யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

17/2/17

சொத்து குவிப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட ஜெயலலிதா, சசிகலா நகைகள், கைக்கடிகாரங்கள் மதிப்பு என்ன?

சொத்து குவிப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் நகைகள், கைக்கடிகாரங்கள், கார்களின் மதிப்பு என்ன என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் நகைகள், கைக்கடிகாரங்கள், கார்களின் மதிப்பு என்ன என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


1991-1996 கால கட்டத்தில், ஜெயலலிதா தமிழக முதல்-அமைச்சர் பதவி வகித்தபோது, அவரும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் வருமானத்துக்கு மீறி பல கோடி ரூபாய் சொத்துக்கள் குவித்தது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து, நேற்றுமுன்தினம் (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு அளித்தது.

வழக்கை முதலில் விசாரித்த பெங்களூரு தனிக்கோர்ட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் வழங்கிய தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உறுதி செய்தனர். அதன்படி அவர்களுக்கு தலா 4 ஆண்டு சிறைத்தண்டனையும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதால் அவர் தண்டனையில் இருந்து விலக்கு பெறுகிறார்.

நீதிபதிகள் வழங்கிய 570 பக்க தீர்ப்பில், சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகள், சொத்துகள் ஆகியவற்றின் மதிப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* தங்கம், வைர நகைகளின் மதிப்பு ரூ.2 கோடியே 51 லட்சம்.

* கைக்கடிகாரங்களின் மதிப்பு ரூ.15 லட்சத்து 90 ஆயிரம்.

* கார்களின் மதிப்பு ரூ.1 கோடியே 29 லட்சம். (மாருதி கார், கண்டெசா கார், வேன்கள், ஜீப்புகள் அடங்கும்.)

* 400 கிலோ வெள்ளி பொருட்களின் மதிப்பு ரூ.20 லட்சத்து 80 ஆயிரம்.

* அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.20 கோடியே 7 லட்சம். புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களின் மதிப்பு ரூ.22 கோடியே 53 லட்சம்.

* 1991-1996 கால கட்டத்துக்கு முன்பு அவர்களது சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 1 லட்சம். மீதி சொத்துகள் அனைத்தும் 5 அல்லது 6 ஆண்டுகளில் கையகப்படுத்தப்பட்டதாகும்.

* தண்டிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்குகளில் இருப்பு ரூ.97 லட்சத்து 47 ஆயிரம். ரூ.3 கோடியே 42 லட்சத்தை நிலைத்த வைப்புகளிலும், பங்குகளிலும் வைத்துள்ளனர்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 

பள்ளியில் மாணவர்களுக்கு உடல்ரீதியில் தண்டனை வழங்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி: மத்திய அரசுக்கு மேனகா காந்தி கடிதம் !!

பள்ளியில் மாணவர்களுக்கு உடல்ரீதியிலான தண்டனை வழங்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தி, மத்திய அரசுக்கு மத்திய பெண்கள், குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் சம்ஸ்கிருத பாடலை மனப்பாடம் செய்யாத காரணத்துக்காக மாணவிகள் ஏராளமானோருக்கு, மைதானத்தை 
கீழாடை (ஸ்கர்ட்) இன்றி சுற்றி ஒடிவரும்படி தண்டனை அளிக்கப்பட்டது. இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு மேனகா காந்தி கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
இதுகுறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான தேசிய ஆணையத்தால், மாணவர்களுக்கு உடல்ரீதியில் அளிக்கப்படும் தண்டனைகளுக்கு முடிவு கொண்டு வருவது தொடர்பாக வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த வழிகாட்டுதல்களை அனைவரும் தெரியும்படி வெளியிட வேண்டும் என்றும், அதை செயல்படுத்த வேண்டும் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக் கொள்கிறது என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தைகள் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பான தேசிய ஆணையம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களில், பள்ளிகளில் மாணவர்களுக்கு உடல்ரீதியில் அளிக்கப்படும் தண்டனைகள், மாணவர்களுக்கு இழைக்கப்படும் துன்பங்கள் தொடர்பான புகார்களை கவனிப்பதற்கு சிறப்பு கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக அறிக்கைகளை அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண் கருவிழி மூலம் வங்கிக் கணக்கு திறக்கும் வசதி..!

பான் கார்டு, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு எனப் பல ஆவணங்களை வழங்கி வங்கிக் கணக்குத் தொடங்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில், நம் நாட்டில் முதன் 
முறையாகக் கண் கருவிழி ஸ்கேனிங் மற்றும் ஆதார் எண்ணை மட்டுமே வழங்கி, வங்கிக் கணக்கைத் திறக்கும் வசதியை டிசிபி வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.


டிசிபி இப்போது அறிமுகப்படுத்தி இருக்கும் கண் கருவிழி ஸ்கேனிங் மூலம் வங்கிக் கணக்குத் திறக்கும் முறை மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. முதன்முறையாகக் கடந்த ஆண்டு, ஆதார் அடிப்படையிலான ஏடிஎம்களை இந்த டிசிபி வங்கிஅறிமுகப்படுத்தி உள்ளது. கடந்த மாதம் கருவிழி அடிப்படையிலான வங்கிக் கணக்குத் திறக்கும் வசதி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
முதலில், 10 கிளைகளில் மட்டும் சோதனை அடிப்படையில் இது தொடங்கப்பட்டது. கருவிழி ஸ்கேனிங் மூலமாக இதுவரை நூற்றுக்கும் அதிகமான வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் திறக்கப்படும் கணக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. பல வாடிக்கையாளர்கள், ஆவணங்களைக் கையாள் வதை பிரச்னையாகக் கருதி வந்தனர். இப்போது இதன் மூலம் அது எளிதாக்கப்பட்டு உள்ளது.

