யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

1/12/15

பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் டிசம்பர் 4-ஆம் தேதி முதல் விநியோகம்

பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் டிசம்பர் 4-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
 இவர்களுக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அக்டோபர் 28 முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இந்தச் சான்றிதழ் ஜனவரி 26-ஆம் தேதி வரை மட்டுமே செல்லத்தக்கது ஆகும்.
 இந்த நிலையில், அசல் மதிப்பெண் சான்றிதழ்களை டிசம்பர் 4 (வெள்ளிக்கிழமை) முதல் 11-ஆம் தேதி வரை மாணவர்கள் தேர்வு எழுதிய மையங்களில் பெற்றுக்கொள்ளலாம். பிறகு, சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில் இதைப் பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு முதல் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும்

நேற்று(30.11.2015 கேள்வி நேரத்தின்போது பல்வேறு கேள்விகளுக்கு மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி: நேரடியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் அளித்த பதில்களின் சுருக்கம்:  புதிய கல்விக் கொள்கை  மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி:  அடுத்த ஆண்டு முதல் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும். முன்னெப்போதும் இல்லாத வகையில் பல்துறை சார்ந்த ஆலோசனைகளுக்குப் பின் புதிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. மத்திய பாடத்திட்டத்துக்கும், மாநில அரசுகளின் பாடத்திட்டத்திட்டுக்கும் சிறந்த ஒத்துழைப்பை அடுத்த ஆண்டு முதல் காண முடியும். மத்திய பாடத்திட்டத்திலும், மாநில பாடத்திட்டங்களிலும் வெவ்வேறு பாடத்திட்ட முறைகள் பின்பற்றப்படுவது கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. 

பாடம் நடத்தவும், தேர்வு நடத்தவும், நாளில்லாமல் ஆசிரியர்கள் திணறி வரும் நிலையில் ஆசிரியர்களை, பயிற்சிக்கு வருமாறு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

பாடம் நடத்தவும், தேர்வு நடத்தவும், நாளில்லாமல் ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்; இந்நிலையில் ஆசிரியர்களை, ஒரு மாதம் பயிற்சிக்கு வருமாறு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 
பள்ளிக்கல்வித் துறையில், அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம், ஆசிரியர் கல்வியியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் சார்பில், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் தரப்படுகின்றன. இதற்கு, மத்திய அரசிடமிருந்து, பல கோடி ரூபாய் நிதி கிடைக்கிறது.கற்றல், கற்பித்தலை தொழில்நுட்ப ரீதியாக வழங்க வேண்டும் என்பது தான், மத்திய அரசின் நோக்கம். ஆனால் இது, தமிழகத்தில், பலனில்லாத பயிற்சி திட்டங்களாக மாறிவிட்டன.தமிழகத்தில், பள்ளிக்கல்வி இயக்குனரகம், தொடக்கக் கல்வி இயக்குனரகம் ஆகியவற்றுடன், பயிற்சி அளிக்கும் மூன்று இயக்குனரகங்களின் செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்படவில்லை. எனவே, பாடம் நடத்துவதைப் பார்க்க ஒரு துறை; பயிற்சியை நடத்த, வேறொரு துறை என, முரண்பாடாக உள்ளது.
தற்போது இரண்டாம் கல்விப் பருவத்தில், மழைக்கால விடுமுறை, பண்டிகை விடுமுறைகளுக்கு மத்தியில், அரையாண்டுத் தேர்வு நெருங்கியுள்ளது. பாடங்களை எப்படி முடிப்பது என, ஆசிரியர்கள் திணறி வருகின்றனர். இந்த நேரத்தில், ஒரு மாதம் முழுவதும் ஆசிரியர் பயிற்சிக்கான அட்டவணையை கல்வித்துறை அறிவித்துள்ளது. 
* பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் எடுக்க, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூலம், டிசம்பர் முதல் வாரத்தில் பயிற்சி
* நவ., 30, டிச., 1 மற்றும் 5ம் தேதிகளில், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, வாசித்தல், எழுதுதலுக்கு பயற்சி 
* நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, டிச., 12ல், குறுவள பயிற்சி, கணித பயிற்சி பெட்டகப் பயிற்சி, கணினி இயக்கம் மற்றும் கற்பித்தல் பயிற்சி. நவ., 30 முதல் டிச., 22ம் தேதி வரை நடக்கும் பயிற்சியில், ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பிஉள்ளது.- நமது நிருபர் -

கேட்' தேர்வு: பி.இ.,க்கள் ஆர்வம்

மத்திய அரசின், உயர் கல்வி நிறுவனங்களில், எம்.பி.ஏ., படிப்புகளில் சேர்வதற்கான 'கேட்' தேர்வில், சென்னையில் மட்டும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இவர்களில், பி.இ., எனப்படும், இன்ஜினியரிங் பட்டதாரிகள் மற்றும் மாணவர்கள் அதிகம்.


300 மையங்களில்...:வரும் கல்வி ஆண்டில், எம்.பி.ஏ., படிப்பதற்கான, கேட் எனப்படும், பொது மாணவர் சேர்க்கை தேர்வு,நாடு முழுவதும், 300 மையங் களில் நேற்று நடந்தது. 2.19 லட்சம் பேர் தேர்வுக்கு பதிவு செய்திருந்தனர். மூன்று தாள்கள், தலா ஒரு மணி நேர, 'ஆன்லைன்' தேர்வு நடந்தது.

தமிழகத்தில், சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நாமக்கல், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில், 30 தேர்வு மையங்களில், இந்த தேர்வு நடந்தது. சென்னையில், 10 ஆயிரம் பேர் உட்பட, தமிழகத்தில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

80 சதவீதம்இவர்களில், 80 சதவீதம் பேர், பி.இ., இறுதி ஆண்டில் படிக்கும் அல்லது கடந்த ஆண்டு, பி.இ., முடித்தவர்கள்.அதிகமானோர் எழுத காரணம்இந்த தேர்வு, 2007ல் துவங்கிய போது, 2.50 லட்சம் பேர் தேர்வு எழுதினர். பின், படிப்படியாகக் குறைந்தது. 2014ல், 1.96 லட்சம் பேர் பங்கேற்றனர்; இந்த ஆண்டு, 2.19 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

இதுகுறித்து, ஐ.எம்.எஸ்., எனப்படும், முன்னணி தனியார் பயிற்சி மையம் ஒன்றின், சென்னை மைய இயக்குனர் டோனி சேவியர் கூறுகையில், ''ஐ.ஐ.எம்., எண்ணிக்கை, 19 ஆக அதிகரித்துள்ளதால், இடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது; தேர்வும் கொஞ்சம் எளிதாகியுள்ளது. இன்ஜி., மாணவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் வருவதால், எம்.பி.ஏ., படிக்க விரும்புகின்றனர். இந்த விழிப்புணர்வு சமீப காலமாக அதிகரித்துள்ளது,'' என்றார்.

வணிகவியல் படிப்புக்குஇன்ஜினியர்கள் ஆசை:எம்.பி.ஏ., எனப்படும் மேலாண் நிர்வாக படிப்பு, வெறும் வணிகவியல் தொடர்பான படிப்பாக இருந்த நிலை மாறி, தற்போது அனைத்து பட்டதாரிகளுக்கும் தேவையான படிப்பாக மாறி விட்டது. பி.இ., - பி.டெக்., மாணவர்கள், எம்.பி.ஏ., படிக்க அதிக ஆர்வம் கொண்டுள்ளனர்.

அதிலும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும், உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்களில் படிக்க, இன்ஜி., பட்டதாரிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.எம்.பி.ஏ., படித்தால் தனியார் நிறுவனங்களில், ஆரம்பத்திலேயே அதிக சம்பளத்துடன் வேலை கிடைப்பதோடு, பதவி உயர்வுக்கும் வாய்ப்புகள் உள்ளதே காரணம்.

5 நாட்கள் பணி 10 ஆயிரம் சம்பளம் பகுதி நேர ஆசிரியர்கோரிக்கை.

வாரத்தில் ஐந்து முழு நாட்கள் வேலை, ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும், என பகுதி நேர ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் 2012 மார்ச்சில் 16,549 பகுதி நேர கலை, ஓவியம், உடற்பயிற்சி, தையல், இசை ஆசிரியர்கள் பணியில் சேர்க்கப்பட்டனர். வாரத்தில் மூன்று அரை நாட்கள் பணி, மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது. 


கடந்த ஆண்டு நவம்பர் முதல் ரூ.2ஆயிரம் சம்பள உயர்வு வழங்கப்பட்டது. மூன்று நாட்கள் பணி என்பதை ஐந்து நாட்கள் முழுநேர பணி, மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கவேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். பகுதிநேர ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது: வாரத்தில் 5 நாட்கள் வேலைக்கு வருகிறோம். ரூ.10 ஆயிரம் சம்பளம் தாருங்கள் என அரசிடம் கேட்டுள்ளோம். ஒரு சில வாரங்களில் இதற்கான முடிவு எட்டப்படும், என அதிகாரிகள் தரப்பில் கூறியுள்ளனர். சமீபத்தில் ஜாக்டோ சார்பில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது, பகுதி நேர ஆசிரியர்கள் முழு நேரம் பணியாற்றினர். அரசுக்கு ஆதரவாக, எந்த நிலையிலும் வேலை பார்க்க தயார் என அறிவித்தோம். ஆனால், அரசு எங்களுக்கு சம்பள உயர்வு அளிக்க தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது. பகுதி நேர ஆசிரியர்களுக்குரிய சம்பளம் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என கூறப்பட்டது. பழைய முறையில், தலைமை ஆசிரியர் மூலமே வழங்கப்படுகிறது. தற்போது பணிமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்பட்டது.

இதில் பெண் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கியதால், ஆண்கள் ஏற்கனவே பணியாற்றிய இடத்திலிருந்து கூடுதலாக100 கி.மீ., அலைய வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே பொதுப்பிரிவு கவுன்சிலிங்கை மறுபடியும் வைக்க வேண்டும், என்றார்.

பயமுறுத்தும் பருவ நிலை மாற்றங்கள்: கடும் வரட்சியும்,அதிதீவிர புயலும் தாக்க வாய்ப்பு

ஒழுங்கற்ற பருவ நிலை, பூமி வெப்பமயமாதல் உள்ளிட்ட இயற்கை சார்ந்த பல்வேறு மாற்றங்கள் உலகிற்கு பெரும் சவாலாக மாறிவருகின்றன.இவற்றை சமாளிப்பதற்காக சர்வதேச அளவிலான மாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் பருவ நிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் உள்ளிட்டவற்றால் மனித குலம் எதிர்கொள்ளும் பாதிப்புகள்என்ன என்பது குறித்து இப்போது பார்ப்போம்புவி வெப்ப மயமாதலால் கடுமையான வறட்சி பல பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் ஒரு நிகழ்வாக மாறும்.


இதனால் குடிநீர், உணவு பிரச்னைகள் ஏற்படும். குடிநீருக்காகவும் உணவுக்காகவும் மோதல்கள் அதிகரிக்கும். புவிவெப்பமயமாதலால் புயல்கள் உருவாவதும் அடிக்கடி ஏற்படும் நிகழ்வாக மாறும்.இந்த புயல்கள் அதிதீவிரமானதாக இருக்கும் என்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். கடுமையான புயல் மழையால் விவசாயம் பெரும் இழப்புகளை சந்திக்கும் என்பது சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளின் எச்சரிக்கையாக உள்ளது.இது தவிர வெப்பம் அதிகரித்து அது தொடர்பான நோய்களும் இறப்புகளும் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

ஏற்கனவே அதீத வெப்ப அலைகளால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் மரணமடைந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.நேரடியாக வெப்பத்தின் தாக்கம் தவிர தொற்று நோய்களும் பரவலாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.தொழிற்சாலைகள், வாகனங்கள் வெளியிடும் நச்சு வாயுக்களின் அளவை கட்டுப்படுத்த தவறினால் பூமிப்பந்தின் சராசரி வெப்ப நிலை 3 முதல் 10 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரும் விபரீதம் இந்த நூற்றாண்டு இறுதியில் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.வெப்ப மயமாதல் அதிகரிப்பால் துருவப் பகுதிகளில் உள்ள பனி உருகுவதாகவும் இதனால் கடல் நீர் மட்டம் கடுமையாக அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.கடந்த 100 ஆண்டுகளில் கடல் நீர் மட்டம் 4 முதல் 8 அங்குலம் அதிகரித்த நிலையில் அடுத்த 100 ஆண்டுகளில் இந்த உயர்வு 4 முதல் 36 அங்குலம் வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் சிறிய தீவுகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் வேறு இடங்களில் தஞ்சம் அடைய வேண்டி வரும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் தற்போதுள்ள உயிரினங்களில் நான்கில் ஒரு பகுதி இன்னும் 25 ஆண்டுகளில் இல்லாமல் போகும் ஆபத்து உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வறட்சி, வெயில், வெள்ளம், நீர் மட்டம் உயர்வு உள்ளிட்ட காரணங்களால் கோடிக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து செல்லவேண்டி வரும் என்றும் கூறப்படுகிறது.பருவ நிலை மாற்ற பிரச்னைகளால் மட்டும் கடந்த 2 ஆயிரமாவது ஆண்டு ஒன்றரை லட்சம் பேர் மரணமடைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது

CPS: பங்களிப்பு ஓய்வுதியத் திட்டத்தில் (CPS) உள்ளோர் கவனத்திற்கு...

*பங்களிப்பு ஓய்வுதியத் திட்டத்தில் (CPS) உள்ளோர் கவனத்திற்கு.
* 2013 மார்ச் மாதம் முதல் 2015 பிப்ரவரி மாதம் வரை உள்ள கணக்கீட்டுத்தாள்(Account slip) மாநிலப் புள்ளி விபர மையத்தால் (Govt Data centre) வெளியிடப்பட்டுள்ளது.


*இதில் உங்கள் சம்பளத்திலிருந்து மாதந்தோறும் பிடிக்கப்படும்(10%) தொகை , அகவிலைப்படி நிலுவை ,ஊக்க ஊதியஉயர்வு நிலுவை ஆகியன வரவு வைக்கப்படுகின்றது.
* அவ்வாறு வரவு வைப்பதில் ஏதேனும் விடுபட்டு இருந்தால் அதை Missing credit என்றும், அதற்கு உரிய Token Number & dateVoucher Number & date.Bill cross & Net amount,Total Cps Amount.இதனுடன் விடுபட்ட தொகையினையும் சேர்த்தால் தான் உங்கள் கணக்கில்சேரும்.கணக்கு விபரங்களை ஓப்பிட்டு பிழைகள் மற்றும் விடுபட்டு இருந்தால் சம்பந்தப்பட்ட PDO (Pay drawing officer ) யை தொடர்பு கொள்ளலாம்.

விடுமுறை .'' நாட்களுக்கு பதில், வேறு நாளில் பணிபுரிய வேண்டும், பணிபுரியாவிட்டால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்...

மழைக்கால விடுமுறையிலிருந்த பகுதி நேர ஆசிரியர்கள், அதற்குப் பதில், மாற்று நாட்களில் பணியாற்ற வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டமான,எஸ்.எஸ்.ஏ., இயக்குனரகக்கட்டுப்பாட்டில், கணினி, ஓவியம், உடற்கல்வி உட்பட, பலபகுதி நேர பாடப் பிரிவுகளுக்கு, 16 ஆயிரம் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


வாரத்துக்கு மூன்று வகுப்புகள் பாடம் எடுக்க வேண்டும். ஆனால், பெரும்பாலும் பள்ளிகளில், முழு நேர ஆசிரியர்களாகவே பணியாற்றுகின்றனர்.இவர்களுக்கு, ஒவ்வொரு மாதமும், பணிபுரியும் நாட்களுக்கு மட்டுமே சம்பளம்வழங்கப்படும்.மே மாத விடுமுறை காலத்தில் மாத சம்பளம் கிடையாது. தற்போது மழை காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில், 12 வேலை நாட்கள் வரை விடுமுறை விடப்பட்டது.''இந்த நாட்களுக்கு பதில், வேறு நாளில் பணிபுரிய வேண்டும். அவ்வாறு பணிபுரியாவிட்டால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்,''என, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.

PAY ORDER: 7979 BT POST NOV MONTH PAY ORDER

PAY ORDER: 7979 BT POST NOV MONTH PAY ORDER

Tamil Nadu Open University:DECEMBER 2015 Hall Ticket.

படிப்பை கைவிட்ட குழந்தைகள் விவரம் சேகரிக்கும் கல்வித்துறை

பள்ளிக்கு நீண்ட நாட்களாக வராத குழந்தைகள், படிப்பை பாதியில் கைவிட்ட குழந்தைகள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணியில், ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.அனைவருக்கும் கல்வி திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,), 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளும் கல்வி பயில வேண்டும் என்பது முக்கிய நோக்கமாக உள்ளது. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கல்வி கற்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. 


பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்த்தல், படிப்பை கைவிட்ட குழந்தைகளுக்குமீண்டும் கல்வி வாய்ப்பு அளித்தல், எஸ்.எஸ்.ஏ., முக்கிய பணி.தற்போது, அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விவரம், தற்போது படிக்கும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை, படிப்பை கைவிட்ட குழந்தைகள், நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத குழந்தைகள், அதற்கான காரணங்கள் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து அனுப்ப, பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. வகுப்பு ஆசிரியர் மூலம், இவ்விவரங்கள் சேகரிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து, எஸ்.எஸ்.ஏ., அலுவலர் மூலம் ஒவ்வொரு பகுதிக்கும் வீதி வீதியாக சென்று, படிப்பை கைவிட்ட குழந்தைகள், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது.

30/11/15

உதவி பேராசிரியர் தேர்வு பட்டதாரிகள் ஓராண்டு காத்திருப்பு

அரசு இன்ஜி., கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கு எழுத்து தேர்வு அறிவித்து ஓராண்டாகியும் தேர்வு நடத்தாததால், விண்ணப்பதாரர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தமிழகத்திலுள்ள இன்ஜி., மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில், காலியாக இருந்த, 139 உதவி பேராசிரியர் பணியிடத்தை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த, ஜூலையில் அறிவிப்பு வெளியிட்டது.முதுகலை பட்டத்துடன், எம்.பில்., ஸ்லெட், நெட், முடித்தவர்கள் என, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரிகள், விண்ணப்பித்திருந்தனர்.

இதற்கான எழுத்து தேர்வு, கடந்த, 2014, அக்டோபரில் நடத்தப்படும் என அறிவித்து, அதற்கான பாடத்திட்டமும் ஆன்லைனில் வெளியிட்டிருந்தனர். ஆனால், எம்.பில்., மட்டும் முடித்தவர்கள், உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கூடாது என, ஸ்லெட், நெட் முடித்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 
அதேசமயம், 2009க்கு முன், எம்.பில்., படிப்பு முடித்தவர்களுக்கு ஸ்லெட், நெட் தேவையில்லை என, மற்றொரு வழக்கும் தொடரப்பட்டது. தற்போது, ஓராண்டுக்கு மேல் ஆகியும் எழுத்து தேர்வு பற்றி எந்த அறிவிப்பு வெளியாகவில்லை.இதுகுறித்து, விண்ணப்பதாரர்கள் கூறும்போது, 'ஸ்லெட், நெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே, உதவி பேராசிரியாக பணியாற்ற முடியும்' என, நீதிமன்றம் தீர்ப்பு அளித்துவிட்டது. ஆனாலும், இன்னும் தேர்வு குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை,'என்றனர்.இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, 'சட்டப் பிரச்னைகள் தீர்க்கப்பட்டு, அரசிடமிருந்து அனுமதி வந்தால் தேர்வு அறிவிக்கப்படும்,' என்றனர்.

அரசுப் பள்ளி ஆசிரியரால் துயர் நீங்கிய கிராமம்; தற்கொலை எண்ணத்திலிருந்து தன்னம்பிக்கை பெற்ற மக்கள்

NMMS EXAM: INSTRUCTION & APPLICATION

கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிய உத்தரவு: அரசு கல்லூரி பேராசிரியர்கள் அதிருப்தி

போலி கல்விச் சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளனரா என்பதைக் கண்டறிவதற்காக, அரசுக் கல்லூரி பேராசிரியர்களின் அனைத்துச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிய உயர் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருப்பதோடு, இதைக் காரணம் காட்டி, தங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பணி மேம்பாட்டை கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகம் நிறுத்தி வைப்பதாகவும் பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

 ராஜஸ்தானில் போலி கல்விச்
 சான்றிதழ்கள் விநியோகம்: ராஜஸ்தான் அரசின் உயர் கல்வித் துறையிடமிருந்து அனைத்து மாநில உயர்கல்வித் துறைகளுக்கும், அனைத்துப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கும் கடிதம் ஒன்று அண்மையில் அனுப்பப்பட்டது.
 அதில், 2014 டிசம்பர் 17-ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட வழக்கு (எண்.15) 14 குறித்து ராஜஸ்தான் போலீஸார் விசாரணை நடத்தியபோது, ஜோத்பூர் தேசியப் பல்கலைக்கழகம் என்ற தனியார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் கல்வி மையத்திலிருந்து ஒரு மென்பொருளைப் பறிமுதல் செய்தனர். அதை ஆய்வு செய்தபோது, ஜோத்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் பெயரில் ஏராளமான போலியான கல்விச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
 இந்தப் போலிச் சான்றிதழ்கள் யார் யாருக்கு வழங்கப்பட்டுள்ளன என்ற பட்டியல், ராஜஸ்தான் கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 எனவே, இதன் மூலம் எவரேனும் பணியில் சேர்ந்துள்ளனரா என்பதை ஆய்வு செய்து, தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 சான்றிதழ்களை ஆய்வு செய்ய கல்லூரிகளின் முதல்வர்களுக்கு உத்தரவு: இந்தக் கடிதத்தின் நகலை கல்லூரி கல்வி இயக்குநர், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள தமிழக உயர் கல்வித் துறை துணைச் செயலர், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அண்மையில் அறிவுறுத்தியுள்ளார். இதனடிப்படையில், அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கும் கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 அதில், கல்லூரிகளில் உள்ள அமைச்சுப் பணியாளர்களின் கல்விச் சான்றிதழ்கள், உரிய முறையில் உண்மைத்தன்மை அறியப்பட்டு பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது. ஆனால், இதுநாள் வரை அரசுத் தேர்வுத் துறை, பல்கலைக்கழகங்கள் மூலம் பணியில் சேர்ந்தவர்களின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை அறியப்படாத நிலையினைத் தவிர்க்கும் பொருட்டு, இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்களின் அனைத்துக் கல்விச் சான்றிதழ்களையும் அந்தந்த அரசுத் தேர்வுத் துறை, பல்கலைக்கழகங்கள் மூலம் உண்மைத்தன்மையை அறிந்து இயக்குநர் அலுவலகத்துக்கு விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 கல்லூரிகளும் நடவடிக்கையில்
 தீவிரம்: இதனடிப்படையில், ஒவ்வொரு பேராசிரியரின் 10-ஆம் வகுப்பு சான்றிதழ் முதல், பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, எம்.ஃபில்., பிஎச்.டி. என அனைத்து கல்வித் தகுதியின் உண்மைத் தன்மையை அறியும் நடவடிக்கையை கல்லூரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. இதற்கு கல்லூரிப் பேராசிரியர்களிடையே கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. 
 அறிக்கையை அளிக்க அவகாசம்
 நீட்டிப்பு: இதுகுறித்து கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலக உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:
 ஏற்கெனவே பள்ளிகள் அளவில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்லூரிகளில் பேராசிரியர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதுநிலை பட்டப் படிப்பு, எம்.ஃபில்., பிஎச்.டி. தகுதிக்கான் சான்றிதழ்களுக்கான உண்மைத் தன்மை அறிக்கை மட்டுமே கேட்கப்பட்டிருக்கிறது. இதுதவிர்க்க முடியாதது. இந்த அறிக்கையைச் சமர்ப்பிக்க பேராசிரியர்களுக்கு இப்போது மேலும் கால அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது என்றார் அவர்.
"வற்புறுத்துவது ஏற்புடையது அல்ல'
 இதுகுறித்து தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்றப் பொதுச் செயலர் சிவராமன் கூறியதாவது:
 சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிவது, அந்தந்தத் தேர்வு வாரியத்தின் பணி. ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் தேர்வு செய்யப்படும்போதே, அனைத்துச் சான்றிதழ்களும் முழுமையாக ஆய்வு செய்யப்படுகின்றன. இந்த நிலையில், பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் பேராசிரியர்களின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என வற்புறுத்துவது ஏற்புடையது அல்ல. உண்மைத்தன்மை அறிக்கை பெற ஒவ்வொரு கல்வித் தகுதிக்கும் ரூ.600 முதல் ரூ.1000 வரை பல்கலைக்கழகத்துக்கு கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதை உயர் கல்வித் துறை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றார் அவர்

சென்னைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

சென்னைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில், 2015-16 கல்வியாண்டுக்கான பல்வேறு படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.அதன்படி, பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஒற்றைச் சாளர சேர்க்கை மையத்தை வருகிற டிசம்பர் 19-ஆம் தேதி வரை மாணவர்கள் நேரடியாகத் தொடர்புகொண்டு சேர்க்கை பெறலாம்.

இந்த மையம் சனி, ஞாயிறு உள்பட அனைத்து நாள்களும் செயல்படும். மேலும், விவரங்களுக்கு www.unom.ac.in, www.ideunom.ac.in ஆகிய இணையதளங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் என பல்கலைக்கழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி உதவித் தொகை தேர்வு(NMMS): விண்ணப்பங்களை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

தேசிய வருவாய் வழி- திறன் கல்வி உதவித் தொகை (என்.எம்.எம்.எஸ்.) தேர்வுக்கான விண்ணப்பங்களை திங்கள்கிழமை (நவ. 30) முதல் பதிவிறக்கம் செய்யலாம்.

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்காக, ஜனவரி 23-இல் இந்தத் தேர்வு நடைபெறும். விண்ணப்பங்களை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்திலிருந்து நவம்பர் 30 முதல் டிசம்பர் 11 வரை பதிவிறக்கம் செய்யலாம். கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு பொது தேர்வு செய்முறை தேர்வு உண்டு

'பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வில், அறிவியல் பாட செய்முறைத் தேர்வு, கண்டிப்பாக உண்டு' என, பள்ளிக்கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. சில ஆண்டுகளாக, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், பிளஸ் 2 மாணவர்களுக்கு நடத்தப்படுவது போல், அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு, 25 மதிப்பெண்கள் தனியாக வழங்கப்படுகின்றன. இத்தேர்வுக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியலுக்கு தலா, நான்கு செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்படும். பின், அவற்றில், தலா ஒரு பயிற்சி, செய்முறைத் தேர்வில் வினாவாக வரும்.


இதற்காக, செய்முறைத் தேர்வு பயிற்சி புத்தகம், கல்வித் துறையிலிருந்து வழங்கப்படும். இந்த ஆண்டு, பயிற்சிப் புத்தகம் வழங்கப்படாததால், செய்முறைத் தேர்வு உண்டா என, மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். இதுகுறித்து, நமது நாளிதழில், நவ., 28ல் செய்தி வெளியானது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை கண்ணப்பன் கூறியதாவது:செய்முறைத் தேர்வுக்கான பயிற்சி வினாக்கள், அறிவியல் பாடப் புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளன; இந்த ஆண்டு தனியாக புத்தகம் வழங்கப்படாது. அதிலுள்ள, 15 செய்முறைப் பயிற்சிகள் குறித்து, ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டும். பொதுத் தேர்வுக்கு கட்டாயம் செய்முறைத் தேர்வு உண்டு; எந்த மாற்றமும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

மழை விடுமுறை ,ஆசிரியர்களுக்கு கூடுதல் பணி

''மழைக்கால விடுமுறையிலிருந்த பகுதி நேர ஆசிரியர்கள், அதற்குப் பதில், மாற்று நாட்களில் பணியாற்ற வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டமான, எஸ்.எஸ்.ஏ., இயக்குனரகக் கட்டுப்பாட்டில், கணினி, ஓவியம், உடற்கல்வி உட்பட, பல பகுதி நேர பாடப் பிரிவுகளுக்கு, 16 ஆயிரம் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாரத்துக்கு மூன்று வகுப்புகள் பாடம் எடுக்க வேண்டும். ஆனால், பெரும்பாலும் பள்ளிகளில், முழு நேர ஆசிரியர்களாகவே பணியாற்றுகின்றனர்.


இவர்களுக்கு, ஒவ்வொரு மாதமும், பணிபுரியும் நாட்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்படும். மே மாத விடுமுறை காலத்தில் மாத சம்பளம் கிடையாது. தற்போது மழை காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில், 12 வேலை நாட்கள் வரை விடுமுறை விடப்பட்டது.

''இந்த நாட்களுக்கு பதில், வேறு நாளில் பணிபுரிய வேண்டும். அவ்வாறு பணிபுரியாவிட்டால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்,'' என, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.