யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

26/7/18

பி.இ. ஆன்லைன் கலந்தாய்வு முதல் சுற்று தொடக்கம்

தமிழகத்தில் பி.இ. ஆன்லைன் முதல் சுற்று கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடங்கியது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்குட்பட்ட பொறியியல் கல்லூரிகளில் பி.இ. படிப்பில் சேர ஆன்லைன் கலந்தாய்வுப் பட்டியலில் கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் மொத்தம் 1,06,105 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆன்லைன் கலந்தாய்வு மொத்தம் 5 சுற்றுகளாக நடைபெற உள்ளது.
கலந்தாய்வு அட்டவணை: கலந்தாய்வுக்கு முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டிய தேதி, கல்லூரியைத் தேர்வு செய்ய வேண்டிய தேதிகள், தேர்வு செய்த பொறியியல் கல்லூரியை தற்காலிகமாக உறுதி செய்தல், பொறியியல் கல்லூரி ஒதுக்கீட்டை இறுதியாக உறுதி செய்யும் தேதி, தேர்வு செய்த பொறியியல் கல்லூரிக்குச் சென்று சேர வேண்டிய தேதி ஆகியவை அண்ணா பல்கைலக்கழக பொறியியல் மாணவர் சேர்க்கை இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை 8,000 மாணவர்கள்: கடந்த 21-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி நள்ளிரவு வரை முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்க வாய்ப்புள்ள 10,000 மாணவர்களில், 8,000-த்துக்கும் மேற்பட்டவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி வரை முன்வைப்புத் தொகையைச் செலுத்தியுள்ளனர்.
நள்ளிரவு முதல் கல்லூரி தேர்வு: பிளஸ் 2 தேர்வில் கட்-ஆஃப் மதிப்பெண் 200-இல் தொடங்கி, 200-க்கு 190 வரை எடுத்து முதல் சுற்று ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் பொறியியல் கல்லூரி மற்றும் பாடப் பிரிவை ஆன்லைனில் தேர்வு செய்யத் தொடங்கி, வெள்ளிக்கிழமை (ஜூலை 27) மாலை 5 மணி வரை தேர்வு செய்யலாம்.
உதவி மையங்களிலும்...இணையதள வசதியுடன் கணினி இல்லாத மாணவர்கள், புதன்கிழமை (ஜூலை 25) முதல் வெள்ளிக்கிழமை (ஜூலை 27) வரை சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் உள்பட தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 42 உதவி மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொறியியல் கல்லூரிகள், பாடப் பிரிவைத் தேர்வு செய்யலாம்.
தொடர்ந்து தேர்வு செய்த பொறியியல் கல்லூரியை ஜூலை 28, 29 தேதிகளில் தற்காலிகமாக உறுதி செய்தல், பொறியியல் கல்லூரியை ஜூலை 30-இல் இறுதி செய்தல், தேர்வு செய்த பொறியியல் கல்லூரிக்கு ஆக. 3-ஆம் தேதிக்குள் சென்று சேருதல் ஆகியவை முதல் சுற்று கலந்தாய்வு நடைமுறைகள்.
கவனமாகத் தேர்வு செய்வது நல்லது: ஆன்லைன் மூலம் அல்லது உதவி மையங்களுக்குச் சென்று பொறியியல் கல்லூரி, பாடப் பிரிவைத் தேர்வு செய்யும் மாணவர்கள் அதிக பொறியியல் கல்லூரிகளையும், பாடப் பிரிவுகளையும் தேர்வு செய்வது நல்லது. இவ்வாறு தேர்வு செய்யும்போது, தங்களது தேர்வுக்கான வரிசைப்படுத்துதலில் உரிய கவனத்தைச் செலுத்துவது அவசியம்'' என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.
2-ஆவது சுற்று முன்வைப்புத் தொகை: இரண்டாவது சுற்றில் பங்கேற்க உள்ள 20,000 மாணவர்கள் புதன்கிழமை (ஜூலை 25) முதல் முன்வைப்புத் தொகையை வரும் 29-ஆம் தேதி வரை செலுத்தலாம். கட்-ஆஃப் மதிப்பெண் 190-க்குக் கீழ் 175 வரை உள்ள மாணவர்களுக்கு, பி.இ. ஆன்லைன் இரண்டாவது சுற்று கலந்தாய்வு வரும் 30-ஆம் தேதி தொடங்குகிறது

பொறியியல் படிப்புக்கும் விரைவில் ‘நீட்’ தேர்வு?



சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 27-வது பட்டமளிப்பு விழாவில் வேந்தர் ரெமிபாய் ஜேப்பியார், தலைவர் மேரி ஜான்சன், இணை வேந்தர் மரியஜீனா ஜான்சன், இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் துணைத் தலைவர் பூனியா, திருவனந்தபுரம் வி.எஸ்.எஸ்.சி. இயக்குநர் சோமநாத், இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் பொது இயக்குநர் திரிலோச்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.

Published :  24 Jul 2018   09:21 IST
Updated :  24 Jul 2018   09:21 IST
செம்மஞ்சேரி ராஜீவ்காந்தி சாலை யில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 27-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இதில் வேந்தர் ரெமிபாய் ஜேப்பியார், நிகர்நிலை பல்கலை. தலைவர் மேரி ஜான்சன், இணை வேந்தர் மரியஜீனா ஜான்சன், இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் துணைத் தலைவர் பூனியா, திருவனந்தபுரம் வி.எஸ்.எஸ்.சி. இயக்குநர் சோமநாத், இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் பொது இயக்குநர் திரிலோச்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.

இந்த விழாவில் வி.எஸ்.எஸ்.சி. இயக்குநர் சோமநாத் மற்றும் இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் பொது இயக்குநர் திரிலோச்சன் ஆகியோருக்கு பல்கலை. சார்பாக கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

சுமார் 2470 மாணவர்களுக்கு இளநிலை பட்டமும், 86 மாணவர் களுக்கு பல் மருத்துவ பட்டமும், 85 மாணவர்களுக்கு ஆராய்ச்சி முனைவர் பட்டமும் வழங்கப்பட் டது. மேலும், ஒவ்வொரு துறை யிலும் சிறந்து விளங்கிய 29 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் இறுதியில் செய்தி யாளர்களை சந்தித்த அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் துணைத் தலைவர் பூனியா கூறும் போது, “மருத்துவப் படிப்புக்கு ‘நீட்’ தகுதித் தேர்வு நடைபெறுவது போல், பொறியியல் படிப்புக்கும் ‘நீட்’ தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வானது வருகின்ற கல்வியாண் டில், அதாவது 2019 -ம் ஆண்டு முதல் நடத்த திட்டமிடப்பட் டுள்ளது” என்று தெரிவித்தார்.

அரசு கலைக்கல்லூரிகளில் 3 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலி!

அரசு கலைக்கல்லூரிகளில் கடந்த 3 ஆண்டுகளில் காலிப்பணியிடம் 3 ஆயிரமாக அதிகரித்துள்ளது. புதிய பாடத்திட்டங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
இந்த ஆண்டிற்கான இடமாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்படவில்லை. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாகியுள்ளது.


 தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கலை அறிவியில் கல்வி பயில மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இடம் பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த கல்வியாண்டில் பொறியியல் கல்வியை விட அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர்வதிலேயே மாணவர்கள் மத்தியில் ஆர்வம் இருந்தது
இதனால் மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் கூடுதலாக 20 சதவீத இடம் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு அதில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். தற்போது வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. ஆண்டுக்காண்டு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

அதற்கேற்ப புதிய உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என அறிவிப்பு வந்தாலும் முழுமை பெறுவதில்லை. மாநிலத்தில் சுமார் 600 கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளனர். புதிய பாடத்திட்டங்களுக்கு ஏற்ப கவுரவ விரிவுரையாளர்களும் இல்லை. இதனிடையே கடந்த 2016-17ம் ஆண்டில் ஆயிரத்து 863 ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த இடங்களும் நிரப்பப்படவில்லை. இவ்வாறாக சுமார் 3 ஆயிரம் ஆசிரியர்கள் பணிக்கு தேவைப்படுகின்றனர். இடையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து 500 பேர் மாறுதல் மூலம் நியமிக்கப்பட்டனர். இந்த ஆண்டிற்கான இடமாறுதல் கலந்தாய்வும் அறிவிக்கப்படவில்லை.

சில அரசு கலைக்கல்லூரிகளில் உதவி பேராசிரியர் மற்றும் கெஸ்ட் லெக்சரர் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். பெற்றோர் ஆசிரியர் கழக நிதி மூலம் தற்காலிக ஆசிரியர்களை வைத்து சமாளிக்கின்றனர். இதனால் மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மற்றும் புதியதாக தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு அறிவித்தபடி காலதாமதமின்றி ஆசிரியர்களை உடனே நியமிக்க உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆடி-18 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

பிடித்தம் செய்யப்பட்ட வருமானவரியை பதிவேற்றம் செய்ய ஆசிரியர்கள் கோரிக்கை

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் வருமானவரித் தொகையை உடனடியாக இ.டி.டி.எஸ் எனப்படும் மின்னணு பதிவேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டள்ளது. ஆசிரியர்,

அரசு ஊழியர் என மாதச் சம்பளம் பெறுபவர்களிடம் வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது. இத்தொகையானது சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களின் வரி விலக்கு சேகரிப்பு கணக்கு எணணில் வரவு வைக்கப்படும். ஆனால் தற்பொழுது உள்ள நடைமுறைப்படி அவர்கள் இ.டி.டி.எஸ் எனப்படும் மின்னணு முறையில் வரியினை ஒவ்வொரு காலாண்டிலும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதில் சரியான நடைமுறையை பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் பின்பற்றாததால் வருமானவரித்துறையால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு வரி செலுத்தவில்லையென எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

25/7/18

வனப் பயிற்சியாளர் பதவி: தேர்வு தள்ளிவைப்பு



வனப் பயிற்சியாளர் பதவிக்கான தேர்வு தேதி தள்ளிவைக்கப்படுவதாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு:-

வனப் பயிற்சியாளர் பதவிக்கான தேர்வுகள் செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தேதிகளில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் பிற தேர்வு நடத்தும் அமைப்புகள் பல்வேறு தேர்வுகளை அறிவித்துள்ளன.

எனவே, வனப் பயிற்சியாளர் பதவிக்கான தேர்வு தேதிகளை மாற்றியமைப்பது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆலோசித்தது.

இதையடுத்து, வனப் பயிற்சியாளர் பதவிக்குரிய தேர்வு தேதிகள் அக்டோபர் 9-ஆம் தேதி முதல் அக்டோபர் 16-ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

2018-19 கல்வி ஆண்டு வேலை நாட்கள் ஒரு பார்வை:



ஜூன்:

விடுமுறை நாட்கள்

2,3,9,10,15,16,17,23,24,30 (10 நாட்கள்)

வேலை நாட்கள் 20

சனி வேலை நாள் இல்லை

CRC பயிற்சி இல்லை

ஜூலை:

விடுமுறை நாட்கள்

1,7,8,14,15,22,29 (7 நாட்கள்)

சனி வேலை நாள் 21,28

CRC பயிற்சி இல்லை

வேலை நாட்கள் 20+24=44

ஆகஸ்ட் :

விடுமுறை நாட்கள்

4,5,11,12,15,18,19,22,25,26 (10 நாட்கள்)

சனி வேலை நாள் இல்லை

CRC பயிற்சி ஆகஸ்ட் 4

வேலை நாட்கள் 44+21=65 நாட்கள்

செப்டம்பர்:

விடுமுறை நாட்கள்

1,2,9,13,15,16,21 மற்றும் 23 முதல் 30 வரை (15 நாட்கள்)

சனி வேலை நாள் செப்டம்பர் 8

CRC பயிற்சி நாள் செப்டம்பர் 15

முதல் பருவத் தேர்வு

செப்டம்பர் 17 முதல் 22 வரை

முதல் பருவத் தேர்வு விடுமுறை

செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 2 வரை

 (10 நாட்கள்)

வேலை நாட்கள் 65+15=80

அக்டோபர்:

விடுமுறை நாட்கள்

1,2,6,7,13,14,18,19,20,21,28 (11 நாட்கள்)

சனி வேலை நாள் அக்டோபர் 27

CRC பயிற்சி 
அக்டோபர் 6

வேலை நாட்கள் 80+20=100

நவம்பர்:

விடுமுறை நாட்கள்
3,4,6,10,11,17,18,21,24,25 (10 நாட்கள்)

சனி வேலை நாள் இல்லை

CRC பயிற்சி இல்லை

வேலை நாட்கள் 100+20=120 நாட்கள்

டிசம்பர்:

விடுமுறை நாட்கள்

1,2,8,9,15,16, 23 முதல் 31 வரை (15 நாட்கள்)

இரண்டாம் பருவத் தேர்வு நாட்கள்

டிசம்பர் 17 முதல் 22 வரை

இரண்டாம் பருவத் தேர்வு விடுமுறை நாட்கள்

டிசம்பர் 23 முதல் ஜனவரி 1 வரை (10 நாட்கள்)

சனி வேலை நாள் இல்லை.

CRC பயிற்சி இல்லை

வேலை நாட்கள் 120+16=136 நாட்கள்

ஜனவரி:

விடுமுறை நாட்கள்

1,5,6,12,13,15,16,17,19,20,26,27 (12 நாட்கள்)

சனி வேலை நாள் இல்லை

CRC பயிற்சி இல்லை

வேலை நாட்கள் 136+19=155 

பிப்ரவரி:

விடுமுறை நாட்கள்

2,3,9,10,16,17,23,24 (8 நாட்கள்)

சனி வேலை நாள் இல்லை

CRC பயிற்சி இல்லை

வேலை நாட்கள் 155+20=175 நாட்கள்

மார்ச்:

விடுமுறை நாட்கள்

2,3,9,10,16,17,23,24,30,31 (10 நாட்கள்)

சனி வேலை நாள் இல்லை

CRC பயிற்சி இல்லை

வேலை நாட்கள் 175+21=196

ஏப்ரல்:

விடுமுறை நாட்கள்

6,7,13,14,17,19 மற்றும் 21 முதல் 30 வரை (16 நாட்கள்)

மூன்றாம் பருவத் தேர்வு ஏப்ரல் 10 முதல் 18 வரை

கடைசி வேலை நாள் ஏப்ரல் 20

கோடை விடுமுறை

ஏப்ரல் 21 முதல் மே 31 வரை (41 நாட்கள்)

சனி வேலை நாள் ஏப்ரல் 20

CRC பயிற்சி நாட்கள்

ஏப்ரல்22,23,24,25,26, மற்றும் 29,30 (7 நாட்கள்)

பள்ளி வேலை நாட்கள் 196+14=210 நாட்கள்

ஆசிரியர் வேலை நாட்கள்


210+10 ( பயிற்சி) = 220 நாட்கள்

சனி வேலை நாட்கள்:

🌷ஜூலை 21,28

🌷செப்டம்பர் 8

🌷அக்டோபர் 27

🌷ஏப்ரல் 20

CRC பயிற்சி நாட்கள்:

🌷ஆகஸ்ட் 4

🌷செப்டம்பர் 15

🌷அக்டோபர் 6

ஏப்ரல் 22,23,24,25,26 மற்றும் 29,30

மொத்த பயிற்சி நாட்கள்
 10

பருவத் தேர்வுகள் விவரம்:

முதல் பருவத் தேர்வு

செப்டம்பர் 17 முதல் 22 வரை

விடுமுறை

செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 2 வரை (10 நாட்கள்)

இரண்டாம் பருவத் தேர்வு

டிசம்பர் 17 முதல் 22 வரை

விடுமுறை

 டிசம்பர் 23 முதல் ஜனவரி 1 வரை (10 நாட்கள்)

மூன்றாம் பருவத் தேர்வு

ஏப்ரல் 10 முதல் 18 வரை

கோடை விடுமுறை

ஏப்ரல் 21 முதல் மே 31 வரை (41 நாட்கள்)

பள்ளி இறுதி வேலை

நாள் ஏப்ரல் 20.

10 std மெல்ல கற்கும் மற்றும் சராசரி மாணவர்களுக்கான வழிகாட்டி!

SSA சார்பில் மாவட்ட திட்ட அலுவலகத்தில் District Co-Ordinator தேர்வு செய்வதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது:

ஒரே வங்கி கணக்கிற்குள் இனி "பீம்" மூலம் பணம் அனுப்ப முடியாது:-வரும் 1- ந்தேதி முதல் கெடுபிடி!

தமிழகம் முழுவதும் சொத்து வரி 50 - 100 சதவீதம் உயர்வு

சென்னை : தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி 50 முதல் 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகம்,முழுவதும்,சொத்து வரி,50 - 100 சதவீதம்,உயர்வு
இடத்திற்கேற்ப சொத்து வரி விதிக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படுகிறது. முறைப்படி 2008க்கு பின் சொத்து வரி ஏற்றப்படவில்லை. சிலஉள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரிஅவ்வப்போது உயர்த்தப்பட்டது. பல பகுதிகளில் சொத்து வரி வசூலிக்கப்படாமல் உள்ளது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்குபெருமளவு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இது தொடர்பான வழக்கு சமீபத்தில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சொத்து வரியை மாற்றி அமைப்பது குறித்து முடிவெடுத்து இரண்டு வாரத்தில் பதில் அளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு சார்பில்அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.இதன்படி குடியிருப்பு பகுதி, வாடகை குடியிருப்பு பகுதி, குடியிருப்பு அல்லாத பகுதி என மூன்று விதமாக சொத்து வரி விதிக்கப்படஉள்ளது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு சொத்து வரி 50 சதவீதம்; வாடகை குடியிருப்பு கட்டடங்களுக்கு 100 சதவீதம்; குடியிருப்புஅல்லாத கட்டடங்களுக்கு 100 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.
நகராட்சி, பேரூராட்சி பகுதிகள் 'ஏ, பி, சி' என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு, சதுர அடி முறையில் தனித்தனியே சொத்து வரி விதிக்கப்பட்டு உள்ளது.அவை அனைத்தும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. புதிய சொத்து வரி நடப்பு ஆண்டு முதல் வசூலிக்கப்படும்.
தி.மு.க.எதிர்ப்பு
வரி உயர்வுக்கு தி.மு.க., எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சி எம்.எல்.ஏ., சுப்பிரமணியன் அறிக்கை: உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்க வேண்டிய 3,500 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட நிதி இன்னமும் பெறப்படாமல் உள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில் உள்ளாட்சி துறை ஊழல்கள் அனைத்து துறைகளையும் விஞ்சி நிற்கிறது. அதை தடுக்க முடியாத அமைச்சரும் முதல்வரும் சொத்து வரியை வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தியிருப்பது மக்கள் விரோத நடவடிக்கை. சொத்து வரி உயர்த்தப்பட்டதும் உடனடியாக பாதிக்கப்படுவோர் வாடகை குடியிருப்புதாரர்கள் தான். 
மாநகராட்சி பகுதிகளோடு புதிதாக இணைக்கப்பட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு எந்த விதமான புதிய வசதிகளையும் ஏற்படுத்தாமல் மாநகர் பகுதிகளுக்கு இணையாக சொத்து வரியை மட்டும் உயர்த்தியது கண்டனத்துக்கு உரியது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பட்டதாரி ஆசிரியர்கள் 01.08.2017அன்றையநிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரிஆசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்து பணநிரவல் செய்யப்பட்டமைபணியிலிருந்து விடுவித்த மற்றும் சேர்ந்த அறிக்கை பெறாப்படாதவர்கள்பட்டியல் அனுப்புதல் சார்பு CEO - செயல்முறைகள்!!

தனித் தேர்வர்களாகத் தேர்ச்சி பெற்றாலும் வழக்குரைஞராகப் பதிவு செய்யலாம்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப் படிப்புகளை அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்கள் மூலம் பெற்றிருக்க வேண்டும்.
இப்படிப்புகளை தொலைதூரக் கல்வி வழியாகவோ அல்லது தனியாகவோ எழுதி தேர்ச்சி பெற்றிருந்தாலும் அவை வழக்குரைஞர்களாகப் பதிவு செய்ய தகுதியான படிப்புதான் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் பி.ராஜி உள்ளிட்ட சட்ட மாணவர்கள் தாக்கல் செய்த மனுவில், மாநில பாடத் திட்டத்தின்படி 10 அல்லது பிளஸ் 2 தேர்வுகளை எங்களில் சிலர் தனித் தேர்வர்களாக எழுதி தேர்ச்சி பெற்றுள்ளோம். ஒரு சிலர் 10-ஆம் வகுப்பை முடித்த பிறகு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் உள்ள என்ஐஓஎஸ்' எனும் தேசிய திறந்தவெளி பள்ளியில் 2 ஆண்டு படிப்பை முடித்துள்ளோம். பின்னர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் 3 ஆண்டு பட்டப்படிப்பை முடித்து, அங்கீகரிக்கப்பட்ட சட்டப் பல்கலைக்கழகம் மூலமாக 3 ஆண்டு சட்டப்படிப்பையும் படித்து முடித்துள்ளோம். நாங்கள் 10 அல்லது பிளஸ் 2 தேர்வை தனியாக எழுதி தேர்ச்சி பெற்றுள்ளதால், எங்களை வழக்குரைஞர்களாகப் பதிவு செய்ய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் மறுக்கிறது.

எனவே, எங்களை வழக்குரைஞர்களாகப் பதிவு செய்ய பார் கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனர்.தலைமை நீதிபதி விசாரணை: இந்த மனு மீதான விசாரணை தலைமைநீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதிகள் ஆர்.சுப்பையா, அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முழுஅமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 3 ஆண்டு சட்டப்படிப்புக்கு 10 மற்றும் பிளஸ் 2 மற்றும் 3 ஆண்டு பட்டப்படிப்பை நிறைவு செய்து தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

இதே போன்று 5 ஆண்டு சட்டப்படிப்புக்கு 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இப்படிப்புகளை அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்கள் வழியாகப் பெற்றிருக்க வேண்டும். அந்த படிப்புகளை அவர்கள் தொலைதூரக்கல்வி வழியாகவோ அல்லது தனியாக எழுதியோ தேர்ச்சி பெற்றிருந்தாலும் அவை வழக்குரைஞர்களாகப் பதிவு செய்யத் தகுதியான படிப்புதான்.

10, பிளஸ் 2, பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளை உரிய வழிகளில் இல்லாமல் திறந்தவெளி பல்கலைக்கழங்கள் மூலமாகவோ நேரடியாகவோ படித்து பட்டம் பெற்றிருந்தால் அவர்கள் மட்டுமே வழக்குரைஞர்களாகப் பதிவு செய்ய முடியாது. எனவே, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளை தனியாகத் தேர்வு எழுதி தற்போது சட்டப்படிப்பையும் நிறைவு செய்துள்ள, மனுதாரர்களான இந்த மாணவர்களை வழக்குரைஞர்களாக 3 மாத காலத்துக்குள் பதிவு செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

9ம் வகுப்பில் தொழிற்கல்வி பாடம் அறிமுகம்: 40 ஆண்டுகளில் இல்லாத புது முயற்சி

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் போல, தமிழக பள்ளி கல்வியிலும், 40 ஆண்டுகளில் இல்லாத வகையில், 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, தொழிற்கல்வி பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யில், பிளஸ் 1, பிளஸ் 2 தவிர, 10 வகுப்புக்கும், தொழிற்கல்வி, விருப்ப பாடமாக நடத்தப்படுகிறது.

ஒப்புதல்
இதை பின்பற்றி, தமிழ கத்திலும், இடைநிலை கல்வியில் முதன்முதலாக, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, தொழிற்கல்வி பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வி இயக்குனரும், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ.,வின் முன்னாள் இயக்குனருமான, ராமேஸ்வர முருகன், இந்த திட்டத்துக்கான கோப்பை தயாரித்து, மாநில அரசிடம் தாக்கல் செய்திருந்தார். அதற்கு ஒப்புதல் கிடைத்து உள்ளது.

இதன்படி, நடப்பு கல்வி ஆண்டில், முதற்கட்டமாக, 67 பள்ளிகளில், 9ம்வகுப்பிற்கு மட்டும், தொழிற்கல்வி பாடம் நடத்தப்பட உள்ளது. இதற்கு, பள்ளி அளவிலான தேர்வாக அல்லாமல், அரசின் பொது தேர்வுத்துறை வழியாக, தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கு பின், தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் வாயிலாக சான்றிதழ் வழங்கப்படும்.

இதுகுறித்து, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்கள் கூட்டமைப்பின், மாநில அமைப்பாளர் ஜனார்த்தனன் கூறியதாவது:தமிழகத்தில், 1978 - 79ல், தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் துவக்கப்பட்டு, அவை, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு அமலுக்கு வந்தன.
வேலை வாய்ப்பு

ஆனால், இடைநிலைமாணவர்களுக்கும், தொழிற்கல்வி துவங்க வேண்டும் என, நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வந்தது. அதை நிறைவு செய்யும் வகையில், 9ம் வகுப்பில், தொழிற்கல்வி பாடம் அமலுக்கு வந்துள்ளது.இதில், தானியங்கி ஊர்தி பொறியியல், வீட்டு அலங்காரம் செய்தல், விவசாயம், அழகு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல பாடங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. 

இந்த நடவடிக்கையால், உயர்கல்விக்கு செல்லாமல், பள்ளிப்படிப்பை மட்டும் முடிக்கும் மாணவர்களுக்கும், தொழில் திறனும், வேலை வாய்ப்பும் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார். மத்திய திட்டத்தை பின்பற்ற உத்தரவுதொழிற்கல்வி பாடத்தை, சி.பி.எஸ்.இ.,யை போல, தமிழக மாணவர்களுக்கு, விருப்ப பாடமாக நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

சி.பி.எஸ்.இ., பின்பற்றும், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி.,யின் பாடத்திட்டப்படி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த மத்திய பாடத்திட்டத்தில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம், தேவையான திருத்தங்கள் மேற்கொள்ள அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது

பிளஸ் 2 துணை தேர்வு: இன்று, 'ரிசல்ட்'

பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வின் முடிவு, இன்று வெளியாகிறது.இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பிளஸ் 2 பொது தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, உடனடி துணை தேர்வு, ஜூனில் நடத்தப்பட்டது. 
இந்தத் தேர்வு முடிவு, http://www.dge.tn.nic.in என்ற, இணையதளத்தில், இன்று வெளியிடப்படும். தேர்வர்கள் தங்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, இந்த இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.தேர்வு முடிவில் சந்தேகம் உள்ளவர்கள், நாளை முதல் இரண்டு நாட்கள், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் சென்று, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு அதற்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெளிநாடு பயணமாகும் சேலம் அரசு பள்ளி மாணவர்

அரசு சார்பில், வெளிநாட்டில் கல்வி பயணம் மேற்கொள்ள, பண்ணப்பட்டி அரசு பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சேலம் மாவட்டம், பண்ணப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், 1,745 மாணவ - மாணவியர்
படிக்கின்றனர். இப்பள்ளியில், அரசு சார்பில், வெளிநாட்டில் கல்வி பயணம் மேற்கொள்ள, ஒன்பதாம் வகுப்பு மாணவர் மேகநாதன். சேலம் கோட்டை அரசு மகளிர் பள்ளியில், 10ம் வகுப்பு மாணவி ராகவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் வாகனத்துக்காக, தானியங்கி வேகத்தடை கட்டுப்பாட்டு கருவியை, மாணவர் மேகநாதன் கண்டுபிடித்துள்ளார். ஆம்புலன்ஸ் வேகமாக வரும் போது, வேகத்தடை, தானாக, சமமான சாலையாக மாறி விடும். பின், மீண்டும், வேகத்தடையாக மாறிவிடும்.போக்குவரத்து சிக்னலும், பச்சை விளக்குக்கு மாறி, மற்ற சிக்னல்கள் சிவப்பு விளக்குக்கு மாறிவிடும். மேலும், செல்லக்கூடிய மருத்துவமனைக்கு, முன்னதாகவே அலாரம் அடிக்கக்கூடிய வகையில் புதிய கண்டுபிடிப்பை உருவாக்கி உள்ளார்.பண்ணப்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் மணிவண்ணன் கூறுகையில், ''பல்வேறு அறிவியல் கண் காட்சியில், மேகநாதன் வெற்றி பெற்றுஉள்ளார். ''சேலம் மாவட்டம், பெருமை கொள்ளும் வகையில், அவர் வெளிநாடு செல்ல தேர்வு பெற்றது, மகிழ்ச்சியாக உள்ளது,'' என்றார்.மாணவர், எந்த நாட்டுக்கு அழைத்து செல்லப்படுகிறார் என்ற விபரம் வெளியிடப்படவில்லை.

அரசாணை (நிலை) எண். 149 Dt: July 20, 2018 -பள்ளிக் கல்வி-தமிழ்நாடு மாநில பொதுப்பள்ளி கல்வி வாரிய பரிந்துரைக்கிணங்க ஆசிரியர் தகுதித் தேர்வினை பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தகுதியை நிர்ணயிக்கும் ஒரு தனித் தேர்வாகவும் அரசு பள்ளிகளில் ஆண்டு தோறும் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கு பணிநாடுநர்களுக்கு போட்டித் தேர்வினை (Competitive Exam) தனியாகவும் நடத்துதல் – ஆணை வெளியிடப்படுகிறது


12-ம் வகுப்பு முடித்ததும் பி.எட் பட்டதாரி ஆகலாம்- அடுத்த ஆண்டு முதல் புதிய கல்வித் திட்டம்

தேசிய ஆசிரியர் பயிற்சி கவுன்சில் சட்டத்தில் மத்திய அரசு சில 
திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இதன்படி, 5 ஆண்டு பி.எட் பட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது

12-ம் வகுப்பு முடித்த உடன் பிஏ.பி.எட்., பிஎஸ்சி.பி.எட் மற்றும் பிகாம்.பி.எட் ஆகிய நான்காண்டு பட்டப்படிப்புகளில் சேர முடியும்

பாராளுமன்றத்தில் இதன் மீதான விவாதத்தில் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி, பள்ளியில் படிக்கும் போதே ஆசிரியர் கனவுடன் இருக்கும் மாணவர்கள், 12 முடித்தவுடன் நேரடியாக பி.எட் சேர முடியும் என தெரிவித்தார்

 ஏற்கனவே, சட்டம் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகளில் இது போன்ற 5 ஆண்டு பட்டங்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது

24/7/18

முதுகலை ஆசிரியர்கள் உள்பட அனைத்து வகை ஆசிரியர்களும் குறைந்தபட்சம் 28 பாட வேளைகள் பணியாற்ற வேண்டும்-. தலைமையாசிரியர்கள் தவிப்பு

கடையநல்லூர்: அரசுக்கு ஏற்பட்டு வரும் நிதி இழப்பைக் கருத்தில் கொண்டு முதுகலை ஆசிரியர்களுக்கு கண்டிப்பாக 28 பாட வேளைகளை ஒதுக்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், பல பள்ளிகளில் இந்த அறிவிப்பு காற்றில் பறக்க விடப்பட்டுள்ளதால் மக்களின் வரிப்பணம் வீணாகி வருகிறது.
 போதிய பாடவேளைகள் இல்லாமல் முதுகலை ஆசிரியர்கள் பணியாற்றுவதால், அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டு வருவதாக மாநில கணக்காயர் தணிக்கையில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, நிதி இழப்பை சரி செய்யும் நோக்கில், கல்வித் துறை பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. அதன் ஒரு பகுதியாக முதுகலை ஆசிரியர்கள் உள்பட அனைத்து வகை ஆசிரியர்களும் குறைந்தபட்சம் 28 பாட வேளைகள் பணியாற்ற வேண்டும் என கல்வித் துறை உத்தரவிட்டது.
 இது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் (ந.க.எண்.055838-நாள் 18-4-2018) சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். அதில், முதுகலை ஆசிரியராகப் பணியாற்றும் ஆசிரியர்கள், மேல்நிலை வகுப்புகளில் 28 பாடவேளைகள் போதிக்க வேண்டும். மேல்நிலை வகுப்புகளில் போதிய பாட வேளை இல்லை என்றால் அந்த முதுகலை ஆசிரியர்களை கீழ்நிலை வகுப்புகளுக்கு, அதாவது 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கு பாடங்களை கற்பிக்கும் வகையில் பாட வேளைகள் ஒதுக்க வேண்டும்.
 மேல்நிலைப் பிரிவுகளை பொருத்தவரை, நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் பள்ளி அமைந்திருந்தால் குறைந்தபட்சம் 30 மாணவர்கள் இருக்க வேண்டும். ஊரகப் பகுதிகளில் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இருக்க வேண்டும். குறைந்தபட்ச மாணவர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் பாடப் பிரிவுகளை நீக்கிவிட்டு, அதில் பயின்று வரும் மாணவர்களை அருகேயுள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 ஆங்கிலவழிப் பிரிவுகள்
 அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் நிர்ணயம் செய்யப்படுவது போன்றே, ஆங்கிலவழிக் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தனியே ஆசிரியர்கள் நிர்ணயம் செய்திட வேண்டும். ஆங்கிலவழிப் பிரிவுகளில் ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இருக்க வேண்டும். அதற்கு குறைவாக இருந்தால், அந்த மாணவர்களை அருகேயுள்ள பள்ளிகளில் செயல்படும் ஆங்கிலப் பிரிவில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 1 முதல் 6-ஆம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளில் 60 மாணவர்கள் இருப்பின் இரண்டு ஆசிரியர்களும், 61 முதல் 90 மாணவர்கள் வரை இருப்பின் 3 ஆசிரியர்களும், 91 முதல் 120 மாணவர்கள் வரை இருந்தால் 4 ஆசிரியர்களும் நியமிக்கப்பட வேண்டும். கூடுதலாக இருக்கும் ஒவ்வொரு 30 மாணவருக்கும் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும்.
 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி குறைந்தபட்சம் 3 ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட வேண்டும். ஒரு வகுப்பில் 35 மாணவர்கள் இருந்தால் அதை ஒரு பிரிவாக கணக்கில் கொண்டு ஓர் ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். ஐம்பதுக்கு மேல் மாணவர்கள் இருந்தால் அவ்வகுப்பை இரண்டாகப் பிரித்து, கூடுதல் பிரிவை ஏற்படுத்தலாம்.
 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையில் 5 ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட வேண்டும். 9 மற்றும் 10-ஆம் வகுப்பில் தலா 40 மாணவர்கள் இருப்பின் வகுப்பிற்கு ஓர் ஆசிரியர் நிர்ணயம் செய்ய வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கை 60க்கு மேல் கூடினால் அவ்வகுப்பை இரண்டாகப் பிரித்து கூடுதல் பிரிவு ஏற்படுத்த வேண்டும்.
 வாரத்துக்கு குறைந்தபட்சம் 28 பாடவேளைகள் கண்டிப்பாக ஒதுக்கப்பட வேண்டும். பாடவேளைகள் முறையாக ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
 காற்றில் பறக்கும் அறிவிப்புகள்
 நிதி இழப்பை சரிசெய்யும் நோக்கில் கல்வித் துறை எடுத்துள்ள முடிவை பொதுமக்கள் வரவேற்று வரும் நிலையில், பல பள்ளிகளில் இத்தகைய அறிவிப்புகளை பின்பற்றுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. முதுகலை ஆசிரியர்கள் பலர் மேல்நிலை வகுப்புகளில் போதிய பாடவேளைகள் இல்லாதபோதும், கீழ் வகுப்புகளுக்கு செல்வதை கெüரவக் குறைச்சலாக பார்க்கும் நிலை உள்ளதால், பட்டதாரி ஆசிரியர்களே வழக்கம் போல் அந்தப் பாட வகுப்புகளுக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
 இதனால், குறைந்தபட்சமாக 28 பாடவேளைகள் கூட இல்லாமல் முதுகலை ஆசிரியர்கள் பணியாற்றும் நிலையே பல பள்ளிகளிலும் தொடருகிறது. சில பள்ளிகளில் கண்துடைப்பாக நீதி போதனை வகுப்புகள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
 கல்வித் துறையில் உயரிய அதிகாரியான இயக்குநரின் உத்தரவைக் கூட செயல்படுத்த முடியாமல் சில தலைமையாசிரியர்கள் தவித்து வருகின்றனர்.
 ஏற்கெனவே, நிதி நெருக்கடியில் தவித்துவரும் அரசு, நிதி இழப்பைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
 - வி. குமாரமுருகன்

சொத்து வரி, குடிநீர் வினியோகம் உயர்வு-மாநகராட்சி, நகராட்சி ஊராட்சி உட்பட்ட சொத்து வரி மற்றும் குடிநீர் வினியோகம் உயர்வுக்காண ஆணை