யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

28/11/18

ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு நடந்துள்ளது குறித்து விசாரணை நடத்தப்பட்டது -அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

அடுத்த 3 மாதங்களில் 500 பள்ளிகளில் ‘அட்டல் டிங்கர் லேப்’ எனப்படும் நவீன ஆய்வுக்கூடம் அமைக்கப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு நடந்துள்ளது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. ஒரு லட்சத்து 3 ஆயிரம் பேர் தேர்வு எழுதிய நிலையில் புகார் குறித்து விசாரணை செய்து 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்களின் ஓ.எம்.ஆர். தாளை இதுவரை டெல்லியில் உள்ள நிறுவனம் ஸ்கேன் செய்து வழங்கி வந்தது.

தற்போது, அதை பள்ளி கல்வித்துறையே செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்காக தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. 1ம் வகுப்பு, 6ம் வகுப்பு, 9ம் வகுப்பு, 11ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டு உள்ளது. அதேபோல், 2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கும் பாடத்திட்டங்கள் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அடுத்தவாரம் இதற்கான குழு கூட உள்ளது. அதேபோல், இந்த பாடத்திட்டத்துடன் 2 திறன் வளர்ப்பு பாடங்கள் இணைக்கப்பட உள்ளது. இந்த பாடங்கள் மூலம் பிளஸ் 2 முடித்தவுடன் எளிதாக வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மத்திய மற்றும் மாநில அரசுகளின் உதவியுடன் அடுத்த மூன்று மாதங்களில் தமிழகத்தில் 500 பள்ளிகளில் ‘அட்டல் டிங்கர் லேப்’ எனப்படும் நவீன ஆய்வுக்கூடம் அமைக்கப்படும்.

FLASH NEWS-அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவது தொடர்பான சாத்தியக்கூறுகள் அடங்கிய அறிக்கை தாக்கல்


நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்.. மதுரை ஹைகோர்ட் அதிரடி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க தேசிய தேர்வு முகமை கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.


கஜா புயலால் தமிழகம் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. தஞ்சாவூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் பெரிய இழப்பை சந்தித்துள்ளது. முக்கியமாக மாணவர்கள் தங்கள் புத்தகங்கள், ஆவணங்களை இழந்து உள்ளனர்.

இந்த புயலில் பல மாணவர்கள் தங்கள் உடைமைகளை இழந்துள்ளனர். இந்த நிலையில் மருத்துவம் படிக்கும் எண்ணத்தில் இருக்கும் மாணவர்களுக்கு கஜா புயல் பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு 2019 மே 5ம் தேதி நடக்க இருக்கிறது.
இந்த தேர்விற்கு இப்போதே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். வரும் நவம்பர் 30ம் தேதியுடன் இதற்கான கால அவகாசம் முடிகிறது. இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் கஜா புயலால் டெல்டா பகுதி மாணவர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க தேசிய தேர்வு முகமை கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று மதுரைமேலூரை சேர்ந்த ஸ்டாலின் என்பவர் மதுரை ஹைகோர்ட் கிளையில் மனுதாக்கல் செய்து இருந்தார்.
அந்த மனு மீதான விசாரணையில் இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதன்படி, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க தேசிய தேர்வு முகமை கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும். மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு புதிய இறுதி தேதியை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளிகளில் முழுமையாக அமல்படுத்தாத நீதிபோதனை வகுப்புகள்: கல்வித் துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு :

பெரும்பாலான பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்படுவதில்லை என்ற குறைபாடு அதிகரித்து வரும் நிலையில், இந்த வகுப்புகள் நடத்துவதை உறுதி செய்வதில் கல்வித் துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2012-ஆம் ஆண்டு தமிழக கல்வித் துறைக்கு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. வாரம் ஒரு வகுப்பு நீதிபோதனைக்கு என ஒதுக்கப்பட்டு அதன்மூலம் நீதிபோதனை கதைகள், ஒழுக்கத்துக்கான செயல்பாடுகள், நீதி, நேர்மையை கடைப்பிடித்து வாழ்ந்த மகான்களின் செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்களால் போதிக்கப்பட்டன. இதனால் தவறு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது.
காலப்போக்கில் இந்த வகுப்புகள் ப
டிப்படியாக நிறுத்தப்பட்டன. இந்த வகுப்புகளுக்காக செலவிடப்பட்ட நேரத்தை பெரும்பாலான பள்ளிகளில் பாட வேளையாகப் பயன்படுத்தி வருவதாகவும், இதன் காரணமாக, மாணவர்களிடையே மீண்டும் ஒழுங்கீன செயல்பாடுகள் அதிகரித்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து பெற்றோர் தரப்பில் கூறியதாவது:
செல்லிடப்பேசி, இணையதளம் உள்ளிட்ட தொழில்நுட்ப தாக்குதல் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த பக்குவம் மாணவர்களிடம் இருப்பதில்லை. கல்வியறிவற்ற பெற்றோர் சிலரால் இதுதொடர்பாக கேள்வி எழுப்பவும் இயலுவதில்லை. இதனால், இளம் வயதிலேயே மாணவர்களின் மனநிலை சீர்கெட்டு வருகிறது. இதையடுத்து பள்ளி மாணவர்களிடையே மதுஅருந்துதல், காதல் வயப்படுவது, ஜாதி மோதல்களில் ஈடுபடுவது உள்ளிட்ட ஒழுங்கீன செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன.
இதுதொடர்பாக ஆசிரியர்களிடம் கேள்வி எழுப்பினால் மாணவர்களின் ஒழுங்கீன செயல்பாடுகளை பெற்றோர்தான் கவனிக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். ஆனால், அரசு உத்தரவுப்படி நீதிபோதனை, யோகா போன்ற வகுப்புகள் பெரும்பாலான பள்ளிகளில் நடத்துவதில்லை. இதை கல்வித் துறை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. தற்போதுள்ள நிலையில் மாணவர்களுக்கு  கல்வியைவிட ஒழுக்கம்தான் அதிக அளவில் தேவை. எனவே, பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகளை முறைப்படி நடத்த கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து வேலூர் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் கூறியது:
அனைத்துப் பள்ளிகளிலும் நீதிபோதனைக்கு வகுப்புக்கு என தனியாக ஆசிரியர் நியமித்து வாரம் ஒரு வகுப்பு நடத்த கல்வியாண்டு தொடங்கத்திலேயே உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிகளில் நீதிபோதனை, விளையாட்டு, இதர திறன் வளர்ப்புக்கு பயிற்சிகள் முறைப்படி நடத்தப்படுவதை அந்தந்த கல்வி மாவட்ட அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து அறிவுறுத்தி வருகின்றனர். எனினும், நீதிபோதனைக்கு என தனியாக மதிப்பெண்கள் கிடையாது என்பதால் இந்த வகுப்புகள் முறைப்படி நடத்தப்படுவதை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களால்தான் உறுதிசெய்ய முடியும் என்றனர்.
இதுகுறித்து, ஜக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் கூறியது:
மாணவர்களை கண்டிக்கும், தண்டிக்கும் உரிமை ஆசிரியர்களுக்கு இருந்தவரை அவர்களது ஒழுக்கமும் கட்டுக்குள் இருந்தது. தற்போது அந்த உரிமை ஆசிரியர்களுக்கு இல்லாததால் மாணவர்களை கண்காணிப்பது  சவாலாக மாறிவிட்டது. மேலும், தேர்வு முடிவுகளை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பாடத் திட்டங்கள் வடிவமைக்கப்படுவதால் இத்தகைய நீதிபோதனை வகுப்புகள் நடத்த வேண்டும் என்ற உத்தரவுகள் செயல் வடிவம் பெறுவதும் கேள்விக்குறியாகும்.
தவிர, இந்த நீதிபோதனை வகுப்புகளுக்கு என தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல், இருக்கும் ஆசிரியர்களைக் கொண்டே நடத்தப்படுகிறது. அவர்கள் வாரந்தோறும் நீதிபோதனை நடத்தலாம் அல்லது நடத்தாமலும் போகலாம். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த வகுப்புகள் நடத்தப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்றால் மாதந்தோறும் எத்தனை நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்பட்டன என்பது குறித்து அறிக்கைகள் பெறப்பட வேண்டும். அவ்வாறு பெற்றாலே குறைந்தபட்சம் 60 முதல் 70 சதவீதமாவது நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்றார் அவர்

கணினி தமிழ் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு :

முதல்வர் கணினி தமிழ் விருதுக்கான விண்ணப்பங்கள், டிச., 31க்குள் வந்தடைய வேண்டும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழ் வளர்ச்சி கருதி, தமிழ் மொழியை கம்ப்யூட்டரில், அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தும் வகையில், சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குவோருக்கு, 2013 முதல், 'முதல்வர் கணினி தமிழ் விருது' வழங்கப்படுகிறது. விருது பெறுவோருக்கு, 1 லட்சம் ரூபாய், 1 சவரன் தங்கப்பதக்கம் மற் றும் தகுதியுரை வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான விருதுக்கு, தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து, தமிழ் மென்பொருள்கள் வரவேற்கப்படுகின்றன. போட்டிக்கு அனுப்பப்பட உள்ள மென்பொருள்கள், 2015, 2016, 2017ல் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இதற்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை, www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில், இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விருதுக்கான விண்ணப்பம், தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு, டிச., 31க்குள் வந்தடைய வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 044 - 2819 0412, 2819 0413 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