வதந்தியால் ரூபெல்லா தடுப்பூசி போட அச்சம் !!

குழந்தைகளுக்கு, 'மீசில்ஸ் - ரூபெல்லா' தடுப்பூசி போட்டு கொள்ள, பெற்றோர் மத்தியில் அச்சம் நிலவி வருவதால், தடுப்பூசி போடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.தட்டம்மை நோய் மற்றும் ரூபெல்லா என்ற பிறவி ஊனம் நோய்களை ஒழிக்க, உலக சுகாதார நிறுவனத்துடன் மத்திய அரசு இணைந்து, மீசில்ஸ் - ரூபெல்லா தடுப்பூசி போடப்படுகிறது.ஒன்பது 
மாதங்கள் நிறைவடைந்த குழந்தைகள் முதல், 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, 'மீசில்ஸ்' என்ற தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடும் முகாம் கள், கடந்த, 6ம் தேதி துவங்கியது.'மீசில்ஸ் - ரூபெல்லா தடுப்பூசி போட்டால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு குறையும்' என்ற வதந்தி பரவ துவங்கியது. இதனால், புறநகரில் நடந்த முகாம்களில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. தாம்பரம் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், பெற்றோரிடம் தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து விளக்கியும் எடுபடவில்லை.தாம்பரத்தில், அரசு பள்ளிகள் - 6; தனியார் பள்ளிகள் - 47; அரசு உதவிபெறும் பள்ளிகள் - 2; மழலையர் பள்ளிகள் - 15; சத்துணவு மையங்கள் - 20 என, மொத்தம், 90 இடங்களில் தடுப்பூசி போட முதலில் திட்டமிடப்பட்டது.தாம்பரத்தில், மொத்தம், 39 ஆயிரத்து, 705 குழந்தைகள், சிறுவர், சிறுமியருக்கு தடுப்பூசி போட வேண்டிய நிலையில், வெறும், 5,442 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர். அதாவது, தாம்பரம் சுற்றுப்பகுதிகளில் உள்ள, 34 ஆயிரத்து, 263 பேருக்கு, இதுவரை தடுப்பூசி போடப்படவில்லை.'குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போட, தனியார் பள்ளிகள் ஒத்துழைக்கவில்லை' என, தாம்பரம் நகராட்சி சுகாதாரத் துறையினர் புகார் கூறுகின்றனர். அதே சமயம், 'தடுப்பூசி போடுவதால், மாணவர்களுக்கு பிரச்னை ஏற்பட்டால் அதை நீங்களே பார்த்து கொள்ள வேண்டும்; நாங்கள் பொறுப்பல்ல' என, தனியார் பள்ளிகளுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில், வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அதனால், தனியார் பள்ளிகள் தங்களிடம் படிக்கும் மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் அக்கறை காட்டவில்லை என, பெயர் வெளியிட விரும்பாத பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
வரும், 28ம் தேதி வரை, இந்த முகாம்கள் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது, தடுப்பூசிகள் போட்டு கொள்ள யாரும் முன்வரவில்லை.தமிழக சுகாதாரத் துறையினர் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளி மாணவர்களின் கூடவே வரும் வில்லன் இவர்தான்!

தலைவாரி, பூச்சூட்டி நம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். திரும்பி கையசைக்கும் அவர்களது முதுகில் கணக்கும் புத்தகப் பையின் சுமை நம் மனதை வலிக்கச் செய்யும். இதற்கு ஒரு வழிபிறக்காதா என்ற கேள்வி தினந்தோறும் நமக்கு எழுகிறது. இந்த புத்தகப் பையிடம் இருந்து நிரந்தரமாக விடுதலை கிடைக்காதா என்ற ஏக்கம் ஒவ்வொரு குழந்தையின் மனமும் நினைக்காத நாளில்லை. பள்ளிப் படிக்கும் வயதில், எடை அதிகமான புத்தகப் பையைச் சுமப்பதால் நம்

குழந்தைகளின் உடல் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

"வீட்டுப் பாடம் எழுதுவதை என்றைக்கு கண்டு பிடிச்சாங்களோ அன்றிலிருந்து துவங்கினதுதான் இந்த அதிக எடை புத்தகப் பை பயணம், மரம், தோல், அலுமினியப் பெட்டி என பல கண்டங்கள் தாண்டி இப்போ நம் செல்லங்களின் முதுகில் அமர்ந்திருப்பது ‘எர்கோனோமிக் ஸ்கூல் பேக்’. ஸ்டைல் மாறினால் என்ன வெயிட் மாறவில்லையே. புத்தகச் சுமையைக் குறைக்க நமது முப்பருவக் கல்வி முறையில் மூன்று பருவங்களுக்கான புத்தகங்களை தனித்தனியாக பிரித்து கொடுத்துள்ளனர். ஆனாலும் அந்தந்த பருவத்துக்கு என்று புத்தகங்களும் நோட்டுகளுமாக புத்தகப் பை மூச்சுத் திணறும் அளவுக்கே உள்ளது.

இந்திய மாணவர்கள் 15 கிலோ எடை வரை புத்தகப் பையாக சுமக்கின்றனர். தனது உடல் எடையில் 30 முதல் 35 சதவிகிதத்தை புத்தக மூட்டையாக சுமக்கின்றனர். 68 சதவீத குழந்தைகள் தங்களது எடையில் இருந்து 10 சதவீதத்துக்கும் அதிகமான எடையை சுமப்பதால் உடல் ரீதியான தொல்லைகளுக்கு ஆளாகின்றனர்" என்கிறார் சேலத்தைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார்.

மேலும் இவர் கூறுகையில், “இந்தியக் குழந்தைகள் பள்ளி நாட்களில் புத்தகப் பையை நீண்ட தூரம் சுமக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 12 வயது முதல் 14 வயது வரை குழந்தைகளின் உடல் வளர்சிதை மாற்றங்கள் உச்சியில் இருக்கும். இந்தக் கட்டத்தில் அளவுக்கு அதிகமாக எடை தூக்குவதால் கூன், முதுகுவலி, கழுத்து வலி, இடுப்பு வலி போன்ற தொந்தரவுகளைச் சந்திக்கின்றனர். ஒரு பக்கம் மட்டும் பைகளை மாட்டிச் செயல்வதால் 29 சதவீதம் முதுகு தண்டுவட குருத்தெலும்புகளில் அழுத்தம் அதிகரிக்கிறது

முதுகுத் தண்டில் 33 சிறிய எலும்புகள் ஒன்றன் மீது ஒன்று அடுக்கினாற் போல இருக்கும். இதன் இடையில் இருக்கும் குறுத்தெலும்புகள், அதன் உறுதித் தன்மையை மேம்படுத்தி உடலுக்கு கட்டமைப்பை கொடுக்கிறது. அதிகப்படியான அழுத்தம், புத்தகப் பையினால் தண்டுவடத்திலும், குறுத்தெலும்புகளிலும் சரிசெய்ய முடியாத மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. பின் வரும் ஆண்டுகளில் ஏற்படக்கூடிய எலும்பின் உறுதித் தன்மை சீர்குலைவு சிறு வயதில் இருந்தே ஆரம்பிக்கிறது.

அதிக எடை கொண்ட புத்தகப் பைகளை கீழ் முதுகில் குழந்தைகள் தூக்கிச் செல்வது இயல்பே. புத்தகப் பையை பேலன்ஸ் செய்ய அவர்கள் முன்னோக்கி குனிகின்றனர். இதனால் கழுத்துவலி, தோள்பட்டை வலி ஏற்படுகிறது. கழுத்து இறுக்கத்தையும் மாணவர்கள் சந்திக்கின்றனர்.

நீண்ட நேரம் தோள் பட்டையில் பையை மாட்டிக் கொண்டு நிற்கும் போது இரு கால்களில் சமமான எடையைப் போடாமல் ஒரு பக்கம் சாய்ந்தவாறு நிற்பதால் அனைத்து விதமான தசை வலிகளும் ஏற்படுகிறது. மேலும் அதிக வியர்வையால் தோள்பட்டை ஸ்ட்ராப் மாட்டும் இடங்களில் அரிப்பும் அலர்ஜியும் ஏற்படலாம் புத்தகப்பையின் எடையை குறைப்பதோடு அதன் ஸ்டைலையும் மாற்ற வேண்டும் என்கிறார் செந்தில்குமார்.

- யாழ் ஶ்ரீதேவி

ஆசிரியர்கள் பல விதம் !!

ஆசிரியர் பணியென்பது பல பேர்களுக்கு லட்சியப் பணி. அதுவும் அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணிவாய்ப்பு கிடைக்கப் பெறுவது இன்றைய சூழலில் மிகப்பெரிய சவாலானது.

     இத்தகைய அரிதான பணி வாய்ப்பை பெற்ற நம் ஆசிரியர்களின் செயல்பாடு மெச்சத்தக்க வகையில் இல்லையென்பதே உண்மை.

*முதல் ரகம்*
      மாணவர்கள் மேல் மிகுந்த அக்கறை கொண்டு தங்களது பணியை சிறப்பாக செய்பவர்கள். கற்பித்தல் பணியை திறம்பட செய்வதோடு, மாணவர்களுக்கு ஊக்கத்தையும் ஊட்டுபவர்கள். சாதாரண மாணவர்களையும் சாதனையாளர்களாக மாற்றுபவர்கள்.

     சில நேரங்களில் மாணவர்களின் சூழ்நிலையை புரிந்துகொண்டு பொருளாதார ரீதியாக பல்வேறு உதவிகளைச் செய்வதோடு மட்டுமில்லாமல் உயர்வான நிலைக்கு ஏற்றிவிடும் ஏணிபோல் செயல்படுபவர்கள்.

 *இத்தகைய ஆசிரியர்களை தங்களது வழிகாட்டியாகக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறியவர்கள் மிக அதிகம்*

*இரண்டாம் ரகம்*
     தங்களுக்கு ஆசிரிய பணி கிடைத்துவிட்டது. வேலை செய்கிறோம்,  ஊதியம் பெறுகிறோம் என்ற மனநிலையில் செயல்படுபவர்கள்.

     கற்பித்தல் பணியிலும் எத்தகைய தேடுதலும் இல்லாதவர்கள். தானுண்டு, தன் பணியுண்டு என்ற மனநிலையில் செயல்படுபவர்கள்.

 *இவர்களைப் போன்ற ஆசிரியர்களால் பள்ளிக்கூடத்திற்கும், மாணவர்களுக்கும்  மிகப்பெரிய நன்மையோ, தீமையோ ஏற்படாது.*

*மூன்றாம் ரகம்*
     இவர்கள் தான் மிக முக்கியமானவர்கள். தாங்கள் ஆசிரியர் பணிக்கு வந்ததையே மறந்துவிட்டு தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தி பள்ளிக்கூடங்களில் பாதிப்பை உண்டாக்குபவர்கள்.

