கோவை: அரசு வேலை வாங்கி தருவதாக, தன்னிடம் படித்த மாணவர் மற்றும் அவரது தந்தை, நான்கு லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டதாக, பாதிக்கப்பட்டவர், போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.கரூர், சின்னதாராபுரம், நடுப்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ், 31. இவர் நேற்று, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார்:எங்கள் ஊரில், பைப் கம்பெனி நடத்தி வருகிறேன். 2015ம் ஆண்டு, கோவை, தனியார் இன்ஜி., கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றினேன். அப்போது, என்னிடம் கோவைபுதுாரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், 50, என்பவரின் மகன் ஹரிநாராயணன், 23, படித்தார்.தன் தந்தை அரசியலில் மேலிட செல்வாக்கு உடையவர் எனவும், பொதுப்பணித் துறையில் வேலை வாங்கி தருவதாகவும், ஹரிநாராயணன் தெரிவித்தார். பின், அவரது தந்தையை அறிமுகம் செய்து வைத்தார். 'அரசு வேலைக்கு, 4 லட்சம் ரூபாய் செலவாகும்; பணம் கொடுத்தால் உடனடியாக பணி வாங்கி தருகிறோம்' என, தெரிவித்தனர்.இதை நம்பி, 4 லட்சம் ரூபாய் கொடுத்தேன். மூன்று ஆண்டுகளாக வேலையும் வாங்கி தராமல், பணத்தையும் திருப்பி தராமல் உள்ளனர். கேட்டால், 'பணத்தை கொடுக்க முடியாது; வெளியே சொன்னால், குடும்பத்துடன் கொலை செய்து விடுவோம்' என, மிரட்டல் விடுக்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு, போலீசாருக்கு, மாநகர போலீஸ் கமிஷனர், சுமித்சரண் உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக