யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/2/18

தமிழக அரசுப் பணியிலும் வருகிறது அவுட் சோர்ஸ் முறை... பணிகளை சீரமைக்க முன்னாள் ஐஏஎஸ் தலைமையில் குழு!

சென்னை : தமிழக அரசின் பணியிடங்களில் தேவையற்ற இடங்களை கண்டறிந்து குறைக்க குழு அமைக்க முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆதிசேஷையா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு 6 மாதத்தில் அறிக்கையை தாக்கல் செய்யவும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பணிகளை சீரமைப்பது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் அரசுக்கு வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் பணியிடங்களில் தேவையற்ற இடங்களை கண்டறிய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆதிசேஷையா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நிர்வாகச் செலவுகளை குறைக்கும் வகையில் எந்தெந்த பணிகளை நீக்கலாம் என்று குழு கண்டறிந்து அறிக்கை அளிக்கும். தனியார் நிறுவனம் மூலம் எந்தெந்த பணிகளை மேற்கொள்ளலாம் என்பதையெல்லாமும் ஆய்வு செய்ய குழுவிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அவுட்சோர்ஸ் ஒப்பந்த முறையில் மேற்கொள்ள வேண்டிய பணிகளையும் குழு கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்யும். அரசுப் பணியாளர்களுக்காக செலவுசெய்யப்படும் தேவையற்ற செலவினங்களை குறைக்கும் வகையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தனது ஆய்வு அறிக்கையை 6 மாதத்தில் தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது

தேவையற்ற அரசு பணியிடங்களை குறைக்க குழு அமைப்பு

                                                 

சென்னை: தேவையற்ற அரசு பணியிடங்களை கண்டறிந்து குறைப்பது குறித்து பரிந்துரைக்க அரசு குழு அமைத்துள்ளது. இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
அரசின் செலவுகளை குறைக்கும் முயற்சியாக அரசு பணியிடங்களில் தேவையற்றது என்னென்ன என்பதை கண்டறிய குழு அமைக்கப் பட்டுள்ளது. முன்னாள் முதன்மை செயலாளர் ஆதிசேஷைய்யா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழு தேவையற்ற பணியிடங்களை கண்டறிந்து குறைக்கவும், எந்தெந்த பணியிடங்களை அவுட் சோர்ஸ் ஒப்பந்த முறையில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை தரலாம் என்பது குறித்தும் ஆய்வு செய்து அறிக்கையை 6 மாதத்தில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நடத்த கல்வித்துறை ஏற்பாடு அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் கற்றல் திறன் ஆய்வு

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டில் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என 37,201 அரசு பள்ளிகளும், 8402 அரசு நிதி உதவி பள்ளிகளும் இயங்கி வருகின்றன. 

அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலோருக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களில் கற்றல் திறன் குறைபாடு உள்ளதாக சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரிய வந்தது. குறிப்பாக தமிழ் பாடத்தை படிக்கவும், எழுதவும் தெரியாமல் மாணவர்கள் திணறி வருகின்றனர்.

மொழி இலக்கணம் குறித்து எவ்வித புரிதலும் இல்லாமல் தேர்வுக்காக மட்டுமே படிக்கும் சூழல் மாணவர்களிடம் காணப்படுகிறது. இதனால் தேர்வில் தோல்வியை சந்திப்பது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.

இந்நிலையில், அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்த்த அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த புதிய செயல்வடிவ திட்ட பாடங்களை கற்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி மாணவர்களின் திறனை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கென தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதி உதவி நடுநிலைப்பள்ளிகளில் பள்ளிக்கல்வி இயக்குநரக உயரதிகாரிகள் குழுவினர் இம்மாதம் 27ம் தேதி ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு எளிமையான செயல் திறன் பாடத்திட்டம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களின் அடிப்படையை விரிவாக எடுத்துக் கூறி அவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. 100 மதிப்பெண்களில் 60 மதிப்பெண்கள் தேர்வு மூலமாகவும் 40 மதிப்பெண்கள் கற்றல் திறன், பொது அறிவு மற்றும் தனித்திறமைகள் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும். 

அதன்படி நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கற்கும் திறனை ஆய்வு செய்ய தமிழகம் முழுவதும் அரசு, அரசு நிதியுதவி தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பள்ளிக்கல்வி இயக்குநரக உயரதிகாரிகள் குழுவினர் இம்மாதம் 27ம் தேதி ஆய்வு செய்ய உள்ளனர்’ என்று தெரிவித்துள்ளனர்.

அரசு பள்ளியில் புகுந்து மர்ம நபர் துணிகரம் : தலைமை ஆசிரியையிடம் செயின் பறிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே, அரசு பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர், தலைமை ஆசிரியை அணிந்திருந்த, 8 சவரன் தாலி செயினை பறித்து தப்பியோடினான்.
அவனை பிடிக்க முயன்ற மாணவன் மீதும் தாக்குதல் நடத்தினான்.திருவள்ளூர் மாவட்டம், மேல்நல்லாத்துாரைச் சேர்ந்த கிரிதரன் மனைவி சுஜாதா, 42. குண்ணத்துார், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியை.இவரும், இவருடன் பணிபுரியும் மற்றொரு ஆசிரியையும், நேற்று முன்தினம் மாலை, பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்தனர்.குறும்படம் : அப்போது, டிப் - டாப்பாக உடையணிந்து, பள்ளிக்கு வந்த மர்ம நபர், நேராக தலைமை ஆசிரியை சுஜாதா, பாடம் நடத்திக் கொண்டிருந்த வகுப்பறைக்கு சென்றான். அவனை பார்த்த சுஜாதா, 'யார் நீங்கள்... என்ன வேண்டும்?' எனக்கேட்டார். அதற்கு, அந்த நபர், 'நான், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அனுமதியுடன் வந்துள்ளேன். மாணவர்களுக்கு கல்வி குறித்து விழிப்புணர்வுஏற்படுத்தும் வகையில், பள்ளியில் குறும் படம் திரையிட வேண்டும்'என்றான். அத்துடன், 'குறும் படம் திரையிட, 'டிவி' எடுத்து வர வேண்டும்; அதற்கு, 150 ரூபாய் கொடுங்கள்' என, கேட்டுள்ளான்.சந்தேகம் : அவனின் பேச்சில் சந்தேகமடைந்த தலைமை ஆசிரியை, பள்ளியில் உள்ள தன் அறைக்கு வேகமாக சென்றார்.

அவரை பின்தொடர்ந்த மர்ம நபர், 'மேடம், என் மொபைல் போன் எண்ணை குறித்துக் கொள்ளுங்கள்' என கூறியபடியே, சுஜாதா அணிந்திருந்த, 8 சவரன் தாலி செயினை, திடீரெனபறித்தான். சுதாரித்த தலைமை ஆசிரியை சுஜாதா, நகையை தன் கைகளால் பிடித்தபடி, 'திருடன் திருடன்...' என, கூச்சலிட்டார். அவரின் அலறலைக்கேட்ட, 4ம் வகுப்பு மாணவன், விஷ்ணு, மர்ம நபரின் சட்டையை பிடித்து இழுத்து, கீழே தள்ள முற்பட்டான்.உடன் ஆத்திரமடைந்த மர்ம நபர், மாணவனை எட்டி உதைத்து, சுஜாதாவின் செயினை பறித்து வெளியே ஓடி, அங்கு நிறுத்தி வைத்திருந்த, இரு சக்கர வாகனத்தில் தப்பினான்.அவன் இரு சக்கர வாகனத்தில் தப்ப முயன்ற போது, தடுத்த ஒரு பெண்ணையும் கடுமையாக தாக்கினான். இந்தச் சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, மப்பேடு போலீசில், தலைமை ஆசிரியை சுஜாதா, நேற்று புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர். வருத்தமாக உள்ளதுபள்ளிக்கு வந்த மர்ம நபர், தலைமை ஆசிரியையிடம் பேசிக் கொண்டிருந்தான். திடீரென ஆசிரியை சத்தம் போடவே, மர்ம நபரை பிடிக்க முயன்றேன். என்னை உதைத்து தள்ளி, தப்பிவிட்டான்.

அவனை பிடிக்க முடியாதது வருத்தமாக உள்ளது. எஸ்.விஷ்ணு 4ம் வகுப்பு மாணவன், குண்ணத்துார்ஆசிரியைகளுக்கு பாதுகாப்பில்லைதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகளுக்கு, உரிய பாதுகாப்பு இல்லை. பள்ளிக்கு செல்லும் போதும், பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பும் போதும், செயின் பறிப்பு திருடர்களால் பாதிக்கப்படுகிறோம். தற்போது, பள்ளிக்குள்ளேயே திருடர்கள் வந்துள்ளது, எங்களின் அச்சத்தை அதிகரித்துள்ளது.பெயர் தெரிவிக்க விரும்பாத ஆசிரியைதொடரும் வழிப்பறி : திருவள்ளூர் அருகே, வெள்ளவேடு காவல் நிலையத்திற்கு உட்பட்டது, திருமணம் கிராமம்.

இங்குள்ள அரசு பள்ளிக்குள், 2017 டிச., 18ல், புகுந்த மர்ம நபர், ஆசிரியை ருக்மணி என்பவரிடம், ஐந்தரை சவரன் நகையை பறித்து சென்றான். அந்தக் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல், போலீசார் திணறும் நிலையில், இரண்டாவது முறையாக, இச்சம்பவம் நடந்துள்ளது.

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.149 கோடியில் கட்டடங்கள் திறப்பு

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.149.58 கோடி மதிப்பிலான கட்டடங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் காணொலிக் காட்சி மூலம் கட்டடங்களைத் திறந்து வைத்தார். 
நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் திருவாரூர் வலங்கைமான் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.2.60 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டடங்களைத் திறந்து வைத்தார். 
ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி நாகப்பட்டினம், நாமக்கல், திருவள்ளூர், திருவாரூர், திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 28 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.46.67 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் வசதிகள், கழிவறைகள் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றைத் திறந்து வைத்தார். 
சென்னை சைதாப்பேட்டையில் ரூ.2.50 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆசிரியர் இல்லத்துக்கான கூடுதல் கட்டடம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் சென்னை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, நாகப்பட்டினம், நாமக்கல், ராமநாதபுரம், திருப்பூர், திருவள்ளுர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 58 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் ரூ.97.81 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் என மொத்தம் ரூ.149.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்து வைத்தார். 
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், உணவுத் துறை அமைச்சர் காமராஜ், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா. வளர்மதி, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஆசிரியர் -மாணவர் உறவில் விரிசல் அதிகரிப்பை தடுப்பது அவசியம்'

                                

பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் -மாணவர்களுக்கு இடையிலான உறவில் விரிசல் அதிகரித்து வரும் போக்கைச் சீரமைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியம் என்று தனலட்சுமி பொறியியல் கல்லூரி தலைவர் பேராசிரியர் ராமூர்த்தி கூறினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கும் விழா, தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் தனலட்சுமி பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. 
இந்த விழாவில் அவர் பேசியதாவது: 
ஆசிரியர்கள் சொந்த விருப்பு வெறுப்பின்றி அவர்களது கடமைகளை உணர்ந்து செயல்படும்போது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், 
அனைவராலும் சிறந்த ஆசிரியர் என்று பாராட்டும், நன்மதிப்பு, மரியாதையையும் பெற முடியும். மாணவர்களின் கல்வித் திறனை மட்டுமல்லாமல், நன்நடத்தை, ஒழுக்கம் ஆகியவற்றையும் மேம்படுத்த உறுதுணையாக இருந்துவரும் ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள் என்றார் ராமமூர்த்தி. 
விழாவில், சேலையூர் சீயோன் மெட்ரிக் பள்ளி தாளாளர் என்.விஜயன், குரோம்பேட்டை எஸ்.சி.எஸ்.மெட்ரிக் பள்ளி முதல்வர் எஸ்.பேபி சரோஜா, செட்டிநாடு வித்யாஸ்ரமம் பள்ளி முதல்வர் எம்.அஞ்சனாதேவி, மார்க் மெட்ரிக் பள்ளி முதல்வர் பிரின்ஸ் பாபு ராஜேந்திரன், ஏகனாம்பேட்டை அரசு பள்ளி தலைமை ஆசிரியை என்.சுதா உள்ளிட்ட 30 பள்ளி ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டன.
கல்லூரி தாளாளர் வி.ஆர்.தனலட்சுமி, இயக்குநர் ஏ.ராஜலட்சுமி, முதல்வர் கே.எல்.சண்முகநாதன், டீன் ஆர்.கே.நடராஜன், பேராசிரியர் கே.செந்தமிழ்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஹால் டிக்கெட்டில் தவறான புகைப்படம் : பொது தேர்வு மாணவர்கள் அச்சம்

                                       Image result for sslc hall ticket 2018

சென்னை: பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் சிலருக்கு, ஹால் டிக்கெட்டில் தவறான புகைப்படம், பெயர் இடம் பெற்றுள்ளதால், தேர்வு எழுத முடியுமா என, அவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2வுக்கு, மார்ச், 1; பிளஸ் 1க்கு மார்ச், 7 மற்றும் பத்தாம் வகுப்புக்கு, மார்ச், 16ல், பொது தேர்வுகள் துவங்குகின்றன.
இந்தத் தேர்வுகளில், மொத்தம், 27 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். முறைகேடுகளை தடுக்க, 30 சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.கோரிக்கை : இந்நிலையில், பொது தேர்வு மாணவர்களுக்கு, 'ஹால் டிக்கெட்' வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதில், சில மாணவர்களின் ஹால்டிக்கெட்டில், புகைப்படம், தந்தையின் பெயர் உள்ளிட்டவை தவறாக இடம் பெற்றுள்ளன. எனவே, தவறை சரி செய்து தரும்படி, மாணவர்கள் தரப்பில், தேர்வுத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.இது குறித்து, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக, மாநில தலைவர், ரா.இளங்கோவன் கூறியதாவது: பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியலில், எழுத்துப் பிழை மற்றும் புகைப்படம் மாறி இருப்பதை சரி செய்ய, தலைமை ஆசிரியர்களுக்கு, தேர்வுத்துறை அவகாசம் அளித்தது. சில பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், உரிய காலத்தில் தவறுகளை கண்டுபிடிக்காமல், கவனக்குறைவாக இருந்து விட்டனர். இதனால், மாணவர்கள் சிலரின், ஹால் டிக்கெட்டுகளில் உள்ள தவறுகள் சரிசெய்யப்படவில்லை. இதை, தேர்வுத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தோம்.'தற்போது பிழைகளை திருத்த முடியாது.

மாணவர்கள், தேர்வு மையத்துக்கு சென்று, ஹால் டிக்கெட்டுடன், தங்களது புகைப்படத்துடன் கூடிய, அடையாள அட்டையை இணைந்து, தேர்வை எழுதி கொள்ளலாம். 'தேர்வு முடிவுகள் வந்த பின், பிழைகள் சரிசெய்யப்படும்' என, தெரிவித்து உள்ளனர்.சிக்கல் : இதில், பல நடைமுறை சிக்கல்கள் உள்ளதால், புகைப்படம் மாறிய மாணவர்கள், தங்களால் தேர்வு எழுத முடியுமா என, அச்சம் அடைந்துள்ளனர். எனவே, தேர்வுக்கு முன், ஹால் டிக்கெட் மற்றும் விடைத்தாளின் முகப்பு சீட்டில் உள்ள, தவறுகளை சரிசெய்து, புதிய ஹால் டிக்கெட் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

CPS நண்பர்களின் கவனத்திற்கு....

                                        

ஓய்வூதிய வல்லுநர் குழுவின் 
அறிக்கையை தமிழக அரசிடம்  தாக்கல் செய்யக்கோரி  திண்டுக்கல் எங்கெல்ஸ் அவர்களால் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கு இன்று 21.02.2018  விசாரணைக்கு  வருகிறது.*

For order
வரிசையில் 52வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது

10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் கேள்விகள் குறைப்பு: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் கேள்விகள் குறைக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் தேர்வு ேநரமும் குறையும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 கோவை விமான நிலையத்தில் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 312 இடங்களில் வைபை வசதி அறிமுகம் செய்யப்படஉள்ளது.இந்தியாவிலேயே தமிழகத்தில் முதல்முறையாக அரசு பள்ளிகளில் வைபை வசதி கிடைக்கும். மாணவர்களுக்கான விபத்து காப்பீடு திட்டம் அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். இத்திட்டத்தின் மூலம் விபத்திற்கு ரூ.1 லட்சம், பெரிய காயங்களுக்கு ரூ.50 ஆயிரம் என 48 மணி நேரத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது.

மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நல்வழி ஏற்படுத்தும் விதமாக 16 ஆயிரம் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு புத்தக வடிவில் கவுன்சலிங் மேற்கொள்ள உள்ளோம்.தேர்வு சமயங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் தற்கொலை எண்ணத்தை மாற்ற தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளோம்.

10 வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்விற்கு கேள்விகள் குறைக்கப்பட்டு, தேர்வு நேரமும் இரண்டரை மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எவ்வித பயமுமின்றி தேர்வை சந்திக்கலாம். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

பிப்ரவரி 21 இன்று உலக தாய்மொழி தினம் - தாய் மொழி காக்க உறுதியேற்போம்..

தாய் மொழி கண் போன்றது; பிற மொழி கண்ணாடி போன்றது’


ஒருவரின் அறிவு வளர்ச்சிக்கு தாய்மொழி கல்வி என்பது மிகவும் அவசியமாகும். ஜப்பான், ஜெர்மனி, சீனா போன்ற நாடுகள் தொழில் வளர்ச்சியில் மேலோங்கி இருப்பதற்கு முக்கிய காரணம், அவர்களின் சொந்த தாய்மொழியில் கல்வி கற்பது மட்டுமே என்று உலக வரலாற்றில் பொன்னொழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. தாய்மொழி கல்வியை ஊக்குவிக்கும் நாடுகள் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த நாடாக திகழ்கிறது. 

உலகில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளது. சமீபத்தில் எடுத்துள்ள ஆய்வின் படி நாள் ஒன்றுக்கு ஒரு மொழி அழிந்துவருவதாக கண்டறியபட்டுள்ளது. நமது நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் 250க்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்துள்ளதாக மொழி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒருமொழி அழிந்தால் அதன் பண்பாடு, கலாச்சாரம், இலக்கியம், நாகரீகம் ஆகியவையும் அழிந்துவிடும்.

தாய்மொழி என்பது நமது தாய்க்கு நிகரானது. நம் தாய்மொழியை அழிப்பது, தாய்க்கு செய்யும் துரோகம் என்பதில் சந்தேகமில்லை. தாய் மீது அன்பு செலுத்தவோ அல்லது அவளின் தேவையை சந்திக்கவோ இன்னொருவரின் ஆலோசனை அவசியமில்லை. அதேபோல் தான் தாய்மொழியும், நமது மொழியை காப்பாற்ற வேண்டும். “தாய்மொழியை சுவாசியுங்கள், பிறமொழியை நேசியுங்கள்“ என்று தேசியகவிஞர் குவெம்பு சொல்லியுள்ளதை நூற்றுக்கு நூறு மனத்தில் தாங்கி ஒவ்வொரு மொழியினரும் செயல்பட வேண்டும்.

ஆங்கிலம் உள்பட பிறமொழிகள் மீது நான் பற்றுகொள்வதின் மூலம், சொந்த மொழியை அழித்துவருகிறோம். வர்த்தக ரீதியில் தற்போது ஆங்கிலம் உள்பட பல மொழி கல்வி நிறுவனங்கள் பிராந்திய மொழிகளான தமிழ், கன்னடம், தெலுங்கு உள்பட பல மொழிகளை நீச மொழியாக பாவிப்பதுடன், பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் அவர்கள் சொந்த மொழியில் பேசுவதற்கும் தடை விதித்து வருகிறார்கள். சில பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் வேறுமொழியில் பேசுவதை பெருமையாக நினைக்கிறார்கள்.

அதன் மூலம் தங்களின் மூல அடையாளத்தை தொலைத்து வருகிறார்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள். ஒவ்வொருவரும் தங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் உள்பட பிறமொழியில் கல்வி கொடுத்தாலும், வீட்டில் தாய்மொழியை கற்றுகொடுக்க வேண்டும். உலக தாய்மொழி தினமான இன்று அதற்கான உறுதிமொழியை ஏற்போம்.

1, 9ம் வகுப்புகள் புதிய பாடத்திட்டத்திற்கான குறுந்தகடுகள் வெளியீடு.

ஏப்ரல் மாதம் இறுதிக்குள் புதிய பாடத்திட்டத்தை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்கட்டமாக 1, 9ம் வகுப்புகள் புதிய பாடத்திட்டத்திற்கான குறுந்தகடுகள் வெளியிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

 மத்திய அரசு தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் பாடத்திட்டம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

ஆதார் இல்லையா - பரவாயில்லை நீங்களும் NEET தேர்வு எழுதலாம்!

மத்திய கல்வி வாரியம் (CBSE) ஆனது 2018-ஆம் ஆண்டிற்கான மருத்துவ தகுதி(NEET) தேர்விற்கு விண்ணப்பிக்க ஆதார் அவசியம் என அறிவித்தது. ஆனால் இந்த அறிவிப்பில் பல குழப்பங்கள் நிலவியது,
காரணம் ஜம்மு-காஷ்மீர், மேகாளயா, ஆஸாம் மாநில மக்கள் ஆகியோர்களால் ஆதார் அட்டையினை பயன்படுத்த இயலாத நிலையில் இருக்கையில் NEET தேர்விற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்ற குழப்பம் நிலவியது.இந்நிலையில் இந்த குழப்பங்களுக்கு விடையளிக்கு வகையில், ஆதார் இல்லாமலும் NEET தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளது. அதன்படி ஆதார் அட்டை இல்லாத ஜம்மு-காஷ்மீர், மேகாளயா, ஆஸாம் மாநில மாணவர்கள் தங்களது பாஸ்போர்ட் எண், ரேஷன்கார்டு எண், வங்கி கணக்கு விவரங்கள் அல்லது வேறு ஏதேனும் அரசாங்க ஒப்புதல் பெற்ற ஒரு அடையாள ஆதாரத்துடன் விண்ணப்பிக்கலாம் எனவும். மற்ற மாநில மாணவர்கள் வலைத்தளத்திலிருந்து பெறப்பட்ட UIDAI  கொண்டு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவித்துள்ளது.மேலும் "NEET (UG) -2018 விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க ஆதார் எண் தேவைபடுகிறது எனவும், NEET (UG) -2018 -க்கான தேரவாளர்கள் ஆதார் எண்ணை பயன்படுத்துவதன் மூலம் தேர்வாளரின் விவரங்களை துல்லியமாக கண்டறியவும் ஆதார் எண் அவசியம் என்ற முறைகொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல், தேர்வின் போது தேர்வாளர்களை அடையாளம் கண்டு உறுதி படுத்திக்கொள்ள இந்த முறை பயன்படுத்தப்படும் எனவும் NEET (UG) -2018 தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!


NEET தேர்வாளரா நீங்கள், அப்படியென்றால் இதை கவணத்தில் வைத்துக்கொள்ளுங்கள்...​​ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த படிவத்தில் நகல் குறைந்தப்பட்சம் 3 கையில் வைத்துக்கொள்ளுங்கள்!கட்டணம் செலுத்தியதற்கான சான்று (அதாவது உறுதிப்படுத்தல் பக்கத்தின் மூலம் ஆதரிக்கப்படும் வங்கி பரிவர்த்தனை விவரங்கள்).ஒத்த பாஸ்போர்ட் அளவு கொண்ட குறைந்தது 5 புகைப்படம், அதேப் புகைப்டத்தினை பதிவேற்றம் செய்வதற்கு ஏற்றவாறு மென் நகல் (Scan Copy)J & K மாநிலத்தை சேர்ந்த தேர்வாளர்களை பொறுத்தவரை, அகில இந்திய அளவிலான 15% ஒதுக்கீட்டிற்கான சுய பிரகடனத்தை உருவாக்கிய அமைப்பு.ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில தேர்வாளர்களை பொறுத்தவரை அகில இந்திய அளவிலான 15% ஒதுக்கீட்டிற்கான சுய பிரகடனத்தை உருவாக்கிய அமைப்பு.

