யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/7/17

கொசு மருந்து அடிச்சு வெகு நாளாச்சு... எங்கெங்கு காணினும் டெங்கு; யாருக்கு பெரும் பங்கு? கோவையில் பலி எண்ணிக்கை ஏழாச்சு

கோவையில் 'டெங்கு' வேகமாகப் பரவி வருகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை 
மேற்கொள்வதில், அரசுத்துறைகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாமல் இருப்பதே, முக்கியக் காரணமாகவுள்ளது. பொறுப்புகளை அதிகாரிகள் தட்டிக் கழிப்பதால், மாவட்டத்தில் 'டெங்கு' பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.பருவமழைக் காலங்களில், சீதோஷ்ண நிலை மாற்றத்தால், நோய்கள் பாதிப்பு வருவது வழக்கம்; கடந்த சில ஆண்டுகளாக, தென்மேற்கு பருவமழை காலத்தில், 'டெங்கு' பாதிப்பு அதிகமாகி வருகிறது. இந்த ஆண்டில், ஜூன் 3ல் பருவமழை துவங்கியது. கோவை மாவட்டத்தில், நகர்ப்பகுதியில் பெரிய அளவில் மழைப்பொழிவு இல்லாவிட்டாலும், புறநகரில் ஆங்காங்கே விட்டு, விட்டுப் பெய்கிறது.காலங்காத்தாலே கடி!மாநகரம் முழுவதும், காலை மற்றும் மாலை நேரங்களில், குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்படுகிறது. இரவில் குளிர் வாட்டுகிறது. பகல் நேரங்களில் சீரான வெப்பநிலை பதிவாகிறது. மாறுபட்ட பருவநிலை காணப்படுவதால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், உடல் நல பாதிப்புக்கு உள்ளாவது அதிகரித்துள்ளது. அதையும் விட, இந்த சீதோஷ்ண நிலையால், கொசுக்கள் உற்பத்தி, பல மடங்கு பெருகியுள்ளது.குறிப்பாக, 'டெங்கு' பரப்பும் 'டைகர்' கொசுக்கள், நகரில் லட்சக்கணக்கில் உற்பத்தியாகியுள்ளன. முன்பெல்லாம், காலை 11:00 மணியிலிருந்து மாலை 3:00 மணிக்குள் மட்டுமே, வலம் வரும் இந்த கொசுக்கள், சமீபகாலமாக காலையிலேயே வீடுகளுக்குள் படையெடுத்து விடுகின்றன. கலெக்டர் பங்களாவும், சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகமும் உள்ள பந்தயச்சாலையில், கொசுத்தொல்லை அதிகம்.குடிநீர் வினியோகம், மாதமிருமுறை, மூன்று முறை என குறைந்துள்ளதால், பெரும்பாலான வீடுகளில் குடிநீரை தொட்டிகளில் சேமித்து வைத்து, பயன்படுத்துகின்றனர். இதுவே, கொசுக்கள் உற்பத்தியாக, முக்கிய காரணமாகி உள்ளது. மாவட்டத்தில், இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், 'டெங்கு' காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்; இப்போதும் ஏராளமானோர், சிகிச்சை பெற்று வருகின்றனர்.நடப்பாண்டில் இதுவரை, ஏழு பேர் பலியாகி உள்ளனர். இதுதவிர, வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி, ஏராளமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். கொசு மருந்து அடிப்பது, விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொள்வதில், மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்களுக்கு இடையிலும் ஒருங்கிணைப்பு இல்லை; சுகாதாரத் துறை சுத்தமாக முடங்கிக் கிடப்பதாகத் தெரிகிறது. நகரில், கொசு மருந்து அடித்தே, பல மாதங்களாகி விட்டது.களப்பணியே அவசியம்!'டெங்கு' பாதிப்பு, மிகவும் அதிகரித்து வரும் நிலையில், இதுதொடர்பான ஆலோசனை கூட்டம், கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது; கமிஷனர் விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். துணை கமிஷனர் காந்திமதி, நகர் நல அலுவலர் சந்தோஷ்குமார் முன்னிலை வகித்தனர். மண்டல சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.கொசுப்புழு ஒழிப்பு, மருந்து அடிப்பது, தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள பழைய பொருட்களை அகற்றுவது போன்ற பணிகளுடன், டெங்கு பாதித்த இடங்களில் கல்லுாரி மாணவ, மாணவியரை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; பள்ளி, கல்லுாரிகள், அலுவலகங்கள், வணிக, வளாகங்கள், குடியிருப்புகளில், கொசு உற்பத்தி காரணிகள் இருக்கிறதா என தொடர்ச்சியாக ஆய்வு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.தொட்டிகளில் தண்ணீரை அகற்றி, 'பிளீச்சிங்' பவுடரால் சுத்தம் செய்ய வேண்டும். அதிகமான தண்ணீர் இருந்தால், ஆயில் பால் அல்லது மீன் குஞ்சு விட வேண்டும். கொசுப்புழு உருவாகாமல் தடுக்க, 'அபேட்' மருந்து ஊற்ற வேண்டும். கொசுப்புகை மருந்து அடிக்க வேண்டும். பணிகளில் சுணக்கம் காட்டினாலோ அல்லது டெங்கு பாதிப்பு இருந்தாலோ, சம்பந்தப்பட்ட வார்டு சுகாதார ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டது.'டெங்கு' ஒழிப்பு பற்றி, மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசித்ததுடன், களம் இறங்கிப்பணியாற்றினால் பாராட்டலாம்; இதேபோல, மாவட்ட நிர்வாகம், மற்ற உள்ளாட்சி அமைப்புகளையும், சுகாதாரத்துறையையும் ஒருங்கிணைத்து, 'டெங்கு' தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது அவசியம். இதைச் செய்யாதபட்சத்தில், இதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு, அதிகாரிகள் பொறுப்பு ஏற்காமல் இருக்கலாம்; அரசு பொறுப்பேற்றே தீர வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக