யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/1/19

ஒருங்கிணைந்த பள்ளிகல்வி மூலம் பள்ளி,ஒன்றியம்,மாவட்ட அளவில் பள்ளி மாணவ,மாணவியர்களுக்கான பெண் கல்வியின் முக்கியத்துவம், இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் மற்றும் சுத்தம் சுகாதாரம் குறித்த பேச்சு ,கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள்...புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தகவல்....

புதுக்கோட்டை,ஜன.4:
பெண் கல்வியின் முக்கியத்துவம், 
இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் ,மற்றும் சுத்தம் சுகாதாரம் குறித்து பள்ளி,ஒன்றியம்,மாவட்ட அளவில்  நடைபெறும் பேச்சு,கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் மாணவர்கள் பங்கு பெற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்துமாறு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா கேட்டுக் கொண்டுள்ளார்..
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
 தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மூலம் 2018-2019 ஆண்டிற்கான சமூக பங்கேற்பு நிகழ்ச்சிகள் வரையறுக்கப்பட்டு ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன் முதல் நிகழ்ச்சியாக பெண் கல்வியின் முக்கியத்துவம் ,இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 மற்றும் சுத்தம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை பள்ளி மாணவர்களிடத்தில்  ஏற்படுத்தும் நோக்கத்தில் அனைத்து அரசு தொடக்க,நடுநிலை,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உண்டு உறைவிடப் பள்ளியில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவியர்களிடையே பேச்சுப் போட்டி,கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது..எனவே அனைத்து பள்ளிகளிலும் உள்ள மாணவர்கள்  இந்த போட்டிகளில் பங்கு பெற்று சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்..அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலமாக மாணவர்கள் போட்டிகளில் பங்குபெற பதிவு செய்ய வேண்டும்.மேலும் பெண்கல்வியின் முக்கியத்துவம்,இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 மற்றும் சுத்தம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு சார்ந்த தங்களது திறமைகளை மாணவர்கள்  வெளிப்படுத்த வேண்டும்.புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி அளவில் வரும் 7 ஆம் தேதி அன்றும்,பள்ளி அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் வட்டார அளவில் 11 ஆம் தேதி அன்றும் ,வட்டார அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியிலும் பங்கு பெற வேண்டும்.வட்டார அளவில் நடைபெறும் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழும்,மாவட்ட அளவில் வெற்றி பெறும் முதல் மூன்று இடம் பிடிக்கும்  மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட இருக்கிறது.எனவே புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரசு,தொடக்க நடுநிலை,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் ,உண்டு உறைவிடப் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவிகள் இப்போட்டிகளில் பங்குபெற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து மசோதா நிறைவேறியது:

புதுடில்லி, பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியளிக்கும் முறையை ரத்து செய்யும் மசோதா பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது.முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்யும் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது.இதற்கு பல்வேறு தரப்பிலும் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதனையடுத்துகட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.குழந்தைகள் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் கடந்த ஆண்டு ஜூலையில் நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில் இந்த மசோதா, ராஜ்யசபாவில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இடதுசாரி கட்சி உறுப்பினர்கள் மட்டும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.முன்னதாக அமைச்சர் பிரகாஷ் ஜாவேடகர் கூறியதாவது: 'கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்ய வேண்டும்' என, ௨௫ மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன. கட்டாய தேர்ச்சி முறையை தொடரலாமா, வேண்டாமா என்பதை மாநில அரசுகளே முடிவு செய்யும் அதிகாரம், இந்த மசோதா மூலம் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

இணையதளத்தை பராமரிக்காமல் அலட்சியம் விளக்கம் கேட்டு, 558 கல்லூரிகளுக்கு, 'நோட்டீஸ்'

சென்னை:ணையதளத்தை பராமரிக்காத, 558 கல்லுாரிகளுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. அதில், ஒரு வாரத்தில், விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் பணிக்கான, பி.எட்., - எம்.எட்., படிப்பை நடத்தும் கல்லுாரிகள், மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சிலின் அங்கீகாரம் பெற வேண்டும். மேலும், அந்தந்த மாநில பல்கலைகளில், பாடத் திட்ட இணைப்பு அந்தஸ்து பெற வேண்டும்.தமிழகத்தில், ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பு அந்தஸ்தில், 733 கல்லுாரிகள் செயல்படுகின்றன. 
இந்த கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் போது, சில விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒவ்வொரு கல்லுாரியும், நிர்வாகம் சார்ந்த, 11 அம்சங்களை கல்லுாரி இணையதளத்தில் கட்டாயம் பதிய வேண்டும். அவற்றை உரிய நேரத்தில், புதுப்பிக்க வேண்டும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை, பெரும்பாலான கல்லுாரிகள் பின்பற்றாமல், அலட்சியமாக செயல்பட்டன.
இது குறித்து, தேசிய கல்வியியல் கவுன்சிலுக்கு புகார்கள் வந்தன.அதனால், இணையதளத்தை பராமரிக்காத, 558 கல்லுாரிகளுக்கு, ஆசிரியர் கல்வியியல் பல்கலை நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. 'பல முறை அறிவுறுத்தியும், இணையதளத்தை பராமரிக்காதது ஏன் என்ற விளக்கத்தை, வரும், 11ம் தேதிக்குள், பல்கலைக்கு அனுப்ப வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளது.

எந்தெந்த கல்லுாரிகள்?

*சென்னையில், லயோலா, மியாசி, முத்துக்குமரன், ராஜலட்சுமி, டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி ஆராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின், 'நிப்மெட்' கல்லுாரிகள்; கோவையில், பிஷப் அப்பாசாமி, சி.எம்.எஸ்., ஹிந்துஸ்தான், கலைவாணி, கஸ்துாரி, பி.பி.ஜி., செயின்ட் மார்க் கல்லுாரிகள் இடம் பெற்றுள்ளன 
* கடலுார், மாதா, பிளஸ்ஸி, விருதாம்பிகை, பவானி, ஆற்காட் லுத்ரன் கல்லுாரிகள்; காஞ்சிபுரம், கிறிஸ்ட், முகமது சதக், காஞ்சி, ராஜலட்சுமி, லட்சுமி அம்மாள் கல்லுாரிகள்; மதுரை சி.எஸ்.ஐ., - கே.எஸ்.எம்., - ராயல் கல்லுாரி, அரோபிந்தோ மீரா, ஸ்டீபன், யாதவா, ஆசிபா கல்லுாரிகள்
* திருநெல்வேலி, ஸ்ரீராம் நல்லமணி யாதவ், யு.எஸ்.பி., செயின்ட் ஜான்ஸ், மகாத்மா காந்தி உட்பட, தமிழகம் முழுவதும், 558 கல்லுாரிகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

4 பல்கலைகளின் வி.சி., பதவி தேடல் குழுக்கள் அறிவிப்பு:

நான்கு பல்கலைகளுக்கு துணைவேந்தரை தேர்வு செய்ய, தேடல் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை துணைவேந்தர் பாஸ்கர், சென்னையில் உள்ள, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை துணைவேந்தர் பாஸ்கரன். வேலுார் திருவள்ளுவர் பல்கலை துணைவேந்தர் முருகன், சென்னையில் உள்ள ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணைவேந்தர் தங்கசாமி ஆகியோரின் பதவி காலம், இரண்டு மாதங்களில் முடிவடைய உள்ளது.
அதனால், நான்கு பல்கலைகளுக்கும், புதிய துணைவேந்தர்களை தேர்வு செய்ய, தேடல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னாள் தலைவர்திருவள்ளுவர் பல்கலைக்கு, கர்நாடகா பேராசிரியர் மற்றும் தேசிய அங்கீகார அமைப்பான, 'நாக்' இயக்குனர் ஷர்மா தலைமையில், தேடல் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கு, ரயில்வே இழப்பீட்டு தீர்ப்பாய தலைவர், நீதிபதி கண்ணன் தலைமையில், முன்னாள் கூடுதல் தலைமை செயலர் ஸ்கந்தன், ஒடிசா மாநில திறந்தநிலை பல்கலை துணைவேந்தர், ஸ்ரீகாந்த் மொகபாத்ரா இடம் பெறும் தேடல் குழு அமைக்கப்பட்டு உள்ளது.மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கு, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், தமிழ்நாடு போக்குவரத்து நிதி மேம்பாட்டு கழக முன்னாள் தலைவருமான, எஸ்.பி. இளங்கோவன் தலைமையில், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், அனந்தகிருஷ்ணன், யு.ஜி.சி., முன்னாள் தலைவர், வேத் பிரகாஷ் இடம் பெறும், தேடல் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

அரசாணை

ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணை வேந்தரை, டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை துணைவேந்தர், ஜெகதீஷ் குமார் தலைமையில், தமிழ்நாடு கடல் வாரிய முன்னாள் தலைவர், ரமேஷ்குமார் கன்னா. சேலம் பெரியார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகிருஷ்ணன் இடம் பெற்ற குழு தேர்வு செய்யும் என, தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

குரூப் - 1' தேர்வு 21ல், 'இன்டர்வியூ'

சென்னை:'குரூப் - 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வரும், 21ல் நேர்முக தேர்வு நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., செயலர், நந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
'குரூப் - 1' பதவியில் அடங்கிய, 85 காலியிடங்களை நிரப்ப, 2017 பிப்ரவரியில் முதல்நிலை எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. அதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 2017 அக்., 13 முதல், 15 வரை, பிரதான தேர்வு நடந்தது. பிரதான தேர்வில், 176 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அவர்களின் விபரங்கள், 2018 டிச., 31ல், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. நேர்முக தேர்வுக்கான பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு, வரும், 21 முதல், 25 வரை, சென்னையில் உள்ள, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், நேர்முக தேர்வு நடக்க உள்ளது. இதற்கான தகவல்கள், எஸ்.எம்.எஸ்., மற்றும் இ - மெயில் வழியாக, தேர்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில், அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு தனி தேர்வர் விண்ணப்பிக்க அழைப்பு:

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்க உள்ள தனி தேர்வர்கள், வரும், 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:மார்ச்சில் நடக்க உள்ள, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், பள்ளிகள் வழியாக அல்லாமல், தனி தேர்வராக எழுத விரும்புவோர், ஜன., 7 முதல், 14 வரை, 'ஆன்லைன்' வழியில் விண்ணப்பிக்க வேண்டும். அரசு தேர்வுத்துறையின், சேவை மையங்கள் வழியாக மட்டுமே, ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.
தேர்வில் பங்கேற்பதற்கான தகுதி, நிபந்தனை, தேவைப்படும் சான்றிதழ் மற்றும் சேவை மையங்களின் விபரங்களை, www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், மாவட்ட கல்வி அலுவலகங்கள், தேர்வுத் துறை உதவி இயக்குனர் அலுவலகங்களிலும், தேர்வு குறித்த விபரங்களை அறியலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வு புதிய வினாத்தாள் முறை அறிவிப்பு:

பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுக்கான, புதிய வினாத்தாள் முறையை, அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.பிளஸ் 1 பொது தேர்வு, இந்த ஆண்டு முதல் முறையாக, புதிய பாடத்திட்டத்தில் நடத்தப்படுகிறது. அதேபோல், பிளஸ் 2வுக்கும் புதிய வினாத்தாள் முறையில் தேர்வு நடத்தப்படுகிறது.

சுற்றறிக்கை

இது குறித்து, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி, பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:தமிழ், ஆங்கிலம் மற்றும் சிறுபான்மை மொழி பாடங்களுக்கு, முன்பிருந்த இரண்டு தாள்களுக்கு பதிலாக, ஒரு தாளுக்கு மட்டுமே தேர்வு நடக்கும். வினாத்தாள், 90 மதிப்பெண்ணுக்கு அமைக்கப்படும். செய்முறை தேர்வு அல்லாத, 'தியரி' பாடங்கள் மற்றும் தொழிற்கல்வி, 'தியரி' பாடங்களுக்கும், 90 மதிப்பெண்ணுக்கு வினாத்தாள் அமைக்கப்படும்.
செய்முறை தேர்வுள்ள பாடங்களுக்கு, 70 மதிப்பெண்ணுக்கும், உயிரியல் தேர்வில், தாவரவியல் மற்றும் விலங்கியலுக்கு, தலா, 35 மதிப்பெண் வீதம், 70 மதிப்பெண்ணுக்கும் தேர்வு நடக்கும். மொழி பாடம்: ஒரு மதிப்பெண் வினாக்கள், 14; இரண்டு மதிப்பெண், 12; நான்கு மதிப்பெண், ஏழு; ஆறு மதிப்பெண், மூன்று வினாக்களுக்கு, மாணவர்கள் பதில் அளிக்க வேண்டும்.
ஆங்கிலம்: ஒரு மதிப்பெண், 20; இரண்டு, மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண்ணில் தலா, ஏழு என, 41 கேள்விகளுக்கு, 90 மதிப்பெண்ணுக்கு பதில் அளிக்க வேண்டும்.சிறுபான்மை மொழி: ஒரு மதிப்பெண், 14 கேள்விகள்; இரண்டு மதிப்பெண், 12; நான்கு மதிப்பெண், ஏழு; ஆறு மதிப்பெண், நான்கு கேள்விகள் என, மொத்தம், 37 கேள்விகளுக்கு, மாணவர்கள் பதில் அளிக்க வேண்டும்.
செய்முறை பாடங்கள்: ஒரு மதிப்பெண்ணில், 15; இரண்டு, மூன்று மதிப்பெண்ணில், தலா ஆறு; ஐந்து மதிப்பெண்ணில், ஐந்து என, 32 கேள்விகளுக்கு, மொத்தம், 70 மதிப்பெண்ணுக்கு பதில் அளிக்க வேண்டும்.உயிரியல் பாடத்தில், தாவரவியல் மற்றும் விலங்கியலுக்கு தனித்தனியாக, 35 மதிப்பெண்ணுக்கு வினாத்தாள் இருக்கும். 
ஒவ்வொரு பாடத்திலும், ஒரு மதிப்பெண், எட்டு; இரண்டு மதிப்பெண், நான்கு; மூன்று மதிப்பெண், மூன்று; ஐந்து மதிப்பெண், இரண்டு என, 35 மதிப்பெண்ணுக்கு, 17 கேள்வி களுக்கு பதில் அளிக்க வேண்டும்.செய்முறை தேர்வில்லாத பாடங்கள்: ஒரு மதிப்பெண்ணில், 20; இரண்டு, மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண்ணில், தலா ஏழு கேள்விகள் என, மொத்தம், 41 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.
தொழிற்கல்வி, 'தியரி' தேர்வில், ஒரு மதிப்பெண், 15; மூன்று மதிப்பெண், 10; ஐந்து மதிப்பெண், ஐந்து; 10 மதிப்பெண், இரண்டு என, 32 கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும். இந்த வினாத் தாள் அமைப்பு முறையை, மாணவர்களுக்கு பள்ளிகள் தெளிவாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புது இன்ஜி., கல்லூரிக்கு இனி அனுமதி இல்லை:

சென்னை : 'புதிய இன்ஜினியரிங் கல்லுாரிகள் துவக்க, அடுத்த ஆண்டு முதல், அனுமதி அளிக்க வேண்டாம்' என, மத்திய அரசுக்கு, நிபுணர் குழு பரிந்துரைந்துள்ளது.

உயர் கல்வியின் தரம் மற்றும் இன்ஜி., கல்லுாரிகளின் நிலை குறித்து ஆராய, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், நிபுணர் குழு அமைக்கப்பட்டது. ஐதராபாத் ஐ.ஐ.டி.,யின் தலைவர், மோகன் ரெட்டி தலைமையிலான இந்தக் குழு ஆய்வு நடத்தி, அறிக்கை சமர்ப்பித்துள்ளது.


அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் சகஸ்ரபுதே கூறியதாவது: பெரும்பாலான இன்ஜி., கல்லுாரிகளில், இடங்கள் காலியாக உள்ளன. மாணவர் சேர்க்கைக்கு அதிகமாக கல்லுாரிகள் உள்ளன. எனவே, அடுத்த ஆண்டு முதல், புதிய கல்லுாரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என, நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

வழக்கமான மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் போன்ற பாடங்களுக்கு, மாணவர் இடங்களை அதிகரிக்க வேண்டாம். மாறாக நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப, முப்பரிமாண தொழில்நுட்பம், ரோபாட்டிக்ஸ், சைபர் செக்யூரிட்டி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவற்றுக்கு, புதிய பாடங்களை அனுமதிக்கலாம் என்றும், குழு பரிந்துரைத்துள்ளது.இவ்வாறு கூறினார்.

பிப். 20 முதல் காலவரையற்ற ஸ்டிரைக் வருவாய் அலுவலர்கள் பங்கேற்பு:

மாநிலத்தில் காலியான 11ஆயிரத்து 500 பணியிடங்களை நிரப்புவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்., 20 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட வருவாய்த்துறை அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர்.
மாநில அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வருவாய்த்துறை அலுவலர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். மாநிலத்தில் 11 ஆயிரத்து 500 பணியிடங்கள் காலியாகவுள்ளதால் கூடுதல் பணி சுமை ஏற்படுகிறது. காலியிடங்களை நிரப்ப வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சம்பளம், தனி சம்பளம் வழங்க வேண்டும். துணை கலெக்டர் பட்டியலை அதிகப்படியான காலியிடங்களுடன் வெளியிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வருவாய் அலுவலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காததால் பிப்., 20 முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட 12 ஆயிரம் வருவாய் அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர்.
மாநில நிர்வாகிகள் பார்த்திபன், முருகையன் கூறியதாவது: உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. துணை தாசில்தார்களுக்கு தனி சம்பளம் 500, தாசில்தார்களுக்கு 1000 ரூபாய் தொடர்ந்து வழங்க வேண்டும். இலவச வேட்டி, சேலை திட்டத்தில் நான்காண்டுகளுக்கான நிதியை ஒதுக்க வேண்டும். இவற்றை வலியுறுத்தி ஸ்டிரைக் நடத்தப்படும். 
புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் ஜன., 8, 9 நடக்கும் வேலைநிறுத்தத்திலும் சங்கத்தினர் பங்கேற்பர் என்றனர்.
-நமது சிறப்பு நிருபர்-

பள்ளிக்கல்வி துறை 'டிவி' ஜன.21 முதல் ஒளிபரப்பு:

தமிழக பள்ளி கல்வி துறையின் 'டிவி' சேனல் ஒளிபரப்பு வரும் 21ம் தேதி முதல் துவங்குகிறது.
தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், கல்வி தொலைக்காட்சி துவங்கப்பட்டு உள்ளது. பள்ளி 
கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவின்படி, பள்ளி கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ் மேற்பார்வையில், இயக்குனர் ராமேஸ்வர முருகன் தலைமையிலான குழுவினர், 'டிவி' பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், தொலைக்காட்சிக்கான, 'ஸ்டுடியோ' அமைக்கப்பட்டுள்ளது. நவீன வகை கேமராக்கள், படப்படிப்பு கருவிகள், ஆளில்லாவிமானம் ஆகிய வசதிகளுடன், படப்பிடிப்புகள் நடத்தப்படுகின்றன.தினமும், 15க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள், எட்டு மணி நேரம் ஒளிபரப்பாகும். தினமும், இரண்டு முறை மறு ஒளிபரப்பு செய்யப்படும். இந்த நிகழ்ச்சிகள், 'யூ டியூப்'பிலும் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.
பள்ளிகளின் பராமரிப்பு, சிறந்த உள்கட்டமைப்பு உள்ள பள்ளிகள், அரசு பள்ளிகளில் ஜொலிக்கும் ஆசிரியர்கள், சிறந்த திறன்களை வெளிப்படுத்தும் மாணவர்கள், கல்வி உதவி தொகை விபரம், அரசு திட்டங்கள், கல்வி செய்திகள் என, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தமிழக அரசு கேபிள், 'டிவி'யில், 200ம் எண் ஒதுக்கப்பட்டுள்ளது.வரும், 21ம் தேதி முதல் ஒளிபரப்பை துவங்க, பள்ளி கல்வி துறை திட்டமிட்டுஉள்ளது.

தொழிற்கல்விக்கு மாறிய மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுத வைப்பதில் சிக்கல்:

பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்த 28 ஆயிரம் பேரில் பலர் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ.,க்கு மாறியதால், அவர்களை பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு எழுத வைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
கடந்த ஆண்டு பிளஸ் 1 தேர்வில் தனித்தேர்வர்களை தவிர்த்து 8.47 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில் 7.74 லட்சம் பேர் தேர்ச்சி, 73 ஆயிரத்து 800 பேர் தோல்வி அடைந்தனர். தோல்வி அடைந்தவர்களும் தொடர்ந்து பிளஸ் 2 படிக்க கல்வித்துறை உத்தரவிட்டது. ஆனால் பல பள்ளிகள் பின்பற்றவில்லை. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியலில் 28 ஆயிரத்து 167 பேர் விடுபட்டனர். அவர்களை பள்ளிகளில் இருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றியது தெரிந்தது.
இதையடுத்து, 'அனைவரையும் பள்ளி மாணவர்களாகவே பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வை எழுத வைக்க வேண்டும்' என தேர்வுத்துறை சமீபத்தில் உத்தரவிட்டது. ஆனால் வெளியேறிய மாணவர்களில் சிலர் தனித்தேர்வர்களாகவும் மாறிவிட்டனர். பலர் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ.,யில் சேர்ந்துள்ளனர். சிலர் வேலை செய்கின்றனர்.
இதில் தனித்தேர்வர்களையும், வேலைக்கு சென்றோரையும் அழைத்து பள்ளிகள் மூலம் தேர்வு எழுத வைக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., யில் படிப்போரை தேர்வு எழுது வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அவர்களை பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு எழுத வைப்பது குறித்து தேர்வுத்துறைதான் முடிவு செய்ய வேண்டும்' என்றார்.

பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் எப்போது?

இன்று சட்டப்பேரவையில் இன்பசேகரன் எம்எல்ஏ எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் முடிவடைந்த உடன் பட்டதாரி ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.

பள்ளிக் கல்வித் துறை நிர்வாக சீர்திருத்த தகவல்கள் உண்மையா? வதந்தியா?

2019-20 ஆம் கல்வியாண்டு முதல்
தொடக்கக்கல்வித்துறை பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்கப்படுகிறது.

*3 முதல் 5 கி மீ சுற்றளவில் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் அருகில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளோடு இணைக்கப்படுகிறது.

*தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலாவதி ஆகின்றன.(DEEO post ஒழிக்கப்பட்டது போல்)

*நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாற்றம் செய்யப்படக் கூடும்.

*படிப்படியாக தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக் உட்படுத்தப்படுவர்

.*(காலிப்பணியிடத்திற்கு ஏற்ப, பட்டதாரி பணியிடத்திற்கு ஏற்ப தகுதி மற்றும் பதிவு மூப்பு இருப்பின்)

*மீதம் உள்ளவர் நிலை இறக்கம் செய்யப்படலாம்.


*ஆனால் தற்போது பெறும் ஊதியத்தில் மாற்றம் இராது.


*அனைவரின் முன்னுரிமையும் மாநில அளவில் பேணப்பட உள்ளதாக தெரிகிறது.

*BEO க்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக மாற்றப்பட உள்ளனர்.

*BE0 பணியிடங்களில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

*BEO அலுவலகம் பார்வை மற்றும் ஆய்வு அலுவலகமாக் மாற்றப்படுகிறது.

*தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நீக்கப்படக் கூடும்.

*உதவி பெறும் பள்ளிகளுக்கு 150 மாணவர்களுக்கு மேல் இருந்தால் தான், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

தலைமை ஆசிரியர் பதவி

*மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மட்டுமே இருப்பர்.

உதவி ஆசிரியர்கள் வகை:

*இடைநிலை ஆசிரியர், பட்டதாரிஆசிரியர்,முதுகலை ஆசிரியர்
ஆகிய வகைகள் மட்டுமே

அனைத்து ஆசிரியர்களும், அமைச்சுப் பணியாளர்களும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டுவரப்பட உள்ளனர்.


*அனைத்து ஆசிரியர்களுக்கும் இனி சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே.

*வட்டாரத்தை கவனிக்க BE0

*கல்வி மாவட் டத்தை கவனிக்க DE0

*மாவட்ட கல்வி நிர்வாகத்தை கவனிக்க CEO

*மேற்கண்டோரின் பணியை மேற்பார்வையிட, 1 அல்லது 2 மாவட்டத்திற்கு ஒரு JD

*இதனை கண்காணிக்க, மண்டல வாரியாக (சுமார்5 அல்லது 6 மாவட்டங்கள்) இயக்குநர்

என்ற வகையில் கண்காணிப்பு வளையம் இருக்கும் என கூறப்படுகிறது.

