யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

29/8/18

பயமில்லா கற்றல்' சுவரொட்டிகள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் வெளியிட்டார் :

அரசு பள்ளிகளை தத்தெடுக்க, பலர் ஆர்வமாக முன்வந்துள்ளனர்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.மாணவர்கள், தயக்கமில்லாமல், தடுமாறாமல், பாலியல் வன்முறைகளுக்கு இடம் தராமல், கல்வி கற்பது தொடர்பாக, அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, 'பயமில்லா கற்றல்' என்ற பெயரில், சுவரொட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இவற்றை, அமைச்சர், செங்கோட்டையன், நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் வெளியிட்டார்.

தேசிய திறனாய்வு தேர்வு : ஆசிரியர்களுக்கு அறிவுரை :

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய திறனாய்வு தேர்வுக்கு, மாணவர்களை தவறாமல் விண்ணப்பிக்க செய்யும்படி, அறிவுறுத்தப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசு சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 
இணையதளம் : இதைப் பெற, மத்திய அரசின் தேசிய திறனாய்வு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான, மாநில அளவிலான தேர்வு, நவம்பர், 4ல் நடத்தப்படும் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.இந்த தேர்வுக்கு, அரசு தேர்வுத் துறையின், www.dge.tn.gov.in, என்ற இணையதளம் வழியாக, ஆக., 23 முதல் விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது; செப்., 5 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம், 50 ரூபாய். மாணவர்கள், தங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியாக, விண்ணப்பிக்க வேண்டும்.இந்நிலையில், ஒவ்வொரு பள்ளியிலும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, இந்த தேர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களை தயார்படுத்த வேண்டும் என, பள்ளி தலைமை ஆசிரியர்களை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்திஉள்ளனர்.
குற்றச்சாட்டு : நன்றாக படிக்கும் மாணவர்களுக்கும், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும், இந்த தேர்வு பற்றிய தகவல்களை, ஆசிரியர்கள் கூறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, பள்ளி பிரார்த்தனை கூட்டத்தின் வாயிலாக, இதை தெரியப்படுத்தி, அனைத்து மாணவர்களும், திறனாய்வு தேர்வில் பங்கேற்க செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

38 படிப்புகளுக்கு யு.ஜி.சி., அங்கீகாரம் : TNOU துணைவேந்தர் தகவல்

நடப்பு கல்வி ஆண்டில், தொலைநிலை கல்வியில், 38 படிப்புகளை நடத்துவதற்கு, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., அங்கீகாரம் அளித்துள்ளதாக, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை அறிவித்து உள்ளது. 


இதுதொடர்பாக, பல்கலையின் துணை வேந்தர், எம்.பாஸ்கரன் நேற்று அளித்த பேட்டி:அடிப்படை பள்ளி கல்வியை முடிக்காதவர்கள், உயர் கல்வியை பெறாதவர்கள், இந்த பல்கலை வழியாக, உயர் கல்வி படிக்கும் வாய்ப்பு தரப்படுகிறது.இதற்கு, மத்திய அரசின், யு.ஜி.சி., சார்பில், உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த கல்வி ஆண்டில், யு.ஜி.சி., அனுமதியுடன், 83 படிப்புகள் நடத்தப்பட்டன. நடப்பு கல்வியாண்டில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகள் என, 38 படிப்புகளுக்கு, அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.இதற்கான கடிதம், 14ல், யு.ஜி.சி.,யிடம் இருந்து, பல்கலைக்கு கிடைத்துள்ளது.மேலும், மத்திய மனித வள அமைச்சக அனுமதியுடன், 'ஆன்லைனில்' சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படுகின்றன.
தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அங்கீகாரத்துடன், பி.எட்., என்ற, ஆசிரியர் கல்வியியல் படிப்பும் நடத்தப்படுகிறது.நடப்பு ஆண்டில், பி.எட்., மாணவர் சேர்க்கைக்கு, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் மற்றும் இந்திய மறுவாழ்வு கழகத்தில் அனுமதி கேட்டு, விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது.திறந்தநிலை மற்றும் தொலைநிலை கல்வியை நடத்தும் பல்கலைகளில், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கு அடுத்தபடியாக, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை தான், அதிகளவிலான படிப்புகளுக்கு, யு.ஜி.சி.,யிடம் அங்கீகாரம் பெற்றுள்ளது.
பட்டம் மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளை தவிர, 'டிப்ளமா' மற்றும் சான்றிதழ் படிப்புகளையும், தொழில்சார் படிப்புகளையும், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை நடத்துகிறது. இதற்கான அங்கீகாரத்தை, உரிய அமைப்புகளிடம் இருந்து பெற்றுள்ளது.தமிழகம் முழுவதும், அனைத்து பல்கலைகளிலும், தொலைநிலை கல்வியில், ஒரே வகையான பாடத்திட்டம், அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான, பொது பாடத்திட்ட தயாரிப்பு பணி, தமிழக அரசிடம் இருந்து, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையிடம் வழங்கப்பட்டுள்ளது.
இப்பல்கலையில், இதுவரை, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து, பட்டம் மற்றும் சான்றிதழ்கள் பெற்றுள்ளனர். நடப்பு கல்வி ஆண்டில், ஒரு லட்சம் பேர் படித்து வருகின்றனர்.எந்த பல்கலையில் வேண்டுமானாலும், மாணவர்கள் சேரலாம். ஆனால், அந்த பல்கலை நடத்தும் படிப்புக்கு, உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதா என்பதை, ஆய்வு செய்வது நல்லது.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக அரசின் சார்பில் 960 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை - பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

தமிழ் வழியில் படித்த, 960 மாணவர்களுக்கு, தமிழக அரசின் சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்படும்,'' என, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னையில், தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, அவர் கூறியதாவது:தமிழகம் முழுவதும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' மற்றும், சி.ஏ., தேர்வுக்கு பயிற்சி வழங்குவது, அடுத்த மாதம் துவங்கஉள்ளது. இதற்காக, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும், 3,000 அரசு பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளன. இன்னும் ஒரு மாதத்தில், இந்த வகுப்பறைகள் திறக்கப்படும்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, செப்., 5ல், தமிழக அரசின் சார்பில், ஆசிரியர் தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், பள்ளிகளில் சிறப்பாக பணி புரிந்த ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். அதேபோல, 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2வில், தமிழ் வழியில் படித்து, அதிக மதிப்பெண் பெற்ற, 960 மாணவர்களுக்கு, அரசின் சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய 31-ந் தேதியுடன் கால அவகாசம் நிறைவு வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல்

வருமானவரிச் சட்டத்தின் கீழ் தணிக்கை தேவைப்படாத பிரிவினர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கடந்த மாதம் (ஜூலை) 31-ந் தேதியை கடைசி நாளாக வருமான வரித்துறை அறிவித்து இருந்தது. பின்னர் ஒரு மாத காலம் அதாவது வருகிற 31-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. அந்த கால அவகாசமும் வருகிற 31-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.


