யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/9/16

கவுன்சிலிங்; ஆசிரியர்கள் அதிருப்தி

கம்ப்யூட்டர் சர்வர் பிரச்னை காரணமாக, ஆசிரியர் இட மாறுதல் கவுன்சிலிங் விடிய, விடிய நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில், ஆசிரியர்களுக்கான இட மாறுதல், கவுன்சிலிங், ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், நேற்று நடந்தது. மாநிலம் முழுவதும்,பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு, 41 பேர் விண்ணப்பித்திருந்தனர்.


கவுன்சிலிங் துவங்கிய சில நிமிடங்களில் சர்வர் பிரச்னை'ஏற்பட்டு, காலதாமதமானது. பணி மூப்பு அடிப்படையில், நேரடியாக கவுன்சிலிங் நடத்துவதிலும், காலதாமதம் ஏற்பட்டது. இதனால், ஆசிரியர்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.

நேற்று இரவு, 11:00 மணி வரை, திருப்பூரில் விண்ணப்பித்திருந்த, 9 பேருக்கு மட்டுமே மாறுதல் கிடைத்தது. அதன்பின், ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் விடிய விடிய நடந்தது. காலதாமதம் காரணமாக, குழந்தைகளுடன் வந்திருந்த ஆசிரியைகள் அவஸ்தைப்பட்டனர்.

அரசு ஐ.டி.ஐ.,யில் காலி இடங்கள்; விண்ணப்பிக்க அழைப்பு

கொல்லிமலை அரசு ஐ.டி.ஐ.,ல் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொல்லிமலை அரசு ஐ.டி.ஐ.,யில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, தகுதியானவர்களிடமிருந்து இன சுழற்சி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 


அலுவலக உதவியாளர் இரண்டு இடங்களுக்கு, 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பொது பிரிவில் முன்னுரிமையில் ஒரு இடமும், இரண்டாம் இடம் எஸ்.சி.ஏ., (ஆதரவற்ற விதவை) அல்லது எஸ்.சி.ஏ., (பெண்) விண்ணப்பதாரர்கள் மூலம் நிரப்பப்படவுள்ளது. 

பணிமனை உதவியாளர், மின்பணியாளர் பிரிவில் உள்ள ஒரு பணியிடத்திற்கு என்.டி.சி.,/என்.ஏ.சி., சான்றிதழ் பெற்றவர்கள், பணிமனை உதவியாளர் பொருத்துனர் பதவிக்கு என்.டி.சி.,/என்.ஏ.சி., சான்றிதழ் பெற்ற எஸ்.சி.,- எஸ்.சி.ஏ., விதவை, ஆதரவற்ற விதவைகளும், பணிமனை உதவியாளர் பணியிடத்திற்கு, கம்மியர், டீசல் பிரிவில் தகுதி பெற்ற, மிகவும் பிற்பட்டோர் பிரிவில் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. 

தகுதியானவர்கள் தங்களது விண்ணப்பத்தை பயிற்சி உதவி இயக்குனர், அரசினர் தொடர் அறிவுரை மையம், சேலம் - 7 என்ற முகவரிக்கு, வரும், 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்கக் வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்கள் ஆசிரியர்களைத்தான் கவனிக்கின்றன!

ஒன்றா… பலவா… எது சிறந்தது? - இதுதான் அறிவுலகின் மிகப் பழமையான கேள்வி. ஒன்றுதான் சிறந்தது என்பது அறிவுலகம் எழுதிய பழைய விடை. விடையை விளக்க எண்ணற்ற கதைகள்!

பூனை - நரிக் கதை அவற்றில் ஒன்று. இந்தக் கதை இல்லாத நாடு கிடையாது. கீழை நாடுகளில் பூனை நரி. மேற்கு நாடுகளில் முள்ளம்பன்றி - நரி!

கதை இதுதான். பூனையும் நரியும் நண்பர்கள். ஒருநாள், ‘உனக்கென்ன தெரியும்? எனக்கென்ன தெரியும்?’ என்று இரண்டும் பேசிக்கொள்கின்றன. ‘எனக்குச் சிறுசிறு உபாயங்கள் பல தெரியும்’ என்றது நரி. ‘எனக்கு ஒரே ஒரு பெரிய உபாயம் தெரியும்’ என்கிறது பூனை.


சற்று நேரத்தில் வேடர்கள் வருகிறார்கள். அவர்களுடன் வேட்டை நாய்கள் வருகின்றன. தப்பிக்கப் பல உபாயங்கள் செய்தும் நரியால் முடியவில்லை. நாய்களிடம் மாட்டிக்கொள்கிறது. பூனைக்கு மரம் ஏறத் தெரியும். சரசர என்று மரத்தில் ஏறித் தப்பிக்கிறது. ‘எனக்குத் தெரிந்த ஒரே உபாயத்தால் தப்பித்துவிட்டேன் பார்’ என்று மாட்டிக்கொண்ட நரியைப் பார்த்துச் சொல்கிறது பூனை.

பல வேண்டாம்; ஒன்று போதும்

பல வேண்டாம்; ஒன்று போதும் என்பது கதையின் நீதி. பிரச்சினையைச் சுலபமாக்கி வழங்கப்பட்ட நீதி. இன்று கேள்விக்குள்ளாக்கப்படுகிறது அதே நீதி!

காலம் மாற மாற, மாற்றத்துக்கேற்ற திறன்கள் தேவைப்படுகின்றன. இப்போது ஒன்று போதாது; பல வேண்டும் - இது பன்மையைப் போற்றும் காலம்!

மரத்தில் ஏறித் தப்பிக்கையில், மரத்தில் மலைப் பாம்பு இருந்தால் பூனை என்ன செய்யும்? - எனப் புதுக் கேள்விகள் எழுந்தபோது பழைய நீதி தடுமாறியது.

2008 பொருளாதார வீழ்ச்சியின்போது, ஒற்றை நோக்குப் பெருநிறுவனங்கள் தோல்வியைத் தழுவ, பல சிறு திறன் கொண்ட நிறுவனங்கள் தாக்குப்பிடித்து நின்றதை நாம் அறிவோம்.

இன்று வரை, ‘ஒன்றுதான் சிறந்தது’ என்ற பிடிவாதம் ஊன்றிக் கிடக்கும் இடம் - பள்ளிக்கூடம். அது முன்வைக்கும் ஒன்று - தேர்வு!

விளையாட்டு, கலை, தொழில்திறன் - எல்லாம் இருக்கட்டும் ஒரு ஆறுதலுக்கு. நாய்கள் துரத்தும்போது இதிலொன்றும் சரிப்படாது. தேர்வுதான் காப்பாற்றும் சக்தி! அது அளந்து சொல்வதுதான் உன் அறிவு. ‘வனத்துல திரிஞ்சாலும் இனத்துல வந்து அடை’ என்று சொலவடை சொல்வதுபோல, அங்கே, இங்கே போய் லேசாக எட்டிப் பார்த்தாலும், கடைசியில் பரீட்சை ஹாலுக்கு வந்து சேர்!

வகுப்பறைகள் விதிவிலக்கா?

சில நீதிகளை, நம்பிக்கைகளைத் தலைகுப்புறக் கவிழ்த்துத்தான் புதிய சிந்தனை பிறந்திருக்கிறது. பூமிதான் பிரபஞ்சத்தின் மையம் என்ற கருத்து கவிழவில்லையா? கடவுளே கலை இலக்கியப் படைப்புகளின் மையம் என்ற நிலை மாறி, மனிதனே மையம் என்ற மறுமலர்ச்சி தோன்றவில்லையா? வகுப்பறைகள் விதிவிலக்கா?

விழிப்புணர்வு காணாத இடமல்ல வகுப்பறை. ‘ஆசிரியரே மையம்’, ‘விவரித்தலே கற்பித்தல்’ என்ற போக்குகள் ஆட்டங்கண்டு வருகின்றன. பள்ளிக்கு வருமுன் அவர்களுக்கு எதுவும் தெரியாது. அல்லது ஒவ்வொன்றையும் தவறாகப் புரிந்துவைத்திருப்பார்கள்’ என்று குழந்தைகள் குறித்த பள்ளி மதிப்பீடுகள் தகர்ந்துவருவதும் உண்மை.

மனதுக்கு இதமான சிறு சிறு முயற்சிகள் ஆங்காங்கே தென்படுகின்றன. ஆனால், குழந்தைகளின் ஓராயிரம் ஆற்றல்களை மலர வைக்கும் பெருமாற்றம் நிகழ்ந்துவிடவில்லை. உலகெங்கும் பள்ளித் தேர்வுமுறை இளக்கம் பெற்று வரும்போது, இந்தியாவில் அது மேலும் மேலும் இறுகிவருகிறது. தேர்வு என்ற ஒன்றை நோக்கிப் பிள்ளைகளைத் துரத்துவதும், குழந்தைகளுக்குள் இருக்கும் கலைஞர்களையும், விஞ்ஞானிகளையும், வீர வீராங்கனைகளையும் பிரித்து வெளியேற்றுவதும் உக்கிரமாய்த் தொடர்கிறது.

இயல்புப்படுத்துவது (normalisation) என்ற பெயரில் நடக்கும் சமூக அதிகாரம் குறித்து பூக்கோ (Foucault) நிறையப் பேசுவார். சம்பளம் வாங்குகிறார்கள் என்ற அடிப்படையில் ஆசிரியர்கள் மீதும், சம்பளம் வாங்கத் தயாராகிறார்கள் என்ற அடிப்படையில் மாணவர்கள் மீதும் இயல்புப்படுத்துவது என்ற அதிகாரம் பள்ளியில் பாய்கிறது. தேர்வுதான் பள்ளியின் இயல்பு. விலகினால்? ‘‘நாளைக்குப் பரீட்சை. இன்னைக்கு மேட்ச் ஆடப் போறேங் கிறான்… சுத்தக் கிறுக்கன்!”ஆற்றல்களைப் பறிகொடுத்த ஆசிரியர்களுக்கும் கணக்கில்லை. கலைத்திறன்கொண்ட ஆசிரிய நண்பரைப் பாராட்டிச் சொன்னபோது, நிர்வாகி என்னிடம் சலித்துச் சொன்னார், ‘‘பாட்டெல்லாம் நல்லாத்தான் பாடுவாரு.. ஆனா, ரிசல்டைத்தான் காணோம்!”

