யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/1/16

ஜனாதிபதியை விட அதிகம் : மாதம் ரூ. 4 லட்சம் சம்பளம் வாங்கும் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள்

மத்திய அரசு நிறுவனமான இந்திய உணவு கழகத்தில், மூட்டை தூக்கும் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருபவர்களில் 370 பேர், மாத சம்பளமாக ரூ.4 லட்சம் பெற்று வருவது குறித்து உச்சநீதிமன்றம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது.

இது குறித்த  பத்திரிகை செய்தி அடிப்படையில், மும்பை உயர் நீதிமன்றத்தின்  நாக்பூர் கிளை, தானாக முன்வந்து வழக்காக எடுத்துக் கொண்டு, மத்திய அரசுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தது. அதனை  எதிர்த்து, இந்திய உணவுக் கழக தொழிலாளர்கள் சங்கம், உச்ச நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்தது.

அந்த மனு  தலைமை நீதிபதி தாக்கூர், மற்றும் ஏ.கே.சிக்ரி, பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது,  உணவு கழகத்தில், ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அளவுக்கு  ஊக்கத்தொகை அளிக்கும் திட்டங்கள் இருப்பதாக உணவு கழகத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வாதிடப்பட்டது. ஆனால் அந்த வாதத்தை நீதிபதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.

முடிவில் நீதிபதிகள்,  '' இந்திய உணவு கழகத்தில் முறைகேடுகள் நடப்பதையே இது காட்டுகிறது . ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளி எப்படி ரூ.4 லட்சம் சம்பாதிக்கிறார்? அவர் தொழிலாளியா அல்லது ஒப்பந்ததாராரா? இந்த நாட்டில் அதிக சம்பளம் பெறுவது குடியரசுத் தலைவர்தான். அவரை விட 370 தொழிலாளர்கள் மாதம் ரூ. 4  லட்சம் சம்பளமாக பெறுகின்றனர். அதனால் ஆண்டுக்கு அரசுக்கு 18000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

இந்த விவகாரத்தில் மிகப் பெரிய தவறு நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு விரைந்து இந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டும். இது குறித்து 10 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும்.  இல்லையென்றால் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான உயர் மட்ட குழு அமைத்து நாங்களே விசாரணை நடத்த வேண்டியது இருக்கும்'' என்று எச்சரித்தனர்.

மத்திய உணவு கழகத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்,  370  மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் தலா  ரூ. 4 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளனர். மேலும் 400 தொழிலாளர்கள்  ரூ.2 முதல் ரூ 2.5 லட்சம் வரை சம்பளமாக பெற்றுள்ளனர்.

பள்ளி மாணவர்கள் ஜங்க் உணவுகளை கொண்டு வருவதை தடுக்க கடும் சோதனை: சிபிஎஸ்இ

பள்ளி மாணவர்கள் ஜங்க் உணவு வகைகளைக் கொண்டு வருவதையும், பள்ளி கேன்டீன் மற்றும் 200 மீட்டர் பரப்பில் ஜங்க் உணவுகள் விற்பனை செய்யப்படுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து சிபிஐஎஸ் பள்ளிகளுக்கு நிர்வாகம் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. பள்ளி மாணவர்கள் கொண்டு வரும் உணவு பொருட்களை பரிசோதித்து, அவை உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்ற உணவுதான் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பள்ளிகளுக்கு சிபிஎஸ்சி நிர்வாகம் கூறியுள்ளது.

அதிக கொழுப்பு, உப்பு, சர்க்கரை போன்றவை அதிகம் இருக்கும் உணவு பொருட்கள் காரணமாக இரண்டாம் நிலை நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் மாணவர்களுக்கு ஏற்படக் காரணமாக இருக்கிறது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி கேன்டீன்களிலும் ஜங்க் உணவுகள் விற்பதை தடுக்கவும், சுகாதாரமான உணவுகள் விற்பனை செய்வதை உறுதி செய்யவும், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் உட்பட 10 பேர் கொண்ட குழு ஒன்றை அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எஸ்சி, எஸ்டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு தொடர்பான தீர்ப்பில் பிழை: ஒப்புக்கொண்டது உச்ச நீதிமன்றம்

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின (எஸ்சி, எஸ்டி) பிரிவைச் சேர்ந்த அரசு ஊழியர்களின் பதவி உயர்வு தொடர்பாக ஓராண்டுக்கு முன்னர் அளிக்கப்பட்ட தீர்ப்பில் பிழை உள்ளதை உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. "எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்விலும் இடஒதுக்கீடு வழங்குவதை அரசியல் சாசனம் அனுமதிக்கிறது. ஆனால், இது தொடர்பாக அரசுக்கு நீதிமன்றங்கள் உத்தரவிட முடியாது' என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி அளித்த தீர்ப்பு ஒன்றில் தெரிவித்திருந்தது.

