30/8/18

மாவட்ட வாரியாக 30 மாணவர்களுக்கு காமராஜர் விருது :

ஆசிரியர் தினத்தையொட்டி, மாவட்ட வாரியாக, 30 மாணவர்களுக்கு, காமராஜர் விருது வழங்கப்பட உள்ளது.தமிழக பள்ளி கல்வி துறையில், மேற்கொள்ளப் பட்ட மாற்றங்களில் முக்கியமாக, பொது தேர்வுகளுக்கான, 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த மாணவர்களில், மாநில மற்றும் மாவட்ட அளவில், முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு, அரசின் உதவித்தொகை வழங்கப்பட்டது.

இதில், ஆங்கில வழி மாணவர்களுக்கே, அதிக உதவித்தொகை கிடைத்தது. இதனால், அரசு பள்ளி மாணவர்களும், தமிழ் வழி மாணவர்களும் பின்தங்கினர். மேலும், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆர்வமும், படிப்பின் மீது குறைந்தது.இதை மாற்றும் வகையில், தமிழ் வழியில் படித்து, நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்கும் புதிய திட்டத்தை, தமிழக அரசு அறிவித்தது.

இதன்படி, 2017 - 18ம் கல்வி ஆண்டில், தமிழ் வழியில் படித்து, முன்னிலை இடம் பெற்ற திறமையான மாணவர்களுக்கு, காமராஜர் விருது வழங்கப்பட உள்ளது.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், தலா, 15 மாணவர்கள் என, ஒவ்வொரு மாவட்டத்திலும், 30 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களுக்கு, காமராஜர் பெயரில் விருது மற்றும் சான்றிதழ்; பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய்; பிளஸ் 2வுக்கு, 20 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது. வரும், 5ம் தேதி நடக்கும் ஆசிரியர் தின விழாவில், இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக