யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

23/3/18

பள்ளி மேலாண்மைக் குழுவினர்களுக்கான சிறப்பு கூட்டம்



அரசு பள்ளிகளுக்கு மட்டும்
23.03.2018 அன்று நடைபெற உள்ள இக்கூட்டத்திற்கு பள்ளி வங்கிக் கணக்கில் ரூ.1080 வரவு வைக்கப்பட்டுள்ளது
ஆனால் இதில் ரூ.540 மட்டும் செலவு செய்யப்பட வேண்டும். மீதத் தொகை ரூ.540 யை வட்டார வள மைய கணக்கில் செலுத்தப்பட வேண்டும்.

23.03.2018
சிறப்பு பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் மற்றும் சமூக தணிக்கை நடத்தப்பட வேண்டும்
இக்கூட்டத்தின் போது பள்ளியின் கட்டமைப்பு, மாணவர்களின் கல்வித் தரம், மாணவர்களின் சேர்க்கை.... போன்றவை விவாதிக்கப்பட வேண்டும்
சமுக தணிக்கை படிவம் ஏற்கனவே பள்ளிகளுக்கு தரப்பட்டுள்ளது.இதை பூர்த்தி செய்ய வேண்டும்
பள்ளி மேம்பாட்டுத் திட்டம் தயாரிக்க வேண்டும்
இக்கூட்டத்தில் அனைத்து SMC உறுப்பினர்களும் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொள்ள வேண்டும்
இக்கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள் அனைவருக்கும் தேநீர் செலவினம் மேற்கொள்ள வேண்டும்
இக்கூட்டத்தின் போது தேதி மற்றும் சிறப்பு பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் மற்றும் சமூக தணிக்மை என்ற விபரத்தோடு கூடிய 2×4 Flex அடித்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
கூட்ட நிகழ்வின் Documentation with photo அனுப்பப்பட வேண்டும்

பிளஸ் 1 வினாத்தாள் ஆய்வுக்கு கமிட்டி?

பிளஸ் 1 வினாத்தாள் கடினம் குறித்து ஆய்வு செய்ய, பள்ளிக்கல்வி
துறையில் நிபுணர் கமிட்டி அமைக்க உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.தமிழக மாணவர்கள், 'நீட்' போன்ற நுழைவு தேர்வுகளை எதிர்கொள்ளவும், அதற்கேற்ப அவர்களை தயார்படுத்தவும்,
பிளஸ் 1 வகுப்புக்கு, இந்த ஆண்டு முதல், பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 1 பொது தேர்வில், மாணவர்கள் சிந்தித்து பதில் எழுதும் வகையில், வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. கல்வியாளர்களும், மிகவும் தரமான வினாத்தாள்கள் என, பாராட்டியுள்ளனர்.ஆனால், மனப்பாட பயிற்சி மேற்கொண்ட மாணவர்கள், சிந்தித்து பதில் அளிக்க, சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், போனஸ்; கருணை மதிப்பெண் வேண்டும் என, பெற்றோர், மாணவர்கள் கோரியுள்ளனர்.இந்நிலையில், பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் ஆலோசனைப்படி, பிளஸ் 1 வினாத்தாளின் கடினத்தன்மை குறித்து ஆராய, நிபுணர் கமிட்டி அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கமிட்டியில், பேராசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், தேர்வுத்துறை அதிகாரிகள் இடம் பெறுவர் என, தெரிகிறது.பொது தேர்வுகள் முடிந்த பின், பிளஸ் 1 விடைத்தாள்கள், மே மாதம் திருத்தப்படும். அப்போது, மாணவர்கள் பெறும் அதிக பட்ச மதிப்பெண்ணை பொறுத்து, நிபுணர் கமிட்டி முடிவுகளை மேற்கொள்ளும். அதற்கு முன், எத்தனை கேள்விகள், மாணவர்களின் நுண்ணறிவை துாண்டின; எந்த கேள்வி களுக்கு பதில் எழுத, மாணவர்கள் திணறினர் என்பது உட்பட, பல்வேறு வகையில், ஆய்வு செய்யப்படும்.பின், மாணவர்களில் பெரும்பாலானோர், சரியாக பதில் எழுதாத கேள்விகள் அடையாளம் காணப்பட்டு, அந்த கேள்விகளுக்கு, கருணை; போனஸ் அல்லது சமநிலை மதிப்பெண் வழங்க, முடிவு செய்யப்படும் என, பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கைகொடுத்தது தமிழ் 2ம் தாள் : 10ம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சி!!!

பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் தேர்வில், வினாத்தாள் எளிமையாக 
இருந்ததால், முதல் தாளின் மதிப்பெண் இழப்பை ஈடு செய்யலாம் என, மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச், 16ல் பொது தேர்வு துவங்கியது.
இந்த ஆண்டு பொது தேர்வுகளில், வினாத்தாள்முறை மாறியிருப்பதால், மாணவர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் தேர்வுக்கு சென்றனர். அதேபோல், முதல் தாள் தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்தது. இதுவரை மொழிப்பாடங்ளின் வினாத்தாள்களை பார்த்து, பெரும்பாலும், மாணவர்கள் அச்சப்படுவதில்லை. ஆனால், இந்த முறை, தமிழ் தேர்விலேயே, மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த அதிர்ச்சியுடன், நேற்று இரண்டாம் தாள் தேர்வுக்கு, மாணவர்கள் சென்றனர். ஆனால், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போல், வினாத்தாள் எளிமையாக இருந்தது. அதுவும் மாணவர்கள் பெரிதும் நம்பும், சரியான விடையை தேர்வு செய்யும், ஒரு மதிப்பெண் வினாக்கள், முழுமையாக எளிமையாக இருந்தன. வினாத்தாள் குறித்து, சிவகங்கை, கே.ஆர்.மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர், நீ.இளங்கோ கூறியதாவது: முதல் தாளில், மாணவர்கள் தவறவிட்ட மதிப்பெண்களை மீட்டு எடுக்கும் வகையில், இரண்டாம் தாள் எளிதாக இருந்தது. இதில், நகர்ப்புற மாணவர்கள் மட்டுமின்றி, கிராமப்புற மாணவர்களும், தடுமாற்றமின்றி எழுதியுள்ளனர். ஒரு மதிப்பெண் பகுதி, கவிதை, பா நயம், கட்டுரை எழுதுதல் என அனைத்து பகுதிகளும், மாணவர்கள் பயிற்சி பெற்றவையாக இருந்தன. தொடர்வண்டி பயணச்சீட்டு முன்பதிவு குறித்த கேள்வி மட்டும், கொஞ்சம் யோசிக்க வைப் பதாக இருந்தது.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை "டேப்லட்" மூலம் பயிற்சி​


பிளஸ்-1 கணித தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படுமா?

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-1 பொதுத்தேர்வு 
நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் கணித தேர்வு நடைபெற்றது.மாணவ-மாணவிகள் வினாத்தாளை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். வினாக்கள் அவர்கள் படித்ததாகவோ, எதிர்பார்த்ததாகவோ இல்லை. இதனால் மாணவர்கள் மிகவும் சிரமபட்டு தேர்வு எழுதினார்கள்.


தேர்வு எழுதிய மாணவிகள் பலர் அழுதுகொண்டே வெளியே வந்தனர். தேர்ச்சி பெறுவோமா? என்பதே சந்தேகமாக இருப்பதாக மாணவர்கள் சிலர் தெரிவித்தனர். கருணை மதிப்பெண் வழங்கினால் தான் தேர்ச்சி அடைய முடியும் என்றும் மாணவர்கள் கூறினார்கள்.

பிளஸ்-1 கணித தேர்வு கடினமாக இருந்ததால் கருணை மதிப்பெண் வழங்கப்படுமா? என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

கேள்விகள் சரியாகத்தான் கேட்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் கூறுகிறார்கள். பிளஸ்-1 தேர்வில் கணித பாடத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில் சிக்கல் இருக்காது. 90-க்கு 90 மதிப்பெண்கள் எடுப்பது தான் சிரமம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஓய்வு வயது வரம்பு உயர்த்தப்படாது!

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய வயது வரம்பை 60லிருந்து 62 ஆக உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய பணியாளர் அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

மார்ச் 21ஆம் தேதி மாநிலங்களவையின் கேள்வி நேரத்தின்போது, ‘மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது வரம்பு மாற்றப்படுகிறதா?’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய பணியாளர் துறை இணையமைச்சர் ஜித்தேந்திர சிங், “அரசிடம் அது போன்ற எந்தத் திட்டமும் இல்லை” என்று பதிலளித்தார். தற்போதைய நிலையில் இந்தியாவில் சுமார் 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பணியில் உள்ளனர். இவர்களின் ஓய்வு வயது வரம்பு 60லிருந்து 62 ஆக உயர்த்தப்படலாம் என்ற கூறப்பட்ட நிலையில், மத்தியப் பணியாளர் அமைச்சகம் அதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அதேநேரம், நாட்டிலுள்ள ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் விரைவில் அறிவிப்பு ஒன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் குறைந்தபட்ச மாதாந்திரத் தொகையை உயர்த்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் மற்றும் ஓய்வூதியம் இரட்டிப்பாக்கப்பட்டால் ஆகும் செலவு ஆகியவற்றைக் கணக்கிட்டுக் கூறும்படி தொழிலாளர் சேமலாப நிதிய அமைப்பிடம் மத்திய தொழிலாளர் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கமான TNSchoolEducation பக்கத்தில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்க பள்ளிக்கல்வித்துறை செயலர் அறிவுரை.

பள்ளிக்கல்வித்துறை செயலர் அவர்களின் தலைமையில் 
17.03.2017 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம் "TNSchoolEducation" எனவும், பேஸ்புக் பக்கத்தை பயன்படுத்தும் அனைத்து ஆசிரியர்களையும் இதில் பங்கேற்கவும்  அறிவுரை கூறியுள்ளார்.பேஸ்புக் பக்கம் இல்லாதவர்கள் புதிய பேஸ்புக் பக்கத்தை உருவாக்கி அதில் இணையவும் அறிவுரை கூறியுள்ளார்.

பள்ளிக்கல்வி துறையின் முக்கிய நிகழ்வுகள்,அறிவிப்புகள் மற்றும் மாணவர்களுக்கான பாட சம்மந்தமான வீடியோக்கள்,புகைப்படங்கள்,இந்த பக்கத்தில் பகிரலாம்.ஆசிரியர்களின் புதிய முயற்சிகள், பள்ளி மற்றும் மாணவர்களின் ,புகைப்படங்கள் , விடியோக்கள் பதிவேற்றம் செய்யலாம்.தொழில்நுட்ப உதவிகளுக்கு  தொடர்பு எண்கள் மகேஷ்-9444322538, ரவிக்குமார்-9788268911,
தாமரைச்செல்வன்-9444414417

https://www.facebook.com/tnschools
நன்றி
எஸ்.தாமரைச்செல்வன்,
மாநில தகவல் மேலாண்மை முறைமை (EMIS),
பள்ளிக்கல்வித்துறை ,
சென்னை,
9444414417,

அங்கன்வாடி மையங்களில் முருங்கை மரம் மற்றும் பப்பாளிச்செடி வளர்க்கப்பட உள்ளதாக கலெக்டர் அறிவிப்பு

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சத்துணவு, அங்கன்வாடி 
மையங்களில் முருங்கை மரம் மற்றும் பப்பாளிச்செடி வளர்க்கப்பட உள்ளதாக சென்னை கலெக்டர் தெரிவித்துள்ளார்.


 இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் வெளியிட்ட செய்தி குறிப்பு: தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் தோட்டக்கலை சாராத நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் தோட்டக்கலையை ஊக்கப்படுத்தும் நோக்கத்துக்காக 25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


 இதன் கீழ் அரசு தோட்டக்கலை பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு மரக்கன்றுகள், வணிக மலர்ச் செடிகள் 40 சதவீதம் மானியத்தில் நடவு செய்து வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.



அதை தொடர்ந்து சமூகநலத்துறையின் கீழ் நிர்வகிக்கப்படும் அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க காய்கறிகளும், பழங்களும் கிடைக்கும் வகையில் முருங்கை, பப்பாளி செடிகளை நடவு செய்து வளர்க்க இடம் வசதியுள்ள அங்கன்வாடி, சத்துணவு மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.


 அதற்காக, அனைத்து அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களுக்கும் முருங்கை மற்றும் பப்பாளிச் செடிகள் வழங்குவதற்காக அரசு தோட்டக்கலை பண்ணைகளில் இச்செடிகளின் உற்பத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



 இத்திட்டத்தின் கீழ் 42,795 சத்துணவு மையங்களுக்கு 78,347 பப்பாளி மற்றும் 73,527 முருங்கை கன்றுகள் விநியோகிக்கப்பட உள்ளன.


 எனவே முருங்கை மற்றும் பப்பாளி வளர்ப்பதற்கு இடவசதியுள்ள அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையயங்கள் அந்தந்த மாவட்ட சமூகநலத்துறையின் வழியாக மாவட்ட தோட்டக்கலை இணை, துணை இயக்குனரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

இந்தியாவில் உள்ள பிச்சைக்காரர்கள் குறித்த பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது

நாடு முழுவதும் உள்ள பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை குறித்த 
எழுத்துப்பூர்வமான அறிக்கையை, மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலோட், மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையின் படி, இந்தியாவில் மொத்தம் 4,13,670 பிச்சைக்காரர்கள் உள்ளனர். இவர்களில் 2.21 லட்சம் பேர் ஆண்கள்.


19.1 லட்சம் பேர் பெண்கள். அதிகம் பிச்சைக்காரர்கள் இருக்கும் மாநிலங்களில் மேற்கு வங்க மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. அம்மாநிலத்தில் 81,244 பிச்சைக்காரர்கள் உள்ளனர்.



66,000க்கு மேலான பிச்சைக்காரர்களின் மாநிலமான உத்தர பிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது. பீகார் மாநிலம் 30,000க்கு மேற்பட்ட பிச்சைக்காரர்களுடன் முன்றாவது இடத்தில் உள்ளது.


அதிசயமாக, தமிழ்நாடு இப்பட்டியலில் 33வது இடத்தில் உள்ளது. காரணம், தமிழகத்தில் 6,800 பிச்சைக்காரர்கள்தான் இருக்கிறார்களாம்!


அசாம், மணிப்பூர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள பிச்சைக்காரர்களில் பெண்கள் அதிகமாக உள்ளனர். யூனியன் பிரதேசங்களான டாமன் - டையூவில் 22 பிச்சைக்காரர்கள்தான் உள்ளனராம். லட்சத்தீவில் இரண்டே பேர் மட்டும்தான் பிச்சை எடுக்கிறார்களாம்.

