யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/5/18

FLASH NEWS - தூத்துக்குடி ஆட்சியர் SSA கூடுதல் இயக்குனராக நியமனம் - தமிழக அரசு உத்தரவு

தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷை அனைவருக்கும் கல்வி திட்ட கூடுதல் இயக்குனராக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு. SSA (SAMAGRA SIKSHA ABHIYAN) SSA + RMSA இணைத்து உருவாக்கப்பட்டுள்ள புதிய திட்டமாகும்

`அரசுப் பள்ளிகளை மூடுவது தனியாருக்குச் சாதகம்!' - கொதிக்கும் கல்வியாளர்கள்

தமிழகத்தில் உள்ள 836 அரசுப் பள்ளிகள் மூடப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. `தனியார் பள்ளிகளின் நலனுக்காகவே இப்படியொரு நடவடிக்கையை அரசு மேற்கொள்ள உள்ளது' எனக் கொதிக்கின்றனர் கல்வியாளர்கள்.


 தமிழகத்தில் மொத்தம் 44, 214 பள்ளிகள் உள்ளன. மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்க, தமிழக அரசு சார்பில் மத்திய உணவுத் திட்டம், சீருடைகள், புத்தகங்கள் காலணிகள் உள்ளிட்ட பல இலவச நலத்திட்டங்கள் நடைமுறையில் செயல்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும், அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் உயர்ந்ததாகத் தெரியவில்லை. இதனால், 10-க்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் அரசு தொடக்கப்பள்ளிகளை மூடிவிடலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நேற்று கல்வி அலுவலர்கள் கூடி ஆலோசித்தனர் என்ற தகவல் வெளியாகியது.

இது குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம், ``தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களின் வருகை குறைந்துள்ளதுக்கான காரணம் என்ன? முறையான கட்டமைப்பு வசதி பள்ளிகளில் இருக்கிறதா? சத்துணவுத் திட்டம் சரியாகச் செயல்படுகிறதா ? மாணவர்களுக்குப் போதிய பாதுகாப்பு உள்ளதா? பெற்றோர்கள் மத்தியில் அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? கழிப்பறை வசதி பள்ளிகளில் உள்ளனவா? இவை, எதையும் பள்ளிக் கல்வித்துறை கவலைப்படவில்லை. அதற்கான ஆய்வு நடவடிக்கைகளைத் தொடரவில்லை. ஆனால், 10-க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் அரசு தொடக்கப்பள்ளிகளை மூடுவது குறித்து பள்ளிக் கல்வித்துறை பரிசீலனை செய்து வருகிறது. இவ்வாறான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கையில் ஒன்றுக்குப் பலமுறை யோசித்து முடிவெடுக்க வேண்டும்'' என்றார்.

இதனையடுத்து, தமிழ்நாடு பெற்றோர் மாணவர் நலச் சங்க மாநிலத் தலைவர் அருமைநாதனிடம் பேசினோம். `தமிழக அரசின் இந்த நடவடிக்கை தனியார் பள்ளிகளுக்குச் சாதகமாக எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையானது 45 சதவிகிதம் குறைந்துள்ளது. மேலும் பல பகுதிகளில் ஒரு அரசுப் பள்ளியைச் சுற்றி ஐந்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அரசுப் பள்ளிகளின் கல்வித்தரங்களை உயர்த்தும் நடவடிக்கையில் அரசு ஈடுபடவில்லை. ஆர்வமும் காட்டவில்லை. இதனால், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அருகிலிருக்கும் தனியார் பள்ளிகளில் சேர்க்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அதுமட்டுமல்லாமல், தனியார் பள்ளிகள் வசூலிக்கும் அதிகக் கல்விக் கட்டணத்தால் அவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தமிழக அரசு மறைமுகமாகக் கல்வியைத் தனியாரிடம் ஒப்படைத்து வருகிறது. தனியார்ப் பள்ளிகளை ஊக்குவித்தும் வருகிறது'' என்றார்.

``அரசின் இந்த நடவடிக்கை ஆசிரியர்களையும் பாதிக்கும்'' என்கிறார் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத் துணைப்பொதுச் செயலாளர் க.சாந்தகுமார். இது குறித்து அவர் பேசுகையில், ``தனியார்ப் பள்ளிகளில், 25 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் சேர்க்கப்படுகின்றனர். இந்த ஒதுக்கீட்டின் கீழ் பெரும்பாலும் அரசுப் பள்ளி மாணவர்கள்தாம் விண்ணப்பிக்கின்றனர். சுமார் ஒரு லட்சத்து முப்பத்து இரண்டாயிரம் அரசுப் பள்ளி மாணவர்கள் தற்போது தனியார் பள்ளிகளுக்குப் படிக்கச் சென்றுவிட்டனர். இதனால், 4,400-க்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் தமிழகத்தில் காலியாக இருக்கின்றது. எனவே, தமிழக அரசு கல்வியைத் தனியார் மயமாக்கி வருகிறது'' என்றார்.

இது தொடர்பாக பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளிடம் பேசினோம், ``தமிழக அரசின் இயக்குநரகம் கட்டுப்பாட்டில் அரசுப் பள்ளிகள் - 629 மாநகராட்சிப் பள்ளிகள் - 436, நகராட்சிப் பள்ளிகள் - 839 மற்றும் நர்ஸரி மற்றும் பிரைமரிப் பள்ளிகள் - 6308, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசு நலத்துறைப் பள்ளிகள் எனத் தமிழகத்தில் மொத்தம் 44, 214 பள்ளிகள்உள்ளன. இதில், பத்துக்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் தொடக்கப்பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இங்கு வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்குச் சம்பளமாக லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கப்படுகிறது. இதனால்தான் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை அருகில் உள்ள பள்ளிகளோடு இணைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். தற்போதைய சூழலில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு அரசுப் பள்ளி செயல்படுகிறது. இதனால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மேலும், கடந்த கல்வி ஆண்டிலும் அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படுகின்றன. இதனால் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு கல்வி ஆண்டும் அதிகரித்துத்தான் வருகின்றன. இதனை இன்னும் அதிகரிக்கவே கணக்கெடுப்பு நடத்தப்பட்டது'' என்றார். பள்ளிகள் மூடப்படுவதாக வெளியான தகவலை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுத்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர், `அரசு தொடக்கப் பள்ளிகளை மூடும் எண்ணமில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

1,6,9,11 வகுப்புக்கான புதிய பாடப்புத்தகங்கள் இணையதளத்தில் தற்போது வெளியீடு செய்யவில்லை. மே 31 அன்று வெளியிடப்படும்.

ஆபத்தில் 900க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள்: என்ன சொல்கிறது அரசு?

மாணவர் எண்ணிக்கையைக் காரணம் காட்டி 900க்கும் மேற்பட்ட அரசுத் தொடக்கப் பள்ளிகளை தமிழக அரசு மூட இருப்பதாக வெளியான ஒரு தகவல் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1-ம் தேதி நிலவரப்படி உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்வது குறித்த அரசாணைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யும் போது அவ்வப்போது வெளியிடப்பட்ட அரசாணைகள், குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்விச் சட்டம் 2009-ல் வகுக்கப்பட்ட நெறிமுறைகள் மனிதவள மேம்பாட்டுத் துறையின் வழிகாட்டுதல்கள் ஆகிய அனைத்தையும் பரிசீலித்து தற்போதைய நிலையில் மாணவர்களின் கல்வித் தரத்தையும், கற்பித்தலை மேம்படுத்துவது குறித்தும் கருத்தில் கொண்டு ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்திட வேண்டும்.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள பிரிவுகளுக்கு 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும், 60 மாணவர்கள் வரையில் 2 ஆசிரியர்களும், 61 முதல் 90 மாணவர்கள் இருந்தால் 3 ஆசிரியர்களும், 91 முதல் 120 மாணவர்கள் இருந்தால் 4 ஆசிரியர்களும் இதேபோன்று ஒவ்வொரு 30 மாணவர்களுக்கும் ஒரு ஆசிரியர் கூடுதலாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 அடிப்படையில் நடுநிலைப்பள்ளிகளில் அதாவது 6 முதல் 8-ம் வகுப்பு வரையில் குறைந்தபட்சம் 3 ஆசிரியர் பணியிடங்களை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
தமிழகத்தில் 37,211 அரசுப் பள்ளிகளும், 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 12,419 தனியார் சுயநிதி பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இவற்றில் ஒரு கோடியே 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயில்கின்றனர்.
தொடக்கக் கல்வித்துறையின் கீழ் 529 அரசுப் பள்ளிகளும், 436 மாநகராட்சிப் பள்ளிகளும், 839 நகராட்சிப் பள்ளிகளும், 6,589 நிதி உதவிபெறும் பள்ளிகளும், 28 ஆயிரத்து 42 ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளும்,1471 நலத்துறைப் பள்ளிகளும், 6,308 நர்சரி பிரைமரிப் பள்ளிகளும் உள்ளன. இந்தப் பள்ளிகளில் 36 லட்சத்து 99 ஆயிரத்து 826 மாணவர்கள் படிக்கின்றனர்.
ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் 18 லட்சத்து 32 ஆயிரத்து 403 மாணவர்கள் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலும் படிக்கின்றனர். நர்சரி பிரைமரிப் பள்ளிகளில் 8 லட்சத்து 2 ஆயிரத்து 639 மாணவர்கள் படிக்கின்றனர்.
அவற்றிலும் குறிப்பாக ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 1-ம் வகுப்பில் 2 லட்சத்து 81 ஆயிரத்து 621 மாணவர்களும், 2-ம் வகுப்பில் 2 லட்சத்து 74 ஆயிரத்து 332 மாணவர்களும், 3-ம் வகுப்பில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 997 மாணவர்களும், 4-ம் வகுப்பில் 3 லட்சத்து 25ஆயிரத்து 699 மாணவர்களும், 5-ம் வகுப்பில் 3 லட்சத்து 24 ஆயிரத்து 82 மாணவர்களும் படித்து வருகின்றனர்.
ஆனால் அதேநேரத்தில் நர்சரி பிரைமரி பள்ளிகளில் 1-ம் வகுப்பில் 2 லட்சத்து 167 மாணவர்களும், 2-ம் வகுப்பில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 962 மாணவர்களும், 3-ம் வகுப்பில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 330 மாணவர்களும், 4-ம் வகுப்பில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 776 மாணவர்களும், 5-ம் வகுப்பில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 135 மாணர்களும் படித்து வருகின்றனர் என தொடக்கக் கல்வித்துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அரசுப் பள்ளிகளில், நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின்படி மாணவர்கள் எண்ணிக்கை குறித்த விவரங்களையும், மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளின் எண்ணிக்கையையும் கணக்கெடுக்க பள்ளிக்கல்வித்துறை அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து, மாணவர் சேர்க்கை குறைந்த பள்ளிகளின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு மாணவர் கூட இல்லாமல் 29 தொடக்கப்பள்ளிகள் உள்ளன. 892 தொடக்கப் பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்கள் இருக்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டது. இந்தப் பள்ளிகளில் பெரும்பாலும் தலைமை ஆசிரியர் மட்மே பணியாற்றி வருகிறார். ஒரு சில பள்ளிகளில் மட்டும் ஒரு தலைமை ஆசிரியரும், ஒரு இடைநிலை ஆசிரியரும் பணியாற்றி வருகின்றனர்.
இதனால் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளை மூடும் முடிவில் தமிழக அரசு இருப்பதாகவும் செய்தி வெளியானது. அந்தப் பள்ளி மாணவர்களை அருகிலுள்ள பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க முடுவெடுத்திருப்பதாகவும் சொல்லப்பட்டது.
இதுபோன்ற மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளை அருகில் உள்ள அரசுப் பள்ளியுடன் இணைப்பதற்கான நடவடிக்கையை பள்ளிக்கல்வித்துறையின் அறிவுறுத்தலின் படி தொடக்கக் கல்வித்துறை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியானது. வேறு பள்ளியுடன் இணைக்கும் போது அந்தப் பள்ளியின் மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தருவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவதற்கு முக்கியக் காரணம் அங்கு போதுமான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது ஆகும். மாணவர்கள் தங்களின் பிள்ளைகள் ஆங்கிலத்தில் பேசுவதை விரும்புகின்றனர் என அரசு காரணம் கூறினாலும், கிராமப்புறங்களில் உள்ள எந்த தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் சரளமாக ஆங்கிலம் பேசுவது கிடையாது என்பதுதான் உண்மை.
இந்த சூழலில் நாம் இன்னொன்றையும் கூர்ந்து கவனிக்க வேண்டியதாக இருக்கிறது.
தமிழகத்தில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அனைத்துப் பள்ளிகளிலும் ஆரம்ப வகுப்பில் 25 சதவீதம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். அதன்படி, 2013- 14 ஆம் கல்வி ஆண்டில் 49,864 மாணவர்களும், 2014-15 ஆம் கல்வி ஆண்டில் 86,729 மாணவர்களும், 2015-16 ஆம் கல்வியாண்டில் 94,811 மாணவர்களும், 2016-17 ஆம் கல்வியாண்டில் 98,474 மாணவர்களும், 2017-18 ஆம் கல்வியாண்டில் 90,607 மாணவர்களும் படித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது 2018- 19 ஆம் கல்வியாண்டில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்காக 1,32,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
2013-14 முதல் 2016- 17 ஆம் கல்வியாண்டு வரை இலவச கட்டாய கல்விச்சட்டத்தின் 25% இட ஒதுக்கீட்டின் சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணத் தொகை ரூ.401.98 கோடி மாநில அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 900க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளை அருகில் உள்ள பள்ளியுடன் இணைப்பதை தவிர்த்து, இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்திற்கு அளிக்கும் நிதியைக் கொண்டோ அல்லது அரசுப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த அதிக நிதியையோ பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கலாம் என்று கல்வி ஆர்வலர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.
அரசுப் பள்ளிகளை மூடும் நோக்கம் இல்லை: செங்கோட்டையன்
''அரசுப் பள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை. அனைத்துப் பள்ளிகளும் இயங்கும். தற்போது பள்ளிகளில் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் இலவச சீருடைகள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் மூலம் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்'' என்கிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.
அரசின் நோக்கம் சரியானதுதான். ஆனால், அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதும், நர்சரி பிரைமரிப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதையும் அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். மாணவர் சேர்க்கை குறைவதற்கான காரணங்களை ஆய்வு செய்து கண்டறிய வேண்டும். அரசுப் பள்ளிகளில் கூடுதலாக எப்படி மாணவர்களைச் சேர்ப்பது, எண்ணிக்கை குறையாமல் இருப்பதற்கு எப்படி வழி வகை செய்யலாம் என்பதை அரசு பரிசீலிக்க வேண்டியது அவசியம்.a