யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/9/16

பணி நியமனம், பணி வரன்முறைக்கான புதிய விதிமுறைகள் சட்டசபையில் மசோதா தாக்கல்

அரசுப் பணி நியமனம், பணி வரன்முறைக்கான புதிய விதிமுறைகள் கொண்ட சட்டமசோதாவை நிதி, பணியாளர் மற்றும்நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் நேற்று தாக்கல் செய்தார்.

அதன் விவரம் வருமாறு:

அரசுப் பணிகள் மற்றும் பதவிகளுக்கு பணியமர்த்தப்படும் நபர் களின் நியமனம் மற்றும் பணி வரன்முறை ஒழுங்குமுறைப்படுத்தப்படுகின்றன. தற்போது சட்டமன்றத்தின் சட்டம் ஒன்றினால் அத்தகைய பணிகள் மற்றும் பதவிகளுக்கு பணியமர்த்தப்படும் நபர் களின் நியமனம், பணி வரன்முறையை ஒழுங்குமுறைப்படுத்தும் வகைமுறை களைச் செய்வது என்று அரசு முடிவு செய்திருக்கிறது. அதனுடன் செயல்படும் வகையில் தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணிகள் விதிகளின் பகுதி-1, பகுதி-2 ன் வகைமுறைகளை உள்ளடக்கும் வகையில் சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதென அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் அரசால் வகுத்துரைக்கப் பட்டுள்ள சுழற்சி முறையிலான தெரிவுக்கிணங்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அல்லது பிற நியமன முகமைகள் அல்லது பதவி யமர்த்தும் அதிகார அமைப்புகளால் தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பணிமூப்புக்காக வகை செய்யும் பொருட்டு, ஒரு பணியில் பதவியமர்த்தம் செய்யப்பட்டதற்கான நபர்களின் பணிமூப்புக்கென தனியாக சட்டம் கொண்டு வருவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.பிரிவு அல்லது இனம் அல்லது தரம் ஒதுக்கீட்டின் விதி மற்றும் சுழற்சிமுறை ஆணைப்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அல்லது பிற நியமன முகமைகள் அல்லதுபதவியமர்த்தும் அதிகார அமைப்புகளால் தயாரிக்கப்பட்ட பட்டியலில் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் வரிசையிடத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட வேண் டும் என்று சட்டமசோதாவில் குறிப் பிடப்பட்டுள்ளது.

மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்புவரை நடைபெறும் பள்ளி தேர்வுகளை நடத்தும் பொறுப்பு மேல்நிலை உதவி தலைமையாசிரியரே - தகவல் அறியும் உரிமைச் சட்ட தகவல்

ஆசிரியர் கவுன்சிலிங் விதிமுறையில் மாற்றம்

தமிழகத்தில், இன்று துவங்கும் பட்டதாரி ஆசிரியர் பொதுமாறுதல் கவுன்சிலிங்கில் சில மாற்றங்களை பள்ளிக்கல்வித்துறை செய்துள்ளது. உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இன்று மாவட்டத்திற்குள் இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது. நாளை, மாவட்டங்களுக்கு இடையே நடக்கிறது. 


இரு கவுன்சிலிங்குகளும் கடந்த ஆண்டு வரை, 'ஆன்லைன்' மூலம் நடத்தப்பட்டன. மாவட்டத்திற்குள் இடமாறுதல் கவுன்சிலிங்கை, 'ஆன்லைனில்' நடத்துவதால், 'சீனியர்' ஆசிரியர்கள் முன்னுரிமை அடிப்படையில் இடங்களை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. 'ஜூனியர்' ஆசிரியர்களே அதிக பலன் அடைந்தனர். இதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து மாவட்டத்திற்குள் இடமாறுதல் கவுன்சிலிங்கை, 'ஆன்லைனில்' இல்லாமலும், மாவட்டங்களுக்கு இடையே, 'ஆன்லைனிலும்' நடத்த பள்ளிக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜூ கூறுகையில், “ புதிய நடைமுறையால் சீனியர் ஆசிரியர்கள் இடங்களை தேர்வு செய்வதில் சிக்கல் இருக்காது.

