யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/10/18

2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரப்படுகிறதா ?:கண்காணிக்க சிறப்புக்குழு

பள்ளிகளில், இரண்டாம் வகுப்பு வரை, வீட்டுப்பாடங்கள் கொடுக்கப்படுவது குறித்து கண்காணிக்க, சிறப்பு குழுக்களை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், இரண்டாம் வகுப்பு வரை, பள்ளிக்குழந்தைகளுக்கு, வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை அமல்படுத்தும் வகையில், தொடக்கக்கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
அனைத்து பள்ளிகளிலும், முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது. தமிழக அரசால் அனுமதிக்கப்படாத பாடப்புத்தகம், குறிப்பேடுகள் பயன்படுத்தக்கூடாது. உடல் எடையில், 10 சதவீதத்துக்கும் மேல், புத்தகப்பையின் எடை இருக்கக்கூடாது உள்ளிட்டவற்றை, அனைத்து கல்வி அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும்.

இதை கண்காணிக்க, சார்நிலை அலுவலர்களை கொண்டு, சிறப்பு கண்காணிப்பு குழுவை உருவாக்கியும், பள்ளி ஆய்வின் போது, கவனம் செலுத்தவும், முதன்மைகல்வி அலுவலர்கள்

ராணுவ பள்ளிகளில் 8 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் காலி: விண்ணப்பிக்க ராணுவம் அழைப்பு

நாட்டில் உள்ள 137 ராணுவப் பள்ளிகளில் 8 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்க உள்ளதாக ராணுவ நிர்வாகம் அறிவித்துள்ளது.  நாட்டில் ராணுவப் பயிற்சி மையங்கள் உள்ள இடங்களில் 137 ராணுவப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் என 8 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப ராணுவ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. முதுநிலைப் படிப்பு மற்றும் இளநிலை பட்டம் பெற்றவர்கள் ஆசிரியர் பயிற்சி முடித்து 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இருந்தால் விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சிபிஎஸ்இ பள்ளிகளில் குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் பணி செய்திருக்க வேண்டும். பணி அனுபவம் அதிகம் உள்ளவர்கள் 57 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பித்த பிறகு தகுதிகளை சோதித்த பிறகு தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணைய தளம் வழியாக 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.  இதற்கான தேர்வு முறைகள் நவம்பர் 17, 18ம் தேதிகளில் நடக்கும். இது தொடர்பாக கூடுதல் விவரம் வேண்டுவோர் http://aps-csb.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மாணவர்களின் கவனத்திறனை பரிசோதிக்கலாமா?

மாணவர்களின் கவனத்திறன் எப்படி?

 மாணவர்களிடம் கவனச்சிதறல் இருக்கிறதா?

அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்?

என்பதை இந்த பரிசோதனை மூலம் பார்க்கலாம்...

சிறந்த மாணவர்களின் பண்புகளில் ஒன்று கவனத்திறன். ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போதும், நாமாக பாடம் படிக்கும்போதும் கவனம் சிதறாமல் இருந்தால் நமக்கு எளிதில் பாடங்கள் விளங்கிவிடும். நன்றாகப் படித்தும் பாடங்கள் நினைவில் நிற்காமல் போவதற்கு கவனச்சிதறல் காரணமாக இருக்கலாம். உங்களின் கவனத்திறன் எப்படி? உங்களிடம் கவனச்சிதறல் இருக்கிறதா? அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? என்பதை இந்த பரிசோதனை மூலம் பார்க்கலாம்...


கேள்விகளுக்கு செல்லலாமா?

1. ஒரு பாடம் அல்லது பயிற்சி சிரமமாக இருந்தால் அதை உடனே நிராகரிப்பீர்களா?

அ. ஆமாம், அதுதான் எனக்கு தெரியவில்லையே.
ஆ. முயற்சித்துப் பார்க்கிறேன், ஆனாலும் விளங்கவில்லை.
இ. இல்லை. அதை நிச்சயம் தெரிந்து கொள்ள முயற்சிப்பேன். ஆசிரியரிடம் விளக்கம் கேட்பேன்.

2. பேனா, பென்சில் போன்றவற்றை அடிக்கடி மறந்துவிடுகிறீர்களா? இவற்றை இரவல் வாங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணம் உங்களுக்கு உண்டா?

அ. மறதி இயல்புதானே, நண்பர்களிடம் இரவல் கேட்பதில் தவறில்லையே.
ஆ. மறந்துவிட்டால் இரவல் வாங்கித்தானே ஆக வேண்டும்.
இ. மறக்கமாட்டேன், என்னிடம் அவசர தேவைக்கான கூடுதல் பேனா, பென்சில்கூட இருக்கும்.

3. ஆசிரியர் பாடம் நடத்தும்போது எழும் சிறு சத்தம் அல்லது வெளிப்புற நிகழ்வு உங்களை ஈர்க்கிறதா?

அ. அது என்ன? என்று ஜன்னலில் பார்ப்பேன். நண்பனிடம் பேசுவேன்.
ஆ. ஆசிரியரை கவனிப்பேன். எல்லோரும் வேடிக்கை பார்த்தால் நானும் பார்ப்பேன்.
இ. மற்றவற்றை கவனிக்க மாட்டேன், திடீர்நிகழ்வுகளை மற்றவர் சொன்னால் கேட்டுக் கொள்வேன்.

4. நீங்கள் படிக்கும் இடத்தில் டி.வி. ஓடுகிறதா?

அ. வீட்டில் எல்லாம் இருக்கத்தானே செய்யும். டி.வி. பார்த்துக் கொண்டே படிப்பேன்.
ஆ. டி.வி. ஓடும், சத்தத்தை குறைக்க சொல்லிவிட்டு படிப்பேன்.
இ. படிப்பதற்கு தனி இடம் செல்வேன். படிக்கத் தொடங்கினால் டி.வி. போடமாட்டார்கள்.

5. பாடம் நடத்தும்போது எடுத்த கிறுக்கல் குறிப்புகளை, பின்னர் உங்களால் விளங்கிக் கொள்ள முடிகிறதா?

அ. குறிப்பு எடுக்க சொன்னதற்காக எழுதுவேன். பிறகு புரிவதில்லை.
ஆ. விவரமாக குறிப்பெடுக்க நினைப்பேன் முடிவதில்லை.
இ. ஆம், என் கிறுக்கல்கள், எனக்கு விஷயங்களை விளக்கிவிடும்.

6. யாராவது பேசும்போது குறுக்கீடு செய்து பேசுகிறீர்களா?

அ. ஆமாம். நான் என் கருத்தை சொல்ல வேண்டாமா?
ஆ. பேச தயக்கமாக இருக்கும்.
இ. இடையில் பேச மாட்டேன். வாய்ப்பு கிடைக்கும்போது என் கருத்துகளை சொல்வேன்.

7. வகுப்பறை சலித்துவிட்டதா?

அ. ஆம். ஓய்வே இல்லையே.
ஆ. வேறு வழியில்லையே.
இ. படிக்கத்தானே வந்திருக்கிறோம். படிப்பதில்தான் விருப்பம் அதிகம்.

8. ஒரு கேள்வி கேட்கும் போதே பதிலை உளறிக் கொட்டுவது உண்டா?

அ. பதில் தெரிஞ்சா சொல்ல வேண்டியதுதானே.
ஆ. பதில் தெரிந்தாலும் சொல்வதற்கு கூச்சப்படுவேன்.
இ. என்னை பதில் சொல்ல அழைத்தால் பதில் சொல்வேன். அல்லது அனுமதி பெற்று பதிலளிப்பேன்.

9. குறிப்புகளை படிக்காமல் விடையளித்திருக்கிறீர்களா?

அ. தேர்வே பிடிக்காது. விடை எழுத சிரமப்படுவேன்.
ஆ. குறிப்புகளை மறந்து நிறைய வினாக்களுக்கு விடை எழுதியிருக்கிறேன்.
இ. இல்லை. குறிப்புகளை படித்த பின்புதான் விடையளிக்க ஆரம்பிப்பேன்.

10. வீட்டுப்பாடத்தை எப்போது எழுதுவீர்கள்?

அ. பள்ளி கிளம்பும் முன்பு.
ஆ. இரவில் தூங்கும் முன்பு
இ. வீட்டுப்பாடம் முடித்துவிட்டுத்தான் வேறுவேலை.

11. ஒரு புதிய பயிற்சி வழங்கினால் அதை சரியாக, சீராக செய்து முடிப்பதில் சிரமம் இருக்கிறதா?

அ. ஆம், அதிக பயிற்சியால் அவதிப்படுகிறேன்
ஆ. சிரமமாக இருந்தாலும் செய்து முடிப்பேன்.
இ. இல்லை, புதிய புதிய பயிற்சிகள் உற்சாகம் தருகின்றன

12. இணையதளத்தில் ஒரு வேலை கொடுத்தால், நீங்களாகவே முயன்று முடித்துவிடுவீர்களா?

அ. ம்ஹூம், இன்டர்நெட் என்னை குழப்பிவிடும், நண்பர்களின் உதவியுடன்தான் கேட்டு செய்வேன்.
ஆ. செய்ய முயற்சிப்பேன், சந்தேகம் வந்தால் நண்பர்களிடம் கேட்பேன்.
இ. என்னால் அது முடியும். தேவையான விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறேன்.

CBSE - 10ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு!

10ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெறுவதை எளிமையாக்கும் வகையில், புதிய மதிப்பெண் திட்டம் நடைமுறைப்படுத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது பொதுத்தேர்வில் 33% மதிப்பெண், செயல்முறை தேர்வில் 33% மதிப்பெண் பெறுவது கட்டாயமாக உள்ளது. புதிய திட்டத்தில் எழுத்துத்தேர்வு, செயல்முறைதேர்வு இரண்டிலும் சேர்த்து 33% மதிப்பெண் பெற்றால் போதும் என்று மாற்ற திட்டமிட்டுள்ளனர்.

மூன்றாம் வகுப்பு தமிழ் வாசித்தல் மற்றும் எழுதுதல் பயிற்சி!



தற்செயல் விடுப்பு போராட்ட நாளுக்கு சம்பளம் பிடித்தம் செய்தால் வழக்கு: ஆசிரியர் சங்கங்கள் முடிவு :

ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் அமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு போராட்டம் தீவிரம் அடைந்தது. அதற்கு பிறகு அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், ஒரு நபர் குழுவின் பரிந்துரையை வெளியிடுவதாகவும் உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், அரசு தரப்பில் இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்காத நிலையில் இந்த ஆண்டும் தொடர் போராட்டங்களை ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது. முதற்கட்டமாக, கடந்த 4ம் தேதி அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து தங்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 28ம் தேதி அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத் துறையின் மூலம் ஒரு உத்தரவை பிறப்பித்தார். அதன்படி, அக்டோபர் 4ம் தேதி முறையான காரணத்தின் பேரில் சாதாரண விடுப்பு எடுத்திருந்தால், அதன் உண்மைத்தன்மை அறிந்து அந்த விடுப்பை அனுமதிக்கலாம் என்றும், முன் அனுமதி இல்லாமல் அக்டோபர் 4ம் தேதி எடுக்கும் தற்செயல் விடுப்பை ‘‘நோ ஒர்க்; நோ பே’’ என்ற அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும்என்றும் தெரிவித்து இருந்தார். இதனால், கடந்த 4ம் தேதி தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட உள்ளது.

