யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/4/18

அதிகமான பாடங்களை கற்பிக்க வற்புறுத்தவில்லை: நீதிமன்றத்தில் என்சிஇஆர்டி பதில்

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) விநியோகிக்கும் புத்தகங்களை மட்டும் சிபிஎஸ்இ பள்ளிகள் பயன்படுத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில், 'ஒருபோதும் அதிகமான பாடங்களை கற்பிக்க வேண்டுமென பள்ளிகளை வற்புறுத்தவில்லை'
என என்சிஇஆர்டி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் புருஷோத்தமன் தாக்கல் செய்த மனுவில், 'கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) பாடத்திட்டத்தின்படி முதல் வகுப்பில் மூன்று பாடங்கள் மட்டுமே பயிற்றுவிக்கப்படுகிறது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகள் முதல் வகுப்பில் எட்டுப் பாடங்களை பயிற்றுவிக்கின்றன. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் 5 முதல் 7 கிலோ எடையுள்ள புத்தகப் பைகளைச் சுமந்து செல்கின்றனர். இதனால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, என்சிஇஆர்டி விநியோகிக்கும் புத்தகங்களை மட்டும் சிபிஎஸ்இ பள்ளிகள் பயன்படுத்த சிபிஎஸ்இ நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார். 
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த மனு தொடர்பாக மத்திய அரசு, என்சிஇஆர்டி மற்றும் சிபிஎஸ்இ பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. 
தரமான புத்தகங்கள்: இதையடுத்து, என்சிஇஆர்டி செயலாளர் மேஜர் ஹர்ஷ் குமார் பதில்மனு தாக்கல் செய்தார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
குழந்தைகள் மத்தியில் எந்தவிதமான கல்வி பாகுபாடும் பார்க்கக் கூடாது. எந்தவொரு குழந்தைக்கும் கல்வி மனஅழுத்தத்தையும் தரக்கூடாது என பள்ளிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் தலைசிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பாடப் புத்தகங்களை நாங்களே வடிவமைத்து வழங்கி வருகிறோம். ஆண்டுதோறும் குறைவான கட்டணத்தில் 364 தலைப்புகளில் தரமான புத்தகங்களை வெளியிடுகிறோம். ஒரு குழந்தை எவ்வளவு நேரம் படிக்க வேண்டும், எவ்வளவு நேரம் கற்பிக்க வேண்டும் என்பதை வரையறுத்துதான் பாடத்திட்டம் உருவாக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் ஆரம்ப கல்வியில் இருந்து இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கொடுக்கக் கூடாது. 3 -ஆம் வகுப்பிலிருந்து 5-ஆம் வகுப்பு வரை வாரத்துக்கு 2 மணி நேரம் வீட்டுப் பாடம் கொடுக்க வேண்டும். 8 -ஆம் வகுப்பு வரையிலான நடுநிலைப் பள்ளிகளில் தினமும் ஒரு மணி நேரம் வீதம், வாரத்தில் 5 முதல் 6 மணி நேரமும், 9 -ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை தினமும் 2 மணி நேரம் வீதம் வாரத்தில் 10 முதல் 12 மணி நேரம் மட்டுமே வீட்டுப்பாடம் கொடுக்கப்பட வேண்டும் என ஏற்கெனவே பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
வற்புறுத்தவில்லை: புத்தகச் சுமையைக் குறைக்க முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கு மொழிப்பாடம், கணிதம் ஆகிய இரண்டு பாடங்களையும், மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மொழிப்பாடம், சூழ்நிலையியல், கணிதம் ஆகிய 3 பாடங்களை மட்டுமே கற்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இவை தவிர பொது அறிவுப் பாடமும் கொடுக்கப்பட்டுள்ளது. என்சிஇஆர்டி ஒருபோதும் அதிகமான பாடங்களை கற்பிக்க வேண்டுமென வற்புறுத்தவில்லை. அதே போன்று, பள்ளியில் விநியோகிக்கும் புத்தகங்களை வாங்க வேண்டும் என மாணவர்களை ஒருபோதும் நிர்பந்திக்கக் கூடாது. இதுகுறித்து பெற்றோர்களும் பள்ளி நிர்வாகத்துடன் பேச வேண்டும். 
அதே வேளையில் எல்லா பாடங்களையும் ஒரே நாளில் கற்பிக்க வேண்டிய கட்டாயமும் கிடையாது. வாழ்க்கைக்குத் தேவையான அறிவை போதிக்கும் இடமாக திகழ வேண்டிய பள்ளிகள் தரமான கல்வியை மட்டுமே கற்பிக்க வேண்டும். கல்வி ஒருபோதும் சுமையாக இருக்கக்கூடாது என்பதை தாரகமந்திரமாக வைத்து என்சிஇஆர்டி செயல்பட்டு வருகிறது. மேலும் மின்னணு வடிவிலான இ-புத்தக திட்டத்தையும் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம். இதனை கைபேசி செயலி வழியாகவும் பெற முடியும் என அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைநிலைக் கல்வியிலிருந்து கல்லூரிக்கு மாறும் வசதி: இந்த ஆண்டு முதல் சென்னைப் பல்கலை. அறிமுகம்

