்.பி.எஸ்.சி., இணையதளம் மூலம், ஆன் - லைனில் விண்ணப்பிக்கலாம். அக்., 31 வரை, விண்ணப்பிக்க காலக்கெடு வழங்கப்பட்டு உள்ளது. டிச., 17 முதல், 'ஹால்டிக்கெட்'டுகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.