மார்ச் 31 தேதிக்குப் பின் காசோலைகள் செல்லாது : பாரத ஸ்டேட் வங்கி அதிரடி எச்சரிக்கை

புதிய காசோலைகளைப் பெற வங்கிக் கிளையை நேரிலோ, ஏடிஎம் 
இயந்திரம் மூலமோ, இணையம் மூலம் onlineSBI.com என்ற முகவரியில் தொடர் கொண்டோ பெற்றுக் கொள்ளலாம்.
ஆர்.சந்திரன்

பாரத ஸ்டேட் வங்கியுடன் இணந்த 5 துணை நிறுவனங்களில் காசோலைகளை மார்ச் 31க்குப் பின் பயன்படுத்த வேண்டாம் என வங்கி உத்தரவிட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்த அதன் 5 துணை நிறுவனங்கள் மற்றும் பாரத மகிளா வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, பழைய வங்கியில் அவர்கள் பெற்றிருந்த காசோலையை பயன்படுத்த வரும் மார்ச் 31ம் தேதிதான் கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு இந்த காசோலைகள் செல்லத்தக்கவை அல்ல என்பதால், அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பாரத ஸ்டேட் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

வங்கித்துறையில் சர்வதேச அளவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு ஏற்ப, சிறு வங்கிகளை இணைத்து பெரிய வங்கிகளை உருவாக்க நினைத்து காரியத்தில் இறங்கியுள்ள மத்திய அரசு, ஸ்டேட் பேங்க் ஆப் பிக்கானூர் & ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத் போன்ற அதன் துணை நிறுவனங்களாக இயங்கி வந்த தனி வங்கிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டது. இதேபோல, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலத்தில் பெண்களுக்கென தனியாகத் தொடங்கப்பட்ட பாரத மகிளா வங்கியையும் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைத்துவிட்டனர்.

எனினும் அந்த 6 வங்கி வாடிக்கையாளர்கள் தாங்கள் முன்னர் பெற்ற காசோலை போன்றவற்றை பயன்படுத்த சிறிது காலத்தக்கு அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு செப்டம்பர் 2017 வரை என கால வரம்பு அறிவிக்கப்பட்டது. அது பின்னர் டிசம்பர் 31ம் தேதி என தளர்த்தப்பட்டது. எனினும் பல வாடிக்கையாளர்கள் முழுமையாக மாறாமல் தொடர்ந்தது தெரிய வந்தது. அதனால், தற்போது பாரத ஸ்டேட் வங்கி இறுதி எச்சரிக்கையாக, புதிய நிதியாண்டில் இருந்து புதிய காசோலைகளை மட்டும்தான் பயன்படுத்தலாம். பழைய காசோலைகளை மார்ச் 31ம் தேதிக்கு முன்பு காசாக்கும் விதமாக பயன்படுத்தி விடும்படி கேட்டக கொண்டுள்ளது. எந்த காரணத்திற்காகவும் பழைய காசோலைகளை புதிய ஆண்டில் பயன்படுத்த இயலாது என தெரிவித்துள்ளது.

மேலும், புதிய காசோலைகளைப் பெற வங்கிக் கிளையை நேரிலோ, ஏடிஎம் இயந்திரம் மூலமோ, இணையம் மூலம் onlineSBI.com என்ற முகவரியில் தொடர் கொண்டோ பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. அதேபோல, முந்தைய வங்கி பெயரில் ஆன்லைன் பேங்கிங் வசதி பெற்றிருநதால், அதே பெயரில் இ மெயில் முகவரியில், மொபைல் எண்ணில் தொடர்ந்து சேவை பெறலாம் எனவும், நெட் பேங்கிங் எனப்படும் இணையதள வசதிக்கு மட்டும் onlinesbi.com என்ற முகவரியில் அணுகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அதேபோல, வங்கிக் கிளைகளின் IFSC எண்களை மாற்றியுள்ளதாகவும் சுமார் 1300 கிளைகளுக்கு இந்த மாற்றம் நடந்துள்ளதாகவும் பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு: பாரதியார் பல்கலையில் பணி!!!

கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: திட்ட உதவியாளர்

பணியிடம்: கோயம்புத்தூர்

தேர்வு முறை: நேர்காணல் மூலம் தேர்ச்சி நடைபெறும்.

ஊதியம்: மாதம் ரூ.8,000/-

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 20/4/18

நேர்முகத் தேர்வு நடைபெறுமிடம்: மனித மரபியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் திணைக்களம், பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641 046

மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1fgMsE8Tvig1NiWH4g-q204_qOoDRhGUZ/view என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

காச நோய்: தகவல் தெரிவிக்காவிட்டால் சிறை!

காச நோயாளிகள் குறித்த தகவல்களை
அரசுக்குத் தெரிவிக்காவிட்டால், மருத்துவர்கள் உட்பட மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

காச நோய் (டிபி) என்பது தோற்று நோய். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்க நேரிடும் அபாயம் உள்ளது. ஒரு காச நோயாளி ஆண்டுதோறும் 10 முதல் 15 பேருக்கு இந்த நோயைப் பரப்புகிறார். உலகக் காச நோயாளிகளில் ஐந்தில் ஒருவர் இந்தியர். தமிழகத்தில் மட்டும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காச நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நோய், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரலாம்.

