யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/12/15

அரையாண்டு தேர்வு: அரசு தீவிர ஆலோசனை

வெள்ளம் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லுாரிகள், ஒரு மாதத்துக்கு பின், நேற்று முதல் செயல்பட துவங்கின.இம்மாவட்ட பள்ளிகளில், ஜனவரி முதல் வாரத்தில், அரையாண்டு தேர்வு நடக்கும் என, கன மழைக்கு முன் அரசு அறிவித்திருந்தது. தற்போது, அதை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்னும், 10 நாட்களில், மிலாது நபி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிறது. எனவே, அரையாண்டு தேர்வு மற்றும் கிறிஸ்துமஸ் கால விடுமுறை குறித்து, அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. இந்நிலையில், அரையாண்டு தேர்வு பற்றி, அரசு தரப்பில் தீவிர ஆலோசனை துவங்கி உள்ளது. இது குறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது:மாணவர்கள் பாதிக்கக் கூடாது; அதே நேரத்தில், தேர்வு இல்லை என்ற அலட்சியமும் வந்துவிடக் கூடாது. 
எனவே, கிறிஸ்துமஸ் முன்னிட்டு, 24ம் தேதி முதல், 27ம் தேதி வரை, நான்கு நாட்களுக்கு மட்டும் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை; மற்ற மாவட்டங்களுக்கு, 31 வரை விடுமுறை அளிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்.அரையாண்டு தேர்வை பொறுத்தவரை, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2க்கு குறுகிய கால கட்டத்தில், ஜனவரி முதல் வாரத்தில் நடத்தப்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.

ஐகோர்ட்டில் முறையீடு

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமதுநஸ்ருல்லா, தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் 
கவுல் தலைமையிலான, 'முதல் பெஞ்ச்' முன் நேற்று ஆஜராகி, மனு ஒன்றை சமர்ப்பித்தார். 
அதில் கூறியுள்ளதாவது:மழை காரணமாக, பள்ளிகளுக்கு ஒரு மாதத்துக்கும் மேல் விடுமுறை அறிவிக்கப்பட்டது. வெள்ள பாதிப்பில் இருந்து, மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. இதை கருதி, எல்.கே.ஜி., முதல், ௮ம் வகுப்பு வரை, அரையாண்டு தேர்வை ரத்து செய்ய வேண்டும். உயர் நீதிமன்றம், தாமாக விசாரணைக்கு எடுத்து, கல்வித் துறை 
அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை படித்த நீதிபதிகள், இது பற்றி, பிறகு முடிவெடுப்பதாக கூறினர்.

நேரடியாக இறுதி தேர்வு நடத்த கோரிக்கை: அரையாண்டு தேர்வு ரத்தாகுமா?

வடகிழக்கு பருவ மழையால், மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் அரையாண்டு தேர்வை ரத்து செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக்  கோரி, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியிடம் வக்கீல் ஒருவர் கடிதம் கொடுத்தார்.    இந்த கடிதத்தை மனுவாக கருதி விசாரிப்பது குறித்து  முடிவு செய்வதாக முதல் டிவிசன் பெஞ்ச் தெரிவித்துள்ளது. 


சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்கே.கவுல், புஷ்பா சத்தியநாராயணன்  ஆகியோர் நேற்று காலையில் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினர். அப்போது, மாற்றுத்திறனாளி வக்கீல் முகமது நசரூல்லா ஆஜராகி ஒரு  மனுவை நீதிபதிகளிடம் கொடுத்தார்.
அந்த மனுவில், “தமிழகத்தில்  கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் வெள்ளம் ஏற்பட்டது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,  கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக  
பாதிப்பட்டுள்ளன. குடிநீர், உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பெற  மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.  பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகள் ஒரு மாதங்களுக்கு மேலாக விடுமுறை  விடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களின் புத்தகங்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. பலரது புத்தகங்கள்  மழையில் நனைந்து, சிதைந்துள்ளது. எனவே, இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இயல்பு நிலைக்கு இன்னும் திரும்பாமல் உள்ளனர்.
இந்த சூழ்நிலையில், அரையாண்டு தேர்வை தமிழக அரசு நடத்தினால், அந்த மாணவர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும். எனவே, இந்த  
கல்வியாண்டில் பள்ளிக்கூட மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வை நடத்தக் கூடாது . நேரடியாக இறுதியாண்டு தேர்வை நடத்துமாறு தமிழக  அரசுக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
அதன் பின்னர், வக்கீல் முகமது நசரூல்லா, இந்த மனுவின் அடிப்படையில் இந்த கோர்ட் தாமாக முன்வந்து பொதுநல வழக்கு பதிவு செய்து விசாரித்து,  அரசுக்கு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கூறினார். இந்த மனுவை படித்து பார்த்த நீதிபதிகள், இந்த மனுவை வழக்காக  பதிவு செய்வது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று கூறினர்.

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஒரு நாளுக்கு அதிகமான ஊதியத்தையும் அளிக்கலாம் - தன்னார்வமாகவே இருக்க வேண்டும் : தமிழக அரசு அறிவிப்பு

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, ஒரு நாளைக்கு அதிகமான ஊதியத்தையும் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் அளிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் தங்களது ஊதியத்தை அளிப்பது தொடர்பாக, தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் வெளியிட்ட அறிவிப்பு: 


முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, தன்னார்வமாக ஒரு நாள் ஊதியத்தை அளிக்க விரும்பும் ஊழியர்கள், அதற்கான விருப்பத்தை எழுத்துப்பூர்வமாக சம்பந்தப்பட்ட சம்பளம் வழங்கும் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். சம்பளம் வழங்கும் அலுவலர், டிசம்பர் மாதத்துக்கான ஊதியத்தை 31 நாள்களைக் கொண்டு வகுத்து ஒரு நாள் ஊதியத்தை கணக்கிடுவார். 
இந்த ஒரு நாள் ஊதியத்துக்கான பட்டிலை சம்பந்தப்பட்ட கருவூல கணக்குத் துறை அதிகாரிகள், தயார் செய்வர். ஒரு நாள் ஊதியத்துக்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதி என்ற பெயருக்கு எடுக்க வேண்டும். மேலும், இந்தக் காசோலையுடன் ஊதியத்தை அளித்த ஊழியரின் பெயர், பதவி, பணிபுரியும் அலுவலகம் ஆகிய தகவல்கள் அடங்கிய பட்டியலைத் தயார் செய்ய வேண்டும். 
காசோலையுடன் கூடிய இந்தத் தகவல் அடங்கிய பட்டியலை சம்பந்தப்பட்ட துறையின் மாவட்ட அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். நிதி அளிக்கும் இந்தப் பணிக்கென துறைத் தலைமையால் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரு அதிகாரி ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 
அவர், காசோலையையும், ஊதியம் வழங்கிய ஊழியர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும், தலைமைச் செயலகத்தில் உள்ள நிதித் துறை இணைச் செயலாளருக்கு அனுப்பி வைப்பார். துறைத் தலைமை அலுவலகங்களிலும், தலைமைச் செயலகத்திலும் இதேபோன்ற வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
 100 சதவீத வருமான விலக்கு: முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி அளிப்போருக்கு 100 சதவீத வருமான வரி விலக்கு அளிக்கப்படும். மேலும், ஊதியத்தைத் தாண்டி தனிப்பட்ட முறையில் நிதி அளிக்கும் ஊழியர்களுக்கு அதற்கான ரசீது வழங்கப்படும். இதைக் கொண்டும் வரி விலக்கு பெறலாம். ஒரு நாளைக்கு மேலான ஊதியத்தையும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளித்திடலாம். டிசம்பர் மாதத்தில் மீதமுள்ள ஊதியம் அனைத்தும் வழக்கமான முறையில் ஊழியர்களுக்கு அளிக்கப்படும். இந்த உத்தரவுகள் உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், வாரியங்கள், கழகங்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசிடம் இருந்து மானியம் பெறும் கல்வி நிறுவனங்கள், தொகுப்பூதியம் பெறுவோருக்குப் பொருந்தும். 
தன்னார்வமாகவே இருக்க வேண்டும்: முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, நிதி அளிப்பதை ஒவ்வொரு ஊழியரும் தன்னார்வமாகவே அளிப்பதை, சம்பளம் வழங்கும் அதிகாரிகள்-அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் கேட்டுக் கொண்டுள்ளார்

பணியில் இருந்து கொண்டே ஒரே நேரத்தில் இரு படிப்பை முடித்த ஆசிரியைக்கு பதவி உயர்வு கிடையாது: உயர் நீதிமன்றம் உத்தரவு - தி இந்து

பணியில் தொடர்ந்தவாறு ஒரே நேரத்தில் பி.எட். மற்றும் முதுநிலை ஆங்கில இலக்கிய பட்டப்படிப்பை முடித்த ஆசிரியைக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க மறுத்தது சரிதான் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர், தனக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அவர் மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததால், அவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். 

அந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: 

மனுதாரர் இடைநிலை ஆசிரியராக 1986-ல் பணியில் சேர்ந்துள்ளார். 1988-ல் இளங் கலை ஆங்கில இலக்கியம் முடித்துள்ளார். பின்னர் 1989-ல் ஓராண்டு பி.எட். மற்றும் 1990-ல் இரண்டாண்டு முதுகலை ஆங்கில இலக்கியம் முடித்துள்ளார். இவ் விரண்டு படிப்புகளையும் அவர் ஆசிரியராக பணிபுரிந்து கொண்டே படித்துள்ளார். இது எப்படி முடிந்தது என்பது தெரியவில்லை. பொதுவாக பணியில் இருக்கும் ஒருவரால் ஒரு படிப்புக்கே நேரம் ஒதுக்க முடியாது. இவர் இரு படிப்புகளை படித்துள்ளார். அந்த கல்வி தரமானதாக இருக்குமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. 

பணியில் இருந்துகொண்டே ஒரே நேரத்தில் இரு படிப்புகளை முடித்த காரணத்தால் மனுதாரருக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க மறுத்து பள்ளிக் கல்வி இயக்குநர் கடந்த ஆண்டு உத்தரவிட்டுள்ளார். இதை எதிர்த்து மனுதாரர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிட்டதில் தவறில்லை. மேலும் மனுதாரர் யுஜிசி நிபுணர் குழுவின் தீர்மானத்தையும் மீறியுள்ளார். 

எனவே கூடுதல் கல்வித் தகுதி அடிப்படையில் தனக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிடக் கோரிய மனுதாரர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

14/12/15

இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான பகுதியில் முழு மதிப்பெண் பெற்றுவது எப்படி?

இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான பகுதியில் முழு மதிப்பெண் பெற்றுவது எப்படி?
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எப்படி படிக்க வேண்டும்?
-நெல்லை எம்.சண்முகசுந்தரம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (ஓய்வு)
1) முகவுரையை தயாரித்தவர் யார்? முக்கிய ஷரத்துக்கள் எவை? சட்டத்திருத்த மூலம் சேர்ந்த வாக்கியங்கள் எவை?
2) அடிப்படை உரிமைகள், கடமைகள், அரசுக்கொள்கை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் தொடர்பான திருத்தங்கள்- எந்தப் பகுதி? ஷரத்துகளின் எண் என்ன?
3) பார்லிமெண்ட் பற்றிய முழு விவரங்கள், லோக் சபா, ராஜ்ய சபா உறுப்பினர்களின் தகுதிகள், தேர்வுமுறை, எந்த ஷரத்துகளில் இவை சேர்க்கப்பட்டுள்ளன?
4) குடியரசு தலைவர், துணை குடியரசுத் தலைவர், தகுதிகள், சபாநாயகர், துணை சபாநாயகர்-தகுதிகள், தேர்வுமுறை, அதிகாரம், இப்பதவி வகித்தவர்கள் யார் யார்?
5) பார்லிமெண்ட் மூலம் அமைக்கப்படும் கமிட்டிகள், பொதுக்கணக்கு குழு, நிதிக்குழு பற்றிய விவரங்கள்.
6) மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரங்கள், சட்டத்திருத்தங்கள் விவரம்.
7) பிரதமர், மத்திய அமைச்சர்கள் பற்றிய முழு விவரங்கள், துறையின் பெயர்கள்.
8) மாநில கவர்னர், முதல்-அமைச்சர், சட்டசபை, மேல்சபை, தகுதி, அதிகாரம்.
9) உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், நீதிபதிகள் நியமனம், எல்லை வரம்பு, அனைத்துவகை அதிகாரங்கள், பதவியிலிருந்தவர்கள் பெயர், ரிட் மனுக்கள் (ஹேபியஸ் கார்பஸ், மேண்டமாஸ்).
10) சட்டத்திருத்தங்கள் (Amendments), முக்கிய திருத்தங்கள் பற்றிய முழுவிவரங்கள்.
11) 12 இணைப்பு பட்டியல்களில் (Schedules) என்னென்ன பொருள்கள் உள்ளன? புதிய மாநிலங்கள், தோற்றம்.
12) வடகிழக்கு எல்லை மாநிலங்கள் பற்றிய முழுவிவரம்.
13) ஒவ்வொரு மாநிலத்திலும் பேசப்படும் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம், பழங்குடியினர்களின் பெயர்கள்.
14) 7 யூனியன் பிரதேசங்கள் பற்றிய முழு விவரங்கள், லோக் சபா உறுப்பினர்கள், தலைநகரம்.
15) மத்திய-மாநில அரசு பணியாளர் தேர்வாணையங்கள், திட்டக்கமிஷன், இந்திய தேர்தல் ஆணையம்.
16) எந்தெந்த வெளிநாடுகளின் சட்டத்திலிருந்து என்னென்ன ஷரத்துகள் சேர்க்கப்பட்டன? என்ற முழு விவரம்.
17) நெருக்கடி நிலை, பஞ்சாயத்துராஜ், நகர்பாலிகா, ஐம்மு-காஷ்மீர், சிக்கிம் பற்றிய சிறப்பு அம்சங்கள்.
மேற்குறிப்பிட்ட இனங்களில் முழுக்கவனம் செலுத்தி தயாரிப்பு மேற்கொண்டால், இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான பகுதியில் முழு மதிப்பெண் பெற்றுவிடலாம்.

TNPSC DEPARTMENTAL EXAM TIMETABLE DEC 2015

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு 'இ - அட்மிட் கார்டு'

புதுடில்லி : 'சிவில் சர்வீஸ் பிரதான தேர்வு களில் பங்கேற்போர், 'இ - அட்மிட் கார்டு' எனப்படும், இணையவழி அனுமதி அட்டைகளை, பிரின்ட் செய்து, தேர்வின் போது எடுத்து வர வேண்டும்' என, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான - யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட பணிகளுக்கான, சிவில் சர்வீஸ் தேர்வுகள், யு.பி.எஸ்.சி.,யால் நடத்தப்படுகின்றன. இத்தேர்வுகள், முதல்நிலை, பிரதானம், நேர்முகம் என, மூன்று பிரிவுகளாக நடத்தப்படும். நாடு முழுவதும், இந்தாண்டு, 4.63 லட்சம் பேர், ஆக., 23ல் முதல்நிலை தேர்வு எழுதினர். இவர்களில், 15 ஆயிரம் பேர் வெற்றி பெற்றதாக, அக்., 12ல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்வர்கள், பிரதானத் தேர்வுகளில் பங்கேற்க உள்ளனர்.

இதுகுறித்து, யு.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிவிப்பு விவரம்: பிரதானத் தேர்வுகள், நாடு முழுவதும், 23 மையங்களில், டிச., 18ல் துவங்கி, 23ம் தேதி வரை நடக்கும். இத்தேர்வுகளில் பங்கேற்போருக்கு, காகிதத்திலான அனுமதி அட்டை வழங்கப்படாது. அனைவரின் அனுமதி அட்டைகளும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தேர்வில் பங்கேற்போர், தங்களுக்கான அனுமதி அட்டையை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பிரின்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த அனுமதி அட்டையை, தேர்வின்போது காண்பிக்க வேண்டும். பதிவிறக்கம் செய்யப்படும் அனுமதி அட்டையில் புகைப்படம் தெளிவாக இல்லாவிடில், தகுந்த அடையாள அட்டையும், புகைப்படமும், உடன் எடுத்து செல்ல வேண்டும். இவ்வாறு யு.பி.எஸ்.சி., அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது? மாணவர்கள் குழப்பம்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தேதியை அறிவிக்காததால், தேர்வு தாமதமாகுமோ என, மாணவர்கள் குழப்பம் அடைந்துஉள்ளனர்.
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், மார்ச்சில் பொதுத் தேர்வு நடக்கும். ஆனால், நடப்பு கல்வி ஆண்டில்,ஏப்ரலில் சட்டசபைக்கு தேர்தல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால், பிப்ரவரியில் இருந்து தேர்தல் சார்ந்த பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டியுள்ளது. எனவே, பொதுத் தேர்வை விரைவில் முடிக்க வேண்டும்.


இதற்காக, வினாத்தாள்களும் இறுதி செய்யப்பட்டு, விடைத்தாள் அச்சடிப்பு ஆயத்த பணி துவங்கியுள்ளது. முதற்கட்டமாக, பிப்., 29ல், பிளஸ் 2 தேர்வை துவங்க, தேர்வுத்துறை திட்ட
மிட்டிருந்தது.ஆனால், மழை வெள்ளத்தால் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு, வகுப்புகள் நடக்காமல், பாடங்கள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், பிப்ரவரியில் தேர்வு வைப்பதா, அல்லது மார்ச், முதல் வாரத்துக்கு பின் துவங்குவதா என, தேர்வுத்துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.இதற்காக, பிப்., 29, மார்ச், 2 மற்றும் மார்ச், 7 ஆகிய தேதிகளில், ஏதாவது, ஒரு நாளில், பிளஸ் 2 தேர்வை துவங்கலாம் என திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. பள்ளிகள் நாளை திறந்ததும், பொதுத் தேர்வு அறிவிப்பு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையே, வழக்கமாக, டிசம்பர், முதல் வாரமே பொதுத் தேர்வு அறிவிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு இன்னும் அறிவிப்பு வராததால், தேர்வு எப்போது என, மாணவர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் பெய்த மழையால், மாணவர்கள் தங்கள் பாட குறிப்புகளையும், புத்தகங்களையும் இழந்து விட்டனர். எனவே, அரையாண்டு தேர்வை ரத்து செய்து விட்டு, மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு முழுமையாக தயாராக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் குடும்பத்தினர் பலர், உடைமைகளை இழந்துள்ளனர். எனவே, அவர்களுக்கு, ஒரு மாத ஊதியத்தை, வட்டியில்லா முன் பணமாக வழங்க வேண்டும்.
இளமாறன், ஆசிரியர் சங்க கூட்டுக்குழு,
'ஜாக்டா' ஒருங்கிணைப்பாளர்

வகுப்பறையில் பூச்சி தொல்லை ஆசிரியர்கள் சோதிக்க உத்தரவு

சென்னை:'வகுப்பறையில் பூச்சிகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்த பிறகே, மாணவர்களை அனுமதிக்க வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று, பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன. இந்நிலையில், அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும், கல்வித்துறை அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.


அதன் விவரம்:
*கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி, மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி, கிணறு, ஆழ்துளை கிணறு போன்றவற்றை 'பிளீச்சிங் பவுடர்' மூலம் சுத்தம் செய்ய வேண்டும். நீரில் கிருமிகளை கொல்லும் குறிப்பிட்ட அளவு, 'குளோரின்' கலந்த பின் குடிக்க தர வேண்டும்
*பள்ளி வளாகங்களில், குப்பை இல்லாமல் அகற்ற வேண்டும். குப்பை தேங்கி கிடந்தால் கொசு மற்றும் ஈக்கள் உற்பத்தியாக வாய்ப்பு ஏற்படும்
*எலுமிச்சை மற்றும் குளோரினை, 4க்கு, 1 என்ற விகிதத்தில் கலந்து, பள்ளி வளாகத்தில் சுத்தம் செய்ய வேண்டும். வகுப்பறைகளை, 'பினாயில்' மூலம் சுத்தம் செய்ய வேண்டும்
*மின் சாதனங்கள், 'ஸ்விட்ச்'களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கட்டடத்தில் எங்காவது விரிசல் போன்ற பாதுகாப்பற்ற தன்மை இருந்தால், அந்தப் பகுதியை பயன்படுத்தக் கூடாது
*வெள்ளம் காரணமாக, ஊர்வன, பறப்பன வகை பூச்சிகள் வகுப்பறைகளில் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, வகுப்பறைகளுக்குள் சென்று, முழுமையாக ஆய்வு செய்து, அதன் பிறகே மாணவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பரிதவிக்கும் மாணவர்கள்: கைகொடுக்கும் நண்பர் குழுவினர்

காரைக்குடி:வெள்ளத்தால் பாடப்புத்தகங்கள், நோட்டுகளை இழந்து நிற்கும் மாணவர்களுக்கு கல்வி பணி செய்து வருகின்றனர், காரைக்குடி பொதுப்பணித்துறை இன்ஜினியர்கள், அலுவலர்கள்,நண்பர்கள் குழுவினர்.

சென்னை,கடலுாரை புரட்டிய வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள்,கரம் நீட்டும் முன்பே, கை கொடுத்து வருகின்றனர் காரைக்குடி தன்னார்வலர்கள். ஒவ்வொரு நாளும் லாரியில் எண்ணற்ற புத்தகங்கள், நோட்டுக்கள், துணி, உணவு, இதர பொருட்கள் என தங்களால் முடிந்தவற்றை அனுப்பி வருகின்றனர்.உணவு, உடைக்குரிய தட்டுப்பாடு நீங்கினாலும், பள்ளி திறக்கும் வேளையில், நோட்டு புத்தகங்களின் தேவை அவர்களை வாட்டி வதைக்கிறது. அந்நிலையை மாற்ற, நோட்டு, புத்தகம் தேவைப்படுவோருக்கு, ஒவ்வொரு நாளும் கூரியர் மூலம், காரைக்குடி பொதுப்பணித்துறை பொறியாளர்கள், அலுவலர்கள் அனுப்புகின்றனர்.

காரைக்குடி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுந்தர மூர்த்தி. இவரது மகள் சேதுராணி. சென்னையில் நிலத்தடி நீர் பிரிவில் பொறியாளராக உள்ளார். பிரசவத்துக்காக தந்தை வீட்டுக்கு வந்தார். சென்னை வெள்ளத்தை பார்த்து, கடந்த 7-ம் தேதி, தன்னால் இயன்ற உதவியை வழங்கலாம், என, 'வாட்ஸ் ஆப்' மூலம் புத்தகம் தேவைப்படுவோர் கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அவரது தந்தை எண் 94869 05884, கணவர் சரவணன் 81787 61625, அவரது சகோதரர் சேதுபதி 81486 89993 ஆகியோரின் எண்களை வழங்கியுள்ளார்.அன்று முதல் சென்னை, கடலுாரில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்பு கொண்டு புத்தகங்களை கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு கூரியரில் கடந்த 9-ம் தேதி முதல் புத்தகங்களை சுந்தரமூர்த்தி அவரது நண்பர்கள் அனுப்பி வருகின்றனர்.

சுந்தரமூர்த்தி கூறும்போது: எனது மகள் அனுப்பிய வாட்ஸ் ஆப் மூலம், நல்லது செய்ய வேண்டும் என கருதி, மற்றவர்களிடம் இது குறித்து கேட்டேன். உதவி செயற்பொறியாளர்கள் தாசூஸ், பொன்னன், பாண்டி, சங்கர், உதவியாளர் கோடை மலை, உதவி பொறியாளர் நவசக்தி, அஜீத்குமார், எனது மருமகன், மகன் உதவினர்.நடுத்தர, பின்தங்கிய ஏழைகளை தேர்வு செய்து, ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான புத்தகங்களை, அவர்களின் வீட்டு முகவரிக்கு தினந்தோறும் கூரியரில் அனுப்பி வருகிறோம். இதுவரை 200-க்கும் மேற்பட்டோருக்கு அனுப்பியுள்ளோம். மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சென்று புத்தகங்களை சேகரித்து வருகிறோம். .

பிளஸ் 1, பிளஸ் 2 புத்தகங்கள் கிடைப்பது இல்லை. பள்ளிகளை தொடர்பு கொண்டு கேட்டுள்ளோம். அவர்கள் பழைய மாணவர்களிடமும், தங்களிடம் உள்ள பழைய புத்தகங்களையும் தருவதாக கூறியுள்ளனர்.வித்யாகிரி பள்ளி முதல்வர், அவர் கோடவுனை திறந்து உங்களுக்கு தேவையான புத்தகங்களை எடுத்து கொள்ளுங்கள் எனக் கூறி, ரூ.25 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை வழங்கினார். கூரியரில் புத்தகங்கள் கொண்ட பார்சலுக்கு ரூ.15 மட்டுமே பெற்று உதவியுள்ளனர். இதுவரை ரூ.1.5 லட்சம் வரையிலான புத்தகங்களை அனுப்பியுள்ளோம், என்றார்.

சென்னை குரோம்பேட்டை அமுதா: என் மகன்களுக்கு கூரியரில் புத்தகம் அனுப்பி வைத்தனர். வாழ்க்கையில் இது மறக்க முடியாது. என்றும் நாங்கள் அவர்களுக்கு கடமை பட்டுள்ளோம், என்றார்.

பாடம் நடத்தாத ஆசிரியர்கள் விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்'

வேலுார்:சரிவர பாடம் நடத்தாத ஆசிரியர்கள், ஏழு பேரிடம் விளக்கம் கேட்டு, முதன்மைக் கல்வி அலுவலர், 'நோட்டீஸ்' கொடுத்துள்ளார்.

வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில், தமிழ், ஆங்கிலம் மற்றும் உருது மொழிக்கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது; 21 ஆசிரியர்கள் உள்ளனர்.கடந்த ஆண்டு பொதுத் தேர்வில், ௧௦ம் வகுப்பில், 76 சதவீதம், பிளஸ் 2வில், 48 சதவீதம் மட்டுமே, மாணவர்களின் தேர்ச்சி இருந்தது; வேலுார் மாவட்டத்திலேயே மிகக் குறைந்த தேர்ச்சி, இந்தப் பள்ளியில் தான்.சமீபத்தில், இந்த பள்ளிக்கு சென்ற முதன்மை கல்வி அலுவலர் பூபதி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்.


அப்போது, அந்த பள்ளியின், ஏழு ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சரிவர பாடங்களை நடத்தாதது தான், தோல்விக்கு காரணம் என, மாணவர்கள் மற்றும் பெற்றோர் கூறினர். இதையடுத்து, அந்த ஏழு ஆசிரியர்களுக்கும், 'சரி வர பாடம் நடத்தாதது ஏன்?' என கேட்டு, கல்வி அலுவலர், நோட்டீஸ் கொடுத்துள்ளார். பிற ஆசிரியர்களையும் கண்டித்த அலுவலர், 'வரும் பொதுத்தேர்வில், அதிக வெற்றி பெற பாடுபட வேண்டும்' என, அறிவுறுத்தினார்

12 நாட்களுக்கு பின் 13 பக்க ஆங்கில அறிக்கை

சென்னை:செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, அதிக அளவு தண்ணீர் திறந்தது தொடர்பாக,
12 நாட்களுக்கு பின், 13 பக்க ஆங்கில அறிக்கை மூலம், தமிழக அரசின் தலைமைச் செயலர் ஞானதேசிகன் விளக்கம் அளித்துள்ளார்.


தமிழகத்தில், நவ., மாத இறுதி முதல், இடைவிடாது மழை கொட்டித் தீர்த்தது. டிச., 1ம் தேதியும் விடாது மழை கொட்டியது. ஏரிகள் நிரம்பி, உபரி நீர் திறந்து விடப்பட்டதால், சென்னை வெள்ளக்காடாக மாறியது. அடுக்குமாடிகளில், முதல் தளம் வரை தண்ணீர் சென்றது; உயிர் இழப்புகளும் ஏற்பட்டன.

'பெரும் பாதிப்பு ஏற்பட்டதற்கு, சரியான திட்டமிடல் இன்றி, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, டிச., 1ம் தேதி நள்ளிரவு, வினாடிக்கு, 30 ஆயிரம் கன அடி நீர், திடீரென திறந்து விடப்பட்டதே காரணம்; அரசு முன்னெச்சரிக்கையாக இருந்திருந்தால், பெரும் வெள்ளப் பாதிப்பை தடுத்திருக்கலாம்' என, நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். பல்வேறு தரப்பிலும் தமிழக அரசுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், 12 நாட்களுக்கு பின், நேற்று இரவு, 7:00 மணிக்கு, தமிழக அரசின் தலைமைச் செயலர் ஞானதேசிகன், 13 பக்கம் கொண்ட, விளக்க அறிக்கை ஒன்றை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார்.

பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு மாணவர்களுக்கு இலவச புத்தகம் தயார்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில், 34 நாள் விடுமுறைக்கு பின், இன்று, பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

வெள்ளத்தில் புத்தகங்களை பறிகொடுத்த அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, புத்தகங்கள் மற்றும் சீருடைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. மாணவர்களுக்கு தொற்று நோய் பரவாமல் தடுக்க, மருத்துவ முகாமுக்கும், வெள்ள பாதிப்பிலிருந்து நீங்கி, புத்துணர்ச்சி பெற, 'கவுன்சிலிங்' வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


வெள்ளத்தில், மாணவர்கள் சீருடைகளை தொலைத்திருந்தால், சீருடை அணிந்து வர கட்டாயப்படுத்த வேண்டாம் என, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.அரசு கைவிரிப்பு: சென்னையில், வெள்ளத்தால் உருக்குலைந்து போன அசோக் நகர் பள்ளியை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி மற்றும் துறையின் முதன்மை செயலர் சபிதா பார்வையிட்டனர். 'வெள்ள சேதம் பற்றி கவலைப்படாமல் இருக்கும் கட்டமைப்பை பயன்படுத்தி பாடங்களை நடத்த வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டனர்.

34 நாள் விடுமுறைக்கு பின், பள்ளிகள் இன்று திறப்பு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில், 34 நாள் விடுமுறைக்கு பின், இன்று, பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 
வெள்ளத்தில் புத்தகங்களை பறிகொடுத்த அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, புத்தகங்கள் மற்றும் சீருடைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. மாணவர்களுக்கு தொற்று நோய் பரவாமல் தடுக்க, மருத்துவ முகாமுக்கும், வெள்ளப் பாதிப்பிலிருந்துநீங்கி, புத்துணர்ச்சி பெற, 'கவுன்சிலிங்' வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளத்தில், மாணவர்கள் சீருடைகளை தொலைத்திருந்தால், சீருடை அணிந்து வர கட்டாயப்படுத்த வேண்டாம் என, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.சென்னையில், வெள்ளத்தால் உருக்குலைந்து போன அசோக் நகர் பள்ளியை, பள்ளிக்கல்வித்
துறை அமைச்சர் வீரமணி மற்றும் துறையின் முதன்மை செயலர் சபிதா பார்வையிட்டனர்.

'வெள்ளச் சேதம் :பற்றி கவலைப்படாமல், இருக்கும் கட்டமைப்பை பயன்படுத்தி, பாடங்களை நடத்த வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டனர்.

NMMS EXAM - 2016

ரயில் டிக்கெட் ரத்து செய்ய '139' எண்ணில் அழைக்கலாம்

ரயில் பயணத்துக்கு சிறிது நேரத்துக்கு முன், '139' என்ற எண்ணுக்கு டயல்செய்து, டிக்கெட்டை ரத்து செய்யும் முறை, புத்தாண்டில் அமலுக்கு வருகிறது.ரயில் புறப்படும் முன், முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும் எனில், ரயில் நிலையத்துக்கு செல்வது அவசியம். இல்லையெனில், கட்டண தொகையில் பாதி பிடித்தம் செய்யப்படும். 


ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன், டிக்கெட்டை ரத்து செய்வதற்கான கட்டணத்தை, நவ.,12ல் ரயில்வே வாரியம் இருமடங்காக உயர்த்தியது. அனைத்து வகுப்பு டிக்கெட்களுக்கும், இது அமல்படுத்தப்பட்டது. அதாவது, ரயில்புறப்படுவதற்கு, 48 மணிநேரத்துக்கு முன் டிக்கெட்டை ரத்து செய்யும்போது,இரண்டாம் வகுப்பு இருக்கை உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுக்கு ரத்து செய்யப்படும் தொகை, 30 இருந்து, 60 ரூபாயாக உயர்த்தப்பட்டது. மூன்றடுக்கு, 'ஏசி' பெட்டிகளுக்கான டிக்கெட்டுக்கு, பிடித்தம் செய்யப்படும்தொகை, 90லிருந்து, 180 ஆகவும் உயர்த்தப்பட்டது.இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளுக்கு இந்த தொகை, 60லிருந்து, 120 ரூபாயாகவும், இரண்டடுக்கு, 'ஏசி' பெட்டிகளுக்கு, 100லிருந்து, 200- ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், புத்தாண்டு முதல், ரயில் டிக்கெட் ரத்து செய்வதற்கு புதிய வசதி அமல்படுத்தப்படுகிறது.

அதன்படி, '139' என்ற ரயில்வே, 'ஹெல்ப்லைன்' எண்ணை தொடர்பு கொண்டு, டிக்கெட் பதிவு செய்யும் போது அளித்த மொபைல் போன் எண்ணை கூற வேண்டும். அதன் பின், மொபைல் எண்ணில், அனுப்பப்பட்ட, 'ஒன் டைம் பாஸ்வேர்டை' விசாரணை அதிகாரி அல்லது கணிணிமயமாக்கப்பட்ட விசாரணையில் கூறவேண்டும். இதையடுத்து, டிக்கெட் ரத்தாகும். பின், ரயில் நிலைய கவுன்ட்டருக்கு சென்று டிக்கெட்டை காட்டி, மீதமுள்ள கட்டண தொகையை பெறலாம். இந்த வசதி, 2016, ஜன. 26 முதல் அமலுக்கு வருகிறது.

போலியோ முகாம் 2016க்கு தள்ளிவைப்பு

தமிழகத்தில், மழை வெள்ள பாதிப்பால், டிசம்பர் மாதம் நடத்த வேண்டிய, போலியோ சொட்டு மருந்து முகாம், ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும், போலியோ நோயை ஒழிக்கும் வகையில், ஆண்டு தோறும், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுவது வழக்கம்.


ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர், ஜனவரி மாதத்தில், இம்முகாம் நடக்கும். தமிழகத்தில், இரண்டு கட்டமாக நடக்கும் முகாம்களில், மாநிலம் முழுவதும் உள்ள, 2.50 கோடி குழந்தைகளுக்கு, 46 ஆயிரம் மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்படும்.சமீபத்தில், பெய்த தொடர் மழை காரணமாக, பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள், இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு, இன்னும் ஒரு மாதமாகிவிடும். இந்த சூழ்நிலையில், முகாம் நடத்தினால், அவை வெற்றிகரமாக இருக்காது என்ற தகவல் அரசுக்கு சென்றது.

மத்திய சுகாதாரத்துறையிடம், போலியோ முகாமை, ஒரு மாதம் தள்ளிவைக்குமாறு, தமிழக சுகாதார அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதனடிப்படையில், ஜனவரி, 17ம் தேதியிலும், பிப்ரவரி, 21ம் தேதியிலும், போலியோ முகாம் நடத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை, மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

சட்டப்படிப்பு வயது வரம்பு உத்தரவு தலையிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு

சட்டப்படிப்பு படிப்பதற்கான வயது வரம்பை நீக்கும் உத்தரவில் தலையிட முடியாது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சட்டப்படிப்பின் தரத்தை உயர்த்த, தேசிய சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு, 2002-ல் அறிக்கை அளித்தது. இதையடுத்து, 2008ல் சட்டப் படிப்புக்கான விதிகளை, இந்திய பார் கவுன்சில் வரையறுத்தது. அதில், சட்டப்படிப்புக்கு முதன் முறையாக, நாடுதழுவிய அளவில், வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. 


மறுபரிசீலனை

இந்த வயது வரம்பை எதிர்த்து உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த மூன்று பேர் குழு, 'சட்டப் படிப்புக்கான வயது வரம்பு விதியைக் கட்டாயமாக அமல்படுத்த வேண்டும்' என, பரிந்துரை செய்தது.இந்நிலையில், சட்டப் படிப்புக்கான வயது வரம்பு விதியை மறுபரிசீலனை செய்ய, வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் தலைமையில், ஒரு நபர் குழுவை பார் கவுன்சில் அமைத்தது. இக்குழு சட்டப் படிப்புக்கான வயது வரம்பை அறவே நீக்கும்படி, 2013ல் பரிந்துரை செய்தது.இதையடுத்து, சட்டக் கல்விக்கான வயது வரம்பை நீக்கி, இந்திய பார் கவுன்சில்,2013 செப்டம்பரில் உத்தரவிட்டது.

வழக்கு தாக்கல்

இந்நிலையில், தமிழகத்தில், 2015 - 16ம் ஆண்டுக்கான சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை துவங்கியது.இதில், இந்திய பார் கவுன்சில் ஆணைப்படி, மூன்றாண்டு சட்டப் படிப்பில் சேர வயது வரம்பு இல்லை; 5 ஆண்டு சட்டப் படிப்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு மட்டும் வயது வரம்பு இல்லை என்றும், மற்ற இனத்தவருக்கு, 21 வயது என்றும் நிர்ணயிக்கப்பட்டு, தமிழக அரசு உத்தரவிட்டது.ஆனால், 'இந்த அறிவிப்பு உச்ச நீதிமன்றத்தின், மூன்று பேர் குழு தாக்கல் செய்த பரிந்துரைக்கு எதிரானது' என, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், பார் கவுன்சிலின் வயது வரம்பு தளர்வு உத்தரவை ரத்து செய்து, ஏற்கனவே இருந்த முறைப்படி, வயது வரம்பு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை, நீதிபதிகள் ஜே.எஸ்.கெஹார் மற்றும் ரோஹிண்டன் நாரிமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து, மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தது.

வங்கிகளுக்கு 4 நாள் தொடர் விடுமுறை

மிலாடி நபி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைகளை முன்னிட்டு, வங்கிகளுக்கு தொடர்விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வங்கி பணிகளை முன் கூட்டியே முடிக்க வேண்டிய நிலை, பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.டிச., 23ல், மிலாடி நபி; 25ல், கிறிஸ்துமஸ் பண்டிகைகள் வருகின்றன. 


26ல், நான்காவது சனிக்கிழமை விடுமுறை; 27ல், ஞாயிறு விடுமுறை என, வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது. இதற்கிடையே, 23ல் அறிவிக்கப்பட்டமிலாடி நபி, 24க்கு மாற்றுப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அப்படி மாற்றி அறிவித்தால், 24 முதல், 27 வரை, 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது.


இதுகுறித்து, கனரா வங்கி மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:'மிலாடி நபி விடுமுறை, டிச., 23' என, வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், இதுவரை மாற்றம் இல்லை. அதனால், 24ல், வங்கிகள் இயங்கும். 25 முதல் 27 வரை விடுமுறை. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர் பாதிப்பை தொடர்ந்து, தொடர் விடுமுறை ரத்தாக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மழை, வெள்ளம் பாதிப்பு காரணமாக விஏஓ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்படுமா?

டிஎன்பிஎஸ்சி கிராம நிர்வாக அலுவலர் பதவியில் காலியாக உள்ள 813 பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த நவம்பர்12ம் தேதி அறிவித்தது. அன்றைய தினம் முதல் டிஎன்பிஎஸ்சியின் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதி என்பதால் போட்டிப் போட்டு லட்சக்கணக்கில் விண்ணப்பித்தனர். 


இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் மக்களின்இயல்பு வாழ்க்கை கடந்த 20 நாட்களுக்கு மேலாக அடியோடு முடங்கியது. இதன் காரணமாக, வி.ஏ.ஓ. தேர்வுக்கு தயாராகி வந்த மாணவ, மாணவியரின் புத்தகங்கள், கடந்த கால வினா தாட்கள் ஆகியவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. தேர்வுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ளதால் அனைத்தையும் மீண்டும் திரட்டி தயாராவது என்பது சாத்தியமானது அல்ல. அதுமட்டுமின்றி, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தேர்வுக்கு தயாராவதைப் பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது. மழை வெள்ளத்தில் மாணவர்கள் கடந்த ஒரு மாதமாக அனுபவித்த துயரம் மற்றும் அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினம். மேலும், மழை பெய்த நேரத்தில் செல்போன், இன்டர்நெட் உள்ளிட்டவற்றின் சேவையும் அடியோடு துண்டிக்கப்பட்டது. தற்போது வரை இன்டர்நெட் சேவை மிகவும் மெதுவாகவே உள்ளது.

இதனால், தேர்வுக்கு விண்ணப்பிப்போர், தேர்வு எழுதுவோர் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், விஏஓ தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (14ம் தேதி) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, பிப்ரவரி 14ம் தேதி எழுத்து தேர்வும் நடைபெற உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ளதால் சான்றிதழ் உள்ளிட்டவற்றை மழையால் பாதிக்கப்பட்டவர்கள் புதிதாக வாங்குவது என்பது முடியாத காரியம். இதனால் அவர்கள் திண்டாடி வருகின்றனர். எனவே, இத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும், விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க ேவண்டும் என்ற ேகாரிக்கை தற்போது எழுந்துள்ளது.