*பள்ளிக் கல்வி இயக்குநர் மட்டுமே, பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் இருப்பார்.

*பிற இயக்குநர்கள் மண்டல இயக்குநர்களாக, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டல அலுவலகத்தில் பணியாற்றுவர் எனவும் கூறப்படுகிறது.

*இவை அனைத்தும் வாட்ஸ் அப் பகிர்வுகளின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டவை. அரசாணை நடைமுறைக்கு வந்தால் தான், உண்மையான மாற்றங்கள் என்னவென்று தெரிய வரும்.

தகுதி தேர்வை முடிக்காத 30 ஆயிரம் ஆசிரியர்களின் வேலைக்கு ஆபத்து... THANKS TO THANTHI TV


Science Fact - இறப்புக்குப் பின்னர் மனிதர்கள் விழிக்கொடை அளிப்பது போன்று குருதிக் கொடை அளிக்க இயலாதது ஏன் ?

மனித உடலிலுள்ள திசுக்களில் (tissues) இறப்பு, நீக்கவியலாத மாற்றங்களைத் தோற்றுவித்து விடுகிறது. இறப்புக்குப் பிந்தைய இம்மாற்றங்களுக்குக் காரணம் உடல் அணுக்களில் பொதிந்துள்ள அழிவு நொதிகள் (destructive enzymes) மற்றும் நுண்ணுயிரிகள் (microbes) ஆற்றும் வினை; அடுத்த காரணம் உயிர்வாழ்வதற்கு முக்கியத் தேவைகளான உயிர்வளி மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஆகியன நின்றுபோவது. ஆனால் இம்மாற்றங்கள் உடலின் எல்லா உறுப்புகளிலும் ஒரே நேரத்தில் நிகழ்வதில்லை; உறுப்புக்கு உறுப்பு இம்மாற்றங்கள் நிகழ்வதற்கான காலம் வேறுபடும். இறப்புக்குப் பிந்தைய மாற்றங்கள் குருதியில் உடனடியாக உண்டாகின்றன. சாவுக்குப்பின் இதயத்தில் குருதி ஓட்டம் நின்றுபோவதால், இறந்த உடலில் இருந்து வலிந்து குருதியை வெளிக்கொணர வேண்டும். அப்போது நுண்ணுயிரிகளின் (micro organisms) தொடர்பால் குருதி மாசடைந்து போகும். மாசடைந்த குருதியைப் பயன்படுத்த இயலாதல்லவா ? இவையனைத்தையும் விட முக்கியமான காரணம் ஒருவர் உடலில் குருதிக் கொடையளித்த சில நாட்களுக்குள் மீண்டும் புதுக்குருதி ஊறிவிடும். குருதிக் கொடையளிக்கும் நல்ல உள்ளம் கொண்ட பலர் உலகில் உள்ளனர்; எனவே பிணத்தில் இருந்து அதனைப் பெறவேண்டிய கட்டாயம் இல்லை. அடுத்து சிறுநீரகம், இதயம், விழிகள் ஆகிய உறுப்புகளில் இறப்புக்குப் பிந்தைய மாற்றங்கள் சற்று தாமதமாக நிகழும். எனவே இறந்த உடனே அவற்றை எடுத்துத் தகுந்த பாதுகாப்பு முறைகளைக் கையாண்டு பதப்படுத்தி வைத்தால் வேறோர் உடலில் பொருத்திட இயலும். மேலும் உயிரோடிருக்கிற ஒருவர் கண்களைக் கொடுத்தால், அது அவருக்கு நிரந்தர இழப்பாக அமைந்துவிடும். எனவே தான் இறந்தவர் உடலில் இருந்து அதனைப் பெறுகிறோம்.

பணியாளர் கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் பெறும் போது இனி 5% பங்குத் தொகை கட்டினால் போதும் என்பதற்கான உத்தரவு...

Flash News : அங்கன்வாடி மையத்துக்கு ஆசிரியர் ஒதுக்கீடு, ஒன்றிய அளவில் இளையவரான ஒருவரை, அல்லது அருகில் உள்ள ஒன்றியத்தில் இருந்து ஒருவரை ஒதுக்க இயக்குநர் பட்டியல் கேட்பு.