எனினும், இந்தத் தீர்ப்பில் ஒரு பிழை இருப்பதாகவும், அதை சரிசெய்யுமாறும் கோரி சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா உள்பட பல்வேறு வங்கிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெ.செலமேஸ்வர் மற்றும் ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டார். அவர் கூறியதாவது:

வங்கிகளில் குரூப்-ஏ பணியிடங்களில் மாதம் ஒன்றுக்கு ரூ.5,700 வரை ஊதியம் பெறும் எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஊழியர்களுக்கு பதவி உயர்விலும் இடஒதுக்கீடு பெற முடியும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் ஒரு பத்தியில் கூறப்பட்டுள்ளது.

எனினும், அதற்கு அடுத்த பத்தியில் அதற்கு முரணான வாசகம் இடம்பெற்றுள்ளது. அதாவது, "குரூப்-ஏ பணியிடங்களில் மாதம் ஒன்றுக்கு ரூ.5,700 வரை ஊதியம் பெறும் எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு கிடையாது; சலுகைகள் மட்டுமே உண்டு' என்று கூறப்பட்டுள்ளது. தீர்ப்பைச் செயல்படுத்துவது தொடர்பான உத்தரவைக் கொண்டிருக்க வேண்டிய இந்தப் பத்தியில் இவ்வாறு தவறான வாசகம் உள்ளது. இந்த வாசகத்தை நீக்க நீதிபதிகள் உத்தரவிட வேண்டும் என்று ரோத்தகி வாதிட்டார்.

இந்நிலையில், மறு ஆய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, அட்டர்னி ஜெனரலின் வாதத்தை ஏற்ற நீதிபதிகள், கடந்த ஆண்டு அளித்த தீர்ப்பில் பிழை இருப்பதை ஒப்புக் கொண்டனர். தீர்ப்பில் பிழையான வாசகம் அடங்கிய சம்பந்தப்பட்ட பத்தியை நீக்குமாறும் உத்தரவிட்டனர். மேலும், இந்தப் பிழை காரணமாக எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஊழியர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டிருந்தால் அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடி நியாயம் பெறலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க கோரிக்கை

மருத்துவர்களைப் போன்று ஆசிரியர்களுக்கும் பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன், மாவட்டச் செயலர் முத்துப்பாண்டியன், மாவட்டப் பொருளாளர் குமரேசன் ஆகியோர் கூட்டாக தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:
சமீப காலமாக ஆசிரியர்கள் சில சமூக விரோதிகளால் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். மாணவர்களை நல்வழிப்படுத்தும் ஆசிரியர்கள் மீது வீண்பழி சுமத்தப்படுவதும், அதனால் ஆசிரியர்கள் தாக்கப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. உண்மையிலேயே தவறிழைக்கும் ஆசிரியர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதை வரவேற்கிறோம்.

அதே நேரத்தில் பொய்யான குற்றச்சாட்டால் பாதிக்கப்படும் ஆசிரியர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஒருபக்கம், மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களாக மாணவர்களை தயார் படுத்தக் கோரி உயர் அதிகாரிகளின் நெருக்குதல், மறுபக்கம், மாணவர்களின் ஒத்துழைப்பின்மை என கடுமையான மன உளைச்சலுக்கு ஆசிரியர்கள் ஆளாக நேரிடுகிறது. எனவே ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்கும் மையங்களை பள்ளிகளில் நிறுவ வேண்டும். மாணவர் சிந்தனைகளை தூண்டும் வகையில் பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

மேலும் மாணவர்கள் விளையாட்டு மைதானங்களில் செலவிடும் நேரத்தை அதிகரிக்க வேண்டும். அச்சமில்லாமலும், மன நிறைவுடனும் பணியாற்ற ஏதுவாக மருத்துவர்களுக்கு உள்ளது போல் பணிப் பாதுகாப்புச் சட்டத்தை ஆசிரியர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். மேலும் மாணவர்களுக்கு நீதி போதனா வகுப்புகளை கட்டாயமாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

பாடத்திட்டம் திடீர் மாற்றம்: மாணவர்கள் அதிர்ச்சி

உயர் படிப்புக்கான உதவித்தொகை தரும், தேசிய வருவாய் வழி தேர்விற்கு, 15 நாட்களே உள்ள நிலையில், திடீரென பாடத்திட்டம் மாற்றப்பட்டதால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில், தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர் பங்கேற்பர்.

வெற்றி பெறும் மாணவர்களுக்கு, ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மாதந்தோறும், 500 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.நடப்பு கல்வியாண்டில் இத்தேர்வு, ஜன., 23ல், தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது; மூன்று லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.தேர்வுக்கு இன்னும், 15 நாட்களே உள்ள நிலையில், அரசு தேர்வுத்துறையின் புதிய அறிவிப்பால் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தேசிய வருவாய் வழி தேர்வுக்கு, எட்டாம் வகுப்பு பாடங்கள் முழுமையும் பாடத்திட்டமாக வைக்கப்பட்டு, அதிலிருந்து தான் வினாக்கள் கேட்கப்படும். இம்முறையும் அதே பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டு, மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.
ஆனால், திடீரென தற்போது அரசு தேர்வுத்துறை இயக்குனர் அனுப்பியுள்ள அவசர சுற்றறிக்கையில், 'எட்டாம் வகுப்பில், முதல் இரண்டு பருவ பாடங்களையும், ஏழாம் வகுப்பில் அனைத்து பருவ பாடங்களையும் மாணவர்கள் படிக்க வேண்டும். 
இதன் அடிப்படையிலேயே வினாத்தாள் அமையும். இதை, திருத்திய அறிவுரையாக எடுத்துக் கொள்ள வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

தேர்வு துறையின் அறிவிப்பு, வேடிக்கையாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. இரண்டு வாரங்களே மீதமுள்ள நிலையில், திடீரென, 'ஏழாம் வகுப்பின் ஓராண்டு பாடத்தையும் படியுங்கள்' என, மாணவர்களை எப்படி நிர்பந்தப்படுத்த முடியும். இந்த 
அறிவிப்பு, விதிகளை மீறுவதாக உள்ளது.எந்த ஒரு தேர்வுக்கும், விண்ணப்பிக்கும் முன் அறிவிக்கும் அதிகாரப்பூர்வ அறிவிக்கை தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். விண்ணப்பித்த பின் அறிவிக்கையை மாற்ற, சட்டத்தில் இடமில்லை.- ஆசிரியர்கள்

இளம் வயது மாணவர்களுக்கு தண்டனை கொடுப்பது போல், இந்த அறிவிப்பு உள்ளது. ஏற்கனவே, அரையாண்டு தேர்வையும் வைத்துக் கொண்டு, உதவித்தொகைக்கான தேர்வையும் 
அறிவித்ததால், இரண்டு தேர்வுக்கும் தயாராக முடியாமல் மாணவர்கள் தவிக்கின்றனர்.இதில் திடீரென, 'கடந்த ஆண்டு பாடங்களை படியுங்கள்' என்பது என்ன நியாயம்; மாணவர்கள் ஓராண்டில் படிக்க வேண்டியதை இரண்டு வாரங்களில் படிக்க முடியுமா?- பெற்றோர்

தேர்தல் முறைகேட்டை அனுப்ப 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' வசதி

'சட்டசபை தேர்தல் முறைகேடு புகார்களை, படங்களுடன் அனுப்ப, 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' வசதி செய்யப்பட்டுஉள்ளது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். கண்ணியமான தேர்தலுக்கான அமைப்பின் சார்பில், 'கண்ணியமான தேர்தல்' என்ற தலைப்பில், வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம், துவங்கியது. சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லுாரியின், மனித உரிமைகள் துறையுடன் இணைந்து, இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தேவசகாயம் உள்ளிட்டோர் முக்கிய விருந்தினராக பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் ராஜேஷ் லக்கானி பேசியதாவது: நேர்மையான தேர்தல் நடத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. முறைகேடு புகார்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து புகார் அளிக்கவும், படங்கள் எடுத்து அனுப்பவும், 'பேஸ் புக், வாட்ஸ் ஆப்' வசதி அறிமுகம் செய்யப்படும். மாணவர்கள், என் அலைபேசி எண்ணுக்கே, 'வாட்ஸ் ஆப்'பில் புகார்அனுப்பலாம். ஆனால், தவறான தகவல் தர வேண்டாம்.