ஆசிரியரைப் பல கண்கள் கவனிக்கின்றன. அசட்டையாகச் சில கண்கள்; ஆதங்கத்துடன் சில கண்கள்; எப்போதும் விமர்சனத்துடன் சில கண்கள்.

ஆனால் இளங்கண்கள்... எதிர்காலத்தின் கண்கள் நம்பிக்கையுடன் பார்ப்பது ஆசிரியரை மட்டுமே. தங்களையும் தங்கள் திறன்களையும் கண்டுபிடித்துக் கொடுக்க இவரால் முடியும் என்ற எதிர்பார்ப்புடன் கவனிக்கின்றன. ஆசிரியரின் பெருமை - இந்தக் கண்களும் கண்களின் எதிர்பார்ப்புகளும்தான்!

போக வேண்டிய தூரமும், தாண்ட வேண்டிய தடைகளும் ஏராளம் இருக்கின்றன. தேர்வு தாண்டிக் குழந்தைகளைப் புரிந்துகொள்வதும், கொண்டாடு வதும்தான் எடுத்துவைக்க வேண்டிய முதல் எட்டு.

- ச.மாடசாமி, 
ஓய்வுபெற்ற ஆசிரியர். ‘எனக்குரிய இடம் எங்கே?’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். 
தொடர்புக்கு: smadasamy1947@gmail.com

நீட்' தேர்வுக்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி

ஒருங்கிணைந்த தேசிய நுழைவு தேர்வான, ஜே.இ.இ., மற்றும் மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வுகளை, அரசு பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ள, சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்திய உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களான ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற இன்ஜி., கல்லுாரிகளில் சேர, ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில், தனியார் மருத்துவ கல்லுாரிகளில் சேர, நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பல ஆண்டுகளாக நடக்கும்,
இதுபோன்ற நுழைவு தேர்வுகளில், தனியார் பள்ளி மாணவர்களே, அதிக அளவில் தேர்ச்சி பெறுகின்றனர். அரசு பள்ளி மாணவர்களும், இந்த நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறும் வகையில், பாடம் எடுக்கும் முறையில், புதுமை கொண்டு வரப்பட்டுள்ளது. ஆர்.எம்.எஸ்.ஏ., எனப்படும், அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கத்தில், 'ராஷ்ட்ரீய அவிஷ்கார் அபியான்' என்ற, தேசிய செயல்வழி கற்றல் திட்டத்தில், இந்த புதுமை திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதில், 70 ஆயிரம் ஆசிரியர்கள் சிறப்பு பயிற்சி பெற உள்ளனர்.
ஐ.ஐ.டி., மும்பை பேராசிரியர் அரவிந்த் குப்தா, இந்திய உயிரியல், சூழலியல் வல்லுனர் சுல்தான் இஸ்மாயில் போன்றோர், மாநில அளவில், 64 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.
இவர்கள் வழியாக, மாவட்ட ஆசிரியர் பயிற்றுனர்களுக்கும், பின், பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. நிபுணர்களின் பயிற்சிகள் வீடியோ எடுக்கப்பட்டு, 'யூ டியூபிலும்' பதிவேற்றப்பட உள்ளது.

இதுகுறித்து, தமிழக ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் அறிவொளி கூறியதாவது: பாடத்தில் உள்ள அம்சங்களை, பார்முலாக்களை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என, பயிற்சி அளிக்கப்படும். 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி திட்டம் அமலாகும். இதனால், இனி வரும் காலங்களில், அரசு பள்ளி மாணவர்கள், நுழைவு தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

பிளஸ் 2 காலாண்டு தேர்வு நாளை மறுநாள் துவக்கம்

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு, நாளை மறுநாள் துவங்குகிறது. தமிழகத்தில், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை பின்பற்றும் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் இந்த தேர்வுக்கு தயாராகும் வகையில், கடந்த ஆண்டு அரையாண்டு தேர்வானது, பொது வினாத்தாள் மூலம் ஒரே
நாளில் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு காலாண்டு தேர்வையும், பொதுவான தேர்வாக நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி, நாளை மறுநாள், தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வு துவங்கி, செப்., 23ல் முடிவடைகிறது.

நல்லாசிரியர் விருது தேர்வு குழுக்கள் அதிர்ச்சி : 'நல்ல ஆசிரியர்கள்' தகுதி இழந்த சோகம்

கல்வித்துறையில் அரசியல் மற்றும் அதிகாரிகள் சிபாரிசுகளால், மாநில நல்லாசிரியர் விருது பட்டியலில் தேர்வான ஆசிரியர்கள் பலருக்கு வாய்ப்பு நழுவியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால், விருதுக்கு பரிந்துரைத்த தேர்வு குழுக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.


