யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/6/17

ஓவியம் மூலம் கல்வி- கரூர் அரசு பள்ளி ஆசிரியை புரட்சி

கரூர்: தமிழகத்தில் தற்போது தனியார் பள்ளிக்கு நிகராக அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கருர் அருகே அரசு பள்ளியில் ஆசிரியை ஒருவர்
கற்பிக்கும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தியதால் அங்கு அதிகப்படியான மாணவர்கள் சேர ஆர்வம் காட்டுகின்றனர்.
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் இருக்கும் கோடங்கிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது.



அந்தப் பள்ளியில் பணிபுரியும்  ஆசிரியை  ஒருவர் சுவரில் ஓவியங்கள் வரைந்து, அதன்மூலம் பாடம் நடத்துகிறார்.   பள்ளியின் வகுப்பறைகளில் ஒழுக்கத்தைக் கற்பிக்கும் ஓவியம், மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் ஓவியம், அளவீடுகளைப் புரியவைக்கும் ஓவியம், அடுத்த வகுப்புக்குச் செல்வதை பட்டாம்பூச்சிகளின் மகிழ்ச்சியாக வெளிப்படுத்தும் ஓவியம் என ஐம்பதுக்கும் மேற்பட்ட ஓவியங்கள், கண்களையும் மனதையும் கொள்ளையடிக்கிறது. ''இதையெல்லாம் அதே பள்ளியின் ஆசிரியை ஒருவர் தான்'' என மாணவர்கள் உற்சாகமாக சொல்கின்றனர். அந்த அரசுப் பள்ளியின் ஆசிரியை பெயர் சாந்தி.  இது தொடர்பாக அவர் கூறும் போது,

"2000-ம் வருஷம் இந்தப் பள்ளிக்கு வந்தேன். அப்போது நாற்பது மணவர்களே இருந்தாங்க. பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கணும் என்கிற ஆர்வமே இல்லாததை கவனிச்சேன். பசங்களும் பள்ளிக்கூடம் வராமல் சுத்திட்டிருந்தங்க. பலரிடமும் போய் பேசி பார்த்தாச்சு. படிக்கும் சூழ்நிலை மீது அவங்களுக்கு ஆர்வத்தை உண்டாக்கினால், தேடி வருவாங்கனு நினைச்சேன். பாடங்களை அவங்களுக்குப் புரிகிற மாதிரி நடத்த என்ன செய்யலாம்னு யோசிச்சேன். எனக்கு ஓவியம் வரையறது ரொம்ப பிடிக்கும். அதனால், ஆரம்பத்தில் மாணவர்களுக்கு சாக்பீஸால் பாடங்களை ஓவியங்களாக வரைஞ்சு நடத்தினேன்.

முன்பைவிட அவங்ககிட்டே ஆர்வம் அதிகமானதையும் பாடங்களைப் புரிஞ்சுக்கிறதையும் உணர்ந்தேன். என் யோசனைக்கு வெற்றியடைஞ்சதை நினைச்சு உற்சாகமானேன்.   அனைவருக்கும் கல்வித் திட்டத்தை அரசு ஆரம்பிச்சபோது, இந்த மாவட்டத்தில் பத்து பள்ளிகளைத் தேர்வுசெஞ்சாங்க. அதில் எங்கள் பள்ளியும் ஒண்ணு. அது இன்னும் உற்சாகத்தைக் கொடுத்துச்சு. பெற்றோர்களிடம் பேசினேன். அவங்களே பெயின்ட், பிரஷ் எல்லாம் வாங்கிக் கொடுத்தாங்க.
சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வந்து அடுத்த வாரத்துக்கான பாடங்களை ஓவியங்களாக வரைஞ்சுடுவேன். பள்ளி நாட்களில் அதைவைத்து பாடங்களா நடத்துவேன். தொடர்ந்து நான்கு வருஷங்கள் இப்படி பாடங்களை ஓவியங்களா வரைஞ்சேன். என்னுடைய உழைப்புக்குச் சரியான பலன் கிடைக்க ஆரம்பிச்சது. மாணவர்களின் கல்வி கற்கும் திறனில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுச்சு. தலைமை ஆசிரியையும் உற்சாகப்படுத்தினாங்க. 

2015-ம் வருஷம் இந்தியா முழுக்க இருக்கும் பள்ளிகளுக்கிடையே 'டிசைன் ஃபார் சேஞ்ச்' என்ற புராஜெக்ட் நடந்துச்சு. பாடங்களை வித்தியாசமான முறையில் கற்பிப்பது, மாணவர்களுடன் சேர்ந்து பள்ளியைப் புதிய நிலைக்கு கொண்டுச் சென்றது.

பள்ளிகளுக்கு இடையிலான போட்டி அது. அதில் எங்கள் பள்ளியும் கலந்துக்கிட்டோம். பரிசு கிடைக்கலைன்னாலும், அது எங்களை வெளியுலகுக்கு இன்னும் பெரிய அளவில் அடையாளம் காட்டிச்சு. தன்னார்வமிக்க மனிதர்களால் பள்ளியை மேம்படுத்தினோம். தரையில் மார்பிள் பதிச்சோம். மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்க வீணான பொருள்களில் முகமூடி, அலங்கார பூஜாடிகள், பறவை கூடுகள் என தயாரிக்க சொல்லிக் கொடுத்தோம்.
இப்போ, பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்களும் எங்கள் பள்ளியைத் தேடிவந்து அவங்க பிள்ளைகளைச் சேர்க்க ஆரம்பிச்சிருக்காங்க. பாடக் கல்வியைத் தாண்டியும் பல விஷயங்களைச் சொல்லித்தர்றோம். நல்ல உணவு எது, கெட்ட உணவு என்று புரியவைக்கிறோம்.

விவசாயத்தின் மீது ஆர்வத்தை உண்டாக்க மண்புழு உரம் தயாரித்தல், ஆர்கானிக் முறை விவசாயத்தின் முக்கியத்துவம் என சொல்லிக்கொடுக்கிறோம். கல்வியில் மட்டுமின்றி, சமூக விஷயத்திலும் எங்கள் பள்ளி மாணவர்களை மேம்பட்டவர்களாக மாற்றிக் காட்டும் லட்சியத்தோடு எங்கள் பயணத்தைத் தொடர்ந்துட்டிருக்கோம்'' என்று புன்சிரிப்புடன் சொல்கிறார்
ஆசிரியை சாந்தி. 

மேலும் இது மட்டுமில்லாமல் பள்ளி வகுப்பறைக்கு செல்லும் முன் காலனிகளை ஒரு வரிசையாகவும், ஸ்கூல் பைகளை ஒருவரிசையாகவும் வைத்து பள்ளி மாணவ, மாணவிகளின் ஒழுக்கத்தையும் நன்கு விதமாக சொல்லித்தரும் அப்பள்ளியில் பேப்பர் கழிவுகளை கொண்டு முகமுடிகள், வித்யாசமான அலங்காரப் பொருட்கள் என்று சொல்லிக்கொண்டே கரூர் மாவட்டத்தின் முன்னோடி பள்ளியாகவே கோடங்கிப்பட்டி நடுநிலைபள்ளி நடுநிலையாகவே திகழ்கின்றது.



மேலும் அப்பள்ளியை அந்த ஊர் பொதுமக்கள் பல்வேறு ஊக்கங்களையும் அளித்து வருகின்றனர். இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் வந்து பள்ளிகளில் தினந்தோறும் படித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக