2/11/17

வீட்டு சமையல் எரிவாயு விலை மீண்டும் அதிரடி உயர்வு!!!

                                            
வீட்டு உபயோகத்துக்கான மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் 
புதன்கிழமை (நவ.1) முதல் ரூ.93.50 அதிகரிக்கப்பட்டுள்ளது.
இப்போது இதன் விலை ரூ.750-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டருக்கு புதன்கிழமை (நவ.1) முதல் பதிவு செய்வோருக்கு ரூ.750-க்கு அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மானியத்துடன் கூடிய எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதாவது மானியத்துடன் கூடிய எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.479.11-லிருந்து ரூ.483.69-ஆக, அதாவது ரூ.4.58 அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் விலையேற்றம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



வங்கிக் கணக்கில் எவ்வளவு?
வீட்டு உபயோகத்துக்கு மானியம் அல்லாத சிலிண்டரை புதன்கிழமை (நவ.1) முதல் பதிவு செய்து ரூ.750-க்கு வாங்கும் நுகர்வோருக்கு அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.266.31 செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நவ.,5 வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!!!

சென்னை: இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: மன்னார் வளைகுடா அருகே மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 
இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 5 வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மழை:

இதனிடையே சென்னையில் கொளத்தூர், சவுகார்ப்பேட்டை, கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை, ஜாபர்கான்பேட்டை, சேத்துப்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது.

ஆதார் இல்லாமல் ஐ.டி. ரிட்டன் செலுத்தலாம்!

வருமான வரி ரிட்டன் கணக்கைத் தாக்கல் செய்ய ஆதார் கட்டாயமல்ல என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

வருமான வரிச் சட்டம் 139AA-இன் படி, வருமான வரி ரிட்டன் கணக்கைத் தாக்கல் செய்யும்போது ஆதார் எண்ணைக் கட்டாயமாக குறிப்பிட வேண்டும். அவ்வாறு ஆதார் எண் இணைக்கப்படாமல் அல்லது விண்ணப்பிக்கும்போது ஆதார் எண் தெரிவிக்கப்படாமல் இருந்தால் அது செல்லாததாக அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு ஆதாரைக் கட்டாயமாக்கியிருந்தது. இந்நிலையில் நேற்று (அக்டோபர் 31) சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்ய ஆதார் கட்டாயமல்ல என்று மனுதாரர் ஒருவருக்கு அனுமதியளித்துத் தீர்ப்பளித்துள்ளது.

பிரீத்தி மோகன் என்ற பெண் தனது வழக்கறிஞர் சுரித் பார்த்தசாரதி உதவியுடன் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். ஆதார் எண் இல்லாதவர்கள் வருமான வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்யும்போது ஆதாரை எண்ணை இணைக்க இயலாது; எனவே அந்தக் கட்டுப்பாட்டுக்கு விலக்களிக்க வேண்டும் என்று அவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், அவர் வருமான வரி ரிட்டனைத் தாக்கல் செய்வதற்கு ஆதாரை இணைப்பது கட்டாயமல்ல என்று செவ்வாய்க்கிழமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் தீர்ப்பளித்துள்ளார்.

முன்னதாக ஆகஸ்ட் 4ஆம் தேதி கேரள உயர் நீதிமன்றத்தில் பிரசாந்த் சுகதன் என்பவர் தொடுத்த வழக்கில் அவர் வருமான வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்வதற்கு ஆதார் கட்டாயமல்ல என்று உத்தரவிடப்பட்டது. அதற்கு முன்னர் ஜூன் 9ஆம் தேதி, உச்ச நீதிமன்றத்தில் பினாய் விஸ்வான் என்பவர் தொடுத்த வழக்கில் அவரது வருமான வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்வதற்கு ஆதார் கட்டாயம் என்ற கட்டுப்பாட்டுக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்து இழப்பீடு : புதிய விதிமுறைகள்!!!

சாலை விபத்தில் உயிரிழப்பவரின் குடும்பத்துக்கு
இழப்பீடு வழங்கப் பின்பற்றுவதற்கான புதிய விதிமுறைகளை உச்ச நீதிமன்றம் நேற்று(அக்டோபர் 31) வகுத்துள்ளது.

சாலை விபத்தில் உயிரிழப்பவரின் குடும்பத்துக்கு, மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இழப்பீடு வழங்கப்படுகிறது. அதில், சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படும்போது, அதற்கான இழப்பீடுகளை வழங்கும்போது,உயிரிழந்தவரின் எதிர்கால வருமானம் கணக்கிடுவது தொடர்பாக 27 பேர் தொடுத்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.

இழப்பீடு வழங்குவதற்கான புதிய விதிமுறைகளை உச்ச நீதிமன்றம் வகுத்து வழங்கியுள்ளது. அதில், இறந்தவர் தனியார் அல்லது அமைப்பு சாரா நிறுவனங்களில், நிரந்தரப் பணியாளராக இருந்து , 40 வயதுக்குள் இறந்தால், அவருடைய சம்பளத்துடன், 50 சதவிகிதம் கூடுதல் தொகையை, எதிர்கால வருவாயாகக் கணக்கிட வேண்டும்.

