25/8/18

உதயச்சந்திரன் அவர்களுக்கு கிடைத்த பரிசா ??

உதயச்சந்திரன் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டார்.

 உதயச்சந்திரன் ஒரு சாதாரண கல்வி அதிகாரி கிடையாது. தமிழ் இலக்கியத்தின் மீது தனி காதல் உடையவர். பள்ளி கல்வி மீது அளவு கடந்த அக்கறையும் ஆர்வமும் நிறைந்தவர். அதனால்தான் அவர் தமிழக பள்ளிக்கல்வி செயலாளராக நியமித்தபோதுகூட சாமான்ய மக்களும் சந்தோஷப்பட்டார்கள்.

ஒளிர்ந்த அண்ணா நூற்றாண்டு
அவர் பணியில் அமர்ந்தவுடன் பள்ளிக்கல்விதுறை செப்பனிடப்பட்டு, சீரமைக்கப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்டு, பிரகாசமாக மிளிரும் என எதிர்பார்ப்பு மேலோங்கி எழுந்தது. அதற்கேற்றாற்போல், ஆள், அரவம் இல்லாமல், இருண்டுபோய் கவனிப்பாரற்று கிடந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு ஒளி ஊட்டி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார் உதயச்சந்திரன்.

அன்பை வாரிகொண்டார்
காலங்காலமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களின் மனதில் தாழ்வு மனப்பான்மையையும், மதிப்பெண்கள்தான் அனைத்தையும் தீர்மானிக்கும் ஒன்று என்ற மாயையைம் உடைத்தெறிந்தார். புதிய புதிய அணுகுமுறைகள், வழிமுறைகள், எளிய நடை உரைநடைகளை உதயச்சந்திரன் பாடத்திட்டத்தில் புகுத்தினார். இதனால் அரசியல் பேதமின்றி ஒட்டுமொத்த தமிழக தலைவர்கள், பெரியவர்கள், குழந்தைகளின் ஆதரவையும் அன்பையும் வாரிக்கொண்டார்.

வெளிப்படைத்தன்மை
ஆனால் நல்லது என்று நடந்தால் அதை தாங்கி கொள்ள முடியாத நலம் விரும்பிகள் புராண காலத்திலிருந்தே உண்டு. அப்படி இருக்கும்போது உதயச்சந்திரனுக்கு எதிர்ப்புகளும், கண்டனங்களும் வராதா என்ன? சிலருக்கு உதயச்சந்திரனின் செயல்பாடுகள் எரிச்சலை தந்தன. வெளிப்படைத்தன்மை நடவடிக்கைகள் சிலருக்கு ஆத்திரத்தை மூட்டின.

நீதிமன்றத்தில் வழக்கு
அதனால் எந்நேரமும் இடமாற்றம், பணி மாற்றம் செய்யப்படலாம் என்ற கருத்தும் ஆழமாக வேரூன்றியே நிலவியது. அதற்கேற்றாற்போல் நீதிமன்றத்திலும் இது சம்பந்தமாக வழக்கு நடைபெற்றும் வந்தது. ஒத்திவைப்பு, விசாரணை என சம்பிரதாயங்களும் நீதிமன்றத்தில் நடந்து கொண்டுதான் இருந்தன.

பள்ளிக் கல்வித் துறை சார்பில் கேரளத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி :

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநில மக்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் சார்பில் நீட் தேர்வுக்கு பயிற்சி வழங்குவதற்காக அமைக்கப்பட்ட சைதன்யா டெக்னோ பள்ளி சார்பில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் கேரளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

 சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு நிவாரணப் பொருள்கள் ஏற்றப்பட்ட லாரிகளை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
 இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
 கேரள வெள்ள பாதிப்புக்கு சைதன்யா டெக்னோ பள்ளி சார்பில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருள்கள் 4 கண்டெய்னர்கள் மூலமாகவும், ஆசிரியர்கள் இணைந்து வழங்கிய ரூ.1 கோடி நிதி காசோலையாகவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக் கல்வித் துறை சார்பில் கேரள மாநிலத்துக்கான நிவாரணப் பொருள்கள் விரைவில் மாவட்டந்தோறும் பெறப்பட்டு அனுப்பப்படும்.
 மாதிரிப் பள்ளி: தற்போது சென்னை எழும்பூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாதிரிப்பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. அதில் எல்.கே ஜி., யூ.கே ஜி. வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதைத்தொடர்ந்து 32 மாவட்டங்களிலும் மாதிரிப் பள்ளிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அரசின் சார்பில் 412 மையங்களில் இலவசப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. அதற்காக தற்போது ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ஆசிரியர் பணி நியமனத்துக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டித் தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்தத் தேர்வு நடைபெறும் தேதி குறித்து வரும் செப்டம்பர் மாதம் அறிவிக்கப்படும் என்றார் அமைச்சர்.
 இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

EMIS - அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர் விவரம் :ஆக. 31க்குள் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!

தமிழகம் முழுவதும் அரசு, அரசுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளின் விவரங்களை ஆக.31க்குள் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:இஎம்ஐஎஸ் 18 - 19ம் ஆண்டிற்கான இணையதள பதிவேற்றத்தை எந்த ஒரு மாணவரும் விடுதல் இன்றியும், இரட்டிப்பு பதிவு இன்றியும் முடிக்க வேண்டும். ஏதேனும் விடுதல் இருப்பில் அதை உடனே பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அனைத்து வட்டார வள மைய பிஇஒக்கள் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளின் விவரங்கள் சரியாக உள்ளதாக என ஆசிரியர்களின் விவரங்களை நேரில் எடுத்து வரக்கூறி ஆசிரியர் பயிற்றுநர் உதவியுடன் சரிபார்க்க வேண்டும்.

உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் வரிசை எண் இஎம்ஐஎஸ் மூலம் எடுக்க இருப்பதால் எஸ்எஸ்எல்சி, பிளஸ்1, பிளஸ்2 மாணவ, மாணவிகள் விவரம் கணினி ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியரைக் கொண்டு துல்லியமாக சரிபார்த்து மாற்றங்கள் இருப்பின் அதை சரி செய்ய வேண்டும்.பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு குரூப் கோடு சரிபார்க்க வேண்டும்.

இந்த பணிகள் அனைத்தும் ஆக.31க்குள் சரிபார்த்து முடிக்க வேண்டும். ஆசிரியரின் முழு விவரம் புதிதாக பதிவேற்றம் செய்யவோ, ஏற்கனவே பதிவேற்றம் செய்த ஆசிரியரை நீக்கவோ முடியாது. எனவே ஏற்கனவே உள்ள ஆசிரியர் விவரத்தை சரிபார்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்.

நடப்பாண்டு, பள்ளி மாணவ - மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார். 

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும், மாணவ - மாணவியருக்கு, தமிழக அரசு சார்பில், இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், 437.86 கோடி ரூபாய் செலவில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும், 5.06 லட்சம் மாணவர்கள், 6.49 லட்சம் மாணவியர்; அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் படிக்கும், 18 ஆயிரத்து, 506 மாணவர்; 4,394 மாணவியர் என, மொத்தம், 11.78 லட்சம் பேருக்கு, இலவச சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.
சென்னை, தலைமைச் செயலகத்தில், முதல்வர் பழனிசாமி, இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை நேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செங்கோட்டையன், நிலோபர் கபில், ராஜலட்சுமி, வளர்மதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.