மாத ஊதியம், ஓய்வூதியம், வீட்டு வாடகை உள்ளிட்ட சொத்திலிருந்து வருமானம் பெறுவோர், மூலதன மதிப்பு உயர்வு, வர்த்தகம் அல்லது தொழில் மூலம் வருமானம் பெறுவோர், இதர வருமானம் பெறுவோர் இந்த வகையின் கீழ் வருகின்றனர்.

வருமானவரி கணக்கை வருகிற 31-ந் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்வோருக்கு அபராத கட்டணம் ஏதும் இல்லை. மொத்த ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் உள்ளவர்கள் வருமானவரி கணக்கை வருகிற 31-ந் தேதிக்கு பிறகு அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்கு முன்பாக தாக்கல் செய்தால் அபராத கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் மேல் உள்ளவர்கள் வருமானவரி கணக்கை வருகிற 31-ந் தேதிக்கு பிறகு தொடங்கி டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்தால் தாமத கட்டணம் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும்.

மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கு அதிகமாக இருப்போர் தங்கள் வருமானவரி கணக்கை வருகிற 31-ந் தேதிக்கு பிறகு, அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்குள் தாக்கல் செய்தால் தாமத கட்டணம் ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த கால கட்டத்துக்கு பிறகு வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய முடியாது.

அனைத்து வரி செலுத்துவோரும் தங்களது வருமானவரி கணக்குகளை மின்னணு முறையில் தாக்கல் செய்ய வேண்டும். மாத ஊதியம், இதர ஊதியங்கள் மற்றும் வீட்டு சொத்தில் இருந்து வருமானம் பெறுவோர் ஆகியோர் காகித வடிவில் வருமானவரி கணக்கை தாக்கல் செய்யலாம்.

வருமானவரி செலுத்துவோர் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு ஏதுவாக, சென்னை, நுங்கம்பாக்கம், உத்தமர் காந்தி சாலையில் உள்ள வருமானவரி அலுவலகத்தில் வருமான வரி கணக்கு முன் தயாரிப்பு உதவி மையமும் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் வருகிற 31-ந் தேதி வரை வருமானவரி கணக்கை அபராதம் இன்றி தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மழை வெள்ள பெருக்கு காரணமாக கேரள, கர்நாடக மாநிலங்கள் சார்பில் மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த தேதியில் மாற்றம் செய்வது குறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் வரவில்லை.

மேற்கண்ட தகவல்களை வருமான வரித்துறை அதி காரிகள் தெரிவித்தனர்.

ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கும் ஊக்கத் தொகை :

ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கும் ஊக்கத் தொகை அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கும்
ஊக்கத் தொகை இந்த ஆண்டு முதல் வழங்கப்பட உள்ளது.


அமைச்சர் செங்கோட்டையன்

வீட்டில் தாய்மொழி பேசும் குழந்தைகளுக்கு ஐக்யூ திறன் அதிகமாகும்.!!!!

பிறந்த நாட்டைவிட்டு வேறுநாடுகளில் வாழ்பவர்கள்,
குழந்தைகளுக்கு தங்களின் தாய்மொழியைக் கற்றுக்கொடுத்து வளர்த்தால் அவர்களின் ஐக்யூ திறன் அதிகமாகும் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டில் இருக்கும் ரீடிங் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில், 7முதல் 11 வயது வரையான 100 துருக்கி நாட்டுக் குழந்தைகளை ஆராய்ச்சிக்காக தேர்ந்தெடுத்தனர்.


பள்ளியில் ஆங்கிலமும், வீட்டில் துருக்கி மொழி பேசிய குழந்தைகளுக்கும், வீடு பள்ளியென இரண்டு இடங்களிலும் ஆங்கிலம் மட்டும் பேசும் குழந்தைகளுக்கு இடையே ஐக்யூ திறன் குறித்து சோதனை செய்யப்பட்டது.
வீட்டில் தாய்மொழி பேசும் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாக செயல்பட்டார்கள்.எந்தவொரு இக்கட்டான சூழலிலும் புத்திசாலித்தனமாக செயல்படுவதாகவும் ஆய்வு கூறியுள்ளது.
குழந்தைகள் இளம் வயதிலேயே மொழியைக் கற்றுக்கொள்வதில் இருக்கும் சிரமங்களைப் புரிந்து கொள்கிறார்கள். குழந்தைகளால் வேறு மொழிகளில் எளிதாகவும், அர்த்தமுள்ள உரையாடல்களை அவர்களால் மேற்கொள்ளவும் முடிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
வீட்டில் தாய்மொழி பேசும் குழந்தைகள், ஒரு மொழியின் அடிப்படை கட்டமைப்பை தன் தாய்மொழியின் மூலம் கற்றுக்கொள்வதால் பிற மொழிகளைப் படிப்பது எளிமையாகிவிடுகிறது. முதல் முறை படிக்கும்போது பிற மொழிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு மொழி குறித்த குழப்பங்கள் நீடித்துக் கொண்டே இருக்கிறது என்று ஆய்வு கூறுகிறது.
பள்ளி கற்றுக்கொடுக்காத மொழியை பெற்றோர்கள் ஆர்வத்துடன் கற்றுக் கொடுக்கவேண்டும். குழந்தைகளுக்கு மொழியை முறையான புத்தக வாசிப்பின் மூலம் கற்றுக்கொடுத்தால் அறிவுத்திறன் அதிகரிக்கும் என்பதை ஆய்வாளார்கள் கூறுகின்றனர்.

