யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

25/5/18

முதுநிலை மருத்துவம்; முதல்கட்ட கவுன்சிலிங் இன்று நிறைவு :

முதுநிலை மருத்துவ படிப்புக்கான முதல்கட்ட கவுன்சிலிங் இன்று(மே 24) நிறைவடைகிறது.
அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, முதுநிலை மருத்துவப் படிப்பில், 981 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார் மருத்துவமனையில் நடக்கிறது. இதை, தமிழக மருத்துவ கல்வி இயக்கம் நடத்துகிறது. இந்நிலையில் முதல்கட்ட கவுன்சிலிங் இன்றுடன் நிறைவடைகிறது. மே 25ல் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., எனப்படும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் துணை தேர்வுகள், துாத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


உயர்கல்விக்கு வழிகாட்டும் இணையதள நிகழ்ச்சி :

பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து வழிகாட்டும், கேள்வி - பதில் நிகழ்ச்சி, 'தினமலர்' இணையதளத்தில், நேரலையாக நடத்தப்படுகிறது. இதில், சந்தேகங்களை கேட்க விரும்புவோர், 500 117 711 என்ற எண்ணுக்கு, இன்று காலை, 10:30 மணி முதல், 12:30 மணி வரை அழைக்கலாம். மருத்துவ
சார் படிப்புகள் குறித்து, டாக்டர் கே.ஆர்.குறிஞ்சி பதில் அளிக்க உள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிக்கை....

சுற்றுச்சூழல் பாதுகாப்பு,  இயற்கை வளப்பாதுகாப்பு, மனித உயிர்கள் உயிர் வாழ உத்திரவாதம் ஆகியவை இந்திய அரசியல் சாசனத்தில் உத்திரவாதம் செய்யப்பட்டுள்ளது. இதை நிறைவேற்றுவதே மத்திய  மாநில அரசுகளின் கடமை. இந்த அரசியல் சாசன கடமைகளை அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று கோரியே  ஸ்டெர்லைட் சூழல் கேட்டுக்கு எதிராக மக்கள் கடந்த 100 நாட்களாக போராடி வந்தனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கழிவுகள் வழியாக உருவாகிய மாசு பல்வேறு தரப்பு மக்களையும் பெருமளவு பாதித்தமை ஆய்வுகள் மூலம் நிரூபணம் செய்யப்பட்டவை. இந்த சூழல் மாசுபாட்டு பயரங்கரவாதத்தை எதிர்த்தே  மக்கள் போராடி அரசுகள்  ஜனநாயக கடமையை நிறைவேற்றும் படி கோரிவந்தனர்.

போராட்டத்தின் போது தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் மக்களோடு இணைந்து நின்று தனது ஆதரவைத் தெரிவித்தது.. அத்தோடு மட்டுமின்றி கள ஆய்வு மேற்கொண்டு அதன் தொடர்ச்சியாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் சுற்றுச்சூழல் பாதிப்பையும் மக்கள் போராட்டங்களையும் கருத்தில் கொண்டு உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்றும் வலியுறுத்தியது..

மக்களின் போராட்டங்களையும் கருத்துகளையும்  உரிய வழிமுறையில் அணுகாமல் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூட்டின் மூலம் மக்களை கொன்று குவித்ததும்  தடியடி நடத்தி பலரை குற்றுயிரும் குலையுயிருமாக ஆக்கியது அறிவியலாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள  மக்கள் அறிவியல் இயக்கங்கள் இச்சம்பவத்திற்கு  எதிரான கண்ட குரல்களை நாடு முழுவதும் எழுப்பி வருகின்றன... அறிவியல்பூர்வமற்ற இந்த அணுகுமுறையை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

👉🏼காவல்துறை மற்றும் துணைஇராணுவம்  மூலம் அச்சுறுத்தி மக்களை  அடக்கி ஒடுக்க நினைப்பதை உடனடியாக தமிழக  அரசு கைவிட வேண்டும்...

👉🏼அரசியல் சாசனம் உத்திரவாதம் அளித்துள்ள உயிர்வாழும் உரிமை,  மாசற்ற சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளப்பாதுகாப்பு ஆகியவற்றை உத்திரவாதம் செய்ய வேண்டும்...

👉🏼உடனடியாக மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில்  காவல்படைகளை விலக்கி, நீதிபதிகள்/ சட்ட வல்லுநர்கள் கல்வியாளர்கள்  சமூக ஆர்வலர்கள்/அறிவியல் விஞ்ஞானிகள் ஆகியோரைக் கொண்ட குழுவை அமைத்து அமைதி பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக அமைதியை நிலைநாட்ட வேண்டும்....

👉🏼ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை அரசு கைவிடுவதோடு அபாயகரமான கழிவுகளை வெளியேற்றி வரும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

Flash News ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு!!

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஏப்ரல் 30, 2015ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான குரூப்-2வில் அடங்கிய நேர்முகத் தேர்வு பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. 
அதன்பின் இதற்கான முதன்மை எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 21, 2016 அன்று நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து நேர்காணல் 2018ம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெற்றது.
இருக்கும் 1094 காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு முதற்கட்ட கலந்தாய்வு 19/03/2018 முதல் 03/04/2018 வரையிலும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு 25/04/2018 அன்றும் நடைபெற்றது. இரண்டாம் கட்டக் கலந்தாய்வு முடிந்த பின்னரும் நிரப்பப்படாமல் இருக்கும் 48 பணியிடங்களுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு 29/05/2018 அன்று நடத்தப்படவுள்ளதாகத் தேர்வாணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.மூன்றாம் கட்ட கலந்தாய்விற்கு 1:5 என்கிற விகிதாச்சாரத்தில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டவர்களின் பதிவெண்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வு நடைபெறும் நாள், நேரம் போன்ற விவரங்கள் முறையே அழைப்புக் கடிதம், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தனித்தனியே விண்ணப்பதாரர்களுக்குத் தெரிவிக்கப்படும். அழைப்புக் குறிப்பாணையினை தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.யாருக்கு அனுமதியில்லை:
முதல் மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொண்டு வருவாய் உதவியாளர் பணியிடங்களுக்கான பணி ஒதிக்கீடு ஆணைப் பெற்றவர்கள் இந்த மூன்றாம் கட்ட கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். அதே போல் முதல் மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளாத விண்ணப்பதாரர்கள் மூன்றாம் கட்ட கலந்தாய்விற்கு அழைக்கப்படுவதில்லை.

அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்படுமா

                       



அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு பெற்றோர்களிடையே எழுந்துள்ளது.

கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு செய்து வருகிறது. சமச்சீர் கல்வி, ஸ்மார்ட் வகுப்பறைகள், புதிய பாடத் திட்டம் உருவாக்கம், நீட் தேர்வுக்கு பயிற்சி அரசு தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் மாணவர்களின் மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருப்பது, மாணவர்களின் மதிப்பெண்கள், மாணவர்களின் புகைப்படத்துடன் தனியார் பள்ளிகள் விளம்பரம் பிரசுரிக்கக் கூடாது என்பது போன்று பல்வேறு புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
அதேபோல பெரும்பாலான அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி கடந்த 2013 - 2014-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. முதல் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்பட்டு, ஆண்டுதோறும் படிப்படியாக 5-ஆம் வகுப்பு வரையில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டு முடிவடைந்துள்ளது. 
ஆனால் ஆங்கில வழிக்கல்வி கற்பிக்க அரசு தொடக்கப் பள்ளிகளில் தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. தமிழ் வழிக் கல்வியை போதிக்கும் ஆசிரியர்களே ஆங்கில வழிக் கல்வியையும் போதிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆங்கில வழிக்கல்வி மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகக் கூறி ஆங்கில வழிக் கல்வியை போதிக்க ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. 
அதனால் ஒரே ஆசிரியரே தமிழ், ஆங்கில வழிக் கல்வியை போதிக்க வேண்டியிருப்பதால் கல்வித் தரம் குறைய வாய்ப்புள்ளது.
தற்போது 5-ஆம் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வியை படித்து முடித்த மாணவர்கள் 2018 - 2019-ஆம் கல்வி ஆண்டில் 6-ஆம் வகுப்பு செல்ல இருக்கின்றனர். 
ஜூன் மாதத்தில் 6-ஆம் வகுப்பில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. 6-ஆம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வி போதிக்கப்படுமா என்ற சந்தேகம் பெற்றோர்களிடையே எழுந்துள்ளது. ஆனால் அதுகுறித்து தமிழக அரசின் கல்வித் துறையிடமிருந்து அறிவிப்போ, உத்தரவோ ஏதும் இதுவரை வரவில்லையென ஆங்கில வழிக் கல்வி நடைமுறைப்
படுத்தப்பட்டுள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
5-ஆம் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வி முடித்த மாணவர்கள் வரும் கல்வியாண்டில் 
6-ஆம் வகுப்பில் தமிழ் வழிக் கல்வியில் சேருவதா அல்லது ஆங்கில வழிக் கல்வியில் சேருவதா என்ற குழப்பம் நிலவுகிறது. 6-ஆம் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வி குறித்த கல்வித் துறையின் அறிவிப்பு இதுவரை வராததால் குழப்பம் நீடிக்கின்றது. 
6-ஆம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வி இல்லையெனில்
5-ஆம் வகுப்பு வரையில் ஆங்கில வழிக்கல்வி முடித்த மாணவர்கள் 6-ஆம் வகுப்பில் தமிழ் வழிக் கல்விக்கு மாற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதனால் அந்த மாணவரின் கல்வி பாதிக்கப்படும்.
எனவே வருகிற கல்வியாண்டில் 6-ஆம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வி நடைமுறைபடுத்தப்படுமா, அதற்கென தனியாக ஆங்கில வழிக்கல்வி போதிக்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்களா என்பதை கல்வித்துறை உடனடியாக தெளிவுப்படுத்த அறிவிப்பு அல்லது அரசாணை வெளியிட வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

10ம் வகுப்பு தேர்வு: 94.5 சதவீதம் 'பாஸ்' : கடந்த ஆண்டை விட 0.1 சதவீத தேர்ச்சி அதிகம் : கணிதம், தமிழில் குறைந்தது தேர்ச்சி

பத்து லட்சம் பேர் எழுதிய, பத்தாம் வகுப்பு தேர்வில், 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவியர், 96.4 சதவீதமும்; மாணவர்கள், 92.5 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பத்தாம் வகுப்பு பொது தேர்வு,
மார்ச், 16 முதல், ஏப். 20 வரை நடந்தது. 7,083 மேல்நிலை பள்ளிகள், 5,253 உயர்நிலை பள்ளிகள் என, 12 ஆயிரத்து, 336 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், தனித்தேர்வர்கள் என, 10.01 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர்.தேர்வு முடிவுகள் நேற்று காலை, 9:30 மணிக்கு, தேர்வுத் துறையின் இணையதளத்தில் வெளியானது.மேலும், மாணவர்கள் பதிவு செய்த அலைபேசிகளுக்கு, எஸ்.எம்.எஸ்., ஆகவும், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், 2017ஐ விட, 0.1 சதவீதம் அதிகமாக, 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வில், 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், பத்தாம் வகுப்பில், அதை விட அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்வில் பங்கேற்ற, 4.76 லட்சம் மாணவியரில், 96.4 சதவீதம் பேரும்; 4.74 லட்சம் மாணவர்களில், 92.5 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர். மாணவியர், 3.9 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர்.100 சதவீதம்: மொத்தமுள்ள, 12 ஆயிரத்து, 336 பள்ளிகளில், 5,584 பள்ளிகளின் மாணவ - மாணவியர், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 5,456 அரசு பள்ளிகளில், 1,687 அரசு பள்ளிகளின் மாணவ - மாணவியர், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்வு எழுதியோரில், 2.06 லட்சம் பேர், 401 மதிப்பெண்களுக்கும் மேல் பெற்றுள்ளனர். இவர்களில், 1.02 லட்சம் பேர் மாணவியர்; 1.27 லட்சம் பேர் மாணவர்கள்.பாடவாரியான தேர்ச்சியில், வினாத்தாள் கடினமாக கருதப்பட்ட கணிதத்தில், 96.18 சதவீதம் என்ற, குறைந்த தேர்ச்சி கிடைத்துள்ளது. தமிழில், 96.42 சதவீத தேர்ச்சி உள்ளது.அதிகபட்சமாக, அறிவியலில், 98.47 சதவீதம் பேர்; ஆங்கிலம், 96.50 மற்றும் சமூக அறிவியலில், 96.75 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4,443 மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஒரு மணி நேரம் கூடுதல் சலுகை பெற்று, தேர்வு எழுதினர்.அவர்களில், 88.97 சதவீதமான, 3,944 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறை கைதிகளில், 186 பேர் தேர்வு எழுதி, 76 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாநில, மாவட்ட அளவில் யார் முதலிடம், இரண்டாம், மூன்றாம் இடம் என்ற, 'ரேங்கிங்' முறை, இரண்டாவது ஆண்டாக, இந்த ஆண்டும் வெளியிடப்படவில்லை.இதனால், மாணவர்கள் இடையே, யார் முதல் இடம் பிடிப்பது என்ற, மன அழுத்தம் நிறைந்த போட்டிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பெற்றோரும், மற்ற மாணவர்களை ஒப்பிடாமல், தங்கள் பிள்ளைகள் என்ன மதிப்பெண் என்பதை பார்த்து, அதன்படி பிளஸ், 1 படிக்க வைக்க திட்டமிட துவங்கியுள்ளதால், மாணவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். 

ஐந்தாண்டுகளில் இல்லாத தேர்ச்சி சாதனை : மதிப்பெண்ணை வாரி வழங்கிய தேர்வுத்துறை

பத்தாம் வகுப்பு பொது தேர்வில், வினாத்தாள் கடினமாக இருந்தபோதும், விடை திருத்தத்தில், மதிப்பெண்ணை வாரி வழங்கியதால், ஐந்தாண்டுகளில் இல்லாத வகையில், தேர்ச்சி சதவீதம் அதிகரித்து, அரசு தேர்வுத்துறை சாதனை படைத்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொது தேர்வில், எந்த ஆண்டும் இல்லாத வகையில், வினாத்தாள் கடினமாக இருந்தது. தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களில் பல கேள்விகள், மாணவர்களின் அறிவு நுட்பத்தை சோதிக்கும் விதமாக இருந்தது. இது குறித்து, மாணவர்களும், ஆசிரியர்களும் அதிருப்தி தெரிவித்தனர். வினாத்தாள் கடினமாக இருந்ததால், தேர்ச்சி சதவீதம் மற்றும் மதிப்பெண்ணில் பாதிப்பு இருக்கும் என, கருதப்பட்டது.ஆனால், எந்த பாதிப்புமின்றி, மற்ற ஆண்டுகளை விட அமோகமான தேர்ச்சியும், மதிப்பெண்களும் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு, 10.01 லட்சம் பேர் எழுதிய தேர்வில், 2017ஐ விட, ஒரு சதவீதம் கூடுதலாக, 94.45 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது. ஐந்தாண்டுகளை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தான் அதிக மாணவர்கள், தேர்ச்சி பெற்றுள்ளனர்.பத்தாம் வகுப்பில், 2014ல், 90.70 சதவீதம்; 2015ல், 92.90 சதவீதம்; 2016ல், 93.60 சதவீதம்; 2017ல், 94.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு, 94.45 சதவீதம் தேர்ச்சி பெற்றுஉள்ளனர்.
இது குறித்து, தேர்வுத் துறையினர் கூறுகையில், 'பத்தாம் வகுப்பு தேர்வில் கடின வினாத்தாள் என, மாணவர்கள் புகார் செய்ததால், விடை திருத்த குறிப்பு, எளிதாக தயாரிக்கப்பட்டது. விடை திருத்தத்தில் கடினமாக நடந்து கொள்ள வேண்டாம்; அதிநுட்பமாக திருத்த வேண்டாம் என, ஆசிரியர்கள் கேட்டு கொள்ளப்பட்டனர்' என்றனர்.
தேர்வு எழுதியோர் எண்ணிக்கை சரிவு : தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை, ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடுமையாக சரிந்துள்ளது. 2014ல், 9.26 லட்சம்; 2015ல், 9.85 லட்சம்; 2016ல், 9.47 லட்சம்; 2017ல், 9.26 லட்சம் பேர் தேர்வு எழுதினர். 2017ஐவிட, இந்தாண்டு, 28 ஆயிரத்து, 766 பேர் குறைவாக, 8.97 லட்சத்து, 945 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். இதற்கு, பள்ளிக்கல்வியை பாதியில் முடிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தான் காரணமா என்பதற்கான ஆய்வை, அதிகாரிகள் துவக்கிஉள்ளனர். 

அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம்: ஈரோடு முதலிடம்; திருவள்ளூர் கடைசி

பத்தாம் வகுப்பு தேர்வில், அரசு பள்ளிகளில், ஈரோடு மாவட்டம் அதிக தேர்ச்சி பெற்று, முதலிடம் பெற்றுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், மிக குறைந்த தேர்ச்சி பெற்று, கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்ச்சியில், துறை வாரியான பள்ளிகளில், மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், அதிக தேர்ச்சி பெற்று உள்ளன.அரசு பள்ளிகளை பொறுத்தவரை, 5,456 பள்ளிகளில், 1,687 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.ஈரோடு மாவட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களில், ௯௭.௮௪ சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று, அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றோர் பட்டியலில், முதலிடத்தில் உள்ளனர்.ராமநாதபுரம், இரண்டாம் இடம், தேனி மூன்றாம் இடம் பெற்றுள்ளது.அனைத்து பள்ளிகளுக்கான பிரிவில், முதலிடம் பெற்ற சிவகங்கை மாவட்டம், அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில், நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.கல்வியில் முன்னிலை வகிக்கும், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள், முறையே, ஐந்து மற்றும், 14ம் இடங்களுக்கு பின்தங்கியுள்ளன.கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டமான, அரியலுார், 94.45 சதவீத தேர்ச்சியுடன், 11ம் இடத்தில் உள்ளது.தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் நிறைந்த தர்மபுரி, 12; கரூர், 95; சேலம், 16; தஞ்சை, 18; கோவை, 19; நாமக்கல், 20; கிருஷ்ணகிரி, 21; மதுரை, 22; காஞ்சிபுரம், 29; திருவள்ளூர், 32ம் இடங்களை பெற்றுஉள்ளன.அதேபோல், தமிழகத்திலேயே மிக குறைவாக, அதாவது வெறும், 28 அரசு பள்ளிகளை உடைய, சென்னை மாவட்டம், 25ம் இடம் பெற்று, தேர்ச்சியில் வீழ்ச்சி அடைந்துஉள்ளது.அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை பொறுத்தவரை, தனியார் பள்ளிகள் அதிகமாக செயல்படும் மாவட்டங்கள் மற்றும் பொருளாதாரத்தின் முன்னேறிய மாவட்டங்களில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் கடுமையாக சரிந்துள்ளது.அதுவும், திருநெல்வேலி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், கோவை, சென்னை போன்ற
மாவட்டங்கள், பெரும் சரிவுக்கு சென்றுள்ளதால், அரசு பள்ளிகளின் எதிர்காலமும், அதில் படிக்க காத்திருக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.

புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து உள்ளது. சிறைச்சாலையில் இருந்து படித்து தேர்வு எழுதிய 186 பேரில் 76 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அரசு சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தோல்வி அடைந்தவர்கள் 4417 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு கவுன்சிலிங் பெறலாம். பள்ளி கல்வித்துறை மூலம் உருவாக்கப்பட்டுள்ள ‘ஹெல்ப் லைன்’ மூலம் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் தகுந்த அறிவுரை வழங்கப்படும். அவர்கள் ஜூன் 28-ந் தேதி மீண்டும் தேர்வு எழுதும் வாய்ப்பை அரசு அளித்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தேர்ச்சி பெற்று பிளஸ்-1 அல்லது வேறு படிப்புகளுக்கு உடனே செல்ல முடியும். எனவே தோல்வியுற்ற மாணவர்கள் சோர்வடைய வேண்டாம். அடுத்ததாக வெற்றிபெறும் ஆலோசனைகளையும் தலைமை ஆசிரியர் வழங்குவார்.

சில பள்ளிகள் மாணவர்களின் மதிப்பெண்களை வைத்து விளம்பரம் செய்வதாக கேள்விப்பட்டேன். அப்படி விளம்பரம் செய்யக்கூடாது என அந்த பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மீண்டும் விளம்பரம் செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இனிமேல் பிளஸ்-1 வகுப்பில் 600 மதிப்பெண்ணும், பிளஸ்-2 வகுப்பில் 600 மதிப்பெண்ணும் சேர்த்து தான் 1,200 மதிப்பெண் கணக்கிடப்படும். ஒரு பாடத்துக்கு 100 மதிப்பெண் என்று மாற்றி அமைக்கப்பட உள்ளது. தேர்வு நேரத்தையும் 3 மணி நேரத்தில் இருந்து 2.30 மணி நேரமாக குறைத்திருக்கிறோம்.

ஒரு மாணவர் கூட இல்லாத 29 அரசு தொடக்கப்பள்ளிகள் உள்ளன. தமிழகம் முழுவதும் கணக்கெடுத்து பார்க்கும்போது, 10-க்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் 890 அரசு பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. என்றாலும், அந்த பகுதியில் உள்ள மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்களின் கருத்தை அறிந்து, அதன் பிறகு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு பரிசீலிக்கும். அதுபோன்ற பள்ளிகளில் கூடுதல் மாணவர்களை சேர்க்க மக்களுடன் இணைந்து ஆசிரியர்களும் செயல்படுவார்கள்.

கூடுதல் மாணவர்களை சேர்க்க கிராமங்களுக்கு ஆசிரியர்கள் சென்று, மாணவர்கள், பெற்றோரை சந்தித்து, தனியார் பள்ளிகளைவிட அரசு பள்ளிகளில் கிடைக்கும் சலுகைகள், புதிய பாடத்திட்டங்கள் பற்றி பேசி வருகின்றனர். செப்டம்பர் வரை இதற்கான அனுமதி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டங்கள் மூலம் அனைத்து பொதுத்தேர்வுகளையும் சந்திக்க முடியும் என்பதை எடுத்துச்சொல்லும் வகையில் ஊர்வலமாகவும், முரசு கொட்டியும் கருத்துகளை வெளிப்படுத்துகின்றனர். செப்டம்பரில் மாணவர் சேர்க்கை குறைந்து இருந்தால் அதுபற்றி அரசு பரிசீலிக்கும்.

