யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/8/16

தமிழ் இரண்டாம் பருவம் ஓன்று முதல் எட்டாம் வகுப்பு வரை

பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு: பறிதவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் காலி பணி இடங்கள் இல்லை

தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு 20/8/16 அன்று நடைபெற்றது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) இணையதளம் வாயிலாக சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு கணிதத்தில் தமிழகம் முழுவதும் ஒருவருக்கு மட்டுமே இடமாறுதலுக்கு வாய்ப்பு கிடைத்தது.


தமிழகம் முழுதும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் முன்னிலையில் ஆசிரிய - ஆசிரியைகள் கலந்துகொண்டு வெளி மாவட்டங்களுக்குச் செல்ல காத்திருந்தனர்.
ஆனால், தாங்கள் விரும்பிய எந்த மாவட்டத்திலும் விரும்பிய ஒன்றியத்தில் தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடம் இல்லாததால் ஆசிரிய - ஆசிரியைகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுவதற்கான கலந்தாய்வில் கணிதத்தில் தமிழகம் முழுவதும் ஒருவருக்கு மட்டும் இடமாறுதல் காட்டப்பட்டது. Zone.. ,2,3,4 ல் கணிதத்தில் காலி பணியிடங்கள் இல்லை எனவும்,zone.. 1 ல் மட்டும் ஒரே பணிடம் காட்டப்பட்டத்து.
இது மூன்றாண்டுகள் தொடர்ந்து இதே போன்ற நிலை உள்ளது. கல்வி அதிகாரிகளால் இடங்கள் மறைக்கப்பட்டு வருகிறதா?
அல்லது விலைபோக நிறுத்தி வைக்கப்பட்டதா? என சந்தேகம் எழுகிறது.
வேறு மாவட்டத்தில் இருந்து வந்து பல ஆண்டுகளாக வேலை செய்து கொண்டு இருக்கும் ஆசிரியர்கள் தங்களுடைய மகன்,மகள், கணவன் பெற்றோர்கள் இவர்கள் விடுத்து இங்கே படும் வேதனைகளுக்கு * இந்த அரசாங்கம் என்ன பதில் கூறப்போகிறது. சங்கங்கள் முனைப்போடு செயல்பட்டு *இதற்கான ஒரு தீர்வை விரைவில் நடவடிக்கைகள். மேற்கொண்டு நல்ல முயற்சி எடுக்க வேண்டும்.
அரசாங்கம் கலந்தாய்வு ஆணையை சென்ற ஆண்டில் நடத்திய முறையை மாற்றி அமைத்து கலந்தாய்வு நடத்த முடியும் எனில் வேறு மாவட்டத்தில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு ஒரு சலுகையை ஏன்உருவாக்க கூடாது.
கலந்தாய்வில் முதலில் ஒன்றியத்திற்குள், பிறகு ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணிநிரவல், உடனே பதவி உயர்வு நடைபெறுகிறது. கடைசியாக மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெறுகிறது.
ஒன்றியத்திற்குள் , பிறகு ஒன்றியம் விட்டு ஒன்றியம் பதவி உயர்வு நடைபெற்றுவிடுவதால் மாவட்டத்தில் பணி இடங்கள் வாய்ப்பு குறைவு. மாவட்டத்தில் கடைசியாக மாறுதலும்,பதவி உயர்வு நடைபெறுகிறது.
மாறுதல் தனியாகவும், பதவி உயர்வு தனியாக நடத்த வேண்டும். இல்லையேல் முதலில் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடத்த வேண்டும். அப்போதுதான் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும். இதை அரசாங்கம் நடைமுறை செய்யுமா?
மாணவர்கள் நலன் கருதி கலந்தாய்வு விதிகளை மாற்றும்போது, தனிதனியாக நடத்த இது சாத்தியம் ஏன் இல்லை. அப்போது அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த கருத்தை அரசாங்கம் மற்றும் சங்கங்கள் செவி சாய்க்குமா?
அனைத்து வகை ஆசிரியர்கள் வேறு மாவட்டத்தில் வேலை செய்யும்போது பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் ஏன் அடுத்த ஒன்றியத்திலும் வேறு மாவட்டத்தில் வேலை செய்ய கூடாது.
அரசு அலுவலர்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை ஒரே இடத்தில் பணி புரிந்தால் மாறுதல் வழங்குவதுபோல் வேறு மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு தன் சொந்த மாவட்டத்திற்கு மாறுதல் வழங்க வேண்டும்.
இல்லையேல் வேறு மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஒரு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். தொடர்ந்தது மூன்று ஆண்டுகள் மாறுதல் கிடக்காத வேறு மாவட்ட ஆசிரியர்களுக்கு மேலும் ஒரு ஊக்க ஊதியம் தரவேண்டும். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பணி புரியும் இவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
இதை ஏற்க்குமா? இந்த அரசாங்கம். இவர்களுக்கு குரல் தருவீர்களா? சங்க வாதிகள். 
இவர்களுக்கு இந்த சங்கங்கள் எந்த வகையில் உதவப்போகிறது.
நகரம் ஒட்டி வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு அலவன்ஸ் வழங்குவதுபோல் வேறு மாவட்டத்தில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு சம்பளத்துடன் சேர்த்து தனி ஊதியம் வழங்க வேண்டும்.
அரசாங்கம் முதலில் பணியில் அமர்த்தும்போது விருப்பத்தின் பேரில் பணி சில சமயங்களில் வழங்குகிறார்கள், சில சமயம் அவர்களாகவே பணி அணை தேர்வு(ரேன்டம்) செய்து பணி வழங்குகிறது. ஏன் இந்த முரண்பாடு? இனி வரும் காலங்களில் ஒரே மாதிரியான முறை கடைப்பிடித்து பணி வழங்கவேண்டும்.
ஆசிரியர்கள் நலனுக்காக சங்கம் என்றால் சங்கங்கள், இந்த வகையான ஆசிரியர்களுக்கு சங்கம் ஏதாவது செய்யாதா? 
அரசாங்கத்திடம் ஏதாவது ஒரு வழி ஏற்படுத்தாதா? 
இதே போன்று ஒவ்வொரு ஆண்டும் பணிஇடங்கள் இல்லை என்று கூறியே கடமைக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. சங்கங்கள் ஏன் மௌனமாக உள்ளது.
ஒன்றியத்திற்குள்,ஒன்றியம் விட்டு ஒன்றியம் கலந்தாய்வு நடைபெறும் போதும்,பதவி உயர்வு நடைபெறும்போதும் அனைத்து சங்கங்களும்,AEEO க்கள் அனைவரும் வந்திருந்து தவறு நடைபெறாமல் கலந்தாய்வு நடத்துகின்றனர். ஆனால் மாவட்டம் கலந்தாய்வில் யாரும் இருப்பதில்லை ஏன்?
வேறு மாவட்டத்தில் இருந்து வந்து தங்கள் ஒன்றியத்தில் பணி புரியும் இவர்கள் ஆசிரியர்கள் அல்லவா? இவர்களுக்கு யார் உதவி செய்வது சங்க பொறுப்பாளர்களே சிந்தியுங்கள். இதனால் இடங்கள் மறைக்கப்படுகிறது.
எனவே இனி வரும் காலங்களில் இது போன்ற அவல நிலையை ஏற்படாத வண்ணம் சங்கத்தின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.சங்கங்கள் இதற்கான ஒரு தீர்வு ஏற்படுத்த வேண்டும். அரசிடமோ அல்லது அதிகாரிகளிடமோ பேசியோ ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டும்.
வேதனையுடன் ஆசிரியர்கள் இவர்களின் புலம்பல் அரசாங்கம் செவி சாய்க்கமா?
ஏதாவது வழி செய்ய சங்கங்கள் முயற்சி செய்யுமா?
அன்புடன்
ஆசிரியர்கள்.*


RMSA SOCIAL ICT TRAINING

தேசிய தகுதி நுழைவுத் தேர்வுக்கு தயாராகும் அரசு மேல்நிலைப் பள்ளிகள் மாணவர்களை தேர்வு செய்து சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு.

தேசிய தகுதி நுழைவுத் தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நன்றாக படிக்கும் மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரி களில் கடந்த ஆண்டு வரை எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக் கான மாணவர் சேர்க்கை அந்தந்த மாநில அரசுகளாலேயே நிரப்பப் பட்டு வந்தன. 

இணையதளம் மூலம் கலந்தாய்வு: 1,277 ஆசிரியர்களுக்கு மாறுதல் ஆணை பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு.

தமிழக முதல்-அமைச்சர் ஆணையின்படி 2016-17-ம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையில் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. 

நேற்று அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு முதுகலைஆசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மாவட்டத்துக்குள் மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது.அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் 3,882 முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் ஆணை பெற விண்ணப்பித்து இருந்தனர். இதில் நேற்று நடந்த இணையதள கலந்தாய்வில் 1,277 முதுகலை ஆசிரியர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப மாவட்டத்துக்குள் மாறுதல் ஆணை பெற்றுள்ளனர். கலந்தாய்வுகள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இணையதளம் மூலம் நடந்தது.

இப்பணிகளை பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் அனைத்து இணை இயக்குனர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று கலந்தாய்வின் மூலம் மாறுதல் நடைபெறுவதை மேற்பார்வை செய்தனர். மேற்கண்ட தகவல்கள் பள்ளி கல்வி இயக்ககம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தேசிய 'ஸ்காலர்ஷிப்' பதிவு விறுவிறு

மத்திய அரசு நிறுவனங்களில், கல்வி உதவித் தொகை பெற, பதிவு செய்தோர் எண்ணிக்கை, 67 லட்சமாக உயர்ந்துள்ளது.கல்வி உதவித் தொகையில் முறைகேடுகளை தடுக்கவும், மாணவர்களுக்கு நேரடியாக உதவித் தொகை சென்று சேரவும், மத்திய அரசின் சார்பில், 'ஆன்லைன்'
பதிவு திட்டம் துவங்கப்பட்டுள்ளது.இதன்படி, தேசிய கல்வி உதவித் தொகை இணையதளத்தில் (http://scholarships.gov.in), இதுவரை, 65 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். கடந்த, இரு தினங்களில், இரண்டு லட்சம் பேர் கூடுதலாக பதிவு செய்து, 67 லட்சமாக, உதவித் தொகை கேட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பி.எட்., கவுன்சிலிங் இன்று துவக்கம்

பி.எட்., படிப்புக்கான கவுன்சிலிங், இன்று துவங்குகிறது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பிலுள்ள, ஏழு அரசு கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 1,777 இடங்களுக்கு, கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த ஆண்டு, 3,736 பேர் பி.எட்., படிக்க விண்ணப்பித்துள்ளனர்.


சென்னை, லேடி வெலிங்டன் கல்லுாரி நடத்தும் இந்த கவுன்சிலிங், இன்று காலை, 9:00 மணிக்கு துவங்குகிறது. மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான இட ஒதுக்கீட்டில், மாணவர் சேர்க்கை நடக்கிறது.நாளை, தமிழ் மற்றும் ஆங்கிலம்; நாளை மறுநாள், வரலாறு பாடம் மற்றும் பி.இ., - பி.டெக்., முடித்தவர்களுக்கான, 20 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங் நடக்கிறது; 25ம் தேதி அரசு விடுமுறை.

பின், 26ம் தேதி தாவரவியல் மற்றும் விலங்கியல்; 27ல், இயற்பியல், மனை அறிவியல், பொருளியல், வணிகவியல்; 28ல் வேதியியல், புவியியல், கணினி அறிவியல்; 30ல் கணித பாடங்களுக்கு கவுன்சிலிங் நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது

உள்ளாட்சி தேர்தல் நடத்த தேர்தல் அதிகாரிகள் நியமனம்

சென்னை:ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமிக்க, மாவட்ட கலெக்டர்களுக்கு, தேர்தல் கமிஷன் அதிகாரம் வழங்கியுள்ளது.


இதுகுறித்து, மாநில தேர்தல் கமிஷன் வெளியிட்டு உள்ள அறிக்கை:உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக, ஊரக வளர்ச்சி துறை இயக்குனர், நகராட்சி நிர்வாக இயக்குனர், பேரூராட்சி இயக்குனர் ஆகியோர், மாநில தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர்.

அதன்பின், அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர்; சென்னைக்கு மட்டும் மாநகராட்சி கமிஷனர், தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். வாக்காளர் பதிவு அலுவலர்களாக, வட்டார வளர்ச்சி அலுவலர், மாநகராட்சி மற்றும் நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயலர்கள் நியமிக்கப்பட்டனர்.

தற்போது, மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க, மாவட்ட கலெக்டர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
அதன்படி, மாவட்ட கவுன்சிலர் தேர்தல் நடத்தும் அதிகாரியாக, மாவட்ட ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குனர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலரை நியமிக்க வேண்டும்; உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக, ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர், வருவாய் கோட்ட அலுவலரை நியமிக்க வேண்டும்.

ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் நடத்துவதற்கு, ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் அல்லது வருவாய் கோட்ட அலுவலரை நியமிக்க வேண்டும்; உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக,
வட்டார வளர்ச்சி அலுவலர் அல்லது வட்டாட்சியரை நியமிக்க வேண்டும்.ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் நடத்துவதற்கு, வட்டார வளர்ச்சி அலுவலரையும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அல்லது
துணை வட்டாட்சியரை நியமிக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

ஆசிரியர் சங்க தலைவர் 'சஸ்பெண்ட்':அனைத்து சங்கங்களும் கடும் எதிர்ப்பு

அரசு பள்ளியில் பணியாற்றும், கலை ஆசிரியர் சங்கத் தலைவரை, பள்ளிக் கல்வித்துறை அதிரடியாக, 'சஸ்பெண்ட்' செய்துள்ளது; இதற்கு, ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில், 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளத்தில் தகவல்கள் பரிமாறியதால், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்த, மூன்று ஆசிரியர்களுக்கு, 'மெமோ' தரப்பட்டது.


இந்நிலையில், நீலகிரி மாவட்டம், தும்மானாட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் ஓவிய ஆசிரியர் எஸ்.ஏ.ராஜ்குமார், திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கலை ஆசிரியர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவராக உள்ள இவர், அதிகாரிகளின் விதிமீறல்கள் தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்குகள் நடத்தி வருகிறார்; 19 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, போராட்டமும் நடத்தி வருகிறார். இவருக்கான சஸ்பெண்ட் உத்தரவில், பத்திரிகைகளுக்கு தவறான செய்திகளை தருவதாக, நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி டி.கணேஷ்மூர்த்தி தெரிவித்து உள்ளார்; இந்த நடவடிக்கைக்கு, ஆசிரியர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர்.

அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில், அதிகாரிகளின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. சங்கத்தினர் போராடவும், பத்திரிகைகளிடம் பேசவும் அரசியலமைப்பு சட்டம் உரிமை அளித்துள்ளது.

பி.சங்கரநாராயணன்
தலைவர், அகில இந்திய அனைத்து ஆசிரியர்கள் சங்கம்.
சங்க நிர்வாகிகள் மீதும், ஆசிரியர்கள் மீதும் அடக்குமுறை நடவடிக்கை கூடாது. இயக்க நலன்கள், இயக்க உறுப்பினர்களுக்கு பாதிப்பு
ஏற்பட்டால், சங்க நிர்வாகிகள் தான் குரல் கொடுக்க முடியும்; அதை தடுப்பது சரியல்ல.
பி.இளங்கோவன்
ஒருங்கிணைப்பாளர், ஜாக்டோ ஆசிரியர் கூட்டமைப்பு.
அதிகாரிகள் தவறே செய்யாமல் இருக்கின்றனரா; அதை சங்கங்கள் தான் வெளிக்கொண்டு
வருகின்றன. அதனால், இது போன்ற அடக்குமுறை
நடவடிக்கைகளை எடுக்கின்றனர். உடனடியாக, சஸ்பெண்ட் உத்தரவை வாபஸ் பெற வேண்டும்.
எஸ்.சி.கிப்சன்
பொதுச் செயலர், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (டாடா).
ஓவியம், கலை ஆசிரியர்களின் நலனுக்காக செயல்படும், சங்க நிர்வாகி மீது, விதிகளை மீறி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்; இது, அதிகாரிகளின் பழி வாங்கும் செயல்.
நல்ல.காசிராஜன்
தலைவர், தமிழ்நாடு ஓவிய ஆசிரியர் கூட்டமைப்பு.

2,100 ஆசிரியர்களுக்கு விருப்ப இடமாறுதல்

சென்னை;முதுகலை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்கில், இரண்டு நாட்களில், 2,100 பேருக்கு விருப்ப இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.அரசு தொடக்கப் பள்ளி மற்றும் பள்ளிக் கல்வி ஆசிரியர்களுக்கு, இம்மாதம், 3ம் தேதி முதல், விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடந்து வருகிறது. இந்த ஆண்டு, ஆசிரியர் காலியிடங்களை மறைக்காமல்,
வெளிப்படையாக, கவுன்சிலிங் நடத்துவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். நேற்று முன்தினம், 1,277 முதுகலை ஆசிரியர்களுக்கு, ஒரே மாவட்டத்திற்குள் இடமாறுதல் வழங்கப்பட்டது; நேற்று, 826 ஆசிரியர்களுக்கு, மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு, இடமாறுதல் அளிக்கப்பட்டதாக, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு: ஒருவருக்கு மட்டும் இடமாறுதல், 61 பேர் ஏமாற்றம்

திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுவதற்கான கலந்தாய்வில் ஒருவர் மட்டும் மாறுதல் பெற்றார். மற்ற 61 பேர் ஏமாற்றம் அடைந்தனர்.


தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பணிநிரவல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) இணையதளம் வாயிலாக சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமையில், திருவண்ணாமலை டேனிஸ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் இந்த கலந்தாய்வு நடைபெற்றது. இதில், 62 ஆசிரிய - ஆசிரியைகள் கலந்துகொண்டு வெளி மாவட்டங்களுக்குச் செல்ல காத்திருந்தனர்.

ஆனால், தாங்கள் விரும்பிய மாவட்டத்தில் விரும்பிய ஒன்றியத்தில் தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடம் இல்லாததால் 61 ஆசிரிய - ஆசிரியைகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

ஒருவருக்கு மட்டும் மாறுதல்: 62 பேரில் ஒரே ஒரு ஆங்கில ஆசிரியர் மட்டும் வேலூர் மாவட்டத்துக்கு இடமாறுதல் பெற்றார். இதேபோல, வேலூர் மாவட்டத்தில் இருந்து 2 பட்டதாரி ஆசிரியர்கள் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு இடமாறுதல் பெற்றுள்ளனர்.

இன்று கலந்தாய்வு நிறைவு: இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) ஞாயிற்றுக்கிழமை (ஆக.21) நடைபெறுகிறது. இத்துடன் தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு 2016-17ஆம் ஆண்டுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நிறைவு பெறுகிறது

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிப் பட்டறை

வாலாஜாபேட்டையை அடுத்த சுமைதாங்கியில் உள்ள நாக்  கல்விக் குழுமத்தில் பயிலும் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான பயிற்சி பட்டறை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.