பகுதி நேர தொழிற் ஆசிரியர்களின் கல்விச்சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தொடங்கி வைத்தார் :

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2011-2012ஆம் கல்வியாண்டில் நியமனம் செய்யப்பட்ட பகுதி நேர தொழிற் ஆசிரியர்களின் கல்விச்சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தொடங்கி வைத்தார்.
 புதுக்கோட்டை,நவ,26-          அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலமாக 2011-2012ஆம் கல்வியாண்டில் அரசாணை 177ன்படி    தமிழகம் முழுவதும் 16549 தையல்,இசை,கணினி,உடற்கல்வி உள்ளிட்ட பகுதிநேர தொழிற்ஆசிரியர்கள் அரசு நடுநிலை,உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டனர். அந்த ஆசிரியர்களின் கல்விச்சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி இன்று 26ந்தேதி(திங்கட்கிழமை)மற்றும் நாளை27ந்தேதி (செவ்வாய்கிழமை)ஆகிய இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் நடைபெறும் என்று அரசால்  அறிவிக்கப்பட்டு  அதன்படி தொடங்கியது. அந்த முறையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள   தேர்வுக்கூட அரங்கிலும்,புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளியிலும் இன்று 26ந்தேதி (திங்கட்கிழமை) பகுதிநேர தொழிற் ஆசிரியர்களின் சான்றிதழ்களின் சரிபார்ப்பு பணியினை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமை தாங்கி தொடங்கி வைத்து பகுதி நேர தொழிற் ஆசிரியர்களின் கல்விச்சான்றிதழ்களை சரிபார்க்கும் முறைக்குறித்து சான்றிதழ்கள் சரிபார்க்கும் குழு உறுப்பினர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

இன்று 26-ந்தேதியும்(திங்கட்கிழமை) நாளை27-ந்தேதியும் (செவ்வாய்கிழமை)ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பணி புரியும் 451 பகுதிநேர தொழிற் ஆசிரியர்களின் கல்விச்சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இப்பணியில்  பாடவாரியாக உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் பலரை  உள்ளடிக்கிய 9குழுக்கள் அமைக்கப்பட்டு கல்விச்சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இப்பணி நடைபெறுவதை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா உத்தரவின்பேரில் மாவட்டக்கல்வி அலுவலர்கள் புதுக்கோட்டை கே.அண்ணாமலைரஞ்சன்,இலுப்பூர் க.குணசேகரன்,அறந்தாங்கி(பொ)கு.திராவிடச்செல்வம் ஆகியோர் மேற்பார்வை செய்துவருகிறார்கள்.

1 - 2 வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடம் கிடையாது :

'பள்ளிகளில், 1 மற்றும் 2ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, வீட்டு பாடங்கள் தரக்கூடாது' என, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய அரசு அனுப்பியுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் உள்ள, பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறை, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுப்பியுள்ள உத்தரவு விவரம்:பள்ளி மாணவர்கள் எடுத்து வரும், நோட்டு, புத்தகங்கள் உட்பட, 'பேக்'குகளின் எடை விஷயத்தில், அரசின் விதிகள் பின்பற்றப்பட வேண்டும். கூடுதல் புத்தகங்கள், பொருட்களை எடுத்து வரும்படி, மாணவர்களை நிர்ப்பந்திக்கக் கூடாது. 1 - 2 ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடங்கள் அளிக்க கூடாது.பள்ளிகளில், 1 - 2ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எடுத்து வரும், பாட புத்தகங்கள் அடங்கிய, 'பேக்'கின் எடை, 1.5 கிலோவுக்கு மேல் இருக்கக் கூடாது;
3 - 5ம் வகுப்பு மாணவர்களின், பேக் எடை, 2 அல்லது 3 கிலோ இருக்கலாம்;மேலும், 6 - 7ம் வகுப்பு மாணவர்களின், பேக் எடை, 4 கிலோவுக்கு மேல் இருக்கக் கூடாது. 8 - 9ம் வகுப்பு மாணவர்களின் பேக் எடை, 4.5 கிலோவுக்கு மிகாமலும், 10ம் வகுப்பு மாணவர்களின் பேக் எடை, 5 கிலோவுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.பள்ளிகளில், 1 - 2ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மொழி, கணிதம் தவிர வேறு பாடங்களை பரிந்துரைக்கக் கூடாது. மேலும், 3 - 4ம் வகுப்பு மாணவர்களுக்கு, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரைக்கும், மொழிப்பாடம், கணிதம், சுற்றுச்சூழலியல் பாடம் சொல்லி தரப்பட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு சாதகமான சட்டப்பிரிவை எதிர்த்து மனு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் :

பொதுநல வழக்குகளுக்கான மையம்’ என்ற
தொண்டு நிறுவனம் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், கூறப்பட்டு இருப்பதாவது:-

ஊழல் தடுப்பு சட்டத்தின், திருத்தப்பட்ட 17ஏ (1) பிரிவின்படி, ஊழல் புகாரில் சிக்கிய அரசு ஊழியர்கள் மீது விசாரணையை தொடங்குவதற்கு முன்அனுமதி பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இது, அரசு ஊழியர்கள் மீதான விசாரணையை முற்றிலும் தடுக்கும் வகையில் உள்ளது.


ஏற்கனவே இதுபோன்ற சட்டப்பிரிவை செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு 2 தடவை அறிவித்த பிறகும், 3-வது முறையாக மத்திய அரசு திணித்துள்ளது.

தனது அரசுப்பணியை செய்யும்போது, அரசு ஊழியர் எடுக்கும் முடிவு அல்லது சிபாரிசு தொடர்பான குற்றங்களை பற்றிய புகார்களுக்கு இது பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. பணி தொடர்பான குற்றமா என்று தீர்மானிப்பது போலீசாருக்கு கடினமாக இருக்கும். அப்படி தீர்மானித்தாலும், அது வழக்குக்கு வழிவகுத்து விடும். அதனால், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க முடியாமல் போய்விடும்.

மேலும், முன்அனுமதி பெறுவதற்குள், அரசு ஊழியர்கள் ஆதாரங்களை அழிப்பதற்கும், அனுமதி கொடுப்பதை தடுப்பதற்கு வேலை செய்வதற்கும் வாய்ப்பு உள்ளது. அனுமதி கொடுக்கும் பொறுப்பு, ஊழியர் பணியாற்றும் துறைக்கே இருப்பதால், மேலிடம் அவருக்கு சாதகமாக செயல்படும் நிலை உள்ளது. அத்துடன், அனுமதி பெறுதல் என்பதே இன்னொரு ஊழலுக்கு காரணமாகி விடும்.

அனுமதி பெற்று விசாரணையை தொடங்குவதற்குள் ஊழல் பணத்தை சொத்துகளாக மாற்றுவதற்கும், வெளிநாடுகளில் பதுக்குவதற்கும் வாய்ப்பு உள்ளது.

எனவே, இந்த சட்டப்பிரிவு, ஊழல் ஊழியர்களுக்கு பாதுகாப்பானதாக அமைவதுடன், ஊழலின் அளவை அதிகரித்து விடும். ஊழல் தடுப்பு சட்டப்பிரிவுகளை நீர்த்து போகச் செய்து விடும். ஆகவே, அந்த சட்டப்பிரிவை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதிட்டார்.

பின்னர், இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்

வரும் 29ம் தேதி புதிய காற்றழுத்தம் வானிலை ஆய்வாளர்கள் தகவல்

வரும் 29ம் தேதி புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்புள்ளதாக
வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகவும் தாமதமாக கடந்த நவம்பர் 1ம் தேதி தொடங்கியது. பருவமழை தாமதமாக தொடங்கினாலும் தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக, அணைகள், ஏரிகளின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகை வரை 7 புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். இதனால், தமிழகத்திற்கு டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகும் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஓட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழறசி நிலவுவதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன்படி தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி மற்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதிராமபட்டினத்தில் 41.4 மி.மீ, காரைக்கால் 111 மி.மீ, நாகையில் 166 மி.மீ, பாம்பனில் 154 மி.மீ, பரங்கிப்பேட்டையில் 53 மி.மீ, தஞ்சாவூரில் 70 மி.மீ, திருச்சியில் 27 மி.மீ, வால்பாறையில் 26 மி.மீ, வேலூரில் 16 மி.மீ, நாமக்கல்லில் 16 மி.மீ, குன்னூரில் 20 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இந்தநிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 29ம் ேததி மற்றும் டிசம்பர் 5ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 29ம் தேதிக்கு பிறகு மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

TET, TRB முறைகேட்டை தடுக்க ஆசிரியர் தேர்வு விடைத்தாள்களை ஸ்கேன் செய்ய புதிய முறை - அமைச்சர் செங்கோட்டையன் தகவல் :

அடுத்த 3 மாதங்களில் 500 பள்ளிகளில்
‘அட்டல் டிங்கர் லேப்’ எனப்படும் நவீன ஆய்வுக்கூடம் அமைக்கப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு நடந்துள்ளது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. ஒரு லட்சத்து 3 ஆயிரம் பேர் தேர்வு எழுதிய நிலையில் புகார் குறித்து விசாரணை செய்து 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்களின் ஓ.எம்.ஆர். தாளை இதுவரை டெல்லியில் உள்ள நிறுவனம் ஸ்கேன் செய்து வழங்கி வந்தது.

தற்போது, அதை பள்ளி கல்வித்துறையே செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்காக தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. 1ம் வகுப்பு, 6ம் வகுப்பு, 9ம் வகுப்பு, 11ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டு உள்ளது. அதேபோல், 2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கும் பாடத்திட்டங்கள் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அடுத்தவாரம் இதற்கான குழு கூட உள்ளது. அதேபோல், இந்த பாடத்திட்டத்துடன் 2 திறன் வளர்ப்பு பாடங்கள் இணைக்கப்பட உள்ளது. இந்த பாடங்கள் மூலம் பிளஸ் 2 முடித்தவுடன் எளிதாக வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மத்திய மற்றும் மாநில அரசுகளின் உதவியுடன் அடுத்த மூன்று மாதங்களில் தமிழகத்தில் 500 பள்ளிகளில் ‘அட்டல் டிங்கர் லேப்’ எனப்படும் நவீன ஆய்வுக்கூடம் அமைக்கப்படும்.
இதற்கான நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்களின் அறிவியல் மீதான ஆர்வம், ஆராய்ச்சி திறனை மேம்படுத்துவதற்கு இந்த ஆய்வுக்கூடங்கள் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்

TNPSC - குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்!

சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

சைதை துரைசாமியின் மனிதநேய மையம் சார்பில் பல்வேறு மத்திய, மாநில அரசு பணி தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இதுபோன்ற பயிற்சிகளில் கலந்து கொண்டு 3 ஆயிரத்து 226 பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். சிவில் சர்வீஸ் தேர்வுகள் உள்பட பல்வேறு பணிகளில் சேர்ந்து உள்ளனர்.

இந்தநிலையில், கடந்த 11-ந் தேதி நடைபெற்ற குரூப்-2 முதல்நிலை தேர்வுகளுக்கு கடந்த மே மாதம் தொடங்கி 5 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த தேர்வுக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தற்போது, குரூப்-2 முதன்மை தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மனிதநேய மையம் சார்பில் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்பில் கடந்த 6 மாத காலமாக முதல்நிலை தேர்வுக்கு பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் அந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்தவர்களுக்கும், அவர்களது வேண்டுகோளை ஏற்று வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. கடந்த 11-ந் தேதி நடைபெற்ற முதல்நிலை தேர்வில் தெரிய வந்துள்ள கட்-ஆப் மதிப்பெண்களில் 140 மற்றும் அதற்கு மேல் எடுத்த ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ-மாணவிகளும் 150 மற்றும் அதற்கு மேல் எடுத்துள்ள பொதுப்பிரிவினரும் இப்பயிற்சிக்கு இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம். டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்க உள்ள இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ-மாணவிகள் www.mnt-f-r-e-e-ias.com என்ற இணையதள முகவரியிலோ அல்லது தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முதல்நிலைத் தேர்விற்கான நுழைவுச்சீட்டு ஆகியவற்றுடன் நேரில் வந்தோ பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044 - 24358373, 24330095 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த முதன்மை தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் மாதிரி தேர்வுகள், வகுப்புகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அறிவியல்-அறிவோம்: ஆபத்தான மைதாமாவு உஷார்:

கோதுமையில் உள்ள நார்ச்சத்துகளை அகற்றியே மைதா மாவு தயாரிக்கப்படுகிறது. இந்த மைதா மாவில் பல ஆபத்தான ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது. குறிப்பாக, அலொக்ஸான் என்ற ரசாயனம் அதிகம் கலக்கப்படுகிறது. இதனால், இன்சுலின் சுரப்பது தடுக்கப்பட்டு ஏராளமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
உணவில் இருக்கும் கார்போஹைட்ரேட், குளுக்கோஸாக மாறி ரத்தத்தில் கலந்து செல்களுக்குச் செல்ல வேண்டும். அப்போதுதான் நமக்கு ஆற்றல் கிடைக்கும். கணையத்தில் பீட்டா செல்களால் உற்பத்தி செய்யப்படும் இன்சுலின்தான் ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸை இதுபோல செல்களுக்குக் கொண்டு செல்கிறது. ஆக்சிடேசன்(oxidation)  என்கிற இந்த செயலினால் கிடைக்கும் ஆற்றலின் அளவுக்கு நம் உடல் செயல்பாடுகள் இருக்கும்பட்சத்தில் ரத்தத்தில் சர்க்கரை அளவு இயல்பான நிலையில் பராமரிக்கப்படும். இன்சுலின் போதுமான அளவு சுரக்காதபட்சத்தில் குளுக்கோஸ் செல்களுக்குச் செல்லாமல் ரத்தத்திலேயே தங்கிவிடும். இதுதான் நீரிழிவுநோய்.
விஷத்தன்மை கொண்ட வேதிப்பொருட்கள்:
 அலொக்ஸான்(Alloxan) என்கிற  ரசாயனம் சேர்த்தால்தான் உணவாகப் பயன்படுத்தப்படுகிற அளவுக்கு மிருதுவாகவும், சுவையான உணவாகவும் மைதா மாறும். இந்த ரசாயனத்தால் செரிமானக்கோளாறு, எதுக்களித்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
பென்சாயில் பெராக்சைடு' (Benzoyl Perozide) எனும் வேதிப் பொருளை மைதாவில் கலக்கிறார்கள், இந்த ரசாயனம் மைதாவின் வெண்மை நிறத்துக்காக சேர்க்கிறார்கள்.  காலில் ஆணி ஏற்பட்டால் அதை குணப்படுத்துவதற்காகவும், பொருட்களை பளபளப்பாக்குவதற்கும்  தலைமுடியை கருப்பாக்க பயன்படுற, 'ஹேர் டை'யில் சேர்க்கிற நச்சுப்பொருள் இந்த பென்சாயி்ல் பெராக்சைடு.இது ரத்தத்தில் Free radicals என்ற நச்சுக்குப்பைகளை உருவாக்குவதால் ஆக்சிஜன் உடைந்து செல்களில் பாதிப்பு ஏற்படும்.இந்த ரசாயனம் ஜவுளித்துறையில் துணிகள் வெண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பயன்படுத்தப்படுவது என்பது அதிர்ச்சியூட்டும் தகவல்.மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives, Sugar, Saccarine, Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்கப்படுகிறது.

இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது.
மைதா உணவைச் சாப்பிடுவதால் இதயத்திற்குச் செல்லும் ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதோடு, கொழுப்பு படிதல், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் இளம் வயதிலேயே வரும் என்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. 
மைதாவில் தண்ணீர் ஊற்றினாலே பசைபோல் ஒட்டும். இந்த பசைத்தன்மை உடலிலிருந்து வெளியேற 24 மணி நேரம் ஆகும். சிறுகுடல், பெருங்குடல் ஆகிய இடங்களில் தங்கித் தங்கி செல்வதால் அந்த நேரத்தில் கிருமிகள் உடலில் உற்பத்தியாகிவிடும்.
ஒரு காலத்தில் பசை மட்டுமே தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மைதாவை பல நூறு டன்கள் விற்பதற்கு  விஷத்தன்மை வாய்ந்த வேதிப்பொருட்களை கலந்து பரோட்டா எனும் பண்டத்தையும் உருவாக்கி மக்களை அதற்கு அடிமையாக்கி-விட்டனர். விளைவு, இன்று சில்லறைக் கடைகளில் சிறுதானிய மாவுகள் கிராம் கணக்கில் விற்பனையாக, மைதாவோ மூட்டைக் கணக்கில் விற்பனையாகிறது.

ஆபத்துவிளைவிக்கும் மைதா கலந்த உணவுகளை தவிர்ப்போம்,சிறுதானிய உணவுகளுக்கு முக்கியத்துவம் தருவோம்.

வருத்தப்படும் வாத்தியார் சங்கம் - மனதை உருக்கும் Whatsapp கட்டுரை!

எடுப்பார் கைப்பிள்ளையா ஆசிரியர்கள்?
பெயர்: xxxx
வகுப்பு : 12
வயது: 18
பள்ளி .. அரசு மேல்நிலைப் பள்ளி,xxxx
 உயரமான தோற்றம், கருமையான நீண்ட நாள் தாடி, ஹிப்பிதலைமுடி, இறுகிய கைச் சட்டை, உள்ளாடை தெரியும்படியான லோ ஹிப் - பென்சில்பிட்பேன்ட், கண்ணைப் பறிக்கும் நிறத்தில் செருப்பு, ஒரு கையில் ரப்பர் பட்டை, மறு கையில் இரும்பு வளையம், காதில் கடுக்கன், பாக்கெட்டில் புகையிலை, சிவந்த கண்கள், புகைத்துக் கருத்த உதடுகள்....

முந்தைய ஆண்டில் படித்த உள்ளூர் அரசு மேல்நிலைப் பள்ளியால், நடத்தை சரியில்லாத காரணத்தால் வெளியேற்றப்பட்டு இப்பள்ளியில் 9-ம் வகுப்பில் சேர்க்கை பெற்றான்.
   ஆண் ஆசிரியர்கள் ஒரு சிலரிடம் மட்டும் பவ்யமாக நடந்து கொள்வதும், பெண் ஆசிரியர்கள் வகுப்பில் நுழைந்தவுடன் சட்டையின் மேல் பட்டன்களைத் திறந்து விட்டுக் கொண்டு, பின்புறம் கைகளை விரித்து சாய்ந்து கொண்டே விதவிதமான சத்தங்களை எழுப்புவதும், ஊளையிடுவதும், அவர்களின் அந்தரங்கப் பகுதிகளை நோட்டமிடுவதுமே அவனது வாடிக்கை. ஓய்வு கால ஆண்டில் பணியாற்றிய ஒரு வயதான ஆண் ஆசிரியர் கூட, இவனாலேயே பணி நீட்டிப்புப் பெறாமல் சென்ற சம்பவமும் உண்டு.
தன் வகுப்பு மாணவர்களைத் தன்னை 'அண்ணன்' என்று அழைக்கக் கட்டளையிடுவதும், வயதில் மூத்த மேல் வகுப்பு மாணவர்களுடன் சேர்ந்து கொண்டு பிற மாணவர்களை மிரட்டுவதும், அடிதடியும் தான் அவன் பொழுதுபோக்கு.

ஒழுங்கீனமான வருகைப் பதிவினால் பல முறை எச்சரிக்கை விடுத்தும், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பிணையாளியைக் கொண்டு நிறுத்தி வகுப்பில் நுழைந்து கொள்வான். அதில் அவனது ஊரின் வார்டு உறுப்பினர், கவுன்சிலர், ஓய்வு பெற்ற கருவூல அதிகாரி, முன்னாள் அமைச்சரின் உதவியாளர் என பட்டியல் ஒவ்வொரு முறையும் கனம் கூடும். இடையில் படுத்த படுக்கையாகக் கிடந்த அவன் தந்தையின் மரணம் கூட அவனை அசைக்கவில்லை.
இதையெல்லாம் தாண்டி 10-ம் வகுப்பில் விளிம்பு நிலை மதிப்பெண்ணுடன் வெற்றி பெறச் செய்த ஆசிரியர்களிடம் சவால் விட்டு "நான் இந்தப் பள்ளியில் தான் படிப்பேன்" என்றவனால், ஆங்கில வழியில் அவன் கேட்ட பாடப் பிரிவிற்கு இடமின்றி பாலிடெக்னிக் ஒன்றில் சேர்க்கப்பட்டு, பின் அங்கிருந்தும் ஒழுங்கீனத்தாதால் வெளியேற்றப்பட்டான்.
அவனுடைய வீரியத்திற்கேற்ப பள்ளிக்குப் புதிய தலைமையாசிரியர் பொறுப்பேற்றார். காட்சிகள் மாறின; கட்டுப்பாடுகள் மாறின. மேற்கத்திய கலாச்சாரத்தைக் கொண்டு வருகிறேன் என்று உழைத்த புதிய தலைமையாசிரியரின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, காலங்கடந்த நிலையில் நவம்பர் மாதத்தில் 11-ம் வகுப்பில் சேர்க்கை பெற்றான், அதுவும் ஆங்கில வழியில் கணிதம்-உயிரியல் பாடப்பிரிவில். சொன்னது போல் சவாலில் வென்றான்.
அது முதல் அவனுடைய தோற்றம் மாறியது, நடத்தை மாறியது. ஆசிரியர்களைக் கண்டால் மீசையை முறுக்குவதும், வேறு மாணவர்களை அழைப்பது போல் கெட்ட வார்த்தைகளில் விளிப்பதும், விதவிதமான தலை அலங்காரங்களும் என விகாரப்பட்டு நின்றான். தான் மட்டுமல்லாது, தன்னுடன் சில மாணவர்களையும் பிணைத்துக் கொண்டான். வகுப்பறையிலேயே செல்பேசியில் படம் பார்ப்பது, புகையிலை, பாக்கு பயன்படுத்துவது அதிகரித்தது.
தொடர்ந்த இவனது செயல்பாடுகளால் அதிருப்தியுற்ற பெற்றோர் ஒருவரால் முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகார் செய்யப்பட்டு, ஆய்வின் முடிவில் அவனைப் பள்ளியை விட்டு வெளியேற்றும் படி உத்தரவிட்ட போதும், தனது வீம்பினாலும், அரசின் ஓட்டைகளாலும் இன்று 12- ம் வகுப்பில் அமர்ந்து, தொடர்ந்து தனது அரும்பணிகளை ஆற்றி வருகிறான்.
இது ஒரு மாதிரி (Sample) மட்டுமே. இது போல், இதை விட வீரியமிக்க, வீரியம் குறைந்த சில பலர் இப்பள்ளியிலும், இது போன்ற பல பள்ளிகளிலும் இருந்து பெருமையடைய வேண்டிய பெரும்பான்மையினரை சிறுமைப்பட வைப்பதே என் ஆதங்கம் .
இவர்கள் களைகள்; களைகள் கழையப் பட வேண்டும். எந்த வயலிலும் களைகளை ஊக்கப்படுத்தி, உரமிட்டு விளைச்சல் கொடுக்கும் படி எதிர்பார்ப்பதில்லை. களையெடுத்தால் தான் மற்ற பயிர்கள் செழிக்கும்.
இதையெல்லாம் படித்த பின் 'இவ்வாறு கருத்திட வெட்கமில்லையா' என வெகுண்டெழவும், 'இது உங்கள் பலகீனம்' என்று வெசனப்படவும், 'இது உங்களின் இயலாமை' என்று ஏளனம் செய்யவும், 'இத்தகையோரை சீர்படுத்துவதே உங்கள் கடமை' என அறிவு பகரவும் நீங்கள் தலைப்படலாம். உண்மைதான். இதைப் பதிவிட வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன்; எங்கள் இயலாமையை எண்ணி எண்ணி நாணுகிறேன். ஏற்றுக்கொள்கிறேன், நாங்கள் பலகீனர்கள்தான். கத்திக்குத்துக்களையும் காமப்பழிப்புரைகளையும் எதிர்கொண்டும் ஏதும் செய்ய இயலா பலகீனர்கள்தாம். தண்டனை தரத் தகுதியில்லைதான்; ஆனால் கரிசனை கொண்டு கண்டிக்கவும் வழியில்லாத பலகீனர்கள் தான். பெயருக்குத் தான் இது கட்டாயக் கல்வி; ஆனால் குறிப்பிட்ட ஒப்படைப்புகளைக் கூட சரியான நாளில் ஒப்படைக்கும் படி கட்டாயப்படுத்த முடியாது. 

எதிர் காலச் சமுதாயத்தைத் கட்டமைப்பவர்கள் என்று நீங்களே கூறும் ஆசிரியர்களுக்கு எத்தகைய அதிகாரத்தை நீங்கள் அளித்திருக்கிறீர்கள்? பரட்டைத் தலையுடன் வருபவனை முடிவெட்டச் சொல்ல அதிகாரமில்லை; ஜட்டி தெரிய பேன்ட் போட்டால் ஏற்றிப் போடச்சொல்ல அதிகாரமில்லை; கஞ்சா, பாக்கு வைத்திருந்தால் பறிமுதல் செய்யக் கூட அதிகாரமில்லை. செல்போன் இருந்தால் எடுத்து - எடுக்க முடிந்தால் - பெற்றோரிடம் கொடுக்க வேண்டும். ஆபாசப் பேச்சுக்களை அடக்கிப் போட அதிகாரமில்லை; தப்பை தப்பு என உணர வைக்க அதிகாரமில்லை. என்னங்க நீங்க ... கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஈவ் டீசிங் என எத்தனை வழக்குகள் பதிவாகியிருந்தாலும் ஒரு மாணவனுடைய மாற்றுச் சான்றிதழில் 'திருப்தியில்லை' (not satisfied) என வேண்டாம், 'திருப்தி' (Satisfied) என்றாவது எழுத அதிகாரம் அளித்திருக்கிறீர்களா? இதே ஆசிரியருக்கு இணையான ஊதியத்தில் பணியாற்றும் காவல்துறை பணியாளரின் அதிகாரம் என்ன? ஒரு வருவாய்த்துறை அலுவலரின் அதிகாரம் என்ன?
வக்கத்தவன் வாத்தியாருன்னு சொல்லிச் சொல்லியே எங்கள வக்கத்துப் போக வச்சிட்டீங்க. ஆமாங்க, போலீச மொறச்சா பொளந்து கட்டிருவான்; தாலுகா ஆபீசுல பேசுனா தண்ணி காட்டிருவான். ஒரு போஸ்ட் மேன் கிட்ட உங்களால பேச முடியுமா? ஐயையோ, அப்புறம் முக்கியமான தபால தராமப் போயிருவான். அப்போ லைன் மேன் - கரண்டு வேண்டாமா சார். இந்த கேஸ் சிலிண்டர் போடுறவன் - சோத்துல கை வைக்காதீங்க சார். டிரைவர் - பஸ்ச நிறுத்த மாட்டாரு. கண்டக்டர் - ஸ்டாப்புல எறக்க மாட்டாரு. சாமியாரு - சாபங் குடுத்துடுவாரு, அப்போ மாமியாரு - யாருய்யா நீ, பொண்ணே குடுக்க மாட்டா.
நம்ம வாத்தியாரு... அட அவனா... அது எவ்ளவு அடிச்சாலும் தாங்கும்டா. பாக்க போட்டு மூஞ்சில துப்பு; மொறச்சா மூஞ்சில குத்து. நாண்டுகிட்டு நின்னு சாவணும், இல்லன்னா இருக்கவே இருக்கு அரசாங்க ஆஸ்பத்திரி . வாத்தியாரு மொறச்சாரு, மன உளைச்சல், தற்கொலை முயற்சின்னு கேச போடு. பொம்பள புள்ளயா - கைய புடிச்சி இழுத்தான்னு சொல்லு – அவன் பொண்டாட்டி புள்ளயோட சாவட்டும். கலெக்டர் வருவாரு, போலீசு வரும், கல்வி அதிகாரிகள் எல்லாரும் வருவாங்க. கடைசியா - உனக்கு எதுக்குய்யா வேண்டாத வேல, எவன் எக்கேடுகெட்டுப் போனா ஒனக்கென்ன? இப்ப பாரு, உன் பொண்டாட்டி புள்ள தான தெருவுல நிக்கிவு - இது தான் அட்வைசு. அப்புறம் சஸ்பெண்டு, டிஸ்மிஸ்சு, என்கொயரி, எட்சட்ரா, எட்சட்ரா - .. ஆனா நீ மட்டும் பாரு , தெய்வப் பிறவி. நீ மனுசனா இருந்தாதான உனக்கு மன உழைச்சல், உடல் அலைச்சல், பி.பி., சுகரு எல்லாம் வரும். நீ யாரு? வாத்தியாரு.... தெய்வப் பிறவி. வானத்துலயிருந்து ஸ்ட்ரெய்ட்டா விழுந்து வாத்தியாராவே மொளச்சவன். உனக்கு எப்படி பி.பி. வரும்? சுகரா...? மன உளைச்சலாவது மண்ணாங்கட்டியாவது .
கவர்மென்ட் ஸ்கூலுக்குப் போகும் போதே ஒனக்குத் தெரியாதா? அங்க புக்கு சொமக்கணும், நோட்டு சொமக்கணும், பென்சில், க்ரேயான், புத்தகப்பை, செருப்பு, அப்புறம் பஸ் பாஸ் வேற வாங்கணும். நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ, எல்லாருக்கும் EMIS Entry போடணும், பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணணும், சாலா சித்தி என்ட்ரி போடணும், இன்ஸ்பயர் என்ட்ரி, அப்புறம் ஊர்ல உள்ள அத்தன கண்காட்சிக்கும் கூட்டிட்டுப் போகணும். அவனுக்கு Community Certificate, Income Certificate, Nativity Certificate தேவையோ தேவையில்லயோ எடுத்துக் குடுத்தே ஆகணும். அய்யோ Aadhar அ மறந்துட்டேன்பாருங்க. Birth Certificate ல பேரு சரியா இருக்கா, Aadhar Card ல, Ration Card ல எல்லாம் பேரு ஊரெல்லாம் சரியா இருக்கான்னு பாக்கணும். Date of Birth கூட நீ தான் பாக்கணும். Birth Certificate ல ஒண்ணும் Aadhar ல ஒண்ணும், பழைய டி.சி.யில ஒண்ணும், அவன் தாய் தகப்பன் சொல்றது ஒண்ணுமா இருந்தா அவன் பொறந்த நாள நீ தான் கண்டுபுடிக்கணும். ஏன்னா... நீதான வாத்தியாரு.
இதையெல்லாம் எடுத்து குடுத்து, ஆயிரந்தடவ entry போட்டாலும், வருசத்துக்குப் பத்து தடவ ஆதார் நம்பர குடு, அக்கவுன்ட் நம்பர குடுன்னு ஆபீசுல இருந்து தபால் வரும். சாரி சாரி, இப்பல்லாம் தபால் இல்லல்ல ... ஆமாமா மெயில் வரும். e-mail. நம்ம ஊரு e-mail ம் internet-ம் பத்தி உங்களுக்குத் தெரியாததா? நம்ம ஆபீசருங்களும் மெயில் அனுப்பிட்டு கண்டிப்பா ஒரு hardcopy கொடுத்திருங்கன்னு வெறப்பா மெயில தட்டி விட்டுருவாங்க. மெயில பிரிண்டு போடுறதுக்கே ஒரு நூறு பண்டல் பேப்பர் வேணும்.
அதுக்குள்ள சத்துணவுப் பணியாளர்கள் ஸ்டிரைக் பண்ணுவாங்க. அதுக்கு உனக்கென்னன்னு கேக்குறீங்களா... அட வெளக்கெண்ண, அத்தன புள்ளைங்களும் சோறு திங்க வேண்டாமா? போ போயி அடுப்ப பத்த வையி.
அச்சச்சோ, ஆபீசருங்க வாராங்களா... டீச்சர், டீச்சர்... அந்த டாய்லெட்டுல ரெண்டு வாளி தண்ணிய ஊத்தி யாரயாவது கூப்புட்டு ரெண்டு தேய் தேய்ச்சி விட்டுடுங்க; ஆளப் பாத்துக்குங்க டீச்சர் - அப்புறம் சாதிப் பிரச்சன வந்துரப் போவுது. அந்த மீதி கெடக்க நாப்கின அஞ்சாறு புள்ளைங்கள கூப்பிட்டு குடுத்து விட்டுடுங்க. அதுக எப்டியும் தொடாது, வீட்லயாவது யாருக்கும் பிரயோஜனப் படும்.
என்ன சார் , எல்லாத்துக்கும் பேர் எழுதி என்ட்ரி போட்டு கையெழுத்து வாங்கிட்டீங்களா? ஒவ்வொண்ணுக்கும் தனித்தனியா வாங்குங்க.
3 term book,
3 term note. ஒவ்வொரு term - ம் தனித்தனியா,
ஜாமெட்ரி பாக்ஸ்,
அட்லஸ்,
செருப்பு,
புத்தகப்பை,
பஸ் பாஸ்,
சத்துணவு,
லேப்டாப்,
நாப்கின்,
சைக்கிள்,
கண்ணாடி,
ID கார்டு,
Scholarship- 
அய்யய்யோ... எல்லாருக்கும் scholarship வாங்கிக் குடுத்தீங்களா? அதிகாரிங்க கிட்ட வந்து கம்ப்ளெய்ன்ட் பண்ணப் போறாங்க.
SC/ST scholarship,
minority scholarship,
பெண் கல்வி உதவித் தொகை,
இடைநிற்றல் கல்வி உதவி,
அப்பா / அம்மா இல்லாத பிள்ளைங்கள மறந்திடாதீங்க.
Merit Exam, NMMS, NTSE , Trust Exam-னு எல்லா டெஸ்டிலயும் நம்ம பசங்க ஏன் இன்னும் தேறமாட்டேங்குறாங்க. இன்னும் hard work பண்ணுங்க - அப்டின்னு ஒரு கமென்ட் வரும்.
அப்பப்போ மெடிக்கல் கேம்ப் வருவாங்க. தடுப்பூசி போடக் கூடாதுன்னு வாட்சப் புல பரப்பி விடுவான், எல்லா புள்ளைங்களயும் போட வைக்கணும்னு அரசாங்கம் சொல்லும். நம்ம புள்ளைங்க தானன்னு அதயும் பாக்கணும். "என்ன சார் டாய்லெட் வச்சிருக்கீங்க, இத்தன பேருக்கு எப்டி இந்த டாய்லெட் பத்தும்? இதயாவது கொஞ்சம் நீட்டா வைங்க சார். நம்ம வீட்ல இப்டியா இருக்கும்? நம்ம புள்ளைங்க தான..." டாக்டர் வேற சொல்லிட்டுப் போவாரு.
"டாய்லெட்டா ... ஸ்கூலுக்கா-? ஹெட்மாஸ்டரும் டீச்சருங்களும் ஏற்கெனவே லட்சம் லட்சமா சம்பளம் வாங்குறாங்க, அது போதாதா... இதுல டாய்லெட் கட்டுற கமிசன் வேற வேணுமா"-ன்னு - அரசாங்கமே (?) கணக்கும் பாத்து கட்டியும் குடுக்குவு. இந்த டாய்லெட் லெட்சணம் தான் நமக்கு நல்லா தெரிஞ்சதாச்சே. ஆட்சி முடியிறதுக்குள்ள அதுக முடிஞ்சிப் போகும். அல்லது ஆளே இல்லாத எடத்துல அதுக உக்காந்திருக்கும்.
அப்புறம் RMSA, SSA ன்னு அப்பப்போ புதுப்புதுத் திட்டம். திட்டங்கள் எல்லாம் ஓ.கே. தான். ஆனா அதுக்கு ஒதுக்குற நிதிய கைப்பற்றுறதுல தான் அதிகாரிங்க, ஆட்சியாளருங்களுக்குள்ள.... ஓ.கே ... ஓ.கே .... ஒண்ணும் சொல்றதுக் கில்ல.
ஒரு சின்ன உதாரணம். RMSA, RMSA-ன்னு ஒரு திட்டம். அதுல ஒரு ஸ்கூலுக்கு வருசம் அம்பதாயிரம் ரூவா குடுக்குறாங்க. அதுல பங்கு பிரிக்குறது எல்லாம் கரெக்டா இருக்கும். 25,000 ரூபாய்க்கு Science lab பொருட்கள். 7,500 ரூபாய்க்கு நூலகப் புத்தகம், 2500 -க்கு நாளிதழ்கள், 10,000 ரூபா டெலிபோன், இன்டர்நெட் பில். எல்லாம் சரிதான், அந்த 25,000 ரூபாய்க்கு அவங்களே மெட்டீரியல் தருவாங்களாம், மூணு கொட்டேசனும் (Quotation) தருவாங்களாம். ஒரு, ஒண்ணுக்கு ஒண்ணு பெட்டியில - 5000 ரூபாய்க்கு உள்ளூர் ல வாங்கியிரலாம் - lab articles. அப்புறம் அதே மாதிரி ஒரு பெட்டியில அதே மாதிரி மூணு Quotation னோட கொஞ்சம் புக்கு. அதுவும் வருசா வருசம் அதே புக்கு, ஆனா வருசத்துக்கு பத்து புக்கு குறையும் லிஸ்டுல. லிஸ்டுல இருக்குறதுலயும் ஒண்ணு ரெண்டு கொறயும், கண்டுக்கக் கூடாது. இதையெல்லாம் தந்து, அதே ஹெட்மாஸ்டரே Quotation வாங்குனதாகவும், Bill செட்டில் பண்ணுனதாகவும் வருசா வருசம் ஆடிட் வேற நடக்கும். இதுலயிருந்து ஹெட்மாஸ்டரு எதுவும் ஆட்டயப் போட்டுறக் கூடாது பாருங்க.. இதையெல்லாம் கண்காணிக்க SMC, SMDC, VEC, PTA -ன்னு ஸ்கூலுக்கு நாலு கமிட்டி வேற.
என்ன சார் அதுக்குள்ள முடிக்கப் பாக்குறீங்க. இன்னும் உங்க வேல முடியல. மக்கள் தொகை கணக்கெடுக்கணும். அஞ்சு வருசத்துல மூணு எலெக்சன் நடத்தணும். இதெல்லாம் ஒரு கஷ்டமான்னு நீங்க கேக்குறது காதுல கேக்குவு. இதுல யெல்லாம் எங்க கஷ்டம் என்னன்னு இதுக்கு மேலயும் உங்களுக்கு சொல்லிப் புரிய வைக்கணும்னு எனக்குத் தோணல. விடுங்க.
பணியிலிருக்கும் போது கத்திக் குத்துப்பட்டு உயிரிழந்த காவலருக்கு கோடிகளில் நிவாரணமளித்த அரசு, சாக வேண்டிய அவசியமே இல்லாத பணியில் இருக்கும் ஆசிரியை கத்திக் குத்துப்பட்டு உயிரிழந்த போது எத்தகைய நிவாரணம் அளித்தது என்பது நாமறிந்ததே.
அட போங்கப்பா, எல்லாம் நம்ம புள்ளைங்கதானேன்னு எல்லாத்தையும் பொறுத்து, சிலபஸ்படி பாடம் முடிச்சி, படிக்க வச்சி, தனியார் பள்ளிகள்ல ரெண்டு வருசமா செய்யிறத ஆறு மாசத்துல நடத்திக் காட்டினாலும், 100 சதவிகித தேர்ச்சி, எத்தன சென்டம்-னு அதிகாரிகளின் இலக்குகள். ஒளிவு மறைவின்றி ஒரு உண்மையைக் கூறுகிறேன்; இல்லையில்லை, கேட்கின்றேன், 20-க்கு மேல் மதிப்பெண் பெற்றாலே அதை 35 ஆக்குங்கள் என்று இந்த அதிகாரிகள் வற்புறுத்தவில்லையா? எழுதப் படிக்கத் தெரியாத நிலையிலுள்ள ஒரு மாணவன் வெறும் கொள் குறிவினாக்களினாலேயே, 'பிங்கி பிங்கி பாங்கி' போட்டு, a,b,c,d மட்டும் எழுதி, வெறும் 20 மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்று விடுகிறான். மதிப்பெண்களை இனாமாகவும் கூடுதலாகவும் போடச் செய்து எங்கள் மாண்பையே இழக்கச் செய்து விட்டீர்கள். தற்போது விளிம்பு நிலையில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் ஏளனப் பேச்சு இதுதான் - எந்தக் கேணப் பய கையில என் பேப்பர் போச்சோ தெரியல; 25 மார்க்குக்குக் கூட நான் எழுதல, எனக்கு 35 மார்க்கு போட்டிருக்கான்.
பிள்ளைகளாக நினைத்து அறிவுறுத்தும் எங்கள் ஆசிரியச் சகோதரிகளை இந்த மாணவச் சமுதாயம் காமக் கண்ணுடன் நோக்குவது உங்களுக்கு உறுத்தவில்லையா? மேற்கத்திய கலாச்சாரத்தில் வளர்க்கப்பட வேண்டுமெனில் இந்தக் கல்விக் கொள்கையாளர்கள் முழுவதுமாக அத்தகைய நிலையைக் கைக்கொள்ளட்டும். கல்வியில் மட்டுமல்ல - எல்லா நிலையிலும். . விரும்பும் உடையை, விரும்பும் பொருளை, விரும்பும் பாடப்பிரிவை, விரும்பும் துறையை, விரும்பும் துணையைத் தேர்ந்தெடுக்க, உரிமையை விட்டுக் கொடுக்க விரும்பாத நாம், கல்வி நிலையங்களில் மட்டும் விருப்பம் போல் நடந்து கொள்ள எதிர்பார்க்கின்றோம். 
அப்படியெனில் இனி 16-வயதில் வீட்டை விட்டு வெளியேற சுதந்திரம் கொடுப்போம்; 18-வயதில் துணையைத் தேட சுதந்திரம் கொடுப்போம்.
சானிட்டரி நாப்கினைக் கூட சங்கடத்தோடு மறைத்து விநியோகிக்கும் நாம், ஆணுறையைக் கூட அப்பட்டமாய் விநியோகிக்கும் நாடுகளைப் பார்த்து காப்பியடிக்க முயற்சிக்கிறோம். குழந்தை உரிமை என்ற பெயரில் குழந்தையின் இயல்புகளையே இழக்கச் செய்கிறோம்.

