யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/2/16

ரூ.25 கோடி 'தண்டம்' 10,000 இலவச 'லேப்டாப்'கள் மாயம்

தமிழகத்தில், ஐந்து ஆண்டுகளில், மாணவர்களுக்கு வழங்காமல் மாயமான, 10 ஆயிரம், 'லேப்டாப்'களுக்கான கணக்கை சரிக்கட்ட முடியாமல், கல்வித்துறை அதிகாரிகள் தவித்து வருகின்றனர். மாயமான, 'லேப்டாப்'களுக்காக, 25 கோடி ரூபாயை, பள்ளி தலைமை ஆசிரியர்கள், சொந்த பணத்தில் இருந்து செலுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சி வந்ததும், 2011 - 12 முதல், பிளஸ் 2 மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு, அரசு சார்பில் இலவச, லேப்டாப் வழங்கப்படுகிறது.இதுவரை, 22 லட்சம் மாணவர்களுக்கு, 5,500 கோடி ரூபாய் மதிப்பில்,
லேப்டாப்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி பார்த்தால், ஒரு, லேப்டாப்பின் மதிப்பு, 25 ஆயிரம் ரூபாய்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மூலம், லேப்டாப்கள் வழங்கப்பட்டன. அதே நேரத்தில், இதில், முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன.

அதாவது, 
* பல பள்ளிகளில், மாணவர்கள் படித்து முடித்து சென்ற பின், அவர்களின் பெயரில், லேப்டாப்கள் எடுக்கப்பட்டு, வெளி சந்தையில் விற்கப்பட்டுள்ளன
* பல பள்ளிகளில், பூட்டு உடைக்கப்பட்டு, லேப்டாப்கள் திருடு போயின
* போலி மாணவர்கள் பெயரில், லேப்டாப் அபகரிக்கப்படுகின்றன. இவ்வாறு புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, 'மாணவர்களின் ஆதார் எண்இருந்தால் மட்டுமே, லேப்டாப் வழங்க வேண்டும்; மாணவரின் கையெழுத்து அவசியம்' என, கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.மேலும், ஐந்து ஆண்டுகளாக, தமிழ்நாடு மின்னணு நிறுவனமான, 'எல்காட்' சார்பில், பள்ளி களுக்கு வழங்கப்பட்ட, லேப்டாப்களில், மாணவர்களுக்கு வழங்கப்பட்டவை; திருப்பி அனுப்பப்பட்டவை; திருடு போனவை; வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவை குறித்து, மாவட்ட வாரியாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.இதில், தமிழகம் முழுவதும், 10 ஆயிரம், லேப்டாப்களின் கணக்கில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கணக்கை எப்படி சரி செய்வது என தெரியாமல், அதிகாரிகள் திணறி வருகின்றனர்.




'பிப்.,10க்குள் செலுத்த வேண்டும்':பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு: 
* திருடு போனதாக கூறப்பட்ட, லேப்டாப்களுக்கான பணத்தை, தலைமை ஆசிரியர்களே ஏற்றுக் கொண்டு, பிப்.,10க்குள் செலுத்த வேண்டும் 
* சேதமான, லேப்டாப்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்* மாணவர்களுக்கு வழங்கப்படாமல், கணக்கில் விடுபட்ட, லேப்டாப்கள் குறித்து உரிய விளக்கம்அளிப்பதுடன், அதற்கான செலவை ஏற்க வேண்டும். இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.10 ஆயிரம், லேப்டாப்களின் மதிப்பு, அரசின் திட்ட மதிப்பீட்டின் படி, 25 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

CPSல் பணியில் சேர்ந்தவர்கள் - “ஓய்வுபெறும்போது வெறும் கையோடு போகிறோம்!” -

“ஓய்வுபெறும்போது வெறும் கையோடு போகிறோம்!”

புதிய ஓய்வூதியத் திட்டத்தால் நிம்மதியிழந்த அரசு ஊழியர்கள்

“அரசு ஊழியர்களை நவீன பிச்சைக் காரர்களாக மாற்றிய, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்பவர் களுக்கே வரும் தேர்தலில் எங்கள் வாக்கு” என்று அதிரடி முடிவில் இறங்கியுள்ளனர் அரசு ஊழியர்கள். ‘பங்களிப்புடன் கூடிய புதிய பென்சன் திட்டம்’ என்ற திட்டத்தை தமிழக அரசு 2003-ம் ஆண்டு கொண்டு வந்தது. 2003-ம் ஆண்டுக்குப் பிறகு அரசு ஊழியர்களாகச் சேரும் அனைவருக்கும் புதிய ஓய்வூதியத் திட்டப்படிதான் பென்சன் வழங்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.


‘‘புதிய ஓய்வூதியத் திட்டத்தின் படி அரசு ஊழியர்களின் அடிப் படைச் சம்பளம், தர ஊதியம் மற்றும் அதற்கு இணையான அகவிலைப்படி ஆகியவற்றின் கூட்டுத் தொகையில் மாதம்தோறும் 10 சதவிகிதம் பிடித்தம் செய்யப்படும். அந்தத் தொகைக்கு இணையாக அரசு தனது பங்கைச் செலுத்தும். இவ்வாறு சேரும் தொகையில் 60 சதவிகிதம், ஊழியர் ஓய்வுபெறும்போது கொடுக்கப் படும். மீதமுள்ள 40 சதவிகிதத் தொகை பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டு மாதந்தோறும் ஓய்வூதியமாக அளிக்கப்படும்” என்று அறிவித் தனர். தமிழகத்தில் ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள் என சுமார் நான்கு லட்சம்பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வருகின்றனர்.

இந்தியாவில் மேற்கு வங்காளம் மற்றும் திரிபுரா மாநிலங்களைத் தவிர, அனைத்து மாநிலங்களிலும் இந்தத் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி, ஊழியர்களின் பணத்தைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து அவர்களின் ஓய்வுக்காலத்தில் திருப்பித் தர டெல்லியில் ‘ஓய்வூதியத் தொகை வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை ஆணையம்’ செயல்பட்டு வருகிறது.

ஓய்வுபெற்ற பிறகும் பலன் அளிக்காத புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ள திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் பிரடெரிக் ஏங்கெல்ஸிடம் பேசினோம். “புதிய ஓய்வூதியத் திட்டம் வந்து 12 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், ஓர் அரசு ஊழியர்கூட பயன்பெறவில்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வுபெற்றவர்களும், பணிக்காலத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ஓய்வூதியம் கிடைக்கவில்லை.

ஊழியர்களிடம் இருந்து ஏழாயிரம் கோடி ரூபாய் பிடித்தம் செய்யப் பட்டிருக்கிறது. பிடித்தம் செய்யப்பட்ட தொகை, அரசின் பங்குத்தொகை இரண்டும் பி.எஃப்.ஆர்.டி.ஏ-வுக்குச் செலுத்தப் படவில்லை. அந்தத் தொகை என்ன ஆனது என்பதுதான் எங்கள் கேள்வி?

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்த பலன்கள் இந்தத் திட்டத்தில் இல்லை. குடும்ப பென்சன், பணிக்கொடை எதுவும் இந்தத் திட்டத்தில் கிடையாது. எங்களிடம் பிடித்தம் செய்த தொகையை மட்டுமாவதுத் திருப்பித்தரலாம். அதையும் இந்த அரசு தர மறுக்கிறது. தமிழக அரசு இந்தத் தொகையை வைப்புநிதியாக வைத்துள்ளதாகக் கூறுகின்றனர். அதனால் எங்களுக்கு என்ன பயன்? ஓய்வுபெறும் ஊழியர்கள் வெறும் கையோடு போகும் நிலை உள்ளது.

ராணுவம் மற்றும் காவல் துறையில் பணியாற்றிய நாய்கள், குதிரைகள்கூட ஓய்வுபெற்றபின், அவற்றின் பராமரிப்புக்குப் பணம் ஒதுக்கும் அரசு, எங்களை மட்டும் அலட்சியம் செய்வது ஏன்?” என்றார்.

மத்திய அரசு ஊழியர்களின் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் துரைப்பாண்டியனிடம் பேசினோம். “கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதியத் திட்டத்தை மறுபரிசீலனை செய்வோம்’ என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

ஆனால், ஊழியர்களின் பணம்கூட ஒழுங்காக ஆணையத்தில் செலுத்தப் படவில்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்குக் குடும்ப ஓய்வூதியம் உள்ளது. ஆனால், மாநில அரசில் அது இல்லை. ஊழியர்களின் பணத்தைவைத்து பங்குச் சந்தையை வளர்க்கத்தான் இந்தத் திட்டத்தைச் செயல் படுத்துகின்றனர். ஓய்வுபெறும் அரசு ஊழியர்கள் எந்தப் பணமும் கிடைக்காமல் நவீன பிச்சைக்காரர்களாக மாறும் நிலை உள்ளது.

2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், நாடாளுமன்றத்தில் இதே அ.தி.மு.க உறுப்பினர்கள், இடதுசாரி உறுப்பினர்களோடு இணைந்து புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், அரசு ஊழியர்களிடத்தில் மாறுபாடான நிலையைக் கடைப்பிடிக்கின்றனர். வரும் தேர்தலில் புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிடுவோம் என்று உறுதியாகக் கூறும் கட்சிக்குத்தான் நாங்கள் வாக்களிப்போம்” என்றார்.

அரசுப்பள்ளி வகுப்பறைகளில் விரைவில் வண்ண வண்ண சித்திரங்கள் கற்பனை வளத்துடன் ஆங்கிலம் கற்பிக்க திட்டம்

அரசுப்பள்ளி மாணவர்கள், ஆங்கிலத்தில், அசத்தும் வகையில், வகுப்பறைகளில், வண்ண ஓவியங்களை வரைந்து, கற்பித்தல் திறனை ஊக்குவிக்கும் புது திட்டம் கல்வித்துறையால், செயல்படுத்தப்பட்டுள்ளது. மேகத்தில் மிதப்பது, நிலாவை பிடிப்பது என குழந்தைகளின் உலகம் என்றுமே, கற்பனை வளமும், வண்ணமயமான காட்சிகள் நிறைந்ததாகவே இருக்கும். ஆனால், பள்ளிக்குள் நுழைந்ததும், அவர்களின் உலகத்தை விட்டு வெளியேற்றி, தங்களுக்கான சூழலை இழப்பதாக கருதுகின்றனர் இன்றைய பள்ளி குழந்தைகள். 



கல்வி முறையில் மாற்றம் ஏற்பட்டாலும், அதை கற்பிக்கும் விதத்தில் புதுமையை எதிர்பார்க்கும் குழந்தைகளுக்கு ஏமாற்றமே.
புத்தகங்களில், பார்க்கும் வண்ண ஓவியங்களை, தங்களின் கற்பனை களத்தின் காட்சிகளாக படைப்பதற்குள், 'மெல்லக் கற்கும் குழந்தைகள்' என பலரும் முத்திரை குத்தப்படுகின்றனர். இன்னல்களுக்கிடையே, பிடித்த முறையில் பாடம் கற்க முடியாமல், படித்த பாடத்தையும் புரிந்துகொள்ள அவகாசம் அழிக்கப்படாத நிலையில்லாத கல்வி முறையில், மாற்றமாகவே வந்துள்ளது, வகுப்பறைகளில், வண்ண சுவர் சித்திரங்களை வரைதல் மூலமாக பாடம் நடத்தும் முறை.


தமிழ், ஆங்கிலம் உச்சரிப்பு பிரச்னை
தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கும் 'ஆல்பாஸ்' கல்வி முறையால், அரசு பள்ளி குழந்தைகளை வாட்டி வதைக்கும் இன்றைய பிரச்னையாக இருப்பது, தமிழ் மற்றும் ஆங்கிலம் உச்சரிப்புகள் தான். குழந்தைகளின் கற்பனை வளத்தை மேம்படுத்தும் 'படம் பார்த்து கதை வழக்கத்தை மீண்டும் குழந்தைகளிடையே கொண்டுவரும் முயற்சியாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


முதற்கட்டமாக, மாநிலம் முழுவதும் முப்பது மாவட்டங்களில், குறிப்பிட்ட துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் இத்திட்டத்தை செயல்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சிறந்த கட்டட வசதி, மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள பள்ளிகள், இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.


எந்தெந்த பள்ளிகள் தேர்வு
உடுமலையில், சின்னவீரம்பட்டி, சின்னபூலாங்கிணறு, போடிபட்டி நடுநிலைப்பள்ளிகள், எலையமுத்துார், கரட்டூர் துவக்கப்பள்ளிகள், மடத்துக்குளம் ஒன்றியத்தில், மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், சாமராயப்பட்டி நடுநிலைப்பள்ளிகள், காரத்தொழுவு, மேற்கு கொமரலிங்கம் துவக்கப்பள்ளி, குடிமங்கலம் ஒன்றியத்தில் சோமவாரப்பட்டி, கோட்டமங்கலம், முருங்கபட்டி, புக்குளம், லிங்கமநாயக்கன்புதுார் நடுநிலைப்பள்ளிகள் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


ஆங்கில வார்த்தைகளை உச்சரிப்பதற்கான படங்கள், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த ஓவியர்களைக்கொண்டு இப்பணிகளை செய்ய பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு வகுப்பறையில், 16 படங்கள் அமையும் வகையில் ஓவியங்கள் இடம்பெற, ஒரு பள்ளிக்கு, 15 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

TET : தகுதித் தேர்வை பூர்த்தி செய்யாத பள்ளி ஆசிரியருக்கும் சம்பளம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

தகுதித் தேர்வை பூர்த்தி செய்யாவிட்டாலும், உச்சநீதிமன்ற வழக்கு முடிவுக்கு வரும்வரை, சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியருக்கு, சம்பளம் வழங்க வேண்டும்,' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

துாத்துக்குடி மேலதட்டப்பாறையில் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் டி.என்.டி.டி.ஏ., துவக்கப் பள்ளி உள்ளது. இடைநிலை ஆசிரியராக 2012 ஆக.,2 ல் எஸ்தர் நியமிக்கப்பட்டார். இதை அங்கீகரிக்கக் கோரி கல்வித்துறைக்கு, பள்ளி நிர்வாகம் விண்ணப்பித்தது. 



'ஆசிரியர் தகுதித் தேர்வில் எஸ்தர் தேர்ச்சி பெறாததால், நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது,' என கல்வி அதிகாரிகள் நிராகரித்தனர். எஸ்தர் மற்றும் பள்ளி தாளாளர், 'பணி நியமனத்தை தற்காலிகமாக அங்கீகரித்து, சம்பளம் வழங்க உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். இதை அனுமதித்து ஜன.,4 ல் தனிநீதிபதி உத்தரவிட்டார். 


இதை எதிர்த்து தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர், துவக்கக் கல்வி இயக்குனர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுதகுதித் தேர்வை, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தகுதியாக நிர்ணயித்துள்ளது. இதில் அரசு தலையிட முடியாது. 


சிறுபான்மையினர் பள்ளி, சிறுபான்மையினர் அல்லாத பள்ளி என கல்வித் தகுதியை வேறுபடுத்தி பார்க்க முடியாது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். 
இவ்வாறு குறிப்பிட்டனர்.

நீதிபதிகள் சதீஷ் கே.அக்னி கோத்ரி, எஸ்.மணிக்குமார் கொண்ட அமர்வு விசாரித்தது. அரசு சிறப்பு வழக்கறிஞர் சண்முகநாதன், பள்ளி நிர்வாகம் சார்பில் வழக்கறிஞர் ஐசக்மோகன்லால் ஆஜராயினர்.

நீதிபதிகள் : 'இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது,' என அரசு வழக்கறிஞர் கூறுகிறார். அது முடிவுக்கு வரும்வரை, பணியாற்றும் காலத்திற்குரிய சம்பளத்தை, ஆசிரியருக்கு வழங்க வேண்டும். பணியை விட்டு நீக்கக்கூடாது. பணியில் தொடர்வது என்பது, உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டது என்றனர். இதுபோல் தாக்கலான பல்வேறு வழக்குகளில் மனுதாரர், எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப
நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

30/1/16

பாஸ்போர்ட் முன்பதிவு தேதியை இனி விண்ணப்பதாரரே தேர்வு செய்யலாம் : மண்டல அலுவலர் தகவல்

பாஸ்போர்ட்டிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது, முன்பதிவு தேதியை விண்ணப்பதாரரே தேர்வு செய்யலாம்,'' என, மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் மணீஸ்வரராஜா தெரிவித்தார்.அவர் கூறியதாவது:


மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பொதுமக்கள் நலன் கருதி, பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது சில விதிகளை தளர்த்தி உத்தரவிட்டுள்ளது.பாஸ்போர்ட்டில் பிறந்த தேதி மற்றும் இடத்தை மாற்ற விரும்புவோர், புதிய விதியின்படி பிறந்த தேதிக்கான பிறப்பு சான்றிதழ் மற்றும் அதற்கான அபராதம் செலுத்தி மாற்றலாம். பிறந்த இடம் மாற்ற கோருவோர், சரியான பிறந்த இடம் வேறு மாநிலத்தில் அமைந்திருப்பின், அதற்கான நீதிமன்றம் உத்தரவு, அனைத்து கல்வி சான்றிதழில் பிறந்த இடம் மாற்றம் செய்த பின், தவறான பிறந்த தேதி குறிப்பிட்ட காரணத்தை அறிய போலீஸ் அறிக்கைக்குட்பட்ட பிறகு, சரியான பிறந்த இடம் குறிப்பிட்டு புதுப்பித்தால் பாஸ்போர்ட் பெறலாம்.ஒரே முகவரியில் பெறப்பட்ட ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பான் கார்டு சமர்ப்பித்தால், ஆன்லைன் மூலம் ஆவணங்களை சரிபார்த்த பிறகு முதலில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு, பிறகு போலீஸ்விசாரணைக்கு உட்படுத்தப்படும். இந்த பாஸ்போர்ட் பெறுவோர் படிவம் 1ஐ சமர்ப்பிக்க வேண்டும்.பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கும் போது, முன்பதிவு தேதி, முதலில் பதிவு செய்வோருக்கு முன்னுரிமை என்ற முறையில் வழங்கப்பட்டது. ஜன., 27 முதல் முன்பதிவு தேதியை விண்ணப்பதாரர்களே தேர்வு செய்யலாம். டிஜிட்டல் மயமாக்கத்தால் காவல் விசாரணை முடிந்து அறிக்கை தாக்கல் செய்வது 34 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதையும் விரைவுபடுத்திட அலைபேசி அல்லது மடிக்கணினி மூலம் காவல் விசாரணையை அனுப்ப வழி செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு 1.20 கோடி பாஸ்போர்ட் மற்றும் அதை சார்ந்த சேவை வழங்கப்பட்டுள்ளது, என்றார்.

ஒரே நேரத்தில் இரட்டை டிகிரிக்கு யு.ஜி.சி., தடை

இனி, ஒரே நேரத்தில், இரண்டு பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்கவேண்டாம்' என, கல்லுாரிகளுக்கு பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி.,எச்சரிக்கை விடுத்துள்ளது.கல்லுாரி மற்றும் பல்கலைகளில், மாணவர்கள் தினசரி வகுப்பில் படித்து கொண்டே, திறந்தவெளி பல்கலை அல்லது வேறு பல்கலைகளில், தொலைதுார கல்வியில் மற்றொரு பட்டம் படிப்பது வழக்கம். 


அதே போல், ஒரு தொலை துார கல்வி பட்டம் படித்து கொண்டே, வேறு பல்கலையில் இன்னொரு தொலைதுார பட்டமும் படிப்பர்.இதனால், மூன்று ஆண்டுகளில் அவர்களுக்கு, இரண்டு பட்டப்படிப்பு சான்றிதழ்கள் கிடைக்கும். எந்த வேலைக்கு என்ன தகுதி தேவையோ, அந்த சான்றிதழை பயன்படுத்தி பணிக்கு சேர்ந்து விடுவர்.தற்போது, 'இதுபோன்ற இரட்டை பட்டப் படிப்பில் மாணவர்களை சேர்க்க வேண்டாம்' என்று, யு.ஜி.சி.,எச்சரித்துள்ளது. இதுகுறித்து யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சந்து அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:பல சட்ட மற்றும் அரசு அமைப்புகளிடம் யு.ஜி.சி., கருத்து திரட்டியதில், இரண்டு டிகிரி முறைக்கு எதிரான கருத்துகள் வந்துள்ளன. எனவே, ஒரே நேரத்தில் இரண்டு பட்டங்கள் பெற்றால், அதற்கான அங்கீகாரத்தில் சிக்கல் எழ வாய்ப்புள்ளது. எனவே, கல்லுாரிகள், இரண்டு பட்ட முறையில் மாணவர்களை சேர்க்கவோ அல்லது ஊக்கப்படுத்தவோ வேண்டாம்.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பால், ஏற்கனவே படித்தவர்களின் நிலை என்ன என, பட்டதாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.இந்த குழப்பம் குறித்து, தரமான கல்விக்கான கூட்டமைப்பு ஆலோசகர் பேராசிரியர் சுவாமிநாதன் கூறியதாவது:உயர் கல்வியில் மேலாண்மை செய்யும், என்.சி.டி.இ., - ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் யு.ஜி.சி., போன்றவை, பட்டப்படிப்பு தொடர்பாக, பொதுமக்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை கேட்க வேண்டும். தங்கள் விருப்பத்துக்கு மாணவர்களை பட்டப்படிப்பில் சேர்த்துக்கொண்டு, அவர்கள் பணத்தையும், நேரத்தையும் செலவிட்டு பட்டம் பெற்ற பின், அவ்வப்போது உத்தரவை மாற்றி விடுவதால், பட்டதாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.எனவே, குறைந்தது, 20 ஆண்டுகளுக்கு இதுதான் விதிமுறை என, தொலைதுார பார்வையுடன் முன்னோடியான விதிமுறைகளை வகுத்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஒவ்வொரு பள்ளியிலும் குழந்தைகளை...கவனமா கையாளுங்க! ஆசிரியர்கள், நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்

"பள்ளிகளில், குழந்தைகளை கவனமாக கையாள வேண்டும்; பள்ளிதோறும், ஆலோசனை கமிட்டி ஏற்படுத்த வேண்டும்' என, திருப்பூரில் நடந்த, மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களின் அவசர ஆலோசனை கூட்டத்தில், அறிவுறுத்தப்பட்டது.நேற்று முன்தினம், திருப்பூர் கதிரவன் மெட்ரிக் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு மாணவன் ஸ்ரீசிவராமை, ஆறாம் வகுப்பு மாணவன் கல்லால் தாக்கி கொலை செய்தான். இச்சம்பவத்தை அடுத்து, பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு குறித்த அவசர ஆலோசனை கூட்டம், குமார் நகர்"இன்பேன்ட் ஜீசஸ்' பள்ளியில் நேற்று நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் முருகன் தலைமை வகித்தார்; மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் (பொறுப்பு) ரமேஷ் குமார் முன்னிலை வகித்தார்.கலெக்டர் ஜெயந்தி பேசுகையில், ""குழந்தைகளிடம் அன்பும், ஆதரவும் காட்ட வேண்டும்; ஆசிரியர்களை முழுமையாக நம்பி, குழந்தைகளை பெற்றோர் அனுப்புகின்றனர். 


குழந்தைகளை, ஆசிரியர்கள் பாதுகாக்க வேண்டும். மாணவர்களிடம் அன்பாக பழகும் ஆசிரியரை தலைவராக கொண்டு, பள்ளிதோறும் ஆசிரியர்களை கொண்ட ஆலோசனை கமிட்டி அமைக்க வேண்டும். அக்கமிட்டி மூலம் மாணவர்களுக்கு வாரந்தோறும் "கவுன்சிலிங்' தர வேண்டும். பள்ளியில், மறைவிடம் இருக்கக்கூடாது. திறந்தவெளி கிணறுஇருந்தால் உடனடியாக மூட வேண்டும். குறும்பு செய்யும் மாணவர்களை கண்டறிந்து, தனியாக "கவுன்சிலிங்' தர வேண்டும்,'' என்றார்.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அசோக்குமார் பேசுகையில்,""குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகளை பெற்றோரும், ஆசிரியர்களும் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளை கவனமாக கையாள வேண்டும். அவர்களை ஒருமுகப் படுத்துதல் முக்கியம். "படி படி' என, துன்புறுத்தாமல், படிக்க வைக்கும் சூழலை உருவாக்க வேண்டும். நகைச்சுவையாக கல்வி கற்பிக்க வேண்டும்,'' என்றார்.

நீதிபோதனை வகுப்பு தேவை

உளவியல் நிபுணர் அருள்வடிவு பேசுகையில், ""குழந்தைகளின் குடும்ப பின்னணி, பெற்றோர், உறவினர் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வது, குழந்தையை பற்றி அறிந்து கொள்ள உதவும். இன்றைய குழந்தைகள், பாடப்புத்தகங்களை தவிர, மற்ற புத்தகங்களை படிப்பதில்லை. நீதி போதனை வகுப்பு நடத்தி, பிரச்னை ஏற்படும்போது, அதற்கான தீர்வு என்னஎன்பதை விளக்க வேண்டும். நற்பண்புகளை வளர்க்க வேண்டும். குழந்தைகளின் முன், பெற்றோர் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும்; தகாத வார்த்தை பேசினால், அவர்கள் மனதில் தவறான எண்ணங்களை ஏற்படுத்தும்,'' என்றார். கூட்டத்தில், தனியார் பள்ளிகளை சேர்ந்த முதல்வர்கள், தாளாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்."விளையாட அனுமதியுங்க' மனநல மருத்துவர் ரமேஷ் பரமானந்தம் கூறியதாவது: இதுபோன்ற சம்பவத்துக்கு பெரிதும் காரணம், "டிவி' மற்றும் சினிமா போன்றவற்றில் வெளிப்படும் வன்முறைகளே. குழந்தைகளைவெளியே விளையாட பெற்றோர் அனுமதிப்பதில்லை. கீழே விழுந்து காயமேற்படும் என கூறி, வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு வற்புறுத்துகின்றனர். இதனால், "டிவி', மொபைல்போனுக்கு, குழந்தைகள் அடிமையாகி, நேரத்தை செலவிடுகின்றனர். தற்போது, கார்ட்டூன் சேனல்களில் கூட வன்முறை, சண்டை காட்சிகள் வந்து விட்டன. மொபைல் போன்களிலும் சண்டைகள், துப்பாக்கி சுடுதல் என, வன்முறை விளையாட்டுகள் அதிகமுள்ளன. இது, குழந்தைகளின் மனதில் வன்முறை குணத்தை ஏற்படுத்தும்.குழு விளையாட்டுகளில் ஈடுபடும்போது, வெற்றி, தோல்வியை சகஜமாக எடுக்கும் மனநிலை; விட்டுத்தரும் மனப்பாங்கு வரும். வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற குணம், வெறியாகும் மாறும் போதே, இது போன்ற சம்பவங்கள் ஏற்படுகின்றன. எதையும் அன்பாக கற்றுத்தர வேண்டும்; ஆக்ரோஷம் என்பது ஆரோக்கியம் அல்ல.இவ்வாறு, அவர் கூறினார்.

தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: பள்ளி நேரம் முடிந்ததும், ஆள்நடமாற்ற பகுதியில், "ஒன் டு ஒன்' என, மாணவர்கள் தங்களுக்குள் மோதும் போக்கு உள்ளது. இதற்குமுன், பள்ளிகளில் நன்னெறி கல்வி வகுப்புகள் நடத்தப்பட்டன; தற்போது கிடையாது.பெற்றோரின் பொறுப்பற்ற தன்மை, ஆசிரியர்களின் கவனமின்மை ஆகியன, மாணவர்களை தடம் மாற வைக்கிறது. ஒழுக்க கல்வி, விளையாட்டு நேரங்களிலும், மாணவர்கள் படிக்க வைக்கின்றனர். அதனால், மாணவர் மனதில் விட்டுக் கொடுக்கும் தன்மை, ஒழுக்க முறைகள் மறைந்து வருகின்றன. கல்வித்துறை, மறுகோணத்தில் சிந்தித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

பாட வாரியாக ஆசிரியர்கள் விபரம்

விருதுநகர்:பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு பணிகள் மற்றும் முகாம் பணியில் ஈடுபடும் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளின் விபரங்களை பாடம் வாரியாக இணைய தளத்தில் பதிவு செய்ய அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை, பாடவாரியாக உள்ள ஆசிரியர்களின் விபரங்களை ஜன.,27 முதல் ஜன.,29 மாலை 5 மணிக்குள் www.tn.dge.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய பள்ளித் தலைமையாசியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அதிகாரிஒருவர் கூறுகையில்,“ஒரு மாவட்டத்தில் எந்த பாடத்தில் எத்தனை ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என தெரிந்தால், தேர்வு திருத்தும் பணிகளில் எதாவது ஒரு பாடத்தின் எண்ணிக்கை அதிகமாக இருப்பின், அந்த பாடத்தின் ஆசிரியர்கள் அதிகம் உள்ள மாவட்டத்திற்கு விடைத்தாளை அனுப்பி, விரைவில் திருத்தும் பணியை முடிக்க முடியும்என்ற திட்டத்துடன் இதன் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது,” என்றார்.

பள்ளிக் கல்வித் துறை-இளநிலை உதவியாளர் நியமனம்: கலந்தாய்வு

பள்ளிக் கல்வித் துறையில் 98 இளநிலை உதவியாளர் பணியிடத்துக்காகதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) சார்பில் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில் தகுதி பெற்றவர்களுக்குசனிக்கிழமை (ஜன.30) பணி நியமனத்துக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம், சென்னை-6 என்ற முகவரியில்சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் இந்த கலந்தாய்வில் பங்கேற்க வரும் தகுதி பெற்றவர்கள், தேர்வாணையத்திலிருந்து பெறப்பட்ட அறிவிப்பு கடிதத்தையும், தேர்வு நுழைவுச் சீட்டையும் எடுத்து வரவேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. சார்பில் வி.ஏ.ஓ. தேர்வுக்கான கலந்தாய்வு; 1-ந் தேதி சென்னையில் நடக்கிறது

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2013-2014-ம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 14-ந் தேதி நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகள் அதே ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி வெளியிடப்பட்டது.


மூன்றாம் கட்ட கலந்தாய்வுக்கு 17 காலிப்பணியிடங்களுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான மாவட்ட ஒதுக்கீடு 1-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல், சென்னை, பாரிமுனை பஸ் நிலையம் அருகில் உள்ள பிரேசர் பாலச்சாலை, வ.உ.சி நகரில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களின் பதிவெண்கள் அடங்கிய தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதி பெற்றவர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. மதிப்பெண்கள், தரவரிசை, இடஒதுக்கீடு பிரிவு, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், தகுதி மற்றும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப விண்ணப்பதாரர் அனுமதிக்கப்படுவர். அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற இயலாது.

தகவல்கள், தவறாக இருக்கும் பட்சத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்படும். கலந்தாய்விற்கு வரத் தவறுபவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பரிசுத் தொகை அதிகரித்தும் தமிழில் படைப்பாற்றல், பேச்சாற்றல் போட்டிகளில் பங்கேற்க தயங்கும் மாணவர்கள்

தமிழில் படைப்பாற்றல் மற்றும் பேச்சாற்றல் போட்டிகளில்மாணவர்கள் பங்கேற்க தயக்கம் காட்டி வருவது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. 


தமிழில்படைப்பாற்றல் மற்றும் பேச்சாற்றலை மாணவர்கள் மத்தியில்வளர்க்கும் வகையில், கல்லூரி மாணவர்களுக்கு புதன்கிழமையும், பள்ளி மாணவர்களுக்கு வியாழக்கிழமையும்,தமிழகம் முழுவதும் போட்டிகள் நடத்தப்பட்டன.மாவட்ட அளவிலான இந்த போட்டிகளில் முதலிடம் பெறுவோருக்கு ரூ.10ஆயிரமும், 2ஆம் இடத்துக்கு ரூ.7ஆயிரமும் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

மேலும், மாவட்ட அளவில் முதலிடம் பெறும் மாணவர்கள், மாநில போட்டிக்கு பரிந்துரைசெய்யப்படுவார்கள் என்றும், அதில் முதல் 3 இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு முறையே ரூ.15 ஆயிரம், ரூ.12 ஆயிரம், ரூ.10 ஆயிரம் வீதம் பரிசுத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற பேச்சுப் போட்டிக்கு, கல்லூரிகள் சார்பில் 15 பேர், பள்ளிகள் சார்பில் 17 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். அதே போல் கட்டுரைப் போட்டியில் 13 பேர் (கல்லூரி), 19 பேர் (பள்ளி), கவிதைப் போட்டியில் 13 பேர் (கல்லூரி), 17 பேர் (பள்ளி) கலந்து கொண்டனர். இதில், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 14 பேர் மட்டுமே பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.மழலையர் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை தாய்மொழி கல்வி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வரும் நிலையில், தமிழில் படைப்பாற்றலையும் பேச்சாற்றலையும் வளர்க்க நடத்தப்படும் போட்டிகளில் குறைவான மாணவர்கள் பங்கேற்றது போட்டி நடுவர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகள்செயல்பட்டு வரும் நிலையில், பள்ளிக்கு ஒரு மாணவர் வீதம் பங்கேற்றாலும் கூட, குறைந்தபட்சம் 200 பேர் வந்திருக்கலாம். 

போட்டிக்கான பரிசுத் தொகை கடந்த காலங்களில் ரூ.1000, ரூ.500 வீதம் வழங்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும், மாணவர்களின் எண்ணிக்கைஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது.இதுகுறித்து தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த வகை போட்டிகளுக்கு, முன்கூட்டியே தயார் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. போட்டி நடைபெறும்இடத்தில் தலைப்பு வழங்கப்படுகிறது. இதன் மூலம், மாணவர்களின் சமயோஜித அறிவுத்திறன் மேம்படும். 

மேலும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிந்தித்து செயல்படும் திறனும் அதிகரிக்கும்.பரிசுத்தொகையும் கூடுதலாக இருப்பதால், ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் மாணவர்களின் பங்களிப்பு கட்டாயம் இருக்க வேண்டும் என்பதில் அந்தந்த தலைமையாசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

சி.பி.எஸ்.இ., பள்ளிக்கு தமிழக அரசு கல்வி கட்டணம் நிர்ணயிக்க முடியாது'

புதுடில்லி: 'தமிழக அரசின், பள்ளி கல்விக் கட்டண ஒழுங்குமுறை சட்டம், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு பொருந்தாது என்பதால், அவை, தங்களுக்கு ஏற்ற கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம்' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.தமிழக அரசின் பள்ளி கல்விக் கட்டண ஒழுங்குமுறை சட்டம், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும் பொருந்தும்' என, சென்னை ஐகோர்ட், தீர்ப்பு வழங்கியிருந்தது.இதை எதிர்த்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.


இந்த மனுக்கள், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ஜே.எஸ்.கேஹர், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தன.அப்போது, 'தமிழக அரசின் கல்விக் கட்டண குழு நிர்ணயிக்கும் தொகை, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு பொருந்தாது' என கூறி, சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு, நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர்.

தீர்ப்பு விவரம்:

சி.பி.எஸ்.இ., பள்ளி நிர்வாகம் வசூலிக்கும் கட்டணத்திற்கேற்ப, பள்ளியில் வசதி செய்யப்பட்டுள்ளதாஎன்பதை பார்க்க மட்டுமே, தமிழக அரசின் பள்ளி கல்வி கட்டண நிர்ணயக் குழுவிற்கு அதிகாரம் உள்ளது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க அதிகாரம் இல்லை. அப்படியே, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் வசூலிக்கும் தொகைக்கேற்ப, பள்ளிகளில் வசதிகள் இல்லையென்றால், அப்பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கலாமே தவிர, வேறு நடவடிக்கை எடுக்க முடியாது. ஆகவே, கீழ்கோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வாக்காளர் பெயர் சேர்ப்பு: ஜன. 31, பிப். 6-ல் சிறப்பு முகாம்

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், வருகிற ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 6 ஆம் தேதி ஆகிய இருநாள்கள் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.இதுதொடர்பாக தமிழகத தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லகானி வெளியிட்ட செய்தி குறிப்பு:


சிறப்பு திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் கடந்த 20 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் வருகிற ஜனவரி 31 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் பிப்ரவரி 6 (சனிக்கிழமை) ஆகிய இரு நாள்களுக்கும் அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் சிறப்பு பெயர் சேர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

எனவே, வாக்களிக்க தகுதியுள்ள நபர்கள் அனைவரும் தாங்கள் வாக்களிக்கும் வாக்குப் பதிவு மையங்களுக்குச் சென்று தங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என சரிப்பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், புதிதாக பெயர் சேர்க்க விரும்புவோர் உரிய ஆவணங்களை அளித்து தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.முழுமையான வாக்காளர் பட்டியலில் அரசின் இணையதளமான http://elections.tn.gov.in என்ற முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.பிழை இல்லாத வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு ராஜேஷ் லகானி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2016ம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு மூலம் 5013 பணியிடங்கள் நிரப்பப்படும்: அருள்மொழி

16 ஆம் ஆண்டில் தமிழக அரசின் 33 துறைகளில் காலியாக உள்ள 5,513 பணியிடங்க‌ள் வரும் ஆண்டில் நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.இந்த ஆண்டிற்கான திட்ட அறிக்கையை தேர்வாணையத்தின் தலைவர் கே.அருள்மொழி இன்று (ஜன.29) வெளியிட்டார்.அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:


தமிழக அரசின் 33 துறைகளில் காலியாக உள்ள 5,513 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.இந்த ஆண்டு முதல்முறையாக சுற்றுலா வளர்ச்சித்துறையில் 5 அதிகாரி பணியிடத்தில் 5 காலியிடங்களும், எல்காட் நிறுவனத்தில் 12 துணை மேலாளர் பணியிடங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. குருப் 3 பிரிவில் நேர்காணல் இல்லாத பணியில் 36 பணியிடமும், குருப் 4 பிரிவில் 4,931 காலியிடங்கள் என 5,513 பணியிடங்கள் நிரப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய 9 தேர்வுகள் கனமழையின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டன. அவற்றிக்கான தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.கடந்த அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி பதவி ஏற்றது முதல் 3 மாதங்களில் 12 தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு, 6 ஆயிரத்து 54 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்று கூறினார்.மேலும், இந்த ஆண்டு குருப் 1 பிரிவில் 29 துணை ஆட்சியர் பணியிடங்களும், 8 வணிகவரித்துறை உதவி ஆணையர், 5 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், 1 மாவட்டப் பதிவாளர் உட்பட 45 பணியிடங்களும், 65 உதவி சிறை அலுவலர் பணியிடமும், வட்டார சுகாதார புள்ளியியலாளர் பணியில் 172 பணியிடமும்நிரப்பப்பட உள்ளன.

இந்த ஆண்டிற்கான கிராம நிர்வாக அலுவலர், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளில் அடங்கிய குருப் 2 தேர்வில் நேர்காணல் மற்றும் நேர்காணல் அல்லாத பணிகள் என பல்வேறு காலியிட விவரங்கள் வர வேண்டி உள்ளது என்று கூறினார்.மேலும், புதிய திட்ட அறிக்கையை விவரங்களை அறிய தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

29/1/16

சென்னையில் இன்று தேர்தல் பயிற்சி வகுப்பு.

சென்னை: மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கான, தேர்தல் ஆலோசனை மற்றும் பயிற்சி வகுப்பு, சென்னையில் இன்று நடைபெறுகிறது.தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வர உள்ளதால், தேர்தலுக்கான ஆயத்த பணிகளை, தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. 

மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள், மாவட்ட வருவாய் அலுவலர்களுடனான ஆலோசனை மற்றும் பயிற்சி வகுப்பு, தலா, எட்டு மாவட்டங்கள் வீதம், நான்கு கட்டமாக நடத்தப்படுகிறது.சென்னை, அண்ணா மேலாண்மை கூட்டுறவு பயிற்சி நிலையத்தில், இன்று நடைபெற உள்ள பயிற்சி வகுப்பில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலுார், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் எஸ்.பி.,க்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, இணை தேர்தல் அதிகாரி சிவஞானம் ஆகியோர், தேர்தல் பணி குறித்து பயிற்சி அளிக்க உள்ளனர்.

ஆதார், ரேஷன் கார்டுகளின் எண்கள் மக்கள்தொகை பதிவேட்டில் இணைப்பு பணி: 10 மாவட்டங்களில் தொடங்கின

அரசின் திட்டங்கள் உண்மையான பயனாளிகளை சென்றடையும் வகையில் மக்கள் தொகை பதிவேட்டில் ஆதார், ரேஷன் கார்டு,கைபேசி எண்களை இணைக்கும் பணி 10 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகம் சார்பில், தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் (என்பிஆர்) பொதுமக்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.அந்த விவரங்களின் அடிப் படையில்தான் தமிழகத்தில் ஆதார் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, ஆதார் அட்டைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. 


என்பிஆர் பதிவேட்டு தகவல் தொகுப்புகளை மாநிலம் முழுவதும் சரி செய்யும் பணியை மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகம் கடந்த ஜனவரி 18-ம் தேதி தொடங்கியது

10 மாவட்டங்களில் தொடக்கம்

இது தொடர்பாக மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலக இணை இயக்குநர் எம்.ஆர்.வி.கிருஷ்ணா கூறியதாவது:என்பிஆர் பதிவேட்டு தகவல் களை தற்போதுள்ளபடி சரி செய்யும் பணிகள், தற்போது திண்டுக்கல், திருப்பூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக் குடி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் தொடங்கப்பட் டுள்ளன. என்பிஆர் விவரங்கள் அனைத்தும் பிரதி எடுக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. அந்த பிரதிகளைக் கொண்டே, தகவல்களை சரி செய்யும் பணிகளை கணக்கெடுப்பாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.தகவல்களை பிரதி எடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மற்ற மாவட்டங்களில் பிரதிகள் கிடைத்தவுடன் தகவல் களை சரி செய்யும் பணிகள் தொடங்கிவிடும். சென்னையில் புதன்கிழமை (இன்று) தொடங்கி விடும்.

70 ஆயிரம் ஆசிரியர்கள்

ஒவ்வொரு மாவட்டத்திலும் பணி தொடங்கிய நாளில் இருந்து 20 நாட்களுக்குள் பணிகளை முடிக்க கணக்கெடுப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கணக் கெடுக்கும் பணியில் 70 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆசிரியருக்கும் 300 குடும்பங்களின் விவரங்களை சரிபார்க்கும் பணி வழங்கப்பட்டுள்ளது.கணக்கெடுப்பாளர் கொண்டு வரும் என்பிஆர் பதிவேட்டில் அச்சிடப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளனவா? இறந்த நபர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதா? பிறந்த குழந்தை மற்றும் குடும்பத்தில் புதிதாக வந்தவர்கள் என புதிய உறுப்பினர்கள் சேர்க்கப் பட்டுள்ளனரா? என உறுதி செய்ய வேண்டும்.

புதிய நபர்கள்

புதிதாக குடியேறிய குடும்பத் திலுள்ள உறுப்பினர்கள், விடுபட்ட உறுப்பினர்கள் அனைவரும், தங்கள் விவரங்களைக் கணக்கெடுப்பாளரிடம் கொடுத்து, என்பிஆர் பதிவேட்டில் தங்களை பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.கணக்கெடுப்பாளரிடம் ஆதார் எண் அல்லது அதன் பதிவு எண், குடும்ப அட்டை எண், ஒவ்வொருவரின் கைபேசி எண் (இருந்தால்) ஆகியவற்றை வழங்க வேண்டும்.

போலி ரேஷன் கார்டு ஒழியும்

என்பிஆர் பதிவேட்டில் ஆதார் மற்றும் குடும்ப அட்டை, கைபேசி எண்களை பதிவு செய்வதன் நன்மைகள் குறித்து, அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:என்பிஆர் பதிவேட்டில் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் அரசின் பல்வேறு துறைகள் மூலமாக செயல்படுத்தப்படும் நலதிட்டங்கள் உண்மையான பயனாளிகளைச் சென்று சேரும். அரசின் பண விரயம் தவிர்க்கப் படும். அரசிடம் 10 ஆண்டுகளுக்கு முந்தைய தரவுகள் தான் உள்ளன.இப்பணி மூலம் தற்போதைய தரவுகள் கிடைக்கும். குடும்ப அட்டை விவரங்களும் கேட்கப் படுகின்றன.அந்த விவரங்களைக் கொண்டு ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்களை வழங் கும்போது, போலி ரேஷன் கார்டுகள் ஒழியும். இதை செயல்படுத்துவதற்கான திட்டம் அரசிடம் இப்போதைக்கு இல்லை. பிற்காலத்தில் செயல்படுத்த வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியர்கள் போராட்டத்தால் வகுப்புகள் முடங்கும் அபாயம்

ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக் குழுவான, 'ஜாக்டோ' பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளது. அதனால், ஒரு வாரம் வரை வகுப்புகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஆசிரியர் சங்க கூட்டுக் குழுவான ஜாக்டோ சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன., 30, 31 மற்றும் பிப்., 1ல் மாவட்ட தலைநகரங்களில், ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.


இதையடுத்து, அனைத்து பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களை நேரில் சந்தித்து, போராட்டம்குறித்து பிரசாரம் செய்யவும் ஜாக்டோ அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர். இதனால், பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பெயரளவுக்கு வந்து விட்டு, ஒரு வாரம் வரை போராட்டபணிகளில் ஈடுபடும் நிலை உள்ளது.இதனால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் மட்டுமின்றி, அனைத்து வகுப்பு மாணவர்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அதிகாரிகள் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடாமல் மவுனமாக இருப்பதால், ஆசிரியர்சங்க போராட்டத்துக்கு, அதிகாரிகளும் துணை போவதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கோரிக்கைகள் என்ன?

* மத்திய அரசுஆசிரியர்களை போல், தமிழக ஆசிரியர்களுக்கு, ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி தர ஊதியம் வழங்க வேண்டும்
* 50 சதவீத அகவிலைப்படியை, அடிப்படை ஊதியத்துடன் இணைக்கவேண்டும்
* பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை வாபஸ் பெற்று, பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வர வேண்டும்
* ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும்
* தமிழை முதல் பாடமாக்கி அரசாணை வெளியிட வேண்டும்
* இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஆறாவது ஊதியக்குழுவின் படி சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 15 கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

ஜாக்டோ ஆசிரியர்கள் 3 நாட்கள் போராட்டம்

ஜாக்டோ அமைப்பின் மதுரை மாவட்ட செயற்குழுக் கூட்டம், அமைப்பாளர்கள் சந்திரன், ஆரோக்கியம் தலைமையில் நடந்தது.மாவட்டத்திலுள்ள 19 ஆசிரிய சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். 

மத்திய அரசுக்குஇணையான சம்பளம், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்தல், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்குதல், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு நலத்திட்ட அலுவலர் நியமிக்கப்படுதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன., 30, 31, பிப்., 1ல் மதுரை கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்த உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். மூன்று நாட்கள் நடக்கும் போராட்டத்தில் தினமும் 5000 ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.

484 சத்துணவு அமைப்பாளர், 463 சமையல் உதவியாளர் பணியிடங்கள்:பிப்.5-க்குள் விண்ணப்பிக்கலாம்

மாவட்ட அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 484 சத்துணவு அமைப்பாளர், 463 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான பெண் விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

484 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள்: 


சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கு ரூ.2,500-5,000 என்ற ஊதிய விகிதத்தின் கீழ் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்படுகிறது. இந்தப் பணியிடங்களுக்கு தகுதியான பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை ஒன்றியத்தில் 26 காலிப் பணியிடங்களும், கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் 23 பணியிடங்களும் காலியாக உள்ளன. 

இதேபோல, துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் 21, போளூர் ஒன்றியத்தில் 26, கலசப்பாக்கத்தில் 21,சேத்பட்டில் 24, செங்கத்தில் 28, புதுப்பாளையத்தில் 27, தண்டராம்பட்டில் 22, ஜவ்வாதுமலையில் 19, செய்யாறில் 33, அனக்காவூரில் 26, வெம்பாக்கத்தில் 35, வந்தவாசியில் 26, தெள்ளாரில் 36, பெரணமல்லூரில் 33, ஆரணியில் 31, மேற்கு ஆரணியில் 15, திருவண்ணாமலை நகராட்சியில் 7, ஆரணி நகராட்சியில் 2, திருவத்திபுரம் நகராட்சியில் 3 என மொத்தம் 484 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.இவற்றில் அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு 14 இடங்களும்,ஆதிதிராவிடர்களுக்கு 73 இடங்களும், பழங்குடியினருக்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 97 இடங்களும், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினருக்கு 17 இடங்களும், முஸ்லிம் தவிர மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 129 இடங்களும், பொதுப்பிரிவினருக்கு 149 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் 2016 ஜனவரி 1-ஆம் தேதிப்படி 21 வயதுபூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். பழங்குடியினர் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தோல்வியடைந்தவர்களாக இருக்கலாம். இவர்களது வயது வரம்பு 2016 ஜனவரி 1-ஆம் தேதியன்று 18 வயது நிரம்பியவராகவும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்தும், 40 வயது மிகாமலும் இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதி, விதவை, கணவரால் கைவிடப்பட்டோர் சான்று ஆகியவற்றுடன் பிப்ரவரி 5-ஆம் தேதிக்குள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். 

மாதிரி விண்ணப்பப் படிவங்களை அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.463 சமையல் உதவியாளர் பணியிடங்கள்: இதேபோல, சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு ரூ.950-2,000 என்ற ஊதிய விகிதத்தின் கீழ் பெண் விண்ணப்பதாரர்கள் மட்டும் நேரடி நியமனம் செய்யப்படுகின்றனர். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் 26 காலிப் பணியிங்களும், கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் 24 காலிப் பணியிடங்களும் உள்ளன. இதேபோல, துரிஞ்சாபுரத்தில் 27, போளூரில் 8, கலசப்பாக்கத்தில் 19,சேத்பட்டில் 23, செங்கத்தில் 40, புதுப்பாளையத்தில் 20, தண்டராம்பட்டில் 35, ஜவ்வாதுமலையில் 16, செய்யாறில் 23, அனக்காவூரில் 20, வெம்பாக்கத்தில் 41, வந்தவாசியில் 21, தெள்ளாரில் 32, பெரணமல்லூரில் 32, ஆரணியில் 28, மேற்கு ஆரணியில் 24, திருவண்ணாமலை நகராட்சியில் 3, ஆரணி நகராட்சியில் 1 பணியிடம் என மொத்தம் 463 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதில், அருந்ததியினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு 13 இடங்கள், ஆதிதிராவிடர்களுக்கு 70 இடங்கள், பழங்குடியினருக்கு 5, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 93, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினருக்கு 16, முஸ்லீம் தவிர இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 123, பொதுப்பிரிவினருக்கு 143 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.இந்தப் பணியிடத்துக்கு பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தோல்வி அடைந்தவர்களாக இருக்கலாம். பழங்குடியினர் எழுத, படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. தகுதியான விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 5-ம் தேதிக்குள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு சிலிண்டர்... இனி ஆன்லைனில் பணம் செலுத்தலாம்!

சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான தொகையை இனி ஆன்லைனில் செலுத்துவதற்கானத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.பணமில்லா நடவடிக்கையை கவனத்தில் கொண்டு சமையல் எரிவாயு சிலிண்டருக்கான தொகையை ஆன்லைனில் செலுத்துவதற்கானத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்துக்கான முன்பதிவு முறை ஏற்கெனவே ஆன்லைன் வழியாக அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், விநியோகிப்பட்ட பிறகே பணம் செலுத்த முடியும் என்ற நிலையே இருந்தது.இந்த நிலையில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தும் திட்டத்தை நேற்று (24.01.16) தொடக்கி வைத்துள்ளார்.நாடு முழுவதும் தற்போது 16.5 கோடி சமையல் எரிவாயு சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்தப் புதிய நடைமுறையின் மூலம் நுகர்வோர்கள் பயனடைவார்கள், வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது