11/10/17

4ஜி நெட்வொர்க்: ஜியோ முதலிடம்!

நெட்வொர்க் நிறுவனங்களிலேயே 4ஜி பதிவிறக்க வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் முதலிடம் பிடித்திருப்பதாக டிராய் தெரிவித்துள்ளது.
இந்தியத் தொலைத் தொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அமைப்பு, செப்டம்பர் மாதத்தில் இந்திய நெட்வொர்க் நிறுவனங்களின் இணைய சேவை வேகம் குறித்து ‘மை ஸ்பீடு ஆப்’ வாயிலாகச் சோதனை மேற்கொண்டது. அதில், செப்டம்பர் மாதத்தில் அதிகபட்சமாக ஜியோவின் சராசரிப் பதிவிறக்க வேகம் 18.43 எம்.பி.பி.எஸ்.ஸாக இருந்துள்ளது. ஜியோவைத் தொடர்ந்து வோடஃபோன் 8.99 எம்.பி.பி.எஸ்., ஐடியா செல்லுலார் 8.74 எம்.பி.பி.எஸ்., ஏர்டெல் 8.55 எம்.பி.பி.எஸ். ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
பதிவேற்ற வேகத்தைப் பொறுத்தவரையில் ஐடியா செல்லுலார் (6.30 எம்.பி.பி.எஸ்.) முதலிடம் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து 5.77 எம்.பி.பி.எஸ். வேகத்துடன் வோடஃபோனும், 4.13 எம்.பி.பி.எஸ். வேகத்துடன் ரிலையன்ஸ் ஜியோவும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன. ஏர்டெல் (4.08 எம்.பி.பி.எஸ்.) நான்காவது இடத்தில் உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவின் அறிமுகத்துக்குப் பிறகு இந்தியாவில் டேட்டா பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கடந்த செப்டம்பரில் தினசரி 20 கோடி ஜி.பி. அளவிலான டேட்டா பயன்படுத்தப்பட்டுவந்தது. இந்த ஆண்டில் தினசரி 150 கோடி ஜி.பி. அளவிலான டேட்டா பயன்படுத்தப்படுகிறது.

ஆங்கிலத்தை புரிந்து படிக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் !!

ஆங்கிலத்தை புரிந்து படிக்கும் வகையில், புதிய பாடத்திட்டம் கொண்டு வர
வேண்டும்’ என, ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, டி.பி.ஐ., வளாகத்தில், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் மாற்றி அமைப்பது குறித்து, கருத்து கேட்பு கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. இதில், 15க்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், தற்போதுள்ள முப்பருவ முறையில், இரண்டாம் பருவத்திற்கான பாடங்களை குறைத்து, அவற்றை மூன்றாம் பருவத்தில் இணைக்க வேண்டும். ஆசிரியர்களை கல்வி பணிக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். விவசாயம் மற்றும் அறிவியல் தொடர்பான பாடங்களை புதிதாக அமைப்பதோடு, அறிவியல் ஆய்வுக்கான உபகரணங்களை வழங்கிட வேண்டும்.மாணவர்களுக்கு எழுத்துப் பயிற்சி, வாசிப்பு பயிற்சியுடன், ஆங்கிலத்தை புரிந்து படிப்பதற்கேற்ப பாடத்திட்டம் வகுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தினர்

அரசு ஊழியர் ஊதிய உயர்வு : அமைச்சரவை நாளை முடிவு

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்குவது குறித்து முடிவெடுக்க, தமிழக அமைச்சரவை கூட்டம், நாளை நடைபெற உள்ளது.

மத்திய அரசின், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க, தமிழக அரசு முடிவு செய்தது. 

இதற்கான பரிந்துரைகளை பெறுவதற்காக, 'அலுவலர் குழு' அமைக்கப்பட்டது. இக்குழு, செப்., 27ல், முதல்வர் பழனிசாமியை சந்தித்து, அறிக்கை வழங்கியது. அதன் அடிப்படையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, எத்தனை சதவீதம் ஊதிய உயர்வு வழங்குவது என்பதை முடிவு செய்வதற்காக, நாளை காலை, 11:15 மணிக்கு, தலைமை செயலகத்தில், அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. முதல்வர் பழனிசாமி தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில், அனைத்து அமைச்சர்களும் பங்கேற்கின்றனர். அமைச்சரவை கூட்டம் முடிந்ததும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.