தொலைநிலைக் கல்வி முறையிலிருந்து கல்லூரிக்கும், கல்லூரி படிப்பிலிருந்து தொலைநிலைக் கல்வி முறைக்கும் மாணவர்கள் மாறிக் கொள்ளும் வகையில் புதிய வசதியை வரும் கல்வியாண்டு முதல் (2018-19) சென்னைப் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்த உள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 முடித்து தொலைநிலைக் கல்வி அல்லது திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் பெறப்படும் பட்டங்கள், கல்லூரியில் சேர்ந்து பெறும் பட்டத்துக்கு இணையானது எனவும், அனைத்து வகை வேலைவாய்ப்புகளுக்கும் இந்தப் பட்டப் படிப்புகளையும் தகுதியானதாக கருத வேண்டும் எனவும் யுஜிசி தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. 
யுஜிசி-யின் இந்தக் கருத்தை மேலும் ஒருபடி உயர்த்தி, தொலைநிலைப் பட்டப் படிப்புகளை முழுமையாக, கல்லூரி பட்டப்படிப்புக்கு இணையானதாக மாற்றும் நடவடிக்கையை சென்னைப் பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி கூறியதாவது:
சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனப் படிப்புகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில், இதன் பாடத் திட்டங்கள் அனைத்தும், நேரடி பட்டப் படிப்புக்கு இணையானதாக மாற்றப்பட்டுள்ளன. வருகிற கல்வியாண்டு முதல் இந்தப் புதிய பாடத் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. மேலும் தேர்வு முறையும், பருவத் தேர்வு முறையாக மாற்றப்பட உள்ளது.
இதன் மூலம், தொலைநிலைக் கல்வி மாணவர் இரண்டாம் ஆண்டில் ஏதாவது ஒரு கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பினால், நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை நடைமுறையின் அடிப்படையில் அவர் கல்லூரியில் சேர்ந்துகொள்ள முடியும்.
அதுபோல, கல்லூரியில் படித்து வரும் மாணவர் அல்லது மாணவி தவிர்க்க முடியாத சூழலில் படிப்பைத் தொடர இயலாமல் போனால், அவர் தொலைநிலைக் கல்வி முறைக்கு மாறிக் கொள்ள முடியும். இந்த வசதி வரும் கல்வியாண்டு (2018-19) முதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என்றார் அவர்.

எம்.பி.ஏ., நுழைவு தேர்வு அறிவிப்பு

சென்னை, சென்னை பல்கலையின், எம்.பி.ஏ., மாணவர் சேர்க்கைக்கு, ஜூன், 22ல் நுழைவு தேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை பல்கலையில், இரண்டு ஆண்டு, எம்.பி.ஏ., எக்ஸ்கியூட்டிவ் படிப்பு நடத்தப்படுகிறது. இதில், மாணவர்கள் சேர, ஜூன், 22ல் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான ஆன்லைன் பதிவு, நேற்று முன்தினம் துவங்கியுள்ளது. ஜூன், 18 வரை,www.unom.ac.in என்ற, இணையதளத்தில் பதிவு செய்யலாம் என, பல்கலை அறிவித்துள்ளது

திறந்தநிலை பல்கலைக்கு 2020 வரை யு.ஜி.சி., அனுமதி

சென்னை, மத்திய அரசின், 'நாக்' தரமதிப்பீடு இல்லாமல், 2020 வரை படிப்புகளை நடத்த, அனுமதி கிடைத்து உள்ளதாக, தமிழ்நாடுதிறந்தநிலை பல்கலை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு பல்கலையின் பதிவாளர், கே.எம்.சுப்ரமணியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மரபார்ந்த பல்கலைகளுக்கு மட்டுமே, தொலைநிலை படிப்பை நடத்த, நாக் தரமதிப்பீடு கட்டாயம்.ஆனால், திறந்தநிலை பல்கலை போன்றவற்றுக்கு, நாக் தரமதிப்பீடு, இன்னும் கட்டாயம் ஆகவில்லை.எனவே, நாக் தரமதிப்பீடு இல்லாமல், 2020ம் ஆண்டு வரை, திறந்தநிலை பல்கலையில், பட்டப்படிப்பு நடத்த, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., அனுமதி அளித்துள்ளது.மேலும், நேரடி,'ரெகுலர்' கல்வி முறையில், பிஎச்.டி., - எம்.பில்., ஆராய்ச்சி படிப்பை நடத்தவும், திறந்தநிலை பல்கலைக்கு,யு.ஜி.சி., அனுமதி வழங்கி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உயர் கல்வி செயலரை மாற்ற அரசு திட்டம் நிர்மலாதேவி விவகாரத்தில் நீளும் விசாரணை

தமிழக உயர் கல்வித் துறையில், முறைகேடு கள் அதிகரித்துள்ளதால், உயர் கல்வி செயலரை மாற்ற, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.


 உயர் கல்வி ,செயலரை, மாற்ற ,அரசு, திட்டம்,  நிர்மலாதேவி விவகாரத்தில், நீளும், விசாரணை


தமிழக உயர் கல்வித்துறை செயலராக, சுனில் பாலிவால், ஓராண்டுக்கு முன் நியமிக்கப் பட்டார். இவர், ஊழல், முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என, எதிர்பார்த்த நிலையில், நிலைமை இன்னும் மோசமாகி யுள்ளது. அருப்புக்கோட்டை பேராசிரியை, நிர்மலாதேவி விவகாரத்தில், ஒரு மாதம் முன்னரே புகார் வந்தும், விசாரணை நடத்தாமல், உயர் கல்வி செயலர், மெத்தன மாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.


நிர்மலா தேவி, மார்ச், 15ல், மாணவியரிடம் பேசியுள்ளார். மார்ச், 19ல், கல்லுாரி நிர்வாகத் திடம் தகவல் தரப்பட்டுள்ளது. அப்போதே, மதுரை காமராஜர் பல்கலைக்கும், அதை தொடர்ந்து, உயர் கல்வி செயலகத்துக் கும் தகவல்கள் வந்துள்ளன. ஆனால், போலீசில் புகார் அளிக்க, உயர் கல்வி செயலர் அனுமதி அளிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.


இதுபற்றி, கவர்னர் அலுவலகத்துக்கும் தகவல் அளிக்கவில்லை. நாளிதழ்களில் செய்தி வெளிவந்த பிறகே, கவர்னர் அலுவலகத்துக்கு 

தெரிய வந்துள்ளது. எனவே, உயர் கல்வி செயலகம் வரை விசாரணை நடத்த, கவர்னர் அலுவலகம் அனுமதி அளித்துள்ளது. மேலும், உயர் கல்வி செயலரை மாற்றவும்,தமிழக அரசு ஆலோசித்து வருவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுகுறித்து, உயர் கல்வித்துறை சங்கத்தினர் கூறியதாவது:

மதுரை காமராஜர் பல்கலை அதிகாரிகள் பற்றியும்,கவர்னர் குறித்தும், நிர்மலாதேவி பேசியுள்ளார். இதுகுறித்து, மாணவியர், கல்லுாரியில் புகார் அளித்தபோதே, உயர் கல்வி செயலர் விசாரணை நடத்தியிருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால், கவர்னர் மீது, தேவையற்ற பழி சுமத்தப்பட்டிருக்காது. இந்த விவகாரத்தில், உயர் கல்வி செயலர், மவுனமாக இருந்தது ஏன்?

பல பல்கலைகளில், துணைவேந்தர் இல்லாத நேரங்களில், தற்காலிக ஒருங்கிணைப்பு குழுவுக்கு, தன்னையே தலைவராக நியமித்து, பல்கலை நிர்வாகத்தில், ஆதிக்கம் செலுத்துவதையே, உயர் கல்வித்துறை செயலர் அதிகம் விரும்புகிறார். 


சென்னை பல்கலையில், பட்டமளிப்பு சான்றிதழில், துணை வேந்தருக்கு பதில், தன் கையெழுத்து இடம்பெற முயற்சி எடுத்தார். ஆனால், ஆசிரியர் சங்கங்களின் கடும் எதிர்ப்பால், இந்த முடிவு கைவிடப்பட்டது.உயர் கல்வித்துறை பிரச்னைகள் குறித்து, பேராசிரியர் சங்கங்களின் சார்பில், செயலகத்தில் அளித்த புகார்கள் கிடப்பில் போடப் படுகின்றன. உயர் கல்வியில் நடக்கும் ஊழல்களை களைய, உயர் அதிகாரம் உடைய அமைப்பை உருவாக்க வேண்டும் என, பேராசிரியர் சங்க கூட்டமைப்பினர், தீர்மானம் நிறைவேற்றினர். இந்த கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.