நான் முன்னர் குறிப்பிட்டுள்ள இந்த உதாரண மாணவன் ஒன்றும் பிறக்கும் போதே இவ்வாறு இருந்து விடவில்லை. ஆனால் இந் நிலைக்குக் காரணம் உண்டெனில் அது நம்முடைய கல்விக் கொள்கை ஒன்றுதான் என்பேன். கட்டாயமாக அனைவருக்கும் கல்வியளிக்க வேண்டும் என விரும்பும் அரசும், கல்வியாளர்களும் அவ்வனைவருக்கும் தரமான கல்வி கட்டாயப்படுத்தப்பட வேண்டும் என நினைப்பதில்லை.
இதில் தரம் என்பது இன்றைய சூழலில் மதிப்பெண்களாலும், தரநிலைகளினாலும் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது அன்றி, மனப்பான்மையும் மாண்புகளும் மண்மூடிப் போய்விட்டன. 
பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை நல்ல ஒரு மாணவனைக் குறிப்பிடுங்கள் என்றால் நன்றாய்ப் படிக்கும் மாணவனைக் குறிப்பார்கள்; இன்று நன்றாய்ப் படிக்கும் மாணவர்கள் கூட நளினமாகக் கெட்ட வார்த்தைகளில் அசத்துகிறார்கள்.
எல்லோரும் கூறும் ஊடக வளர்ச்சியைப் பலிகடா ஆக்க மறுப்பதற்கில்லை, எனினும் முதற்காரணம் நமது அரசுகளும், கொள்கைகளும் தான் என்பேன். அதற்காக எங்கள் கைகளில் பிரம்பைக் கொடுங்கள் என்று கேட்கவில்லை; ஆனால் எங்கள் கைகளிலிருந்து பிரம்பைப் பிடுங்காதீர்கள் என்று கேட்கிறேன். காரணம், எங்கள் கைகளிலிருந்து பிரம்பைப் பிடுங்கப் பிடுங்க, போலீசின் கைகளில் லத்தியும், துப்பாக்கியும் வலுத்துக் கொண்டிருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.
இன்றைக்கும் கூட கல்வித்தரம், 11-ம் வகுப்புப் பொதுத் தேர்வு, நீட்டு -க்கு என்ன செய்ய என்று IIT, அண்ணா பல்கலைக்கழகம், ISRO என்று தானே ஆலோசனை கேட்கிறீர்கள்; அடிப்படையான ஆசிரியர்களை யாராவது நினைத்துப் பார்த்தீர்களா?
இன்னும் கூட Medical, Engneering, IAS, IPS என்று கல்விக்கு என்று ஒரு பட்சமான இலக்கைத் தானே நீங்கள் முன் வைக்கிறீர்கள். மனப்பான்மை சார்ந்த இலக்குகளை என்றைக்கு முன் வைக்கப் போகிறீர்கள்? சமூக மாண்புகளை என்றைக்கு நாம் இலக்காக்குவது? இயற்கையை நேசிக்கவும் ரசிக்கவும் தனியே டியூசன் வைக்க வேண்டுமா?
இதையெல்லாம் செய்யாமல் போனால் இன்னும் ஏழேழு நூற்றாண்டுகள் ஆனாலும் நாம் , "ஜப்பானைப் பார், அமெரிக்காவைப் பார், ஐரோப்பாவைப் பார்" என்று தான் உதாரணப்படுத்துவோம். அதுவரை நாம் இதே நாம் தான்.

