யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/11/17

தேர்தல் முடிவு: ஜோதிடர்கள் கருத்து வெளியிட தடை!!!

                                         
தேர்தல் முடிவுகள் தொடர்பாக, ஜோதிடர்களின் கருத்துக்களை 
வெளியிட, தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.

சட்டசபை தேர்தல்:

ஹிமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தல், இன்று(நவ.,9) நடக்கிறது. குஜராத் மாநிலத்தில், சட்டசபை தேர்தல், டிசம்பரில் நடக்கிறது. இரு மாநிலங்களிலும் ஓட்டு எண்ணிக்கை, டிச., 18ல் நடக்கிறது. குஜராத் மாநிலத்தில் ஓட்டுப்பதிவு முடியும் வரை, கருத்து கணிப்புகள் வெளியிட, தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.

தடை:

இந்நிலையில், தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தேர்தல் முடிவுகள் தொடர்பாக, ஜோதிடர்களின் கருத்தை வெளியிட கூடாது. இதை, பத்திரிகைகளும், 'டிவி' சேனல்களும், கடைபிடித்து, சுதந்திரமாக தேர்தல் நடக்க, ஒத்துழைக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது

வேலைவாய்ப்பு: டி.ஆர்.டி.ஓ-வில் பணி!

                                                   
போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் 
(சி.வி.ஆர்.டி.இ), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் (டி.ஆர்.டி.ஓ) இயங்கும் ஓர் ஆய்வகமாகும். இந்த ஆய்வகத்தில் காலியாக உள்ள அப்ரென்டீஸ் ட்ரெய்னீ பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: தமிழ்நாடு

பணியின் தன்மை: அப்ரென்டீஸ் ட்ரெய்னீ

பணியிடங்கள்: 146

கல்வித் தகுதி: ஐ.டி.ஐ. முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.30/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

கடைசித் தேதி: 26.11.2017

மேலும் விவரங்களுக்கு https://rac.gov.in/cgibin/2017/advtcvrdeapprentice/public/pdf/advtcvrdeapprentice.pdf?3c50455ecca8f627d24301550ed51407=1 என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்

சம்பள பட்டியல் சாப்ட்வேரில் ARREAR தயாரிப்பதற்கான OPTION வெளியிடப்பட்டு உள்ளது.நவம்பர் மாத சம்பள பட்டியல் உள்ளீடு கொடுத்து அக்டோபர் மாத ARREAR BILL தயார் செய்து கொள்ளலாம்!!!

                                          

நடைமுறைபடுத்த முடியவில்லையெனில் மக்கள் நலத்திட்டம் எதற்கு-உச்சநீதிமன்றம் கேள்வி

NTSE EXAM ON 18.11.2017 - REVISED HALL TICKET DOWNLOAD INSTRUCTIONS-REG

                                              

கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு அனேக 
இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.மேலும், தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை முதல் 12 ம் தேதி வரை தமிழகத்திலும், 13ம் தேதி தென் கடலோர ஆந்திராவிலும் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.

வக்கீல்களின் பள்ளி சான்றிதழ்களை ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு!!

வக்கீல்களின் பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை சரிபார்க்க சென்னை ஐகோர்ட் 
உத்தரவிட்டுள்ளது.

வக்கீல்கள் கட்டபஞ்சாயத்து செய்வது தொடர்பான புகார் குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு: அனைத்து வக்கீல்களின் பள்ளி, கல்லூரி சான்றிதழ்களையும் ஆய்வு செய்ய வேண்டும். அடிப்படை வசதி இல்லமல் இயங்கும் லெட்டர் பேட் சட்ட கல்லூரிகள் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளஸ் 2 படிக்காமல், திறந்த நிலை பல்கலை.,யில் படித்தவர்கள் லெட்டர் பேடு கல்லூரிகளில் பணம் கொடுத்து சட்ட பட்டத்தை விலைக்கு வாங்குகின்றனர். போலி வக்கீல்களை நீக்க புதிய வாக்காளர் பட்டியல் தயாரித்த பிறகே பார் கவுன்சில் தேர்தலை நடத்த வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

காற்று மாசு: உ.பி.யில் பள்ளிகளுக்கு விடுமுறை!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் காற்று மாசுபாடு காரணமாக 
நாளை (நவம்பர் 10) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு நகரங்களிலும் காற்றின் தரக் குறியீடு அபாயகரமாக மாறியுள்ளது. இது குறித்துப் பேசிய அதிகாரிகள், நொய்டாவில் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். காற்றின் தரக் குறியீடு மொரதாபாத்தில் 439, நொய்டாவில் 469, லக்னோவில் 430, ஆக்ராவில் 394, காஸியாபாத்தில் 372 என்ற அளவில் அதிகரித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஆஸ்துமா, இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் காலை நடைப் பயிற்சியைத் தவிர்க்க வேண்டும் என இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

டெல்லியைப் போல நொய்டாவிலும் நாளை (நவம்பர் 10) எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் காற்று மாசு காரணமாக முன்னே செல்லும் வாகனங்கள் தெரியாததால் கடந்த 24 மணி நேரத்தில், உத்தரப் பிரதேசத்தில் 17 பேர் சாலை விபத்துகளில் பலியாகியுள்ளனர். நேற்று (நவம்பர் 8) ஆக்ரா – நொய்டா யமுனா எக்ஸ்பிரஸ்வே சாலையில் ஒரே இடத்தில், 18 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று அடுத்தடுத்து மோதி விபத்திற்குள்ளாயின.

டெல்லியில் கடந்த சில தினங்களாகப் பல்வேறு பகுதிகளில் உள்ள காற்று மாசு கண்காணிப்பு மையங்களில் காற்று தரக் குறியீடு கடுமையாக அதிகரித்துள்ளது (448). காற்று மாசுபாடு அளவு மிக மோசமான நிலையை எட்டிவிட்டதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்திய மருத்துவக் கவுன்சில் டெல்லியில் சுகாதார அவசர நிலையைப் பிறப்பிக்குமாறு அரசுக்கு அறிவுறுத்தியது. இதனால், நவம்பர் 12 வரை வரை டெல்லியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

டெல்லி மட்டுமின்றி பஞ்சாப், ஹரியானா மற்றும் வடக்கு ராஜஸ்தான் பகுதிகளில் 25 மீட்டர் தொலைவில் உள்ள எதையும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் பனி மூட்டம் அதிகமாக இருப்பதால் 11ஆம் தேதி வரை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சாரணர் இயக்க நடவடிக்கைகளுக்கு ரூ.2 கோடி வங்கியில் டெபாசிட் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

சென்னை : சாரணர் இயக்கத்துக்கு நிர்நதர வைப்புத் தொகையாக ரூ.2 கோடி நிதி
ஒதுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறை மற்றும் சாரண, சாரணியர் இயக்கம் ஆகியவை இணைந்து, ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சி முகாம் தொடக்க விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் நடந்தது. இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ், பள்ளிக் கல்வி இயக்குநர் இளங்கோவன், தொடக்க கல்வித்துறை இயக்குநர் கார்மேகம் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பயிற்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:

தமிழகத்தில் சாரணர் அமைப்பு நல்ல முறையில் இயங்கி வருகிறது.

அதற்காக ஆண்டுதோறும் ரூ.15 லட்சம் ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த நிதி போதாது என்று கோரிக்கை ரூ.2 கோடியில் வைப்புத் தொகை வழங்கி அதிலிருந்து கிடைக்கும் வட்டியையும் சாரணர் இயக்கத்துக்கு பயன்படுத்தும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும். சாரணர் இயக்கத்துக்காக திருவல்லிக்கேணியில் ஒரு இடம் ஒப்பந்த அடிப்படையில் இருந்தது. அந்த ஒப்பந்தம் 1996ம் ஆண்டுக்கு பிறகு புதுப்பிக்கவில்லை. அந்த ஒப்பந்தம் மீண்டும் புதுப்பித்து சாரணர் இயக்கத்துக்கு திரும்பவும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், ஆலந்தூரில் இந்த இயக்கத்துக்காக 25 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு அதில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. அந்த இடம் தற்போது போலீசின் அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதை மீட்டு மீண்டும் சாரணர் இயக்கத்துக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தவிர,போட்டித் தேர்வுக்கு பயிற்சி பெறுவதற்காக இதுவரை 73 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். விரைவில் 412 மையங்களில் பயிற்சி தொடங்கும். பேரிடர் காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவிக்கும் வகையில் அதிகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மழையின் போது மாணவ மாணவியரின் புத்தகங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஆன்லைனில் பொறியியல் கலந்தாய்வு!

