யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

28/10/15

கல்லூரியில் புதிய பாடம் அரசிடம் வலியுறுத்த முடிவு

சிக்கண்ணா அரசு கல்லூரியில், புதிதாக பாடப்பிரிவுகள் சேர்க்க, தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்க, கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில், 14 பாடப்பிரிவுகளில், 2,300 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பனியன் தொழில் நகர மாக திருப்பூர் இருப்பதால், ஆடை வடிவமைப்பு, பேஷன் சார்ந்த படிப்புக்கு, பலரும் (காஸ்ட்யூம் டிசைனிங் அண்டு பேஷன் - சி.டி.எப்.,) ஆர்வம் காட்டுகின்றனர்; ஆடிட்டிங் படிக்கவும் பலரிடடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளது. சுற்றுலா சார்ந்த படிப்பு படிக்கவும் விரும்புகின்றனர். 


இப்படிப்புகள் சிக்கண்ணா கல்லூரியில் இல்லாதது, மாணவர்களுக்கு ஏமாற்றத்தை தருகிறது. இக்கல்லூரியில், பி.ஏ., தமிழ் இலக்கியம், பொருளியல், எம்.எஸ்.சி., சி.டி.எப்., டூரிஸம் அண்டு மேனேஜ்மென்ட், எம்.காம்., சி.ஏ., எம்.ஏ., ஆங்கிலம், எம்.ஏ., வரலாறு, எம்.ஏ., இலக்கியம் உள்ளிட்ட புதிய பாடப்பிரிவுகளுக்கு, அரசிடம் கோரிக்கை வைக்க, கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் போராட்ட ஆயத்த கூட்டம்

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக, தர்மபுரியில், போராட்ட ஆயத்த கூட்டம் நடந்தது.


மாநில அமைப்பாளர் ஜனார்தனன் தலைமை வகித்தார். கூட்டத்தில், தொகுப்பூதிய காலத்தை கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும். தேர்வுநிலை தர ஊதியம், ஏற்கனவே உள்ள அரசாணைகள் மற்றும் அரசு கடிதங்களின் படி, 5,400 ரூபாய் வழங்க வேண்டும். 

வெவ்வேறு பாடங்களில் உயர்கல்வி பெற்றுள்ள தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 31ம் தேதி, சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே நடக்கும், ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற் கல்வி ஆசிரியர்கள் கலந்து கொள்வது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு விண்ணப்பிக்க புதிய வசதி

இ-சேவை மையத்தில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு விண்ணப்பிக்க லாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமையிடம் மற்றும் 15 மண்டல அலுவலகங்களில், இ-சேவை மையங்களை அமைத்து, நிர்வகித்து வருகிறது. அதன் மூலம், பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறும் வசதி, அந்த அட்டை பதிவு செய்யும்போது தெரிவிக்கப்பட்ட அலைபேசி எண்ணை மாற்றும் வசதி மற்றும் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.


மேலும், புதிதாக, டி.என்.பி.எஸ்.சி.,க்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, நிரந்தரப் பதிவு செய்ய, 50 ரூபாய், தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க, 30 ரூபாய், விண்ணப்பங்களில் மாறுதல் செய்ய, ஐந்து ரூபாய், மாறுதல் செய்து விண்ணப்பத்தின் நகல் பெற, 20 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒப்புகை சீட்டு

நிரந்தர பதிவு கட்டணமான, 50 ரூபாய், நிர்ணயிக்கப்பட்ட தேர்வு கட்டணம் ஆகியவற்றையும் இ-சேவை மையங்களில் செலுத்த வசதி செய்யப்பட்டு உள்ளது. பணம் செலுத்தியதற்கான, ஒப்புகை சீட்டு, உடனடியாக பெற்று கொள்ளலாம் என, சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு விருது

பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு முதல்வரின் சிறப்பு கல்வி விருது வழங்கும் விழா நடந்தது. கமிஷனர் கதிரவன் தலைமை வகித்தார். தமிழகத்தில் மாநகராட்சி பள்ளிகளில், மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் கடந்த கல்வியாண்டு பொதுத் தேர்வில் முதலிடம் பெற்று சாதித்தனர்.


அவர்களுக்கும், முதல் மூன்று இடம் பெற்றவர்களுக்கும், பாடங்களில் 100 சதவீதம் தேர்ச்சியடைந்த பள்ளிகளுக்கும் ரூ.18 லட்சம் வழங்கப்பட்டது. மாநகராட்சி சாதனை மலரை மேயர் ராஜன் செல்லப்பா வழங்கி பேசுகையில், பழக்கமிஷன் மண்டி, லாரி ஸ்டாண்ட் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் நகரில் நெரிசல் குறையும். வைகை ஆற்றில் புதிதாக கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலம் பணிகள் விரைவாக முடிக்கப்படும், என்றார்.

தீர்வு இதுவல்ல!

மத்திய அரசில் குரூப்-டி, குரூப்-சி, குரூப்-பி பணியிடங்களுக்கான நியமனங்களில் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதலாக நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி மனம் திறந்து (மன் கீ பாத்) வானொலி உரையில் தெரிவித்துள்ளார். இது ஏற்கெனவே அவர் தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்ததுதான். அதைத்தான் தற்போது மீண்டும் உறுதிப்படுத்தி எப்போது அமலுக்கு வரும் என்பதை அறிவித்திருக்கிறார்.

காலவரையற்ற போராட்டத்துக்கு தயாராகும் ஆசிரியர்கள்?

காலவரையற்ற போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால், அரசு ஆசிரியர்கள் கோரிக்கையை விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஒருங்கிணைந்த பெற்றோர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகம் முழுவதும், ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது. இறுதியாக, அக்., 8 ம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், அரசு தரப்பில் போதிய நடவடிக்கைகள் இல்லாததால், காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட, ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனால், பெற்றோர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கணபதி அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் லிங்கம் கூறுகையில், ''பள்ளி வேலைநாட்களில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவது, மாணவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிவிடும். ஆசிரியர்கள் போராட்டத்தால் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். உடனடியாக, அரசு தலையிட்டு இச்சூழலை மாற்ற வேண்டும்,'' என்றார்.

24/10/15

பட்டப்படிப்புக்கான கூடுதல் கால அவகாசம் 2 ஆண்டுகளாக குறைக்க வேண்டும்: பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரை

பட்டப்படிப்பு படிக்கும் மாணவ, மாணவியர் நிர்ணயிக்கப்பட்ட ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெறா விட்டால் வழங்கப்படும் கால நீட்டிப்பை 2 ஆண்டாக குறைக்கும்படி பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரை செய்துள்ளது.கல்லூரி, பல்கலைக்கழகங் களில், இளநிலை, முதுநிலை, முனைவர் பட்டங்களுக்கு குறிப்பிட்ட கல்வி ஆண்டுகள் கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. 


இந்த காலகட்டத்துக்குள் முடிக்க முடியாதவர்களுக்கு கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது.பி.ஏ, பி.எஸ்சி, பி.காம் உள்ளிட்ட இளநிலைப் பட்டங்களுக்கு 5 முதல் 8 ஆண்டுகள் கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது. எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம் உள்ளிட்ட முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கு4 முதல் 7 ஆண்டுகளும், முனைவர் பட்டத்துக்கு 7 முதல் 9 ஆண்டுகளும் கூடுதல் கால அவகாசம் அளிக்கப்படுகிறது.இந்த அவகாசம் மத்திய, மாநில பல்கலைக்கழகங்களின் விருப் பத்துக்குஏற்ப சிறிது வேறுபடு கிறது. இந்த அவகாசத்தை ஒழுங்கு படுத்தும் வகையில் யுஜிசி புதிய பரிந்துரையை பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பியுள்ளது.அதில், ‘வழக்கமான கால அவகாசத்தில் தேர்ச்சி பெற இயலாதவர்களுக்கு 2 ஆண்டுகள் மட்டுமே கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும். தவிர்க்க முடியாத சூழலில் மட்டும் மேலும் ஓராண்டு அவகாசம் அளிக்கப்பட லாம்.

ஆனால், 2 ஆண்டு கால நீட்டிப்பையும் தாண்டி கூடுதலாக மேலும் ஓராண்டு அவகாசம் பெற்ற மாணவ, மாணவியர் அப்பல்கலைக்கழகத்தின் தனித் தேர்வர்களாகவே கருதப்படுவர். அவர்கள் பல்கலைக்கழகத்தின் விருதுகளுக்குப் பரிசீலிக்கப்பட மாட்டார்கள் என யுஜிசி பரிந்துரை செய்துள்ளது.யுஜிசியின் பரிந்துரை, மத்திய பல்கலைக்கழகங்களில் உத்தர வாக ஏற்கப்பட்டு பின்பற்றப் படுகின்றன. ஆனால், மாநில பல்கலைக்கழகங்களில் அங்குள் கல்வி முறைகளுக்கு ஏற்றபடி செயல்படுத்துவதால், அது வெறும் பரிந்துரையாக மட்டுமே பார்க்கப் படுகிறது. இருப்பினும் பெரும் பாலான மாநில பல்கலைக் கழகங்கள், யுஜிசி அளிக்கும் நிதி உதவிகளைப் பெறுவதால், அதன் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்கின்றன. எனவே, பட்டப்படிப்புகள், முனைவர் பட்ட ஆய்வுகளுக்கு அளிக்கப்படும் கூடுதல் கால அவகாசத்தை 2 ஆண்டுகளாககுறைக்கும் பரிந் துரையை பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் ஏற்றுக் கொள்ளும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இதுகுறித்து யுஜிசி அலுவலர்கள் கூறும்போது, “நாடு முழுவதும் கல்விமுறையை சீர்படுத்த மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று. கூடுதல் அவகாசம் அளிப்பதால் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுவதாக புகார்கள் வந்தன. இதுதொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட குழு இப்பரிந்துரையை அளித்துள்ளது” எனத் தெரிவித்தனர்.

பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 22-ல் கணிதத்திறன் தேர்வு

பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 22-ம் தேதி சென்னையில் கணிதத்திறன் தேர்வு நடத்தப்பட உள்ளது. தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 22-ம் தேதி கணிதத்திறன் தேர்வு நடத்தப்பட உள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் நடைபெறும் இத்தேர்வில் 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளலாம்.இதில் கலந்துகொள்ள விரும்பு வோர் நவம்பர் 18-ம் தேதிக்குள் தங்கள் பெயரை முன்பதிவு (தொலைபேசி எண்: 044-24410025) செய்துகொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

6 மாதங்களாக சம்பளம் கிடைக்காமல் குழந்தை பாதுகாப்பு ஊழியர் தவிப்பு

தமிழகத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஆறு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதனால், ஊழியர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

தமிழகத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், 2012ல் துவங்கப்பட்டது. இதில், 300 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, ஆறு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை; 10 மாதங்களாக செலவுப்படியும் வழங்வில்லை.இதனால், ஊழியர்கள் அவதிப்படுகின்றனர்.இதுகுறித்து, திட்ட அலுவலர்கள் கூறியதாவது:ஆறு மாதங்களாக சம்பளம், செலவுப்படிகள் வழங்காததால், அலுவலக வாடகை பாக்கி, தொலைபேசி கட்டணம், குடிநீர் மற்றும் மின் கட்டணம் ஆகியவற்றை செலுத்த முடியவில்லை. ஆறு மாதங்களாக குடும்பம் நடத்த கடும் சிரமப்படுகிறோம். தீபாவளிப் பண்டிகை நெருங்கும் இந்த நேரத்தில், சம்பள பாக்கியை வழங்கினால் உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நாசா செல்ல வாய்ப்பு தரும் 'சூப்பர் பிரெய்ன் சேலஞ்ச்'

மாணவர்களின் அறிவுத்திறன் மற்றும் சிந்தனையை துாண்டும், 'சூப்பர் ப்ரெய்ன் சேலஞ்ச்' போட்டியை, 'எட் சிக்ஸ் பிரெய்ன் லேப் ஸ்கில் ஏஞ்சல்ஸ்' என்ற, நிறுவனம் அறிவித்துள்ளது; பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.முதல் கட்டத் தகுதிப் போட்டி, நவம்பர், 14 முதல், 22 வரை, 'ஆன்லைனில்' நடத்தப்படுகிறது; இறுதி போட்டி, பின்னர் அறிவிக்கப்படும்.


இதுகுறித்து, 'எட் சிக்ஸ் பிரெய்ன் லேப்' நிறுவனர் சரவணன் சுந்தரமூர்த்தி கூறியதாவது:விளையாட்டு ஆர்வத்தை,சிந்தனை திறனாக வளர்க்க, இந்தப் போட்டியை நடத்துகிறோம்;ஆங்கிலத்தில், வினாக்கள் மற்றும் விளையாட்டுகள் இருக்கும். கம்ப்யூட்டர் மற்றும் லேப் டாப்பில், இணையதளம் மூலம் மட்டுமே பங்கேற்கலாம்.ஒரு மணி நேரம் மட்டும் விளையாட அனுமதி. குறைந்த நேரத்தில், யார் சரியான விடைகளுடன், விளையாட்டை நிறைவு செய்கிறார்களோ, அவர்களுக்கே அதிக மதிப்பெண். வகுப்பு மற்றும் வயதுக்கேற்ப, விளையாட்டு வகை வழங்கப்படும்.வெற்றி பெறுவோரில் ஐந்து பேர், அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்துக்கும், மூன்று பேர், சிங்கப்பூர் யுனிவர்சல் ஸ்டுடியோவுக்கும் அழைத்துச் செல்லப்படுவர். மேலும், 7,000 பேருக்கு, லேப்டாப், ஐ பேட் மற்றும் விளையாட்டு, 'கிட்' உட்பட, பலபரிசுகள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

பங்கேற்பது எப்படி? போட்டியில் பங்கேற்க,www.skillangels.comமற்றும்www.thesuperbrainchallenge.comஎன்ற இணையதளத்தில், பதிவுக் கட்டணத்துடன், நவம்பர், 22 வரை விண்ணப்பிக்கலாம்.பதிவு செய்தவர்களுக்கு தனியாக, 'லாக் இன்' முகவரி வழங்கப்படும். மாதிரிப் போட்டிகள், மேலே குறிப்பிட்ட, இரண்டு இணையதள முகவரிகளில்உள்ளன. அவற்றை பயிற்சி எடுத்துப் பார்க்கலாம். விவரங்களுக்கு, 044- - 664 698 77 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மாணவர்களுக்கு இலவச சுற்றுலா

அறிவியல் மையம் மற்றும் தோட்டக்கலைப் பண்ணைகளுக்கு, மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்ல, அரசு பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின், புதிய அணுகுமுறை கல்வித் திட்டத்தில், இலவச அறிவியல்சுற்றுலா அழைத்துச் செல்ல, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும், எட்டாம் வகுப்பு வரை, 800 பேரை சுற்றுலா அழைத்து செல்ல, மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்தில், மாணவர்களுக்கு, காலை சிற்றுண்டி, 15 ரூபாய்; மதிய உணவு, 50 ரூபாய் வீதம் நிதி ஒதுக்கப்படுகிறது. திறமையான ஆசிரியர்கள் உடன் செல்ல வேண்டும். அரசு பஸ்களில் மட்டுமே பயணிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

கலைப்பாட தொழில்நுட்பதேர்வில் மறுகூட்டல் தேவை

கலைப் பாட தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு வழங்க வேண்டும்' என, அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அரசுப் பள்ளிகளில் கலை, ஓவியம், இசை, கணிதம் உள்ளிட்ட, சிறப்புப் பாடங்கள் உள்ளன; இவற்றை கற்பிக்க, சிறப்பாசிரியர்கள் உள்ளனர். 
கலைப் பாடம் படித்துள்ளதுடன், தமிழக அரசு நடத்தும், தொழில்நுட்பத் தேர்விலும் தேர்ச்சி பெற்றால் தான், சிறப்பாசிரியர் பணி கிடைக்கும். அதன்படி, தொழில்நுட்ப தேர்வுக்கு, 14ம் தேதி, விண்ணப்பப் பதிவு துவங்கியது; 20ல் முடிந்தது. இந்நிலையில், தேர்வு முடிவுக்கு பின், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முறையைஅமல்படுத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, கலை ஆசிரியர்கள் நல சங்க தலைவர் ராஜ்குமார், செயலர்சாந்தகுமார் ஆகியோர், அரசு தேர்வுத்துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தராதேவியை சந்தித்து மனு அளித்துஉள்ளனர்.

எதிர்காலத்தில் எந்த துறைக்கு மவுசு?

 வேலை வாய்ப்பை பொறுத்தவரை, இளநிலை அல்லது முதுநிலை படிப்பை எந்த பல்கலைக்கழகத்தில் படிக்கிறோம்? என்பது மிக முக்கிய பங்கு வகிக்கும்!