சென்னை பல்கலையில், பல்வேறு முறைகேடுகளை, துணை வேந்தர் துரைசாமி கண்டறிந்தார். அவற்றின் மீது, உயர் கல்வி செயலர், எந்த விசாரணையும் நடத்தவில்லை. கோவை பாரதியார் பல்கலையின் முறைகேடு கள் குறித்து, பல்கலையின் இணைப்பு கல்லுாரி நிர்வாகத்தினர், பல முறை முறையிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இறுதி யாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் தலையிட்ட பிறகே, ஊழல் அம்பலமானது.


பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் ஏற்பட்ட ஊழல் குறித்தும், தனி விசாரணை நடத்தவில்லை. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதியை, பள்ளிக் கல்வித்துறை முன்கூட்டியே அறிவித்து விட்டது. ஆனால், அண்ணா பல்கலையில், இன்ஜினியரிங் படிப் புக்கான, விண்ணப்ப பதிவு தேதியை, முடிவு செய்யாமல், உயர் கல்வி செயலகம் காலம் தாழ்த்துகிறது.அண்ணா பல்கலையில், பேராசிரியர் நியமனத்தில் ஏற்பட்ட முறைகேடு குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன்பிறகும், பேராசிரியர் நியமனம் குறித்து, உயர் கல்வி செயலர் விசாரணை நடத்தவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

நீட் தேர்வுக்கூடங்களை மாற்ற இயலாது: சிபிஎஸ்இ அறிவிப்பு

எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு கூடங்களை மாற்ற இயலாது என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சிபிஎஸ்இ நீட் தேர்வு இயக்குநரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

நீட் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்த பிறகு மாணவர்கள் தரப்பில் இருந்து சில கோரிக்கைகள் வந்துள்ளன. அதன்படி, தாங்கள் முதல் தேர்வாக குறிப்பிட்டிருந்த நகரத்தில் தங்களுக்கு தேர்வுக்கூடம் அளிக்கப்படவில்லை என பலரும், தேர்வு நடைபெறும் நகரத்தை தவறாக தேர்வு செய்துவிட்டதாக பலரும் கூறி, தங்களுக்கு தேர்வு நடைபெறும் நகரங்களை மாற்றித் தரும்படி கோரியுள்ளனர். 
ஏற்கெனவே, தேர்வு அறிவிக்கையில் தெரிவித்த விதிகளின்படி, எந்தக் காரணத்தைக் கொண்டும் தேர்வு நகரங்கள், தேர்வுக் கூடங்கள் மாற்றப்படாது. ஏனென்றால், நீட் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன. 
மேலும், தேர்வு எழுதும் நகரங்கள் கணினி மூலமாகவே ஒதுக்கப்பட்டன. அதில் மனித தலையீடுகள் எதுவும் நிகழவில்லை. எனவே, தேர்வுக்கூடத்தை மாற்ற இயலாது. இதுதொடர்பாக தேர்வர்களின் கோரிக்கைகளுக்கு தனித்தனி பதில்களும் அனுப்பப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தலை நடத்தலாம்.. தடையை நீக்கி உத்தரவிட்டது சுப்ரீம்கோர்ட்

டெல்லி: தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.


தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைமுறைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி உயர்நீதிமன்ற கிளையில் வழக்கைத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மதுரை ஹைகோர்ட்டு கிளை, தேர்தல் பணிகளை நிறுத்திவைக்கவும், 3, 4 மற்றும் 5-வது கட்ட தேர்தல்களை நடத்த தடை விதித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தேர்தல் நடவடிக்கைகளில் ஹைகோர்ட் தலையிட்டு தடை விதிக்க முடியாது என்று கூட்டுறவு சங்க தேர்தல் கமிஷன் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.