இதற்கு மேற்கண்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கண்டனம் தெரிவித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். மேலும், சாதாரண விடுப்பை பயன்படுத்துவது என்பது, அடிப்படை விதிகளுக்கு உட்பட்ட விடுப்புஅல்ல. இந்த விடுப்பு பணியாளர்களுக்கு ஒரு சலுகைபோன்றது. ஒரு அரசு ஊழியர் சில நேரங்களில் அரசுப் பணி செய்ய இயலாத நிலை ஏற்பட்டால், அரசுப் பணி செய்ய இயலாத நாட்களை முறைப்படுத்திக் கொள்ள இந்த விடுப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த விடுப்பை அரசு விடுமுறை நாட்களுடன் சேர்த்தும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த விதிகள் அடிப்படை விதி எண் 85(3)ன்படி பார்த்தால் கடந்த 4ம் தேதி அரசுப் பணி செய்யாமல் இருந்துவிட்டு, அந்த நாட்களுக்கு சாதாரண விடுப்பு விண்ணப்பத்தை அந்தந்த அதிகாரிகளுக்கு அனுப்பலாம். அப்படி அனுப்பும் கடிதங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாதாரண விடுப்பாகத்தான் கருத வேண்டும். எனவே, அந்த நாளை ‘நோ ஒர்க்; நோ பே’ என்று  தீர்மானிப்பது அடிப்படை விதி எண் 85(3)க்கு எதிரானது.

சாதாரண விடுப்புக்கு காரணங்கள் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. 4ம் தேதி பணிக்கு வராத பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதாக காரணத்தை குறிப்பிட்டு மனு செய்திருந்தால் மட்டுமே அவர் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டார் என்று கருத முடியும். எனவே தலைமைச் செயலாளரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். அதை அரசு பரிசீலிக்கவில்லை என்றால், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளனர்

9/10/18

அரசுப் பள்ளிகளுக்கு இணைய வசதி: அம்பானி!

அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அதிவேக இணைய இணைப்பு வசதி அளிக்க ரூ.4,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.
இந்தியத் தொலைத் தொடர்புத் துறையில் பெரும் சூறாவளியையே ஏற்படுத்தியிருக்கிற முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள 2,385க்கும் அதிகமான அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அதிவேக இணைய இணைப்பு வசதிகள் அளிக்க முடிவெடுத்துள்ளது. இதற்காக ரூ.4,000 கோடியை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு முதலீடு செய்யவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

உத்தராகண்டில் அக்டோபர் 7ஆம் தேதி நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முகேஷ் அம்பானி, “சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிற தொழில்கள் மற்றும் நிறுவனங்களை ஜியோ ஊக்குவிக்கும். தேவபூமியாக இருக்கிற உத்தராகண்டை டிஜிட்டல் தேவபூமியாக மாற்றுவோம். ஜியோவால் உத்தராகண்டின் சுற்றுலாத் துறை நிலையான வளர்ச்சி பெறும். சுகாதாரத் துறை, கல்வி மற்றும் அரசு சேவைகள் விநியோகத்தை ஜியோ மேம்படுத்தும்.

உத்தராகண்டில் உள்ள 2,185 அரசுப் பள்ளிகள் மற்றும் 200க்கும் அதிகமான கல்லூரிகளில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இணைய இணைப்புகளை வழங்குவோம். இதன்மூலம் மக்களுக்குக் கூடுதல் வேலைவாய்ப்புகளும், வருவாயும் கிடைக்கும். உத்தராகண்ட் மக்களுக்குத் தரமான டிஜிட்டல் சேவைகளை வழங்க வேண்டுமென்பதில் ஜியோ உறுதி பூண்டுள்ளது” என்றார்

தற்செயல் விடுப்பை "No Work No Pay" என்று தீர்மானிப்பது சரியா?

முதுநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் திடீர் சிக்கல் :

அரசு பள்ளிகளில், பணி நியமனத்தின் போதே, ஊதிய உயர்வு கோரிக்கை எழுந்துள்ளதால், 1,400 ஆசிரியர்களை நியமிப்பதில், சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அரசு பள்ளிகளில், காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், தினசரி ஊதியம், சிறப்பு தொகுப்பூதியம் என, பல ஊதிய முறைகளில், ஆசிரியர்கள், பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தொகுப்பூதியங்களில் நியமிக்கப்படுவோர், பணிக்கு சேர்ந்த சில ஆண்டுகளில், சங்கமாக உருவாகி, பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்தும் நிலை உள்ளது. இந்நிலையில், தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலை பள்ளிகளில், பாடம் நடத்த, 11 பாடங்களுக்கு, 1,400 ஆசிரியர்களை நியமிக்க, பள்ளி கல்வித்துறை செயலகம் அனுமதி அளித்துள்ளது. காலியிடம் உள்ள பள்ளிகளில், பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக, மாதம், 7,500 ரூபாய் தொகுப்பூதியத்தில், முதுநிலை ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்க, தலைமை ஆசிரியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.இந்த பணி நியமனம் துவங்கியுள்ள நிலையில், பணிக்கு சேர்ந்தவர்களும், ஆசிரியர் சங்க நிர்வாகிகளும், ஊதிய உயர்வு கோரிக்கையை எழுப்பியுள்ளனர். பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு மாதம், 7,700 ரூபாய் சம்பளம் தரும் போது, முதுநிலை ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம், 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என, 'வாட்ஸ் ஆப்' வழியாக பிரசாரம் துவக்கியுள்ளனர்.இந்த நிலை நீடித்தால், புதிய ஆசிரியர்கள் பணிக்கு சேர்ந்த சில மாதங்களில், ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக, பள்ளி கல்வி அதிகாரிகளுக்கு தகவல்கள் வந்துள்ளன. எனவே, தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

அரசுப் பள்ளிகளில் தொகுப்பு ஊதியத்தில் மீண்டும் ஆசிரியர் நியமனம் :

தொகுப்பு ஊதிய அடிப்படையில் பெற்றோர் - ஆசிரியர் கழகங்கள் மூலம் 1474 ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்டங்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2012ம் ஆண்டு தொகுப்பு ஊதிய அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் 16,500 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு தற்போது மாதம் ரூ7500 வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டும் மீண்டும் தொகுப்பு ஊதிய அடிப்படையில் 1474 ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த பணியிடங்கள் பெற்றோர்- ஆசிரியர் கழகங்கள் மூலம் மாதம் ஒன்றுக்கு ரூ7500 ஊதியத்துடன் நியமிக்கவும்  தெரிவிததுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு மற்றும் நகராட்சி மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட வேண்டும் 
அதற்கான கால தாமதம் கருதி தொகுப்பு ஊதிய அடிப்படையில் மேற்கண்ட பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. முதுநிலை ஆசிரியர்கள் ஆறு மாதத்துக்கு மட்டும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் அந்தந்த பள்ளிகளில் குழு அமைத்து 1474 ஆசிரியர்களை நியமிக்கலாம்.

தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், வரலாறு, வணிகவியல்,ெபாருளியல், பாடங்களுக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இந்த ஆசிரியர்கள் பெற்றோர் -ஆசிரியர் கழகம் மூலம் நிரப்பி மாதம் ஒன்றுக்கு ரூ7500 என தொகுப்பு ஊதியம் வழங்க வேண்டும்.

இதன்படி சென்னை மாவட்டத்தில்  14, திருவள்ளூர் மாவட்டத்தில்  106, காஞ்சிபுரம் மாவட்டத்தில்  77 உள்பட மொத்தம் 1474 முதுநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்

பிளஸ் 2 ஆங்கில வினாத்தாள்-ல் மாற்றம்:

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., சார்பில், 10 மற்றும், பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொது தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், பொது தேர்வு வினாத்தாள், தேர்வுக்கான மதிப்பெண், விடை திருத்தும் முறை உள்ளிட்டவற்றில் மாற்றம் வந்தால், அவற்றை, சி.பி.எஸ்.இ., முன்கூட்டியே அறிவிக்கும்.

இதன்படி, இந்த ஆண்டு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிளஸ் 2 ஆங்கில பாட வினாத்தாளில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இதுவரை, 40 கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், இனி, 35 கேள்விகள் மட்டுமே இடம் பெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், இரண்டு வகைகளாக கேள்விகள் இடம் பெற உள்ளன.முதல் வகையில், சரியான விடையை தேர்வு செய்யும், ஐந்து கேள்விகள் இடம் பெறுகின்றன. மிக குறுகிய விடை அளிக்கும் வகையில், ஒன்பது கேள்விகள்; குறுகிய விடையளிக்கும் மூன்று கேள்விகள்; விரிவான விடையளிக்கும் இரண்டு கேள்விகள் இடம் பெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மாதிரி வினாத்தாளை, சி.பி.எஸ்.இ.,யின், http://cbseacademic.nic.in/ என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள

அரசு பள்ளிகளில் அதிகாரிகளின் குழந்தைகள்' - உச்ச நீதிமன்றத்தில் மனு :

அரசு உயரதிகாரிகளின் குழந்தைகளை, அரசு பள்ளிகளில் படிக்க அனுப்பும்படி, அலஹாபாத் உயர் நீதிமன்றம், 2015ல் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தும்படி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த, 2015ல், உ.பி.,யில் உள்ள அரசு பள்ளிகளின் தரம், மோசமாக உள்ளதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அலஹாபாத் உயர் நீதிமன்றம், மாநில அரசுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. அதில் ஒன்றாக, 'அரசு உயரதிகாரிகள், தங்கள் குழந்தைகளை, அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.இது தொடர்பாக, வழக்கறிஞர், சிவ்குமார் திரிபாதி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:அலஹாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுகளை, உ.பி., அரசு அமல்படுத்தாததால், குழந்தைகளின் நலன் பாதிக்கப்படுகிறது. உ.பி., மாநில அடிப்படை கல்வி வாரியத்தால் நடத்தப்படும் ஆரம்ப பள்ளிகளில் நடக்கும் மோசமான நிர்வாகத்தால், ஊழல் தலைவிரித்தாடுகிறது.
இந்த பள்ளிகளின் நிர்வாகத்தில் அரசு அதிகாரிகள் போதிய கவனம் செலுத்துவதில்லை. உயர் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மூன்று ஆண்டு கடந்த பின்னும், அதை அமல்படுத்தாததால், அரசு பள்ளிகளின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை, மாநில அரசு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தவறி விட்டது.உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்காத அதிகாரிகள், தனியார் பள்ளிகளில் செலுத்தும் கட்டண தொகையை, அபராதமாக செலுத்த வகை செய்யும் சட்ட திருத்தத்தை, மாநில அரசு இயற்ற உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது

நீதிக்கதை



விடா முயற்சி ::

போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும்  வீரத்துடன்  போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியதாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் எதிரி  வெற்றி பெற்றான்.  வெற்றி பெற்ற எதிரி அரசனைக் கொல்ல திட்டமிட்டான். அதனால் அரசன் காட்டிற்கு ஓடிச் சென்று அங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.

ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தை ஈர்த்தது. குகையின் ஒரு பகுதியினுள்  ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.

இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கைவிடாமல் மறுபடியும் மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் “இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்? என யோசித்தான் .

நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்” என்று எண்ணினான் மறுபடியும் தன் எதிரியுடன் போர் புரியத் தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.

தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.

2018-2019 EDUCATION YEAR PLANNER (SCHOOL EDUCATION DEPARTMENT) :

பாடப்புத்தக வீடியோவை பார்வையிட்ட ஒரு கோடி பேர்... டிஜிட்டலுக்கு மாறும் பள்ளிக் கல்வித்துறை :

தமிழக பள்ளிக் கல்வித்துறை சத்தமில்லாமல் ஒரு சாதனையைப் படைத்திருக்கிறது. புதியதாக வெளியிடப்பட்ட பதினொன்றாம் வகுப்பு பாடங்களை மாணவர்கள் எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில், கடந்த நான்கு மாதங்களாக பல்வேறு வீடியோக்களைத் தயாரித்து யூ-டியூப்பில் வெளியிட்டு வருகிறது. இந்த காணொளிகளை குறுகிய காலத்தில் ஒரு கோடியே இருபது லட்சம் பேர் பார்வையிட்டு இருப்பது ஆச்சர்யம்.
தமிழகப் பள்ளிக் கல்வித்துறை, புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி, இந்த ஆண்டு 6,9,11-ம் வகுப்புக்கான புதிய பாடநூல்களை வெளியிட்டது. 11-ம் வகுப்பு பாடப்பகுதிகள் அதிகமாகவும், பல பகுதிகள் கடினமாகவும் உள்ளன என்று ஆசிரியர்களும், மாணவர்களும் கருத்து தெரிவித்தனர். இவர்களுக்கு உதவும் வகையில் பதினொன்றாம் வகுப்பில் புதியதாக சேர்க்கப்பட்ட பகுதிகளையும், கடினமான பகுதிகளையும் எளிமைப்படுத்தும் வகையில் பல்வேறு வீடியோக்களைத் தயாரித்து வெளியிட்டு வருகிறது பள்ளிக்கல்வித்துறையின் மாநிலக்கல்வியியல்  ஆராய்ச்சி  பயிற்சி   நிறுவனம். இந்தப் பணியில் பதினைந்துக்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பாடநூல் தயாரிப்பில் ஈடுபட்ட ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், கல்வியாளர்கள்  உதவியுடன் பல்வேறு வீடியோக்களைத் தயாரித்து வெளியிடப்படுகிறது. இந்த வீடியோக்கள் தமிழ் மற்றும் ஆங்கில மீடியத்தில் படிக்கும் மாணவர்கள் என்று தனித்தனியே தயாரித்துப் பதிவேற்றுவதால் மாணவர்களும் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

பாடப் புத்தகங்களை வீடியோக்களாக பதிவுசெய்து வரும் படப்பதிவு இயக்குநர் அமலன் ஜெரோமிடம் பேசினோம். ``பதினொன்றாம் வகுப்பில் தடுமாறுபவர்கள், தேர்வு பயம் கொண்டவர்கள் இனி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. முதல்கட்டமாக,  பதினொன்றாம் வகுப்பில் கணிதப்பாடத்தில் 143, இயற்பியலில் 112, வேதியியலில்  81, தாவரவியல் பாடத்தில் 57, கணினி அறிவியலில் 22,  பொருளியல் பாடத்தில் 6, விலங்கியல்  பாடத்தில் 8 என இதுவரை 500 -க்கும் மேற்பட்ட வீடியோக்களைத் தயாரித்துள்ளோம். தற்போது கணக்கு பதிவியியல், பிஸினஸ் மேக்ஸ் போன்ற பாடங்களுக்கான வீடியோக்களைத் தயாரித்து வருகிறோம். பாடம் நடத்துவதுபோல் மட்டுமல்லாது, ஆசிரியர்கள் பாடத்தைக் குறித்து உரையாடுவது போலும், பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களிடம் உரையாடுவது போலும் வீடியோக்களைத் தயாரித்து பதிவேற்றம் செய்து வருகிறோம் என்றார்.

3,000 பள்ளிகளில், 'ஸ்மார்ட்' வகுப்பு : ஜப்பானிய நிறுவனத்துடன் ஒப்பந்தம்

தமிழகத்தில், 3,000 அரசு பள்ளிகளில், கேமரா வுடன் கூடிய, 'ஸ்மார்ட்' வகுப்புகள் துவக்கப்பட உள்ளன. தமிழகபள்ளி கல்வியில், பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, அனைத்து பள்ளிகளிலும், நவீன தொழில்நுட்பத்தில், வகுப்பறைகள் அமைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், 'டேப்லெட்' என்ற, கையடக்க கணினியுடன் பாடம் கற்றுத் தரதிட்டமிடப்பட்டு, 3,000 பள்ளிகளுக்கு தலா, 10 வீதம், 30 ஆயிரம், 'டேப்லெட்' வாங்க, 'டெண்டர்' விடப்பட்டது.இந்நிலையில், டேப்லெட் வழங்குவதற்கு பதில், வகுப்பறைகளில், கணினியுடன் இணைந்த ஸ்மார்ட் வகுப்பை துவக்க, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, 'எல்மோ' என்ற நிறுவனத்துடன், தமிழக அரசு பேச்சு நடத்தியுள்ளது. முதல் கட்டமாக, ஐந்து அரசு பள்ளிகளில், கணினியுடன் இணைந்த ஸ்மார்ட் வகுப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

சென்னையில், மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ஒரு வகுப்புஅறையில், இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு, கேமராவுடன் இணைந்த ஸ்கேனர் கருவி, டிஜிட்டல் எழுது கருவி, வீடியோ ரெக்கார்டர், ஆசிரியர் மற்றும் மாணவர்களின் உரையாடல்களை, ஒரு மாதம் வரை சேமித்து வைக்கும் வசதியுள்ள, ஸ்மார்ட் கருவி போன்றவை செயல்பாட்டுக்கு வந்துள்ளன. ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது, வீடியோ ரெக்கார்டர் மற்றும் புகைப்பட கேமராவை பயன்படுத்தலாம். ஆசிரியர் முன் கேமராவை திருப்பினால், அவர் பாடம் நடத்துவதை திரையில் பார்க்கலாம்.

அதேபோல, மாணவர்கள் சந்தேகம் கேட்டால், அவர்களின் முகத்தை, மற்ற மாணவர்கள் திரையில் பார்க்க முடியும். புத்தகத்தில் உள்ள சில வரிகளையோ, படங்களையோமாணவர்களுக்கு உதாரணம் காட்ட வேண்டும் என்றால், கேமராவில் காட்டினால் அது, திரையில் பெரிதாக தெரியும். வகுப்பின் கடைசி பெஞ்ச் மாணவர்கள் வரை, பாடம் நடத்துவதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். அந்த மாணவர்கள் கேள்வி கேட்டால், கேமராவில் அவர்களின் முகத்தை பார்க்க முடியும்.

8/10/18

சத்துணவு திட்டத்தில் 10 லட்சம் முட்டை குறைப்பு மாணவர்கள் எண்ணிக்கையில் மோசடி?

தமிழகத்தில் பள்ளி மற்றும் அங்கன்வாடி மைய சத்துணவு திட்டத்தில் தினமும் 10 லட்சம் முட்டை குறைக்கப்பட்ட விவகாரத்தில் மோசடி நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது. தமிழகத்தில் 58,474 அரசு பள்ளிகள், 54,472 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. பள்ளி மற்றும் அங்கன்வாடி சத்துணவு மையங்களின் மூலமாக தினமும் 60 லட்சம் மாணவ-மாணவிகள் பயன்பெறுகின்றனர்.

1 முதல் 10ம் வகுப்பு வரையுள்ள மாணவ-மாணவிகள் சத்துணவு திட்டத்தின்கீழ் பயன்பெறுகின்றனர். இவர்களுக்காக தினமும் 60 லட்சம் முட்டை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. நடப்பாண்டில் பள்ளி மற்றும் அங்கன்வாடிகளில் சத்துணவு திட்டத்திற்கான தினசரி முட்டை கொள்முதல் 60 லட்சத்தில் இருந்து 50 லட்சமாக குறைக்கப்பட்டு விட்டது. நடப்பாண்டில் ஏப்ரல், மே, ஜூன் மாதம் வரை தினமும் 60 லட்சம் முட்டை பெறப்பட்டது. 

ஜூலை மாதம் முதல் தினசரி முட்டை கொள்முதல் 50 லட்சமாக குறைந்தது.கடந்த ஜூலை 24ம் தேதி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறையின் டெண்டர் அறிவிப்பில் முட்டை கொள்முதல் குறைந்த விவரங்கள் மாவட்ட வாரியாக குறிப்பிடப்பட்டது. 


கடந்த ஆண்டில், ஜூலை மாதத்திற்கான தினசரி முட்டை கொள்முதல் அளவுடன் ஒப்பிடுகையில் தினமும் 10 லட்சம் முட்டை கொள்முதல் குறைக்கப்பட்டு அறிவிப்பு வெளியிட்டிருப்பது உறுதியாகியுள்ளது. 

முட்டை ெகாள்முதல் குறைந்த விவகாரத்தின் பின்னணியில் பெரும் முறைகேடு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. மாநில அளவில் அரசு பள்ளிகளில் 1.23 கோடி மாணவ மாணவிகள் கல்வி கற்கின்றனர். இதில் தினமும் 40.50 லட்சம் பேர் மட்டுமே சத்துணவு திட்டத்தில் பயனாளிகளாக குறிப்பிடப்பட்டிருந்தது. நடப்பாண்டில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சத்துணவு திட்டத்தில் இடம் பெற்றிருந்தனர். 

அங்கன்வாடிகளில் 7,79,278 மாணவ மாணவிகள் பயனாளிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் பள்ளி மற்றும் அங்கன்வாடிகளில் மாணவ மாணவியர் சேர்க்கை 2 முதல் 3 சதவீதம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதன்படி பார்த்தால் நடப்பாண்டிற்கு தினமும் சுமார் 63 லட்சம் முட்டை கொள்முதல் செய்யப்பட்டிருக்கவேண்டும். ஆனால், அதிகரிப்பிற்கு மாறாக, மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்திற்கும் கீழ் குறைந்திருப்பது சந்தேகத்தை கிளப்பியுள்ளது. 