    பள்ளிகளில் ஜாதி ரீதியாகவும், வேறு ஏதேனும் வகையிலும்  குழுக்களை ஏற்படுத்தி பிற ஆசிரியர்களுக்கு தொல்லை தருபவர்கள்.
              *தலைமையாசிரியருக்கு ஜால்ரா போடுவதும், மற்ற ஆசிரியர்களைப் பற்றி மற்றவர்களிடம் போட்டுக் கொடுப்பது, ஏதேனும் காரணத்தைக்கூறி பள்ளிக்கூடத்திலிருந்து Escapeஆகி விடுவது, தனியார் பள்ளிகளுக்கு ஏஜெண்ட் போல செயல்பட்டு ஆதாயம் பெறுபவர்கள்*

     மக்களிடையே அரசு பள்ளிகள் பற்றிய அவநம்பிக்கை ஏற்பட்டதற்கு இந்த மூன்றாம் ரகத்தைச் சேர்ந்தவர்கள்தான் முழுக் காரணம்.

     *எவ்வளவு குறைபாடுகள் இருந்தாலும், அதனையும் மீறி அரசு பள்ளிக்கூடங்களில் மிக இயல்பாக சாதாரண மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றும் முதல் ரக ஆசிரியர்கள் என்றும் போற்றுதலுக்கு உரியவர்கள்.*

    . *ஒரு சந்தோசமான செய்தி என்னவென்றால் இன்று பெரும்பாலான பள்ளிகளில் முதல் ரக ஆசிரியர்கள் நிறைய உருவாகி வருகிறார்கள். அவர்களின் ஆசிரியர்களை வழிகாட்டியாகக் கொண்டு*

மூ. மகேந்திரன்,
TNPGTA, கரூர்.

நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் எத்தனை எம்.எல்.ஏ கள் வாக்களிக்க வேண்டும் !!

நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் என்ன நடக்கலாம்??

தமிழக சட்டசபை எண்ணிக்கை 234 - ஜெயா - சபாநாயகர் = 232
உடல் நல குறைவால், கலைஞர் பங்கேற்பது சந்தேகம்.. (232-1) எனவே, மொத்தம் 231.. இதில் பாதி 116 உறுப்பினர்கள் ஆதரித்தால் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி தப்பும்.. அவருடைய கடிதத்தின் படி, 124 உறுப்பினர்கள் ஆதரிகிறார்கள்.


ஒருவேளை, 8 காங்கிரஸ் உறுபினர்கள், நடுநிலை வகித்தால், வாக்கெடுப்பை புறக்கணித்தல், (231-8) இருப்பது 223. இதில் பாதி, 112 உறுப்பினர்கள் ஆதரித்தால் ஈபிஎஸ் ஆட்சி தப்பும்..

ஒருவேளை திமுக + முஸ்லீம் லீகும் எதிர்த்து வாக்களிக்காமல், நடுநிலையோ, புறக்கணிப்போ செய்தால், (223 - 90) இருப்பது, 133. இதில் பாதி, 67 உறுப்பினர்கள் ஆதரித்தால் ஈபிஎஸ் ஆட்சி தப்பும்..

கூகுள் நிறுவனத்திடம் வேலை கேட்ட 7 வயதுச் சிறுமி !!

இன்றைய காலத்தில் குழந்தைகள் சிறந்த முறையில் செயல்படுகிறார்கள். அவர்கள் செய்யும் சில விஷயங்கள் நம்மை வியக்க வைக்கின்றன. தற்போது வளரும் குழந்தைகள் தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகின்றனர். அதுபோல, இந்தச் சிறுமியின் செயலும் கூகுள் நிறுவனத்தை வியக்கவைத்துள்ளது.



இங்கிலாந்து ஹேரிபோர்ட் பகுதியைச் சேர்ந்த ச்லோ (7) என்ற சிறுமி, கூகுள் நிறுவனத்திடம் வேலைகேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் டியர் கூகுள் பாஸ், எனது பெயர் ச்லோ. கூகுள் நிறுவனத்தில் வேலைசெய்ய விரும்புகிறேன். மேலும் ஒலிம்பிக்கில் நீச்சல் பிரிவில் பங்கேற்க வேண்டும். அதற்காக நான் சனி மற்று ஞாயிற்றுக்கிழமைகளில் நீச்சல் பயிற்சிக்குச் செல்கிறேன்.

கூகுள் நிறுவனத்தில் வேலை செய்யும்போது பீன்ஸ் இருக்கையில் அமர்ந்து வேலை பார்க்கலாம். அங்கு வேலை பார்ப்பது விளையாடுவதுபோல் இருக்கும் என்று எனது தந்தை கூறியுள்ளார்.



நான் என்னுடைய வகுப்பில் சிறந்த மாணவியாக இருக்கிறேன் என்று, எனது ஆசிரியர்கள் என் தந்தையிடம் கூறியிருக்கிறார்கள். நான் மடிக்கணினியில் ரோபோட் கேம் விளையாடுவேன். எனக்கு கணினி என்றால் மிகவும் பிடிக்கும். விரைவில் கணினி பற்றி அனைத்தையும் தெரிந்துகொள்வேன். கூகுள் நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்றால் உங்கள் முகவரிக்கு என்னைப் பற்றிய குறிப்புகளை இணையத்தில் அனுப்ப வேண்டும் என்று அப்பா கூறியுள்ளார்

இவ்வாறு ச்லோ தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தங்களுடைய கடிதம் கிடைத்தது. மிகவும் மகிழ்ச்சி. நீ தொழில்நுட்பம் குறித்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். உன்னுடைய கனவுகள் நனவாக கடுமையாக உழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு என்சிஇஆர்டி புத்தகம் விநியோகம்!

கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் தயாரித்து, வெளியிடும் புத்தகங்கள் மத்திய கல்வி வாரியத்துடன் (சிபிஎஸ்இ) இணைந்துள்ள பள்ளிகளுக்கு வருகிற 2017-2018ஆம் கல்வியாண்டில் கட்டாயமாக்கப்படவுள்ளது. பிப்ரவரி 15ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட பள்ளிகள், வாரியத்தின் வலைதளத்தில் அதற்குரிய

மாற்றங்களைச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய கல்வி வாரியம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அதில், கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் ஒன்று முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் அச்சடித்து விநியோகம் செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை, மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் கூட்டம் நடந்தது. அதில், பாடத்திட்டம் ஒரே சீரானதாக இருக்க வேண்டும் என முடிவுசெய்யப்பட்டது. அதாவது, டெல்லியில் உள்ள ஒரு பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவர்கள் புத்தகத்தில் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களை வேறுபடுத்திக்காட்ட ஒரு பூனையை வைத்து சோதனை செய்யும்வகையில் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இந்தப் புத்தகம் தனியார் வெளியீட்டாளர்களால் உருவாக்கப்பட்டது.

பாடப் புத்தகங்கள் அரசால் விநியோகிக்கப்படுவது பெற்றோர்களுக்கு ஒரு விடுதலையைக் கொடுத்துள்ளது. ஏனெனில், தனியார் வெளியீட்டாளர்கள் பாடப் புத்தகங்களை அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள் என்று பெற்றோர்கள் புகார் அளித்தனர். மேலும் பல பள்ளிகள் தங்கள் வளாகத்துக்குள்ளே ஸ்டோர்ஸ்களை வைத்துள்ளனர். பாடப் புத்தகங்கள் விநியோகிக்கும் தனியார் வெளியீட்டாளர்கள், அதனுடன் பென்சில், ரப்பர் மற்றும் பிற எழுதுபொருள்கள் அடங்கிய ஒரு பாக்சை விற்பனை செய்கின்றனர். இந்தப் பொருட்கள் வெளியே வாங்கும் விலையைவிட அதிகமாக இருக்கிறது என பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமல்லாமல், பல பள்ளி தலைமையாசிரியர்கள் ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை தனியார் வெளியீட்டாளர்கள் செய்து கொடுக்கின்றனர் என அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மத்திய மனிதவள அமைச்சகம், மார்ச் மாத இறுதிக்குள் புத்தகங்கள் அனைத்தும் அச்சடிக்கப்பட்டு தயாராக இருக்க வேண்டும் என என்சிஆர்டி-க்கு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய கல்வி வாரியம் 2017-2018ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச பாடத் திட்டத்தை (சிபிஎஸ்இ-ஐ) நீக்கப்போவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

பிஎச்.டி. படிப்பில் தமிழகம் முன்னிலை!

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பிஎச்.டி. எனும் முனைவர் பட்டப்படிப்பை முடித்தவர்கள் அதிகளவில் உள்ளனர் என, மத்திய மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில், மாநிலங்களவையில் இதுதொடர்பான கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்கு மனிதவள அமைச்சகம் பதிலளித்தது. 
அப்போது, 2015-16ஆம் ஆண்டில் 3,973 பேருக்கும், கடந்த 2014-15 ஆம் ஆண்டில் 3,333 பேருக்கும் பிஎச்.டி பட்டம் வழங்கப்பட்டுள்ளது. 2015-16 கல்வியாண்டில் நாடு முழுவதும் 24,171 பேருக்கு பிஎச்.டி பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதில், 16 சதவிகிதத்தினர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில், பிஎச்.டி. மாணவர்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக உத்தரப்பிரதேச மாநிலம் உள்ளது. அதாவது, 2,205 பிஎச்.டி. மாணவர்கள் உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கர்நாடகா உள்ளது. இங்கு, 1945 பிஎச்.டி. மாணவர்கள் உள்ளனர் என மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் சேகரிக்கப்பட்ட தகவலின்படி, 2013-14 முதல் 2015-16ஆம் ஆண்டுகளில் 69,862 பேருக்கு பிஎச்.டி. பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக ஆசிரியர்கள் பொதுச் செயலாளர் பசுபதி கூறுகையில், ‘நெட், செட் தகுதித் தேர்வு தவிர, பிஎச்.டி. படிப்பும் ஆசிரியர் நியமனத்துக்குத் தேவையான ஒன்று. குறிப்பாக, தமிழகத்தில் ஆசிரிய நியமனம் தேர்வு செயல்முறையின்போது, பிஎச்.டி. முடித்தவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுகிறது. இந்த கூடுதல் மதிப்பெண், மாணவர்களை முனைவர் பட்ட படிப்பில் சேரத் தூண்டுவதில் ஒரு காரணமாக இருக்கலாம்.

இதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் 500 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், 500 பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல தனியார் பல்கலைக்கழகங்களும் உள்ளன. இதுவும், பிஎச்.டி. மாணவர்கள் அதிகரிப்பதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இலவசமாக விண்வெளி அழைத்து செல்லும் COHU!

புதிய தொழில்நுட்ப வளர்ச்சியில் மனிதர்களுக்கும் விண்வெளிக்கும் இருக்கும் இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது. சில ரோபோக்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்துஅனுப்பிய புகைப்படத்தை நாம் சமீபகாலத்தில் அதிகம் கண்டிருப்போம் . அதன் படி மனிதர்களும் வேற்றுகிரகத்தில் வசிக்க பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று

வருகின்றன. அதனைத் தொடர்ந்து புதுமையான தகவலை வெளியிட்டுள்ளது பிரபல விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான COHU நிறுவனம் . அந்த செய்தியில் அந்நிறுவனம் விரைவில் ஒரு மொபைல் கேம் ஒன்றினை வெளியிட இருப்பதாகவும், அதில் வெற்றி பெரும் நபர்களுக்கு, விண்வெளி செல்வதற்கு தி ஸ்பேஸ் நேசன் ஆஸ்ட்ரோநாட் ட்ரைனிங் ப்ரோகிராம் (SNAP) எனப்படும் பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும் அதன் பின்னர் அவர்கள் இலவசமாக விண்வெளிக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்றும் தகவல் வெளியிட்டுள்ளது.

CUHU நிறுவனம் பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை தற்போது மேற்கொண்டு வருகிறது. ஒரு கேம்மில் வெற்றிபெற்றால் விண்வெளிக்கு இலவசமாக செல்ல முடியும் என அறிவித்திருப்பது பெரும் ஆவலை பல்வேறு தரப்பினரிடம் ஏற்படுத்தியுள்ளது. இந்த கேம் ஆனது விளையாடும் நபரின் மனநிலை மற்றும் உடல்நிலை என இரண்டையும் சோதிக்கிறது.நிஜ வாழ்வில் நமக்கு சில சவால்களை வழங்கி நமது திறமையை இந்த கேம் சோதனை செய்யும் என தகவல் தெரிவித்துள்ளனர். வரும் 2018 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த கேம் வெளியிடப்பட்டு அதில் சிறந்த 12 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் பின்னர் வழக்கப்படும் பயிற்சியில் சிறந்து விளங்கும் நபர் ஒருவருக்கு இலவசமாக விண்வெளி செல்லும் வாய்ப்பு வழங்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளது.

நீதியரசர் கவுலின் இரண்டாவது தாய் வீடு!

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதியரசரான சஞ்சாய் கிஷன் கவுல், உச்சநீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவருக்கு, பிரிவு உபச்சார விழா சென்னை உயர்நீதிமன்றம் சார்பில் நடத்தப்பட்டது.



அவ்விழாவில், அவர் பேசியதாவது: என் தாய் வீட்டுக்கு அடுத்தபடியாக சென்னைதான் எனது இரண்டாவது தாய்வீடு என பெருமிதத்துடன் கூறினார். இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல் முத்துக்குமாரசாமி, வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் கிருஷ்ணகுமார், பெண் வழக்கறிஞர் சங்கத் தலைவர் வி.நளினி, செயலாளர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி, பார் கவுன்சில் முன்னாள் தலைவர் செல்வம், துணைத்தலைவர் அமல்ராஜ், அகில இந்திய பார் கவுன்சில் இணைத் தலைவர் பிரபாகரன், வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ், பெண் வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவி டி.பிரசன்னா, மூத்த வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்கள், நீதிமன்ற பதிவாளர்கள், ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தலைமை நீதியரசரைப் பாராட்டி அட்வகேட் ஜெனரல் முத்துக்குமாரசாமி பேசினார். இதையடுத்து, தலைமை நீதியரசர் சஞ்சய் கிஷன் கவுல் பேசியதாவது: தமிழர்களின் பண்பாடு தனித்துவம் மிக்கது. தமிழர்களின் வீரம், அன்பு, மானம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசியமானது. நீதிமன்றம் மக்களுக்கானது அது சாமானிய மக்களிடமும் நட்புடன் செயல்பட வேண்டும். மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்களை ஊக்குவிக்க வேண்டும், அவர்களை வழிநடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழா முடிந்தபின் நிருபர்களிடம் கூறுகையில், சிறந்த வழக்கறிஞர்கள், நீதிபதிகளுடன் பணியாற்றியது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. இங்குள்ள மக்கள் என்மீது காட்டிய அன்பு மற்றும் அனைவரின் ஒத்துழைப்புமே நான் சிலவற்றை சாதிக்க காரணமாக இருந்தது. இந்த நீதிமன்றத்தின் பாரம்பரியம் முன்னெடுத்துச் செல்லப்படும் என்று நம்புகிறேன்.

ஸ்ரீநகரை பிறப்பிடமாகக் கொண்ட நீதியரசர் கவுல், கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசராக நியமிக்கப்பட்டார்.

16/2/17

31 பேர் கொண்ட தமிழக அமைச்சரவையின் பெயர் பட்டியல் வெளியீடு

எடப்பாடி பழனிசாமி - முதலமைச்சர். 

திண்டுக்கல் சீனிவாசன் - வனத்துறை. 

செங்கோடையன் - பள்ளிக்கல்வித்துறை. 

செல்லூர் ராஜூ - கூட்டுறவுத்துறை. 

தங்கமணி - மின்சாரத்துறை 

பெஞ்சமின் - ஊரக தொழில்துறை 

நிலோபர் - தொழிலாளர் துறை 

எம்.ஆர்.விஜயபாஸ்கர் - போக்குவரத்துத் துறை 

மணிகண்டன் - தகவல் தொழில்நுட்பத்துறை. 

பாஸ்கரன் - காதித்துறை. 

ராமச்சந்திரன் - இந்து அறநிலையத்துறை. 

பெஞ்சமின் - ஊரக தொழில்துறை. 

வேலுமணி - உள்ளாட்சித்துறை. 

ஜெயக்குமார் - மீன்வளத்துறை. 

சி.வி.சண்முகம் - சட்டத்துறை. 

அன்பழகன் - உயர்கல்வித்துறை. 

சரோஜா - சமூக நலத்துறை. 

எம்.சி.சம்பத் - தொழில்துறை. 

கருப்பண்ணன் - சுற்றுச்சூழல். 

காமராஜ் - உணவுத்துறை. 

ஓ.எஸ்.மணியன் - கைத்தறி துறை. 

உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டு வசதித்துறை. 

விஜயபாஸ்கர் - நல்வாழ்வுத்துறை. 

துரைகண்ணு- வேளாண் துறை 

கடம்பூர் ராஜூ - செய்தி மற்றும் மக்கள் தொடர்பு. 

உதயகுமார் - வருவாய்துறை. 

நடராஜன் - சுற்றுலாத் துறை. 

கே.சி.வீரமணி - வணிவரித்துறை. 

ராஜேந்திரபாலாஜி - பால்வளத்துறை. 