முகாமுக்கு, பள்ளித் தாளாளர் எஸ்.சி.பிள்ளை தலைமை வகித்தார். முதன்மைச் செயலாளர் பார்வதிநாதன் முன்னிலை வகித்தார். இதில், தேசிய பயிற்சியாளர் சிவசுப்பிரமணியன் கலந்துகொண்டு, அரசுப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி என்பது குறித்து மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த பயிற்சி பட்டறையில், 350-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

இதில், முதன்மை நிர்வாக அலுவலர் சி.நாகராஜன், சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் சந்திரா கைலாசம், மெட்ரிக். பள்ளி முதல்வர் பாவைகார்த்திகேயன், மேல்நிலைப்பள்ளி ஒருங்கிணைப்பாளர் சுந்தரபாண்டியன், பயிற்சியாளர்கள் ரகுநாதன், என்.டி.சீனிவாசன், மக்கள் தொடர்பு அலுவலர் சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தரம் குறைந்த பள்ளிகளை சீரமைக்க வேண்டும்: கல்வி இயக்க மாநாட்டில் தீர்மானம்

தமிழ்நாட்டில் தரம் குறைந்த பள்ளிகளை சீரமைக்க வேண்டும் என தமிழ்நாட்டு கல்வி இயக்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாட்டுக் கல்வி இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு மாநாடு வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையை அடுத்த அம்மூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


கூட்டத்துக்கு தமிழ்நாட்டு கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர் பொழிலன் தலைமை வகித்தார். மாநாட்டில் திரைப்பட நடிகரும், இயக்குநருமான சமுத்திரகனி, சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வணங்காமுடி ஆகியோர் தாய் மொழிக் கல்வியின் அவசியம் குறித்து விளக்கினர்.

அதனைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் திறன்மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் கலந்துகொண்டு பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மழலையர் கல்வி முதல் உயர்கல்வி வரை அனைத்துத் துறைகளிலும் தமிழே கல்வி மொழியாக்கப்பட வேண்டும். அரசு, தனியார் துறைகளில் அனைத்து வேலைவாய்ப்புகளிலும், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வியிலும் தமிழ்வழியில் படித்தோருக்கே முன்னுரிமை அளித்து 100 விழுக்காடு ஒதுக்கீடு செய்யவேண்டும். தமிழ்நாட்டில் தரமற்று இருக்கும் அரசுப் பள்ளிகளை தரப்படுத்தி அனைவருக்கும் இலவசக் கல்வியை அளிக்க வேண்டும். அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள், அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அனைவரும் அரசுப் பள்ளிகளிலேயே பயில வேண்டும். இந்திய அரசின் வேலைவாய்ப்புகள், உயர்கல்வி உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் தமிழிலேயே எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

அரசுப் பள்ளிகளுக்கு ரூ. 6 கோடியில் புதிய கட்டடங்கள்: அமைச்சர் அடிக்கல்

மொளச்சூர், மதுரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.6 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், மொளச்சூர், மதுரமங்கலம் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு நபார்டு திட்டத்தின் கீழ், தலா 22 வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக் கூடம், கழிப்பறை கட்டடங்கள் கட்ட, தலா ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா அந்தந்த பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பழனி தலைமை வகித்தார், முன்னாள் எம்எல்ஏக்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மொளச்சூர் ரா.பெருமாள், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக்குழுத் தலைவர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி கல்வித்துறை அமைச்சர் பா.பெஞ்சமின் கலந்துகொண்டு புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதில், ஒன்றியச் செயலாளர் எறையூர் முனுசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜோசப், பாலமுருகன், சிங்கிலிப்பாடி ஊராட்சிமன்றத் தலைவர் ராமசந்திரன், பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டனர்.

நாடு முழுவதும் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: மத்திய அமைச்சர்

நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி, உயர் கல்வி நிலையங்களில் சுமார் 8 முதல் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் அகில பாரதிய பிராமண மகாசபை நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


நமது நாட்டில் கல்விக் கொள்கை முறையாக அமல்படுத்தப்படவில்லை. அடுத்தடுத்து அமைந்த அரசுகளும் அதனை முறையாக மறுஆய்வு செய்யவில்லை. முக்கியமாக 1976-ஆம் ஆண்டுக்குப்பிறகு கல்விக்கொள்கை மறுஆய்வு செய்யப்படவே இல்லை. இப்போதைய அரசு கல்வித் துறையில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்து வருகிறது.

உயர் கல்வியைப் பொறுத்தவரையில் பல்கலைக்கழகங்களில் இணைக்கப்படும் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் கல்வித் தரத்தைப் பேண முடிவதில்லை என்ற பிரச்னை உள்ளது. இதனைத் தீர்க்கும் வகையில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும்தான் கல்லூரிகளை இணைக்க வேண்டும் என்ற யோசனையை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. உயர் கல்வியில் தரத்தைப் பேணுவதற்கு மத்திய அரசு கூடுதல் முன்னுரிமை அளித்து வருகிறது. செயற்கைக்கோள்கள் மூலம் சர்வதேச கல்வி நிலையங்களுடன் நமது மாணவர்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டில் ஆசிரியர்கள் எண்ணிக்கை போதுமான அளவில் இல்லை என்பது உண்மைதான். பல ஆண்டுகளாக நியமனத்தில் ஏற்பட்ட தாமதத்தால், நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களிலும் சுமார் 8 முதல் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்தப் பணியிடங்களை விரைவாக நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார் மகேந்திர நாத் பாண்டே.

மத்திய அரசு தனது கல்விக் கொள்கையை வெளியிட்டிருக்கிறது.



அதில் ஒன்றுதான்.. ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தகுதித் தேர்வு நடத்தப்படும் என்ற ஒரு அறிவிப்பு.

மிக நல்ல திட்டம்தானே என்று பலரும் வரிந்து கட்டிக் கொண்டு பாய்ந்து வருவீர்கள்..

ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

காலத்திற்கு ஏற்றார் போல் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

தகுதியற்ற ஆசிரியர்களே இருக்கக்கூடாது. 

அவ்வாறு இருப்பின் அது மாணவர்கள் சமுதாயத்தையேப் பாதித்துவிடும்.

எனவே 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வு வைத்தால் என்ன தப்பு?

அதுமாத்திரமா.. வாத்திமார்கள் எங்க சார் பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்கா வேலைக்குப் போறாங்க? எவன் சார் ஒழுங்காப் பாடம் நடத்துறாங்க? வெட்டிப் பயலுக சார்.. பள்ளிக்கூடத்துல போய் தூங்குறாங்க.. வட்டிக்கு விடுதாங்க.. 

இவனுகளை எல்லாம் தூக்குல போடணும் சார்..

என்றுகூட சொல்வதற்கு இச்சமூகத்தில் பலரும் ஆயத்தமாகவே இருக்கின்றார்கள்..

இதில் எவ்வளவு உண்மை இருக்கிறது?

சர்தார்ஜிக்களைப் பற்றி எப்படி ஒரு மாயத் தோற்றம் இருக்கிறதோ, அதைப் போலத்தான் ஆசிரியர்களைப் பற்றியும் ஒரு எதிர்மறைக் கருத்து சினிமாக்கள் வழியாக.. கதைகள் வழியாக.. நகைச்சுவைத் தோரணங்கள் வழியாக..ஒவ்வொருவர் மனதிலும் ஆழமாகப் பதிந்துவிட்டது.. 

ஆசிரியர்கள் அத்தனை பேரும் அயோக்கியர்கள் என்றால் அந்த தேசத்தில் குழந்தைகள் கல்வி கற்றுத் தேர்வது எப்படி?

கோடிக்கணக்கான குழந்தைகள் பள்ளிக்குத் தினமும் சென்று கொண்டுதானே இருக்கின்றார்கள்?

ஆசிரியர்கள் சரியாகச் செயல்படாத கல்வி நிறுவனத்திற்கு உங்கள் குழந்தைகளை எப்படி அனுப்புகின்றீர்கள்?

இல்ல சார்.. என் பிள்ளை படிக்கும் பள்ளிக்கூடத்துல ஆசிரியர்கள் எல்லோரும் ஒழுங்காக வேலை பார்க்கிறார்கள்..

ஓ.. அப்ப எந்த ஆசிரியர் ஒழுங்காக வேலை பார்ப்பதில்லை?

அதுவா.. அது.. அன்னைக்கு ஒரு பேப்பர்ல போட்டிருந்தாங்களே..

எந்த ஊர்ல?

ம்..ம்..அது எதுக்கு சார்? பொதுவா வாத்திமார் யாரும் ஒழுங்கா வேலை பார்ப்பதில்லை சார்.. அவ்ளோதான்..

இது என்ன மாதிரியான மனோபாவம்?

எனக்குக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் நல்ல ஆசிரியர்கள்.. என் பிள்ளைக்குக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் நல்ல ஆசிரியர்கள் என்று ஒவ்வொருவரும் ஒத்துக் கொள்வார்கள்..

ஆக, பிழை எங்கிருக்கிறது என்றால்.. நமது உளவியலில் இருக்கிறது..

இவன்தான் காலையிலேயே வெள்ளையும் சொள்ளையுமா பள்ளிக்குப் போகிறான்.. சாயங்காலம் வீட்டுக்கு ஜம்முன்னு வருகிறான்..

இதைத் தினமும் பார்க்கும் பொழுது, நம்மையறியாமல் அவர்கள் மீது ஒரு எரிச்சல் வருகிறது.. பொறாமை வந்து விடுகிறது.. இது இயல்பு.

ஆகவேதான் 100ல் 1 ஆசிரியர் செய்யும் தவறுகளைப் பூதாகாரப் படுத்தி, அதை எல்லோர் முகத்திலும் பொறுத்திவைத்து மனம் மகிழ்கின்றான்..

தவறிழைக்கும் மனிதர்கள் சமூகமெங்கும் பரவிக்கிடக்கிறார்கள். இதில் விதிவிலக்கேக் கிடையாது.. சில ஆசிரியர்களும் அதில் உள்ளடக்கம்.

உங்கள் ஊரில் 100 ஆசிரியர்கள் இருப்பின், வட்டித் தொழில் செய்யும் ஆசிரியர் ஒருவராக இருப்பார். வகுப்பறையில் தூங்குபவராகவும் அவர் இருப்பார்..

இவரைத் தன் பூதாகர லென்ஸால் பார்க்கும் சமூகம், எஞ்சியுள்ள 99 பேரைக் கவனிக்கத் தவறுகிறது..

அதனுடைய வெளிப்பாடுதான் மத்தியமனித வளத் துறை அமைச்சரின் முடிவும்..

ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வு என்பதுவும்.. பிறகு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை திரும்பத் திரும்ப மறுதேர்வு என்பதுவும்..

எனக்குக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் எவரும் தகுதித் தேர்வின்கீழ் வந்தவர்கள் அல்ல..

அய்யா அப்துல்கலாமின் ஆசிரியர்களும் தகுதித் தேர்வின் கீழ் வந்தவர்கள் அல்ல.. 

ஆனாலும், எல்லோரும் படித்தோம்.. நன்றாகவே..

என் பிள்ளைகளும் படிக்கிறார்கள்.. அவர்களின் ஆசிரியர்களும் தகுதித் தேர்வின் கீழ் வந்தவர்கள் அல்ல..

இன்றைக்கு இந்தியா முழுவதும் இருக்கிற IASகள், IPSகள், டாக்டர்கள், தலை சிறந்த சட்ட நிபுணர்கள், நீதிபதிகள், பொறியாளர்கள் யாரும் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களிடம் படித்து வர வில்லை..

ஒரு சாதாரண இளநிலை (BA) பட்டம் படித்து முடித்ததும் ஒரு தேர்வெழுதி IAS ஆகி, இந்திய அரசையே ஆட்சி செய்வதற்கு இங்கு முடிகிறது.

IAS ஆகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு அவர்களுக்கு ஒருத் தகுதித் தேர்வு இங்கு வைக்கப்படுவதில்லை. அவர்கள் யாரும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறைத் தகுதித் தேர்வை வைப்பதில்லை. ஏனென்றால் அவர்கள் யாரும் முட்டாள்கள் இல்லை.

ஆனால், B.Sc முடித்து, M.Sc முடித்து.. ஆசிரியராகப் பணி புரிவதெற்கென்றேத் தனியாக இரண்டு ஆண்டுகள் படித்து, பயிற்சி முடித்து, தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று இவர் ஆசிரியராகப் பணி புரியத் தகுதியானவர்தான் என்று ஒரு அரசே பட்டம் வழங்கிய பிறகும், அவர் தகுதியானவர்தானா என்று இன்னும் ஒரு தகுதித் தேர்வு வைப்போம் என்பதுவும், பிறகு அதுவும் போதாது என்று 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைத் தேர்வு வைத்துக் கொண்டே இருப்போம் என்பது மட்டும் எந்த வகையில் நியாயம்? 

காரணம், ஆசிரியர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்கிற எண்ணம் இந்த அரசிற்கு இருப்பதால்தான் இப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது.

நாடு முழுவதும் 60 லட்சம் ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். அவர்களில் எத்தனை பேரைக் குற்றப்படுத்துகிறோம்?

6 பேரை?

60 பேரை?

600 பேரை?

6000 பேரை?

60000 பேரை?

600000 பேரை?

அல்லது..

6000000 பேரையுமா?

ஒரு மருத்துவருக்கு, ஒரு வழக்கறிஞருக்கு, ஒரு நீதிபதிக்கு, ஒரு இஞ்சினியருக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைத் தகுதித் தேர்வு தேவையில்லையா?

அவர்களும் தங்கள் நுண்ணறிவை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள வேண்டாமா?

1970ல் மருத்துவம் படித்துப்பட்டம் பெற்ற ஒரு மருத்துவருக்கு இப்போதைய நவீன மருத்துவத்துறை பற்றி தேர்வினை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டியது அவசியம் இல்லையா?

ஒரு தகுதித் தேர்வு என்ற பெயரில், பிங்கிப் பிங்கி முறையில் டிக் அடித்துத் தேர்ச்சி பெறும் ஒருவரா சிறந்த ஆசிரியர்? 

ஒரு ஆசிரியருக்கு, மாணவர்கள் கவனத்தைத் தன்பால் ஈர்த்து, அவர்களுக்கு நன்கு புரியும்படி கற்றுக் கொடுக்கும் திறமைதானே மிக முக்கியம்?

அதை அளவிடாதத் தகுதித் தேர்வுகளும் ஒரு தேர்வா?

எதுவோ அரசாண்டால் எதையோத் தின்னும் சாத்திரங்கள் என்ற பாரதியின் வரிகளை மெய்ப்பித்துவிடாதிருங்கள்..

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளியுங்கள்.. அவர்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்வார்கள்..

தகுதியற்ற ஆசிரியர்களைப் பெற்றோர்களே ஒதுக்கிவிடுவார்கள்..

எவருக்கும் அதுபற்றிக் கவலை வேண்டாம்..

ஆசிரியர் கலந்தாய்வு: 1,277 முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் ஆணை பெற்றனர்

பள்ளிக் கல்வித் துறையில் நடைபெற்ற முதுகலை ஆசிரியர் கலந்தாய்வில், மாநிலம் முழுவதிலும் 1,277 ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள் பணியிட மாறுதல் ஆணை சனிக்கிழமை பெற்றனர்.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2016-17 கல்வி ஆண்டில், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான மாவட்டத்துக்குள் மாறுதல் கலந்தாய்வு சனிக்கிழமை (ஆகஸ்ட் 20) நடைபெற்றது.

மொத்தம் 3,882 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்கள் மாறுதலுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இணையதளம் மூலம் நடைபெற்ற இந்த கலந்தாய்வில் 1,277 பேர்களுக்கு மாறுதல் கிடைத்துள்ளது.

இந்தக் கலந்தாய்வுப் பணிகள் யாவும் பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர்களின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரிக். பள்ளிகளுக்கு தனியாக தொடக்கக் கல்வி அலுவலரை நியமிக்கக் கோரிக்கை

மழலையர் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கென தனியாக ஒரு கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நாமக்கல் மாவட்ட சிறப்பு செயற்குழுக் கூட்டம் துணைத் தலைவர் பொன்.வீரசிவாஜி தலைமையில் நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநில பொதுச் செயலர் க.செல்வராஜூ, மாவட்டச் செயலர் ரா.செல்வக்குமார் பேசினர். 

 நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மழலையர் மற்றும் மெட்ரிக். பள்ளிகளுக்கென தனியாக ஒரு கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலரை நியமிக்க வேண்டும். பணி நிரவலில் ஒன்றியம் விட்டு ஒன்றியம் இடமாற்றம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் இட மாறுதல் கலந்தாய்வு முடிந்தவுடன் ஏற்படும் காலி இடங்களில் ஏற்கெனவே பணியாற்றிய ஒன்றியத்திலேயே மீண்டும் பணி வழங்க வேண்டும். 
 ஆங்கில வழிக் கல்வி நடைமுறையில் உள்ள அரசுப் பள்ளிகளில் கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு இரண்டு ஆசிரியர் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களில் ஒருவர் மாற்றுப் பணியில் வேறு பள்ளிக்கு மாற்றப்படுகிறார். 
 இச் செயல் இத்தகைய பள்ளிகளை மூடும் முயற்சியாகும். இதனால் ஒரு பள்ளிக்கு கட்டாயம் 2 ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்று உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட வேண்டும்.
 பள்ளிக் குழந்தையின் பெற்றோர் விபத்தினால் இறந்தால் தமிழக அரசு ரூ.75,000 உதவித்தொகை வழங்குகிறது. விபத்து மட்டுமல்லாது, வேறு காரணத்தினால் வருவாய் ஈட்டும் பெற்றோர் இறந்தாலும் அத்தகைய குழந்தைக்கும் உதவித்தொகை கிடைத்திட அரசு நடவடிக்கையெடுக்க வேண்டும்.
 பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வில் ஏற்படும் காலி இடங்களில் அந்தந்த ஒன்றியங்களில் பணியாற்றும் தகுதியான இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்து பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். 
 வாக்காளர் சேர்க்கை, நீக்கல் பணி தொடர் பணியாக உள்ளதால், ஆசிரியர்களின் கல்விப் பணி பாதிப்படைகிறது. இதனால் இப் பணிக்கு தனி அலுவலர்களை நியமிக்க வேண்டும். அரசின் புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில், ஆசிரியரின் பெற்றோர் பலன் பெறும் வகையில் நடைமுறை இல்லை. இதனை மாற்றி பெற்றோருக்கும் பலன் அளிக்கும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும்.

கற்பித்தல் தவிர வேறு பணி கூடாது : ஆசிரியர்களுக்கு தடை

பாடம் நடத்துவதை தவிர வேறு பணிகளில், ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கற்பித்தல் பணி தவிர, நிர்வாகம் சார்ந்த பல பணிகளிலும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள் வாக்காளர் கணக்கெடுப்பு, ஜாதி வாரி கணக்கெடுப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி, அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துதல்,
மாணவர்களுக்கு அரசின் இலவசங்களைப் பெற்று வழங்குதல் போன்ற பணிகளையும் செய்கின்றனர். 'தேர்தல் சார்ந்த பணிகள், மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணிகள் தவிர, கற்பித்தல் அல்லாத பணிகளில் ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது' என, கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 'இதை, பள்ளிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும்' என, மனிதவள மேம்பாட்டு துறை இணை அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா, பார்லிமென்டில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
அதனால், 'தமிழக பள்ளிக் கல்வித்துறை, அரசின், 14 வகை நலத் திட்டங்களுக்கு ஆசிரியரை பயன்படுத்தாமல், தனி ஊழியர்களை நியமிக்க வேண்டும்' என, தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.

ஆதார் முகாம் நடத்துவதில் இழுபறி : தனியார் பள்ளி மாணவர்கள் அவதி

ஆதார் முகாம் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், தனியார் பள்ளி மாணவர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். 
 பள்ளி மாணவர்களுக்கான, கல்வி உதவித்தொகை மற்றும் இலவச நலத்திட்ட உதவிகளை, ஆதார் எண் அடிப்படையில் வழங்க, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளி மாணவ, மாணவியரின் எண்ணிக்கையை கணக்கிட்டு, அந்த தகவல்களை, பள்ளிக்கல்வி மின்னணு நிர்வாக திட்ட தொகுப்பு மையத்தில் இணைக்க அறிவுறுத்தப்பட்டது. பெரும்பாலான அரசு பள்ளிகளில், ஆதார் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில், 6ம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவ, மாணவியரின் ஆதார் எண்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் ஆதார் எண்களை சேகரிப்பதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, தனியார் பள்ளி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: பள்ளிகளில், உள்ளாட்சி அமைப்பு மற்றும் வருவாய் துறையினர் மூலம், ஆதார் முகாம் நடத்தப்படும் எனக் கூறப்பட்டாலும், பெரும்பாலான பள்ளிகளில், இன்னும் முகாம் நடத்தப்படவில்லை. முகாமிற்கான ஆவணங்களை மாணவர்களிடம் பல முறை பெற்றும், முகாம் நடத்த அதிகாரிகள் உதவாததால், பெற்றோரையே ஆதார் எண்ணில் பதிவு செய்ய கட்டாயப்படுத்த வேண்டிஉள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்

ஆசிரியர்கள் அச்சம் தவிருமா? - மணி.கணேசன்..

முன்பொருகாலத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்குப் பக்தி, மரியாதை, பயம் முதலியன மேலோங்கிக் காணப்பட்டன. 
ஆசிரியர்களை வழிகாட்டிகளாகவும் முன்மாதிரிகளாகவும் மாணவர்கள் எண்ணிய காலம் தற்போது மாறிப் போய்விட்டதாகவே படுகிறது.

தொடக்கக்கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் அண்மைக்காலமாக மாணவ-மாணவிகளுக்கு அஞ்சும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கண்ணுக்குத் தெரிந்து தவறுகள் செய்யும் மாணவர்களை நேரடியாகக் கூப்பிட்டுக் கண்டிக்க முடியவில்லை. அப்படியே மாணவர்களின் நலன்கருதி கண்டிப்பில் ஈடுபடும் ஆசிரியர்களின் நிகழ்கால வாழ்வு அதோகதி நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறது. நான்காம் வகுப்பே படிக்கும் மாணவிக்குக்கூட இன்று கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது.

ஆசிரியர்கள் தம் சொல்லாலும் செயலாலும் மாணவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியாக எப்பொழுதிலும் எத்தகைய வழியிலும் துன்பம் தரக்கூடாது என்று இக்கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் இரும்புக்கரம் கொண்டு வலியுறுத்துகின்றது. இதன் விளைவு என்ன தெரியுமா?

இளைய பாரதமாகத் திகழும் மாணவ சமுதாயம் திசைமாறிச் செல்வதைத் தடுக்க வழியின்றி ஆசிரியர்கள் கைகளைப் பிசைந்துகொண்டு உணர்வின்றி வெறுமனே கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாக மாறிப்போய்விட்டனர்.நிதானம் தவறி வெற்று உணர்ச்சிகளுக்கு அடிமையாகி தம் இன்னுயிரைப்பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் தம்மை மாய்த்துக்கொள்ள நினைக்கும் மாணவச்சமூகத்தைத் திருத்தி நல்வழிக்காட்டுவது ஆசிரியர்களின்றி வேறு யார்?

அச்சு,காட்சி ஊடகங்கள்,வளர்ந்துவரும் நவீனத் தொழில்நுட்பங்களான செல்பேசிகள்,இணையங்கள்,தெருவெங்கும் திறந்துகிடக்கும் மதுபானக்கடைகள்,மலிவான போதைப்பொருள்கள்,நலிவடைந்துபோன மனித மதிப்புகள்,அதிநுகர்வுக் கலாச்சார நோக்குகள் மற்றும் போக்குகள் போன்றவை பிஞ்சு உள்ளங்களைப் பெருமளவில் நஞ்சாக்கி வருவது கண்கூடு.

மேலும்,உடல் கவர்ச்சி மற்றும் எதிர்பால் ஈர்ப்புக் காரணமாகப் பதின்பருவ வயதினரிடையே இயல்பாக எழும் அன்பொழுக்கம் தவறாகத் திரிந்து காதலெனக் கூறப்பட்டு வகுப்பறைக்குள்ளும் வெளியேயும் சொல்ல நா கூசுமளவிற்குத் தகாத முறைகளில் நடைபெற்று வருவதை ஆசிரியர்கள் கண்டும் காணாமலும் ஒதுங்கிச்செல்லவே முற்படுகின்றனர்.இந்த இழிநிலைக்குக் காரணம் எது?

மாணவர்களுக்கு இரண்டாம் பெற்றோராக விளங்கும் ஆசிரியரின் கைக்கு விலங்கையும் வாய்க்குப் பூட்டையும் போடும் சட்டமா? பெற்றோரின் மாறிப்போன மனப்போக்கா? சமுதாயத்தின் ஒருதலைப்பட்சமான குறுகிய பார்வையா? பரபரப்பையும் விறுவிறுப்பையும் மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு செயல்படும் ஊடகங்களின் சமூக அக்கறையின்மையா? மாணவரிடையே மங்கிப்போன குருபக்தியா? இவ்வாறு ஒரு பெரும்விவாதமே நிகழ்த்தவியலும்.

தப்பித்தவறி தாய் உள்ளத்துடன் குடும்பநிலை மற்றும் வருங்காலம் குறித்து நல்லறிவு புகட்டத் துணியும் ஆசிரிய,ஆசிரியைகளுக்கு மிஞ்சுவது மிரட்டல்கள் மட்டுமே. ஆம். காதல்வயப்பட்ட அப்பாவிப் பள்ளிச்சிறுமி வெளிப்படையாகவே ஆசிரியர்கள்மீது அவதூறுகளைப் பரப்பி அவர்கள் வாழ்க்கையையே நாசப்படுத்திவிடும் கொடுமையை என்னவென்பது?

ஒருசார்பான தீர்ப்பினாலும் முடிவினாலும் அவ்வாசிரியரின் நல்லதோர் குடும்பம் வீண்பழியால் சிதைந்து சின்னாபின்னமாவது என்பது வெளிச்சத்திற்கு வராத பேருண்மையாகும்.இத்தகைய குரலற்றவர்களின் குரலைச் சற்றேனும் காதுகொடுத்து கேட்க இச்சமூகம் ஏனோ முன்வருவதில்லை.இருதரப்பு நியாயங்களை இனியாவது செவிமடுக்க முன்வருதல் எல்லோருக்கும் நல்லது.

அதுபோல,தாம் பணியாற்றும் பள்ளியை முழுத் தேர்ச்சி பெறவைக்கவும், தேர்ச்சிக்குரிய குறைந்த மதிப்பெண்கள் அடைவை எட்டாத மாணவ, மாணவியர்மீது தனிக்கவனம் செலுத்தி,சிறப்பு வகுப்புகள் நடத்தித் தேர்ச்சியுற வைக்கவும் முயலும் ஆற்றல்மிக்க ஆசிரிய, ஆசிரியைகள் படும்பாடுகள் சொல்லிமாளாதவை. மென்மையாகக்கூட மாணவ, மாணவிகளைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ இயலவில்லை. ஒருபக்கம் அரசு மற்றும் அதிகாரிகளின் கெடுபிடிகள் மற்றும் கிடுக்கிப்பிடிகள். மறுபக்கம் சொல்பேச்சுக்கேளாத அடங்காப்பிள்ளைகள். இதைத்தவிர, வேறொருபக்கம் நன்குத் திட்டமிடப்பட்டு வேலைக்கு உலைவைக்கும் அச்சுறுத்தல்கள் மற்றும் அவப்பெயர்கள். அதிகம் போனால் பளார் அறைகள், கத்திக்குத்துகள், பாலியல் வன்கொடுமைப் புனைவுகள் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

 தவிர, அண்மைக்காலமாக மாணவ, மாணவியரிடையே சில விரும்பத்தகாத நடவடிக்கைகள் பெருகிக் கிடப்பதை நன்கு அறிய முடிகின்றது. மேலும் சமூகத் தீங்குமிக்கப் பல்வேறு தகாத நடவடிக்கைகளும் மலிந்துள்ளன. கற்றல்-கற்பித்தல் நிகழ்வுகளின்போதே தவறு செய்யும் மாணவனைக்கண்டு உண்மையில் ஆசிரியர்கள் கண்டிக்கத் திராணியின்றி அஞ்சி வருந்தும் அவலநிலைதான் எதிர்காலச் சிற்பிகளை உருவாக்கும் வகுப்பறை நடப்பாக இருக்கின்றது.

தமிழகத்தின் ஒட்டுமொத்த வகுப்பறைகளும் மாணாக்கர்களும் இவ்வாறு உள்ளனர் என்று பொதுவாகக் குற்றம் சாட்டுவது இங்கு நோக்கமல்ல. நல்ல நெல்மணிகளாய் மாணவக் கண்மணிகள் பலர் பல்வேறிடங்களில் அறியக்கிடைக்கின்றனர் என்பது மறுப்பதற்கில்லை. எனினும், பதர்கள், முட்செடிகள், நச்சுக்களைகள் போலுள்ள தீயோரை அடையாளம் காட்டுவதென்பது சமுதாயக் கடமையாகும்.

 திசைமாறிப் பயணித்துக்கொண்டிருக்கும் மாணவ சமுதாயத்தை மீளவும் நல்வழிக்குக் கொணர பெற்றோர், சமுதாயம், அரசாங்கம், ஊடகங்கள் ஆகியவை ஆசிரியர்களுடன்  கைகோர்ப்பது சாலச்சிறந்தது. ஆசிரிய சமுதாயத்தைத் தவறாகச் சித்தரித்து கேலி,கிண்டல் செய்து இழிவாகக் கருதும் சமுதாய பொதுமனநிலை நிச்சயம் மாற்றம்பெற வைக்கவேண்டியது. அதற்கு ஆசிரியரின் தனிப்பட்ட நல்லொழுக்கப்பண்பும் மட்டுமல்லாது காலந்தோறும் சமுதாயத்திற்கு உதவக்கூடியவகையில் அமைந்த விழுமியகுணங்களும் முன்மாதிரி நடத்தைகளும் இன்றியமையாதவை.

ஆசிரியர்-மாணவர் உறவென்பது ஆண்டான்-அடிமை உறவல்ல.அதுவொரு நல்ல கருத்துப் பரிமாற்றம் உள்ளடக்கிய நட்புறவு.அதைப் போற்றிப் பேணிக்காத்தல் என்பது இருவரின் கடமையாகும். அப்போதுதான் வலியின்றிச் சுதந்திரமாக கல்வி மலரும். நாடும் நலமுடனும் வளமுடனும் ஒளிவீசித் திகழும்.

நன்றி : தினமணி
Labels: Article

FLASH NEWS: தொடக்கக்கல்வி செயல்முறைகள்- நாள்:21/8/16- சுற்றறிக்கை எண் 20- பணிவிடுவிப்பு சார்பு--ஈராசிரியர் பள்ளிகளில் மாறுதல் பெற்றவர்களை பதிலி ஆசிரியர் வந்த பின்தான் விடுவிக்கவேண்டும்

DSE PROCEEDING-2010-11 English Subject TRB Regularisation order

உள்ளாட்சி தேர்தல் 2016 - உள்ளாட்சி தேர்தல்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு மாநிலம் தேர்தல் ஆணையம் ஆணை




இயற்கை மருத்துவம்

உங்களுக்கு என்ன நோய்?

உங்கள் கம்ப்யூட்டரை வைரஸ் தாக்கிவிட்டதா?

உங்கள் மொபைல் பேட்டரியை பராமரிக்க சில டிப்ஸ்

உங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா என்பதை அறிந்து கொள்வது எப்படி?

உணவு சாப்பிட்டவுடன் செய்யக்கூடாதவை

உறவுகள் மேம்பட A to Z

உலகில் மிகப் பெரியவை எவை?

எச்சரிக்கை! தங்கம் வாங்கினால் ஹால்மார்க் முத்திரையை மட்டும் பார்க்காதீர்கள்..!