பள்ளி மற்றும் அங்கன்வாடி சத்துணவு திட்டத்தில் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கையில் ‘பொய் கணக்கு’ காட்டியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சத்துணவு திட்டத்தில் இல்லாதவர்களின் பெயரில் முட்டை கொள்முதல் செய்து மோசடி நடந்திருப்பதாக தெரிகிறது. முட்டை கொள்முதல், சப்ளை போன்றவை ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட துறையில் டெண்டர் விடப்பட்டு, மேற்கொள்ளப்படுகிறது. 


பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளின் எண்ணிக்கை தினசரி, வாராந்திர தேவைப்பட்டியல் பள்ளிக்கல்வி நிர்வாகத்திடம் இருந்து பெறப்படுகிறது. தேவைப்பட்டியலில் குளறுபடி, மோசடி செய்து முட்டை கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

முட்டை விவகாரத்தில் மாணவ மாணவிகளின் எண்ணிக்கையில் நடந்த மோசடி, முறைகேடு மறைக்கப்பட்டுள்ளது. மாணவ மாணவிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது உண்மையாக இருந்தால், அதை மறைத்து அதிகமாக காட்டியிருப்பது எதற்காக என்ற சந்தேகமும் நிலவுகிறது. மாணவ மாணவிகளின் சேர்க்கை அரசு பள்ளிகளில் ஆண்டுதோறும் வெகுவாக குறைகிறது. 


ஆனால் ‘பள்ளி ரெக்கார்டுகளில்’ மறைக்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவ மாணவிகளின் எண்ணிக்கை மட்டுமே பொது தேர்வு காரணமாக மறைக்காமல் காட்டப்படுவதாக தெரிகிறது. 1 முதல் 9ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை குறித்து விசாரிக்க பள்ளி கல்வித்துறை சார்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது கல்வியாளர்கள் வட்டாரத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

3 லட்சம் கூமுட்டை..?! 

முட்டை மோசடி விவகாரத்திற்கு பின், கொள்முதலில் பல்வேறு மாற்றம் 

செய்யப்பட்டுள்ளது. 385 ஒன்றியம், 200 மையங்கள் மூலமாக தினமும் கொள்முதல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு முட்டையின் எடை 49 கிராம் அளவில் இருக்கவேண்டும். எடை குறைவாக (புல்லட் முட்டை) இருந்தாலும், தரமற்ற முட்டை வினியோகம் செய்தாலும் ஒப்பந்த நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடைந்த, கெட்டுப்போன முட்டை கணக்கில் எடுக்கப்பட மாட்டாது. 

கோழிப்பண்ணையில், கோழி போடும் முதல் முட்டை எடை குறைவாக இருக்கும். இந்த முட்டை 25 கிராம் முதல் 30 கிராம் எடை அளவிற்குள் இருக்கும். இந்த முட்டைகளை சத்துணவு மையங்களுக்கு வினியோகம் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சத்துணவு கூடங்களுக்கு 2 நாட்களுக்கு முன்பே முட்டைகளை வினியோகம் செய்து விடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மொத்த முட்டைகளில் 3 லட்சம் முட்டை கெட்டுப்போனதாகவும், எடை குறைவாக இருப்பதாகவும் தெரிகிறது. ‘கூமுட்டையாக’ இருந்தாலும் இவற்றையும் பள்ளிக்கு சப்ளை செய்து ஏமாற்றுவதாக கூறப்படுகிறது.

சத்துணவில் அரை முட்டை 

சத்துணவு மையங்களுக்கு வழங்கப்படும் முட்டைகள், குறியீடு உடன் சில கடைகளில் வெளிப்படையாகவே விற்கப்படுவதாக கூறப்படுகிறது. சில ஓட்டல்களில் சத்துணவு முட்டைகள் கிடைப்பதாக தெரிகிறது. 

மாவட்டம், ஒன்றியம் வாரியாக ஒதுக்கப்படும் முட்டை பதுக்கப்படுவதாக கூறப்படுகிறது. சில மையங்களில் தினமும் முழு முட்டை வழங்காமல் அரை முட்டை வழங்குவதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முட்டையில் மட்டுமின்றி பள்ளி, அங்கன்வாடி மையங்களில் பருப்பு, எண்ணெய், அரிசி போன்றவையும் முறைகேடாக பதுக்கிவைத்து, கொண்டுசெல்வதாக கூறப்படுகிறது. 

மற்ற திட்டங்களிலும் மோசடி..?

பள்ளி கல்வித்துறையில் நோட்டு புத்தகம், இலவச லேப்டாப், சைக்கிள், நான்கு செட் சீருடை, காலணி, புத்தக பை, கிரையான்ஸ், கலர் பென்சில், கணித உபகரண பெட்டி, கம்பளி சட்டை, ரெயின்கோட், புவியியல் வரைபடம் போன்ற பல்வேறு திட்டங்கள் பயன்பாட்டில் இருக்கிறது. 

இதில் பயன்பெறும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை, பெறப்பட்ட பொருட்களின் எண்ணிக்கை போன்றவற்றில் பெரும் வித்தியாசம் இருப்பதாக தெரிகிறது. கொள்முதல் செய்த பொருட்களை தணிக்கை செய்யவோ, விசாரிக்கவோ யாருமில்லாத நிலை உள்ளது. இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாக செலவிடப்படுகிறது. இந்த செலவினங்களை ஆய்வு செய்ய, முறைகேடுகளை தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை.

தமிழகம் முழுவதும் உபரியாக உள்ள 92 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் அரசிடம் ஒப்படைப்பு!

அக்டோபர் 31க்குள் கல்வி சுற்றுலா அழைத்து செல்ல உத்தரவு

பள்ளி கல்வித்துறை மற்றும் சுற்றுலா துறை இணைந்து, கிராமப்புற மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்துச் செல்வது வழக்கம்.


*மாவட்டத்துக்கு, 150 பேரை தேர்வு செய்து, வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், கல்வி சார் சுற்றுலா மையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.மாவட்டத்துக்கு தலா, 2 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

*கூட்ட நெரிசல் இல்லாத இடங்களுக்கு, வானிலை மாற்றங்களை கருத்தில்கொண்டு, ஒரு நாள் கல்வி சுற்றுலா, வரும், 31க்குள் அழைத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது
*கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாணவர்களை மூன்று பஸ்களில் அழைத்துச் செல்ல வேண்டும். மூன்று சுற்றுலா வழிகாட்டிகள் இடம்பெற வேண்டும்

*ஒரு பஸ்சில் நான்கு ஆசிரியர்கள், மாணவர்கள் பாதுகாப்புக்கு உடன் செல்ல வேண்டும். காலை, 7:00 முதல், மாலை 5:00 மணி வரை செல்லும்

*ஒரு நாள் சுற்றுலாவுக்கு, கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும். தற்போது மழை பெய்வதால், வானிலை மாற்றம் சீரானதும், சுற்றுலா அழைத்துச் செல்லப்படும்' என்றனர்

TNTET நிபந்தனை ஆசிரியர்களின் வழக்கு சாதகமானதால் விரைவில் அரசாணை வெளியிட 16/11/2012 க்கு முன்பு பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தமிழக கல்வித்துறையிடம் கோரிக்கை.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மத்திய அரசு கடந்த 23/08/2010 ஆம் தேதியில் அமலாக்கம் பெற்றது. ஆனால் அது தமிழகத்தில் பல்வேறு சிக்கல்களுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடைமுறையில் வந்தது. இந்த காலகட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலிப்பணியிடங்கள்  நிரப்பிக்கொள்ள அனுமதியும் அளிக்கப்பட்டது. பணியில் சேர்ந்த பல மாதங்களுக்குப் பின்னர் இவர்கள் TNTET  நிபந்தனைகளுக்குள் கொண்டுவரப்பட்டனர்.

TNTET 2012 ல் பற்றியதான அறிவிப்பு வந்த போதும் கூட பல மாவட்டங்களில் இது சம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை.

இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் TET நிபந்தனை ஆசிரியர்கள் பணியிடம் நிரப்புதல் குறித்த தமிழக பள்ளிக்கல்வித் துறை இயக்ககம் கடந்த 16/11/2012 ஆம் தேதியிட்ட செயல்முறைகள் ஒன்று வெளியிட்டது.
 அதன்படி இனிமேல் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆசிரியர் பணியிடம் நிரப்பும் போது TET தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே நிரப்ப வேண்டும் என்று அறிவித்தது.

இந்த செயல்முறைக்குப் முன்பு பணி நியமனம் பெற்றவர்களுக்கு முறையாக கொடுக்கப்பட வேண்டிய ஊதியம் மற்றும் இதர பலன்கள் ஒருசில மாவட்டங்களில் தர மறுக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து குறிப்பிட்ட காலத்திற்கு முன்பு பணி நியமனம் பெற்றவர்களுக்கு TNTET லிருந்து விலக்கு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதற்கு இடையே அரசு பள்ளிகள் மற்றும் சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்களுக்கு  இந்த TNTET நிபந்தனைகள் தளர்த்தப்பட்டு விலக்கு கொடுத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பின்படி நான்கு மாதங்களில் மற்ற ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் ஒரு நல்ல தீர்வை தமிழக அரசு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

ஆகவே TNTET நிபந்தனை ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் (individual representation) தமிழக அரசுக்கு அளித்து வருகின்றனர். அதில் இவர்களின் நியாயமான வேண்டுகோளாக 16/11/2012 ஆம் தேதியிட்ட பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் வெளியிட்ட செயல்முறைகளுக்கு முன்பு பணியில் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலில் TNTET லிருந்து முழுவதும் விலக்கு தர கோரிக்கையை வைத்து வருகின்றனர்.

இது தொடர்பான அரசாணை விரைந்து வெளியீடு செய்து தருமாறு மாண்புமிகு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை மீண்டும் சந்தித்து வேண்டுகோள் விடுக்கவும் இந்த சிக்கல்களைத் தீர்க்க செயல்பட்ட ஆசிரியர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. மேலும் இவ்வமைப்பு கூறுவது யாதெனில் அரசாணை   வெளியீடு தொடர்பான எந்தவொரு வதந்திகளையும் நம்பாமல் கடந்த 07--09--2018 அன்று வெளிவந்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு  போட்ட எந்தவொரு ஆசிரியரும் பாதிக்கப்படாதவாறான நாளான
16/11/2012 ற்கு முன்பு ஆசிரியர் பணியில்  சேர்ந்த அனைவரும் INDIVIDUAL REPRESENTATION ஐ தங்கள் பங்குக்கு  விரைந்து செய்து முடிக்க வேண்டுமாய்  கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.