ஒவ்வொரு ஆண்டும் : ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் 'நல்லாசிரியர்' விருது வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணி அனுபவம். பணிக்காலத்தில் புகாருக்கும், துறை ரீதியான நடவடிக்கையில் சிக்கியிருக்க கூடாது. மாணவர் நலனில்
ஆசிரியர் பங்கு போன்றதகுதிகளின் அடிப்படையில் விருதுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.
மாவட்டம் வாரியாக முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், தொடக்கக் கல்வி அலுவலர் கொண்ட தேர்வுக் குழு, விண்ணப்பித்த மொத்த ஆசிரியர்களின் தகுதியை ஆய்வு செய்து, நேர்காணல் நடத்தி, ஒன்று முதல் ஆறு வரை 'ரேங்க்' வழங்கிய பட்டியலை இயக்குனருக்கு அனுப்பி வைக்கும். இதில் இருந்து கல்வி மாவட்டம் வாரியாக உயர்நிலை மேல்நிலை, தொடக்கக் கல்வி, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள், விருதுக்கான இறுதிப் பட்டியலில் தேர்வு செய்யப்படுவர்.
இந்த ஆண்டு 379 பேர் தேர்வு செய்யப்பட்டனர். சில அமைச்சர்கள், அதிகாரிகள் சிபாரிசால் ௫,6வது, 'ரேங்க்' பெற்ற ஆசிரியரும், தேர்வுக் குழு பரிந்துரைக்காத ஆசிரியரும் இடம் பெற்றதாக சர்ச்சை எழுந்துள்ளது.

ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: நல்லாசிரியர் விருது தேர்வில் ஒவ்வொரு ஆண்டும்
சிபாரிசு சர்ச்சை எழுகிறது. தேர்வு குழுக்கள் பரிந்துரைக்காத சிலரும் இடம் பெற்றுள்ள தகவல் அதிர்ச்சியாக உள்ளது. ஒரு மாவட்டத்தில், வருவாய் அலுவலரின் (டி.ஆர்.ஓ.,) பள்ளி நண்பர் என்பதால், அவருக்கு விருது கிடைத்துள்ளது. ஒரு மாவட்டத்தில், தகுதி இருந்தும் சங்க நிர்வாகி என்பதால் அவருக்கு மறுக்கப்பட்டுள்ளது; இது எவ்விதத்தில் நியாயம். இப்பிரச்னை குறித்து சிறப்புக் குழு நியமித்து விசாரிக்க வேண்டும், என்றனர்.

அமைச்சர் மாற்றம் எதிரொலித்ததா : முதன்மை கல்வி அலுவலர்கள் பரிந்துரைத்த பட்டியலில் இருந்து இறுதி பட்டியல் முடிவு செய்யப்பட்ட நிலையில், ஆக.,29ல் கல்வி அமைச்சர் பெஞ்சமின் மாற்றப்பட்டார். புதிய அமைச்சராக பாண்டியராஜன் ஆக.,30ல் பொறுப்பேற்றார்.
செப்.,2 மாலையில் இயக்குனர் அலுவலகத்தில் இருந்து நல்லாசிரியர் விருதுக்கு தேர்வானோர் பட்டியல், தபால் மூலம் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. செப்.,3 காலை விருது பெற்றோர் விபரம் வெளியிடப்பட்டது. ஆக.,29 முதல் செப்.,2க்குள் இறுதி பட்டியலில் சிலரது பெயர் சேர்க்கப்பட்டதாகவும், சிலர் பெயர் நீக்கப்பட்டுள்ளதாகவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஒரே ஒரு ஆசிரியர் பள்ளிகள் எத்தனை

முன்னாள் இந்திய ஜனாதிபதி மறைந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்., 5ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. நேற்று ஆசிரியர் தினம் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகியும் இந்தியாவில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணிபுரியும் பள்ளிகள் இன்னும் செயல்படுகின்றன. அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் இருந்தால் அங்கு தரமான கல்வி எப்படி மாணவர்களுக்கு கிடைக்கும். இந்நிலை வருத்தத்துக்குரியது தான்.


ஓராசிரியர் பள்ளிகளில் ஆசிரியர் தான் அனைத்துமே கிளர்க், வார்டன், உதவியாளர் என அனைத்து பணிகளையும் ஆசிரியரே செய்ய வேண்டும்.2014 - 15 கல்வி ஆண்டு கணக்கின்

படி இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 1,05,630 பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியருடன்
செயல்படுகின்றன என பார்லிமென்ட்டில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஓராசிரியர் பள்ளிகள் அதிகமுள்ள மாநிலங்களில் முதலிடத்தில் மத்திய பிரதேசம் உள்ளது. இங்கு 17, 874 பள்ளிகள் ஓராசிரியருடன் செயல்படுகின்றன.

4 மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் யூனியன் பிரதேசங்கள் சிறப்பாக உள்ளன. டாமன் மற்றும் டையூ, புதுச்சேரி, சண்டிகார், லட்சத்தீவு ஆகிய 4 யூனியன் பிரதேசங்களில் ஓராசிரியர் பள்ளிகளே இல்லை.30 அனைவருக்கும் கட்டாய மற்றும் இலவசக் கல்வி சட்டத்தின் படி, இந்தியாவில் 30 - 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.

ஊதியம் பிடித்தம் ஆசிரியர்கள் அதிர்ச்சி

சிவகங்கை: ஆசிரியர்களின் ஆக., மாத ஊதியத்தில் எவ்வித முன்னறிவிப்புமின்றி ரூ.150 வரை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு இ.சி.எஸ்., முறையில் ஊதியம் வழங்கப்படுகிறது. தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களில் பலருக்கு ஆக., மாத ஊதியத்தில் ரூ.150 வரை பிடித்தம் செய்யப்பட்டது. குழப்பம் அடைந்த ஆசிரியர்கள் உதவித்தொடக்க கல்வி அலுவலகத்தை அணுகினர்.

அவர்களுக்கும் பணம் பிடித்த விபரம் தெரியவில்லை. கருவூல அதிகாரிகளிடம் விசாரித்தபோது அஞ்சலக காப்பீட்டு திட்டத்தில் பணம் செலுத்துவோரிடம் சேவை வரி பிடித்தம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எந்தவித முன்னறிவிப்புமின்றி கருவூல அதிகாரிகள் பணம் பிடித்தம் செய்ததற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டி கூறியதாவது: சம்பளம் பெற்று தரும் அலுவலர்களான உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கே பணம் பிடிக்கப்பட்டது குறித்து தெரியவில்லை. இதனால் தேவையில்லாத குழப்பம் ஏற்பட்டது. பணம் பிடித்தம் செய்வது குறித்து இனிவரும் காலங்களில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும், என்றார்.

தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற கோரி 29-இல் ஆர்ப்பாட்டம்: பிரின்ஸ் கஜேந்திரபாபு

சென்னை: மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, செப். 29-இல் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தார்.

 "தேசிய கல்விக் கொள்கை 2016 வரைவுக்கான சில உள்ளீடுகள்'  என்ற ஆவணத்தில் கூறப்பட்டுள்ள கொள்கை முன்மொழிவுகளை திரும்பப் பெறக் கோரி, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு, சமத்துவக் கல்விக் கான கூட்டமைப்பு ஆகியன இணைந்து நடத்திய கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
 இதில் பங்கேற்ற கஜேந்திரபாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 மாணவர்கள், ஆசிரியர்களைப் பாதிக்கும் வகையில் உள்ள பல்வேறு இடர்பாடுகளைத் திரும்பப் பெறக் கோரி, சென்னையில் செப்டம்பர் 29-இல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
 இதைத் தொடர்ந்து புது தில்லியில் நாடாளுமன்றம் தொடங்கும் வாரத்தில் அனைத்துக் கட்சிகள் சார்பில் அகில இந்திய அளவிலான கருத்தரங்கமும், ஆர்ப்பாட்டமும் நடைபெறும்.
 இந்தப் பிரச்னை தொடர்பாக தமிழக அரசு சட்டப்பேரவையில் கருத்துகளை இன்னும் வலிமையாக, ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுமாறு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து, அவர்களையும் ஒருங்கிணைத்து செயல்படுவோம் என்றார்

தேசிய தரவரிசை பட்டியல் தயாரிக்கப் பதிவு: கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை: 2017-ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான உயர் கல்வி நிறுவனங்கள் தரவரிசை பட்டியலை தயாரிக்க, அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் செப்டம்பர் 30-க்குள் பதிவு செய்யுமாறு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

  உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி, ஆராய்ச்சியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் "தேசிய உயர்கல்வி தரவரிசைத் திட்டம்' எனும் புதிய திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 2015-இல் அறிமுகம் செய்தது.
 இதன்படி, பொறியியல், மேலாண்மைக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், மருந்தாளுநர் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இதில், சென்னை ஐஐடி முதலிடத்திலும், முதல் 50 ரேங்க்கில் தமிழகத்தைச் சேர்ந்த 11 பொறியியல் கல்வி நிறுவனங்களும் இருந்தன.
 இந்த நிலையில், 2017 ஆம் ஆண்டுக்கான பட்டியல் வெளியிடுவதற்கான நடைமுறைகளை தொடங்கப்பட்டுள்ளன. இதனால், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ), பல்கலை.  மானியக் குழு (யுஜிசி) ஆகியவற்றின் கீழ் வரும் அனைத்துக் கல்வி நிறுவனங்களும்  www.nirfindia.org  என்ற இணையதளத்தில் செப்டம்பர் 30-க்குள் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 இதுகுறித்து சென்னையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை செயலர் வினைய் ஷீல் ஒப்ராய் கூறுகையில், "கடந்த முறை 3,650 கல்வி நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்றன. இந்த முறை 10 ஆயிரத்துக்கும் கல்வி நிறுவனங்கள் பங்கேற்கலாம்' என்றார்.

அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வு டிசம்பர் 23-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வு டிசம்பர் 23-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.தமிழக அரசு பணியில் இருக்கும் ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் பதவி உயர்வுக்கானதுறைத்தேர்வுகள் ஆண்டுக்கு 2 தடவை (மே, டிசம்பர்) டிஎன்பிஎஸ்சி-யால் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான 2-வது துறைத்தேர்வு டிசம்பர் 23-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது.இதற்கு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா அறிவித்துள்ளார்.

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசு

சென்னை: மாநகராட்சி பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு மேயர் சைதை துரைசாமி பரிசு தொகைகளை  வழங்கினார்.  இதுகுறித்து, பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை: 2016ம் ஆண்டு அரசு பொதுத் தேர்வின் தேர்ச்சி விகித அடிப்படையில் 10ம்  வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்து விளங்கிய 1,063
மாணவர்களுக்கான ரொக்கப் பரிசுத் தொகை  ரூ.15 லட்சத்து 59 ஆயிரமும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்து  விளங்கிய 399 மாணவ, மாணவிகளுக்கு ரூ.5 லட்சத்து 78 ஆயிரத்மும், மொத்தம் 1,462 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.21 லட்சத்து 37 ஆயிரத்திற்கான  பரிசுத்தொகையை மேயர் சைதை துரைசாமி வழங்கினார். 