அதேபோல் மாவட்டங்களுக்கு இடையே, 'ஆன்லைனில்' நடத்தும்போது, ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களுக்கு அலைவது தவிர்க்கப்படும்,” என்றார்.

புதிய ஓய்வூதியத் திட்டம் : அரசு ஊழியர் வலியுறுத்தல்

முதல்வர் ஜெ., 110 விதியின் கீழ் அறிவித்தபடி புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இறந்தவர்கள், ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும்' என அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியது.



மதுரையில் சங்க மாநில செயலாளர் செல்வம் கூறியதாவது: நேற்று நடந்த வேலை நிறுத்தத்தில், அரசு ஊழியர்கள் நான்கு லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இத்திட்டத்தின் கீழ் இறந்தவர்கள், ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதாக முதல்வர் கடந்த பிப்., 19ல் சட்டசபையில் அறிவித்தார்.


அந்த அறிவிப்பு இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலர்கள் என நான்கு லட்சம் ஊழியர்கள் தொகுப்பூதியம் பெறுகின்றனர். அவர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும்.

அரசு ஊழியர்கள் நலனை கருதி மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும். வருமான வரி உச்சவரம்பை உயர்த்த வேண்டும். எட்டாவது சம்பளக்குழுவை அமைக்க வேண்டும், என்றார்.

ஆசிரியர் கற்பித்தல் பயிற்சியில் : கல்வித்துறை உத்தரவால் குழப்பம்

தொலைதுார கல்வி மூலம் பி.எட்., படிக்கும் ஆசிரியர்கள் கற்பித்தல் பயிற்சி பெறும் விஷயத்தில், கல்வித் துறையின் முரண்பட்ட உத்தரவால் குழப்பம் அடைந்துள்ளனர்.


பி.எட்., படிக்கும் நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், தமிழாசிரியர்கள் விடுப்பு எடுத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கற்பித்தல் பயிற்சி பெற்றனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. இதையடுத்து விடுப்பு எடுக்காமலேயே, அவரவர் பணி புரியும் நடுநிலை பள்ளிகளிலேயே கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ள, 2015 மார்ச், 13 ல் பள்ளிக் கல்வி செயலர் உத்தரவிட்டார். இதே நிலை தான் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளிலும் உள்ளன.


கடந்த ஆக., 11 ல் தொடக்க கல்வி இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கையில், 'அவரவர் பணிபுரியும் பள்ளியில் கற்பித்தல் பயிற்சி எடுத்தாலும் விடுப்பு எடுக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வி செயலர் விடுப்பு எடுக்க தேவையில்லை எனவும்; தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் விடுப்பு எடுக்க வேண்டும் எனவும் கூறியிருப்பது ஆசிரியர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜன் கூறியதாவது:

கல்வித்துறையின் முரண்பட்ட உத்தரவால் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தற்போது தொலைதுார கல்வியில் கற்பித்தல் பயிற்சியை, 90 நாட்களாக பல்கலைகள் அதிகரித்துள்ளன. அதிக நாட்கள் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கும்போது மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். எனவே, பள்ளி கல்வி செயலரின் உத்தரவை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்

இடைநிற்றல் குழந்தைகளை கண்காணிக்க புதிய 'சாப்ட்வேர்'

சிவகங்கை: பள்ளியில் சேர்க்கப்பட்ட இடைநிற்றல் குழந்தைகளை கண்காணிக்க புதிய 'சாப்ட்வேர்' செயல்படுத்தப்பட உள்ளது. ஆறு முதல் 14 வயதுடைய இடைநிற்றல் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் பள்ளி செல்லாத அல்லது இடைநிற்றல் குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
2011--12 ல் 63,178 இடைநிற்றல் குழந்தைகள் இருந்தன. 2015--16 ல் 43,455 ஆக குறைந்துள்ளது. இதில் 42,443 குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த குழந்தைகளை கண்காணிக்க அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் புதிய 'சாப்ட்வேர்' செயல்படுத்தப்பட உள்ளது. இதில் இடைநிற்றல் குழந்தைகளின் முழு விபரம், தொடர் மதிப்பீடு, அதிகாரிகளின் ஆய்வு போன்றவை பதிவு செய்யப்பட உள்ளன. இதன் மூலம் அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வந்து செல்வதை உறுதி செய்ய முடியும். படிப்பை கைவிட்டாலும், அவர்களை எளிதில் கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

"மாணவர்கள் அறிவு தேடலில் இருந்தால் அறிவியல் கண்டுபிடிப்புகள் வெளிவரும்

மாணவ, மாணவிகள் அறிவு தேடலில் இருந்தால் மட்டுமே பல புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளிக்கொண்டு வரமுடியும் என, தமிழ்நாடு கடலோரக் காவல் படை கூடுதல் இயக்குநர் சி. சைலேந்திர பாபு அறிவுறுத்தினார்.


விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சைலேந்திர பாபு மேலும் பேசியதாவது:

பிளஸ் 2 தேர்வில் 6 லட்சம் பேர் தேர்ச்சி அடைந்தாலும், சுமார் 2 லட்சம் பேர் மட்டுமே உயர் கல்வி கற்கும் வாய்ப்பை பெறுகின்றனர். மாணவர்கள் அறிவு தேடலில் ஆர்வம் காட்டினால், அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர முடியும். இந்தியா வல்லரசாக வேண்டும் என அனைவரும் விரும்புகிறோம். ஒவ்வொருவரும் அவரவர் கடமையைச் செய்தாலே இந்தியா வல்லரசாகி விடும். ஆசிரியர்கள் அதிக புத்தகங்கள் வாசித்தால் மட்டுமே மாணவர்களின் திறனுக்கேற்ற அறிவு தேடலை கொடுக்கமுடியும்.

மாணவ, மாணவியர் வீட்டில் சந்தோஷமாக இருக்க வேண்டுமானால், மகிழ்ச்சி, உழைப்பு, வெற்றி என்ற தாரக மந்திரத்தை மனதில் வைத்து கடினமாக உழைக்க வேண்டும். இந்திய ஆட்சிப் பணி, குடியுரிமை தேர்வுகளுக்கு இலவசமாக ஆலோசனை மற்றும் உதவிகள் செய்து வருகிறேன். எனவே, என்னை இணையதளம் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

பின்னர், மாணவ, மாணவிகள் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். கணினி அறிவியல் துறை தலைவர் கதிர்வளவன் வரவேற்றார். முடிவில், சுயநிதிப் பாட பிரிவு இயக்குநர் அசோக்குமார் நன்றி கூறினார்.

"ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் முதல்வர் பரிசு தொகைக்கு விண்ணப்பிக்கலாம்'

பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற ஆதி திராவிட, பழங்குடியின மாணவ, மாணவியர் முதல்வர் பரிசுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, அத்துறை அலுவலர் தனலிங்கம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.


இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்று, தமிழை ஒரு பாடமாகக் கொண்டு பயின்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இனத்தைச் சோóந்த தலா 1000 மாணவ, மாணவியருக்கு முதல்வர் பரிசுத் தொகை ரூ. 3 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதன்படி, 2015-2016 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்வில் 1073 மதிப்பெண் களுக்கு மேல் எடுத்த மாணவர்கள், 1,101-க்கு மேல் மதிப்பெண் எடுத்த மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று, மாணவ, மாணவியர் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் நகல் மற்றும் சாதிச் சான்றிதழ் நகல் ஆகியவற்றுடன் தங்களது கல்லூரி மூலம் முதல்வர் பரிசுத் தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.

21 லட்சம் மாணவர்களுக்கு மடிக் கணினிகள்: தணிக்கை அறிக்கையில் தகவல்

தமிழகத்தில் 2011-15 காலக்கட்டத்தில் ரூ.3,231 கோடியில் 21,29,196 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நிதி, வருவாய், பொது-சமூகப் பிரிவு என தமிழக அரசின் பல்வேறு துறைகளின் கணக்காய்வு, தணிக்கை குறித்த அறிக்கை சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. பொது-சமூகப் பிரிவு கணக்காய்வு, தணிக்கை அறிக்கையில் மடிக் கணினி விநியோகம் குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் விவரம்:-

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ""விலையில்லா மடிக் கணினிகள் வழங்குதல்'' எனும் திட்டத்தை ஜூன் 2011-இல் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.

தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டதா, மடிக் கணினிகளைப் பயன்படுத்த போதுமான ஆதரவு சேவைகள் அளிக்கப்பட்டனவா என்பதை மதிப்பீடு செய்ய கடந்த ஆண்டு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், 21,90,683 மடிக்கணினிகளில் 21,69,196 மடிக்கணினிகள் விநியோகம் செய்யப்பட்டதுபோக, 21,487 மடிக்கணினிகள் மாவட்டங்களின் வசம் உள்ளன.

கல்வி ஆண்டு முடிந்த பின்னர்...தமிழ்நாடு மின்னணு நிறுவனத்துக்கு ("எல்காட்') நிதிகள் தாமதமாக விடுவிக்கப்பட்டதால், மாணவர்களுக்கு மடிக் கணினிகள் கல்வி ஆண்டு முடிந்த பின்னரே விநியோகிக்கப்பட்டன. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சுயநிதி படிப்புப் பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கும், அவர்கள் திட்டத்தின் கீழ் தகுதியற்றவர்களாக இருந்தும் மடிக் கணினிகள் வழங்கப்பட்டன.

பள்ளிகள், கல்லூரிகளில் நடந்த மடிக் கணினிகள் திருட்டு காரணமாக ஏற்பட்ட இழப்பு, மடிக்கணினிகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதில் இருந்த குறைபாட்டை சுட்டிக்காட்டுகிறது என்று இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது..

பணி நிரவலில் முறைகேடு: அதிருப்தியில் ஆசிரியர்கள்

திருவள்ளூர் மவாட்டத்தில், கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்த பணி நிரவல் கலந்தாய்வில் பல்வேறு விதிமீறல்கள், முறைகேடுகள் நடைபெற்றதாக பட்டதாரி ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கடந்த மாதம் 27, 28 }ஆம் தேதிகளில் நடைபெற்றது.


திருவள்ளூரில் முகமது அலி தெருவில் உள்ள தனியார் பள்ளியில் பணி நிரவல் கலந்தாய்வு நடைபெற்றது.

இந்நிலையில், பல்வேறு குழப்பங்களுடன் கலந்தாய்வு நடந்து முடிந்ததாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக, அவர்கள் கூறியதாவது:

சனிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்குமாறு 100-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு வெள்ளிக்கிழமை இரவு அவசர அழைப்பு விடுக்கப்பட்டது. அன்று மாலை 4.30 மணி வரை தகவல் தெரிவிக்கப்படாததால், சிலர் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். சிலருக்கு செல்லிடப்பேசியில் தொடர்பு கிடைக்காததால், தகவல் தெரிவிக்க முடியவில்லை.

இதற்கான கடிதமும் முறைப்படி வழங்கப்படவில்லை. இருப்பினும், தகவலறிந்த ஆசிரியர்கள் சனிக்கிழமை காலை அங்கு வந்தனர்.

இதில், பாட வாரியாக கலந்தாய்வில், ஒரு பாடத்துக்கு அரை மணி நேரம் வீதம் ஒதுக்கப்பட்டு காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன.

பள்ளிகள் அமைந்திருக்கும் இடம், பல ஆசிரியர்களுக்கு தெரியவில்லை. இதுகுறித்து விசாரித்து அறிந்து கொள்ளவும், கலந்தாலோசிக்கவும் நேரம் வழங்கப்படவில்லை.

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அளித்திருந்த புள்ளிவிவரங்கள் பெரும்பாலானவை தவறாக இருந்தன.

பணியில் சேர்ந்த தேதி, தற்போது பணிபுரியும் பள்ளியில் சேர்ந்த தேதி வெவ்வேறாக இருந்தும், பணியில் சேர்ந்த தேதியை தற்போது பள்ளியில் சேர்ந்த தேதியாக தவறுதலாக தலைமை ஆசிரியர்கள் குறிப்பிட்டிருந்தனர். மாற்றுத் திறனாளிகள் குறித்த விவரங்களையும் தலைமை ஆசிரியர்கள் குறிப்பிடவில்லை.

இந்த பணி நிரவலில் வெளியகரம், வெள்ளியூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, போரூர், திருமுல்லைவாயல், பொதட்டூர்பேட்டை, திருவாலங்காடு, பாண்டேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், செல்வாக்குள்ள சில ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆணைகளை ரத்து செய்துகொண்டு, தேவையான பள்ளிக்கு மாற்றுவதற்கான ஆணையை திங்கள்கிழமை வாங்கிச் சென்றனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.

எனவே, கல்வித் துறை அதிகாரிகள் இக்கலந்தாய்வு குறித்து உரிய விசாரணை நடத்தி மீண்டும் பணி நிரவலை நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேந்திரீய வித்யாலயா பள்ளி: விதிகளைத் தளர்த்த மத்திய அரசு முடிவு

கேந்திரீய வித்யாலயா பள்ளிகளை அமைப்பதற்கான விதிமுறைகளை தளர்த்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இப்பள்ளிகளை அமைக்க போதிய அளவில் நிலம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


இப்போது கிராமப் பகுதிகளில் கேந்திரீய வித்யாலயா பள்ளி தொடங்க 10 ஏக்கர் நிலமும், நகர்ப்புறங்களில் 8 ஏக்கர் நிலமும், பெருநகரங்களில் 4 ஏக்கர் நிலமும் தேவை என்று விதி உள்ளது. இந்த நில அளவை குறைத்துக் கொள்வது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. ஏனெனில், பள்ளிகளை அமைக்க போதிய அளவு நிலம் ஒரே இடத்தில் கிடைப்பதில் தொடர்ந்து பிரச்னை நீடித்து வருகிறது.

நாட்டில் இப்போது ஆயிரத்துக்கும் அதிகமான கேந்திரீய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. மாநில அரசுகளின் வேண்டுகோளுக்கு இணங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் இப்பள்ளிகளைத் திறந்து வருகிறது

ஆசிரியையின் ஏடிஎம் அட்டையை மாற்றி ரூ.1.20 லட்சம் மோசடி: இளைஞர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் ஆசிரியை உள்பட பலரிடன் ஏடிஎம் அட்டையை நூதன முறையில் பறித்து பணமோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஒன்றியத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் மதுரையைச் சேர்ந்த ஆசிரியை மகாலட்சுமி (35) பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மார்ச் 1-ஆம் தேதி செங்கம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தேசிய வங்கியின் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்தார். அவர் பணம் எடுத்த போது ரசீது மட்டுமே வந்துள்ளது.


இதைப் பார்த்த இளைஞர் ஒருவர் தன்னை காவலர் என்று கூறிக் கொண்டு, செல்லிடப்பேசியில் பேசியபடியே மகாலட்சுமிக்கு பணம் எடுக்க உதவினார்.

அப்போது, ரூ.5 ஆயிரத்தை எடுத்து மகாலட்சுமியிடம் கொடுத்துவிட்டு, அவரது ஏடிஎம் அட்டைக்கு பதிலாக மற்றொரு ஏடிஎம் அட்டையை அந்த இளைஞர் கொடுத்துள்ளார். இதைக் கவனிக்காமல் அந்த ஏடிஎம் அட்டையை வாங்கிக்கொண்டு மகாலட்சும் வீட்டுக்குச் சென்றார்.

அந்த இளைஞர் ஆசிரியையின் ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி செங்கம், தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வங்கி ஏடிஎம் மையங்களில் ரூ.1.20 லட்சத்தை எடுத்துள்ளார்.

இதுகுறித்த குறுஞ்செய்தி செல்லிடப்பேசிக்கு வந்ததைத் தொடர்ந்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மகாலட்சுமி, செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீஸார் வழக்குப் பதிந்து, ஏடிஎம் மையத்தில் சிசிடிவி கேமராவில் பதிவான அந்த இளைஞரின் புகைப்படத்துடன் கடந்த 6 மாதங்களாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், செங்கம் பேருந்து நிலையத்தில் வியாக்கிழமை மாலை சந்தேகத்தின்பேரில், இளைஞர் ஒருவரைப் பிடித்து போலீஸார் விசாரணை செய்தனர்.

அவர் முன்னுக்குபின் முரணான தகவல் தெரிவித்ததை அடுத்து, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்ததில் அவர், செங்கம் அருகே உள்ள மேல்பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சங்கர் (32) என்பதும், ஆசிரியை மகாலட்சுமியிடம் ஏடிஎம் அட்டையை மாற்றி ரூ.1.20 லட்சம் மோசடியில் ஈடுபட்டதுடம் தெரிய வந்தது.

மேலும், இறையூர் கிராமத்தில் ஒருவரிடம் ரூ.12 ஆயிரம் உள்பட பலரிடம் ஏடிஎம்மில் பணம் எடுக்க உதவுவதுபோல நடித்து மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, சங்கர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கையொப்பமிட எந்த மையினைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான அரசின் கடிதம்.

சவாலை சந்திப்பாரா புதிய பள்ளி கல்வி அமைச்சர்?


பள்ளி கல்வித்துறைக்கு, புதிய அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நீண்ட நாட்களாக சவாலாக இருக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுமா என, ஆசிரியர் சங்கங்களும், பெற்றோரும் எதிர்பார்த்துள்ளனர். பள்ளிக்கல்வி அமைச்சராக, பெஞ்சமின் இருந்தபோது, ஆசிரியர்கள் கவுன்சிலிங்கில், முறைகேடுகள் ஓரளவு களையப்பட்டுள்ளது. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் பாராட்டு தெரிவித்தன. தற்போது, புதிய அமைச்சராக மாபா பாண்டியராஜன் பதவியேற்றுள்ளார். இவரும், ஒரு கல்வியாளர் என்பதால், பள்ளிக் கல்வியில், மாற்றங்கள் ஏற்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. கல்வித்துறை உயர் அதிகாரிகள், அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சி பிரமுகர்களின் நெருக்கடிகளை தாண்டி, அமைச்சரால் மாற்றத்தை கொண்டு வரமுடியுமா என்ற கேள்வி எழுகிறது.




சவால்கள் என்ன? : 




● ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை உள்ள, 10 ஆண்டு கால பழமையான பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும்

'பயோ மெட்ரிக்' திட்டத்தை முறையாக அமலுக்கு கொண்டு வந்து, 'ஓபி' அடிக்கும் ஆசிரியர்கள் மீது, தைரியமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஆசிரியர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான, புதிய பங்களிப்பு திட்டம் ரத்து செய்வது குறித்து, ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டும்

தொடக்க பள்ளிகளில், ஒற்றை இலக்க மாணவர் சேர்க்கையை, அதிகரிக்க வேண்டும்

10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், அரசு பள்ளி மாணவர்களின் மதிப்பெண்ணை உயர்த்த வேண்டும்

பொதுத் தேர்வுகளில், முறைகேடுகளை கட்டுப்படுத்த, தேர்வுமுறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும்

சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு இணையாக, நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவுத் தேர்வுகளில், அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி பெற, திட்டம் வேண்டும்

அரசு பள்ளி ஆசிரியர்கள், அடிக்கடி இடம் மாறுவதையும், அரசு நிகழ்ச்சிகள், அலுவலக பணிகளில் ஈடுபடுவதை தடுத்து, கற்றல் முறையை கண்காணிக்கும் திட்டம் கொண்டு வரவேண்டும்

நலத்திட்டங்களை செயல்படுத்துதல், அதற்கான பொருட்களை கொள்முதல் செய்தலுக்கான, டெண்டர் போன்றவற்றில், வெளிப்படைத்தன்மை வேண்டும்

திறமையான அதிகாரிகளை ஊக்குவிப்பதுடன், பதவி உயர்வில் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இப்படி, ஏராளமான பணிகள், புதிய அமைச்சர் முன் காத்திருக்கின்றன. புதிய அமைச்சர், சிறந்த கல்வியாளர் என்பதால், அவரே நேரடியாக, 'பைல்கள்' பார்த்து, முடிவெடுப்பார் என, ஆசிரியர்களும், பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர்.