யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

29/8/16

இஸ்ரோ'வின் புதிய ராக்கெட் இன்ஜின் சோதனை வெற்றி

வளி மண்டல ஆக்சிஜனை எரிபொருளாக பயன்படுத்தும், புதிய தொழில்நுட்ப ராக்கெட்  இன்ஜினை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான, 'இஸ்ரோ' நேற்று வெற்றிகரமாக சோதனை செய்தது. இதன் மூலம், புதிய தொழில்நுட்பத்தில் நுழைந்த, நான்காவது நாடு என்ற பெருமை, இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.


இஸ்ரோ சார்பில், வளி மண்டல ஆக்சிஜனை பயன்படுத்தும், 'ஸ்கிராம்ஜெட்' ராக்கெட் இன்ஜின், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில், நேற்று காலை, 6:00 மணிக்கு சோதனை செய்யப்பட்டது. ஏ.டி.வி., எனப்படும், முன்னேறிய தொழில்நுட்பம் உடைய 
ராக்கெட்டில், 3,277 கிலோ எடைஉடைய, 'ஸ்கிராம்ஜெட்' என்ற புதிய தொழில்நுட்ப இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது.

அதில், ஹைட்ரஜன் எரிபொருள் மட்டுமே நிரப்பப்பட்டிருந்தது. அதேநேரம், வளி
மண்டலத்திலுள்ள ஆக்சிஜனை எரிபொருளாக பயன்படுத்தும் தொழில்நுட்பம், இன்ஜினில் அளிக்கப்பட்டிருந்தது. 12 மணி நேர, கவுன்ட்-டவுனுக்கு பின், காலை 6:00 மணிக்கு, சோதனைக்கான ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது.

அதில், இணைக்கப்பட்ட இரண்டு, ஸ்கிராம் ஜெட் இன்ஜின்களும், திட்டமிட்டபடி, வளி மண்டல ஆக்சிஜன் மூலம், ராக்கெட்டை இயக்கி இலக்கை எட்டியது. ராக்கெட் ஏவப்பட்ட நேரத்தில் இருந்து, 300 வினாடிகளில், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, 320 கி.மீ., துாரத்தில் வங்கக்கடலில் விழுந்தது. அதை, இஸ்ரோ விஞ்ஞானிகள் மீட்டனர்.

இந்த சோதனையின் மூலம், வளி மண்டல ஆக்சிஜனை பயன்படுத்தும் தொழில்நுட்பத்தில், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி ஏஜன்சிக்கு அடுத்த, நான்காவது நாடு என்ற உலக சாதனையை இந்தியா எட்டியுள்ளது. இஸ்ரோவின் இந்த சாதனைக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னரே, இந்த சோதனையை நடத்த இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. சென்னையில் இருந்து அந்தமான் சென்ற விமானம், கடல் பகுதியில் மாயமானது. அதை தேடும் பணியில், பல ராணுவ கப்பல்கள் ஈடுபட்டதால், ராக்கெட் சோதனை திட்டம் தள்ளி வைக்கப்பட்டு, நடத்தப்பட்டுள்ளது.

செலவு 10 மடங்கு குறையும்

* புதிய தொழில்நுட்ப இன்ஜினில், ஹைட்ரஜனை மட்டுமே எரிபொருளாக, 'இஸ்ரோ' பயன்படுத்துகிறது
* எரிபொருள் எரிய உதவும் ஆக்சிஜன், வளிமண்டலத்தில் உறிஞ்சப்படுகிறது
* இதனால், ராக்கெட்டில், ஆக்சிஜனுக்கு என, தனி கலன் வைக்க வேண்டியதில்லை. எனவே, எடை பெருமளவு குறையும். ராக்கெட் தயாரிப்பு, ஏவும் செலவும், 10 மடங்கு குறையும்
* வழக்கமாக ராக்கெட் இன்ஜினில், ஹைட்ரஜன், ஆக்சிஜன், ஆக்சிடைசர் போன்றவை அவற்றுக்கான கலன்களில் நிரப்பப்படும். ஸ்கிராம்ஜெட் இன்ஜினில், வளி மண்டலத்திலிருந்து உறிஞ்சப்படும் ஆக்சிஜன், ஆக்சிடைசராக வினையாற்றி, எரிபொருளை எரியச்செய்து, அசுர வேகத்தில், ராக்கெட்டை உந்தித்தள்ளும்
* ஸ்கிராம்ஜெட் இன்ஜின், வருங்காலத்தில், இஸ்ரோவின் மீண்டும் பயன்படுத்தக் கூடிய விண்கலங்களை, அசுர வேகத்தில் செலுத்த உதவும்
*l சர்வதேச விண்வெளி போக்குவரத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய, நான்காவது நாடு என்ற அந்தஸ்தை இந்தியா பெற்றுள்ளது. எதிர்காலத்தில், மீண்டும் மறு பயன்பாடு செய்யும் வகையிலான விண்கலத்தில், இந்த இன்ஜினை பயன்படுத்த, இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

தொலைதூரக் கல்வி மையங்களுக்கு கடிவாளம் யு.ஜி.சி., புது உத்தரவு!

தொலைதுார கல்வி மையங்களில் முறைகேடுகள் நடக்காத வண்ணம், மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் வகையில், 14 வகையான தகவல்களை இணையதளத்தில், 15 நாட்களுக்குள் வெளிப்படுத்த பல்கலை மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.

பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) கட்டுப்பாட்டில் செயல்படும் கல்வி நிறுவனங்கள் பலவற்றில், தொலை துார கல்விமையம் செயல்பாட்டில் உள்ளது. தொலைதுார கல்வி மைய செயல்பாட்டில் பல்வேறு வரையறைகள் உள்ளன.

ஆனால், அனுமதி பெறாத பாடப்பிரிவுகளை நடத்துதல், அங்கீகாரம் புதுப்பிக்காமை, எல்லைகள் கடந்து தேர்வு மையம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள், தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இதனால், யு.ஜி.சி., கட்டுப்பாட்டில் செயல்படும் பல்கலை, கல்வி நிறுவனங்களின் தொலைதுார கல்வி மையம் சார்ந்த முழுமையான தகவல்களை இணையதளத்தில் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன் படி, பாடப்பிரிவுகள், அங்கீகார விபரங்கள், ஒருங்கிணைப்பாளர் விபரம், கல்வி நிறுவனங்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ள எல்லைகள், கிளை மைய முகவரி, தேர்வு மைய விபரங்கள், புரிந்துணர்வு ஒப்பந்த விபரம், மாணவர்கள் சேர்க்கை, அங்கீகார கடித நகல், உள்ளிட்ட, 14 விபரங்களை கட்டாயம் வெளியிடவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து தகவல்களையும், 15 நாட்களுக்குள் கல்வி நிறுவனங்களின் இணைய தளத்தில் பதிவிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு 'டெங்கு' எச்சரிக்கை

பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைகளில், டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது; வடக்கு, கிழக்கு மாவட்டங்களில், பரவலாக மழை பெய்து வருகிறது. மழை பெய்து, தண்ணீர் ஆங்காங்கே தேங்குவதால், டெங்கு காய்ச்சலும் பரவ துவங்கியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில், அடுத்தடுத்த நடந்த இறப்புகள் மாணவ, மாணவியரை அச்சமடைய வைத்துள்ளது. சென்னையில், நிலவேம்பு குடிநீர் வழங்க, சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அத்துடன், அனைத்து பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைகளில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளி, கல்லுாரிகளுக்கு சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பள்ளி, கல்லுாரி, பல்கலைகளின் வளாகங்களை தினமும் சுத்தம் செய்து, குப்பைகள் இல்லாமலும், தேவையற்ற பொருட்கள் குவியாமல் பார்த்து கொள்ள வேண்டும்
டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தும், 'ஏடிஸ்' கொசுக்கள் நன்னீரில் உற்பத்தியாகும் என்பது குறித்து, மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவ, மாணவியரும் அருகில் உள்ள பகுதிகளில், விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும்
விடுதிகள், சத்துணவு கூடங்கள் மற்றும் உணவு அறைகளில், நீர் தேங்காமல் சுத்தமாக பார்த்துக்கொள்ள வேண்டும். மேல்நிலை, கீழ்நிலை குடிநீர் தேக்க தொட்டிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்
அருகில் உள்ள மருத்துவமனைகள், சுகாதார மையங்களின் விபரங்கள் அறிந்து, மாணவர்களுக்கு காய்ச்சல் போன்ற உடல்நலக்குறைவு ஏற்பட்டால், உடனே, ரத்த மாதிரி எடுத்து சோதனை செய்ய வேண்டும்
கல்வி நிறுவனங்களில், நிலவேம்பு, மலை வேம்பு மற்றும் பப்பாளி இலை கசாயம் தயாராக வைத்திருக்க வேண்டும்
குளோரின் கலக்கப்பட்ட குடிநீரையும், காய்ச்சி வடிகட்டிய குடிநீரையுமே மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது

கேட்' தேர்வு செப். 1ல் பதிவு

ஐ.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலையில், முதுநிலை இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, 'கேட்' தேர்வுக்கு, வரும் 1ம் தேதி முதல் விண்ணப்ப பதிவு துவங்குகிறது.
முதுநிலை இன்ஜி., படிப்புகள் மற்றும் எம்.சி.ஏ., - எம்.பி.ஏ., படிப்புகளில், ஐ.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலை உள்ளிட்ட நிறுவனங்களில் சேரவும், பெட்ரோலிய நிறுவனங்களில் உயர் அதிகாரி பணியினை பெறவும், கேட்
தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அடுத்த கேட் தேர்வுக்கான, ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, செப்., 1ல் துவங்கி அக்., 4ல் முடிகிறது.பிப்ரவரி, 4, 5, 11 மற்றும், 12ம் தேதிகளில், கேட் தேர்வு நடக்கும். இந்த ஆண்டு உத்தரகண்ட் மாநிலம், ரூர்க்கியில் உள்ள ஐ.ஐ.டி., தேர்வை நடத்துகிறது. தென் மாநில மாணவர்களுக்கு, சென்னை ஐ.ஐ.டி., கேட் தேர்வு மண்டல மையமாக செயல்படும்.

ஐகோர்ட் பணிக்கு எழுத்து தேர்வு:2 மாதங்களில் முடிவு வெளியீடு

புதுக்கோட்டை;''உயர் நீதிமன்ற காலி பணியிடங்களுக்காக, நடந்த எழுத்து தேர்வு முடிவுகள், இரண்டு மாதங்களில் அறிவிக்கப்பட்டு, கவுன்சிலிங் முறையில் பணியிடங்கள் நிரப்பப்படும்,'' என, டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.


புதுக்கோட்டையில், நேற்று அவர் அளித்த பேட்டி:உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு, இரண்டு நாட்களாக டி.என்.பி.எஸ்.சி., மூலம் எழுத்து தேர்வுகள் நடந்தன. டி.என்.பி.எஸ்.சி., மீது நம்பிக்கை வைத்து, தேர்வை நடத்தி தரும்படி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது, எங்களுக்கு கிடைத்த வெற்றி.
நேற்று முன் தினம் நடந்த பதிவாளரின் நேர்முக உதவியாளர் பணிக்கு, 310 பேர் தேர்வு எழுதியுள்ளனர். நேற்று நடந்த தேர்வில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், டைப்பிஸ்ட், ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு, 317 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இந்த பணிகளுக்கு தமிழகம் முழுவதும், 57 ஆயிரத்து, 512 பேர் தேர்வு எழுதி உள்ளனர். தேர்வு முடிவுகள், இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்பட்டு, கவுன்சிலிங் முறையில் பணியிடங்கள் நிரப்பப்படும்.தமிழக அரசிடம் இருந்து காலி பணியிடங்களின் எண்ணிக்கை, துறை வாரியாக வந்தால், அதற்கு டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடத்த தயாராக உள்ளது. நவம்பர் மாதம் குரூப் - 4 தேர்வு நடத்த உள்ளோம். டி.என்.பி.எஸ்.சி., மூலம் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் எந்தவித அரசியல் தலையீடும் இன்றி பணியாளர்கள் தேர்வு நடக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை:புதிய விதிகள் உருவாக்க 2ம் தேதி கூட்டம்

தனியார் மருத்துவ கல்லுாரிகளில், மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, புதிய விதிகள் உருவாக்குவதற்கான கூட்டத்தை, வரும், 2ம் தேதி, உயர் கல்வித்துறை நடத்துகிறது.


'நீட்' தேர்வு:தனியார் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, இந்த ஆண்டு, 'நீட்' தேர்வு கட்டாயமாகியுள்ளது. நீட் தேர்வு முடிவு, கடந்த வாரம் வெளியான நிலையில், மாணவர் சேர்க்கை எப்படி, கட்டணம் எவ்வளவு என்ற குழப்பம் நீடித்து வருகிறது. தனியார் நிகர்நிலை பல்கலைகள், மருத்துவ கல்லுாரிகள் மாணவர் சேர்க்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் இணைப்பில் உள்ள, தனியார் மருத்துவ கல்லுாரிகளில், மாணவர்களை எப்படி சேர்ப்பது, அதற்கான விதிகள் என்ன என்பதை முடிவு செய்ய, தமிழக உயர் கல்வித்துறை மூலமாக, கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.

உத்தரவு:தமிழக தொழில்நுட்ப கல்வித்துறை அலுவலக அதிகாரிகள் குடியிருப்பில் உள்ள, உயர் கல்வி கட்டண கமிட்டி அலுவலக கட்டடத் தில், மருத்துவ விதிகள் கமிட்டியின் கூட்டம், செப்., 2ம் தேதி, பிற்பகல், 3:00 மணிக்கு நடக்கிறது. இதில், தனியார் மருத்துவ கல்லுாரிகள், சங்கங்கள் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என, தமிழக உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கட்டாய இடம் மாற்றத்தால் பயனில்லை:மாணவர்களுக்கு மீண்டும் திண்டாட்டம்

அரசு பள்ளிகளில், கூடுதலாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான கட்டாய இடம் மாற்றம் இன்று முடிகிறது. கூடுதல் ஆசிரியர்கள், வெளி மாவட்டங்களுக்கு மாற்றப்படாததால், பல பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நீடிக்கிறது.அரசு பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான உயர்நிலைப் பள்ளிகளில், மாணவர்களின் விகிதத்தை விட, 2,500 பட்டதாரி ஆசிரியர்களின் அதிகம் இருப்பது தெரிய வந்தது.


இவர்களை, பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு, கட்டாய இடம் மாற்றம் செய்யும் பணி நிரவல் கலந்தாய்வு, நேற்று முன்தினம் துவங்கியது. ஆசிரியர்கள் எதிர்ப்பை சமாளிக்க, மாவட்டத்திற்குள் இடம் மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் போன்ற மாவட்டங்களில், அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் உள்ளனர்.

பற்றாக்குறை உள்ள பள்ளிகள் குறைவாகவே இருந்தன. எனவே, சொற்பமான ஆசிரியர்களே இடம் மாற்றம் செய்யப்பட்டனர். மற்றவர்கள் மீண்டும் அதே பள்ளிகளில், கூடுதல் ஆசிரியர்களாகவே நீடிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.ஆனால், வட மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலுார் போன்ற மாவட்டங்களில், அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் தேவை உள்ளது.

இந்த மாவட்டங்களுக்கு வர, பிற மாவட்ட ஆசிரியர்கள் தயாராக இல்லாததால், தென் மாவட்டங்களில் கூடுதலாக உள்ள ஆசிரியர்கள், வட மாவட்டங்களுக்கு மாற்றப்படவில்லை. இதுபோன்ற குழப்பங்களால், சில மாவட்டங்களில், மாணவர்கள் எண்ணிக்கையை விட கூடுதலான ஆசிரியர்கள் பணியில் இருக்கும் நிலை தொடர்கிறது. மறுபுறத்தில், பல மாவட்டங்களில் போதிய ஆசிரியர்கள் இன்றி, வகுப்புகள் நடக்காமல் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை தொடர்கிறது.

பட்டதாரி ஆசிரியர்கள் 19 பேர் இடமாற்றம்

மதுரை மாவட்டத்தில் பணிநிரவல் கலந்தாய்வின்படி 19 பட்டதாரி ஆசிரியர்கள் சனிக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வு கடந்த 13 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் நடைபெற்று வருகிறது. மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பணிநிரவல் கலந்தாய்வுக் கூட்டத்துக்கு மாநில கல்வித்துறை இணை இயக்குநர் (தேர்வுகள்) அமுதவள்ளி தலைமை வகித்தார்.
மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சலோஇருதயசாமி முன்னிலை வகித்தார். நேர்முக உதவியாளர்கள் ஆதிராமசுப்பு, அனந்தராமன் ஆகியோர் கலந்தாய்வை நடத்தினர்.

இதில், 19 பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டத்துக்குள்ளான இடமாறுதல் உத்தரவு அளிக்கப்பட்டது. தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் 7, ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியலில் தலா 6 பேர் என 19 பேருக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை அறிவியல், கணிதப் பாட ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு நடைபெறுகிறது.

பழங்குடியின பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கெடு

பழங்குடியின பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக நடத்தப்படும் பயிற்சி வகுப்பில் பங்கேற்க வருகிற ஆக.30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் எம்.பரமேஸ்வரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:


பழங்குடியின நலத்துறை சார்பில் பி.எட் முடித்த பழங்குடியின பட்டதாரி ஆசிரியர்களை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறச் செய்யும் நோக்கில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் 40 நாள்கள் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயிற்சி நடைபெறும் 40 நாள்கள் உணவு வழங்கப்படுவதுடன், பயிற்சிக்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

பயிற்சியில் சேர விரும்புவோர் விண்ணப்பத்துடன் பிறந்த தேதி, ஜாதி, பட்டப்படிப்புக்கான சான்று, ஆதார் அடையாள அட்டை எண் உள்ளிட்ட சான்றுகளுடன் பாஸ்போர்ட் புகைப்படம் ஒட்டி மின் அஞ்சல் மூலம் tntribalwelfare@yahoo.com என்ற முகவரிக்கு வருகிற ஆக.30ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியாகுமா? பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் குறித்த அறிவிப்பு : பெற்றோர், மாணவர், கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு

மருத்துவ படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவுத் தேர்வு கட்டாயமாகி விட்ட நிலையில், தமிழகத் தில், 10 ஆண்டுகள் பழமையான, பிளஸ் 2 பாடத் திட்டத்தை மாற்றுவது குறித்த அறிவிப்பு, 
சட்டசபையில் வெளியாகாததால், பெற்றோர், மாணவர் மற்றும் கல்வியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பாடத் திட்டம் மாற்றம் குறித்த அறிவிப்பு, எப்போது வெளியாகும் என்றும் காத்திருக்கின்றனர்.

நீட்' வினாத்தாள் மூலம் சிறப்பு பயிற்சி கட்டணம் பல மடங்கு உயர்வு

நீட்' தேர்வு வினாத்தாள் மூலம், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பதில், தனியார் பள்ளிகள் ஆர்வம் காட்டுகின்றன. இதற்கான கட்டணம், பல மடங்கு உயர்ந்துள்ளது.
மருத்துவப் படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவுத் தேர்வு கட்டாயமாகி உள்ளதால், தமிழக தனியார் பள்ளிகள், பிளஸ் 2 மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சிகளை அளிக்கத் துவங்கி உள்ளன. இந்த ஆண்டில், இரண்டு கட்டமாக நடந்த நீட்
தேர்வுகளின் வினாத்தாள்களை நகல் எடுத்து, அதிலுள்ள வினா வகைப்படி, பயிற்சி அளிக்கப்படுகிறது. ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனத்தில் சேர்வதற்கான, ஜே.இ.இ., தேர்வின், நான்கு ஆண்டுகளின் வினாத்தாள்கள் அடிப்படையிலும், பயிற்சிகள் துவங்கப்பட்டுள்ளன. இதற்காக தனியார் பள்ளிகளும், பயிற்சி மையங்களும், ஒப்பந்தம் செய்துள்ளன. மாணவர்களிடம் தலா, 20 ஆயிரம் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளின் இந்த நடவடிக்கைகளால், தனியார் பயிற்சி மையங்களிலும், கட்டணம் உயர்ந்துள்ளது. பிரபல பயிற்சி மையங்களில், ஆண்டு முழுவதும், வார இறுதி நாட்களில் பயிற்சியில் பங்கேற்க, 1.5 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு முன், அதிகபட்சம், 50 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது.
நுழைவுத் தேர்வால், கல்வித்தரம் உயர்கிறதோ, இல்லையோ, பயிற்சி கட்டணம் பல மடங்கு எகிறி உள்ளது

அக்டோபர் 2ல் மேலும் 500 டாஸ்மாக் கடைகள் மூடல்

தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும் டாஸ்மாக் கடை விற்பனை நேரத்தை குறைத்தும், 500 கடைகளை மூடியும் உத்தரவிட்டார். இதன்படி 500 கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில், காந்தி பிறந்த நாளை முன்னிட்டு இரண்டாம் கட்டமாக  அக்டோபர் 2ம் தேதி மேலும் 500 மதுபான கடைகளை மூட அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
இந்த கடைகளையாவது மக்கள், கோயில் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் உள்ளவையாக இருக்க வேண்டும். அரசுக்கு உண்ைமயிலேயே படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வரும் அக்கறை இருக்க வேண்டும். அந்த வகையில் இந்த மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்றனர்.

அரசு விடுதிகளில் சமையலர் பணி: செப்.6ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

சென்னை மாவட்ட  கலெக்டர் அழகுமீனா (கூடுதல் பொறுப்பு) வெளியிட்ட செய்தி குறிப்பு: சென்னை மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் விடுதிகளில் காலியாக உள்ள ஆண் மற்றும் பெண் சமையலர் பணியிடங்கள் (ஊதிய விகிதம் 4800-10,000 + தர ஊதியம் ரூ.1300) நேர்காணல் மூலம்  நிரப்பப்பட உள்ளது. 
சென்னை மாவட்டத்தில் வசிக்கும், 18 முதல் 35 வயதிற்குட்பட்ட, சைவ, அசைவ உணவு சமைக்க தெரிந்த, தமிழில் எழுதப்படிக்க தெரிந்த ஆதிதிராவிடர், அருந்ததியினர் மற்றும் பழங்குடியினர்கள் விண்ணப்பிக்கலாம்.தகுதி உள்ளவர்கள் தங்கள் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், பாலினம், பிறந்த தேதி, அஞ்சல் முகவரி, கல்வித்தகுதி, சாதி, முன்னுரிமை விவரம் (மாற்றுத்திறனாளி, விதவை, முன்னாள் ராணுவத்தினர், கலப்பு திருமணம், மொழிப்போர் தியாகி போன்றவைகள்) வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பின் அதன் பதிவு எண், குடும்ப அட்டை எண், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள், இருப்பிடச்சான்று ஆகிய விவரங்கள் மற்றும் உரிய சான்றிதழ் நகல்களுடன், சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம், 2 வது தளத்தில் இயங்கும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் அடுத்த மாதம் 6ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரில் அணுக வேண்டும்.  இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் சூட்டப்பட்ட ஜாதி பெயரை நீக்க கோரி வழக்கு.

அரசு பள்ளிகளுக்கு ஜாதி பெயர் சூட்டப்பட்டிருந்தால்,அதுபற்றி அரசு துறையிடம் மனு அளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.சரவணன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,  சாதிகள் இல்லாத சமத்துவ சமுதாயம் படைக்க வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பம்.
அதைத்தான் பாரதியார் முதல் பல்வேறு தமிழ் அறிஞர்களும் சுட்டிக் காட்டியுள்ளனர். ஆனால் பள்ளிகள், கல்வி நிலையங்களில் மாணவ, மாணவியருக்கு சாதி, சமுதாயத்தைக் குறிப்பிடச் சொல்லித்தான் சேர்க்கை வழங்கப்படுகிறது.இதை ஒதுக்க முடியவில்லை என்றாலும் கூட, அரசுப் பள்ளிகள், கல்லூரிகளின் பெயர்கள் ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது சமுதாயத்தின் பெயர்களைக் குறிக்கும் வகையில் உள்ளது.இந்த கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் அந்த கல்வி நிலையங்களைக் குறிப்பிடும் போது அதிலும் சாதியம் பூசப்படுகிறது. எனவே சாதி அல்லது சமுதாயங்களின் பெயர்களில் உள்ள கல்வி நிலையங்களின் பெயர்களை உடனடியாக நீக்கி உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது அரசு தரப்பு வழக்குரைஞர்ஆஜராகி, சிறுபான்மையின கல்லூரிகளில் தான் சாதி அல்லது சமுதாயப் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அந்தக் கல்லூரிகளின் பெயர்கள் மற்றும் நிர்வாகத்தில் தேவையின்றி, தமிழக அரசு தலையிட முடியாது. ஏனெனில் அவை தனியார் கல்லூரிகள் நிர்வாகச் சட்டம் 1976-ன் கீழ் செயல்படுபவை.மனுதாரர் குறிப்பிடுவது போல அரசு கல்லூரிகள், பள்ளிகளில் எதுவும் அதுபோன்ற சாதிப் பெயர்களில் இல்லை என்றார்.அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்குரைஞர், சாதி, சமுதாயப் பெயர்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பட்டியலை தாக்கல் செய்தார்.

இரு தரப்பு வாதங்களுக்கு பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:இதுதொடர்பாக மனுதாரர் தன்னிடம் உள்ள சாதி அல்லது சமுதாயத்தை குறிப்பிடும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் பட்டியலை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தாக்கல் செய்ய வேண்டும். ஒருவேளைமனுதாரர் குறிப்பிடுவது போல அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களின் பெயர்கள் இருந்தால் அதுகுறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கூறி மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

ஆதார் எண்ணை சேர்க்கும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு மதிப்புதியம் இன்னும் தரப்படவில்லை - எதிர்பார்ப்பில் ஆசிரியர்கள்!

கடந்த சனவரி மாதம் மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டில் ஆதார் எண்ணை சேர்க்கும் பணியில் ஈடுபட்டஆசிரியர்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் இப்பணிக்கான மதிப்புதியம் இன்னும் தரப்படவில்லை. 
சட்டமன்ற  தேர்தலுக்கு பின் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறிவந்தனர்.. ஆனாலும் வழங்கப்படவில்லை. தற்போது உள்ளாட்சித் தேர்தலும் வர இருப்பதால் அதற்குள் தக்க நடவடிக்கையை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பில் சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணி.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் பணியிடத்திற்கு 2016-ஆம் ஆண்டிற்கான 55 உதவிப் பேராசிரியர், இளநிலை உதவியாளர், ஸ்டெனோவின், கிளார்க், தொழில்நுட்ப அதிகாரி, தொழில்நுட்ப உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.

புதிய கல்விக்கொள்கை பற்றிய அறிக்கையை தமிழில் அறியலாம்.அனைவரும் தங்கள் கருத்தை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் அளியுங்கள். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தகவல்

புதிய கல்விக்கொள்கை பற்றிய மத்திய அரசின் அறிக்கையை இணையதளத்தில் தமிழில் படிக்கலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறினார். இதுகுறித்து  மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-
கல்வியில் பல்வேறு சீர்திருத்தத்தைக் கொண்டுவருவதற்கு ஒவ்வொரு நாடும் கடுமையாக பாடுபடுகின்றன. அதோடு, குறிப்பிட்ட கால இடைவெளியில் கல்வியை மறுஆய்வும் செய்து வருகின்றன. சுதந்திரத்துக்குப்பிறகு நாமும் பெரிய முயற்சிகளை மேற்கொண்டோம். இதற்காக முதலில் முதலியார் கமிஷனும், அடுத்ததாக கோத்தாரி கமிஷனும் நியமிக்கப்பட்டன. கல்விக்கான தேசியக்கொள்கை, 1986-ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டு, 1992-ம் ஆண்டில் மாற்றம் செய்யப்பட்டது. அன்றில் இருந்து இப்போது 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே, ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள், தரமானகல்விக்கான நோக்கம், மாறிவரும் மக்கள் தொகையின் தேவைகள்ஆகியவற்றுக்காக தேசிய கல்விக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது ஒரு தொடர் முயற்சிதான். கருப்பொருட்கள் பள்ளிக் கல்விக்காக 13 கருப்பொருட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதில், குழந்தைகள் நலன், ஆசிரியப் பணி, மொழி போன்றவை அடக்கம். இவற்றை அனைவருமே ஏற்றுக்கொள்வார்கள். அதுமட்டுமல்லாமல்ஒவ்வொருவரும் கருப்பொருள்கள் குறித்து யோசனை தெரிவிக்கலாம். உயர் கல்விக்காக 20 கருப்பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மத்திய நிறுவனங்கள், மாநில பல்கலைக்கழகங்கள், திறன் மேம்பாடு, திறந்த நிலை பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி, புதிய அறிவு போன்றவை இதில்அடக்கம். மேலும் பல கருப்பொருட்கள் பற்றி ஆலோசிக்கப்படுகிறது. விவாதம் கடந்த 26.1.16 அன்றிலிருந்து www.My-G-ov.in என்ற இணையதளம் மூலமாக விரிவாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இதில் மக்களுக்காக சில யோசனைகள் கூறப்பட்டுள்ளன.

பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகுமா?:பெற்றோர், மாணவர், கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு

மருத்துவ படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவுத் தேர்வு கட்டாயமாகி விட்ட நிலையில், தமிழகத் தில், 10 ஆண்டுகள் பழமையான, பிளஸ் 2 பாடத் திட்டத்தை மாற்றுவது குறித்த அறிவிப்பு, சட்டசபையில் வெளியாகாததால், பெற்றோர், மாணவர் மற்றும் கல்வியாளர்கள் பாடத் திட்டம் மாற்றம் குறித்த அறிவிப்பு, எப்போது வெளியாகும் என்றும் காத்திருக்கின்றனர்.
தமிழக பள்ளி கல்வித் துறையில், ஒவ்வொரு வகுப்பின் பாடத் திட்டமும், ஐந்து ஆண்டுக ளுக்கு ஒரு முறை, தொழில்நுட்ப வளர்ச்சி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் புதுப்பிக்கப்படும். 20 ஆண்டு களாக, இந்த தொலைநோக்கு பார்வை மங்கி, பள்ளி கல்வியில் இலவசங் களை புகுத்தும் ஆர்வம், அதிகாரிகளிடம் அதிகரித்து உள்ளது.தற்போதைய, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டம், 2007ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. அது, 2005ம் ஆண்டில் தயார் செய்யப்பட்டதால், இந்த பாடத் திட்டத்தின் ஆயுட்காலம், 11 ஆண்டு களை எட்டி விட்டது. 2012ல், ஐ.ஐ.டி., பேராசிரியர் நாகபூஷன ராவ் தலைமையில், தமிழக அரசு அமைத்த கமிட்டி, புதிய பாடத் திட்டத்தை உருவாக்கியது. இது, 2013ல், தமிழக அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப் பட்டது.இதுவரை புதிய பாடத் திட்டத்தை அரசு அறிவிக்க வில்லை. தற்போதைய சட்டசபை கூட்டத்தொடரில், பள்ளி கல்வி மானிய கோரிக்கை மற்றும் முதல்வரின், 110வது விதியிலாவது, பாடத்திட்டம் மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், அப்படிப்பட்ட அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. எனவே, 'நீட்' போன்ற தேர்வை எதிர்நோக்கியுள்ள மாணவர்களும், பெற்றோரும், கல்வியாளர்களும் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது:மத்திய அரசின்கல்வி, வேலைவாய்ப்பு தொடர் பான விரிவான திட்டங்களை, தமிழக மாணவர் களும் எதிர் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாகியுள் ளது. இன்ஜி., படிப்புக்கும், நீட் தேர்வு வரும் என, கூறப்பட்டுள்ளது.தென் மாநிலங்களில், தமிழகம் தவிர மற்ற மாநில மாணவர்கள், மத்திய அரசின் போட்டி தேர்வு களில், சிறந்த மதிப்பெண்பெறுகின் றனர். பழைய பாடத் திட்டத்தில் படிக்கும், தமிழக மாணவர்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, பாடத் திட்டத்தை கால தாமதமின்றி மாற்ற, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

'வளர்ச்சிக்கு ஏற்ற மாற்றம் அவசியம்':

தற்போது அமலில் உள்ள, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டத்தை, 2002ல் பள்ளிக் கல்வி இயக்கு னராக இருந்த எஸ்.பரமசிவன் தலைமையிலான கமிட்டி உருவாக்கியது.

'சிலபஸ்' மாற்றம் குறித்து, அவர் கூறியதாவது:பிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டத்தை 2002ல் உருவாக்கினோம். அது, 2006 முதல் அமலில் உள்ளது. நாங்கள் தயாரிக்கும் போது, இந்த பாடத் திட்டம் தரம்உயர்ந்ததாகவே இருந்தது. ஆனால், தற்போதைய வளர்ச்சிக்கு இந்த பாடத் திட்டத்தை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. எந்த ஒரு பாடத் திட்டத்தையும், அதிகபட்சம், ஐந்து ஆண்டுகளுக்குள் மாற்ற வேண்டும். சி.பி.எஸ்.இ., பாடத் திட்டம் ஆண்டுக்கு ஒரு முறை கூடுதல் தகவல்களுடன் மாற்றப் படுகிறது. எனவே, நம்முடைய பாடத் திட்டம், 10 ஆண்டுகளாக தொடர்வது சரியல்ல. நுழைவுத் தேர்வுகளுக்குஏற்ற வகையில் பாடத் திட்டத்தை மாற்ற வேண்டும். இவ்வாறு பரமசிவன் கூறினார்.

'தாமதமின்றி அமல்படுத்த வேண்டும்'

பாடத் திட்டத்தை மாற்றுவது குறித்து, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் கே.பி.ஓ.சுரேஷ் கூறியதாவது: பத்து ஆண்டுகளுக்கு மேலாக, தற்போதைய பாடத் திட்டம் அமலில் உள்ளது. மாணவர்களுக்கு அரைத்த மாவையே அரைத்தது போல, ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப கற்றுக் கொடுக்கும் நிலைஉள்ளது. மத்திய அரசு சார்பிலும், பல்வேறு கல்வி நிறுவனங்கள் சார்பிலும், பல போட்டி தேர்வுகளும், நுழைவு தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.நீட் மற்றும் ஜே.இ.இ., நுழைவு தேர்வில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் பங்கேற்க வேண்டிய கட்டாயம்ஏற்பட்டுள்ளது. அதற்கு ஏற்ற வகையில், தற்போதைய பாடத் திட்டம் இல்லை. எனவே, சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ.,பாடத் திட்டங்களுக்கு இணையாக அல்லது அதைவிட தரம் உயர்ந்த புதிய பாடத் திட்டத்தை, அரசு தாமதம் இன்றி அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

பணிநிரவல் கலந்தாய்வில் குளறுபடி: மாவட்டக் கல்வி அதிகாரியை பட்டதாரி ஆசிரியர்கள் முற்றுகை

விருதுநகரில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வில் குளறுபடி உள்ளதாகக் கூறி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர்.மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு, விருதுநகரில் உள்ள கே.வி.எஸ். மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடைபெற்றது. 
இதற்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ. புகழேந்தி தலைமை வகித்தார்.இதில், காலிப் பணியிடங்களான தமிழாசிரியர் 9, ஆங்கில ஆசிரியர் 7, சமூக அறிவியல் ஆசிரியர் 5-க்கு கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில், விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் தமிழ், ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர்கள் 30 பேர் கலந்துகொண்டனர்.அப்போது, காலியிடங்கள் வெளிப்படையாக அறிவிக்கவேண்டும் எனக் கூறி, பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ. புகழேந்தியை முற்றுகையிட்டனர்.

இதைத் தொடர்ந்து, கல்வித் துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, மீண்டும் பணிநிரவல் கலந்தாய்வு நடைபெற்றது. இதனால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து, பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டப் பொறுப்பாளர் சுப்பிரமணியம் கூறுகையில், பணிநிரவல் என்ற பெயரில் தமிழாசிரியர்கள் இடம் மாற்றப்படுகிறார்கள். பணிநிரவல் முறையில் ஒருமுறை அடுத்த பள்ளிக்குச் சென்றுவிட்டால், அவர் இளநிலையாளராகவே கருதப்படுகிறார். இதனால், அடுத்தடுத்த பணிநிரவல் கலந்தாய்வுகளிலும் அவரே இடமாற்றம் செய்யப்படுகிறார்.சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். எனவே, பள்ளிக் கல்வித் துறை இந்த நடைமுறையை கைவிட வேண்டும் என்றார்..

TNPL RECRUITMENT 2016 | TNPL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

முக்கிய அறிவிப்பு:பணிநிரவல் கலந்தாய்வில் பங்கேற்றவர்கள் செப்டம்பர் 3அன்று நடைபெறும் பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்....


சென்னை உயர்நீதிமன்ற பணியிடங்களுக்கான ‌‌‌டி.என்.பி.எஸ்.சி தேர்வு... 54,0‌00‌‌‌ பேர்‌‌‌ பங்கேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடைபெற்றுவருகிறது.நீதிபதிகளின் தனி உதவியாளர், பதிவாளரின் தனி உதவியாளர் உள்ளிட்ட 84 பணியிடங்களுக்கு நேற்று நடைபெற்ற தேர்வில் ‌4‌‌‌‌40 பேர் பங்கேற்றனர். 
இந்நிலையில், கணினி இயக்குபவர், தட்டச்சர், வாசிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு 32 மாவட்டங்களிலும் சுமார் 200 தேர்வு மையங்களில் தற்போது நடைபெற்று வருகிறது.

 54 ஆயிரம் தேர்வர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர்.இதேபோல் தமிழ்நாடு மின் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கும் தேர்வு நடைபெற்று வருகிறது. ஒரே நேரத்தில் இவ்விரண்டு தேர்வுகளும் நடத்தப்படுவதால், இரண்டையும் எழுத விண்ணப்பித்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.