யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

1/2/18

பள்ளி கல்வியின் திட்டங்களுக்கு ரூபாய் 4,000 கோடி நிதி பெற முடிவு

பள்ளிக்கல்வி தரத்தை உயர்த்தும் வகையிலான, கவர்ச்சி திட்டங்கள் உள்ளதால், பட்ஜெட்டில் கூடுதலாக, 4,000 கோடி ரூபாய் கேட்டு பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில், பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தை தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை, அமைச்சர் செங்கோட்டையன் தீவிரப்படுத்தி உள்ளார். புதிய பாடத்திட்டப்படி, தரமான புத்தகங்கள் தயாரிப்பது, சி.பி.எஸ்.இ.,க்கு இணையான பாடத்திட்ட அம்சங்களை, புத்தகங்களில் இடம் பெற செய்வது போன்ற, பணிகள் நடந்து வருகின்றன.

பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகளை வெளியிடுவது; புதிய கல்வி ஆண்டில் அமல்படுத்த வேண்டிய திட்டங்கள் என்ன என்பது குறித்தும், நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது. அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று, துறையின் செயல்பாடுகளை கேட்டறிந்தார்.

முதன்மை செயலர், பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன், தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி, மெட்ரிக் இயக்குனர், கண்ணப்பன், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர், ராமேஸ்வர முருகன் உட்பட, பல அதிகாரிகள் பங்கேற்றனர்.

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஆன்லைனில் மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் முறையை, ஆன்லைனுக்கு மாற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 'ஸ்மார்ட்' வகுப்பு திட்டத்துக்கு, மத்திய அரசிடம் கூடுதல் நிதி பெறுதல், பள்ளிகளில் பயோமெட்ரிக் திட்டத்தை விரிவுபடுத்துவது என, பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன.

ஏற்கனவே, 26 ஆயிரம் கோடி ரூபாய், பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிலையில், பாடத்திட்ட மாற்றம் உட்பட, புதிய திட்டங்கள் உள்ளதால், 30 ஆயிரம் கோடி வரை, நிதி ஒதுக்கீட்டை உயர்த்தி கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது

100 சதவீத தேர்ச்சி பெற மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் கொடுத்து அனுப்பினால் நடவடிக்கை

தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பிளஸ்-1 வகுப்புக்கு இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ளது.

சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகத்தில் இயக்குனர் எஸ்.கண்ணப்பன் தலைமையில் மாவட்ட மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூட ஆய்வாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் இயக்குனர் எஸ்.கண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மார்ச் மாதம் தொடங்க உள்ள எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகளை வழக்கம்போல நேர்மையான முறையில் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கண்காணிக்க வேண்டும்.

மாற்றுச்சான்றிதழ்

சில மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி பெறவேண்டும் என்ற நோக்கத்தில் தேர்வில் தோல்வி அடையும் நிலையில் உள்ள சரியாக படிக்காத மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் (டி.சி.) கொடுத்து அனுப்புவது வழக்கமாக உள்ளது. அந்த மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்த்து விடுவார்கள் அல்லது தனித்தேர்வர்களாக தேர்வு எழுதுவார்கள்.

அவ்வாறு மாற்றுச்சான்றிதழ் கொடுக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் ஆய்வாளர்கள் கண்காணிக்க வேண்டும். எந்த பள்ளியிலாவது அப்படி மாற்று சான்றிதழ் கொடுத்தால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவ-மாணவிகளுக்கு மனஉளைச்சல் ஏற்பட்டால் அவர்களுக்கு பயிற்சி அளிக்க முதலில் ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்படும்.

இவ்வாறு இயக்குனர் எஸ்.கண்ணப்பன் கூறினார். 

போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் : ஊழியர்கள் கொந்தளிப்பு

ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களின் 8 நாட்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஜனவரி 4-ம் தேதி முதல் 11-ம் தேதி வரையிலான சம்பளம் பிடித்து போக்குவரத்து கழகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியளித்திருந்த நிலையில் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக சம்பள உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி 4-ம் மாலை முதல் ஜனவரி 11-ம் தேதி வரை போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னறிவிப்பு இல்லாமல் தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு நோட்டீஸும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், உயர்நீதிமன்றம் தலையிட்டு, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து போராட்டம் திரும்பப்பெறப்பட்டது. அப்போது, போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்திய 8 நாட்களுக்கான ஊதியம் பிடித்தம் செய்யக் கூடாது என்று நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில், போக்குவரத்து ஊழியர்களின் ஊதியத்தில் 8 நாட்களுக்கான ஊதியம் விடுப்பு எடுத்ததாகக் கூறி பிடித்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருப்பது போக்குவரத்து ஊழியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிளஸ் 2 ரிசல்ட் தேதி அறிவிப்பு; தேர்தல் பணியால் ஆசிரியர்கள் அதிர்ச்சி

பிளஸ் 2 தேர்வு வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பணி சுமையாலும், தேர்தலுக்கு அடுத்த நாள் பிளஸ்2 ரிசல்ட் என்பதாலும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வு நடந்தது. பிளஸ் 2 விடைத்தாள்கள் முழுமையாக திருத்தப்பட்டு விட்டது. தனித்தனியே மார்க் போடுதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவு பெற்று விட்டன. எந்த நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட, பள்ளி கல்வி துறை தயாராகவே உள்ளது. 


தேர்வு முடிவுகளை, அ.தி.மு.க., தன் தேர்தல் பிரச்சாரத்துக்கு எடுத்து கொள்ள கூடும். அதிக சதவீத மாணவ, மாணவியர் வெற்றி பெறுதல், அதிக மதிப்பெண் பெறுதல் போன்றவற்றை, தன் அரசின் சாதனைகளாக கூறி பிரச்சாரம் செய்ய வாய்ப்பு உள்ளது. 

எனவே தேர்தலுக்கு பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளி கல்வி துறையினர் கூறி வந்தனர். இந்நிலையில் நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள், வரும் 17 ம் தேதி வெளியாகும்; எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகள், வரும், 25ம் தேதி வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள், வரும் 17 ம் தேதி அறிவிக்கப்படும் என்ற அறிவிப்பால் பள்ளி ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். 

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: 

வரும், 16ம் தேதி தான், தமிழக சட்டசபைக்கான தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. தான் சார்ந்த தொகுதியில் ஆசிரியர்கள் இருக்க கூடாது என விதிமுறை உள்ளது. எனவே, தேர்தல் அதிகாரிகள் ஆசிரியர்களை வெவ்வேறு பகுதிக்கு, தேர்தல் பணிக்கு அனுப்பி வைத்து விடுவர். தேர்தல் முடிந்த பின், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பொருட்களை, சம்பந்தப்பட்ட பொறுப்பு அதிகாரிகள், ஓட்டு சாவடி மையங்களுக்கு வந்து பெற்று கொள்ளும் வரை, ஆசிரியர்கள் அந்தந்த மையங்களிலேயே இருக்க வேண்டும். 

அதன் பின்னரே வீட்டுக்கு கிளம்பி செல்ல முடியும். நள்ளிரவு அல்லது அதிகாலையில் தான் ஆசிரியர்கள், வீட்டுக்கு செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. தேர்வு முடிவுகளை பெற சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள், வகுப்பு மற்றும் பாடப்பிரிவு ஆசிரியர்கள், சி.இ.ஓ. அலுவலகத்துக்கு காலை, 8 மணிக்குள் வர வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்படும். முதல் நாள், தேர்தல் பணியை விடிய, விடிய மேற்கொண்ட நிலையில், மறுநாள் எவ்வாறு தேர்வு முடிவுகளுக்கான பணியை மேற்கொள்ள முடியும். 

எனவே, பள்ளி கல்வி துறை தேர்வு முடிவுகளுக்கான தேதியை மாற்றி அமைக்க வேண்டும். ஆசிரியர்கள் நிலையை எண்ணி பார்த்து, தேர்வு முடிவு வெளியிடும் தேதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.

தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு நுழைவுதேர்வு கட்டாயம்; சுப்ரீம் கோர்ட்

தனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கையை, தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக கூறியுள்ளது. அதே நேரத்தில் பொது நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து, மத்திய அரசின் கருத்தை சுப்ரீம் கோர்ட் கேட்டுள்ளது.


நாடு முழுவதும் உள்ள, 400க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை, தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு மூலமே நடத்த வேண்டுமென, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்திருந்தது.

இந்த நுழைவுத் தேர்வை இந்த ஆண்டே நடத்த உத்தரவிட வேண்டும் என, தொடரப்பட்ட வழக்கில், மே, 1 மற்றும் ஜூலை, 24ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும், என, சுப்ரீம் கோர்ட் உத்தர விட்டது.

இதனிடையில், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மஹாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்கள், இந்த ஆண்டு மாநில அளவிலான நுழைவுத் தேர்வுகள் மூலமே மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கு அனுமதி கோரி மனு தாக்கல் செய்தன.

தமிழகத்தில் நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. அந்த முறையிலேயே மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்க வேண்டுமென, தமிழக அரசும் மனு தாக்கல் செய்தது.இந்த மனுக்கள் மீது, நீதிபதிகள், ஏ.ஆர்.தவே, சிவகீர்த்தி சிங், ஏ.கே.கோயல் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு விசாரித்து வருகிறது.

நேற்று நடந்த விசாரணைக்குப் பின், சுப்ரீம் கோர்ட் அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ள தாவது: தனியார் மற்றும் நிகர்நிலை மருத்துவக் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கை, தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு மூலமே நடத்தப்படவேண்டும்.

குறிப்பிட்ட சில மாநிலங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள முறைகளிலேயே மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்வது குறித்து, மத்திய அரசு தன் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். மே, 1ல், நடந்த முதல்கட்ட தேர்வை எழுதியவர்கள், ஜூலை, 24ல் நடக்கும் இரண்டாம் கட்டத் தேர்வையும் எழுத அனுமதிப்பது குறித்தும் விளக்க வேண்டும். இவ்வாறு சுப்ரீம் கோர்ட் அமர்வு தன் உத்தரவில் கூறியுள்ளது. வழக்கு விசாரணை, 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தொடரும் குழப்பம்: 

அரசு மருத்துவக் கல்லுாரி களில், 15 சதவீத இடங்களுக்காக, இதுவரை, அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு நடந்து வந்தது.

தமிழகத்தில், பொது நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு, பிளஸ் 2 தேர்வில், மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், தரவரிசை தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்து வந்தது தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு முறை நடத்துவதற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதால், மருத்துவக் கல்லுாரிகளில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டிய நிலைக்கு தமிழக மாணவர்கள்தள்ளப்பட்டிருந்தனர்.

தற்போது, இதற்கு விலக்கு அளிக்க சுப்ரீம் கோர்ட் முன்வந்துள்ளது. அதே நேரத்தில் தனியார் கல்லுாரிகளில் சேர்வதற்கு, நுழைவுத் தேர்வை எழுதியாக வேண்டிய நிலையில் மாணவர்கள் உள்ளனர். போதிய கால அவகாசம் இல்லாததால், தமிழக மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். 

சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடந்த விசாரணையின்போது வழக்கறிஞர்களின் வாதம்:

மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான்: தனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கு தேசிய பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தினால், 50 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இல்லை. இது, மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும்.

சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார்: மருத்துவ நுழைவுத் தேர்வு பிரச்னை தொடர்பாக, இதில் தொடர்புடைய அனைத்து தரப்பினருடன் கலந்தாலோசிக்க, மத்திய அரசு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் தீர்ப்பு அளிக்க வேண்டும். இதன் மூலம் சிக்கல் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

சி.பி.எஸ்.இ., சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த்: முதல் கட்ட நுழைவுத் தேர்வை எழுதியவர்கள், இரண்டாம் கட்டத் தேர்வையும் எழுத அனுமதித்தால், 9.50 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதும் நிலை ஏற்படும்.

அதே நேரத்தில், முதல் கட்டத் தேர்வுக்கு விண்ணப்பித்து, தேர்வு எழுதாத, 40 ஆயிரம் மாணவர்களை மட்டும், இரண்டாம் கட்டத் தேர்வை எழுத அனுமதிக்கலாம். இதனால், நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு போதிய மையங்கள் ஏற்பாடு செய்ய முடியும்.

தேர்வு முடிவில் தாமதம்; ஆசிரியர்கள், பெற்றோர் அதிருப்தி

பிளஸ் 2 தேர்வு முடிவை மே, 17ம் தேதி வெளியிடப்போவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்ச்சி முடிவில் ஏற்பட்ட தாமதத்தால், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடையே அதிருப்தி நிலவுகிறது. 


தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சட்டசபை தேர்தலுக்கு பின், மே, 17ம் தேதி வெளியாகும் என, அரசு அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் தயார் நிலையில் இருந்தும், தாமதமாக வெளியிட, அரசு எடுத்துள்ள முடிவு, ஆசிரியர்களையும், பெற்றோரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: 

பொதுவாக, மே முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியானால், அதன் தொடர்ச்சியான பணிகள், ஒரு வாரம் வரை பள்ளிகளில் நீடிக்கும். அவற்றை முடித்துவிட்டு, கோடை விடுமுறையில், குடும்பத்துடன் வெளியூர் செல்ல திட்டமிடுவது ஆசிரியர்கள் வழக்கம். 

இந்த முறை மே, 16ம் தேதி வரை தேர்தல் பணிகள், 17ம் தேதிக்கு பின் பிளஸ் 2 தேர்வு முடிவு, அதன்பின், 25ம் தேதி, 10ம் வகுப்பு தேர்வு முடிவு, அதன் தொடர்ச்சியான பணிகள் என பார்த்து முடிப்பதற்குள், அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் துவங்கிவிடும். 

மதிப்பீடு அனைத்தும் முடிவடைந்து, தயார் நிலையில் இருந்தும், தேர்வு முடிவு வெளியிட தாமதிப்பது ஏன் என தெரியவில்லை. ஏற்கனவே, இன்ஜினியரிங் மற்றும் கலைக்கல்லூரி விண்ணப்பங்கள் வழங்கப்படும் நிலையில், தேர்வு முடிவு வெளியீடு தாமதம், பெற்றோரையும் ஏமாற்றியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழகத்தில் கவுன்சிலிங் முறையில் மாணவர் சேர்க்கை

தமிழகத்தில் 2016-2017ம் ஆண்டிற்கான மருத்துவப் படிப்புக்கு மாணவர் சேர்க்கையை கலந்தாய்வு மூலம் நடத்த அனுமதிக்கலாம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் ஆக்கப்பூர்வமாக அறிவித்துள்ளது.


தேசிய நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், நுழைவுத்தேர்வு இல்லாமல் கலந்தாய்வு முறையில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்வதற்கு மாநில சட்டப்பேரவையில் தனிச்சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தேசிய நுழைவுத் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என்றும், தனியார் மருத்துவக் கல்லூரிகள் தனியாக நுழைவுத் தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக மாநில அரசுகள் நிறைவேற்றியுள்ள சட்டத்தின்படி மாணவர் சேர்க்கையை நடத்த இந்த ஆண்டு மட்டும் அனுமதிக்கலாமா என்பது குறித்து மத்திய அரசு 6-ம் தேதிக்குள் (இன்று) பதிலளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி இன்று இவ்வழக்கு மீண்டும் விசாணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் இந்த ஆண்டு கலந்தாய்வு மூலம் மருத்துவப் படிப்புக்கு மாணவர்களை சேர்க்கலாம் என்றும், நடப்பாண்டில் பிற மாநில அரசு கல்லூரிகளுக்கு அந்தந்த மாநிலங்கள் நுழைவுத் தேர்வை நடத்தலாம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரை செய்தது.

மேலும், தனியார் மருத்துவ கல்லூரிகள் தேர்வு நடத்த அனுமதிக்கக்கூடாது. அனைத்து மாணவர்களையும் இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வுக்கு அனுமதிக்க முடியாது. மாநில அரசு கல்லூரிகள் தவிர அனைத்து கல்லூரிகளும் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவ கவுன்சில் வழக்கறிஞர் தெரிவித்தார்.

விரைவில் அனைத்து பள்ளிகளிலும் யோகா கட்டாயமாகிறது

அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளிகளிலும் யோகா கட்டாயமாக்கப்பட வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாகவும், இந்த உத்தரவு வரும் கல்வி ஆண்டிலிருந்து அமலுக்கு வர உள்ளதாகவும் மத்திய இணையமைச்சர் ஸ்ரீபத் யாசோ நாயக் தெரிவித்துள்ளார்.


லோக்சபாவில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த நாயக் கூறுகையில், அனைதஅது பள்ளிகளிலும் யோகா கட்டாயமாக்கப்பட வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் சமீபத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. 

வரும் கல்வி ஆண்டு முதலே இந்த புதிய உத்தரவு நடைமுறைக்கு வரலாம். அதே சமயம் யோகா கட்டாயமாக கற்பிக்கப்படாது. மாணவர்கள் விரும்பினால் அதை கற்றுக் கொள்ளலாம். இல்லாவிட்டால், அந்த சமயத்தில் உடற்பயிற்சிகள் அவர்களுக்கு அளிக்கப்படும்.


போலீசார் அனைவருக்கும் யோகா கட்டாயமாக்கப்பட உள்ளது. பாதுகாப்புத்துறை வீரர்களுக்கும் இது கட்டாயமாக்கப்படுவது குறித்த திட்டம் பரிசீலனையில் உள்ளது. போலீஸ் படையினருக்கு வழங்கப்படும் யோகா பயிற்சிக்கு, போலீஸ் யோகா பயிற்சி என பெயரிடப்பட உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 21ம் தேதி முதலாவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. 

இந்தியா மட்டுமின்றி 192 நாடுகளிலும் இது கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு ஜூன் 21ம் தேதியன்று 2வது சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றார்.

பள்ளி வாகனங்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ்

தாராபுரத்தில் நேற்று நடந்த, பள்ளி வாகனங்களுக்கான சோதனை முகாமில், தகுதியற்ற நிலையில் இருந்த, 21 வாகனங்களின் குறைபாடுகளை சரிசெய்ய, நோட்டீஸ் அனுப்பப்பட்டது.


தாராபுரம் வட்டார போக்குவரத்து கழகம் மூலமாக, தாராபுரம், மூலனூர் சுற்றுப்பகுதியில் உள்ள, பள்ளி வாகனங்களுக்கான தகுதி தணிக்கை சோதனை முகாம் நேற்று நடந்தது. மகாராஜா கல்லூரி வளாகத்தில் நடந்த இம்முகாமில், வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்ரமணி தலைமையிலான குழுவினர், வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

மொத்தம், 74 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டதில், 21 வாகனங்களில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை சரி செய்ய அறிவுறுத்தி, நோட்டீஸ் வழங்கப்பட்டது. மீதியுள்ள, 53 வாகனங்களுக்கு, தகுதிச்சான்று வழங்கப்பட்டது. பள்ளி வாகன சோதனை பணியை, கலெக்டர் ஜெயந்தி ஆய்வு செய்தார். தேர்தல் பார்வையாளர் நித்யானந்த மண்டல், ஆர்.டி.ஓ., சரவணமூர்த்தி உடனிருந்தனர்.

ஐ.சி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் 100 சதவீத தேர்ச்சி

கோவை மாவட்டத்தில், ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ் தேர்வில் பங்கேற்ற பள்ளிகள் நடப்பு கல்வியாண்டில், 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது.


ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த பிப்., - மார்ச் மாதங்களில் நடந்தது. இதற்கான தேர்வு முடிவுகள், நேற்று மதியம், 3:00 மணியளவில் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. கோவை மாவட்டத்தில், ஈஷா மற்றும் ஸ்டேன்ஸ் பள்ளிகளை சேர்ந்த 90 மாணவர்கள் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர்.

அவிநாசி ரோட்டில் அமைந்துள்ள ஸ்டேன்ஸ் பள்ளி, இரண்டாவது ஆண்டாக, பத்தாம் வகுப்பு தேர்வை சந்தித்துள்ளது. இதில், 55 மாணவர்களுடன், 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது. ஈஷா பள்ளியில், பத்தாம் வகுப்பு, பிளஸ்2 இருபிரிவு மாணவர்களும், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தனியார் பள்ளியில் 'சீட்' பெற இரவு முழுவதும் காத்திருப்பு

புதிய கல்வியாண்டு துவங்கும் நிலையில், தனியார் பள்ளிகளில், சீட் பெறுவதற்கு, இரவு முழுவதும் கண்விழித்து, பள்ளி வாசலில் தவம் கிடந்து விண்ணப்பம் பெறும் படலம் காஞ்சிபுரத்திலும் துவங்கி உள்ளது.


தமிழகத்தில், 2015 - 16ம் கல்வியாண்டு முடிந்து, அரசு, தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளிலும், 25 சதவீதம் ஏழை குழந்தைகளுக்கு, சீட் வழங்கப்படும். இதற்காக, விண்ணப்பங்களை அந்தந்த பள்ளிகளில் பெறலாம் என, மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன. 

இந்நிலையில், பிரபல தனியார் பள்ளிகளில், தங்கள் குழந்தைகளுக்கு, சீட் வாங்க, இரவு, பகலாக பெற்றோர் காத்திருக்கும் அவல நிலை, காஞ்சிபுரத்தில் காணப்படுகிறது. காஞ்சிபுரம், மாமல்லன் நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், நேற்று காலை, 8:00 மணிக்கு, எல்.கே.ஜி.,க்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டதால், நேற்று முன்தினம் இரவே, பள்ளி முன் பெற்றோர் குவிந்தனர். 

இரவு முழுவதும், பள்ளி வாசலில், வரிசை கட்டி அமர்ந்து, நேற்று விண்ணப்பங்களை பெற்றனர். சென்னை மற்றும் சில நகரங்களில், இதுபோன்ற செய்திகள் கேள்விப்பட்ட நிலையில், காஞ்சிபுரத்திலும் நடந்துள்ளது ஆச்சர்யத்தையும், பெற்றோரின் ஆவலையும் வெளிப்படுத்துகிறது.