பெருநகர சென்னை மாநகராட்சியில் 20 வருடம் விபத்து ஏற்படுத்தாமல் ஓட்டுநராக பணியாற்றிய, பணிபுரியும் ஓட்டுநருக்கு  தலா 4 கிராம்  வீதம் 27 ஓட்டுநர்களுக்கு   108 கிராம் தங்க நாணயங்ளையும் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசின் கொள்கை சரியா ஆசிரியர்கள் கருத்து சொல்ல வேண்டும்

சென்னை:அரசின்  கொள்கைகளில்  எது சரி, எது மாற்ற வேண்டும் என்பதில்  ஆசிரியர்கள் கருத்து சொல்ல வேண்டும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.  பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 379 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. சாந்ேதாம் செயின்ட் பீட்ஸ் பள்ளியில் நடந்த இந்த விழாவில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா தலைமையுரையாற்றினார்.
379 ஆசிரியர்களுக்கு விருது வழங்கி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது: தமிழக பள்ளிகளில் பணியாற்றும் 5 லட்சத்து 58 ஆயிரம் ஆசிரியர்களில் விருது பெறும் 379 ஆசிரியர்கள் தான் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள். ஆசிரியர்கள் மன நிலையில் இருந்து இப்போது நான் பேசப்போகிறேன். ஆசிரியர்கள் எண்ணம் எப்படி இருக்கும் என்ற நிலையில் நான் பேசப் போகிறேன். ஆசிரியர் தொழில் மகிமைப்படுத்தப்பட்டது என்றால் அவர்கள் செய்த பணி சாதனை மிக்கது.

ஆனால் ஆசிரியர்கள் முன்னால் 17 சவால்கள் இருக்கின்றன. இந்த சவால்களை வெற்றிகொள்ள ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது முக்கியம். நாம் வாழும் உலகம் மாறிவிட்டது. பல நாடுகளில் எல்லைக் கோடுகள் மாறியுள்ளன. வகுப்பறைகள் மாறிவிட்டன. இதன் காரணமாக ஆசிரியர்களுக்கு மரியாதை என்பதும் குறைந்துவிட்டது. அதனால் ஆசிரியர்கள் தங்கள் மரியாதையை தக்க வைத்துக் கொள்ள மாணவர்களுக்கு என்ன தர வேண்டும்.  என்ன செய்தால் தொழிலை தக்க வைக்க முடியும். ஆசிரியர்களிடத்தில் மாணவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை ஆசிரியர்கள் உற்று நோக்க வேண்டும். 

வகுப்பில் கடைசி வரிசையில் உள்ள மாணவர்களுக்கு என்ன திறமைகள் உள்ளன என்பதை ஆசிரியர்கள் கவனிக்க வேண்டும். அவற்றை வெளியில் கொண்டுவரும்  உந்துதல் சக்தி ஆசிரியர்களிடம் உள்ளதா என்றும் கவனிக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள். அதை கற்க விரும்புகிறார்களா, வாழ்வாதார திறன், வாழ்வியல் திறன், கற்றுக் கொள்ளும் திறன்  ஆகியவற்றை மாணவர்களுக்கு தருவதற்கு ஆசிரியர்களிடம் திறமை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஆசிரியர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவிகரமாக இருக்க வேண்டுமே தவிர, ஒருவருக்கு ஒருவர் கோள் சொல்லக்கூடாது.  அரசின் கொள்கைகளாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும். என்ன கொள்கைகளை அரசு உருவாக்க வேண்டும், என்ன செய்தால் நன்றாக இருக்கும், எது சரி, எதை மாற்ற வேண்டும் என்று ஆசிரியர்கள் அரசுக்கு சொல்ல வேண்டும். ஆசிரியர்கள் குரல்களுக்கு இந்த அரசு மதிப்பளிக்கும். தரமான, பேரளவிலான கல்வியை கொண்டு வருவது எப்படி,  அதற்கேற்ப பாடத்திட்டத்தை எப்படி மாற்றி அமைக்க வேண்டும் என்பதில் ஆசிரியர்கள் கருத்து சொல்வதுடன் சாதக பாதகங்களை எடுத்து சொல்ல வேண்டும். 

மாணவர்களுக்கு தொழில்முனைப்புடன் கூடிய கல்வியை தர வேண்டும். தொழில் கல்விக்கு முக்கியத்துவம் தர வேண்டும். இயற்கையாகவே மாணவர்களிடம் அந்த உணர்வை உருவாக்குவது ஆசிரியர்கள்தான். இந்த சவால்கள் முக்கியமானவை. அதற்காக அரசுடன் ஆசிரியர்கள் இணைந்து செயல்படுத்திக் காட்ட வேண்டும். இன்னும் பல மைல்கள் நாம் பயணிக்க வேண்டியுள்ளது. அடுத்த தலை முறை ஆசிரியர்கள் கையில்தான் உள்ளது. கனவுகளுக்கு வடிவம் கொடுக்க கூடிய திறமை ஆசிரியர்கள் கையில்தான் உள்ளது. இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் பேசினார். 

பள்ளி தேர்வுகள் ஆதார் திட்டத்துடன் இணைப்பு.

பீஹாரில் மாநில தேர்வில் நடந்த முறைகேட்டை அடுத்து, தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களின் ஆதார் எண்களை தேர்வுக்கான படிவத்தில் குறிப்பிட வேண்டும் என்ற நடைமுறையை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது. 
இதனால் போலிகள் தவிர்க்கப்படுவதுடன், அவர்களை பற்றிய விபரங்களையும் எளிதில் கையாளலாம்.பீஹாரில் இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடக்கும் பள்ளி தேர்வுகளிலேயே இந்த நடைமுறையை அமல்படுத்த பீஹார் பள்ளி தேர்வுத்துறை கழகம் திட்டமிட்டுள்ளது. தேர்வுகளை ஆதார் திட்டத்துடன் இணைத்த முதல் மாநிலம் பீஹார் என்பது குறிப்பிடத்தக்கது.ஆதார் எண் வைத்திருக்கும் மாணவர்கள் தேர்வுக்கான படிவத்தில் அதை குறிப்பிட வேண்டும். ஆதார் எண் இல்லாத மாணவர்கள் அதற்காக விண்ணப்பித்து பெற்று, அதனை குறிப்பிட வேண்டும் என பள்ளி தேர்வு கழக தலைவர் ஆனந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்

'டிப்ளமோ நர்சிங்' படிப்புக்கு 6ம் தேதி முதல்விண்ணப்பம்

'டிப்ளமோ நர்சிங்' என்ற, இரண்டு ஆண்டு படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், வரும், 6ம் தேதி துவங்குகிறது. தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் என, 27 இடங்களில், இரண்டு ஆண்டு டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு, 2,100 இடங்கள் உள்ளன. 
இந்த படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், வரும், 6ம் தேதி துவங்குகிறது.அரசு மருத்துவ கல்லுாரிகள், நர்சிங் பயிற்சி பள்ளிகள்உள்ள, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில், வரும், 15ம் தேதி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.'பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், வரும், 16ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். விண்ணப்பங்களை, www.tnhealth.org என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்' என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

செப். 21-இல் எம்.பி.பி.எஸ். 2-ஆம் கட்டக் கலந்தாய்வு

எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு செப். 21-இல் தொடங்கும் என தேர்வுக் குழு அதிகாரிகள் கூறினர்.இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளின்படி. மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
மத்திய அரசு பிறப்பித்த அவசரச் சட்டம் காரணமாக, தமிழகத்தில் நிகழ் கல்வி ஆண்டில் (2016-17) "நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அல்லாமல், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் முதல் கட்டக் கலந்தாய்வு சென்னையில் ஜூன் 21 முதல் 25 வரை நடைபெற்றது.நிரப்பப்பட்ட இடங்கள்: சென்னை மருத்துவக் கல்லூரி உள்பட 21 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில ஓதுக்கீட்டுக்கு உரிய 2,383 எம்.பி.பி.எஸ். இடங்கள், சுயநிதி கல்லூரிகளின் 470 அரசு ஒதுக்கீட்டு இடங்கள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியின் 85 பி.டி.எஸ். இடங்கள் ஆகியவற்றை நிரப்ப முதல் கட்டக் கலந்தாய்வு நடைபெற்றது.முடிவில் 21 அரசு கல்லூரிகளின் 2,383 இடங்கள் நிரப்பப்பட்டன; சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள 72 இடங்களும், பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 7 பி.டி.எஸ். இடங்களும் காலியாக இருந்தன.122 இடங்கள்: கலந்தாய்வில் பங்கேற்று மாணவர்கள் கல்லூரிகளில் சேராததால் 122 காலியிடங்கள் உள்ளன. இதேபோன்று அரசு பி.டி.எஸ். காலியிடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்துள்ள 970 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். காலியிடங்களை நிரப்பவும் இரண்டாம் கட்டக் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அகில இந்திய ஒதுக்கீடு காரணமாக...:

அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் 15 சதவீத எம்.பி.பி.எஸ். இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த இடங்களை "நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மத்திய சுகாதாரத் துறை நிரப்ப உள்ளது. இதன் பிறகு தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்கள் குறித்த விவரத்தை செப். 20-இல் அளிப்பதாக மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டக் கலந்தாய்வு சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கில் 21-இல் தொடங்கும் என்று தேர்வுக் குழு அதிகாரிகள் கூறினர்.

பாடப் புத்தகங்களில் முப்பரிமாணத் தொழில்நுட்பம்!

தமிழகக் கல்வித் துறை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய செயலி (மொபைல் ஆப்) மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் பாடப் புத்தகங்களில் உள்ள படங்களை முப்பரிமாணத் தோற்றத்தில் பார்த்து கற்கலாம். மேலும், விடியோ காட்சிகள் மூலமும் கல்வி கற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் தரமான கல்வியையும், அதற்கேற்ப தரமானபுத்தகங்களையும் ஆண்டுதோறும் மேம்படுத்தி பள்ளிக் கல்வித் துறை வழங்கி வருகிறது.அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தும் முயற்சிகளை கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (NCERT) மேற்கொண்டுள்ளது.இந்த கவுன்சில் தேசிய அளவில் மாணவர்களிடையே அறிவுக் கூர்மையைக் கண்டறியும் திட்டம் (NATIONAL TALENT SEARCH SCHEME) மூலம் அவர்களின் கல்வித் திறனை அங்கீகரித்து ஊக்கப்படுத்துகிறது.முப்பரிமாணத்தில் பாட விளக்கம்: அந்த வகையில், தமிழக பள்ளிக் கல்வித் துறை பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் அறிவியல் பாடங்களை எளிதாகவும், முழுமையாகவும் கற்கும் விதத்தில் படங்களை முப்பரிமாணத் தோற்றத்துடனும் (3D), படக் காட்சிகள் வாயிலாகவும் அறிந்துகொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது.உடல் உறுப்புகளின் செயல்பாட்டை புத்தகத்தில் உள்ள படத்திலிருந்து முப்பரிமாணத் தோற்றத்தில் தத்ரூபமாகத் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமாக அறிவியல் பாடப் புத்தகம் அச்சிடப்பட்டு நிகழாண்டில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிகல்வியில் காலியிடம் அதிகரிப்பு

இணை இயக்குனர் முதல் அலுவலக உதவியாளர் வரை காலியிடங்கள் அதிகரித்துள்ளதால், பள்ளிக்கல்வி துறையினர் நிர்வாக பணிகளில் திணறி வருகின்றனர்.தமிழக பள்ளிக்கல்வி துறையில், மேல்நிலைப் பிரிவு இணை இயக்குனராக இருந்த பழனிச்சாமி, இயக்குனராக பதவி உயர்வு பெற்று, முறைசாரா கல்வி பிரிவுக்கும், பணியாளர்பிரிவு இணை இயக்குனரான கருப்பசாமி, இயக்குனராக பதவி உயர்வு பெற்று, மெட்ரிக் இயக்குனரகத்துக்கும் மாற்றப்பட்டனர்.
இவர்களின் பதவி உயர்வால், காலியான இரண்டு இணை இயக்குனர் பணியிடங்களுக்கும், மூன்று மாதங்களாக புதியவர்கள் நியமிக்கப்படவில்லை.இடைநிலை பிரிவு இணை இயக்குனர் நரேஷ் மற்றும் தொழிற்கல்வி பிரிவு இணை இயக்குனர் பாஸ்கர சேதுபதி ஆகியோர், இரண்டு பொறுப்புகளையும், மூன்று மாதங்களாக கூடுதலாக கவனித்துவருகின்றனர்.இதுதவிர, தமிழகம் முழுவதும், 40 கல்வி மாவட்டங்களில் மாவட்ட கல்வி அதிகாரிகளான, டி.இ.ஓ., பணியிடங்கள், 32 வருவாய் மாவட்டங்களில், கூடுதல் முதன்மைக் கல்வி அதிகாரி பணியிடங்கள், மேல்நிலைப் பள்ளிகளில், 4,000க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.பள்ளிக்கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில், ஆயிரக்கணக்கில் உதவியாளர், அலுவலக பணியாளர் இடங்களும்காலியாக உள்ளதால், பள்ளிக் கல்வியின் மற்ற துறை ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டு, பெரும்பாலான பணிகள் முடங்கி உள்ளன.

இதுகுறித்து, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க தலைவர் சாமி.சத்தியமூர்த்தி கூறுகையில், ''காலியாக உள்ள அதிகாரிகள், ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்பாததால், கல்வித்துறையில் குறித்த நேரத்திற்குள் முடிய வேண்டிய பணிகள் தாமதமாகின்றன. அந்தந்த பதவிக்குரிய ஆட்களை நியமித்தால் தான் குழப்பம் தீரும்,'' என்றார்.

ஓணம் பண்டிகை: குமரி மாவட்டத்தில் 14ம் தேதி உள்ளூர் விடுமுறை

கேரள மக்களின் முக்கியப் பண்டிகையான ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 14ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில்191மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

புதுதில்லியில் செயல்பட்டு வரும் "Punjab National Bank"வங்கியில் நிரப்பப்பட உள்ள191மேலாளர்,அதிகாரிபணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ஆன்லைன் எழுத்துத் தேர்வுதேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் செய்யப்படுவார்கள்.
விண்ணப்பதாரர்கள் சம்ந்தப்பட்ட துறைகளில் இளங்கலை,முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.ஆன்லைனி எழுத்துத் தேர்வு அக்டோபர்10-ஆம் தேதி நடைபெறும். பொது,ஓபிசி,முன்னாள் ராணுவத்தினர் ரூ.400-ஐயும்,எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.50-ஐ விண்ணப்பக் கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும்.விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.pnbindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் வரும்9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வு டிசம்பர் 23-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வு டிசம்பர் 23-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.தமிழக அரசு பணியில் இருக்கும் ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் பதவி உயர்வுக்கானதுறைத்தேர்வுகள் ஆண்டுக்கு 2 தடவை (மே, டிசம்பர்) டிஎன்பிஎஸ்சி-யால் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான 2-வது துறைத்தேர்வு டிசம்பர் 23-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது.இதற்கு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா அறிவித்துள்ளார்