ராஜலட்சுமி - ஆதி திராவிடர் நலத்துறை. 

எஸ்.வளர்மதி - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை. 

பாலகிருஷ்ண ரெட்டி - கால்நடைத்துறை. 

பிளஸ் 2 ஹால்டிக்கெட் தராமல் இழுத்தடிப்பு!

பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான, ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்த பின்னரும், மாணவர்களுக்கு வழங்காமல், சில பள்ளிகள் தராமல் இழுத்தடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.


தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 2ல் துவங்குகிறது. இதற்கான அறிவியல் செய்முறை தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில், மாணவ, மாணவியருக்கான ஹால்டிக்கெட்டுகள், அரசு தேர்வுத்துறை கடந்த வாரத்தில் இணையதளம் மூலம் வெளியிட்டது. 

அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த யூசர் ஐ.டி., மற்றும் பாஸ்வேர்டு மூலம், ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து, சரிபார்த்து மாணவர்களிடம் வழங்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், பெரும்பாலான பள்ளிகளில், மாணவர்களுக்கு இதுவரை ஹால்டிக்கெட்டுகள் வழங்கப்படவில்லை.

இதுகுறித்து மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் கூறியதாவது

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தேர்ச்சி வீதம் அதிகரிக்க பல்வேறு தில்லுமுல்லு வேலைகளை செய்து வருகின்றனர். இவற்றில், பலவற்றுக்கு நடப்பு கல்வியாண்டில் தேர்வுத்துறை தடை விதித்துள்ளது. 

உதாரணமாக, பள்ளி வருகை பதிவேட்டில் இருந்த அனைவரும், தேர்வெழுதும் மாணவர்கள் பட்டியலில் இடம்பெற உத்தரவிட்டிருந்தது. கடந்த ஆண்டுகளில், 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில், தேர்ச்சி பெற முடியாது என, கருதும் மாணவர்களை தனித்தேர்வராக விண்ணப்பிப்பது பள்ளிகளின் வழக்கமாக இருந்தது. 

இம்முறை அதற்கான வாய்ப்புகளை தேர்வுத்துறை தடுத்துவிட்டது. இதனால், அடுத்த கட்டமாக, சராசரி மாணவர்களை தேர்வெழுத விடாமல், முழுமையாக ஆப்சென்ட் ஆகும் வகையில், பல பள்ளி நிர்வாகங்கள் செயல்பட்டு வருகின்றன. 

இதற்காக, ஹால்டிக்கெட்டுகளை தராமல் இழுத்தடித்து வருகின்றன. இவற்றை உடனடியாக கொடுத்து, அனைத்து மாணவர்களும் தேர்வெழுதுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது

பிப்.,20க்குள் பிளஸ் 2 ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. பல பள்ளிகளில், ஹால்டிக்கெட்டுகளை வழங்கிவிட்டால், அதற்கு பின் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவதில்லை. 

ரிவிஷன் முறையாக நடக்காததால், தேர்ச்சி வீதம் பாதிக்கப்படுகிறது என, மாணவர்கள் நலன்கருதி பல பள்ளிகள் ஹால்டிக்கெட்டுகளை நிறுத்தி வைத்துள்ளன. மற்றபடி, தேர்வெழுத தடுக்கும் வகையில், ஹால்டிக்கெட் தராமல் இருப்பின், அவர்கள் உடனடியாக புகார் செய்யலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாணவியரை சோதிக்க வேண்டாம்; ஆசிரியர்கள் நிம்மதி பெருமூச்சு

10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று துவங்க உள்ள நிலையில், ’மாணவியரை, ஆண் தேர்வு கண்காணிப்பாளர்களாக உள்ள ஆசிரியர்கள் சோதிக்க தேவையில்லை’ என்ற உத்தரவு, ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.


ஐக்கிய ஜனதா தள தலைவர், நிதிஷ்குமார் முதல்வராக உள்ள பீஹாரில், கடந்த ஆண்டு நடந்த தேர்வில், முதல் மதிப்பெண் பெற்ற மாணவி, மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட சோதனைகளில், பல்வேறு மாணவர்கள், மோசடி செய்து, தேர்ச்சி பெற்றது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு தேர்வுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

’தேர்வு மையத்துக்கு கண்காணிப்பாளராக இருக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரையும் தீவிரமாக சோதிக்க வேண்டும். அது தொடர்பான உறுதிமொழியையும் அவர்கள் அளிக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இன்று துவங்க உள்ள, இந்த ஆண்டுக்கான, 10ம் வகுப்பு தேர்வு எழுதும், 12.61 லட்சம் பேரில், 5.56 லட்சம் பேர் மாணவியர். 25 பேருக்கு ஒரு தேர்வு கண்காணிப்பாளர் என்ற விகிதத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் உள்ள, 38 மாவட்டங்களிலும், தலா, இரண்டு முதல், நான்கு மையங்கள் மாணவியருக்காக மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

மாணவியரை சோதனை செய்வதில் தர்மசங்கடம் ஏற்படுவதுடன், தங்கள் மீது பொய் புகார்கள் தெரிவிக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஆசிரியர்கள் கூறினர். மேலும் மாணவியர், ’பிட்’ அடித்து சிக்கினால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகள் உள்ளதையும் அரசுக்கு எடுத்துச் சென்றனர். 

அதைத் தொடர்ந்து, ’தேர்வு மையங்களில் கண்காணிப்பாளராக இருக்கும் ஆண் ஆசிரியர்கள், மாணவியரை சோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை. 

அது குறித்தும், தங்கள் உறுதிமொழியில் குறிப்பிடலாம்’ என, மாநில அரசு விலக்கு அளித்து, நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது; இது ஆண் ஆசிரியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளதுடன், நிம்மதி பெருமூச்சையும் ஏற்படுத்தி உள்ளது.

ஓய்வு ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு, ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் சார்பில், திருச்செங்கோடு அண்ணாதுரை சிலை அருகில், நேற்று கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. 


மாவட்ட தலைவர் கருப்பன் தலைமை வகித்தார். புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மாநில அரசு, எட்டாவது ஊதியக்குழுவை அமைத்து, ஓய்வூதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். 

20 ஆண்டு பணிக்காலத்திற்கு மத்திய அரசு போல மாநில அரசும் முழு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தர வரிசையில் இடம் பெற ஆதரவு அளியுங்கள்; துணைவேந்தர்!

தேசிய தரவரிசை பட்டியலில், பெரியார் பல்கலை இடம்பெற, இணையதளம் மூலம் ஆதரவு அளியுங்கள்,” என, துணைவேந்தர் சுவாமிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதுகுறித்து, சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் பெரியார் பல்கலை மற்றும் அதன் கீழ் செயல்படும் கல்லூரிகளில், 1.50 லட்சம் பேர் படிக்கின்றனர். 

பல்கலையில், மத்திய அரசின் தேசிய தர நிர்ணய மற்றும் மதிப்பீட்டுக்குழு, 2015ல் ஆய்வு மேற்கொண்டு, ’ஏ’ கிரேடு அந்தஸ்து வழங்கியுள்ளது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை, 2016ல் வெளியிட்ட தரவரிசை பட்டியலில், பெரியார் பல்கலை, தேசிய அளவில், 46ம் இடம், மாநில அளவில், அரசு பல்கலைக்கழகங்களில், இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தது. 

தற்போது, அப்பட்டியலில் மேலும் முன்னேற்றம் அடைய, பல்கலையில் படித்த மாணவ, மாணவியர், அவர்கள் பெற்றோர், பல்வேறு கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், இப்பல்கலை குறித்து, தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை, முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அதனால், http://www.nirfindia.org/perception என்ற இணையதள முகவரியில், தங்கள் மின்னஞ்சல், சுயவிபரங்களை பதிவு செய்து, பல்கலைக்கு ஆதரவு தெரிவிக்கலாம். 

இதன் மூலம், பல்கலையை, தேசிய அளவில், முதல் பத்து பல்கலைக்கழகங்களில் ஒன்றாக தேர்வு செய்ய வாய்ப்பாக அமையும். இன்றைக்குள் (பிப்.,15), பல்கலைக்கு ஆதரவாக ஓட்டுப்போடுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சுற்றுச்சூழல்துறை - பசுமை தினங்கள் கொண்டாடுதல் - சுற்றுச்சூழல் பணிகள் மேற்கொள்ளுதல் தொடர்பாக

CPS NEWS: புதிய ஓய்வூதியத் திட்டத்தில் மாத ஓய்வூதியம் இல்லாததால் 01.04.2003க்கு பிறகு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர்களின் கவனத்திற்கு.....

`CPS NEWS:```

ஆளேயில்லாத கடைல டீ ஆத்துறதக் கூட பொறுத்துக்கலாம்.


ஆனா,

பால். . . டீத்தூள். . . . சுடு தண்ணீ. . . அட கிளாஸே இல்லாம டீ ஆத்துனா பொறுத்துக்க முடியுமா?

அத ஊத்தித்தரேன் குடிடானா குடிச்சுற முடியுமா?

முடியாதுல. . .

ஆனாநாம குடிப்போம்னு ஆட்சியாளர்கள் நம்புறாங்க. அதுனாலதேன் அவுக டீ ஆத்துறதா நம்பவச்சிக்கிட்டே இருக்காங்க. நாமலும் நம்பித் தொலஞ்சுக்கிட்டே இருக்கோம். . .

எப்படீங்கிறீங்களா❓

👇🏼இப்படித் தான்👇🏼

*ஓய்விற்குப் பின் சல்லிப் பைசா ஊதியமே வழங்காத* புதுமையான *ஓய்வூதியத் திட்டத்தில்*நம்மைச் சிக்க வைத்து சீரழித்து வருகின்றனர்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் மாத ஓய்வூதியம் இல்லாததால் 01.04.2003க்கு பிறகு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர்களின் ஓய்வுக்குப் பின்னர்

❌ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி (ரூ.50,000) ,

❌ஓய்வூதியர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (ரூ.2,00,000)

❌பணிக்கொடை,

❌தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978

ஆகியவை பொருந்தாது.


தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வழித் தகவல் : *திண்டுக்கல் எங்கெல்ஸ்.*

இனி 'ஆதார்' இருந்தால், 'பான் கார்டு' பெறுவது எளிது..!

ஒருவர் வங்கிகளில் ரூ.50,000 மேல் ரொக்கமாக செலுத்த,மற்றும் பெறுவதற்கும் 'பான் கார்டு' எண் குறிப்பிடவேண்டும். ரூ.2,00,000-
த்துக்கு மேல் எந்தவொரு பொருள் வாங்கும்போதும் 'பான் கார்டு' எண்ணை சொல்லவேண்டும்.
இந்நிலையில் ஒருவரிடம் 'ஆதார் கார்டு' எண் இருந்தால், அந்த ஆதாரில் இருக்கும் அடிப்படை விவரங்களின் அடிப்படையில், ஒரு சில நொடிகளில் வேண்டுவோருக்கு 'பான் கார்டு' வழங்க வருமான வரித்துறை தீர்மானித்து உள்ளது. இதன் மூலம் எளிதில் வருமான வரியை ஒருவர் கட்ட இயலும். பான் கார்டு பெறுவதில் இருக்கும் காலதாமதம் குறைக்கப்படும் என மத்திய வருவாய்த்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவை ஒரு சில மாதங்களில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.