இந்தியாவில் வரும் 2025ஆம் ஆண்டிற்குள் காச நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிடும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் ''மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என அனைவரும் காச நோயாளிகள் குறித்து உள்ளூர் காச நோய் சிறப்பு சுகாதார மையத்துக்குத் தெரிவிக்க வேண்டும். ஆனால், காச நோய் ஒருவருக்கு இருப்பது தெரிந்தும், அது குறித்துத் தகவல் தெரிவிக்காமல் இருக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவமனை ஊழியர்கள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஐபிசி 269, 270 பிரிவின்படி, அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

இந்தியக் குற்றவியல் பிரிவு 269 என்பது மனித உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் நோய் குறித்து அறிந்தும், அது பரவுவது அறிந்தும் அதைத் தடுக்காமல் கவனக்குறைவாக இருத்தலாகும். பிரிவு 270 என்பது, தொற்று நோய் பரப்பும் நோயை உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பரப்ப அனுமதித்தல் பிரிவாகும்.

காச நோய் என்பது மிகவும் ஆபத்தான தொற்று நோய். இந்த நோய் உள்ளவர்களைக் கண்டறிந்து, நோய் மற்றவர்களுக்குப் பரவாத வகையில், பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம். அவர்களுக்குத் தேவையான மருந்துகளையும், அவர்கள் குறித்த விவரங்களையும் மருத்துவர்கள் அறிந்துவைத்திருப்பது அவசியம்.ஆய்வகங்கள், ரத்தப் பரிசோதனை மையங்கள் ஆகிய இடங்களில் இருந்து காச நோயாளிகள் குறித்த விவரங்களைச் சேகரித்து வைத்திருப்பது, பொதுச் சுகாதார மைய அலுவலர்களின் கடமை" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்நோயால் தாக்கப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 80 - 90 லட்சம் மக்கள் இத்தொற்று நோய்க்கு உள்ளாவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கோடைகால குறிப்புகள் - 2018

காலை எழுந்தவுடன் சாப்பிட வேண்டியவைகள்


பழைய சாத தண்ணீர் ( வாரம் 2 நாட்கள் )

ஊற வைத்த வெந்தயம் ( வாரம் 2 நாட்கள் )

பழங்கள் ( மாதுளை, தர்ப்பூசணி, பன்னீர் திராட்சை, கொய்யா, பப்பாளி - இவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது கலந்தும் சாப்பிடலாம் )

( வாரம் 2 - 3 நாட்கள் )

காலை எழுந்தவுடன் தாக உணர்வை கவனித்து, அதற்கேற்ப தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். முக்கியமாக பெருங்குடலின் நேரமாகிய 5 மணி முதல் 7 மணி வரைஇருக்கும் தாக உணர்வு மிக முக்கியமானது. அப்போது நாம் குடிக்கக்கூடிய தண்ணீர் நமது குடல்களை சுத்தப்படுத்தி நல்ல பசி உணர்வை கொடுக்கும். நல்ல ஜீரணத்துக்கும் உதவிசெய்யும். இதனால் மலச்சிக்கல் நீங்குவதோடு உடல் உஷ்ணமும் கட்டுக்குள் இருக்கும்.

காலை உணவாக கம்மங்கூழ், பழைய சாதம், கேழ்வரகு கூழ் போன்றவற்றை வாரம் 2 நாட்கள் மட்டும் எடுத்துக்கொள்ளலாம். உடன் சிறிய வெங்காயம் சேர்த்துக்கொள்ளலாம். மேலும்அதற்கு கொத்தமல்லி மற்றும் புதினா துவையல்களையும் தொட்டுக்கொள்ளலாம்.

பழைய சாதத்தை இரவு மண் பாத்திரத்தில் வைத்து தண்ணீர் ஊற்றி ஊறவைத்துவிட வேண்டும். பழைய சாத தண்ணீர் குடிக்கும் போதோ சாதமாக சாப்பிடும் போதோ, மண்பாத்திரத்தில் ஊற வைக்கப்பட்டிருந்தால் அது சுவையாகவும், குளிர்ச்சி தரும் வகையிலும் அமையும்.

முடிந்தவரை காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையே தண்ணீரை தவிர ( முறையான தாகம் இருந்தால் மட்டும் ) எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

மதிய உணவு சாப்பிட போவதற்கு முன்னர் சிறிதளவு தண்ணீர் குடித்துவிட்டு அதன்பின்னர் 15 நிமிடங்கள் கழித்து சாப்பிடலாம். இதன் மூலம் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதுஇடையில் தண்ணீர் தேவைப்படுவதை தவிர்க்க முடியும். இது நல்ல தரமான ஜீரணத்தை உறுதி செய்யும்.

மதிய உணவில் நீர்க்காய்கள் நிறைய சேர்த்துக்கொள்ளலாம். ( புடலங்காய், பூசணிக்காய், சுரைக்காய், வாழைத்தண்டு, பீர்க்கங்காய் முக்கியமானவை ). .

மதிய உணவில் வாரம் 3 - 4 நாட்களாவது மோர் சேர்த்துக்கொள்வது நல்லது. மோரை கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி போட்டு ஊறவைத்து பயன்படுத்தலாம். மோரை தாளித்துபயன்படுத்துவது அதன் புளிப்பு தன்மையை குறைப்பதாக அமையும்.

அசைவ உணவுகள் சாப்பிடுவதாக இருந்தால் மதிய வேளைகளில் எடுத்துக்கொள்ளுங்கள். இரவு எடுத்துக்கொள்வதாக இருந்தால் 8 மணிக்கு முன்னதாகவே சாப்பிட்டுமுடித்துவிடுங்கள். அசைவத்தில் காரமும் மசாலாக்களும் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியது மிக முக்கியம். அசைவ உணவுகளில் ஆட்டு இறைச்சியின் மார்பெலும்பில் சூப் வைத்துகுடிப்பது உடல் உஷ்ணத்தை குறைக்கும் ஒரு அற்புத உணவாகும்.

மாலை வேளைகளில் தேவைப்பட்டால் பழ ரசங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

நாள் முழுக்கவே தாக உணர்வை நன்கு கவனித்து அதற்கேற்ற வகையில் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தேவைக்கு அதிகமான தண்ணீர் குடிக்க கூடாது என்பதையும்மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தான் இன்றைக்கு நாம் பெரும்பாலும் குடிக்கின்றோம். அந்த தண்ணீரை ஒரு மண் பானையில் ஊற்றி வைத்து அதனோடு வெட்டி வேர் சேர்த்து தண்ணீர்குடிக்கலாம். குறைவான நீரில் முழுமையாக தாகம் நீங்க இது பெரும் உதவியாக இருக்கும். ( 30 லிட்டர் தண்ணீருக்கு 3 வெட்டி வேர்கள் )

எப்போதுமே அமர்ந்த நிலையில் வாய் வைத்து தண்ணீர் குடிப்பதே நல்லது.

ஒவ்வொரு முறை சிறுநீர் கழித்துவிட்டு வந்த பின்னரும் சிறிதளவு நீர் குடிக்க வேண்டும். ( தாகம் இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை )

குளிர்சாதன அறைகளில் தூங்குபவர்கள் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். குளிர்சாதன வசதி என்பது நிச்சயமாக நமது உடல் நலனுக்கு உகந்தது அல்ல. அதேநேரத்தில் அதிக சூட்டில் இரவு தூக்கம் வராமலும் கஷ்டப்பட வேண்டாம். எனவே ஏசி யின் பயன்பாட்டு அளவை முடிந்த வரை குறைத்து கொள்ள திட்டமிட வேண்டும்.

உதாரணம்: அதிகாலை 3 மணிக்கு மேல் ஏசி-யை அனைத்து விட வேண்டும். 3 மணிக்கு மேல் நமது நுரையீரலின் பிரத்யேக நேரமாகும். இந்த நேரத்தில் தூய்மையான ஆக்சிஜன்காற்றில் பரவிக்கிடக்கும். எனவே 3 மணிக்கு மேல் ஜன்னல்களை திறந்து விட்டு காற்றோட்டமான சூழலில் உறங்குவது ஏசி யின் பாதிப்புகளில் இருந்து நம்மை ஓரளவு காக்கும்.

பழங்களை பொறுத்தவரை தர்பூசனியும், மாதுளையும், கிர்ணியும் கோடை காலத்தில் நமது உடலின் நீர் சமநிலையை பாதுகாக்க உதவும் முக்கிய பழங்களாகும். எனவே ஒருநாளைக்குஅவற்றில் ஏதேனும் ஒன்றை கண்டிப்பாக சாப்பிட்டு விட வேண்டும்.

தினமும் தலைக்கு குளிப்பதை கட்டாயமாக்க வேண்டும். தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத பட்சத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை கூட தலைக்கு குளித்து நல்லது. மேலும் அதிக நேரம்குளிப்பதும் உடல் உஷ்ணத்தை குறைக்கும் மற்றும் சமநிலையில் வைக்கும்.

அதேபோல, வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து தலைக்கு குளித்து நல்லது. தலை

குளித்து நல்லது. தலைக்கு தேய்ப்பது மட்டுமல்லாமல் உடல் முழுக்கவே தேய்த்து இளங்காலை வெயிலில் ( 6 முதல் 7.30மணி வரை ) ஒரு 30 முதல் 40 நிமிடங்கள் வரை கண்கள் மூடி அமர்ந்துவிட்டு பின்னர் இதமான நீரில் குளித்து விடுவது நமது உடல் உஷ்ணத்தை குறைக்கும்.

அவ்வப்போது இளநீர் குடிப்பதும், எலுமிச்சை ஜூஸ் குடிப்பதும், வெள்ளரிக்காய் சாப்பிடுவதும் நமது நீர் சக்தியின் தரத்தை உறுதி செய்யும். ஒவ்வொரு முறை இளநீர் குடிக்கும் போதும்அதன் வழுக்கையையும் சாப்பிட வேண்டும்.

