யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

30/8/18

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வியாளர்கள் சங்கமம் நடத்தும் கனவு ஆசிரியர்களும் கலாம் மாணவர்களும் நிகழ்ச்சி அழைப்பு!

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு
காரைக்குடியில் மாநிலம் தழுவிய ஆசிரியர்களின் கூடல்:
கல்வியாளர்கள் சங்கம ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார் பேட்டி.

புதுக்கோட்டை,ஆக.29:  தமிழகம் முழுவதும் உள்ள தன்னார்வ மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுமிக்க ஆசிரியர்களை ஒன்று திரட்டி *கனவு ஆசிரியர்களும் கலாம் மாணவர்களும்* என்ற தலைப்பில் வரும் செப்டம்பர் 1 அன்று காரைக்குடியில் மாநிலம் தழுவிய ஆசிரியர்களின் கூடல் நிகழ்வானது நடைபெற உள்ளது.
இது குறித்து கல்வியாளர் சங்கம மாநில ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் தங்களுடைய தன்னார்வமிக்க பணிகளால் பள்ளிகளையும், மாணவர்களையும் ,
பள்ளிகளுடன் சேர்த்து சமூகத்தையும் வளர்த்தெடுக்கும் ஆசிரியர்கள் வெளியில் தெரியாத விண்மீன்கள்போல எண்ணற்ற ஆசிரியர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் அனைவரையும் ஓர் இடத்தில் சங்கமிக்க செய்து அவர்களுடைய அனுபவங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பை கல்வியாளர்கள் சங்கமம்  தொடர்ந்து ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது..
அந்த வகையில் எதிர்வரும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 1 அன்று காரைக்குடி ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர்களின் சங்கமத்தினை ஏற்பாடு செய்துள்ளது..
இதில் ஆசிரியர்களுடன் மாணவர்களும் இணைந்து சிறப்பிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வருமானவரித்துறை கூடுதல்  ஆணையர் V. நந்தகுமார் ஐ.ஆர்.எஸ் அவர்களும்,
பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர்
பொ. பொன்னையா அவர்களும்,தமிழ்நாடு மைக்ரோசாப்ட் நிறுவன மேலாளர்  ஆர்.ஹரிஹரன் அவர்களும் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்கள்..
இந்நிகழ்வில் ஆளுமைத்திறன் மிக்க ஆசிரியர்களது கலந்துரையாடலும்,  தனித்திறன் மிக்க மாணவர்களது பங்கேற்பும் அரங்கேற உள்ளது..
அத்துடன் மாணவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி, இலக்குகளை தீரமானிப்பது எப்படி, திட்டமிட்டு அவற்றை அடைவது எப்படி  என்பது சார்ந்த வழிகாட்டல் கருத்தாடல்களும்,
ஆசிரியர்கள் குழுவாக இணைந்து செயல்படுவது எப்படி, தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்துவது, தன்னார்வலர்களை எவ்வாறு பள்ளியின் வளர்ச்சியில் பங்கேற்கச் செய்வது என்பது குறித்த கலந்துரையாடலும் நடைபெற உள்ளது.
இதில் மாநிலம் முழுவதும் இருந்து தன்னார்வமிக்க ஆசிரியர்கள், மாணவர்கள் என கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
ஆசிரியர்கள் அனைவரும் இலவசமாக
பங்கேற்கும் வகையில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்வியாளர் சங்கம மாநில அமைப்பும் காரைக்குடி ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி நிர்வாகமும் இணைந்து செய்து வருகின்றன எனக் குறிப்பிட்டார்.
மேலும்  இது போன்ற நிகழ்வுகள் ஆசிரியர்களை ஊக்கப்படுத்துவதோடு,ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் மனப்பான்மையோடு ஒன்று சேர்ந்து நிற்கும் இது போன்ற நிகழ்வுகள் கல்வித்துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும் என்றார்..

அரசுத்துறைகளில் கறுப்பு ஆடுகள் - உயர்நீதிமன்றம் அதிருப்தி

அரசுத்துறையின் ஒவ்வொரு அலுவலகத்திலும் சில கறுப்பு ஆடுகள் உள்ளன. அரசாணைகள் மற்றும் இதர நகல்களை பிறருக்கு வழங்குவதே அவர்களின் முக்கிய வேலை என்பதற்கு இவ்வழக்கு சரியான முன்னுதாரணம்,' என அதிருப்தியை வெளிப்படுத்திய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, 'துாத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பணி நியமன உத்தரவு நகலை மனுதாரரிடம் சட்டவிரோதமாக ஒப்படைக்க காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என உத்தரவிட்டுள்ளது.
துாத்துக்குடி சண்முகராஜ் தாக்கல் செய்த மனு:துாத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக டிரைவர் பணி தேர்வுக்கு அழைப்பு கடிதம் வந்தது. 2013 நவ.,7 ல் நேர்காணல் தேர்வில் பங்கேற்றேன். பணிக்கு தேர்வு செய்யப்பட்டேன். ஆனால், எவ்வித காரணமும் தெரிவிக்காமல் என்னை பணியில் சேர அனுமதிக்கவில்லை. துாத்துக்குடி கலெக்டருக்கு மனு அனுப்பினேன். தேர்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் என்னை பணியில் சேர்க்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும். 
இவ்வாறு சண்முகராஜ் மனு செய்தார்.நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார்.துாத்துக்குடி ஊராட்சி ஒன்றிய கமிஷனர்,'மனுதாரரை 2013 நவ.,7 ல் டிரைவர் பணிக்கு தேர்வு செய்தோம். அன்று நியமன உத்தரவு தயாரிக்கும்போதுதான், பணிக்குரிய குறிப்பிட்ட வயது வரம்பை மனுதாரர் கடந்துவிட்டது தெரிய வந்தது. இதனால் அவரது நியமன உத்தரவு ரத்து செய்யப்பட்டது. ஆனால், 2013 நவ.,7 ல் தேர்வு செய்யப்பட்ட உத்தரவு நகலை எங்கள் அலுவலக கோப்புகளிலிருந்து மனுதாரர் சட்டவிரோதமாக பெற்றுள்ளார்,'என பதில் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி: அரசுத்துறையின் ஒவ்வொரு அலுவலகத்திலும் சில கறுப்பு ஆடுகள் உள்ளன. அரசாணைகள் மற்றும் இதர நகல்களை பிறருக்கு வழங்குவதே அவர்களின் முக்கிய வேலை என்பதற்கு இவ்வழக்கு சரியான முன்னுதாரணம்.பணி நியமன உத்தரவு நகல் அதிகாரப்பூர்வமாக அனுப்பப்படாதபட்சத்தில், தன்னிடம் உள்ள நியமன உத்தரவு நகல் அடிப்படையில் மனுதாரர் பணி உரிமை கோர முடியாது. பயணிகளை பாதுகாப்பாக அழைத்துவரும் முக்கியத்துவம் வாய்ந்தது டிரைவர் பணி. மனுதாரரை தேர்வுக்கு அழைத்தது, அவர் நேர்காணலில் பங்கேற்றது உண்மை. 
தேர்வு முடிந்து, பணி நியமன உத்தரவு தயாரிக்கும் போதுதான் அதிகாரிகள் சுதாரித்துக் கொண்டு மனுதாரர் வயது வரம்பை கடந்துவிட்டார் என கண்டறிந்துள்ளனர்.
பணிக்குரிய தகுதியை இழந்ததால், மனுதாரருக்கு பணி நியமனம் வழங்கப்படவில்லை. ஆனால், சில தவறான நபர்கள் மூலம் பணி நியமன உத்தரவு நகலை மனுதாரர் கைப்பற்றியுள்ளார்.இதுபோல் அதிகாரப்பூர்வமற்ற வகையில் அரசு ஆவணத்தை ஒப்படைப்பது சமூகத்திற்கு ஆபத்து. சம்பவத்தின் போது நிர்வாகப் பிரிவில் பணிபுரிந்தவர்கள் யார்? பணி நியமன உத்தரவு நகலை மனுதாரரிடம் சட்ட விரோதமாக ஒப்படைக்கக் காரணமானவர்கள் யார்? என்பதை கலெக்டர் மற்றும் ஊராட்சி ஒன்றிய கமிஷனர் விசாரிக்க வேண்டும். குற்றம் புரிந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்றார்.

M.Ed படிப்பு - செப். 3 வரை அவகாசம்

எம்.எட்., மாணவர் சேர்க்கைக்கு, வரும், 3ம் தேதி
 வரை விண்ணப்பிக்கலாம்' என, ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவித்துஉள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையில், எம்.எட்., படிப்பிற்கு மாணவர்களை சேர்க்க, ஆன்லைன் வாயிலாக பதிவு நடந்து வருகிறது.
இந்த பதிவு, கடந்த வாரம் முடிவதாக இருந்தது. ஆனால், பல்வேறு விடுமுறை, மழை வெள்ள பாதிப்பு போன்றவற்றால், வரும், 3ம் தேதி வரை, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என, பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை :

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிறந்த தேதியில் 
தவறு இருந்தால், அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர்' என, கல்வித்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
 பிறந்த தேதி, தவறாக, இருந்தால், பணி நீக்கம்
மத்திய - மாநில அரசுகளின் பல்வேறு திட்டங் கள் மற்றும் அரசு பணிகளுக்கு, சரியான பிறந்த தேதி ஆவணம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
ஆதாரம்
இந்த விஷயத்தில், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றை ஆதாரமாகபயன்படுத்தி,
பிறந்த தேதி நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிறந்த தேதியை திருத்தம் செய்வதற்கு, புதிய கட்டுப்பாடு கள் விதிக்கப்பட்டு உள்ளன.
தமிழக அரசின்தலைமைச் செயலர், கிரிஜா வைத்தியநாதன் உத்தரவுப்படி, அனைத்து இன்ஜி., கல்லுாரிகள், பாலிடெக்னிக்குகள் மற்றும் பள்ளிக் கல்வி அலுவலகங்களுக்கு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், கூறப்பட்டுள்ள தாவது:
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்களின் பிறந்த தேதியில் தவறு உள்ளதாக, திருத்தம் கோரி விண்ணப்பித்தால், அதற்கான ஆதார ஆவணமாக, சம்பந்தப்பட்டவர்களின், 10ம் வகுப்பு சான்றிதழை ஆய்வு செய்யவேண்டும்.
பள்ளி சான்றிதழ்
பத்தாம் வகுப்பு முடிக்க, 1977 வரை, 15 வயதும்; 1978 முதல், 14 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
எனவே, 10ம் வகுப்பு சான்றிதழ் அடிப்படையில் மட்டுமே, வயதில் திருத்தம் செய்ய வேண்டும். வயது மாற்றமாக இருந்தால், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், விசாரணை முடியும் வரை, தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
இறுதி விசாரணைக்கு பின், வயதில் தவறு இருந்தால், பணி நீக்கம் செய்வதுடன், அவருக் கான அரசு பலன்களும் ரத்து செய்யப்பட வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

பாரத ஸ்டேட் வங்கி : 1295 கிளைகளின் IFSC கோடு எண்கள் மாற்றம்

நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி
தனது 1295 கிளைகளின் IFSC கோடு எண்களை மாற்றி உள்ளது.

வங்கிப் பரிவர்த்தனைகளுக்காக ஒவ்வொரு வங்கியின் கிளைகளுக்கும் அடையாள எண்ணான ஐ எஃப் எஸ் சி கோட் எண் கொடுக்கப்படுகிறது. முக்கியமாக இணைய தள பரிவர்த்தனைகள் இதன் மூலமே நடைபெறுகின்றன. நாட்டின் பெரிய வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் இணை வங்கிகள் கடந்த வருடம் இணைக்கப்பட்டன. அத்துடன் பாரத பெண்கள் வங்கியும் இணைக்கப்பட்டதால் நாட்டின் மிகப் பெரிய வங்கியாக பாரத ஸ்டேட் வங்கி உள்ளது.


அதை ஒட்டி தற்போது 1295 கிளைகளின் அடையாள எண்ணை பாரத ஸ்டேட் வங்கி மாற்றி உள்ளது. இந்த மாறுதல் குறித்த அறிவிப்பு வங்கியின் இணய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் அந்த இணைய தளத்தினுள் சென்று தங்கள் வங்கியின் கிளையின் பெயரை பதிந்தால் புதிய எண்கள் தெரியவரும் என வங்கி அறிவித்துள்ளது.

10 வருடங்களுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு என்பதை இனிமேல் ஒவ்வொரு வருடமும் விலைவாசி உயர்வு அடிப்படையில் கொண்டு ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசு முடிவு?

TET ஆசிரியர் தகுதி தேர்வு எழுத பி.எட் கணினி அறிவியல் பட்டதரிகளுக்கு அனுமதி கோரிக்கை மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது..

இனி TN SCHOOL ATTENDANCE APP மூலம் வருகை பதிவு - தலைமை ஆசிரியர்கள் App Download செய்ய உத்தரவு - CEO செயல்முறைகள் (27.08.2018)

மாவட்ட வாரியாக 30 மாணவர்களுக்கு காமராஜர் விருது :

ஆசிரியர் தினத்தையொட்டி, மாவட்ட வாரியாக, 30 மாணவர்களுக்கு, காமராஜர் விருது வழங்கப்பட உள்ளது.தமிழக பள்ளி கல்வி துறையில், மேற்கொள்ளப் பட்ட மாற்றங்களில் முக்கியமாக, பொது தேர்வுகளுக்கான, 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த மாணவர்களில், மாநில மற்றும் மாவட்ட அளவில், முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு, அரசின் உதவித்தொகை வழங்கப்பட்டது.

இதில், ஆங்கில வழி மாணவர்களுக்கே, அதிக உதவித்தொகை கிடைத்தது. இதனால், அரசு பள்ளி மாணவர்களும், தமிழ் வழி மாணவர்களும் பின்தங்கினர். மேலும், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆர்வமும், படிப்பின் மீது குறைந்தது.இதை மாற்றும் வகையில், தமிழ் வழியில் படித்து, நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்கும் புதிய திட்டத்தை, தமிழக அரசு அறிவித்தது.

இதன்படி, 2017 - 18ம் கல்வி ஆண்டில், தமிழ் வழியில் படித்து, முன்னிலை இடம் பெற்ற திறமையான மாணவர்களுக்கு, காமராஜர் விருது வழங்கப்பட உள்ளது.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், தலா, 15 மாணவர்கள் என, ஒவ்வொரு மாவட்டத்திலும், 30 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களுக்கு, காமராஜர் பெயரில் விருது மற்றும் சான்றிதழ்; பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய்; பிளஸ் 2வுக்கு, 20 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது. வரும், 5ம் தேதி நடக்கும் ஆசிரியர் தின விழாவில், இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன

தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு 1,550 இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு!

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டு முதல் 1,550 இடங்கள் கூடுதலாக இணைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 11 தனியார் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 1,450 இடங்கள் உள்ளன. இதில் அரசு ஒதுக்கீட்டுக்கு 881 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 569 இடங்களும் அடங்கும். இதனிடையே தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் வழங்க கோரி, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு ஏராளமான மருத்துவக் கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன.
இதனிடையே மதுரையைச் சேர்ந்த சிஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிக்கும், கோவையை சேர்ந்த கோவை மெடிக்கல் சென்டருக்கும் தடையில்லாச் சான்று வழங்கப்பட்டுள்ளது. இரு சுயநிதிக் கல்லூரிகளிலும் தலா 150 இடங்கள் அதிகரிப்பதற்கான பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன.
இதேபோன்று பனிமலர் மருத்துவக் கல்லூரிக்கும், செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரிக்கும் தலா 150 இடங்களை அதிகரிக்க மருத்துவ கல்வி இயக்குனரகம் பரிந்துரை செய்துள்ளது. இதுதவிர மேலும் 3 மருத்துவக் கல்லூரிகளுக்கும் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாணவர்களுக்காக மட்டுமில்லாமல், ஊராட்சிக்கும் நல்லதை செய்த நல்லாசிரியை!

இந்தாண்டு தமிழகத்திலிருந்து நல்லாசியர் விருதை கோவை, மலுமிச்சம்பட்டி தொடக்கப்பள்ளை தலைமை ஆசிரியை ஆர் ஸதி பெறுகிறார்.

கடந்தாண்டு தமிழகம் சார்பாக 22 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இந்தாண்டு மத்திய அரசு சார்பாக வழங்கப்படும் நல்லாசிரியர் விருது எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. தமிழகம் சார்பாக 6 ஆசிரியர்கள் மட்டும் பரிந்துரைக்கப்பட்டனர். அவர்களில் ஆசிரியை ஆர் ஸதிக்கு விருது வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆர் ஸதி கூறியதாவது:
23 ஆண்டுகளாக வாரலாறு ஆசிரியராக பணியாற்றி வருகின்றேன். கடந்த 2009ல் பணி உயர்வு பெற்று மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பொறுப்பேற்றேன்.
நான் பணியில் சேர்ந்த போது 146 மாணவ, மாணவிகள் படித்து வந்தனர். பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு வீடு வீடாக சென்று பெற்றோர்களிடம் பேசினேன். அரசு வழங்கும் உதவிகள், சலுகைகள் குறித்தும், படிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பேசி மாணவர்களை சேர்க்கைக்கு முயற்சித்தேன். தற்போது 270 மாணவர்கள் படிக்கின்றனர்.
மாணவர்கள் பாடத்தை நன்றாக புரிந்து கொள்ளும் வகையில் டேப்லெட் முறையில் பாடத்தை நடத்தப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளியை செயல்படுத்தி வருகின்றோம் என தெரிவித்தார்.
மேலும் மலுமிச்சம்பட்டி ஊராட்சியை ‘திறந்தவெளி மலம்கழிப்பிடமற்ற ஊராட்சி’ ஆக மாற்ற மாணவர்கள் பெரும் பங்காற்றினர். இதற்காக இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று மாவட்ட ஆட்சியர் எனக்கும், மாணவர்களுக்கும் விருது வழங்கி பாராட்டினார்.
2016ம் ஆண்டு கோவையில் சிறந்த பள்ளியாக ஆட்சியர் விருது பெற்றேன். 2017ல் , தமிழகத்தில் சிறந்த பள்ளி என டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது அளிக்கப்பட்டது என நெகிழ்ச்சியாக ஆசிரியை ஆர் ஸதி தெரிவித்துள்ளார்.