 இதையெல்லாம் தாண்டியும் உங்களில் சில கேள்விகள் எழலாம், "இத்தகைய சவால்களையெல்லாம் தாண்டியும் எத்தனையோ ஆசிரியர்கள் சாதிக்கவில்லையா? தம் சொந்தப் பணத்தில் பள்ளிக்கு வளர்ச்சிப் பணிகள் ஆற்றவில்லையா? வீதி வீதியாக, ஊர் ஊராகச் சென்று மாணவர்களைத் தேடவில்லையா?" என லாவகமாக வீசலாம். உண்மைதான். உள்ளன்போடு  உழைக்கும் மகாத்மாக்கள் அவர்கள். மகாத்மா ஒருவர் தான்; அதுபோல்தான் இவர்களும் ஒன்றிரண்டு சதவீதம். உங்கள் கொள்கைகளைப் பெரும்பான்மையோருக்குத் தகுந்தாற்போல் வகுத்துக் கூறுங்கள். எங்களுக்கும் உணவு, உடை, உறைவிடம் அத்தியாவசியம்தான். எந்தக் கடையிலும் ஆசிரியருக்கென சலுகைப் பொருட்கள் வழங்கப் படுவதில்லை; எந்தப் பேருந்திலும் ஆசிரியருக்கென சிறப்பு அனுமதி இல்லை; எந்த மருத்துவமனையிலும் ஆசிரியருக்கான சிறப்பு மருத்துவத் திட்டம் இல்லை. எங்கள் பணத்தைப் பிடித்துக் கொண்டு, எத்தகைய மருத்துவக் காப்பீட்டை இந்த அரசு வழங்கி வருகிறது என்பது ஊருக்கே வெளிச்சம். காப்பீட்டுப் பணத்தில் மருத்துவம் பார்க்க வேண்டுமானால் எங்களுக்கு வரக்கூடாத நோய்களெல்லாம் வந்தாக வேண்டும்; அதிலும் சில லட்சங்கள் எங்கள் கைகளிலிருந்தே...
இதற்கு எதிர்மாறாக "மாணவர்களின் உதவித் தொகைகளைக் குறிவைக்கும் தலைமையாசிரியர்கள் இல்லையா? கண்ட நேரத்தில் கட்டுப்பாடில்லாமல் பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் இல்லையா? பிஞ்சுப் பிள்ளைகளிடம் வக்கிரம் காட்டும் வாத்தியார்கள் இல்லையா?" எனவும் கேட்கலாம். இதற்கும் அதே பதில் தான். ஒரு சதவீத இத்தகையோரைக் களையெடுங்கள்; அவர்களுக்கான அங்கீகாரத்தையே அறுத்தெறியுங்கள். வேலையின்றி எத்தனையோ பேர் காத்துக் கிடக்கின்றனர். இந்தப் பணியில்லை, அத்தகையோர் எந்தப் பணியிலும் ஈடுபடாதவாறு தனிமைப் படுத்துங்கள்; அடுத்த தலைமுறை வரை அலைய விடுங்கள். அப்பன் சொத்தில் பங்கு வேண்டும், அவன் தப்பிலும் பங்கு கொடுங்கள். அதற்காக இத்தகையோரை முன்னிட்டு ஏனைய பெரும்பான்மையோரை அவமதிக்காதீர்கள், அவர்கள் உழைப்பை அர்த்தமற்றதாக்காதீர்கள்.
மீண்டும் சொல்கிறேன், உங்கள் கொள்கைகள் பெரும்பான்மையோரைக் குறித்து இருக்கட்டும். எங்களுக்கும் குடும்பங்கள் உண்டு, குழந்தைகள் உண்டு, குறைகளும் உண்டு.
இன்னும் கடைசியாய் ஒரு கேள்வி உங்களிடம் மிச்சமிருக்கும் , "உங்கள் பிள்ளைகளை மட்டும் ஏன் தனியார்ப் பள்ளியில் படிக்க வைக்கிறீர்கள்?" இதற்குப் பதில் தேட விரும்பினால் - மீண்டும் முதலிலிருந்தே தொடங்குங்கள்.
தனியாரிடமிருந்து மது விற்பனையை அரசு தனதாக்கிக் கொண்ட போதும், கல்வி மற்றும் சுகாதாரத்தைத் தன்னிடமிருந்து தனியாருக்குத் தாரை வார்த்த போதும் வாயையும், மற்ற எல்லாவற்றையும் சேர்த்துப் பொத்திக் கொண்ட நீங்கள், இன்று  'நீட்'டும் 'கேட்'டும் கொண்டு வந்து உங்களை நீங்களே தரப்படுத்திக் கொள்வதாகச் சாதிக்கப் பார்க்கிறீர்கள். உங்களைப்  பொறுத்தவரையில் உங்கள் பிள்ளைகள் பல லட்சங்களைச் செலவழித்தாவது, சில லகரங்களில் சம்பாதிக்க வேண்டும். ஒரே முதலீடு, ஒய்யார வாழ்க்கை.
உங்களைப் போல் தான் இந்த அரசும் கல்வியை லாபகரமற்ற தொழிலாகக் கைநெகிழ்ந்தது. எந்தக் கல்வி ஆலோசகராலும் கல்வியைப் பிற்காலத்திய முதலீடு என உணர வைக்க முடியவில்லை. இன்ஸ்டன்ட் உலகில் கல்வியின் பலனும் இன்ஸ்டன்ட்டாக எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் கண்மூடித்தனமான ஒரு பதிலை எதிர்பார்ப்பீர்களானால் இதோ -
எல்லா அரசு ஊழியரையும் - MP, MLA-க்களின் மகன், மகள், பெயரன், பெயர்த்தி உட்பட - அரசுப் பள்ளிக்கு அனுப்ப சட்டமியற்றுங்கள்.
எல்லாப் பள்ளிகளையும் அரசுப் பள்ளிகளாக்கச் சட்டமியற்றுங்கள்.
அரசுப் பள்ளியினருக்கே அரசுக் கல்லூரிகளும் எனச் சட்டமியற்றுங்கள்.
அருகமைப் பள்ளிச் சட்டமியற்றுங்கள்.
கற்பித்தல் ஒன்றே ஆசிரியர் பணி என்றாக்குங்கள்.
அனைத்துப் பள்ளிகளையும் முதலில் தாய் மொழி வழிப்படுத்துங்கள்.
இதையெல்லாம் உங்களால் செய்ய முடியாது. காரணம் உங்களுக்கு குமாரசாமி போன்ற கணித மேதாவிகள் வேண்டும்; அம்பானிக்கு 500 ரூபாய் தண்டக் கட்டணம் வசூலிக்கும் நீதியரசர்கள் வேண்டும். எனவே அதுகாறும் எங்களாலும் அது முடியாது.
கடைசியா ஒண்ணு. ஆமா, அது என்ன - ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு - எனத் தனித்துப் பிரித்து பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகின்றதே. ஏன் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் இல்லையா? இல்லை அரசு ஊழியர்கள் என அழைக்கப்படத் தகுதியற்றவர்களா?
லாபக் கணக்கு பார்க்கும் உங்கள் மூளைகளைக் கொஞ்சம் சலவை செய்யுங்கள். கல்வி - வாழ்க்கைக்காக, சம்பாதிக்க அல்ல. நாங்கள் வாழக் கற்றுக் கொடுக்கிறோம், சம்பாதிக்க அல்ல. வாருங்கள், வேண்டுமானால் உங்களுக்கும் வாழக் கற்றுத் தருகிறோம்.

தொ.மைக்கிள் ஆன்றிலின்,
பட்டதாரி ஆசிரியர்,
அரசு மேல்நிலைப் பள்ளி,
தோவாளை.

பாகற்காய் சாப்பிடுவது உண்மையில் ஆரோக்கியமானதா?

                                      à®ªà®¾à®•à®±à¯à®•à®¾à®¯à¯ சாப்பிடுவது உண்மையில் ஆரோக்கியமானதா?பாகற்காய் நன்மைகளை மட்டும்தான் வழங்குகிறதா என்ற கேள்வி எழும்போது அதற்கு இல்லை என்பதுதான் பதில். ஏனெனில் பாகற்காய் சாப்பிடுவது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.
பாகற்காய் சாப்பிடுவது உண்மையில் ஆரோக்கியமானதா
நமது அன்றாட உணவில் மிக அரிதாக சேர்க்கும் ஒரு காய் என்றால் அது பாகற்காய்தான். குறிப்பாக இது சர்க்கரை நோய்க்கு எதிராக எப்படி செயல்படக்கூடியது என்பதை நாம் நன்கு அறிவோம். சர்க்கரை நோய் மட்டுமின்றி இது எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. இருப்பினும் நாம் இதை தவிர்க்க காரணம் அதன் கசப்பு சுவைதான்.


பாகற்காய் நன்மைகளை மட்டும்தான் வழங்குகிறதா என்ற கேள்வி எழும்போது அதற்கு இல்லை என்பதுதான் பதிலாக அமைகிறது. ஏனெனில் பாகற்காய் சாப்பிடுவது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பாகற்காய் சாப்பிடுவது என்னென்ன பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை பார்க்கலாம்.
கர்ப்பிணி பெண்கள் பாகற்காய் சாப்பிடக்கூடாது என்பது பொதுவாக நிலவி வரும் கருத்து ஆகும். இது 100 சதவீத உண்மையான கருத்தாகும். அதிகளவு பாகற்காய் சாப்பிடுவது கர்ப்பிணி பெண்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் கசப்பு சுவை சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தும், பொதுவாகவே கசப்பு சுவை உள்ள காய்கறிகளை கர்ப்ப காலத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. பாகற்காய் அதிகம் சாப்பிடுவது கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவை கூட ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

பாகற்காய் போன்ற காய்கறிகள் சாப்பிடுவது சில மருந்துகளால் உங்கள் உடலில் ஏற்படும் சில மாற்றங்களை தடுக்கும். மாத்திரைகளுடன் சேர்த்து பாகற்காயை சாப்பிடும்போது அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மிகவும் பாதிக்கும். இதனால் சர்க்கரையின் அளவு மிகவும் குறைய வாய்ப்புள்ளது, இதனால் அடிக்கடி மயக்கம் கூட ஏற்படலாம். ஏற்கனவே சர்க்கரை நோய்க்காக மருந்து சாப்பிடுபவர்கள் பாகற்காய் சாப்பிடும் முன் மருத்துவர்களுடன் ஆலோசிப்பது நல்லது.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆண்களுக்கு பாகற்காய் சாறு குடிக்க கொடுத்து சோதனை செய்யப்பட்டது. பாகற்காய் சாறு குடிக்கும் முன் சீராக இருந்த இதய துடிப்பு பாகற்காய் சாறு குடித்தபின் சீரற்றதாக மாறுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதய துடிப்பில் மாற்றம் ஏற்படும்போது அது இதயத்தில் ஆங்காங்கே இரத்தம் உறைதல் ஏற்படலாம். இதனால் மாரடைப்பு கூட ஏற்படலாம்.

கல்லீரலுக்கும், பாகற்காய்க்கும் எப்பொழுதும் ஒத்துவராது, அதற்கு ஆதாரங்களும் உள்ளது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்காக பாகற்காயை தொடர்ந்து சாப்பிடுவது கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தும். பாகற்காய் சாப்பிடுவது நேரடியாக கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் தொடர்ந்து பாகற்காய் சாப்பிடுவது உங்கள் தமனிகளை கடினமாக்கும் ஆர்தேரொக்ளோரோஸிஸ் நோயை உருவாக்கும் என்சைம்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. 

SPD - அனைத்து பள்ளிகளிலும் பிரதி மாத கடைசி வெள்ளிக்கிழமை பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்த மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.:



உடல் உறுப்பு தானம் : 4-வது முறையாக விருதை தக்க வைத்தது தமிழகம் :

மத்திய சுகாதாரத்துறை சார்பில் 9-வது உடல் உறுப்பு தான விழா டெல்லியில் நடந்தது. இந்த விழாவில் நாட்டிலேயே உடல் உறுப்பு மற்றும் திசு தானத்தில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழகத்துக்கு விருது வழங்கப்பட்டது. மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர்கள் அஸ்வினி குமார், அனுப்பிரியா பட்டேல் ஆகியோர் வழங்கிய இந்த விருதை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், உடல் உறுப்பு தானம் பெற பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கையை குறைப்பதே தமிழக அரசின் இலக்கு எனக் கூறினார்.

அண்ணா பல்கலை. தரவரிசைப்பட்டியல்: சென்னை பொறியியல் கல்லூரிகளுக்கே முதல் பத்து இடங்கள் :

                                          



அண்னா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தரவரிசைப்பட்டியலில் சென்னை கல்லூரிகள் முதன்மையான இடங்களை பிடித்து அசத்தியுள்ளன.
தமிழகத்தில் சிறந்த பொறியியல் படிப்பை வழங்கும் கல்லூரிகள் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தரவரிசைப்பட்டியலில், முதல் பத்து இடங்களை சென்னையை சேர்ந்த கல்லூரிகள் பிடித்து சாதனை படைத்துள்ளன.

இந்தாண்டு, இந்த கல்லூரி மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்கல் உள்ளிட்ட நான்கு பாட பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளது. மேலும், பல்கலைக்கழகத்தின் தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தை தொடர்ந்து 5வது முறையாக இந்த கல்லூரி தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய சாய் ராம் கல்வி குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் சாய் பிரகாஷ் லியோ முத்து, மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கிடையே நிலவும் புரிதல் தான் தங்களது கல்லூரியின் வெற்றிக்கு காரணம் என தெரிவித்தார்.
மற்ற மாவட்டங்களில் இருக்கும் கல்லூரிகள் ஏன் அண்ணா பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் முதன்மையான இடங்களை பெற முடியவில்லை என்பது தொடர்பாக ஈரோட்டை சேர்ந்த கல்வி ஆர்வலர் மூர்த்தி செல்வகுமரன் பேசினார். பிளஸ் 2 படிப்பில் அதிக மதிப்பெண்கள் வாங்குவோர் சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரிகளை தான் தேர்வு செய்கின்றனர். சென்னையை சுற்றி பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் இருப்பது தான் இதற்கு காரணம். மேலும் ஜிஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு அமல்படுத்தபப்ட்ட பிறகு, பிளேஸ்மென்ட் உள்ளிட்ட பணியிடங்கள் மற்ற மாவட்ட கல்லூரிகளுக்கு வருவது குறைந்துவிட்டது. எனினும், சென்னை கல்லூரிகளில் இந்த வாய்ப்பு தொடர்ந்து இருந்து வருகிறது. இதன் காரணமாகவும், தமிழக மாணவர்கள் பலர் சென்னை கல்லூரிகளில் படிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் படிப்பு முடிந்த உடன் வேலை மற்றும் அரசின் கல்வி திட்ட உதவிகள் போன்ற வாய்ப்புகளை அவர்களால் எளிதாக பயன்படுத்திக் கொள்ள முடிகிறது என்று அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பெயரிடவிரும்பாத திருச்சியை சேர்ந்த பேராசிரியர் ஒருவர்; திருச்சி, கோயம்புத்தூர் என மாநிலத்தின் மற்ற முதன்மையான நகரங்களில் படிக்கும் பொறியியல் மாணவர்களின் தேர்வு தாள்கள், சென்னை பொறியியல் கல்லூரிகளில் வைத்து தான் திருத்தப்படுகின்றன. சென்னையை ஒப்பிடும் போது மற்ற நகரங்களில் இருக்கும் பெரும்பாலான பேரசியர்களின் கல்வி அறிவு மிகவும் குறைவு தான். இதுவும் மற்ற மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுக்க காரணம் என்று கூறினார்.

எனினும், கோயம்புத்தூரை சேர்ந்த பிஎஸ்ஜி மற்றும் குமரகுரு கல்வி நிறுவனங்கள்
தன்னாட்சி பெற்றவை என்பதால் அண்ணா பல்கலைக்கழகத்தின் தரவரிசைப் பட்டியலில் இடம்பெறவில்லை. யுஜிசி-யின் கட்டமைப்புப்படி அந்த கல்வி நிறுவனங்கள் தங்களுக்கான தேர்வுகள் உள்ளிட்ட செயல்பாடுகளை நடத்தி வருகின்றன

உடலை பத்திரமாக கவனித்துக் கொள்ளும் ஸ்மார்ட் உடைகள்!

உடல்நிலையைக் கண்காணிக்கும் திறன் கொண்ட ஸ்மார்ட் உடைகளை வடிவமைக்கும் தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

அமெரிக்காவில் மான்செஸ்டர் அம்ஹெர்ட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உடைகளில் மின் சக்தியைச் சேமிக்கும் நவீன முறையின் உதவியுடன் ஸ்மார்ட் உடைகளை வடிவமைப்பது பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டர்.
அவர்களது ஆராய்ச்சி முடிவுகளை ஆய்விதழ் ஒன்றில் வெளியிட்டுள்ளனர். அந்த அதில், மைக்ரோ-சூப்பர் மின்தேக்கிகளை பயன்படுத்தி, காப்பிடப்பட்ட நூலினால் நெய்யப்பட்ட ஸ்மார்ட் உடைகள் மூலம் அதனை அணிபவரின் உடல்நிலையைக் கண்காணிக்க முடியும் எனக் கூறியுள்ளனர். 

இது போன்ற ஸ்மார்ட் உடைகளை வடிவமைப்பதற்கான ஆராய்ச்சி நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது என்றாலும், பயோ சென்சார்களை இயக்க பேட்டரியைப் புகுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பேட்டரியின் எடை காரணமாக அதனை அணிந்துகொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்தப் பிரச்னையை முறியடிக்கும் விதமாக அவர்களது ஆராய்ச்சி அமைகிறது.