கோடை காலத்தில் இரவு உணவாக தோசை, பரோட்டா, பிரியாணி, ஃபிரைடு ரைஸ் போன்ற உணவுகளை தவிர்த்து விட்டு, ஆவியில் வேக வைத்த உணவுகளையும், களி உள்ளிட்டஉணவுகளையும் சாப்பிடுவதே நல்லது.

கோடை காலத்தில் இரண்டு முறை உள்ளாடைகளை மாற்றும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதேபோல இரவு உறங்க செல்லும் முன் நமது இடுப்பு பகுதிகள் உள்ளிட்டபிறப்புறுப்பு பகுதிகளை நன்கு கழுவிவிட்டு உறங்க செல்வது சுத்த தன்மையை ஏற்படுத்துவதோடு, நமது சிறுநீரக பகுதிகளை குளிர்ச்சிப்படுத்தும் விதமாகவும் அமையும்.

கோடைகாலங்களில் வியர்வை மூலமாக நடைபெறும் கழிவு நீக்கம் முழு அளவில் இருக்கும். எனவே நமது வியர்வை துவாரங்களில் தடையில்லா திறந்த நிலையை நாம் ஏற்படுத்தவேண்டும். எனவே சோப் உபயோகங்களை குறைத்துவிட்டு இயற்கையான குளியல் பொடிகளை பயன்படுத்தலாம். இதன் மூலம் சோப்களின் ரசாயனங்கள் நமது வியர்வைதுவாரங்களை அடைக்காமல் பார்த்துக்கொள்ள முடியும். பொதுவாகவே அனைத்து காலங்களிலுமே சோப் பயன்படுத்தாமல் குளியல் பொடியை பயன்படுத்துவதே நல்லது. அப்படியேசோப் பயன்படுத்தினாலும் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். சோப் தேய்த்து விட்டு, வெறும் கையாலோ அல்லது நார் போன்ற பொருட்களாலோ நமது வெறும்உடலை தேய்த்துவிடுவதன் மூலம் சோப்களின் ரசாயனங்கள் நமது வியர்வை துவாரங்களை அடிப்பதை தடுக்க முடியும்.

பொதுவாகவே கோடை காலங்களில் அதிகாலை நாம் சீக்கிரம் எழுந்து கொள்ள முடியும். எனவே இரவு உணவை சீக்கிரம் முடித்துவிட்டு சீக்கிரம் தூங்க சென்றுவிடுவது தான் நல்லது.அதுதான் போதுமான தூக்க நேரத்தை உறுதி செய்யும்.

கூடுமானவரை 9 மணிக்கு மேல் மொபைல், டிவி, கணிப்பொறி பயன்பாடுகளை நிறுத்திவிட்டு உறங்க சென்றுவிடுவது மிக மிக நல்ல பலன்களை நமக்கு ஏற்படுத்தும்.

கோடைகாலங்களில் மொட்டை மாடியில் படுக்கும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கும். இதில் எந்தவித பாதகங்களும் இல்லை. இருந்தாலும், உறங்க செல்வதற்கு 4 மணி நேரத்திற்குமுன்பாக அந்த இடத்தை தண்ணீர் ஊற்றி குளிர்ச்சிப்படுத்த வேண்டியது மிக முக்கியம்.

ஃபோம் மெத்தைகளில் படுத்து உறங்குவதை தவிர்த்துவிட்டு தரையில் பாய்விரித்து அதன் மீது ஜமுக்காளம் அலல்து போர்வை விரித்து உறங்குவது மிக நல்லது. வெறும் தரையில்படுக்க வேண்டாம்.

வீட்டில் முழுமையான காற்றோட்டம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அதுவே நமது வீட்டினுள் உறையும் உஷ்ணத்தை வெளியேற்றிவிடும்.

ஜீன்ஸ் உள்ளிட்ட மிக இறுக்கமான உடைகளை அணிவதை தவிர்த்துக்கொள்வது நல்லது.

IT துறைகளில் பணியாற்றுபவர்கள் நாள் முழுக்கவே ஏசி அறையில் இருக்க வேண்டிய சூழல் இருப்பதால் அவர்கள் இரவு உணவாக பழங்கள் மட்டும் சாப்பிடுவது அவர்களின் உடல்உஷ்ணத்தை குறைக்கும். மேலும் அதுபோன்ற சூழலில் அவர்கள் மாலை சிற்றுண்டியை சற்றே அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது இரவு உணவாக பழங்களே போதுமானதாகஇருக்கும்.

தூய்மையான பசும்பால் கிடைத்தால் இரவு உணவாகவோ அல்லது இரவு உணவுக்கு பின்னரோ சிறிதளவு எடுத்துக்கொள்வது நல்லது. ஜீரண குறைபாடுகள் இருப்பவர்கள் பாலைதவிர்த்து விடுவது நல்லது.

மார்க்கெட்டிங் துறைகளில் பணிபுரிபவர்கள், வியாபாரம் காரணமாக வெயிலில் வெளியில் அலையக்கூடிய சூழலில் 1 மணி நேரத்திற்கு ஒரு முறை முகம் கழுவிக்கொள்ளுங்கள். முகம்கழுவும் போது பின் கழுத்தையும், காதுகளின் உட்புறத்தையும், கழுத்து பகுதிகளையும் தண்ணீரால் நனைப்பது மிகவும் முக்கியம்.

பெண்களுக்கு பொதுவாகவே நீரின் தேவை அதிகம் இருக்கும். எனவே குறிப்பாக பெண்கள் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். இல்லத்தரசிகளும், பணிபுரியும் பெண்களும்தங்களுக்கு அருகில் கண்டிப்பாக ஒரு தண்ணீர் குவளையை வைத்திருக்க வேண்டும். தண்ணீர் தாகம் எடுத்த மறுநொடி நீர் அருந்திவிட்டு தான் அடுத்த வேலையை பார்க்க வேண்டும்.

குழந்தைகள் பொதுவாகவே நீரின் தேவையை உணராதவர்களாகவும் அறியாதவர்களாகவுமே இருப்பார்கள். எனவே அவர்களை அவ்வப்போது தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும்.

இவைகளெல்லாம் போக நமது வீட்டில் உள்ள பெரியவர்களின் அனுபவங்கள் சொல்லும் கோடைகால குறிப்புகளையும் கவனத்தில் கொண்டு கடைபிடிக்கலாம்.

கோடை காலம் என்பது நமது இதயமும், சிறுகுடலும் அதிக வேளை பளுவுக்கு ஆளாகக்கூடிய காலமாகும். எனவே அந்த உறுப்புகளை சரியான சக்தி நிலையில் பராமரிக்கவேண்டுமானால் மேற்சொன்ன அனைத்து குறிப்புகளையும் கடைபிடிப்பது நன்மையான விளைவுகளை ஏற்படுத்தும்.

பல்வேறு பருவ காலங்களின் தன்மையை சரியாக அறிந்து கொண்டு அதற்கேற்ற சரியான உணவு மற்றும் வாழ்வியல் முறைகளை கடைபிடிக்கும் போது அக்காலமானது சுகமானஅனுபவங்களை தருவதாக அமையும். முக்கியமாக கோடை காலத்தில் நாம் செய்யக்கூடிய இந்த உணவு முறை ஒழுக்கங்கள் அடுத்தடுத்த பருவ காலங்களுக்கு உகந்த உடல் சூழலைஉருவாக்கி தந்து ஒரு முழுமையான ஆரோக்கிய வாழ்வை நமக்கு வழங்கும்.   

                                         குறிப்பு: மேற்சொன்ன குறிப்புகள் அனைத்தும்பொதுவான கோடை கால உணவுக் குறிப்புகளே. இந்தக் ஒன்றோ பலவோ நீங்கள் ஏற்கனவேஎடுத்துக்கொண்டிருக்கும் மற்ற மருத்துவத்துத்துக்கும்அல்லது மருந்துகளுக்கும் முரண்பட்டாலோ அல்லதுசந்தேகங்கள் இருந்தாலோ, அவற்றை உங்களுடையமருத்துவ ஆலோசகரின் அறிவுரைப்படிபின்பற்றிக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.


ஜெ.சிகிச்சை: நிறுத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள்!

                                

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும்போது அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்தன என்று அப்பல்லோ நிர்வாக இயக்குனர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 74நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், டிசம்பர் 5ஆம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். ஜெயலலிதா மரண மர்மத்தைக் கண்டறிய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணையத்தின் முன்பு ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக அப்பல்லோ நிர்வாகம் சார்பில் 2சூட்கேஸ்கள் நிறைய ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில் இன்று (மார்ச் 22) சென்னையில் அப்பல்லோ நிர்வாகம் சார்பில் சர்வதேச கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் பிரதாப் சி ரெட்டி, "அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவை வார்டு பாய் முதல் நர்ஸ், தலைமை மருத்துவர் என அனைவரும் சிறப்பாக கவனித்துக் கொண்டோம். அப்பல்லோ மருத்துவர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு மருத்துவர்களும் அவருக்குச் சிறப்பான சிகிச்சையை அளித்தனர். முழு சிகிச்சையும் அவருக்கு அளிக்கப்பட்டது" என்று குறிப்பிட்டார்.

மேலும் "ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்கள் அணைத்து வைக்கப்பட்டன. சம்பந்தமில்லாதவர்கள் சிசிடிவி காட்சியை பார்க்க நேரிடும் என்பதால் எதிர்பாராதவிதமாக அனைத்து கேமராக்களும் நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் ஜெயலலிதாவின் தனிமை மற்றும் பாதுகாப்பு கருதி ஜெயலலிதா சிகிச்சைப் பெற்றுவந்த பகுதியில் இருந்த மற்ற நோயாளிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்" என்று கூறிய பிரதாப் ரெட்டி, ஜெயலலிதாவை யார் யார் பார்க்க வேண்டும் என்பதை அவருடன் இருந்தவரே முடிவு செய்தார். சிகிச்சை தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளோம்" என்றும் குறிப்பிட்டார்.