* துறை சார்ந்த சர்வதேச அறிவு அவசியம். அதன் அடிப்படையிலேயே, வரும் 2020ம் ஆண்டிற்குள் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். அதேசமயம், நாம் பெற்றுள்ள திறனில் 40 சதவீதம்,நாம் சார்ந்த தொழில், துறை அல்லது தொழில்நுட்பத்திற்கு சம்பந்தமேஇருக்காது என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
*நவீன இயந்திரங்களின் வருகையால், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ‘கோர்’ பொறியியல் துறைகளில் 30 சதவீத வேலை வாய்ப்புகள் காணாமல் போகும். அதேசமயம், டிஜிட்டல் மற்றும் உற்பத்தி நிறுவனங்களின் உதயம், அதிக பணியாளர்களை நியமிக்கும் நிலையை உருவாக்கும்.
* பிக்-டேட்டா அனலிடிக்ஸ், மொபைல் அப்ளிகேஷன் டெவலப்மென்ட், பிளாட்பார்ம் இன்ஜினியரிங், கிராபிக் டிசைன் இன்ஜினியரிங், நியு யூசர் இன்டர்பேஸ் மற்றும் டேட்டா சயின்டிஸ்ட் ஆகிய புதிய துறைகளில் தேவைப்படும் திறனாளர்களின் எண்ணிக்கை பிரம்மாண்டமான அளவில் இருக்கும்.
* முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆன்லைன் மூலம் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யும் முறையை அதிகளவில் கையாளும். அதன்படி, வரும் 2020ம் ஆண்டிற்குள் 22 சதவீத பணியாளர்களை ஆன்லைன் மூலம் தேர்வு செய்யும்.
* பல்கலைக்கழகங்கள் தங்களது பாடத்திட்டத்தை தொழில் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப மாற்றத் தவறினால், வேலை வாய்ப்புக்கு தகுதியுடைய பட்டதாரிகளின் எண்ணிக்கை 20 சதவீதத்தை விட குறைவாகவே இருக்கும்.
* எந்த இன்ஜினியரிங் படிப்பை படித்திருந்தாலும், ‘கோடிங்’ திறன்உள்ளவர்களுக்கு சாப்ட்வேர் துறையில் வேலைவாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.
* ஈவன்ட் மேனேஜ்மென்ட், மீடியா, விஷûவல் மீடியா மற்றும் பொழுதுபோக்கு துறைகளின் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
* கிரியேட்டிவ் மற்றும் டெக்னிக்கல் ரைட்டிங் போன்ற புதிய துறைகளில் பணியாளர்களுக்கான தேவை எக்கச்சக்கமாக இருக்கும்.
* ஹெல்த் கேர் துறையின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 10 சதவீதமாக உயரும்.
* சட்டத்துறையில், கார்ப்ரேட் சட்ட ஆலோசகளின் தேவையும் அதிகளவில் இருக்கும்.
* கணிதம் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான தேவை சொல்லிக்கொள்ளும் வகையில் அமையும்.
* வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்துறையில் பணியாளர்களின் தேவை அபரிமிதமாக இருக்கும்.
* மாற்றத்தக்க சக்தி துறையில் பணியாளர்களின் தேவை அடுத்த ஐந்து ஆண்டுகளில், 15 சதவீதத்தை தொடும்.
* அதிக தேவை மிகுந்த துறைகளாக பொறியியல், வங்கி, நிதி, கணிதம் மற்றும் சேவை ஆகியவை இருக்கும்.
* ஒருவரின் முன்னேற்றத்தில் ஆங்கில வழிதொடர்பு, பகுத்தாய்வு திறன்கள் முக்கிய பங்கு வகிக்கும்.-கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி.

போனஸ் சம்பள உச்சவரம்பு ரூ.21 ஆயிரமாக உயர்த்த ஒப்புதல் : மத்திய அமைச்சரவை அனுமதி

புதுடெல்லி: தொழிற்சாலை ஊழியர்களுக்கான போனஸ் சம்பள உச்சவரம்பை ரூ.21 ஆயிரமாக உயர்த்தி மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. 


இந்த கூட்டத்தில் தொழிற்சாலை ஊழியர்களுக்கு தற்போதுள்ள போனஸ் சம்பள உச்சவரம்பை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாக உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் இனி மாதச்சம்பளம் ரூ.21 ஆயிரம் வரை வாங்குபவர்கள் போனஸ் பெற தகுதி உடையவர்கள் ஆவார்கள். இதேபோல் போனஸ் உச்சவரம்புதொகையும் ரூ.3,500ல் இருந்து ரூ.7 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பீகார் தேர்தலை கருத்தில்கொண்டே பாஜ போனஸ் உச்சவரம்பை உயர்த்தியுள்ளதாக பல்வேறு கட்சி பிரமுகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். பீகாரில் ஆளும் ஜனதா தள கட்சியின் ெசய்திதொடர்பாளர் சஞ்சய் சிங் கூறியதாவது, “போனஸ் உச்சவரம்பை உயர்த்தியுள்ளதால் பீகார் தேர்தலில் பாஜவுக்கு எந்த நன்மையும் கிடைக்காது” என்று கூறியுள்ளார்.

சித்த மருத்துவப் படிப்புகளுக்கு அக்.25-இல் கலந்தாய்வு

சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஞாயிற்றுக்கிழமை(அக்.25) தொடங்க உள்ளது.அக்டோபர் 25-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.


தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் சித்த மருத்துவம் (பி.எஸ்.எம்.எஸ்.), ஆயுர்வேதம் (பி.ஏ.எம்.எஸ்.), யுனானி (பி.யு.எம்.எஸ்.), யோகா- இயற்கை மருத்துவம் (பி.என்.ஒய்.எஸ்.), ஹோமியோபதி(பி.எச்.எம்.எஸ்.)ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 29 முதல் ஜூலை 24-ஆம் தேதி வரை நடைபெற்றது.

அரசு கல்லூரிகள்:

சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரி, பாளையங்கோட்டை சித்த மருóத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி, சென்னை அரும்பாக்கம் யுனானி, யோகா- இந்திய மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள ஹோமியோபதி கல்லூரி என மொத்தம் ஆறு அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.இவை தவிர தனியார் நடத்தும் 21 சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மொத்த இடங்கள்:

அரசு மருத்துவக் கல்லூரிகளைப் பொருத்தவரை சித்தா 150, ஆயுர்வேதம்50, யுனானி 20, யோகா- இயற்கை மருத்துவம் 60, ஹோமியோபதி 50 என மொத்தம் 330 இடங்கள் உள்ளன. இவை தவிர சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சுமார் 850 இடங்கள் உள்ளன.இந்தப் படிப்புகளில் சேருவதற்கு 5,075 மாணவர்கள் விண்ணப்பித்துஇருந்தனர். தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 4,913 பேருக்கான தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியால் கூடுதல் பணிச்சுமை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்தப்படுமா?

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணிக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது. கலந்தாய்வின்போது பல காலியிடங்கள் மறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 


இதனால் பல பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் பணியிடத்தையும் கூடுதலாக கவனிக்கின்றனர். இவ்வாறு கூடுதலாக கவனிப்பதால் பிளஸ் 2பாடம் எடுக்கும் முதுநிலை ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் கூறியதாவது: கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த தலைமை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் நெல்லை மாவட்டத்தில் சில அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் காலியிடங்கள் மறைக்கப்பட்டன. இதனால் அந்த காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இந்நிலையில் பிளஸ்2 வகுப்புகளுக்கு பாடம் கற்பிக்கும் முதுநிலை ஆசிரியர்களிடம் தலைமை ஆசிரியர் பொறுப்பும் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் முதுநிலை ஆசிரியர்களுக்கு அதிகமான பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. எனவே, காலி பணியிடங்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு மூலம் தலைமை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இதனால் ஏற்படும் முதுநிலை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த வேண்டும். 

குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த முதுநிலை ஆசிரியர்களுக்கு இரண்டாவது பொது கலந்தாய்வு நடத்த பள்ளிக் கல்வித் துறை முன்வர வேண்டும்.இவ்வாறு தெரிவித்தனர்.ஏற்கெனவே, கலந்தாய்வு மூன்று மாதங்கள் தாமதமாக நடத்தப்பட்ட நிலையில் பல அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆள் இல்லாமல் காலியாக உள்ளது. இதனால் முதுநிலை ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் பணியையும் கவனிக்க முடியாமலும், பாடத்தை முழு ஈடுபாட்டுடன் மாணவர்களுக்கு கற்பிக்கமுடியாமலும் திணறுகின்றனர.

பண்டிகை முன்பணம் ரூபாய் 5000/- கோரும் விண்ணப்பம்

CTET September 2015 Examination OMR Sheet Image & Answer key Declared

நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு 05.11.2015 மற்றும் 06.11.2015 ஆகிய நாட்களில் பயிற்சி வகுப்புகள்


டிச.4ல் ஆசிரியர்கள் போராட்டம் -நக்கீரன் செய்தி

சென்னையில் பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலகம் முன்பு டிசம்பர் 4ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது. 

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தையே மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ் மொழி கல்வி, சமச்சீர் கல்வி உறுதிசெய்ய தனி கல்வி கொள்கையை அறிக்க வேண்டும் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று கூட்டு நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளர் இளமாறன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.