பயனர்களுக்கு வாட்ஸ் அப்(WhatsApp) விடுத்த எச்சரிக்கை!

பயனர்களுக்கு வாட்ஸ் அப் விடுத்த எச்சரிக்கை! வாட்ஸ் செயலியில் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளின் பாதுகாப்பு குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் அதன் பயனர்களுக்குப் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
சமூக வலைதளங்களின் முக்கிய அம்சங்களுள் ஒன்றான வாட்ஸ் அப் நிறுவனம், அடிக்கடி தனது புதிய அப்டேட்களை வெளியிட்டுப் பயனர்களைக் கவர்ந்து வருகிறது. அந்த வகையில் பயனர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற கூகுள் க்ளவுடில் சேமித்து வைக்கப்படும் பேக்கப்களுக்கு, ஸ்டோரேஜ் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று வாட்ஸ் அப் புதிய அறிவிப்பு ஒன்றைச் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்பு வெளியாகி பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வாட்ஸ் அப் அதில் உள்ள சிக்கலையும் வெளியிட்டுள்ளது.
இந்தச் சேவை குறித்து தற்போது வாட்ஸ் அப் அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கூகுள் டிரைவில் சேமித்து வைக்கப்படும் வாட்ஸ் அப்பின் மீடியா மற்றும் மெசேஜ்கள், இனி end-to-end encryption செய்யப்பட மாட்டாது" என்று தெரிவித்துள்ளது. அதாவது கூகுள் டிரைவில் சேமித்து வைக்கப்படும் எந்தவொரு பதிவுக்கும் இனி பாதுகாப்பு இல்லை என்பதே இதன் பொருளாகும். வாட்ஸ் அப் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு பயனர்களிடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்பின் இந்த அறிவிப்பு குறித்து பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் சாய் கிருஷ்ணா கொத்தப்பள்ளி எகனாமிக் டைம்ஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "வாட்ஸ் அப்பின் மெசேஜ்களை கூகுள் டிரைவில் சேமித்து வைப்பது என்பது பயனர்களாகிய உங்களுடைய விருப்பம்தான். வாட்ஸ் அப் இதனைக் கட்டாயப்படுத்தவில்லை. இது ஒரு புதிய அம்சம் அவ்வளவுதான். கூகுள் நிறுவனத்தின் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இதனை நீங்கள் பயன்படுத்தலாம். தேவையில்லை என்று விரும்பினால் அதனைத் தவிர்த்து விடலாம்" என்று தெரிவித்துள்ளார்.
End-To-End Encryption என்றால் என்ன?
வாட்ஸ் அப்பில் பயனர்கள் அனுப்பும் ஒவ்வொரு மெசேஜ்களும் End-To-End Encryption செய்யப்பட்டே அனுப்புநருக்கு அனுப்பப்படும். அதாவது நாம் அனுப்பும் மெசேஜ்கள் அனைத்தும் ஒரு சிப் வடிவிற்கு மாற்றப்பட்டு லாக் செய்யப்பட்டு போனிலிருந்து நம் சர்வருக்கு அனுப்பப்படும். பின்னர் லாக் செய்யப்பட்ட அந்த சிப்பானது, பெறுநரின் சர்வரை அடைந்து, அவர்களின் போனைச் சென்றடையும் வரை யாராலும் அந்த மெசேஜை படிக்கவோ, மாற்றம் செய்யவோ முடியாது. இதுவே End-To-End Encryption வசதியின் முக்கிய சிறப்பம்சமாகும். இந்த விதிமுறை வாட்ஸ் அப் நிறுவனத்துக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது

29/8/18

பயமில்லா கற்றல்' சுவரொட்டிகள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் வெளியிட்டார் :

அரசு பள்ளிகளை தத்தெடுக்க, பலர் ஆர்வமாக முன்வந்துள்ளனர்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.மாணவர்கள், தயக்கமில்லாமல், தடுமாறாமல், பாலியல் வன்முறைகளுக்கு இடம் தராமல், கல்வி கற்பது தொடர்பாக, அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, 'பயமில்லா கற்றல்' என்ற பெயரில், சுவரொட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இவற்றை, அமைச்சர், செங்கோட்டையன், நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் வெளியிட்டார்.

தேசிய திறனாய்வு தேர்வு : ஆசிரியர்களுக்கு அறிவுரை :

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய திறனாய்வு தேர்வுக்கு, மாணவர்களை தவறாமல் விண்ணப்பிக்க செய்யும்படி, அறிவுறுத்தப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசு சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 
இணையதளம் : இதைப் பெற, மத்திய அரசின் தேசிய திறனாய்வு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான, மாநில அளவிலான தேர்வு, நவம்பர், 4ல் நடத்தப்படும் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.இந்த தேர்வுக்கு, அரசு தேர்வுத் துறையின், www.dge.tn.gov.in, என்ற இணையதளம் வழியாக, ஆக., 23 முதல் விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது; செப்., 5 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம், 50 ரூபாய். மாணவர்கள், தங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியாக, விண்ணப்பிக்க வேண்டும்.இந்நிலையில், ஒவ்வொரு பள்ளியிலும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, இந்த தேர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களை தயார்படுத்த வேண்டும் என, பள்ளி தலைமை ஆசிரியர்களை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்திஉள்ளனர்.
குற்றச்சாட்டு : நன்றாக படிக்கும் மாணவர்களுக்கும், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும், இந்த தேர்வு பற்றிய தகவல்களை, ஆசிரியர்கள் கூறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, பள்ளி பிரார்த்தனை கூட்டத்தின் வாயிலாக, இதை தெரியப்படுத்தி, அனைத்து மாணவர்களும், திறனாய்வு தேர்வில் பங்கேற்க செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

38 படிப்புகளுக்கு யு.ஜி.சி., அங்கீகாரம் : TNOU துணைவேந்தர் தகவல்

நடப்பு கல்வி ஆண்டில், தொலைநிலை கல்வியில், 38 படிப்புகளை நடத்துவதற்கு, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., அங்கீகாரம் அளித்துள்ளதாக, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை அறிவித்து உள்ளது. 


இதுதொடர்பாக, பல்கலையின் துணை வேந்தர், எம்.பாஸ்கரன் நேற்று அளித்த பேட்டி:அடிப்படை பள்ளி கல்வியை முடிக்காதவர்கள், உயர் கல்வியை பெறாதவர்கள், இந்த பல்கலை வழியாக, உயர் கல்வி படிக்கும் வாய்ப்பு தரப்படுகிறது.இதற்கு, மத்திய அரசின், யு.ஜி.சி., சார்பில், உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த கல்வி ஆண்டில், யு.ஜி.சி., அனுமதியுடன், 83 படிப்புகள் நடத்தப்பட்டன. நடப்பு கல்வியாண்டில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகள் என, 38 படிப்புகளுக்கு, அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.இதற்கான கடிதம், 14ல், யு.ஜி.சி.,யிடம் இருந்து, பல்கலைக்கு கிடைத்துள்ளது.மேலும், மத்திய மனித வள அமைச்சக அனுமதியுடன், 'ஆன்லைனில்' சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படுகின்றன.
தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அங்கீகாரத்துடன், பி.எட்., என்ற, ஆசிரியர் கல்வியியல் படிப்பும் நடத்தப்படுகிறது.நடப்பு ஆண்டில், பி.எட்., மாணவர் சேர்க்கைக்கு, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் மற்றும் இந்திய மறுவாழ்வு கழகத்தில் அனுமதி கேட்டு, விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது.திறந்தநிலை மற்றும் தொலைநிலை கல்வியை நடத்தும் பல்கலைகளில், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கு அடுத்தபடியாக, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை தான், அதிகளவிலான படிப்புகளுக்கு, யு.ஜி.சி.,யிடம் அங்கீகாரம் பெற்றுள்ளது.
பட்டம் மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளை தவிர, 'டிப்ளமா' மற்றும் சான்றிதழ் படிப்புகளையும், தொழில்சார் படிப்புகளையும், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை நடத்துகிறது. இதற்கான அங்கீகாரத்தை, உரிய அமைப்புகளிடம் இருந்து பெற்றுள்ளது.தமிழகம் முழுவதும், அனைத்து பல்கலைகளிலும், தொலைநிலை கல்வியில், ஒரே வகையான பாடத்திட்டம், அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான, பொது பாடத்திட்ட தயாரிப்பு பணி, தமிழக அரசிடம் இருந்து, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையிடம் வழங்கப்பட்டுள்ளது.
இப்பல்கலையில், இதுவரை, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து, பட்டம் மற்றும் சான்றிதழ்கள் பெற்றுள்ளனர். நடப்பு கல்வி ஆண்டில், ஒரு லட்சம் பேர் படித்து வருகின்றனர்.எந்த பல்கலையில் வேண்டுமானாலும், மாணவர்கள் சேரலாம். ஆனால், அந்த பல்கலை நடத்தும் படிப்புக்கு, உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதா என்பதை, ஆய்வு செய்வது நல்லது.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக அரசின் சார்பில் 960 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை - பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

தமிழ் வழியில் படித்த, 960 மாணவர்களுக்கு, தமிழக அரசின் சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்படும்,'' என, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னையில், தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, அவர் கூறியதாவது:தமிழகம் முழுவதும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' மற்றும், சி.ஏ., தேர்வுக்கு பயிற்சி வழங்குவது, அடுத்த மாதம் துவங்கஉள்ளது. இதற்காக, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும், 3,000 அரசு பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளன. இன்னும் ஒரு மாதத்தில், இந்த வகுப்பறைகள் திறக்கப்படும்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, செப்., 5ல், தமிழக அரசின் சார்பில், ஆசிரியர் தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், பள்ளிகளில் சிறப்பாக பணி புரிந்த ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். அதேபோல, 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2வில், தமிழ் வழியில் படித்து, அதிக மதிப்பெண் பெற்ற, 960 மாணவர்களுக்கு, அரசின் சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய 31-ந் தேதியுடன் கால அவகாசம் நிறைவு வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல்

வருமானவரிச் சட்டத்தின் கீழ் தணிக்கை தேவைப்படாத பிரிவினர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கடந்த மாதம் (ஜூலை) 31-ந் தேதியை கடைசி நாளாக வருமான வரித்துறை அறிவித்து இருந்தது. பின்னர் ஒரு மாத காலம் அதாவது வருகிற 31-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. அந்த கால அவகாசமும் வருகிற 31-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.


மாத ஊதியம், ஓய்வூதியம், வீட்டு வாடகை உள்ளிட்ட சொத்திலிருந்து வருமானம் பெறுவோர், மூலதன மதிப்பு உயர்வு, வர்த்தகம் அல்லது தொழில் மூலம் வருமானம் பெறுவோர், இதர வருமானம் பெறுவோர் இந்த வகையின் கீழ் வருகின்றனர்.

வருமானவரி கணக்கை வருகிற 31-ந் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்வோருக்கு அபராத கட்டணம் ஏதும் இல்லை. மொத்த ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் உள்ளவர்கள் வருமானவரி கணக்கை வருகிற 31-ந் தேதிக்கு பிறகு அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்கு முன்பாக தாக்கல் செய்தால் அபராத கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் மேல் உள்ளவர்கள் வருமானவரி கணக்கை வருகிற 31-ந் தேதிக்கு பிறகு தொடங்கி டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்தால் தாமத கட்டணம் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும்.

மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கு அதிகமாக இருப்போர் தங்கள் வருமானவரி கணக்கை வருகிற 31-ந் தேதிக்கு பிறகு, அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்குள் தாக்கல் செய்தால் தாமத கட்டணம் ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த கால கட்டத்துக்கு பிறகு வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய முடியாது.

அனைத்து வரி செலுத்துவோரும் தங்களது வருமானவரி கணக்குகளை மின்னணு முறையில் தாக்கல் செய்ய வேண்டும். மாத ஊதியம், இதர ஊதியங்கள் மற்றும் வீட்டு சொத்தில் இருந்து வருமானம் பெறுவோர் ஆகியோர் காகித வடிவில் வருமானவரி கணக்கை தாக்கல் செய்யலாம்.

வருமானவரி செலுத்துவோர் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு ஏதுவாக, சென்னை, நுங்கம்பாக்கம், உத்தமர் காந்தி சாலையில் உள்ள வருமானவரி அலுவலகத்தில் வருமான வரி கணக்கு முன் தயாரிப்பு உதவி மையமும் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் வருகிற 31-ந் தேதி வரை வருமானவரி கணக்கை அபராதம் இன்றி தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மழை வெள்ள பெருக்கு காரணமாக கேரள, கர்நாடக மாநிலங்கள் சார்பில் மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த தேதியில் மாற்றம் செய்வது குறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் வரவில்லை.

மேற்கண்ட தகவல்களை வருமான வரித்துறை அதி காரிகள் தெரிவித்தனர்.

ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கும் ஊக்கத் தொகை :

ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கும் ஊக்கத் தொகை அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கும்
ஊக்கத் தொகை இந்த ஆண்டு முதல் வழங்கப்பட உள்ளது.


அமைச்சர் செங்கோட்டையன்

வீட்டில் தாய்மொழி பேசும் குழந்தைகளுக்கு ஐக்யூ திறன் அதிகமாகும்.!!!!

பிறந்த நாட்டைவிட்டு வேறுநாடுகளில் வாழ்பவர்கள்,
குழந்தைகளுக்கு தங்களின் தாய்மொழியைக் கற்றுக்கொடுத்து வளர்த்தால் அவர்களின் ஐக்யூ திறன் அதிகமாகும் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டில் இருக்கும் ரீடிங் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில், 7முதல் 11 வயது வரையான 100 துருக்கி நாட்டுக் குழந்தைகளை ஆராய்ச்சிக்காக தேர்ந்தெடுத்தனர்.


பள்ளியில் ஆங்கிலமும், வீட்டில் துருக்கி மொழி பேசிய குழந்தைகளுக்கும், வீடு பள்ளியென இரண்டு இடங்களிலும் ஆங்கிலம் மட்டும் பேசும் குழந்தைகளுக்கு இடையே ஐக்யூ திறன் குறித்து சோதனை செய்யப்பட்டது.
வீட்டில் தாய்மொழி பேசும் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாக செயல்பட்டார்கள்.எந்தவொரு இக்கட்டான சூழலிலும் புத்திசாலித்தனமாக செயல்படுவதாகவும் ஆய்வு கூறியுள்ளது.
குழந்தைகள் இளம் வயதிலேயே மொழியைக் கற்றுக்கொள்வதில் இருக்கும் சிரமங்களைப் புரிந்து கொள்கிறார்கள். குழந்தைகளால் வேறு மொழிகளில் எளிதாகவும், அர்த்தமுள்ள உரையாடல்களை அவர்களால் மேற்கொள்ளவும் முடிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
வீட்டில் தாய்மொழி பேசும் குழந்தைகள், ஒரு மொழியின் அடிப்படை கட்டமைப்பை தன் தாய்மொழியின் மூலம் கற்றுக்கொள்வதால் பிற மொழிகளைப் படிப்பது எளிமையாகிவிடுகிறது. முதல் முறை படிக்கும்போது பிற மொழிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு மொழி குறித்த குழப்பங்கள் நீடித்துக் கொண்டே இருக்கிறது என்று ஆய்வு கூறுகிறது.
பள்ளி கற்றுக்கொடுக்காத மொழியை பெற்றோர்கள் ஆர்வத்துடன் கற்றுக் கொடுக்கவேண்டும். குழந்தைகளுக்கு மொழியை முறையான புத்தக வாசிப்பின் மூலம் கற்றுக்கொடுத்தால் அறிவுத்திறன் அதிகரிக்கும் என்பதை ஆய்வாளார்கள் கூறுகின்றனர்.

5G இந்தியாவில் சாத்தியமா? இந்தியா முன் இருக்கும் சவால்கள்! இன்னும் இரண்டே ஆண்டுகளில் இந்தியாவில் 5G

அறிமுகமாகிவிடும் எனச் சொல்கிறது அரசு; அது சாத்தியமானால் 2022-க்குள் நம் எல்லோர் கையிலும் 5G இருப்பது நிச்சயம். தற்போது இருப்பதை விடவும் அதிவேக இணையம், கிராமப்புறங்களில்கூட தரமான வாய்ஸ் குவாலிட்டி, மெஷின் டு மெஷின் இடையேயான அதிவேகத் தகவல் பரிமாற்றம் என நம் தகவல்தொடர்பு முறையை நிச்சயம் 5G அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்லும். ஆனால், அடுத்த சில ஆண்டுகளுக்குள்ளாக 5G-யைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவது அவ்வளவு சுலபமில்லை. அரசுக்கும், டெலிகாம் நிறுவனங்களுக்கும் இடையேயே தற்போது நிறைய முட்டல் மோதல்கள் நடந்துவருகின்றன; தற்போதைய 4G சந்தையிலேயே இன்னும் கடும்போட்டி நிலவிக்கொண்டிருக்கிறது. டெலிகாம் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இப்படியிருக்கையில் எப்படி 2020-க்குள் 5G-யை கொண்டுவரப்போகிறது மத்திய அரசு? தற்போது தொலைத்தொடர்புத் துறையில் இருக்கும் முக்கியமான சவால்கள் என்ன?
தரநிர்ணயம்
2G, 3G,4G என எதுவாக இருந்தாலும் அவை எப்படி இருக்கவேண்டும் என்பதைச் சர்வதேச அமைப்புகள்தான் முடிவுசெய்யும். அப்படி 5G-க்கான தரத்தை 3GPP எனும் அமைப்பே நிர்ணயம் செய்யும். அதன்பிறகே தொழில்நுட்ப நிறுவனங்கள் அதனைப் பின்பற்றும். தற்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் 4G-யின் தரநிர்ணயமானது 2008-ம் ஆண்டு இறுதிசெய்யப்பட்டது. பின்னர் முதன்முதலாக ஸ்வீடனில் 4G அறிமுகமானது; அதன்பின்பு 2012-ல் 4G இந்தியாவிற்கு வந்தது. கடந்த 6 ஆண்டுகளாக நாம் காணும் 4G-யின் வளர்ச்சி இப்படித்தான் தொடங்கியது. இதேபோலத்தான் 5G-யும் இந்தியாவுக்கு வரும்.
5G-க்கான முதல்கட்ட தர்நிர்ணயமானது இந்த ஆண்டு ஜூன் மாதம்தான் இறுதிசெய்யப்பட்டு வெளியானது. இனி இந்த தரத்தில் செயல்படவேண்டிய கருவிகளை உற்பத்தி செய்யவேண்டியது நிறுவனங்களின் பொறுப்பு. இதுதவிர இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னொரு கடமையும் உண்டு. அது, இந்தியாவிற்கேற்றபடி 5G நெட்வொர்க்கை அமைப்பது; உதாரணமாக, கிராமப்புறங்களில் குறைவான நபர்களே இருப்பார்கள்; எனவே அவர்களுக்காகக் குறைவான டவர்களே வைப்பார்கள். இதனால் அங்கே கால் குவாலிட்டியில் தரம் குறைவாக இருக்கும். இதுதான் தற்போதைய நிலை. ஆனால், 5G நெட்வொர்க்கில் இது இருக்கக்கூடாது என்பதும் ஒரு விதி. இதனை இந்திய விஞ்ஞானிகள் 3GPP-யிடம் பரிந்துரைத்து, அதனை அவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே, இந்தியாவில் 5G நெட்வொர்க்கை அமைக்கும் நிறுவனங்கள், கிராமப்புறங்களிலும் தரமான சேவை கிடைக்க வழிவகை செய்யவேண்டும். இந்த விதிக்கு டெக்னிக்கலாக Low Mobility High Coverage எனப்பெயர். இப்படி 5G தரத்திற்கான தொழில்நுட்பக் கருவிகளை உருவாக்கவேண்டியது முதல் சவால்.
5G அலைக்கற்றைகள்
மற்ற விஷயங்களை விடவும் அரசின் பங்கு அதிகம் இருப்பது இந்த அலைக்கற்றை விஷயத்தில்தான். 5G நெட்வொர்க்கிற்கான பணிகளை டெலிகாம் நிறுவனங்கள் தொடங்க வேண்டுமென்றால், முதல் பணியே அலைக்கற்றைகளுக்கான உரிமம் பெறுவதுதான். ஆனால், இந்த விஷயத்தில் டெலிகாம் நிறுவனங்களுக்கும் அரசுக்கும் இடையே வர்த்தக ரீதியிலான சிக்கல்கள் எழுந்துள்ளன. இரண்டு வருடமாக ஜியோவானது டெலிகாம் துறையில் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, பிறடெலிகாம் நிறுவனங்களின் வருவாய் பலத்த அடி வாங்கியுள்ளது. 4G சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதற்காக இன்னும் அதிகளவில் முதலீடு செய்தும் வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் 5G-க்கான முதலீட்டையும் மேற்கொள்ள வேண்டும் என்பது டெலிகாம் நிறுவனங்களுக்குச் சவாலான காரியம். எனவே 5G அலைக்கற்றைகளின் விலை ஓரளவுக்கேனும் கட்டுபடியாகும் அளவில் இருந்தால்தான் அவர்களும் லாபமீட்ட முடியும். ஆனால், தற்போது அரசு நிர்ணயித்துள்ள அலைக்கற்றை கட்டணம் மிகவும் அதிகம் எனக் குற்றம் சாட்டுகின்றன இந்நிறுவனங்கள். சீனாவில் 5G அலைக்கற்றைகளுக்கான கட்டணத்தோடு ஒப்பிட்டால் இங்கே 10 மடங்கு அதிகம் என்கின்றனர் அவர்கள்.
அலைக்கற்றையை அதிக விலை வைத்து விற்பதன்மூலம், அரசு நல்ல வருவாய் பார்க்கமுடியும் என்பது உண்மைதான். ஆனால், டெலிகாம் துறையில் அசாதரணமான சூழ்நிலை நிலவும் இந்தச் சமயத்தில் அரசுதான் நிச்சயம் கைகொடுக்கவேண்டும் என்று டெலிகாம் துறை. இந்த விஷயத்தில் அரசு எவ்வளவு விரைவில் முடிவெடுக்கிறதோ, அதைப் பொறுத்தே 5G-க்கான பணிகளும் வேகமெடுக்கும்.

தொழில்நுட்பம்
தற்போது நாம் பயன்படுத்தும் 4G-யை விடவும், 5G 100 மடங்கு வேகம் அதிகமாக இருக்கும். இப்போது இருக்கும் 4G-யே போதுமான அளவு வேகமாக இருக்கும்போது, நமக்கு எதற்கு 5G எனத் தோன்றலாம். ஆனால், இவ்வளவு வேகம் எதிர்காலத்தில் நிச்சயம் நமக்கு தேவைப்படும் என்பதுதான் டெலிகாம் கணக்கு. தற்போது இருக்கும் 4G வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க அதன் வேகம் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிக்கப்படும். அதுவும் இந்தியா போன்ற மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டில் இது நிச்சயம் நடக்கும் என்கின்றனர் நிபுணர்கள்; மேலும், எதிர்காலத்தில் நாம் பயன்படுத்தப்போகும் விர்ச்சுவல் ரியாலிட்டி, மெஷின் டு மெஷின் போன்ற தொழில்நுட்பங்கள் அனைத்திற்கும் அதிவேக இணையம் நிச்சயம் அவசியம்; கேட்ஜெட்களின் எண்ணிக்கையும், வாடிக்கையாளர்களின் பயன்பாடும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேதான் இருக்கும். இவற்றையெல்லாம் சமாளிப்பதற்கு ஒரேவழி 5G-தான். தற்போது இருக்கும் 4G-யானது 20 MHz அலைக்கற்றைக்குள் இயங்குபவை. ஆனால், 5G-யானது 100 MHz வரை இயங்கக்கூடியவை. 4G-யை விடவும் 5 மடங்கு இவை திறன்மிகுந்தவை. எனவே, அவற்றால் மட்டுமே நம் எதிர்கால இணையத் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியும்.
இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை நாடு முழுவதிலும் ஏற்படுத்தவேண்டும். அப்போதுதான் நம்மால் முழுமையான 5G அனுபவத்தைப் பெறமுடியும். இதற்கான சாத்தியங்கள், முதலீடு என இதிலும் சவால்கள் இருக்கின்றன.
மொபைல் போன்கள்
புதிதாக 5G நெட்வொர்க் இருந்தால் மட்டும் போதுமா? அவற்றை உள்வாங்கிக்கொள்ளும் மொபைல் போன்கள் வேண்டாமா? அதுதான் அடுத்த சவால். இன்று இருக்கும் 4G போன்கள் எதுவுமே 5G-யை சப்போர்ட் செய்யாது. 4G வந்தபோது 3G-யின் நிலையும் இப்படித்தான் இருந்தது. ஆனால், 4G-க்கு நடந்த ஒரே நல்லவிஷயம், 2012-18-க்கு இடைப்பட்ட காலத்தில் அதிவேகமாக வளர்ந்த மொபைல் சந்தை. பட்ஜெட் மொபைல்களே இந்தியாவில் 4G வசதியோடு வர, மிக எளிதாக 4G-யின் பயன்பாடு அதிகரித்தது. இதே அதிர்ஷ்டம் 5G-க்கும் இருக்கும் எனச் சொல்லமுடியாது. ஹூவாவே, நோக்கியா, சாம்சங், ஆப்பிள் உள்பட இப்போதே பல மொபைல் போன் உற்பத்தியாளர்களும் 5G-க்கு ஏற்ப தயாராகி வருகின்றனர். இந்த வேகம் இன்னும் அதிகரிக்க வேண்டுமென்றால், மொபைலின் எலெக்ட்ரானிக் பாகங்களை உற்பத்தி செய்யும் எல்லா நிறுவனங்களுமே முனைப்பு காட்டவேண்டும். சமீபத்தில்தான் மொபைல் சிப் நிறுவனமான குவால்காம் 5G-க்கான சிப்பை வெளியிட்டது. இதேபோல பிறநிறுவனங்களும் அப்டேட் ஆகவேண்டும். அப்போதுதான் 5G சந்தை சீராக வளர்ச்சியடையும். இல்லையெனில் டெலிகாம் நிறுவனங்களுக்கு ஆரம்பத்தில் தள்ளாடவே செய்யும்.

வாடிக்கையாளர்கள்
டெலிகாம் நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்வதால் நிச்சயம் 5G தொடக்கத்தில் விலை அதிகமாகவே இருக்கும். அதற்கேற்ற மொபைல்களும் உடனே தயாராகிவிடாது; எனவே ஜியோ வருவதற்கு முன்புவரைக்கும், 4G எப்படி எலைட்டான சர்வீஸாக மட்டுமே பார்க்கப்பட்டதோ, அதேபோலத்தான் 5G-யும் பார்க்கப்படும். ஜியோ போல 5G-க்காக புதிய டிஸ்ரப்டர் வரவும் வாய்ப்பில்லை. ஈனவே, இந்தப் பிரச்னையை தற்போது களத்தில் இருக்கும் டெலிகாம் நிறுவனங்கள் எப்படி கையாளப்போகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இதுதவிர டெலிகாம் நிறுவனங்களுக்கு 5G மூலம் இன்னொரு நன்மையையும் உண்டு . அது வெவ்வேறு துறைசார்ந்த வாடிக்கையாளர்கள். 4G-யைப் பொறுத்தவரை தனிநபர்கள் மட்டும்தான் முதன்மை வாடிக்கையாளர்கள். ஆனால், 5G அப்படியல்ல; மருத்துவம், விவசாயம், உற்பத்தி தொழிற்சாலைகள் என இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் 5G-யின் தேவை இருக்கும். இது டெலிகாம் நிறுவனங்களுக்கு கூடுதல் வருமான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.இப்படி நிறைய பிரச்னைகளும், நன்மைகளும் கலந்துதான் நமக்கான 5G உருவாகிக்கொண்டிருக்கிறது. எல்லா தொழில்நுட்பங்களும் இப்படியொரு காலகட்டத்தைக் கடந்து வந்துதான், இன்று நம் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கின்றன. 5G-க்கும் அது பொருந்தும்!