அதுபோன்று, 40 முதல் 50 வயதுள்ளவர்களுக்கு, 30 சதவிகிதமாகவும், 50 முதல் 60 வயதுள்ளவர்களுக்கு 15 சதவிகிதமாகவும், எதிர்கால வருவாயைக் கணக்கிட வேண்டும். இறந்தவர், சுய தொழில் அல்லது தொகுப்பூதியம் பெறுபவராக இருந்தால், 40 வயதுள்ளவர்களுக்கு 40 சதவிகிதம் எதிர்கால வருவாயாகக் கணக்கிட வேண்டும். இது 40 முதல் 50 வயதுள்ளவர்களுக்கு 25 சதவிகிதமாகவும், 50 முதல் 60 வயதுள்ளவர்களுக்கு , 10 சதவிகிதமாகவும் கணக்கிட வேண்டும்.

இழப்பீடு மற்றும் இறுதி சடங்குகளுக்கான தொகையை, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை, 10 சதவிகிதம் உயர்த்திக் கணக்கிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கந்து வட்டி: தலைமைச் செயலாளருக்கு உத்தரவு!!!

கந்து வட்டிக்கு எதிரான வழக்கில் தமிழகத் தலைமைச் செயலாளர்
பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் கந்து வட்டிக் கொடுமையால் ஒரு குடும்பமே ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பு தீக்குளித்து உயிரிழந்தது. இதையடுத்து கந்து வட்டிக்கு எதிராகப் பலரும் குரல் கொடுத்துவருகின்றனர்.

இந்நிலையில் கந்து வட்டி தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கனகவேல் என்பவர் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் “அரசிடம் அனுமதி பெறாமல் வட்டிக்குக் கடன் வழங்குவதைத் தடுக்க வேண்டும். கடனுக்கு எத்தனை சதவிகிதம் வட்டி வசூலிக்கலாம் என்பதையும் அரசே நிர்ணயித்து அறிவிக்க வேண்டும். கந்து வட்டி புகாரை விசாரிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனு இன்று (நவம்பர் 1) நீதிபதிகள் வேணுகோபால், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது “கந்து வட்டி வசூலிப்பது தொடர்பான புகார்களை விசாரிக்கத் தனிக் குழு அமைப்பது குறித்துத் தமிழகத் தலைமைச் செயலாளர், டிஜிபி, மதுரை ஆட்சியர், காவல் ஆணையர் உள்ளிட்டோர் பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

முன்னதாக கந்து வட்டிக் கொடுமையால் நான்கு பேர் தீக்குளித்தது தொடர்பாகத் தலைமைச் செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

அண்ணா பல்கலை., தேர்வுகள் (நவ.,2) நடைபெறும்!!!

                                                  
அண்ணா பல்கலை., தேர்வுகள் திட்டமிட்டபடி நாளை
(நவ.,2)நடைபெறும் என பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களை பூஜையில் பங்கேற்க கட்டாயபடுத்தும் அரசு

*சண்டிகர்:
வேதமந்திர பயிற்சி மேற்கொள்ளாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்
என்று ஆசிரியர்களுக்கு மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது ஹரியானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹரியானாவில் மனோகர் லால் கத்தார் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்துவருகிறது.
இந்த நிலையில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, கட்டாய வேத மந்திர பயிற்சி எடுக்க ஆசிரியர்களுக்கு, அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
திருவிழாவின்போது, வேத மந்திரங்களை உச்சரிக்க வேண்டும், பூஜையில் ஈடுபட வேண்டும், பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது பாஜகவின் கல்வியைக் காவிமயமாக்கும் திட்டம் என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துவருகின்றன.

இந்நிலையில், கட்டாய வேத மந்திர பயிற்சியில் பங்கேற்க பல ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அதற்கான உரிய காரணத்தை விளக்காவிட்டால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு எச்சரித்துள்ளது.

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என திருச்சி
மாவட்ட ஆட்சியர் ராசாமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

"ஆண்டுதோறும், சமூக நீதிக்காகப் பாடுபடுபவர்களை சிறப்புச் செய்வதற்காக, சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டுவருகிறது. இவ்விருதைப் பெறுபவருக்கு, ரூபாய் 1 லட்சம் பொற்கிழி மற்றும் ஒரு பவுன் தங்கப்பதக்கம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுவருகிறது.

2017-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு, உரிய விருதாளர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். எனவே, சமூக நீதிக்காகப் பாடுபட்டவர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் சமூக, பொருளாதாரம் மற்றும் கல்வி மேம்பாடு அடைய மேற்கொண்ட முயற்சிகள், அம்மக்களின் வாழ்க்கைத் தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள், கடந்த ஆண்டுகளில் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றுடன் அவர்களது பெயர், சுயவிவரம் மற்றும் முழு முகவரியுடன் பூர்த்திசெய்து 10.11.2017-க்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு விண்ணப்பிக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.