7/12/17

30,000 பேருக்கு மீண்டும் தேர்வு!

தொலைநிலை கல்வி திட்டம் மூலம் பொறியியலபடித்த 30,000 பட்டதாரிகள் பட்டத்தை செல்லுபடியாக்க, மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்பை தொலைநிலை கல்வி திட்டம் மூலம் வழங்கக்கூடாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் விதிமுறை கூறுகிறது. ஆனால், சில தனியார் மற்றும் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற பல்கலைகள், தொலைதூர கல்வி திட்டத்தில், பிஇ, பிடெக், உள்ளிட்ட தொழில்நுட்ப பட்டங்களை வழங்குவதாகப் புகார் எழுந்தது.
இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏகே.கோயல், உதய் லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நவம்பர் 3ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “தொலைதூர கல்வி திட்டத்தில், தொழில்நுட்ப கல்வி கற்பிப்பதை ஏற்க முடியாது. பல தனியார் பல்கலைகள் தொலைதூர கல்வி திட்டத்தில், பிஇ, பிடெக், பட்டங்களை வழங்கியுள்ளன. அது செல்லாது வரும், 2018 - 19 கல்வி ஆண்டு முதல் இவ்வகை கல்வி திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்படுகிறது. உதய்பூரில் உள்ள ஜேஆர்என் ராஜஸ்தான் வித்யாபீட், ராஜஸ்தான் சுரு மாவட்டத்தில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் அன்வான்ஸ்ட் ஸ்டீஸ் இன் எஜூகேசன், உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலகாபாத் அக்ரிகல்ச்சரல் இன்ஸ்டிடியூட், தமிழகத்தில் உள்ள விநாயகா மி‌ஷன்ஸ் ரிசர்ச் ஃபவுண்டேசன் ஆகிய நிகர் நிலை பல்கலைக்கழகங்களில் 2001 முதல் 2005 வரை தொலைதூர கல்வி திட்டத்தில் வழங்கப்பட்ட அனைத்துத் தொழில்நுட்ப பட்டங்களும் ரத்து செய்யப்படுகின்றன. இந்த 4 நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட ஒப்புதல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது. இந்தப் பல்கலைக்கழகங்கள் மாணவர்களிடமிருந்து கட்டணமாக பெறப்பட்ட தொகையை 2018 மே 31 ஆம் தேதிக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். ஏற்கனவே பட்டம் பெற்ற மாணவர்களின் நலன் கருதி, அவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்படும். அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலான ஏஐசிடிஇ சார்பில் நடத்தப்படும் ஸ்கிரீனிங் டெஸ்டில், அவர்கள் வெற்றி பெற வேண்டும். 2018 அவர்களுக்கு வழங்கப்படும் இரண்டு வாய்ப்புகளையும் ஜனவரி 15 ஆம் தேதிக்கு முன்னர் பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும்” என அவர்கள் உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், தொலைநிலை கல்வி திட்டத்தில் வழங்கிய பொறியியல் பட்டங்களைப் பல்கலைக்கழக மானியக்குழு நிறுத்தி வைத்தது. இதனால், இந்த நிறுவனங்களின் வாயிலாக பொறியியல் பட்டம் பெற்ற சுமார் 30,000 பொறியியல் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இவர்களுக்கான ஒரே தீர்வாக மே அல்லது ஜூன் மாதத்தில் ஒரு தேர்வு நடத்தப்படவுள்ளது. அதை எழுதுவதற்கு ஜனவரி 15ஆம் தேதிக்குள் அவர்கள் பதிவு செய்துகொள்ள வேண்டும். தங்கள் பட்டங்களை செல்லுபடி ஆக்க அவர்களுக்கு இதுவே ஒரே வாய்ப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: தலைமை ஆசிரியர்களுக்கு அதிகாரம்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள இடங்களில், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 6,000க் கும் மேற்பட்ட, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன. 

இவற்றில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்கள் நடத்துகின்றனர். பள்ளிகளில், 3,000க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், காலியாக உள்ளன. அதனால், பல பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில், பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்தி, காலியிடங்களை தற்காலிகமாக நிரப்ப, முடிவு செய்துஉள்ளனர்.
அதன்படி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளின் மேற்பார்வையில், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே, தற்காலிக ஆசிரியர்களை நியமித்து கொள்ளலாம். 
மாதம், 7,500 ரூபாய் என, பெற்றோர் - ஆசிரியர் கழகம் வழியே, மாத சம்பளம் வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

தேர்வு பயிற்சி: ஆசிரியர்கள் கோரிக்கை

அரசு பள்ளி மாணவர்களுக்கான, போட்டி தேர்வு பயிற்சி மையங்களை அதிகரிக்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்கள், 'ஜே.இ.இ., நீட்' போன்ற நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, எம்.பி.பி.எஸ்., படிக்கவும், தேசிய உயர் கல்வி நிறுவனத்தில் சேரவும், சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. 
தமிழகம் முழுவதும், 100 மையங்களில், இலவச பயிற்சி துவங்கப்பட்டது.
இந்த மையங்களின் எண்ணிக்கை, 500 ஆக உயர்த்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்னும் மையங்களின் எண்ணிக்கையை உயர்த்தவில்லை. அதனால், பெரும்பாலான மாணவர்களுக்கு, பயிற்சி பெற வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும், போட்டி தேர்வு பயிற்சி மையம், பள்ளிகள் மற்றும் மாணவர்களின் வீடுகளில் இருந்து, வெகு தொலைவில் உள்ளது.
அதனால், மாணவர்களிடம் ஆர்வம் குறைந்துள்ளது. எனவே, போட்டி தேர்வு பயிற்சி திட்டம், கண்துடைப்பாக இல்லாமல், மாணவர்களுக்கு பயன் தரும் வகையில் இருக்க வேண்டும் என, ஆசிரியர்கள் வலியுறுத்தினர். எனவே, கூடுதலாக பயிற்சி மையங்களை துவங்க வேண்டும் என்றும், அவை, பள்ளிக்கு அருகில் அமைய வேண்டும் என்றும், அவர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

தனியார் பள்ளி முதல்வர்களுக்கு கருத்தரங்கம் : அமெரிக்க கல்வி முறையை அறிய வாய்ப்பு

சென்னை: அமெரிக்காவில் கிடைக்கும் செயல்முறை கல்வி பயிற்சி வாய்ப்புகள் குறித்து, தனியார் பள்ளி முதல்வர்களுக்கான கருத்தரங்கம், வரும், 9ல், சென்னையில் நடக்கிறது.
'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' மற்றும் 'கோ பார் குரு' நிறுவனம் இணைந்து, இதை நடத்துகின்றன.
அமெரிக்காவில் உள்ள கல்வி வாய்ப்பு, பள்ளி மாணவர்களுக்கான செயல்முறை பயிற்சி மற்றும் மாணவர் கல்வி பரிமாற்ற வாய்ப்புகள் குறித்து, சென்னையில், வரும், 9ம் தேதி, கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.
தாஜ் கோரமண்டல் ஓட்டலில், காலை, 9:30 மணி முதல், மதியம், 1:00 மணி வரை, 'எஜு கனெக்ட்' என்ற தலைப்பில், கருத்தரங்கம் நடக்கிறது.
இதில், தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ., - ஐ.ஜி.சி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளி முதல்வர்கள் பங்கேற்கலாம்.
'தினமலர்' நாளிதழின், மாணவர் பதிப்பான, 'பட்டம்' மற்றும் அமெரிக்காவில் உள்ள கல்வி நிறுவனங்கள்... 
நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு, தமிழக பள்ளி, கல்லுாரி மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து செல்லும், 'கோ பார் குரு' நிறுவனம் இணைந்து, நிகழ்ச்சியை நடத்துகின்றன.
அமெரிக்க துாதரகத்தின் கல்வி அதிகாரிகள், 'கோ பார் குரு' நிறுவன, சி.இ.ஓ., காயம்பூ ராமலிங்கம், மதுரை விஸ்வ வித்யாலயா குரூப் ஆப் ஸ்கூல்ஸ் முதல்வர், பி.சந்திரசேகரன் ஆகியோர் விளக்கம் தர உள்ளனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர், தங்கள் பெயர்களை, EDUCONNECT@GO4GURU.com என்ற இ - மெயிலிலும், 87542 55117, 99523 53851 என்ற தொலைபேசி எண்ணிலும், முன்பதிவு செய்து கொள்ளலாம். 
முன்பதிவு கட்டாயம்; அதேநேரம் அனுமதி கட்டணம் எதுவும் இல்லை.

மழை வெள்ளத்தால் திறன் தேர்வு ஒத்திவைப்பு

திண்டுக்கல்: எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி திறன் தேர்வு மழையால் டிச., 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு நடத்துகிறது. இத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பிளஸ் 2 வரை மாதம் ரூ.500 வீதம் அரசு வழங்கும்.இத் தேர்வினை எழுதுவதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேர் வரை ஆன்-லைனில் விண்ணப்பித்து இருந்தனர். இத் தேர்வு டிச., 9 ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஒக்கி புயல் பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இத் தேர்வு தேர்வு டிச., 16 ம் தேதி நடைபெறும் என தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.

ஆர்.கே.நகரில் 21ல் அரசு விடுமுறை

இடைத்தேர்தலை ஒட்டி, டிச., 21ல், ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு, பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில், டிச., 21ல், இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

அதையொட்டி அன்று, ஆர்.கே.நகர் தொகுதிக்கு மட்டும், அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆர்.கே.நகர் வாக்காளர் கள், சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் பணிபுரிந்தால், அவர்களுக்கு ஓட்டுப்பதிவு தினமான, டிச., 21 அன்று, சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலை 6:00 மணிக்குமேல் சிறப்பு வகுப்புகள் நடத்த புதுச்சேரி அரசு தடை :

புதுச்சேரி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலை 6 மணிக்குமேல் சிறப்பு வகுப்புகள் நடத்த தடைவிதித்து அம்மாநில பள்ளிக்கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி இலக்கை கருத்தில் கொண்டு, சில அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில், சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில், இரவு வரை பாடம் நடத்துவதாக கூறப்படுகிறது. இதனால், மாணவ, மாணவியருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகிறது. மாணவர்கள் நீண்ட நேரம் படிப்பிலேயே, கவனம் செலுத்த வேண்டி இருப்பதால், அவர்கள் மனதளவில் சோர்வடைவதாகவும் பெற்றோர்கள் தரப்பில், கல்வித்துறைக்கு பல புகார்கள் வந்தன. மாணவர்கள் தரப்பிலும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து புதுச்சேரி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், மாலை 6 மணிக்குள் சிறப்பு வகுப்புகளை முடித்துக்கொள்ள வேண்டும் எனவும், இந்த நடைமுறையை, கண்டிப்பாக அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என, புதுச்சேரி கல்வித்துறை இணை இயக்குனர் கிருஷ்ணராஜ் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, புதுச்சேரி மாநில அனைத்து பள்ளி முதல்வர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவர்கள் வெளியில் செல்வதை தடுத்து, படிப்பில் கவனம் செலுத்த மதிய உணவு இடைவேளை நேரம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.