தமிழக அரசு சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. தமிழக அரசின் மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட், கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் நடத்த அனுமதி அளித்த போதிலும், தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது சுப்ரீம் கோர்ட் நிபந்தனை விதித்துள்ளது. தேர்தலை நடத்தி விட்டு மே 3 ஆம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா? வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை உள்ள வகுப்புகளை மூடவேண்டும் என பள்ளிக்கல்வித் துறை  உத்தரவிட்டுள்ளது. 
இது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புற அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 30 மாணவர்களுக்குக் குறைவாக உள்ள வகுப்புகளை மூட வேண்டும். கிராமப்புற அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 15 மாணவர்களுக்குக் குறைவாக இருந்தால் வகுப்புகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அ.தி.மு.க. அரசுக்கு ஏன் இந்தக் கேடு கெட்ட புத்தி! 
ராஜகோபாலாச்சாரியாரின் வழியிலே செயல்படத் தொடங்கிவிட்டார்களா? மீண்டும் குலக்கல்வியா?
1937-1939 ஆம் ஆண்டுகளில் ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநிலப் பிரதமராக இருந்தபோது 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடினார். 1952 இல் மறுமுறை ஆட்சிக்கு வந்தபோது 6000 பள்ளிகளை இழுத்து மூடி அரை நேரம் படித்தால் போதும்; மீதி அரை நேரம் அப்பன் தொழிலைப் படித்தால் போதும் என்ற கல்வித் திட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார்.



ஆச்சாரியாரைப்பற்றி அறிந்தவர் அல்லவா அய்யா தந்தை பெரியார், இது நவீனக் குலக்கல்வித் திட்டம், வருணாசிரமக் கல்வி என்று கூறி, போர்ப்பறை முழங்கினார். 



நாடே தந்தை பெரியார் தலைமையில் கிளர்ந்தெழுந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என்று கட்சிகளைக் கடந்து தந்தை பெரியார் தலைமையிலே கனன்று எழுந்தது தமிழ்நாடு.



இந்தக் குலக்கல்வித் திட்டத்தை விலக்கிக் கொள்ளாவிட்டால், கழகத் தோழர்களே! பெட்ரோலும், தீப்பந்தமும் தயாராகட்டும்; நாள் குறிப்பிடுவேன், அக்கிரகாரத்திற்கு நெருப்பு வையுங்கள் என்ற அறிவிப்புக் கொடுத்தார்.



விளைவு ஆச்சாரியார் பதவியை விட்டு விலகி ஓடும்படிச் செய்யப்பட்டது.



65 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இந்த நிலவரம், அ.தி.மு.க. அரசுக்குத் தெரியாதா? எம்.ஜி.ஆர். அவர்களே வருமான வரம்பு கொண்டு வந்து கையைச் சுட்டுக்கொண்டாரே! மாணவர்கள் குறைந்தால் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து, சரி செய்ய வேண்டுமே தவிர, குல்லாய்க்கு ஏற்ப தலையைச் சீவக்கூடாது!



இது பணப் பிரச்சினையல்ல - தலைமுறை தலைமுறையாக கல்வி மறுக்கப்பட்ட சமுதாயத்தின் தலையை நிமிர்த்தும் மிகப்பெரும் சமூகப் பிரச்சினை! இதில் வேண்டாம் விஷப் பரீட்சை!

அ.தி.மு.க. அரசு பாம்புப் புற்றுக்குள் கைவிட ஆசைப்படுகிறதா? எரிமலையை எழுப்ப வேண்டாம். சமூகநீதியில் கை வைத்தால், நாடே தீப்பற்றி எரியும் - ஜாக்கிரதை!



பாதிக்கப்படுவோர் யார்?



இன்னும் நூற்றுக்கு நூறு கல்வி என்ற  நிலையை எட்டவில்லை. வகுப்புகளை இழுத்து மூடினால் அந்தப் பிள்ளைகள் எங்கே போய்ப் படிப்பார்கள்? இதில் பாதிக்கப்படுவோர் - உயர்ஜாதியினரோ,  செல்வந்தர்களோ அல்ல; ஒடுக்கப்பட்ட மக்களும், கிராமப்புற மக்களும்தான்

ஏற்கெனவே விவசாயிகள் வெந்து மடிந்து கொண்டுள்ளனர். வேண்டாம் இந்த விபரீதம்! புலிவாலை மிதிக்கவேண்டாம்!

எச்சரிக்கை! எச்சரிக்கை!!
                           கி.வீரமணி,
தலைவர்                                                   திராவிடர் கழகம்.

20-04-2018

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக்கான ஆசிரியர் -மாணவர் விகிதம் அட்டவணை ( 18.04/2018-ன் படி )

​ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்தல் சார்ந்த பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண் 055838-நாள்:18.04/2018-ன் படி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக்கான ஆசிரியர் -மாணவர் விகிதம் அட்டவணை