புதிய பாடத்திட்டம் வெளியிட்டபோது காணப்பட்ட ஒரு சில பிழைகள் சரி செய்யப்பட்டுவிட்டன. ஜூன் மாதம் புத்தகங்களை வழங்கும்போது எந்த பிழையும் இருக்காது. புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதை, ஜூன், ஜூலை மாதங்களில் மேற்கொள்ளலாம் என அரசு பரிசீலிக்கிறது.

2013-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு எழுதியவர்கள் 93 ஆயிரம் பேர். 2014, 2017-ம் ஆண்டுகளிலும் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு அவர்கள் தயார் நிலையில் உள்ளனர். ஆனாலும் ‘வெயிட்டேஜ்’ பற்றி அரசு பரிசீலிக்கிறது. மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க அரசு என்னென்ன முயற்சிகள் எடுக்கலாம் என்பது பற்றி துறை ஆய்வு செய்து வருகிறது. விரைவில் நல்ல முடிவுகள் மேற்கொள்ளப்படும்.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தவர்கள் பலர் மருத்துவ கல்விக்கான ‘நீட்’ தேர்வை எழுவதாக கூறப்படும் கருத்தின் அடிப்படையில் அந்த பாடத்திட்டத்தில் பலர் சேர்கின்றனர். ஆனால் இந்த ஆண்டு அப்படி இருக்காது.

அரசு பள்ளிகளில் படித்த 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர். பயிற்சி பெற்ற ஆயிரம் மாணவர்களாவது மருத்துவ படிப்பில் சேர வாய்ப்புள்ளது. எனவே எதிர்காலத்தில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளை நாடாமல் அரசு பள்ளிகளை நாடும் நிலை உருவாக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

24/5/18

FLASH NEWS - தூத்துக்குடி ஆட்சியர் SSA கூடுதல் இயக்குனராக நியமனம் - தமிழக அரசு உத்தரவு

தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷை அனைவருக்கும் கல்வி திட்ட கூடுதல் இயக்குனராக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு. SSA (SAMAGRA SIKSHA ABHIYAN) SSA + RMSA இணைத்து உருவாக்கப்பட்டுள்ள புதிய திட்டமாகும்

`அரசுப் பள்ளிகளை மூடுவது தனியாருக்குச் சாதகம்!' - கொதிக்கும் கல்வியாளர்கள்

தமிழகத்தில் உள்ள 836 அரசுப் பள்ளிகள் மூடப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. `தனியார் பள்ளிகளின் நலனுக்காகவே இப்படியொரு நடவடிக்கையை அரசு மேற்கொள்ள உள்ளது' எனக் கொதிக்கின்றனர் கல்வியாளர்கள்.


 தமிழகத்தில் மொத்தம் 44, 214 பள்ளிகள் உள்ளன. மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்க, தமிழக அரசு சார்பில் மத்திய உணவுத் திட்டம், சீருடைகள், புத்தகங்கள் காலணிகள் உள்ளிட்ட பல இலவச நலத்திட்டங்கள் நடைமுறையில் செயல்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும், அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் உயர்ந்ததாகத் தெரியவில்லை. இதனால், 10-க்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் அரசு தொடக்கப்பள்ளிகளை மூடிவிடலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நேற்று கல்வி அலுவலர்கள் கூடி ஆலோசித்தனர் என்ற தகவல் வெளியாகியது.

இது குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம், ``தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களின் வருகை குறைந்துள்ளதுக்கான காரணம் என்ன? முறையான கட்டமைப்பு வசதி பள்ளிகளில் இருக்கிறதா? சத்துணவுத் திட்டம் சரியாகச் செயல்படுகிறதா ? மாணவர்களுக்குப் போதிய பாதுகாப்பு உள்ளதா? பெற்றோர்கள் மத்தியில் அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? கழிப்பறை வசதி பள்ளிகளில் உள்ளனவா? இவை, எதையும் பள்ளிக் கல்வித்துறை கவலைப்படவில்லை. அதற்கான ஆய்வு நடவடிக்கைகளைத் தொடரவில்லை. ஆனால், 10-க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் அரசு தொடக்கப்பள்ளிகளை மூடுவது குறித்து பள்ளிக் கல்வித்துறை பரிசீலனை செய்து வருகிறது. இவ்வாறான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கையில் ஒன்றுக்குப் பலமுறை யோசித்து முடிவெடுக்க வேண்டும்'' என்றார்.

இதனையடுத்து, தமிழ்நாடு பெற்றோர் மாணவர் நலச் சங்க மாநிலத் தலைவர் அருமைநாதனிடம் பேசினோம். `தமிழக அரசின் இந்த நடவடிக்கை தனியார் பள்ளிகளுக்குச் சாதகமாக எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையானது 45 சதவிகிதம் குறைந்துள்ளது. மேலும் பல பகுதிகளில் ஒரு அரசுப் பள்ளியைச் சுற்றி ஐந்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அரசுப் பள்ளிகளின் கல்வித்தரங்களை உயர்த்தும் நடவடிக்கையில் அரசு ஈடுபடவில்லை. ஆர்வமும் காட்டவில்லை. இதனால், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அருகிலிருக்கும் தனியார் பள்ளிகளில் சேர்க்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அதுமட்டுமல்லாமல், தனியார் பள்ளிகள் வசூலிக்கும் அதிகக் கல்விக் கட்டணத்தால் அவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தமிழக அரசு மறைமுகமாகக் கல்வியைத் தனியாரிடம் ஒப்படைத்து வருகிறது. தனியார்ப் பள்ளிகளை ஊக்குவித்தும் வருகிறது'' என்றார்.

``அரசின் இந்த நடவடிக்கை ஆசிரியர்களையும் பாதிக்கும்'' என்கிறார் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத் துணைப்பொதுச் செயலாளர் க.சாந்தகுமார். இது குறித்து அவர் பேசுகையில், ``தனியார்ப் பள்ளிகளில், 25 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் சேர்க்கப்படுகின்றனர். இந்த ஒதுக்கீட்டின் கீழ் பெரும்பாலும் அரசுப் பள்ளி மாணவர்கள்தாம் விண்ணப்பிக்கின்றனர். சுமார் ஒரு லட்சத்து முப்பத்து இரண்டாயிரம் அரசுப் பள்ளி மாணவர்கள் தற்போது தனியார் பள்ளிகளுக்குப் படிக்கச் சென்றுவிட்டனர். இதனால், 4,400-க்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் தமிழகத்தில் காலியாக இருக்கின்றது. எனவே, தமிழக அரசு கல்வியைத் தனியார் மயமாக்கி வருகிறது'' என்றார்.

இது தொடர்பாக பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளிடம் பேசினோம், ``தமிழக அரசின் இயக்குநரகம் கட்டுப்பாட்டில் அரசுப் பள்ளிகள் - 629 மாநகராட்சிப் பள்ளிகள் - 436, நகராட்சிப் பள்ளிகள் - 839 மற்றும் நர்ஸரி மற்றும் பிரைமரிப் பள்ளிகள் - 6308, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசு நலத்துறைப் பள்ளிகள் எனத் தமிழகத்தில் மொத்தம் 44, 214 பள்ளிகள்உள்ளன. இதில், பத்துக்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் தொடக்கப்பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இங்கு வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்குச் சம்பளமாக லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கப்படுகிறது. இதனால்தான் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை அருகில் உள்ள பள்ளிகளோடு இணைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். தற்போதைய சூழலில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு அரசுப் பள்ளி செயல்படுகிறது. இதனால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மேலும், கடந்த கல்வி ஆண்டிலும் அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படுகின்றன. இதனால் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு கல்வி ஆண்டும் அதிகரித்துத்தான் வருகின்றன. இதனை இன்னும் அதிகரிக்கவே கணக்கெடுப்பு நடத்தப்பட்டது'' என்றார். பள்ளிகள் மூடப்படுவதாக வெளியான தகவலை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுத்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர், `அரசு தொடக்கப் பள்ளிகளை மூடும் எண்ணமில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

1,6,9,11 வகுப்புக்கான புதிய பாடப்புத்தகங்கள் இணையதளத்தில் தற்போது வெளியீடு செய்யவில்லை. மே 31 அன்று வெளியிடப்படும்.

ஆபத்தில் 900க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள்: என்ன சொல்கிறது அரசு?

மாணவர் எண்ணிக்கையைக் காரணம் காட்டி 900க்கும் மேற்பட்ட அரசுத் தொடக்கப் பள்ளிகளை தமிழக அரசு மூட இருப்பதாக வெளியான ஒரு தகவல் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1-ம் தேதி நிலவரப்படி உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்வது குறித்த அரசாணைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யும் போது அவ்வப்போது வெளியிடப்பட்ட அரசாணைகள், குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்விச் சட்டம் 2009-ல் வகுக்கப்பட்ட நெறிமுறைகள் மனிதவள மேம்பாட்டுத் துறையின் வழிகாட்டுதல்கள் ஆகிய அனைத்தையும் பரிசீலித்து தற்போதைய நிலையில் மாணவர்களின் கல்வித் தரத்தையும், கற்பித்தலை மேம்படுத்துவது குறித்தும் கருத்தில் கொண்டு ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்திட வேண்டும்.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள பிரிவுகளுக்கு 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும், 60 மாணவர்கள் வரையில் 2 ஆசிரியர்களும், 61 முதல் 90 மாணவர்கள் இருந்தால் 3 ஆசிரியர்களும், 91 முதல் 120 மாணவர்கள் இருந்தால் 4 ஆசிரியர்களும் இதேபோன்று ஒவ்வொரு 30 மாணவர்களுக்கும் ஒரு ஆசிரியர் கூடுதலாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 அடிப்படையில் நடுநிலைப்பள்ளிகளில் அதாவது 6 முதல் 8-ம் வகுப்பு வரையில் குறைந்தபட்சம் 3 ஆசிரியர் பணியிடங்களை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
தமிழகத்தில் 37,211 அரசுப் பள்ளிகளும், 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 12,419 தனியார் சுயநிதி பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இவற்றில் ஒரு கோடியே 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயில்கின்றனர்.
தொடக்கக் கல்வித்துறையின் கீழ் 529 அரசுப் பள்ளிகளும், 436 மாநகராட்சிப் பள்ளிகளும், 839 நகராட்சிப் பள்ளிகளும், 6,589 நிதி உதவிபெறும் பள்ளிகளும், 28 ஆயிரத்து 42 ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளும்,1471 நலத்துறைப் பள்ளிகளும், 6,308 நர்சரி பிரைமரிப் பள்ளிகளும் உள்ளன. இந்தப் பள்ளிகளில் 36 லட்சத்து 99 ஆயிரத்து 826 மாணவர்கள் படிக்கின்றனர்.
ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் 18 லட்சத்து 32 ஆயிரத்து 403 மாணவர்கள் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலும் படிக்கின்றனர். நர்சரி பிரைமரிப் பள்ளிகளில் 8 லட்சத்து 2 ஆயிரத்து 639 மாணவர்கள் படிக்கின்றனர்.
அவற்றிலும் குறிப்பாக ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 1-ம் வகுப்பில் 2 லட்சத்து 81 ஆயிரத்து 621 மாணவர்களும், 2-ம் வகுப்பில் 2 லட்சத்து 74 ஆயிரத்து 332 மாணவர்களும், 3-ம் வகுப்பில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 997 மாணவர்களும், 4-ம் வகுப்பில் 3 லட்சத்து 25ஆயிரத்து 699 மாணவர்களும், 5-ம் வகுப்பில் 3 லட்சத்து 24 ஆயிரத்து 82 மாணவர்களும் படித்து வருகின்றனர்.
ஆனால் அதேநேரத்தில் நர்சரி பிரைமரி பள்ளிகளில் 1-ம் வகுப்பில் 2 லட்சத்து 167 மாணவர்களும், 2-ம் வகுப்பில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 962 மாணவர்களும், 3-ம் வகுப்பில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 330 மாணவர்களும், 4-ம் வகுப்பில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 776 மாணவர்களும், 5-ம் வகுப்பில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 135 மாணர்களும் படித்து வருகின்றனர் என தொடக்கக் கல்வித்துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அரசுப் பள்ளிகளில், நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின்படி மாணவர்கள் எண்ணிக்கை குறித்த விவரங்களையும், மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளின் எண்ணிக்கையையும் கணக்கெடுக்க பள்ளிக்கல்வித்துறை அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து, மாணவர் சேர்க்கை குறைந்த பள்ளிகளின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு மாணவர் கூட இல்லாமல் 29 தொடக்கப்பள்ளிகள் உள்ளன. 892 தொடக்கப் பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்கள் இருக்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டது. இந்தப் பள்ளிகளில் பெரும்பாலும் தலைமை ஆசிரியர் மட்மே பணியாற்றி வருகிறார். ஒரு சில பள்ளிகளில் மட்டும் ஒரு தலைமை ஆசிரியரும், ஒரு இடைநிலை ஆசிரியரும் பணியாற்றி வருகின்றனர்.
இதனால் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளை மூடும் முடிவில் தமிழக அரசு இருப்பதாகவும் செய்தி வெளியானது. அந்தப் பள்ளி மாணவர்களை அருகிலுள்ள பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க முடுவெடுத்திருப்பதாகவும் சொல்லப்பட்டது.
இதுபோன்ற மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளை அருகில் உள்ள அரசுப் பள்ளியுடன் இணைப்பதற்கான நடவடிக்கையை பள்ளிக்கல்வித்துறையின் அறிவுறுத்தலின் படி தொடக்கக் கல்வித்துறை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியானது. வேறு பள்ளியுடன் இணைக்கும் போது அந்தப் பள்ளியின் மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தருவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவதற்கு முக்கியக் காரணம் அங்கு போதுமான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது ஆகும். மாணவர்கள் தங்களின் பிள்ளைகள் ஆங்கிலத்தில் பேசுவதை விரும்புகின்றனர் என அரசு காரணம் கூறினாலும், கிராமப்புறங்களில் உள்ள எந்த தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் சரளமாக ஆங்கிலம் பேசுவது கிடையாது என்பதுதான் உண்மை.
இந்த சூழலில் நாம் இன்னொன்றையும் கூர்ந்து கவனிக்க வேண்டியதாக இருக்கிறது.
தமிழகத்தில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அனைத்துப் பள்ளிகளிலும் ஆரம்ப வகுப்பில் 25 சதவீதம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். அதன்படி, 2013- 14 ஆம் கல்வி ஆண்டில் 49,864 மாணவர்களும், 2014-15 ஆம் கல்வி ஆண்டில் 86,729 மாணவர்களும், 2015-16 ஆம் கல்வியாண்டில் 94,811 மாணவர்களும், 2016-17 ஆம் கல்வியாண்டில் 98,474 மாணவர்களும், 2017-18 ஆம் கல்வியாண்டில் 90,607 மாணவர்களும் படித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது 2018- 19 ஆம் கல்வியாண்டில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்காக 1,32,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
2013-14 முதல் 2016- 17 ஆம் கல்வியாண்டு வரை இலவச கட்டாய கல்விச்சட்டத்தின் 25% இட ஒதுக்கீட்டின் சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணத் தொகை ரூ.401.98 கோடி மாநில அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 900க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளை அருகில் உள்ள பள்ளியுடன் இணைப்பதை தவிர்த்து, இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்திற்கு அளிக்கும் நிதியைக் கொண்டோ அல்லது அரசுப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த அதிக நிதியையோ பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கலாம் என்று கல்வி ஆர்வலர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.
அரசுப் பள்ளிகளை மூடும் நோக்கம் இல்லை: செங்கோட்டையன்
''அரசுப் பள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை. அனைத்துப் பள்ளிகளும் இயங்கும். தற்போது பள்ளிகளில் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் இலவச சீருடைகள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் மூலம் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்'' என்கிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.
அரசின் நோக்கம் சரியானதுதான். ஆனால், அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதும், நர்சரி பிரைமரிப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதையும் அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். மாணவர் சேர்க்கை குறைவதற்கான காரணங்களை ஆய்வு செய்து கண்டறிய வேண்டும். அரசுப் பள்ளிகளில் கூடுதலாக எப்படி மாணவர்களைச் சேர்ப்பது, எண்ணிக்கை குறையாமல் இருப்பதற்கு எப்படி வழி வகை செய்யலாம் என்பதை அரசு பரிசீலிக்க வேண்டியது அவசியம்.a

23/5/18

அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்


அரசின் பல்வேறு துறைகளிடம் இருந்து சம்பளம், பணியிட விவரங்களை சேகரிக்கும் எம்.ஏ.சித்திக் குழு ஜூலையில் அறிக்கை தாக்கல் செய்ய திட்டம்

அரசுசெலவினங்களை குறைக் கும் நோக்கில் அமைக்கப்பட்ட பணியாளர் சீரமைப்புக் குழு, துறைகள் தோறும் பணியாளர்கள், சம்பளம் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து வருகிறது.

தமிழக அரசில் தற்போது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என 12 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பணியாற்றி வருகின்றனர். அரசின் ஒட்டுமொத்த வருவாயில் 70 சதவீதம் ஊழியர், ஆசிரியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியமாக வழங்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, வருவாய் செலவினங்களைக் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அரசுப் பணிகளில் தேக்கத்தை குறைக்கவும் தேவையில்லாத பணியிடங்களை நீக்கவிட்டு, தேவை யான பணியிடங்களில் புதியவர்களை நியமிக்கவும் சில பணியிடங்களில் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை நியமிக்கவும் அரசு முடிவெடுத்தது. இதையடுத்து, நிதித் துறை (செலவினம்) செயலாளர் எம்.ஏ.சித்திக் தலைமையில் ஒரு நபர்பணியாளர் சீரமைப்புக் குழுவை அரசு அமைத்தது. ஆனால், இந்தக் குழுவுக்கு அரசு ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருப்பினும் சித்திக் குழு தனதுபணிகளைத் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக, துறை தோறும்உள்ள பணியிடங்கள், பணியா ளர் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்து வருகிறது.

இதுதொடர்பாக அரசுத்துறைகள், தலைமைச் செயலகம், சட்டப்பேரவைச் செயலகம் உட்படஅனைத்து துறைகளின் செயலர்களுக்கும் குழுவின் தலைவர் சித்திக் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘தேவையில்லாத பணியிடங்களைக் குறைத்து, அவுட்சோர்சிங் அல்லது ஒப்பந்த அடிப்படையில் தேவையான பணியாளர்களை நியமிக்கும் வகையில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. எனவே, தங்கள் துறைகளில் உள்ள நிர்வாகச் செலவினங்கள், பணியாளர்கள், பணியிடங்கள் குறித்த விவரங்களைத் தரவேண்டும்’ என கோரியுள்ளது. மேலும், துறைகளின் தலைவர்கள், அந்தந்த துறைகளில் நிர்வாகச் செலவுகளை குறைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை கள் குறித்த பரிந்துரைகளையும் தருமாறு தெரிவித்துள்ளார்.

 தலைமைச் செயலகத்தை பொறுத்தவரை, பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத் தத் துறையிடம் இருந்து தலை மைச் செயலகத்தில் பணியாற்று வோர் விவரங்கள், காலிப் பணியிடங்கள், ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட விவரங்களைக் கோரியுள்ளது. இதற்காக 15 கேள்விகள் அடங்கிய பட்டியலையும் துறைகளுக்கு அனுப்பியுள்ளது. இந்த பணியாளர் சீரமைப்புக்குழு, தனது பணிகளை நிறைவு செய்து, வரும் ஜூலையில் அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்யும் என கூறப்படுகிறது.

புதிய பாடத்திட்ட நூல்கள்: இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

புதிய பாடத் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட 1, 6, 9, 11 ஆம் வகுப்புகளுக்கான பாடநூல்களை புதன்கிழமை முதல் இணையதளத்தில் படிப்படியாகப் பதிவிறக்கம் செய்யலாம் என பள்ளிக் கல்வித் துறை
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பள்ளிகளுக்கான மாநிலப் பாடத் திட்டம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றியமைக்கப்பட்டது.


ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், நூற்றுக்கணக்கான பேராசிரியர்கள், வல்லுநர்களின் வழிகாட்டுதலில் உருவான புதிய பாடத் திட்ட நூல்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் கடந்த மே 4-ஆம் தேதி வெளியிட்டனர். இதையடுத்து வரும் கல்வியாண்டில் 1, 6, 9, 11 ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடநூல்களின் அடிப்படையில் கற்றல், கற்பித்தல் பணிகள் நடைபெறவுள்ளன.

இந்தநிலையில் மாணவர்கள், பெற்றோர் நலன் கருதி 1, 6, 9, 11 ஆம் ஆகிய வகுப்புகளுக்கான பாடநூல்கள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன (எஸ்சிஇஆர்டி) வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பதிவேற்றம் செய்யப்பட்ட புதிய பாடத்திட்ட நூல்களை www.tnscert.org என்ற இணையதள முகவரியில் புதன்கிழமை முதல் பதிவிறக்கம் செய்யலாம். வழக்கமான புத்தகங்களில் உள்ள தகவல்களைக் காட்டிலும் இதில் கூடுதல் தகவல்கள் இடம்பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பத்தாம் வகுப்புத்தேர்வு பாடவாரியாக தேர்ச்சி விகிதம்.!!!

10ஆம் வகுப்பு தேர்வில் 94.5% தேர்ச்சி! - சிவகங்கை மாவட்டம் முதலிடம்!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.5% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.5% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட 0.1% விழுக்காடு கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 9.5 லட்சம் பேரில் 8.97 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 92.6% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.4% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் 98.5% தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றுள்ளது. ஈரோடு மாவட்டம் 98.38% பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டம் 98.26% பெற்று மூன்றாம் இடம் பெற்றுள்ளது. 5,584 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் 5,456 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன என கூறினார்.

மேலும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜூன் 28ஆம் தேதி மறுதேர்வு எழுதலாம் என அவர் கூறியுள்ளார்.