                                        
2018-19 ஆம் கல்வியாண்டு முதல் பொறியியல் கலந்தாய்வு
ஆன்லைனில் நடத்தப்படும் என்று தமிழக அரசு இன்று (நவம்பர் 9) அறிவித்துள்ளது.

அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகள் என 500 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் பொறியியல் படிப்புக்கான சுமார் 2 .77லட்சம் இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

அனைத்துக் கல்லூரிகளுக்கும் மொத்தமாக மாணவர் சேர்க்கை நடத்துவதால் அதிக பொருட்செலவு, மனிதவளம் தேவைப்படுவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது .இதுதவிர மாணவர்கள் பெற்றோர்கள் அலைச்சலுக்கு ஆளாகின்றனர். இதனைத் தடுக்கும் வகையில் அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு நடைபெற்ற எம்.இ, எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ கலந்தாய்வு ஆன்லைன் முறையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்றும் பொறியியல் சேர்க்கை செயலாளராக இருந்த இந்துமதி மாற்றப்பட்டு ரைமண்ட் உதிரியராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக அடுத்த ஆண்டு முதல் பொறியியல் கலந்தாய்வு ஆன்லைன் முறைக்கு மாற்றப்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாரப் பூர்வ அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. இதை உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பால் வெளியிட்டுள்ளார்.

பார் கவுன்சில் தேர்வு :1,025 வழக்கறிஞர்கள் இடைநீக்கம்!!!

பார் கவுன்சில் தேர்வு :1,025 வழக்கறிஞர்கள் இடைநீக்கம்!
அகில இந்திய பார் கவுன்சில் நடத்தும் 
வழக்கறிஞர்களுக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,025 தமிழக வழக்கறிஞர்களை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நேற்று (நவம்பர் 8) இடைநீக்கம் செய்தது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் சி.ராஜ்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வழக்கறிஞர்களாகப் பதிவு செய்பவர்கள் கண்டிப்பாக அகில இந்திய அளவில் நடைபெறும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 2010ஆம் ஆண்டு அகில இந்திய பார் கவுன்சில் விதி 9 முதல் 11 வரை மற்றும் பகுதி 6, பிரிவு 6ன் கீழ் விதிகள் உருவாக்கப்பட்டன. அதன் அடிப்படையில் இதுவரை 10 தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. புதிதாக பதிவு செய்யும் வழக்கறிஞர்கள், 2 ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 2015 ஜூலை 3ஆம் தேதி அகில இந்திய பார் கவுன்சில் தேர்வில் குறிப்பிட்ட காலத்துக்குள் வெற்றி பெறாதவர்களை உடனடியாக பணியிடைநீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு பார் கவுன்சில், வழக்கறிஞர்கள் தகுதி தேர்வு தேர்ச்சி குறித்து ஆய்வு செய்தது. ஆனால், 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் வழக்கறிஞர்களாகப் பதிவு செய்த 1,025 பேர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.எனவே இவர்கள் அனைவரும் வழக்கறிஞர்களாக தொழில் செய்யக்கூடாது என இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதை மீறி அவர்கள் நீதிமன்றங்களிலோ அல்லது தீர்ப்பாயங்களிலோ வழக்கறிஞர்களாக ஆஜராகினால் எவ்வித முன்னறிவிப்பின்றி நிரந்தரமாக அவர்களது வழக்கறிஞர் பதிவு நீக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் 30% வழக்கறிஞர்கள் போலியான சான்றிதழ் கொடுத்துள்ளதாகவும். போலி வழக்கறிஞர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அகில இந்திய பார் கவுன்சில் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, அனைத்து பார் கவுன்சில்களும் வழக்கறிஞர்களின் சான்றிதழ்களை வரும் டிசம்பர் மாதத்துக்குள் சரிபார்க்க வேண்டும். அதன்பிறகு தான் வாக்காளர் பட்டியல் தயார் செய்து பார் கவுன்சிலுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 50,000 வழக்கறிஞர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு தங்கள் சான்றிதழ்களை அனுப்பினர். சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்காக 2 மூத்த வழக்கறிஞர்கள் அடங்கிய 5 பேர் கொண்ட குழுவை அகில இந்திய பார் கவுன்சில் அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

9/11/17

எதிர்காலம் கேள்விக்குறி....! கம்ப்யூட்டர் பாடப்பிரிவு தொடங்கிய பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்வதில் அரசு மெத்தனம்

அரசு பள்ளி மாணவிகளுக்கு 10 மணி நேர கராத்தே பயிற்சி

அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் பத்துமணி நேரம் கராத்தே பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.மாணவிகளுக்கு பாலியல், சமூக விரோதிகளின் தொந்தரவுகள் அதிகரித்துள்ளன.
மாநில குற்றவியல் ஆவண காப்பகத்தின் பதிவேடுகளின் மூலம் பெறப்பட்ட விபரங்களின் அடிப்படையில், அரசு பள்ளி மாணவிகளில் 18 சதவீதம் பேர், பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பள்ளி மாணவிகளின் தைரியம், மனோதிடத்தை அதிகரிக்கவும் எதிரிகளிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள புதிய அணுகுமுறைகளை கற்றுக்கொடுக்கவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' சார்பில் அளிக்கப்பட்டு வந்த கராத்தே பயிற்சியை, பயிற்சி பெற்ற ஆசிரியர்களை வைத்து கற்றுத்தர முடிவு செய்யப்பட்டது.வாரத்திற்கு ஒன்றரை மணி நேரம் என இரு வகுப்புகளும், மாதத்திற்கு தலா 10 மணி நேர பயிற்சிகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வசந்தி கூறியதாவது:அந்தந்த மாவட்டங்களில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் வட்டாரத்திற்கு அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகள் 250 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு திறன்மிக்கபயிற்சியாளர்களை வைத்து கராத்தே பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது வளரிளம் மாணவிகள் மத்தியில் புதிய நம்பிக்கையை அளிக்கும், என்றார்.

பாழடைந்த பள்ளி கட்டிடங்கள் கணக்கெடுப்பு பணி தீவிரம்!!!

கோவை, நவ.8: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.
இதையொட்டி பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், மாநில எஸ்எஸ்ஏ உயரதிகாரிகள் அனைத்து மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்தனர். அதில், மாவட்டத்தில் அனைத்து அரசு பள்ளிகளில் சேதம், பாழடைந்த மற்றும் மழைக்கு தாக்குபிடிக்காமல் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்கள் குறித்து உடனடியாக கணக்கெடுப்பு செய்ய வேண்டும். அந்த கட்டிடங்களை போட்டோ எடுத்தும் அனுப்ப வேண்டும், என கூறப்பட்டது.

கோவை மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் உத்தரவின்பேரில் கோவை, திருப்பூர் என 22 ஒன்றியங்களில் வட்டார வளமைய அதிகாரிகள் பாழடைந்த கட்டிடங்களை கணக்கெடுப்பு செய்தும், போட்டோ எடுத்து அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டது.

இத்தகவல் தொடக்க, மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலர் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டு, பள்ளி தலைைம ஆசிரியர்கள் மூலம் பாழடைந்த கட்டிடங்கள், அதன் போட்டோ எடுத்து அனுப்பவும் உத்தரவிடப்பட்டது. அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பாழடைந்த பள்ளி கட்டிடங்கள் கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. பாழடைந்த கட்டிடங்கள் விரைவில் இடிக்கப்படும் என எஸ்எஸ்ஏ அலுவலர்கள் தெரிவித்தனர்.

ஆதாருடன் இணைக்காவிட்டல் மொபைல் சேவை துண்டிக்கப்படாது; தொலைத்தொடர்புத் துறை அதிரடி!!!

மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும் சேவை
துண்டிக்கப்படாது என தொலைத்தொடர்புத் துறை அறிவித்துள்ளது.

மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதையடுத்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தங்களது மொபைல் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க குறுஞ்செய்தி அனுப்பி வருகிறது.

மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கடைசி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மம்தா உள்ளிட்ட சில அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டு உள்ளது.


இந்நிலையில் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டல் சேவை துண்டிக்கப்படாது என தொலைத்தொடர்புத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தொலைத்தொடர்புத் துறை செயலாளர் அருணா சுந்தரராஜன் கூறியதாவது:-

மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

மொபைல் சேவையை துண்டிப்பது அரசின் நோக்கம் அல்ல என தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

89 பேருக்கு பணிநியம ஆணை!!

                                                      

ட்விட்டர் தந்த எக்ஸ்டிரா மைலேஜ்!

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு 
கண்டறியப்பட்ட ட்விட்டர் சமூக வலைதளங்களில் மிக முக்கியமான ஒன்றாகத் திகழ்ந்துவருகிறது. கடந்த 2013ஆம் ஆண்டு 100 மில்லியன் பயனர்களை அது எட்டியது. மற்ற சமூக வலைதளங்களைப் போல் இல்லாமல் பல்வேறு பிரபலங்களும் இந்த ட்விட்டர் வசதியைப் பயன்படுத்திவருவது இதன் சிறப்பம்சம்.

உதாரணமாக, கடந்த அமெரிக்க தேர்தலின்போது ட்விட்டர் வலைதளத்தில்தான் பல்வேறு கருத்து மோதல்கள் நடைபெற்றன. அதேபோல், அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது கருத்துக்களை டிவிட்டர் பக்கத்தில் அதிகமாகப் பதிவிடுவது வழக்கமாகிவிட்டது.

இந்த அப்ளிகேஷனைப் பொறுத்தவரை 140 எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற ஒரு கட்டுப்பாட்டினை ட்விட்டர் நிறுவனம் வகுத்திருந்தது. அதனால் பல்வேறு தகவல்கள் இதில் பதிவிட முடியவில்லை என்றும் வார்த்தைகளின் அளவினை அதிகரிக்க வேண்டும் என்றும் பல்வேறு பயனர்கள் கருத்து தெரிவித்தனர். அதற்கு செவிசாய்த்துள்ள டிவிட்டர் நிறுவனம் 140 எழுத்துக்களை 280ஆக உயர்த்தியுள்ளது. இது குறித்து டிவிட்டர் நிறுவனத்தின் அதிகாரி அலிஷா ரோஷன் தனது வலைப்பூவில் (Blog) பதிவிட்டுள்ளார்.

ஆனால் இன்னும் ஜப்பான், கொரியா, சைனா போன்ற மொழிகளைக் கொண்டு 140 எழுத்துக்கள் மட்டுமே பதிவிட முடியும் என்றும் அதற்கான புதிய அப்டேட் விரைவில் வெளியாகும் என்றும் தகவல் தெரிவித்திருந்தார்.

வேலைவாய்ப்பு: தேசிய திட்ட அமலாக்கத்துறையில் பணி!

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்பட்டுவரும்
தேசிய திட்ட அமலாக்கத்துறையில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 1,270

பணியின் தன்மை: உதவி பேராசிரியர்

சம்பளம்: ரூ.70,000/-

வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மூலம் தேர்ச்சி நடைபெறும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 11.12.2017 முதல் 15.12.2017

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/-

கடைசித் தேதி: 19.11.2017

மேலும் விவரங்களுக்கு http://www.npiu.nic.in/PDF/News/Advt.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

புதிய அப்டேட், பழைய ஆப்ஷன்!

பெரும்பாலானவர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்திவரும்
நிலையில், போனில் வாய்ஸ் கமான்ட் (வாய்மொழி உத்தரவு) மூலம் செயல்படும் கூகுள் அசிஸ்டன்ட் வசதியைக் கூகுள் நிறுவனம் வழங்கியிருந்தது. முதலில் இது சிறிய தேடல்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. அதன் பின்னர் இதன் மூலம் பல்வேறு செயல்களைச் செய்யும் வகையில் கூகுள் நிறுவனம் பல்வேறு அப்டேட்களை வெளியிட்டது.

புதிதாக கூகுள் நிறுவனம் வெளியிட்ட அப்டேட்டில் நாம் கேட்கும் பாடல்களின் முழு விவரங்களையும் தெரிந்துகொள்ளும் வசதி உள்ளது. 2014ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஷாசம் என்ற அப்ளிகேஷன் மூலம் இந்த வசதியை ஏற்கனவே அறிமுகம் செய்தது. அதேபோல் சோனி நிறுவனத்தின் அனைத்து மாடல்களிலும் டிராக் ஐடி என்ற அப்ளிகேஷன் இந்த வசதிக்காக வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு புதிய வசதிகளை வெளியிட்டுள்ள கூகுள் நிறுவனம், இந்த வசதியை மிகவும் தாமதமாக வெளியிட்டுள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்த பாடலின் சிறு பகுதியை பிளே செய்யும்பொழுது அதனை ஸ்மார்ட் போன் அருகினில் கொண்டு சென்றால் போதுமானது. அந்தப் பாடல் பெயர், அந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படம் முதலான விவரங்களை எளிதில் கண்டறிந்து பயனர்களுக்கு வழங்கும்.

பொறியாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் ஆப்பிள்!

உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் பொறியாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்களாக 
இந்தியர்கள் பணிபுரிகின்றனர். ஆனால், சர்வதேச அளவில் மிக முக்கிய நிறுவனங்கள் சில இந்தியக் கல்லூரிகளுக்கு வந்து நேரடியாகப் பணிகளுக்கு இதுவரையில் ஆட்களைத் தேர்வு செய்ததில்லை.

உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான ஆப்பிள் இந்த நிலையை முதன்முறையாகத் திருத்தியமைக்கவுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐஐடி) மாணவர்களை நேர்முகத்தேர்வின் மூலம் ஆப்பிள் நிறுவனம் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதாக ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஹைதராபாத் ஐஐடியின் வேலைவாய்ப்புப் பிரிவின் தலைவர் டி.வி.தேவி பிரசாத் ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “எந்தவிதமான பணிகளுக்கு ஆப்பிள் நிறுவனம் ஆட்களைத் தேர்வு செய்யப் போகிறது என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை. இது மாணவர்கள் தங்களது திறமைகளை மெய்ப்பிக்க உதவும்.

பணிகளுக்கான தேவையைப் பொறுத்தவரையில் வன்பொருள் பொறியாளர் பணிகளுக்கு இந்த ஆண்டு பல்வேறு நிறுவனங்களில் தேவை அதிகமாக உள்ளது. இன்டகிரேடட் சர்க்யூட், டிசைன் வெரிஃபிகேசன் போன்ற துறைகளில் திறமை உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. அதேபோல மொபைல் கம்யூனிகேஷனில் 2டி - 3டி கிராஃபிக்ஸ் சார்ந்த திறமை பெற்றவர்களுக்கும் சிறந்த வாய்ப்புகள் காத்திருக்கின்றன” என்றார்.

ஹைதராபாத் ஐஐடியில் டிசம்பரில் நடக்கவுள்ள வேலைவாய்ப்புத் தேர்வுக்கு அங்கு பயில்கின்ற பி.டெக்., எம்.டெக். மற்றும் எம்.எஸ்ஸி ஆராய்ச்சி மாணவர்கள் சுமார் 350 பேர் பதிவு செய்துள்ளனர். அதேபோல இந்த நேர்முகத் தேர்வில் ஆப்பிள் நிறுவனம் மட்டுமின்றி கூகுள், மைக்ரோசாஃப்ட், பிலிப்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்கின்றன.