5G இந்தியாவில் சாத்தியமா? இந்தியா முன் இருக்கும் சவால்கள்! இன்னும் இரண்டே ஆண்டுகளில் இந்தியாவில் 5G

அறிமுகமாகிவிடும் எனச் சொல்கிறது அரசு; அது சாத்தியமானால் 2022-க்குள் நம் எல்லோர் கையிலும் 5G இருப்பது நிச்சயம். தற்போது இருப்பதை விடவும் அதிவேக இணையம், கிராமப்புறங்களில்கூட தரமான வாய்ஸ் குவாலிட்டி, மெஷின் டு மெஷின் இடையேயான அதிவேகத் தகவல் பரிமாற்றம் என நம் தகவல்தொடர்பு முறையை நிச்சயம் 5G அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்லும். ஆனால், அடுத்த சில ஆண்டுகளுக்குள்ளாக 5G-யைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவது அவ்வளவு சுலபமில்லை. அரசுக்கும், டெலிகாம் நிறுவனங்களுக்கும் இடையேயே தற்போது நிறைய முட்டல் மோதல்கள் நடந்துவருகின்றன; தற்போதைய 4G சந்தையிலேயே இன்னும் கடும்போட்டி நிலவிக்கொண்டிருக்கிறது. டெலிகாம் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இப்படியிருக்கையில் எப்படி 2020-க்குள் 5G-யை கொண்டுவரப்போகிறது மத்திய அரசு? தற்போது தொலைத்தொடர்புத் துறையில் இருக்கும் முக்கியமான சவால்கள் என்ன?
தரநிர்ணயம்
2G, 3G,4G என எதுவாக இருந்தாலும் அவை எப்படி இருக்கவேண்டும் என்பதைச் சர்வதேச அமைப்புகள்தான் முடிவுசெய்யும். அப்படி 5G-க்கான தரத்தை 3GPP எனும் அமைப்பே நிர்ணயம் செய்யும். அதன்பிறகே தொழில்நுட்ப நிறுவனங்கள் அதனைப் பின்பற்றும். தற்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் 4G-யின் தரநிர்ணயமானது 2008-ம் ஆண்டு இறுதிசெய்யப்பட்டது. பின்னர் முதன்முதலாக ஸ்வீடனில் 4G அறிமுகமானது; அதன்பின்பு 2012-ல் 4G இந்தியாவிற்கு வந்தது. கடந்த 6 ஆண்டுகளாக நாம் காணும் 4G-யின் வளர்ச்சி இப்படித்தான் தொடங்கியது. இதேபோலத்தான் 5G-யும் இந்தியாவுக்கு வரும்.
5G-க்கான முதல்கட்ட தர்நிர்ணயமானது இந்த ஆண்டு ஜூன் மாதம்தான் இறுதிசெய்யப்பட்டு வெளியானது. இனி இந்த தரத்தில் செயல்படவேண்டிய கருவிகளை உற்பத்தி செய்யவேண்டியது நிறுவனங்களின் பொறுப்பு. இதுதவிர இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னொரு கடமையும் உண்டு. அது, இந்தியாவிற்கேற்றபடி 5G நெட்வொர்க்கை அமைப்பது; உதாரணமாக, கிராமப்புறங்களில் குறைவான நபர்களே இருப்பார்கள்; எனவே அவர்களுக்காகக் குறைவான டவர்களே வைப்பார்கள். இதனால் அங்கே கால் குவாலிட்டியில் தரம் குறைவாக இருக்கும். இதுதான் தற்போதைய நிலை. ஆனால், 5G நெட்வொர்க்கில் இது இருக்கக்கூடாது என்பதும் ஒரு விதி. இதனை இந்திய விஞ்ஞானிகள் 3GPP-யிடம் பரிந்துரைத்து, அதனை அவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே, இந்தியாவில் 5G நெட்வொர்க்கை அமைக்கும் நிறுவனங்கள், கிராமப்புறங்களிலும் தரமான சேவை கிடைக்க வழிவகை செய்யவேண்டும். இந்த விதிக்கு டெக்னிக்கலாக Low Mobility High Coverage எனப்பெயர். இப்படி 5G தரத்திற்கான தொழில்நுட்பக் கருவிகளை உருவாக்கவேண்டியது முதல் சவால்.
5G அலைக்கற்றைகள்
மற்ற விஷயங்களை விடவும் அரசின் பங்கு அதிகம் இருப்பது இந்த அலைக்கற்றை விஷயத்தில்தான். 5G நெட்வொர்க்கிற்கான பணிகளை டெலிகாம் நிறுவனங்கள் தொடங்க வேண்டுமென்றால், முதல் பணியே அலைக்கற்றைகளுக்கான உரிமம் பெறுவதுதான். ஆனால், இந்த விஷயத்தில் டெலிகாம் நிறுவனங்களுக்கும் அரசுக்கும் இடையே வர்த்தக ரீதியிலான சிக்கல்கள் எழுந்துள்ளன. இரண்டு வருடமாக ஜியோவானது டெலிகாம் துறையில் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, பிறடெலிகாம் நிறுவனங்களின் வருவாய் பலத்த அடி வாங்கியுள்ளது. 4G சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதற்காக இன்னும் அதிகளவில் முதலீடு செய்தும் வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் 5G-க்கான முதலீட்டையும் மேற்கொள்ள வேண்டும் என்பது டெலிகாம் நிறுவனங்களுக்குச் சவாலான காரியம். எனவே 5G அலைக்கற்றைகளின் விலை ஓரளவுக்கேனும் கட்டுபடியாகும் அளவில் இருந்தால்தான் அவர்களும் லாபமீட்ட முடியும். ஆனால், தற்போது அரசு நிர்ணயித்துள்ள அலைக்கற்றை கட்டணம் மிகவும் அதிகம் எனக் குற்றம் சாட்டுகின்றன இந்நிறுவனங்கள். சீனாவில் 5G அலைக்கற்றைகளுக்கான கட்டணத்தோடு ஒப்பிட்டால் இங்கே 10 மடங்கு அதிகம் என்கின்றனர் அவர்கள்.
அலைக்கற்றையை அதிக விலை வைத்து விற்பதன்மூலம், அரசு நல்ல வருவாய் பார்க்கமுடியும் என்பது உண்மைதான். ஆனால், டெலிகாம் துறையில் அசாதரணமான சூழ்நிலை நிலவும் இந்தச் சமயத்தில் அரசுதான் நிச்சயம் கைகொடுக்கவேண்டும் என்று டெலிகாம் துறை. இந்த விஷயத்தில் அரசு எவ்வளவு விரைவில் முடிவெடுக்கிறதோ, அதைப் பொறுத்தே 5G-க்கான பணிகளும் வேகமெடுக்கும்.

தொழில்நுட்பம்
தற்போது நாம் பயன்படுத்தும் 4G-யை விடவும், 5G 100 மடங்கு வேகம் அதிகமாக இருக்கும். இப்போது இருக்கும் 4G-யே போதுமான அளவு வேகமாக இருக்கும்போது, நமக்கு எதற்கு 5G எனத் தோன்றலாம். ஆனால், இவ்வளவு வேகம் எதிர்காலத்தில் நிச்சயம் நமக்கு தேவைப்படும் என்பதுதான் டெலிகாம் கணக்கு. தற்போது இருக்கும் 4G வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க அதன் வேகம் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிக்கப்படும். அதுவும் இந்தியா போன்ற மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டில் இது நிச்சயம் நடக்கும் என்கின்றனர் நிபுணர்கள்; மேலும், எதிர்காலத்தில் நாம் பயன்படுத்தப்போகும் விர்ச்சுவல் ரியாலிட்டி, மெஷின் டு மெஷின் போன்ற தொழில்நுட்பங்கள் அனைத்திற்கும் அதிவேக இணையம் நிச்சயம் அவசியம்; கேட்ஜெட்களின் எண்ணிக்கையும், வாடிக்கையாளர்களின் பயன்பாடும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேதான் இருக்கும். இவற்றையெல்லாம் சமாளிப்பதற்கு ஒரேவழி 5G-தான். தற்போது இருக்கும் 4G-யானது 20 MHz அலைக்கற்றைக்குள் இயங்குபவை. ஆனால், 5G-யானது 100 MHz வரை இயங்கக்கூடியவை. 4G-யை விடவும் 5 மடங்கு இவை திறன்மிகுந்தவை. எனவே, அவற்றால் மட்டுமே நம் எதிர்கால இணையத் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியும்.
இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை நாடு முழுவதிலும் ஏற்படுத்தவேண்டும். அப்போதுதான் நம்மால் முழுமையான 5G அனுபவத்தைப் பெறமுடியும். இதற்கான சாத்தியங்கள், முதலீடு என இதிலும் சவால்கள் இருக்கின்றன.
மொபைல் போன்கள்
புதிதாக 5G நெட்வொர்க் இருந்தால் மட்டும் போதுமா? அவற்றை உள்வாங்கிக்கொள்ளும் மொபைல் போன்கள் வேண்டாமா? அதுதான் அடுத்த சவால். இன்று இருக்கும் 4G போன்கள் எதுவுமே 5G-யை சப்போர்ட் செய்யாது. 4G வந்தபோது 3G-யின் நிலையும் இப்படித்தான் இருந்தது. ஆனால், 4G-க்கு நடந்த ஒரே நல்லவிஷயம், 2012-18-க்கு இடைப்பட்ட காலத்தில் அதிவேகமாக வளர்ந்த மொபைல் சந்தை. பட்ஜெட் மொபைல்களே இந்தியாவில் 4G வசதியோடு வர, மிக எளிதாக 4G-யின் பயன்பாடு அதிகரித்தது. இதே அதிர்ஷ்டம் 5G-க்கும் இருக்கும் எனச் சொல்லமுடியாது. ஹூவாவே, நோக்கியா, சாம்சங், ஆப்பிள் உள்பட இப்போதே பல மொபைல் போன் உற்பத்தியாளர்களும் 5G-க்கு ஏற்ப தயாராகி வருகின்றனர். இந்த வேகம் இன்னும் அதிகரிக்க வேண்டுமென்றால், மொபைலின் எலெக்ட்ரானிக் பாகங்களை உற்பத்தி செய்யும் எல்லா நிறுவனங்களுமே முனைப்பு காட்டவேண்டும். சமீபத்தில்தான் மொபைல் சிப் நிறுவனமான குவால்காம் 5G-க்கான சிப்பை வெளியிட்டது. இதேபோல பிறநிறுவனங்களும் அப்டேட் ஆகவேண்டும். அப்போதுதான் 5G சந்தை சீராக வளர்ச்சியடையும். இல்லையெனில் டெலிகாம் நிறுவனங்களுக்கு ஆரம்பத்தில் தள்ளாடவே செய்யும்.

வாடிக்கையாளர்கள்
டெலிகாம் நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்வதால் நிச்சயம் 5G தொடக்கத்தில் விலை அதிகமாகவே இருக்கும். அதற்கேற்ற மொபைல்களும் உடனே தயாராகிவிடாது; எனவே ஜியோ வருவதற்கு முன்புவரைக்கும், 4G எப்படி எலைட்டான சர்வீஸாக மட்டுமே பார்க்கப்பட்டதோ, அதேபோலத்தான் 5G-யும் பார்க்கப்படும். ஜியோ போல 5G-க்காக புதிய டிஸ்ரப்டர் வரவும் வாய்ப்பில்லை. ஈனவே, இந்தப் பிரச்னையை தற்போது களத்தில் இருக்கும் டெலிகாம் நிறுவனங்கள் எப்படி கையாளப்போகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இதுதவிர டெலிகாம் நிறுவனங்களுக்கு 5G மூலம் இன்னொரு நன்மையையும் உண்டு . அது வெவ்வேறு துறைசார்ந்த வாடிக்கையாளர்கள். 4G-யைப் பொறுத்தவரை தனிநபர்கள் மட்டும்தான் முதன்மை வாடிக்கையாளர்கள். ஆனால், 5G அப்படியல்ல; மருத்துவம், விவசாயம், உற்பத்தி தொழிற்சாலைகள் என இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் 5G-யின் தேவை இருக்கும். இது டெலிகாம் நிறுவனங்களுக்கு கூடுதல் வருமான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.இப்படி நிறைய பிரச்னைகளும், நன்மைகளும் கலந்துதான் நமக்கான 5G உருவாகிக்கொண்டிருக்கிறது. எல்லா தொழில்நுட்பங்களும் இப்படியொரு காலகட்டத்தைக் கடந்து வந்துதான், இன்று நம் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கின்றன. 5G-க்கும் அது பொருந்தும்!

28/8/18

பின் புறம் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம்: விற்பனை 20 சதவீதம் அதிகரிப்பு

இரு சக்கர வாகனங்களில் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்களும் கண்டிப்பாகத் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவினால், சென்னையில் தலைக்கவசம் (ஹெல்மெட்) விற்பனை 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
 இருசக்கர வாகனங்களில் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோரும் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு கடந்த 24-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
 இதையடுத்து இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து தலைக்கவசம் அணியாமல் வருபவர்கள் மீது போலீஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அபராதம் வசூலிக்கப்படுகிறது.
 இந்த நடவடிக்கையின் விளைவாக, இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் தலைக்கவசம் அணியத் தொடங்கியிருக்கின்றனர். இதில் தலைக்கவசம் இல்லாதவர்கள், கடைகளை தேடிச் சென்று தலைக்கவசம் வாங்கி வருகின்றனர். இதனால் தலைக்கவசம் விற்பனை விறு,விறுப்பு அடைந்துள்ளது.
 சென்னையில் உள்நாட்டு தயாரிப்பு தலைக்கவசங்களை தவிர்த்து, வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தலைக்கவசங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
 விலை ரூ.600 முதல் ரூ.20,000: சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியில் உள்ள கடைகளில் சாதாரண தலைக்கவசம் முதல் அதிநவீன வசதிகளுடன் கூடிய தலைக்கவசம் வரை விற்பனை செய்யப்படுகின்றன.100 வகையான தலைக்கவசங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை ரூ.600 முதல் ரூ. 20,000 விற்கப்படுகிறது. தலைக்கவசங்களின் விலைக்கு ஏற்றார்போல, அதில் நவீன வசதிகளும், அழகாகவும், கவர்ச்சியாகவும் உள்ளன. அதேவேளையில் ஆர்டரின்பேரில் பல அதிநவீன வசதிகளுடன் கூடிய தலைக்கவசங்கள் செய்தும் கொடுக்கப்படுகின்றன. இந்த தலைக்கவசங்கள் ரூ.1 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தலைக்கவசம் விற்பûயாளர் ஃபைசுதீன் கூறியது:
 இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருப்பவரும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற உத்தரவினால், ஆயிரம் விளக்கு பகுதிகளில் உள்ள தலைக்கவசம் விற்பனை கடைகளில், தலைக்கவசம் வாங்க வருபவர்கள் எண்ணிக்கை 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
 இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். சரக்கு சேவை வரியில் (ஜி.எஸ்.டி) தலைக்கவசத்துக்கு விதிக்கப்படும் 18 சதவீதம் வரியில் இருந்து இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். ஏனென்றால் மனித உயிர்களுக்கு பாதுகாப்பு இருக்கும் தலைக்கவசங்களுக்கு வரியில் விலக்கு அளித்தால், அது மக்களை இன்னும் வேகமாக சென்றடையும் என்றார் அவர்.
 சாலையோர தலைக்கவசம் வேண்டாம்: இதேபோல தலைக்கவசம் விற்பனையாளர் ரேயான் கூறியது:
 சென்னையில் சாலையோர நடை மேடைகளில் தரக்குறைவான, ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாத தலைக்கவசங்கள் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன. இந்த தலைக்கவசங்கள் குறைந்த விலைக்கு விற்கப்படுவதால், பொதுமக்களும் ஆர்வத்துடன் வாங்குவதை காண முடிகிறது. இந்த தலைக்கவசங்கள், எளிதில் உடையக் கூடியதாகும். இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது, பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடையாது. எனவே இத்தகைய தலைக்கவசங்களை வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றார் ரேயான்

தொலைநிலைக் கல்வி வழி எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புகள் செல்லுமா?

அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் (ஏஐசிடிஇ) நடைமுறைகளைப் பின்பற்றாமல் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகள் செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் ஏஐசிடிஇ நடைமுறைகளைப் பின்பற்றாமல் மாணவர் சேர்க்கையை நடத்தி வருவதாகப் புகார் எழுந்துள்ளன.
 நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளால் வழங்கப்படும் கலை-அறிவியல் பட்டப் படிப்புகள் அனைத்தையும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கட்டுப்படுத்துகிறது.

 பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக். போன்ற பொறியியல் படிப்புகளையும், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. போன்ற தொழில் படிப்புகளையும் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் (ஏஐசிடிஇ) கட்டுப்படுத்தி வருகிறது.
 நாடு முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் தொலைநிலைக் கல்வி நிறுவனப் படிப்புகளையும் யுஜிசி கட்டுப்படுத்தி வருகிறது என்றபோதும், தொலைநிலைக் கல்வி நிறுவங்கள் மூலம் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கும் ஏஐசிடிஇ நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்பது விதியாகும்.
 ஏனெனில், பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 முடித்த பின்னர் தொலைநிலைக் கல்வி வழியாக பெறும் இளநிலை பட்டப் படிப்பும், அதன் பிறகு பெறப்படும் முதுநிலைப் படிப்புகளும், கல்லூரிக்குச் சென்று பெறப்படும் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு இணையானது. அரசுப் பணிகளுக்கும் இந்த தொலைநிலைக் கல்வித் தகுதிகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் என யுஜிசி அறிவித்துள்ளது.
 எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படப்புக்கான நடைமுறை என்ன? அந்த வகையில், ஏஐசிடிஇ வழிகாட்டுதலின்படி எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. படிப்புகளில் ஏதாவது ஒரு நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். தொலைநிலைக் கல்வி வழியில் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்சிஏ படிப்புகளுக்கும் இது பொருந்தும். அது மட்டுமின்றி ஏஐசிடிஇ.யின் அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும்.
 அவ்வாறு நடைமுறைகளைப் பின்பற்றப்படாமல் வழங்கப்படும் படிப்புகள் அங்கீகரிக்கப்படாது. இதனால், மாணவர்கள்தான் பாதிக்கப்படுவர் என்கின்றனர் பேராசிரியர்கள்.
 நடைமுறைகளைப் பின்பற்றாத பல்கலைக்கழகங்கள்: தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் இந்த நடைமுறையை முறையாகப் பின்பற்றுகிறது. தொலைநிலை கல்வி முறையில் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் நுழைவுத் தேர்வு மூலமே மாணவர்களைச் சேர்க்கிறது. ஆனால், சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் எந்தவொரு நுழைவுத் தேர்வும் நடத்தாமலேயே, வெறும் இளநிலை பட்டப் படிப்பு தகுதியின் அடிப்படையில் தொலைநிலை எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் மாணவர் சேர்க்கையை நடத்தி வருகின்றன.
 செல்லுமா? இவ்வாறு உரிய நடைமுறைகளைப் பின்பற்றாத கல்வி நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படும் படிப்புகளால் மாணவர்கள்தான் பாதிக்கப்படுவர் என்கின்றனர் பேராசிரியர்கள். இது குறித்து யுஜிசி முன்னாள் துணைத் தலைவர் தேவராஜ் மற்றும் சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கூறியது:
 தொலைநிலைக் கல்வி முறையில் நடத்தப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கு ஏஐசிடிஇ நடைமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். இது தொடர்பாக யுஜிசி சார்பில் பல்கலைக்கழகங்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னை பல்கலைக்கழகத்துக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது என்றனர்.
 இது குறித்து ஏஐசிடிஇ தலைவர் அனில் சஹஸ்ரபுத்தே "தினமணி'-க்கு அளித்த பேட்டி: மத்திய மற்றும் மாநில அரசுகளின் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்களும், உயர் தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களும் அவர்களாகவே தொலைநிலைக் கல்வி முறையில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளை தொடங்கி நடத்திக்கொள்ள அனுமதி உள்ளது.
 ஆனால், அந்தக் கல்வி நிறுவனங்கள் ஏஐசிடிஇ நடைமுறைகளையும், தர நிர்ணயத்தையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதாவது அனைத்துக் கல்வி நிறுவனங்களும் ஒரே சீரான நடைமுறையைப் பின்பற்ற வேண்டியது அவசியம். ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட நுழைவுத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.
 அது மட்டுமின்றி, இந்த கல்வி நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் யுஜிசி அனுமதியைப் பெறுவதற்கு முன்பாக, ஏஐசிடிஇ நடைமுறைகள் பின்பற்றப்படுவதற்கான உறுதிமொழிப் பத்திரத்தை ("அஃபிடவிட்') யுஜிசி-யிடம் தாக்கல் செய்வதும் கட்டாயம்.
 நடைமுறைகளை பின்பற்றாவிட்டால்... அவ்வாறு, ஏஐசிடிஇ நடைமுறைகள் பின்பற்றப்படாமல் தொலைநிலை எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகள் வழங்கப்படுவது தெரிய வந்தால், அதுதொடர்பாக ஆய்வு நடத்தி அனுமதியை ரத்து செய்யுமாறு யுஜிசி கேட்டுக்கொள்ளும்

புதிய பாடத் திட்டம் மூலம் கல்வி மேம்படும்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பாடத் திட்டம் மூலம் தமிழகத்தில் கல்வியின் தரம் மேம்படும் என்றார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
 கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் துறை, ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரியின் விளையாட்டுத் துறை மற்றும் பள்ளி கல்வித் துறை இணைந்து ஒசூரில் நடத்திய அம்மா விளையாட்டுப் போட்டிகளை ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியுடன் இணைந்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடக்கி வைத்தார்.
 போட்டிகளைத் தொடக்கிவைத்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியது:

 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2004-இல் விளையாட்டுத் துறைக்காக தனியாக பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் புதிய பாடத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 7 துணைவேந்தர்களைக் கொண்டு 8 மாதங்களில் புதிய பாடத் திட்டதை உருவாக்கியிருக்கிறோம்.
 9 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சீருடைகள் மாற்றப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு 1 முதல் 5 வரையும், 6 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சீருடைகள் மாற்றி வழங்கப்படும். நிகழாண்டு 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினிகள் வழங்கப்படும்.
 நிகழாண்டு 11 லட்சத்து 17 ஆயிரம் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்துள்ளார். அதன்படி, மாணவர்களுக்கு விரைவாக மிதிவண்டிகள் வழங்கப்படும். வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், பிளஸ் 2 பாடத் திட்டத்தில் தனித்திறன் பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 நிகழாண்டு 412 நீட் தேர்வு மையங்கள் மூலம் 3600 ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். 25 ஆயிரம் மாணவர்களைத் தேர்வு செய்து 500 பட்டயத் தணிக்கையாளர்கள் மூலம் பயிற்சி அளித்து, அதிக எண்ணிக்கையில் பட்டயத் தணிக்கையாளர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்

சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை பெற செப்.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் :

திருவாரூர் மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் சிறுபான்மையினர்களுக்கான கல்வி உதவித்தொகை பெற செப்.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தைச் சார்ந்த மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை அளிக்கப்படவுள்ளது.
அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2018-19 ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித் தொகையும், 11-ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை (ஐடிஐ, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப் படிப்பு, இளங்கலை, முதுகலைப் பட்டப் படிப்புகள் உட்பட) பயில்பவர்களுக்குப் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்குத் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை பெறுவதற்கு மத்திய அரசின் ‌w‌w‌w.‌s​c‌h‌o‌l​a‌r‌s‌h‌i‌p‌s.‌g‌o‌v.‌i‌n என்ற தேசிய கல்வி உதவித் தொகை இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அரசு பள்ளிக்கு வீடு வீடாக சென்று மாணவர்களைசேர்த்தேன்- தேசிய விருதுக்கு தேர்வான கோவை ஆசிரியர்:

அரசு பள்ளிக்கு வீடு வீடாக சென்று மாணவர்களை சேர்த்தேன்- தேசிய விருதுக்கு தேர்வான கோவை ஆசிரியர்அரசு தொடக்க பள்ளிக்காக வீடு வீடாக சென்று மாணவர்களைசேர்த்தேன் என தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான கோவை ஆசிரியர் ஸதி பேட்டியளித்துள்ளார்.


நாடு முழுவதும் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு வழங்கி கவுர வித்து வருகிறது.கடந்த ஆண்டு தமிழகத்தை சேர்ந்த 22 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டு நல்லாசிரியர் விருது எண்ணிக்கையை மத்திய அரசு குறைத்தது. தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆசிரியர்கள் இணையதளம் மூலம் நல்லாசிரியர் விருதுக்கு விணப்பித்தனர். அவர்களின் சேவை அடிப்படையில் தமிழகத்தில் இருந்து 6 பேர் மட்டுமே தேசிய நல்லாசிரியர் விருதுக்கான நேர்காணலுக்கு மாநில அரசு பரிந்துரை செய்தது.

இதில் கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும்ஆர்.ஸதி என்பவர் மட்டும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.விருதுகுறித்து தலைமை ஆசிரியை ஆர்.ஸதி கூறியதாவது:-நான் 23 ஆண்டுகளாக வரலாற்று ஆசிரியராக பணி புரிகிறேன். கடந்த 2009-ம் ஆண்டு பணி உயர்வு பெற்று மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். நான் இங்கு வந்த போது 146 மாணவ, மாணவிகள் மட்டும் படித்து வந்தனர். எனவே மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தெரு தெருவாக சென்று பெற்றோர்களை சந்தித்து அரசு சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், கல்வி கற்பதன் பயன் ஆகியவற்றை எடுத்துக் கூறினேன்.இதனால் மாணவர் சேர்க்கை அதிகரித்தது.

தற்போது எங்கள்பள்ளியில் 270 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த ஆண்டு முதல் டேப்லெட் மூலம் மாணவர்களுக்கு எளிதில் புரியும்படி பாடம் நடத்தப்படுகிறது. தனியார்பள்ளிகளுக்கு நிகராக இப்பள்ளியில் பல்வேறு வசதிகளை செய்து, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தி வருகிறேன்.இந்த பள்ளி கோவை மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு 2016-ம் ஆண்டு கோவை மாவட்ட கலெக்டரிடம் விருது பெற்றேன். இதே பள்ளிக்கு தமிழக அரசு கடந்த 2017-ம் ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது அறிவித்தது.மலுமிச்சம்பட்டி ஊராட்சியை ‘திறந்த வெளியில் மலம் கழிப்பிடமற்ற ஊராட்சியாக’ மாற்ற இப்பள்ளி மாணவர்கள் பெரும் பங்காற்றினர்.

இதற்காக 10 மாணவர்களுக்கும், எனக்கும் இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று மாவட்ட கலெக்டர் விருது வழங்கி பாராட்டினார். இது போன்ற பல்வேறு அம்சங்களை பார்த்து தேசிய நல்லாசிரியர் விருது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விருது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. இது போன்ற விருதுகள் ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அமையும்.

இந்த விருதை அனைத்து ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.மாணவர்களுக்கு ஒழுக்கம் தான் முக்கியம். ஆரம்ப கல்வியுடன் மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும் கற்றுத் தருகிறோம். நாங்கள் சமூக நலன் சார்ந்த பணிகளிலும் மாணவர்களை ஈடுபடுத்தி வருகிறோம். அனைத்து தரப்பினரும் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நல்லாசிரியர் விருதுக்கு கடும் கட்டுப்பாடு சிபாரிசுக்கு அடிபணியாதீர் என அறிவுரை!

தமிழக நல்லாசிரியர் விருதுக்கும், மத்திய அரசை போல, முழுமையாக விசாரணை நடத்தி, தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும்; சிபாரிசுக்கு அடி பணியக்கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி, ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5, நாடு முழுவதும், ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக, மத்திய அரசின் சார்பில்,ஆசிரியர்களுக்கு தேசிய விருதும், மாநில அரசுகளின் சார்பில், நல்லாசிரியர் விருதும் வழங்கப்படுகிறது. கடந்த, 25 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசியல் மற்றும் பணபலம் உள்ளிட்ட செல்வாக்கு பெற்றவர்களுக்கே விருதுகள் கிடைத்தன. தகுதியான ஆசிரியர்களுக்கு விருது கிடைப்பது அரிதாக இருந்தது. ஆனால், 2017 - 18ம் கல்வி ஆண்டில், தமிழகத்தில் நல்லாசிரியர் விருதுக்கு, ஓரளவு தகுதியானவர்களே தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு மத்திய அரசின் நல்லாசிரியர் விருதுக்கு, கோவையைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை சதி மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழகத்துக்கு, ஆறு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டாலும், மத்திய அரசின் தேர்வுக்குழு, கிடுக்கிப்பிடி நிபந்தனைகளை பின்பற்றியதால், ஒருவர் மட்டுமே தேர்வாகியுள்ளார்.

இதேபோல, தமிழக நல்லாசிரியர் விருதுதேர்விலும், கவனமாக செயல்பட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மொத்தம், 369 விருதுகள் வழங்க முடிவு செய்தாலும், தகுதியானவர்கள் கிடைக்கவில்லை என்பதற்காக, நிபந்தனைகளை தளர்த்தி, தகுதி இல்லாதவர்களை தேர்வு செய்யக்கூடாது என, கமிட்டி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளின்சிபாரிசுகளை ஏற்க கூடாது. குற்ற வழக்கு, குற்றச்சாட்டு, மாணவர்களின் அதிருப்திக்கு உள்ளானோர், கல்வி தரத்தை உயர்த்துவதில் ஆர்வம் காட்டாதோரையும் தேர்வு செய்யக்கூடாது என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

சிப் அடிப்படையிலான புதிய ATM கார்டுகளை பெற்றுக் கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு SBI அறிவித்துள்ளது.

ஏடிஎம் கார்டுகளை மாற்றிக் கொள்ள வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ அழைப்பு

இப்போது பயன்படுத்தி வரும் டெபிட், ஏடிஎம் கார்டுகளை கொடுத்துவிட்டு, 'சிப்' அடிப்படையிலான புதிய கார்டுகளை பெற்றுக் கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு பாரத் ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அறிவித்துள்ளது.
இதற்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது பயன்பாட்டில் உள்ள வங்கி அட்டைகள் காந்தப் பட்டை தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை 'ஸ்கிம்மர்' கருவி மூலம் நகல் எடுத்து மோசடியாளர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தடுப்பதற்காக கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த 'சிப்' அடிப்படையில் கார்டுகளை வழங்குமாறு ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது. இதனால், வங்கி அட்டை முறைகேடுகளை முழுமையாகத் தடுக்க முடியும்.

இந்நிலையில் இந்த பாதுகாப்பு அம்சத்தை முழுமையாக செயல்படுத்த எஸ்பிஐ முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக டுவிட்டரில் எஸ்பிஐ வெளியிட்டுள்ள பதிவில், 'அன்பார்ந்த வாடிக்கையாளர்களே, ஆர்பிஐ வழிகாட்டுதலின்படி நமது வங்கியின் டெபிட் மற்றும் ஏடிஎம் அட்டைகளை 'சிப்' தொழில்நுட்பத்தில் மாற்ற இருக்கிறோம். வாடிக்கையாளார்கள் தங்கள் அட்டைகளுக்கு பதிலாக புதிய அட்டைகளை மாற்றிக் கொள்ளலாம். இதற்கு எவ்வித கட்டணமும் கிடையாது. இதற்கு இந்த ஆண்டு இறுதி வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கிக் கிளைக்கு நேரில் சென்றும், நெட் பாங்கிங் மூலமும் புதிய அட்டையை பெற விண்ணப்பிக்கலாம்.

எஸ்பிஐ சார்பில் இதுவரை 28.9 கோடி டெபிட், ஏடிஎம் கார்டுகள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பகுதி ஏற்கெனவே சிப் தொழில்நுட்பத்தில் உள்ளது. இப்போது, அனைத்து கார்டுகளையும் சிப் தொழில்நுட்பத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

எஸ்பிஐ மட்டுமல்லாது அனைத்து வங்கிகளுமே, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய அட்டைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன.

மாணவர்கள் விளையாட்டு சார்பாக செல்லும்போது அவர்களுக்கு உணவுப்படி ரூபாய் 125+பயணப்படி வழங்க வேண்டும் ஆணை.

பள்ளி மாணவருக்கு கல்வி உபகரணம்

பள்ளி மாணவருக்கு கல்வி உபகரணம் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு, இலவச புத்தகம், கணித பாட உபகரணம், கலர் பென்சில், புத்தகப்பை, காலணி இலவசமாக வழங்கப்படுகிறது. நடப்பாண்டு, மாணவர் வருகை அடிப்படையில், அரசின் கல்வி உபகரண பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 1ம் வகுப்பு துவங்கி, பிளஸ் 2 வரை படிக்கும், 72 லட்சத்து, 55 ஆயிரம் மாணவ - மாணவி யருக்கு புத்தகப்பை; 1 - 10ம் வகுப்பு படிக்கும், 58 லட்சம் பேருக்கு காலணி; 3 - 5ம் வகுப்பு படிக்கும், 15 லட்சத்து, 15 ஆயிரம் பேருக்கு, கலர் பென்சில்; 6 - 10 வரை படிக்கும், 16 லட்சத்து, 16 ஆயிரம் மாணவ - மாணவியருக்கு, ஜியாமெட்ரி பாக்ஸ் வழங்க, கருத்துரு தயாரிக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், 'அரசு, உதவி பெறும் பள்ளி மாணவ - மாணவி யருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் பணி, அடுத்த இரு மாதங்களில் துவங்கும்' என்றனர்

IGNOU பல்கலையில் ஆக,31 வரை சேர்க்கை

இந்திரா காந்தி, தேசிய திறந்த நிலை பல்கலையில், வரும், 31ம் தேதி வரை, மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.'இக்னோ' எனப்படும், இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலையில், பட்டம், முதுநிலை பட்டப்படிப்பு, சான்றிதழ் மற்றும் டிப்ளமா படிப்புகள், தொலைநிலை கல்வியில் வழங்கப்படுகின்றன. நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, வரும், 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

விருப்பம் உள்ளவர்கள், சென்னை, வேப்பேரியில் உள்ள, இக்னோ மண்டல அலுவலகத்துக்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும், https://onlineadmission.ignou.ac.in/admission என்ற இணையதளம் வழியாகவும், விண்ணப்பம் அனுப்பலாம் என, இக்னோ தெரிவித்துள்ளது.

EMIS பதிவு, 31ம் தேதி கடைசி

EMIS பதிவு, 31ம் தேதி கடைசி அரசு உதவி பெறும் பள்ளிகள், வரும், 31ம் தேதிக்குள், மாணவர்களின் விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்' என, 'கெடு' விதிக்கப்பட்டுள்ளது.அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பள்ளி வாரியாக மாணவர்களின் விபரங்கள், 'எமிஸ்' என்ற, கல்வி மேலாண்மை திட்டத்தில் சேகரிக்கப்படுகின்றன.

அரசு பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின், எமிஸ் மாணவர் சேர்க்கை விபரங்கள், பள்ளிக்கல்வி நிர்வாக இணையதளத்தில், ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்கள் விபரங்களை, வரும், 31ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என, பள்ளி கல்வித்துறை கெடு விதித்துள்ளது.குறிப்பாக, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில், மாணவர்களின் விபரங்கள், எமிஸ் பதிவு வழியாகவே எடுக்கப்படும் என்பதால், விபரங்களை தவறின்றி பதிவு செய்ய வேண்டும் என, பள்ளி தலைமை ஆசிரியர்களை, கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

25/8/18

உதயச்சந்திரன் அவர்களுக்கு கிடைத்த பரிசா ??

உதயச்சந்திரன் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டார்.

 உதயச்சந்திரன் ஒரு சாதாரண கல்வி அதிகாரி கிடையாது. தமிழ் இலக்கியத்தின் மீது தனி காதல் உடையவர். பள்ளி கல்வி மீது அளவு கடந்த அக்கறையும் ஆர்வமும் நிறைந்தவர். அதனால்தான் அவர் தமிழக பள்ளிக்கல்வி செயலாளராக நியமித்தபோதுகூட சாமான்ய மக்களும் சந்தோஷப்பட்டார்கள்.

ஒளிர்ந்த அண்ணா நூற்றாண்டு
அவர் பணியில் அமர்ந்தவுடன் பள்ளிக்கல்விதுறை செப்பனிடப்பட்டு, சீரமைக்கப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்டு, பிரகாசமாக மிளிரும் என எதிர்பார்ப்பு மேலோங்கி எழுந்தது. அதற்கேற்றாற்போல், ஆள், அரவம் இல்லாமல், இருண்டுபோய் கவனிப்பாரற்று கிடந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு ஒளி ஊட்டி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார் உதயச்சந்திரன்.

அன்பை வாரிகொண்டார்
காலங்காலமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களின் மனதில் தாழ்வு மனப்பான்மையையும், மதிப்பெண்கள்தான் அனைத்தையும் தீர்மானிக்கும் ஒன்று என்ற மாயையைம் உடைத்தெறிந்தார். புதிய புதிய அணுகுமுறைகள், வழிமுறைகள், எளிய நடை உரைநடைகளை உதயச்சந்திரன் பாடத்திட்டத்தில் புகுத்தினார். இதனால் அரசியல் பேதமின்றி ஒட்டுமொத்த தமிழக தலைவர்கள், பெரியவர்கள், குழந்தைகளின் ஆதரவையும் அன்பையும் வாரிக்கொண்டார்.

வெளிப்படைத்தன்மை
ஆனால் நல்லது என்று நடந்தால் அதை தாங்கி கொள்ள முடியாத நலம் விரும்பிகள் புராண காலத்திலிருந்தே உண்டு. அப்படி இருக்கும்போது உதயச்சந்திரனுக்கு எதிர்ப்புகளும், கண்டனங்களும் வராதா என்ன? சிலருக்கு உதயச்சந்திரனின் செயல்பாடுகள் எரிச்சலை தந்தன. வெளிப்படைத்தன்மை நடவடிக்கைகள் சிலருக்கு ஆத்திரத்தை மூட்டின.

நீதிமன்றத்தில் வழக்கு
அதனால் எந்நேரமும் இடமாற்றம், பணி மாற்றம் செய்யப்படலாம் என்ற கருத்தும் ஆழமாக வேரூன்றியே நிலவியது. அதற்கேற்றாற்போல் நீதிமன்றத்திலும் இது சம்பந்தமாக வழக்கு நடைபெற்றும் வந்தது. ஒத்திவைப்பு, விசாரணை என சம்பிரதாயங்களும் நீதிமன்றத்தில் நடந்து கொண்டுதான் இருந்தன.