தேர்தல் நாளில் வீட்டிலிருந்து, 'டிவி' பார்த்து கொண்டிருக்காமல், முதலில் ஓட்டை பதிவு செய்யுங்கள். மாணவியர், இளைஞர்கள் அனைவரும், தேர்தல் துறையின் துாதராக, தலைமை தேர்தல் அதிகாரியாக நினைத்து, நேர்மையான தேர்தல், ஓட்டு போடுவதன் அவசியத்தை, குடும்பத்தில், அக்கம் பக்கத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

'ஊழல் கரங்களுக்கு ஓட்டு வேண்டாம்':

நிகழ்ச்சியில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் பேசியதாவது:நான், 2011 தேர்தலில் மதுரை கலெக்டராக இருந்த போது, 'பணநாயகம்வீழ்த்தப்பட வேண்டும்' என, தேர்தல் அதிகாரிகள் கூறினர். அதை மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு செய்து, பகலில் வாக்காளர்களுக்கு போதனையும், இரவில் வாகன சோதனையும் மேற்கொண்டோம். நேர்மையான தேர்தலை நடத்தினோம்.அதேபோல், இந்த தேர்தலும் கண்ணியமாக நடக்கும் என நம்புகிறேன். ஊழல் கரங்களுக்கு ஓட்டு போட வேண்டாம்.நீங்கள் பொறுப்பாக ஓட்டு போட்டால் நாட்டில் புரட்சி நடக்கும். பணத்தை வாங்கி ஓட்டு போடாதீர்கள்.மாணவர்கள் மூலம், பொறுப்புள்ள சமூகத்தை உருவாக்கலாம். நீங்கள் நேர்மையாக இருக்க, உங்கள் குடும்பம் நேர்மையாக இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். உங்கள் கண்ணியமான ஓட்டின் மூலம், வேலையில்லா திண்டாட்டம் ஒழியும்; 

விவசாயி தற்கொலை செய்ய மாட்டார்கள்; மன்னர்களை மண்டியிட வைக்கும் ஜனநாயக கடமை உங்களிடம் உள்ளது. நீங்கள் இந்த தேசத்தை நேசிப்பதை உறுதிப்படுத்த, ஊழலற்றவர்களுக்கு ஓட்டு போடுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

10ம் வகுப்பு செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு

அரசு தேர்வுத்துறை, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வை அறிவித்துஉள்ளது.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், செய்முறை தேர்வு அறிவிப்பு வெளியிடுவதில் கால தாமதம் ஏற்பட்டது. ஏற்கனவே, மழை, வெள்ளத்தால் தள்ளி வைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு, ஜன., 11ல் துவங்கும் நிலையில், செய்முறை தேர்வு அறிவிப்பு வராமல் மாணவர்கள் தவித்தனர்.
செய்முறை தேர்வு தேதி தெரிந்தால் தான், 'ரிவிஷன்' தேர்வுகளை திட்டமிட முடியும் என, ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்தனர். இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது.இந்நிலையில், செய்முறை தேர்வு அறிவிப்பை, அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது. அதில், 10ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு, ஜன., 22 முதல் பிப்., 3க்குள் நடத்தி முடித்து, மதிப்பெண் பட்டியல் அனுப்ப பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையுள்ள அரசு பள்ளிகளில், ஜன., 11 முதல், 27க்குள், இரண்டாம் பருவ தேர்வை நடத்தி முடிக்க, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தேர்தல் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி முகாம்: சென்னையில் நாளை துவக்கம்

சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு, பயிற்சி அளிக்க உள்ள பயிற்சியாளர்களுக்கான முகாம், சென்னையில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு, நடைபெற உள்ளது.தமிழக சட்டசபை பொதுத் தேர்தல், ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. எனவே, தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளை, தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது.தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, மாவட்டத்திற்கு ஆறு பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களுக்கு கடந்த மாதத்தில் இருந்து, பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.டிச., 30 மற்றும் 31ம் தேதி, தேர்தல் பொறுப்பு அலுவலர்களுக்கு சேலத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. நேற்று சென்னையில், ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த, செய்தி மக்கள் தொடர்பு 
அலுவலர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட்டது.தேர்தலின்போது, சமூக வலைதளங்களில், ஓட்டுப்போட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பிரசாரம் செய்வது, மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ள இவர்களுக்கு, தேர்தல் கமிஷன் அதிகாரிகள், நேரடியாக நடத்தும் பயிற்சி வகுப்பு சென்னை மற்றும் பவானிசாகரில், இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது.
சென்னையில், நாளை முதல், 13ம் தேதி வரை, பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில், 21 மாவட்டங்களில் இருந்து, மாவட்டத்திற்கு, ஆறு 
பயிற்சியாளர்கள் வீதம் கலந்து கொள்ள உள்ளனர்.பவானிசாகரில், 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை, பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில், 11 மாவட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

அரசு கல்லூரி போராசிரியர் மீது தாக்குதல் TNPTF கண்டனம்.

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் மன்றத்தின் தலைவர் திரு.பி.சிவராமன் அவர்கள் மீது சிலர் கொலைவெறி தாக்குதல் நடத்தியதற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வன்மையாக கண்டித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் மோசஸ், மாநிலப் பொதுச் செயலாளர் பாலச்சந்தர், மாநிலப் பொருளாளர் ஜீவானந்தம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கடந்த சில காலங்களாகவே ஆசிரியர் சமுதாயம் பாதுகாப்பற்ற நிலையில் இருந்து வருகிறது. வகுப்பறைக்குள்ளே ஆசிரியர்கள் கொலை செய்யபடுவதிலிருந்து பல்வேறு தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். கல்வி வணிக பொருளாக்கப்பட்டு கல்வியின் மகத்துவத்தை சின்னபின்னமாக்கிய  அரசுகளே இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இலாப வேட்கை கொண்ட கார்ப்பரேட்டுகள் கல்வி நிறுவனங்களை தங்களின் மூலதனம் பெருகுவதை இலக்காக கொண்டதன் விளைவு, இந்த நாட்டின் எதிர்காலமாக திகழ வேண்டிய மாணவர் சமுதாயம் மாயை உலகின் பின்னால் சென்று சீரழிந்து வருகிறார்கள். இதன் காரணமாக ஆசிரியர் சமுதாயம் பல இன்னல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. 

இதன் ஒரு பகுதியாக திருவாரூரில் பேராசியர் சிவராமன் கல்லூரி வளாகத்திற்கு வெளியில் சில சமூக விரோதிகளால் கண் மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளார். பேராசிரியர் மீது நடந்த கொலைவெறி தாக்குதலை தமிழ்நாடு காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்ட ரீதியான தண்டனை பெற்றுத் தர வேண்டுமென எங்கள் அமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் ஆசிரியர் சமுதாயம் அச்ச உணர்வின்றி பாதுகாப்பாக பணியாற்ற உரிய சட்ட பாதுகாப்பினை வழங்க வேண்டுமென தமிழக அரசை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

16549 பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் உதவிட புதிய அரசாணை வெளியிட கோரி தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனு

துணைவேந்தர் தேர்வு குழு அமைப்பு

சென்னை பல்கலைக் கழக துணைவேந்தரை தேர்வு செய்ய, மூன்று பேர் கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில், ஓய்வுபெற்ற ஊழல் ஒழிப்பு மற்றும் வளர்ச்சி கமிஷனர் வேத நாராயணன், எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழக, அறிவியல் மற்றும் மனித நேய துறை இயக்குனர் பாலசுப்ரமணியன், சென்னை பல்கலைக் கழக முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் சுரேந்திர பிரசாத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழு, துணைவேந்தர் பதவிக்கு தகுதியான, மூன்று பேரை தேர்வு செய்து, அவர்கள் குறித்த விபரங்களை, கவர்னருக்கு பரிந்துரை செய்யும்; அதில் இருந்து ஒருவர் தேர்வு செய்யப்படுவார்.

ஆசிரியர் கல்வி; டிப்ளமோ தேர்வு முடிவு வெளியீடு

ஆசிரியர் கல்வி டிப்ளமோ மாணவ, மாணவியருக்கான தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. தமிழகத்தில், 400க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சிப்பள்ளிகள் உள்ளன. இதில், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியருக்கு, இரண்டு ஆண்டுகள் நடத்தப்பட்டு, டிப்ளமோ வழங்கப்படுகிறது. இதில், தேர்ச்சி பெறுபவர்கள், அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிய வாய்ப்புள்ளது. இதில், 2015-16 கல்வியாண்டுக்கான தேர்வு, கடந்த மே மாதத்தில் நடந்தது. இதில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேர்வெழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது. 

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் விஜயகுமார் கூறியதாவது: ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு படித்து தேர்வெழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவு நாளை (இன்று) வெளியிடப்படுகிறது. இவற்றை அந்தந்த பயிற்சி பள்ளிகளில் சென்று தெரிந்து கொள்ளலாம். பிரைவேட் மாணவர்களுக்கு தேர்வு முடிவு வெளியிடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அகஇ - இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடத்திலும், ஆசிரியர்களிடத்திலும் மற்றும் பொது மக்களிடத்திலும் மற்றும் தனி திறன்களை மேம்படுத்தவும் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட முறையே 100, 150க்கு அதிகமாக உள்ள மாணவர்கள் எண்ணிக்கை தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.5000/-ம், நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.6000/-ம் ஒதுக்கீடு செய்து இயக்குனர் உத்தரவு