(குறிப்பு: முன்னதாக் இம்மாநில மாணவர்களிடம்இருந்து இச்சான்று கோரப்படவில்லை)

1, 6, 9, 11 வகுப்புகள்: புதிய பாட நூல்கள் தயாரிப்புப் பணி தீவிரம்

தமிழகத்தில் 1, 6, 9, 11 ஆகிய வகுப்பு மாணவர்களுக்குப் புதிய பாடத்திட்டத்துக்கான பாடநூல்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


தமிழகத்தில் ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து இந்தப் பாடத்திட்டத்தை மாற்றியமைப்பதற்காக வல்லுநர்கள் கொண்ட குழுக்கள் அரசின் சார்பில் அமைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து புதிய வரைவுப் பாடத் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையில் கடந்த நவம்பர் 20 ஆம் தேதி வெளியிட்டார். இது குறித்து பொதுமக்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள் மூலம் இணையதளம் வழியாக கருத்துகள், திருத்தங்கள், கோரிக்கைகள் பெறப்பட்டன. அவ்வாறு பெறப்பட்ட கருத்துகளில் ஏற்க தகுந்த விஷயங்கள் பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. 
இதையடுத்து 1, 6, 9, 11 வகுப்புகளுக்கு புத்தகம் எழுதும் பணி தொடங்கியது. மொத்தம் 69 பாடப் பிரிவுகள், பிறமொழிகள் உள்பட 200-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் பாடநூல்கள் எழுதப்பட்டுள்ளன. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் இந்தப் பணியை ஏராளமான பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மேற்கொண்டு வந்தனர். முதல் கட்டமாக இந்தப் பாட நூல்கள் ஆங்கில வடிவில் தயாராகியுள்ளன. 
இதையடுத்து தமிழ் வடிவில் பாடநூல்கள் தொகுக்கும் பணி நடைபெறும். இந்தப் பணி சில நாள்களில் முடிவுறும். இதைத் தொடர்ந்து பாடநூல் குறித்தத் தகவல்கள் சி.டி.க்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு சரிபார்ப்புப் பணிகள் நடைபெறும். 
இந்தப் பணிகள் முடிவடைந்ததும் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் புதிய பாடநூல்கள் அச்சடிக்கும் பணி தொடங்க வாய்ப்புள்ளது. இதையடுத்து ஏற்கெனவே அறிவித்தபடி ஜூன் மாதம் பள்ளி திறக்கும்போது 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டத்தின்படி கற்றல் பணிகள் தொடங்கும் எனப் பாடத்திட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 19,000 பேருக்கு சம்பளம், 'கட்'

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட, 19 ஆயிரம் பேருக்கு, ஒரு நாள் சம்பளத்தை பிடிக்க, மின் வாரியம் முடிவு செய்து உள்ளது.ஊதிய உயர்வை விரைவாக இறுதி செய்யக்கோரி, மின் வாரியத்தில் உள்ள, மின் ஊழியர் மத்திய அமைப்பு உள்ளிட்ட, சில சங்கங்கள், பிப்., 16ல், வேலை நிறுத்தம் செய்தன. 
இதையொட்டி, 'ஒரு நாள் பணிக்கு வராவிட்டாலும், அவர்களின் எட்டு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும்' என, மின் வாரியம் எச்சரித்திருந்தது.அதை பொருட்படுத்தாமல், திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் அறிவித்த தினத்தன்று, 19 ஆயிரம் பேர் விடுப்பு எடுத்து, பணிக்கு வரவில்லை.
இதனால், மின் கட்டணம் வசூல், மின் வினியோக பணிகள் பாதிக்கப்பட்டன.இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோருக்கு, எட்டு நாள் சம்பளம் பிடிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது. 
இருப்பினும், போராட்டத்தில் பங்கேற்ற வர்களுக்கு, சம்பளம் பிடிப்பது குறித்து, இறுதி முடிவு எடுக்கவில்லை. அதே சமயம், 'வேலை செய்யவில்லை; சம்பள மும் இல்லை' என்பதற்கு ஏற்ப, போராட்டம் நடந்த நாளில், பணிக்கு வராதவர்களுக்கு, ஒரு நாள் சம்பளம் உறுதியாக பிடிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல்... சென்டம் எடுக்க சிம்பிள் டிப்ஸ்!

பத்தாம் வகுப்பு மாணவர்களே...! கொஞ்சம் கூடுதல் அக்கறை எடுத்தால், சமூக அறிவியல் பாடத்திலும் சென்டம் எடுத்து, வரலாற்று சாதனைப் படைக்கலாம். சுமாராகப் படிக்கும் மாணவர்களும் சூப்பர் மதிப்பெண் எடுக்கலாம். அதற்கு வழிகாட்டுகிறார்கள் இந்த ஆசிரியர்கள். 


ராணி மங்கம்மாள், குருவப்பா மேல்நிலைப் பள்ளி, நெய்க்காரப்பட்டி, பழனி.

1. வரலாறு 17 பாடங்கள், புவியியல் 10 பாடங்கள், குடிமையியல் 4 பாடங்கள், பொருளாதாரம் 2 பாடங்கள் என உள்ளன. இவற்றில், வரலாறு பிரிவில் முதல் 9, புவியியலில் முதல் 5, குடிமையியலில் முதல் 2, பொருளாதாரத்தில் முதல் பாடம் ஆகியவற்றைப் படித்தாலே சென்டம் வாங்கிவிடலாம். 

2. ஒரு மதிப்பெண் கேள்விகள் 24 கேட்கப்படும். நோ சாய்ஸ். ஆனால், புக் பேக் கேள்விகள் 22 கேட்கப்படும். 2 மட்டுமே பாடங்களின் உள்ளிருந்து வரும். 

3. 2 மதிப்பெண் கேள்விகள் 20 கேட்கப்படும். அவற்றில், வரலாறு மற்றும் புவியியலில் தலா 8 கேள்விகள் கேட்கப்படும். தலா 4 கேள்விகளுக்குப் பதில் எழுதினால் போதும். இதேபோல, குடிமையியல் மற்றும் பொருளாதாரத்தில் தலா 2 கேள்விகள் வரும். இதில், தலா ஒன்றுக்குப் பதில் எழுதினால் போதும்....

4). 2 மதிப்பெண் கேள்விகளைப் பொறுத்தவரை, சென்டம் எடுக்க முதல் பாயின்ட்டை ஃபாலோ செய்யுங்கள். அது முடியாத பிள்ளைகள் குறைவான வார்த்தைகள் இருக்கிற பதில்களைத் தேடித் தேடிப் படியுங்கள். 

5. முந்தைய வருடக் கேள்வித்தாள்களில் திரும்பத் திரும்ப வந்த 4 மதிப்பெண்களை ஒன்றுவிடாமல் படித்துவிட்டால், அந்தப் பகுதியில் மொத்த மதிப்பெண்களையும் பெற்றுவிடலாம். 

6. 5 மதிப்பெண் கேள்விகளில் வரலாறு, புவியியல், குடிமையியல், பொருளாதாரம் என ஒவ்வொரு பாடத்திலும் தலா 3 கேள்விகள் கேட்கப்படும். தலா ஒரு கேள்விக்குப் பதில் எழுதினால் போதும். 

7. பொருளாதாரத்தில் முதல் பாடத்தைப் படித்தாலே 8 மதிப்பெண் பெற்றுவிடுவது உறுதி. 

8. 'இந்திய நிகழ்வுகளைக் காலக்கோட்டில் குறி' என்கிற கேள்விக்கு, இந்திய நிகழ்வுகளா அல்லது வெளிநாட்டு நிகழ்வுகளா என்று கவனித்து எழுதுங்கள். சில மாணவர்கள் அவசரத்தில் தவறாக எழுதி, 5 மதிப்பெண்களை இழந்துவிடுகிறார்கள். 

9. வரைபடத்தைப் பொறுத்தவரை, வரலாற்றில் 5 மதிப்பெண், புவியியலில் 10 மதிப்பெண் கிடைக்கும். புவியியலில் முதல் பாட மேப்பை கட்டாயம் மனப்பாடம் செய்துவிடுங்கள். 

10. ஒரு மதிப்பெண், மேப், 2 மதிப்பெண், 4 மதிப்பெண் ஆகியவற்றை முடித்துவிட்டு, 5 மதிப்பெண் கேள்விகளைக் கடைசியாக எழுதுங்கள். 

சாரதா நரேந்திரநாத், சி.பி.எஸ்.சி. பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரமம், சென்னை. 

1. வரலாறு, புவியியல், குடிமையியல் என மூன்று சப்ஜெக்டிலும் சேர்த்து 22  பாடங்கள் இருந்தன. இதில், 2 பாடங்களைப் படிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டதால், 20 பாடங்களைப் படித்தால் போதும். தவிர, 20 மார்க் இன்டர்னல் போக, 80 மதிப்பெண்ணுக்கு எழுதவேண்டும். இதில், தியரிக்கு 75 மதிப்பெண், மேப்புக்கு 5 மதிப்பெண். 

2. வரைபடத்தைப் பொறுத்தவரை வரலாற்றிலிருந்து 2 மதிப்பெண், புவியியலிலிருந்து 3 மதிப்பெண் என ஐந்து மதிப்பெண் கேட்பார்கள். வருட ஆரம்பத்திலிருந்தே பாடப்புத்தகத்தில் இருக்கும் 28 வரைபடங்களுக்கும் பயிற்சி தந்திருப்பதால், 5 மதிப்பெண்ணையும் நிச்சயம் எடுத்துவிடலாம். 

3. வரலாற்றில் கொஞ்சம் பலவீனமான மாணவர்கள், முதல் நான்கு பாடங்களையாவது கட்டாயம் படித்துவிடுங்கள். புவியியல் மற்றும் குடிமையியலில் எல்லாப் பாடங்களையும் படித்தே ஆக வேண்டும். 

4. அப்ளிகேஷன் டைப் கேள்வி அதிகம் வரும் என்பதால், இவற்றை மிஸ் பண்ணாமல் படித்துவிடுங்கள். 

5. சி.பி.எஸ்.சி. வெப்சைட்டில் இருக்கும் மாதிரி கேள்வித்தாள்களை ரிவைஸ் செய்யுங்கள். 

6. பேப்பர் கரெக்‌ஷனுக்கு செல்கிற மூத்த ஆசிரியையாக, பரீட்சை எழுதுவதில் சில டிப்ஸ் சொல்ல ஆசைப்படுகிறேன்... 

(அ) சமூக அறிவியலைப் பொறுத்தவரை, நிறைய எழுதவேண்டி வரும். எனவே, திருத்துகிற ஆசிரியர்களுக்குப் புரியும்படி தெளிவாக எழுதுங்கள். 

(ஆ) முக்கியமான பாயின்ட்களை பென்சிலால் அடிக்கோடிடுங்கள். 

(இ) 3 மதிப்பெண் கேள்வி என்றால், 3 சப்டைட்டில் கொடுத்து எழுதுங்கள். 5 மதிப்பெண் என்றால், 5 சப்டைட்டில் கொடுங்கள். இதெல்லாம் உங்கள் பேப்பரைத் திருத்தும் ஆசிரியர்களுக்கு, நல்ல எண்ணத்தை ஏற்படுத்தும். அது உங்கள் மதிப்பெண்ணிலும் வெளிப்படும்.

க.மணி மாறன்,ப.ஆ.,

நேய்க்காரப்பட்டி.சேலம்

TNPSC MOTOR VEHICLE INSPECTOR GRADE-II NOTIFICATION

மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-2) பதவியில் 113 காலியிடங்களை நிரப்புவதற்குத் தமிழ்நாடுஅரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மூலம் மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-2) பதவிக்குத் தேர்வுசெய்யப்படுவோர் துறைத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்று மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-1), ஆர்டிஓ, துணை ஆணையர், இணை ஆணையர் எனப் படிப்படியாகப் பதவி உயர்வு பெறுகிறார்கள். இந்த நிலையில், தற்போது மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-2) பதவியில் 113 காலியிடங்களை நிரப்புவதற்குத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. தேவையான தகுதி ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் அல்லது மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் டிப்ளமா முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அதோடுபெட்ரோல் அல்லது டீசல் இன்ஜின் வாகனங்களில் குறைந்தபட்சம் ஓராண்டாவது பணிபுரிந்த அனுபவம் வேண்டும். மேலும், இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம், கனரகச் சரக்கு வாகனங்கள், கனரகப் பயணிகள் வாகனங்கள் உரிமம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 6 மாதங்களாவது கனரக வாகனங்கள் ஓட்டிய அனுபவமும் தேவை. வயது 21 முதல் 32-க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (எஸ்.சி., எஸ்.டி, பிசி, எம்.பி.சி., டி.என்.சி.) வயது வரம்பு கிடையாது. தகுதியுடையவர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டிருக்கும். என்ன கேட்பார்கள்? முதல் தாளில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பாடத்தில் 100 கேள்விகள், ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் பாடத்தில் 100 கேள்விகள் என மொத்தம் 200கேள்விகள் இடம்பெறும். மதிப்பெண் 300. இரண்டாவது தாள் பொது அறிவுத் தாள். இதில் 100 கேள்விகள் கேட்கப்படும். மதிப்பெண் 200. பொது அறிவுத் தாள், பிளஸ் டூ தரத்தில் அமைந்திருக்கும். நேர்முகத் தேர்வுக்கு 70 மதிப்பெண். உரிய வயதுத் தகுதி, கல்வித் தகுதி, தொழில்நுட்பத் தகுதிகள் உடையவர்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தை (www.tnpsc.gov.in) பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பம், சான்றொப்பம் பெறப்பட்ட ஆவணங்களின்நகல்களை டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக் கட்டணம், பாடத்திட்டம் உள்ளிட்ட விவரங்களை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம். | DOWNLOAD